Showing posts with label நல்லிணக்கம். Show all posts
Showing posts with label நல்லிணக்கம். Show all posts

Monday, April 28, 2025

மரண அறிவிப்புக்குப் பின்னேயும் மத நல்லிணக்கம் - ராமச்சந்திர வைத்தியநாத்


சாதாரணமாக இன்றைய தினம் ஒரு வெற்றுச் செய்தியாக இருக்கககூடியது காலப்போக்கில் வரலாறாக மாற்றமடைகிறது.    சில நாளிதழ்கள் இதை அப்படியே அல்லது சற்று உருமாற்றி தங்களின் முழக்கமாக கொள்வதும் இருந்து வருகிறது.  ஆயின் இன்றைய செய்தி நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியாகவும் அமைகிறது.  முந்தியகால நிகழ்வுகளை அறிந்த அல்லது தெரிந்தோருக்கு இது சுலபமாகவே சாத்தியப்படும்.  

பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும்  “இரங்கலும், நினைவுகூறலும்” என்றொரு  விளம்பரப் பத்தியினை வெளியிட்டு வருகிறது.  குறிப்பிட்ட நபரின் மரணச் அறிவிப்பினை  அனைவருக்கும் தெரிவிக்க முடியாத நிலையில் இத்தகைய பத்தி அறியக்கூடிய  ஒரு வாய்ப்பாகவே இருக்கிறது.  இவ்வறிப்புகளின் பின்னே தகவல் மட்டுமின்றி வரலாறும் ஒளிந்திருக்கக்கூடிய சாத்தியப்பாடும் இருக்கிறது.  சமீபத்தில் 2025 ஏப்ரல் 18 வெள்ளியன்று  வெளியான இந்து ஆங்கில நாளிதழின் 9ம் பக்கத்தில் வெளியான இரங்கலும் நினைவுகூறலும் பத்தியில் இதுபோன்ற அனுபவமொன்று நிகழ்ந்தது.  

தமிழ்கூறும் நல்லுகில் உள்ளோருக்கு  கடையம் என்றவுடனே நினைவுக்கு வருவது மகாகவி பாரதியைத்தான்.  அதே போன்று அறுபது எழுபது வயதைக் கடந்தோருக்கு கடையநல்லூர் என்றாலே ஜனசமூகத்தில் நன்கறியப்பட்ட இருவர் நினைவுக்கு வருவது என்பது தவிர்க்க முடியாதது.  இந்த இருவரும் ஒரே பெயரினால் அறியப்பட்டவர்கள்தாம்.  காமராஜரின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் மஜீத்.  சங்கரன் கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கடையநல்லூர்க்காரர்தான்.  கடையநல்லூரில் மற்றொரு மஜீத்தும் புகழ்பெற்றவராக  விளங்கி வந்தார்.  இவர் அரசியலில் ஈடுபட்டவர் அல்ல.  மாறாக இறை இசைப்பாடல்கள் வழியே தமிழகம் முழுமையிலும் அறியப்பட்டவர்.  இந்துக் கடவுளர்களை குறிப்பாக முருகனைப் பற்றிய இவரது பாடல்கள் அன்னாளில் பட்டிதொட்டியெங்கிலும் ஒலித்தது என்றே கூறலாம்.  பிறப்பால் இஸ்லாமியராக இருப்பினும் கர்நாடக இசையில் நன்கு பயிற்சி பெற்று கச்சேரிகளை நிகழ்த்தி வந்தவர்.  இவரது இசைக் கோர்வைகளின் பதிவுகள் இன்றும் இருந்து வருகிறது.  பக்திரச பாடல்கள் எனும் தொகுப்பில் அவர் எழுதி பாடிய பாடல்கள் சிறப்பானவை. குறிப்பாக  நாராயணணை அன்றி பாராயணம் செய்ய ஓர் நாமம் இருக்கிறதா,   கொண்டோடி வா மயிலே முருகனை இங்கு கொண்டோடி வா, திருத்தணிகாஜலத்திலிருக்கும் முருகனை போய் தரிசிக்க வாராய் போன்ற வசீகரமான  பாடல்கள் இசைக்கு அப்பாற்பட்டவர்களையும் சற்றே நின்று கேட்கச்  செய்திடும்.   அறுபது எழுபதுகளில் தென்மாவட்ட கோயில் திருவிழாக்களில் மஜீத்தின் இசையை கேளாத மக்கள் மட்டுமின்றி மூலவர்களும் உற்சவ மூர்த்திகளும் இருந்திருக்கவே முடியாது. 

