Showing posts with label எஸ்.எல்.எம். ஹனிபா. Show all posts
Showing posts with label எஸ்.எல்.எம். ஹனிபா. Show all posts

Friday, July 7, 2023

ஃபோன் நகரம்‼️ (சிறுகதை) - எஸ்.எல்.எம். ஹனீபா


ஃபோன் நகரம்

எஸ்.எல்.எம். ஹனீபா

அவன் அமரனான் : அவன் பொன்னகரம் படைத்தான் - நான் ஒரு போன் நகரம் எழுதினேன்..

வீட்டின் முற்றம் முழுவதும் விதவிதமான பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கும். அதிகாலையில் பனிகுளித்து, முகங்களில் அழகும் மணமும் துளிர்த்து புத்தம்புதிய மணமகள் போல நிற்கும் அந்தப் பூஞ்செடிகளைத் தினந்தினம் தரிசித்துத் திழைத்து நிற்கிறேன்..

அன்றும் வழக்கம்போல நிற்கிறேன், எனது பத்துவயதுச் செல்லக்குட்டி பாடசாலைக்குப் போக  ! அவளை தரிசிக்க.... 

அதோ வருகிறாள் எனது சசிக்குட்டி. அவளுக்குப் புன்னகையே முகமாக வாய்த்துள்ளது, அத்தனை அப்பாவித்தனமும் குறும்பும் நிறைந்த, நிலவில் வடித்த பேரழகு முகம் அவளுக்கு..

"ஹாய் அங்கிள் ! குட் மோர்னிங்"

"குட் மோனிங், குட் மோனிங்.. வாடா செல்லம்.. எப்டி இருக்காய் ?" - கேட்டுக்கொண்டே அந்தக் கணத்தில் பிறந்த ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பூஞ்செடிகளைப் பார்த்தேன்.. மிகவும் அழகானவை அந்தப் பூக்களா அல்லது எனது சசிக்குட்டியா ? சந்தேகம் கலைந்தது, சசிக்குட்டிதான் பேழகு ! 

அவள் பாடாசாலைக்குப் போகும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு வகையான பூக்களில் ஒன்றைப் பறித்துக் கொடுப்பேன். அன்றும் அவளுக்கு ஒரு ரோசா மலரைப் பறித்துக் கொடுத்தேன்..

முத்துப் பற்கள் பளிச்சிட "தேங்க் யூ அங்கிள், Bye.." 

எனக்கும் அவளுக்கும் இடையே இந்தச் சந்திப்புத் தினமும் நடக்கும்.. 

மாலை நேரங்களில் அவள் ஓதல் பள்ளிக்குப் போவாள். அப்போது சற்று வெயில் நேரமாக இருப்பதால் நான் கொஞ்சம் வீட்டுக்குள் சாய்ந்து கிடப்பேன். சொந்த வீட்டுக்குள் வருவதுபோல எனது அறைக்குள் வருவாள். படுத்துக் கிடக்கும் எனது கைகளைப் பற்றி, கைகுலுக்கிவிட்டுச் செல்வாள். சிலபோது எமது கைகளில், நெற்றியில், தலையில் முத்தமிட்டுச் செல்வாள். அந்த வயதில் எனக்கொரு மகள் இருந்து அவள் இதையெல்லாம் செய்தால் எத்தகைய உணர்வுகள் ஏற்படுமோ அதே உணர்வுகளைத்தான் சசியின் செய்கைகளும் எனக்குள் ஏற்படுத்தின. 

அவளுக்குச் சிறுசிறு பொருளாதாரத் தேவைகள் ஏற்படும். படிப்புச் செலவுகள், பாடசாலை உபகரணங்கள் வாங்க என்று என்னிடம் எப்போதாவது காசு கேட்பாள், அதையும் உரிமையோடு கேட்பாள். கொடுத்து உதவுவேன்.

வருடங்கள் அவளை முன்னோக்கி நகர்த்தி வந்தன. வேகமாக, அழகாக வளர்ந்து வந்தாள்.