இசைவழி இறைப்பணியை அவருக்குப் பின்னர் அவரது மகனும் மகளும்  தொடர்ந்து வந்திருக்கிறார்கள் என்ற செய்தி வியப்பினை அளிக்கக்கூடியது.  கலைமாமணி எம்.ஏ.மஜீத் சபையெனும் அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு ஆண்டுதோறும் திருத்தணியில் நடைபெறக்கூடிய படி உற்சவத்தில் எம்.ஏ.மஜீத் மற்றும் எம்.ராஜேஸ்வரி ஆகியோரின் வாரிசுகள் உஷாவும் குருநாயகமும் பங்கேற்று நடத்தி வந்திருக்கிறார்கள்.  சென்ற ஆண்டில் எம்.ஏ.எம்.குருநாயகம் இறந்திருக்கிறார்.  அதையொட்டிய முன்கூறப்பட்ட நினைவுகூறல் அறிவிப்புதான் இந்து நாளிதழில் வெளியானது. அது அறிவிப்பு மட்டுமல்ல  தங்கள் தனித்துவத்தை இழக்காது இந்து இஸ்லாமிய இணைப்பின் அடையாளமாய்  இக்குடும்பம் விளங்குவதோடன்றி இறைப்பணிகளை தொடர்வது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாகும் என்பதையும் அறிவிக்கிறது. போற்றலுக்குரிய மத நல்லிணக்கத்தை, வழிபாட்டு ஜனநாயகத்தை ஒரு  நினைவுகூறல் விளம்பரம்  வெளிப்படுத்துவது என்பது எந்த அளவில் அன்றாட நடப்பில், மக்கள் ஜனசமூகத்தில் பரஸ்பரம் புரிதலோடு வாழ்ந்து வருகின்றனர் என்பதை உணர்த்துகிறது. இத்தருணத்தில் இது போன்ற மற்றொரு செய்தியும் முக்கியத்துவம் வாய்ந்தது.  18ம் நூற்றாண்டில் வாழ்ந்த  இஸ்லாமியரான ஜவ்வாதுப் புலவர் ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள மேலகொடுமலூரில் உள்ள முருகன் பெயரில்  குமாரபதிகத்தை இயற்றி அர்ப்பணித்திருக்கிறார்.  மத நல்லிணக்கத்தின் சின்னமாக திகழும் ஜவ்வாது புலவரை கௌரவிக்கும் வகையில் அவ்வூரில் அமைந்துள்ள முருகன் கோயில் கோபுரத்தில் அவரது உருவச்சிலையும் இடம் பெற்றிருக்கிறது.  இத்தோடன்றி அவர் இயற்றிய பதினோரு பாடல்களைக் கொண்ட குமார பதிகத்தையும்  ஆலயத்தின் உள்ளே  பளிங்குக் கற்களில் பொறித்து வைத்திருக்கின்றனர். தவிர அருணகிரிநாதரே முருகனை ராவுத்தனே என்று  விளித்துப் பாடியதும் இங்கே நினைவில் கொள்ளத்தக்கது. 

இந்து நாளிதழின் அன்றைய அதே பத்தியில் திவான்பகதூர் ஷண்முக முதலியாரின் பேத்தி பிரமீளா ஷண்முகம் என்பவரின் மரண அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. சென்னை நகர வரலாற்றோடு இணைந்த ஷண்முக முதலியார் துபாஷாக தன் பணிகளைத் துவக்கி பின்னாளில் இம்பீரியல் பேங்கில் நிர்வாக சபையில் மட்டுமின்றி பச்சையப்பன் அறக்கட்டளை ஜிம்கானா கிளப் போன்றவற்றிலும் உறுப்பினராக இருந்தவர். அவரது தோட்ட வீடு அஜ்மீர் சென்னை பூந்தமல்லி சாலையில் ஸ்பர் டாங்க்குக்கு எதிராக ஈகா திரையரங்கிற்கு அருகாமையில் அமைந்திருந்தது.    அறுபதுகளில் நான் பச்சையப்பனில் பயின்ற காலங்களில் ஷண்முக முதலியாரின் பேரனும் அறக்கட்டளை உறுப்பினராக இருந்தவருமான  டி.கே.சிங்காரம் இந்த வளாகத்தில்தான் வசித்து வந்தார். அவரது மகள்கூட இதே கல்லூரியில் அறிவியல் துறையில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.   தற்பொது அஜ்மீர் அடுக்கு மாடி வளாகமாக மாறி பெயரை இழந்த போதிலும்   சண்முக முதலியாரை நினைவுகூறும் விதமாக  அயன்புரத்தில் தெருவொன்று இன்றும் இருந்து வருகிறது. 

வாழும் சமூகம் பற்றிய  பிரக்ஞையினை இரங்கற் குறிப்புகளும் நினைவுகூறுல்களும்  ஏற்படுத்துவதில்லை.  வாழ்ந்த மனிதர்களின் செயல்பாடுகள்தான் இத்தகைய செய்திகளை நமக்கு அறிவுறுத்துகிறது. மஜீத்தின் மத நல்லிணக்கமும் ஷண்முக முதலியாரின் கல்விக்கான வழிகாட்டலும் இதைத்தான் உறுதி செய்கிறது. 

*

நன்றி : ராமச்சந்திர வைத்தியநாத் | veeorr52@gmail.com
*
தொடர்புடையவை : 

1. 'நாராயணனையன்றி...’ - கடையநல்லூர் ஏம் ஏ மஜீத்
Thanks to : yogesh digital raja

2. கடையநல்லூர் ஏம் ஏ மஜீத் அவர்களின் நாடக மேடை பாடல்கள் 
*
3. நாடாக்காரர்கள் - சுஜாதாவுக்குப் பிடித்த சிறுகதை

Tuesday, October 1, 2019

'மனுஷன் எனும் மதம் மாத்திரமே மதி!’

Actor Sreenivasan's Speech at Edappal.  ‘தெய்வம் உண்டா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இல்லாமலிருப்பதுதான் தெய்வத்தின் அந்தஸ்துக்கு ஏற்றது’ என்று ஜெரால்ட் ரூட் சொன்னதைச் சொல்கிறார் எனக்கு மிகவும் பிடித்த சீனிவாசன். ரசித்துக் கேட்ட சமீபத்திய வீடியோ ஒன்றிலும் இதையே சொன்னார். அவர் நாத்திகவாதி ஒன்றும் அல்ல; நாம் செய்கிற நல்ல செயல்களில் எல்லாம் தெய்வம் இருக்கும் என்று சொல்பவர். எல்லா மத தெய்வங்களும் ஒன்று சேர்ந்து தன் திருமணத்தை நடத்திய விதம் பற்றிச் சொன்னதை ரசித்தேன். ‘கடவுளின் சொந்த நாடு’  ஏன் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்று விவேகானந்தரால் அழைக்கப்பட்டது என்பதற்கு சீனிவாசன் கொடுக்கும் விளக்கம் முக்கியமானது. தெய்வம் எல்லாம் அறிந்திருக்கும்!
*
*
Thanks to : Yuva Kerala

Wednesday, February 11, 2015

சொல்ல ஒன்றுமில்லை :(((

கம்பெனிக்கு வந்த பழைய பெருநாள் வாழ்த்துக்களை சும்மா பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தக் கார்ட்டூன் (ஓவியரின் பெயர் தெரியவில்லை) பார்த்தபிறகு ஒன்றும் ஓடவில்லை....

Wednesday, August 7, 2013

இன்குலாபின் தந்தையும் இந்துப் பெருமக்களும்

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள். 'காக்கைச் சிறகினிலே’ இதழிலிருந்து... (ஜூன்2013) இன்குலாப் அவர்களின் வாழ்க்கைத் தடத்தைப் பதிவிடுகிறேன், நன்றியுடன்.. - ஆபிதீன்
***
 
வெளிநடப்புச் செய்தவர்
 
..... ..... ......
 
வைத்தியர் சீனிமுகமது ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டவர். அவரைப் பற்றி நான் நினைவு கூறும்போதெல்லாம் அவர் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்குச் செல்லும் கோலந்தான் நினைவுக்கு வரும். ஒரு வேளை தொழுகையை விட்டவரல்லர். அந்தத் தொழுகைக்கெல்லாம் கைவைத்த பனியன், வெள்ளை லுங்கியுடன் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளி வாசலுக்கே சென்று திரும்புவார். கோடை கொளுத்தும் நாட்களில் பள்ளிவாசலை ஒட்டியுள்ள சேகப்பா தர்காவிலே பகல் (லுஹர்) தொழுகையை முடித்துவிட்டு ஒரு தூக்கமும் போட்டுவிட்டு மதியம் வீட்டுக்குச் சாப்பிட வருவார். காலையிலும் மாலையிலும் அவர் நடத்தி வந்த சித்த மருத்துவமனைக்கு (பஹீறா ஹோம் ஆஸ்பத்திரி என்று பெயர் வைத்திருந்தார்) சென்று விடுவார். சில சமயங்களில் நள்ளிரவுகளில் நான் விழித்துப் பார்க்கும்போது, சித்தர்கள் வைத்திருக்கும் கைத்தடி ஒன்றில் கை ஊன்றியபடி ‘தசுவ’ மணி மாலையை உருட்டிக் கொண்டு தியான நிலையில் இருப்பார். தர்கா தைக்காவிலே படுக்கும்போதும் ஓய்ந்திருக்கும் பிறநேரங்களிலும் படிப்பதற்கு ஏதாவது ஒரு நூல் அவர் தலையணை ஓரத்திலோ மருத்துவமனை மேசையிலோ இருக்கும். அது மௌலானா ரூமியின் மஸ்னவி ஷரிபின் தமிழாக்கமாக இருக்கலாம்; யோகி சுத்தானந்த பாரதியின் மொழிப்பெயர்ப்பு நூலான ‘இளிச்சவாயானகவும்’ இருக்கலாம். இதழ்கள் என்றால் தாவூத்பாஷாவின் ‘தாருல் இஸ்லாமாக’ இருக்கலாம். அல்லது கல்கி வார இதழாகவும் இருக்கலாம்.
 
வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் போகும்போது அரைக்கைப் பனியனுக்கு மேல் வெள்ளைக் கமிஸ் அணிந்துகொள்வார்; லுங்கிக்குப் பதிலாக பைஜாமா போட்டுக்கொள்வார். பிடரிவரை தொங்கும் தலைமுடியை மக்கத்துத் தொப்பி அரைவட்டமாக மறைந்திருக்கும். அவருடைய நண்பர் அன்பளிப்பாகக் கொடுத்த மஞ்சள் நிற மக்கத்து சால்வை சட்டைக்குப் பின்புறம் முக்கோணவடிவத்தில் அமையுமாறு முன்பக்கத்தை ஜிப்பாவுக்குள் வைத்துக் கட்டி இருப்பார். ஒரு பெருநாளின் கொண்டாட்ட உணர்வு கொண்டவராகத் தோன்றுவார். அன்று மதியம் கறியும் சோறும். ஆனால் ஜும்மாத் தொழுகைக்கு நான் போகாமல் சாப்பாடு கிடையாது. ஒழுங்காக ஜூம்மாவுக்குப் போய் வருவேன்.
 
கடவுளை மறுக்காத எந்த மதத்தவரும் அவருக்குக் ‘காஃபிர்’ இல்லை. நாத்திகன் மட்டுமே காஃபிர்.

‘ஜூம்மா’ தொழுகை முடிந்தவுடன் பல சமயங்களில் சொற்பொழிவாற்ற தொழுகையின் முதல் வரிசைக்குச் சற்று முன் சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சலாம் சொல்லுவார். இறை நம்பிக்கையின் ஆழத்தை வலியுறுத்துவார். சூஃபி ஞானிகளின் தர்காக்களுக்க்ச் செல்வது தவறாகாது; ஆனால் பிரார்த்தனை செய்வதுதான் தவறென்பார். பில்லி, சூனியம், பேய்பிடித்தாடுவது, பேய்விரட்டுவது முதலியவற்றைக் கண்டிப்பார். கீழக்கரையில் இன்றுவரை நீடிக்கும் ‘கைக்கூலி’க் கொடுமையைக் கடுமையாகக் கண்டனம் செய்வார்.
 
சொன்னபடி வாழமுயன்ற மனிதர் அவர். கைம் பெண்ணாக இருந்த அம்மாவைத்தான் தம் பதின் வயதில் மணந்தார். என் தாய் தன் பதின்மூன்றாவது வயதிற்குள்ளேயே முதல் திருமணம் செய்விக்கப்பட்டு ஒரு குழந்தையைப் பெற்று அதைச் சாகவும் கொடுத்தார். என் தாயும் தந்தையும் இயல்பாக வாழ்ந்து என்னை ஒன்பதாவது பிள்ளையாகப் பெற்றனர். இசுலாமிய மார்க்கம்  கைம்பெண் திருமணத்தை இயல்பான ஒரு வாழ்க்கை முறையாக்கியது. எனினும் பால்ய மணத்தைத் தடைசெய்யவில்லை. இன்றளவும் இளம்பிள்ளைத் திருமணத்தைச் சரியானது என்றுதான் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் வாதிடுகின்றனர். என் தந்தையும் இளம் பிள்ளைத் திருமணத்தை எதிர்த்துப் பேசியது இல்லை.
 
மற்றபடி இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் மூடத்தனங்களையும் கைக்கூலிக் கொடுமைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவந்தார். (கைக்கூலி என்பது மணமகனுக்க்கு மணமகள் வீட்டார் தரும் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள். மாப்பிளையுடைய தகுதிக்கு ஏற்ப கூடும் குறையும். பல சமயங்களில் இத்தொகை சில இலட்சங்களைத் தாண்டும்).
 
அன்றைய ஜூம்மாவுக்குப் பிறகு அவர் கைக்கூலிப்பிரச்சனையைப் பற்றிக் கடுமையாகச் சாடினார். ஜூம்மா முடிந்து பள்ளிவாசலிலிருந்து அவர் தெருவில் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைச் சூழப் பலர் அவர் பேசியது குறித்துக் கருத்துக் கூறியபடி வந்தனர். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு பள்ளிவாசல் இருந்தாலும் ஜூம்மா தொழுகை என்பது ஊர் கூடித் தொழுவது. அது நடுத்தெருவில் உள்ள குத்பா பள்ளிவாசலில் மட்டும்தான் நடைபெரும். அந்த பள்ளிவாசல் அழகிய வெலைப்பாடு அமைந்தது. பூ வேலைப்பாடு செய்யப்பட்ட வலிய தூண்களால் தாங்கப்படுவது. வள்ளல் சீதக்காதிதான் அந்தப் பள்ளிவாசலைக் கட்டியவர்.
 
அந்த நடுத்தெருவில் தான் அன்று அந்த நிகழ்ச்சி நடந்தது. தந்தையைச் சூழவந்த பலருள் என் அண்ணனும் இருந்தார். அவரை ஒட்டியபடி நான் வந்துகொண்டிருந்தேன். அப்படி நாங்கள் வந்தபோது வேற்றுத்தெருவைச் சேர்ந்த ஒருவர் என் தந்தையைப் பார்த்துத் தகாத சொற்களால் ஏதேதோ பேசினார். என்ன பேசினார் என்று என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ‘ஜூம்மா முடிந்தபின் இவற்றையெல்லாம் பேசுவதற்கு நீ யார்?’ என்பதுதான் அவர் கூச்சலிட்டதன் சாரம்சம். என் தந்தை அமைதியாக பதில் சொல்ல முயன்றார். ஒரு மருத்துவக் குடியில் பிறந்த ஒருவர் கைக்கூலிப் பழக்கத்தையெல்லாம் கண்டிக்க முன்வரலாமா? என்பதுதான் அவரின் கோபத்திற்குக் காரணம்., ‘வைத்தியத்தை ஒழுங்காகப் பாரும்’ என்று கத்தியதாக நினைவு. அங்கு வந்தவர்கள் சமாதானப்படுத்தி பிரிந்து விட்டார்கள்.
 
வீடு வந்த தந்தை எங்களிடம் இயல்பாகப் பேசினாலும் அந்த நிகழ்ச்சி அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது, என்னதான் சமமாகப் பழகினாலும் பிரச்சினை என்று வந்துவிட்டால் பிறந்த குடியையே இழிவுபடுத்தும் சூழல் அவர் நம்பிக்கைகளைத் தோற்கடித்தது என்று கருதுகிறேன். என் தந்தை, என் அண்ணன், நான் என்று இந்தச் சமூக இழிவை ஏதோ ஒரு வகையில் கடந்து வந்தவர்கள்தாம்.
 
வைத்தியம் நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி ‘சமூகப் பிரச்சனைகளில் நீ  தலையிடாதே’ என்று எச்சரிப்பதாக இருந்தது. அவர் மனதில் பலவகையான சிந்தனைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன போலும். ஒருநாள் தமது சித்த மருத்துவமனையை உத்தரசோசமங்கைக்கு மாற்றப்போவதாகச் சொன்னார். சுற்றியுள்ள கிராமங்களில் அவர் மருத்துவத் திறனைப் பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள். உத்தரசோசமங்கையும் அத்தகைய கிராமங்களால் சூழப்பட்ட பகுதிதான். அதனால் அங்கு அவர் தொழில் தொடங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
 
திருஉத்தரசோசமங்கை மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற தலம். அப்பொழுது அந்த ஊரில் ஒரு முசுலிம் வீடு கூடக் கிடையாது. அங்கு அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோர் போய்விட்டனர். தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த என் தாத்தா ஒருவர். கை தேர்ந்த சித்த மருத்துவர். அவரும் தந்தையுடன் போய் சேர்ந்துகொண்டார். சித்த மருத்துவமனை சிறப்பாக செயல்படத் தொடங்கியது. களரி, பூக்குளம், எக்ககுடி, சிக்கல் என்று தொடங்கி முதுகுளத்தூர் வரையிலும் உள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மருத்துவமனக்கு வந்தார்கள்.
 
நான் கீழக்கரையில் அரசினர் அமீதியா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். மூத்த அக்காள் வீட்டில் தங்கியிருந்தேன். அக்காள் கணவரும் சித்த மருத்துவர்தான். மூத்த அக்காளைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். தொடக்க காலத்தில் எனது பிடிவாதமான பேச்சுகள் அக்காளுக்கு எரிச்சல் மூட்டும். என்னை எப்பொழுதும் கண்டித்தபடி இருப்பாள். நானும் சண்டை போடுவேன். ஆனால் மிக அருமையான பாடகி. இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். எங்கள் அண்னன் திரைப்பட மெட்டில் பாட்டுக்கள் எழுதிப் பாடச்சொல்வார். அக்காவின் இனிமையான குரலில் அந்தப் பாடல் எங்கள் வீட்டு வாசற்கூடத்தில் அரங்கேறும். அதைப் பார்த்துக்கொண்டிருந்த நானும் திரைப்பட மெட்டில் பாட்டு எழுதி பாடச் சொல்வேன். சின்னப்பயல் என்று அலட்சியப்படுத்தாமல் நான் எழுதியதையும் அழகாகப் பாடிக்காட்டிவிடுவார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் நான் தீவிரமாக பங்கேற்பது என் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. அஞ்சினார். ஒருமுறை ‘இவன் இப்படிப் போறானே’ என்று அக்காவிடம் அம்மா சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது அக்கா சொன்னது நினைவிலிருக்கிறது இன்னும்:
 
"இவன்  உனக்குப் பொறக்கிற புள்ள இல்லை. எனக்குப் பொறக்க வேண்டியவன்.”
 
பள்ளி விடுமுறை நாட்களில் உத்தரசோசமங்கைக்குப் போய்வருவேன். அந்த ஊர் எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. குறிப்பாக ஊரிலுள்ள ஏரி. நாள்தோறும் நீந்தி விளையாடுவேன். அண்ணன்தான் நீச்சல் கற்றுத் தந்தார். மாலையில் அங்குள்ள இளைஞர்களுடன் எனக்கும் சிலம்பம் கற்றுத் தருவார். கோயிலைச் சுற்றிப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். அந்த ஊரில் மாடுமேய்க்கும் சிறுமி என்னைவிட மூத்தவள். எனக்குக் கோயிலை சுற்றிக் காட்டுவாள். கோயில் கோபுரத்தில் உள்ள படிகளில் ஏறி உச்சிக் கோபுரம் வரை என்னை அழைத்துச் சென்று காட்டினாள். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஏரியும் குளங்களும் வயல்வெளிகளுமாய்ப் பார்த்து வியந்து நின்றேன்.
 
தந்தை திருஉத்தரசோசமங்கை கோயிலிலும் இரண்டொரு முறை சித்தர் பாடல்களைப் பற்றிப் பேசினார். அன்று எனக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தளத்தில் ஒரு இசுலாமிய சித்த மருத்துவரை அழைத்துப் பேசவைத்துக் கேட்ட அம்மக்களின் பெருந்தன்மை, மதச்சகிப்புணர்வு முதலியவற்றை இன்று நினைத்துப் பார்த்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
 
கீழக்கரையிலிருந்து என் தந்தை வெளியேறியதன் பொருளை ,சித்தர் பாடல்கள் பற்றி கைலாசபதி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தபோதுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கட்டுரையில் கைலாசபதி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.
 
‘நமக்குப் பிடிக்காத சபையிலிருந்தும் நாம் எழுந்து போய்விடுவது போல நமக்குப் பிடிக்காத சமூகத்திலிருந்து ஒதுங்கி தனி வாழ்வு நடத்தினர் தாவோயிகள். நீதாம் கூறுவதுபோல அவர்கள் அவ்வாறு விலக்கிகொண்டதே ஆட்சேபத்தைத் தெரிவித்ததற்குச் சமானமாகும்’
 
தம் இறுதி மூச்சுள்ளவரை என் தந்தை ஆழ்ந்த மதநம்பிக்கையுள்ளவராக இருந்தார். நான் புதுமுக வகுப்பு படிக்கும்போது அவர் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அவர் இறப்பிற்கு திருஉத்தரசோசமங்கை கிராமம் முழுக்கடைப்புச் செய்து கீழக்கரையில் எங்கள் வீட்டில் குழுமிவிட்டது.

***
நன்றி : இன்குலாப், 'காக்கைச் சிறகினிலே’ இதழ் (ஜூன்2013), இதழ் தந்த நண்பர் எச். பீர்முஹம்மது. கட்டுரையை தேர்வு செய்து என்னை 'டைப்' செய்யவும் வைத்த சாதிக்கிற்கு ஸ்பெஷல் நன்றி.

Sunday, June 2, 2013

சாதாரணர்கள் சாதாரணர்கள்தாமா? - வலம்புரி ஜான்

'என் பேச்சால் பலர் மாறாவிட்டால், ஒருவனாவது மாறட்டும். அதுவும் வலம்புரி ஜானாகவே இருந்துவிட்டால் நல்லதுதானே!'' என்று சொன்ன 'மேரி ஜான்'-ன் 'இந்த நாள் இனிய நாள்' ஒன்றாம் தொகுதியிலிருந்து...

***

சாதாரண மனிதர்கள் என்றும் சரித்திர மனிதர்கள் என்றும் நாம் பிரித்துப் பார்க்கிறோம். மனிதர்களில் அப்படிப்பட்ட பிரிவினை உண்டுதான்.

ஆனால் வரலாறு என்பதே மகத்தான மனிதர்களின் வாழ்க்கை வடிப்புத்தான் என்று கார்லைலே சொன்னாலும் அது முழுக்கவே ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

சாதாரண மனிதர்களின்  கூட்டு முயற்சிக்கு மாபெரும் தலைவர்களின் தனி முயற்சி ஈடானது அல்ல என்கிற கருத்து தவறானது. தனி மனிதர்களின் கூட்டு முயற்சியே தலைவர்களின் தனி முயற்சியைவிட அபாரமானது.

எல்லாச் சமயங்களும் ஒன்றுதான் என்று பேசுகிறோம்; எழுதுகிறோம். மேற்கோள் காட்டுகிற மேதைமை எல்லாம் இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் இந்த நெறியைக் கடைப்பிடிக்கிறவர்கள் நம்மில் எத்தனை பேர்கள் என்று பார்க்க வேண்டும்.

எந்தப் பல்கலைக் கழகத்திலும் பயிலாத, நாம் சொல்லுகிற எந்தப் பாடங்களும் தேர்ச்சி பெறாத பலர் சில தத்துவங்களை வாழ்ந்து காட்டுவதன் வாயிலாக நமது பல்கலைக்கழகங்களை, கல்விச் சாலைகளை உள்ளீடற்றவைகளாக ஆக்கி விடுகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் வேளாங்கன்னியிலே சிவாலயத்துக் குருக்கள் ஒருவர் இருக்கிறார். ஒரு நாள் எங்கள் தலைவரின் பிறந்த நாள் வேண்டுதலுக்காக இங்கே போனேன். குருக்கள் அவருக்காக, எனக்காக அர்ச்சனை செய்தார்.

முடிந்ததும் நான் வேளாங்கன்னி ஆலயத்திற்குப் போனேன். அங்கே பாதிரியார் மூன்று பரிசுப் பொட்டலங்களை வைத்துக்கொண்டு என்னைத் தவிர வேறு எவரெவருக்குத் தரலாம் என்று தயங்கிக் கொண்டிருந்தார்.

நான் பின்னிட்டுத் திரும்புகிறபோது அதே குருக்கள் கால்கள் முழந்தாளில், கைகள் மெழுகுவர்த்தியோடு, அந்தப் பரிசுக்கு என்னிலும் அவர் தகுதியானர் என்பதால் அவருக்கே தாருங்கள் என்று பாதிரியாரிடம் சொன்னேன். அவரும் மிகுந்த வணக்கத்தோடு அதைப் பெற்றுக் கொண்டார்.

அடுத்து அதே ஊரில் உள்ள பள்ளிவாசலுக்கு அவர் எங்களோடு வந்தார். வந்த வேளையில் துவா நடந்தபோது கைக்குட்டையால் தலையை மறைத்துக் கொண்டார்.

இவர் எங்கே சமரசப்பாடம் படித்தார் என்பது தென்படவில்லை. ஆனால் பாடங்களில் காணப்பட்ட உயர்நெறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறவராக அவர் இருந்தார்.

ஊத்துக் கோட்டை தாலுக்காவில் சூளைமேனி என்கிற இடத்தில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் பல ஆண்டு காலமாக முகம்மது யூசுப் என்ற இஸ்லாமியரின் பாதுகாப்பில் உள்ளது. பெருமாள் இந்த முஸ்லீமை இதுவரை முறைத்துவிடவில்லை.

திருமலைக்குப் பாதயாத்திரையாக சென்னையிலிருந்து போகிற ஒரு குழுவில் ஆண்டுதோறும் தவறாமல் இடம் பெறுகிறவர் வின்சென்ட் என்கிற கும்பகோணம் கிறிஸ்தவர்.

வில்லிவாக்கம் தேவகான இன்னிசைச் சங்கம் என்கிற இந்த அமைப்பு திருமலைக்குப் போகிறபோது வேறு மதத்தவர்களும் இவர்களுக்கு அன்பு பாரட்டுகிறார்கள்.

சேலத்தில் எனக்குத் தெரிந்த மீனாட்சி ஆச்சி இருக்கிறார்கள். இவர்களுக்குச் சொந்த இடம் சிறுகூடல் பட்டி. பக்கத்து வீட்டில் கிறிஸ்தவர்கள் உள்ளன்போடு பழகினார்கள்.

அந்த வீட்டுக் கிருஸ்தவச் சிறுவன் மீது அன்பு பாராட்டி வந்தார்கள். ஒருநாள் அந்தக் கிறிஸ்தவப் பெற்றோர்கள் மறைந்தார்கள்.

அன்பு காட்டிய கிறிஸ்தவக் குழந்தையை இந்த ஆச்சி எடுத்து வளர்த்தார்கள்,. பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். எங்கும் சென்று முறையான கல்வி கற்காத இந்த ஆச்சி , கிறிஸ்தவப் பிள்ளையை அந்தச் சமய முறைப்படி வளர்த்தார்கள்.

கேரளத்திற்குச் சென்று அவருக்குப் பெண் பார்த்து திருமணித்து, பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

இவர்களது இல்லத்தில் இந்து சாமிகளும் , கிறிஸ்தவ சாமிகளும் உண்டு. வெள்ளிக்கிழமை மற்ற இரண்டு குழந்தைகளுக்காக கோயிலுக்குப் போவார்கள். ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவ மகனுக்காக தேவாலயத்திற்குப் போவார்கள்.

இப்படி வேதப் புத்தகங்களில் உள்ள தங்களது மேதமையைக் காட்டாமல் உண்மையான உயர்நெறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறாவர்களாக இருக்கிற பெருமக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

நிரம்பப் படித்தவர்களும், ஒன்றுமே படிக்காதவர்களும் இத்தகைய உயர்நெறி வாழ்க்கையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால் அரைகுறையாகப் படித்தவர்கள் இந்தச் சமயத்திற்கும் அந்தச் சமயத்திற்கும் இது வேறுபாடு, அது வேறுபாடு என்று செயற்கையாகச் சுவர்களை எழுப்புவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

ஆக, சாதாரணர்கள் சாதாரணர்கள் அல்ல. சரித்திரத்தில் இடம்பெறாத, ஆனால் பெறத்தக்க மாமனிதர்கள் இவர்களே!

**

நன்றி : ஆஸாத் பதிப்பகம்

**
+
ஓய்வெடுக்கிறார் வலம்புரி ஜான் - அண்ணாகண்ணன்

Tuesday, May 7, 2013

ஒற்றுமைக் கனிகள்

தன் வாழ்நாள் முழுதும் மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்ட 'சொல்லரசு' மாமாவை (மர்ஹூம் ஜாஃபர் முஹ்யித்தீன் அவர்கள்) அதிகாலைக் கனவில் கண்டேன். 12-2-2003 அன்று நாகை இஸ்லாமிய கல்விமையம் நடத்திய ஈத்மிலன் பெருநாள் சந்திப்பிற்கான அழைப்பிதழை அவர்கள் கொடுத்ததும் சிறப்பு விருந்தினராக ஜஃபருல்லாநானா கலந்துகொள்கிறாரே.. மதக்கலவரம் வந்துவிடாதா மாமா என்று நான் கேட்டதும் ஞாபகம் வந்தது. சிரித்துக்கொண்டே, சுவாமிஜி ரிஷி ஷைதன்யா அவர்களும் சுவிசேஷ திருச்சபை சபைகுரு ஜெ.ஜெபகுமார் அவர்களும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதால் கண்டிப்பாக கலவரம் வராது என்று உறுதிகூறிய மாமா, 'அன்னைக்கி மட்டும்' என்று அன்று கூறத் தவரவில்லை! - ஆபிதீன்

***
நாம் மதத்தால், மொழியால், இனத்தால் பல்வேறுபட்டவர்களாக இருப்பினும் - நாம் அனைவரும் மனிதர்கள். நமது உடலமைப்பும், தேவைகளும், உணர்வுகளும் ஒரே மாதிரியானவை. நமது மதத்தைப் பழித்தால் நமக்கு வருத்தம் ஏற்படுவது போல அடுத்தவருக்கும் ஏற்படும். எனவே தனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்புவதே நல்லிணக்கத்தின் துவக்கமாகும்.

எல்லா சமயத்தவர்களின் உணர்வுகளையும் மதிக்கக்கற்றுக்கொள்ள வேண்டும். "பிறர் வணங்குகின்ற அல்லாஹ் அல்லாதவற்றை திட்டாதே!" (குர் ஆன் 6:108) என இஸ்லாமும் "எல்லா தர்மங்களையும் சமமாக பாவிக்க வேண்டும்" (சர்வதர்ம சம்பாவ்) என இந்து சமயமும் வலியுறுத்துகின்றன. சமய உணர்வுகளைக் காயப்படுத்துவதன் மூலமே கசப்புணர்வு உருவாகின்றன.

நமது நாடு நீண்ட காலமாக அமைதிமிக்க பன்மை சமூகமாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால் ஆதிக்க சக்திகள் பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சி செய்கின்றன. ஆனால் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் எந்த சக்தியாலும் நம்மை பிரிக்க முடியாது. மனிதநேயமே நம் உள்ளங்களை இணைக்கும் பாலமாகும் மனித் நேயத்தை வளர்க்க எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மனித நேயம் வீட்டிலே விதைப்பட வேண்டும். கல்வி கூடங்களில் நீர் பாய்ச்சப்பட வேண்டும். தலைவர்களும், ஆன்மீகவாதிகளும்,அறிவு ஜீவிகளும் அதற்கு உரமிட வேண்டும். வகுப்புவாதிகளை இனம்கண்டு களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒற்றுமை எனும் கனிகளை உண்டு மகிழலாம். வலிமையான , வளமையான ஒற்றுமையான பாரதத்தை உருவாக்கலாம்.

மதவெறி சாய்ப்போம் ! மனித நேயம் காப்போம்!

(தினகரன் ரம்ஜான் மலர் - 2002 பக்கம் 168லிருந்து)