ஒருநாள் மாலை நான் அறையில் சாய்ந்து கிடந்தேன். சசி திடீரென ரெண்டு பையன்களோடு எனது அறைக்குள் வந்தாள். ஓதல் பள்ளி போகிற வழியில் வந்திருக்கிறாள். அந்தப் பையன்களில் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஒருவனைச் சுட்டிக்காட்டி "அங்கிள், இவனைத்தான் நான் லவ் பண்றேன்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாகப் போயிற்று. இந்தச் சசிக்குட்டி அவ்வளவு வளர்ந்து விட்டாளா இப்போது ? எனக்குள் ஒருவிதமான பிரிவுத் துயரமும் அவளது வாழ்க்கை குறித்த அச்சமும் தோன்றிற்று... 

மாலை நேரங்களிலும் அவள் எங்காவது போகும்போது என்னையும் கூப்பிடுவாள். இருவரும் இரண்டு சைக்கிள்களில் சவாரி போவோம் கண்டதையும் பேசிச் சிரித்தபடி... பாடசாலையில் நடக்கும் சுவாரஷ்யமான விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பாள்.. அவளுக்குள் அப்போது பால்யபருவக் காதல் உணர்வுகள் முனைப்புற்றிருந்தன.. அவளது 'லவ்வர்' பையன் தூரத்தில் தென்பட்டதும் எனக்குச் சைகை காட்டி, என்னைக் 'கழற்றி விட்டுவிட்டு' அவனை நோக்கிச் சைக்கிளில் பறந்துவிடுவாள்.. 

அப்போது அவள் முன்னைய பையனை விட்டுவிட்டு இன்னொரு பையனுடன் நட்பாகி இருந்தாள். அது குறித்தும் அவளிடம் கேட்டேன். "என்னடி சசி, ஆளை மாத்திட்டியா ? 

"அவன் சரில்லை அங்கிள், என்னை விட்டுட்டு இன்னொருத்தியப் புடிச்சிட்டான், எனக்கென்ன ஆளா பஞ்சம், நானும் ஆள மாத்திட்டன்" என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.! 

இவள் தொடர்ந்து நன்றாகப் படிப்பாளா ? பொறுப்புடன் நடந்து கொள்வாளா ? வாழ்க்கையில் சறுக்கி விடுவாளா ? என்ற கேள்விகள் என்னை அடிக்கடி துளைத்தெடுத்தன.

ஒருநாள் மாலை பாதையில் என்னைச் சந்தித்தவள் திடீரென "அங்கிள், எனக்கொரு ஐயாயிரம் ரூபா காசு வேணும்" என்றாள். நானோ திடுக்கிட்டுப் போனேன்.

"என்னத்துக்குச் சசி உனக்கு இப்ப இவ்வளவு காசு ? என்ன அவசரம் ?" என்றேன்.

"நான் நாலைஞ்சி பொடியன்மார லவ் பண்ணிட்டன் அங்கிள்.. எல்லானும் ஏமாத்திப்போட்டு விலகிட்டான்கள். இப்ப இருக்கிறவனும் போய்ருவானோ எண்டு பயமாக் கிடக்குது, அவனும் இல்லாம எனக்கு இரிக்க ஏலாது. வாற கிழம அவன்ட பிறந்த நாள். அவனுக்கொரு ஃபோன் வாங்கிக் குடுக்கணும்,  அவனும் அதத்தான் கேட்கான் அங்கிள்.. எப்டியாவது வாங்கிக் குடுக்கத்தான் வேணும், அதுக்குத்தான் ஐயாயிரம் ரூபா வேணும்" 

நான் சிலையாகிப் போனேன் ! இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் ! இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறது ? சசியைப் பற்றிய ஒரு பேரச்சம் எனக்குள் பொங்கிப் பிரவாகித்து வெடித்தது ! 

"உன்ட நெலெம எனக்கு விளங்குது சசி.. ஆனா இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோன்னுதான் கவலையாக் கிடக்கு. நீ அவனுக்கு போன் வாங்கிக் குடுக்க நினெக்கிறதுல தப்பில்ல.. நான் பென்ஷன்காரன், ஒனக்குத் தெரியும்தானே சசி, இருநூறு முன்னூறுன்னா எடுத்துக்கேலும்..

ஐயாயிரத்திற்கு ஒடனமே எங்க போற நான்.. அதான் கவலையாக் கிடக்குது..." - நான் மிகுந்த சங்கடப் பட்டேன்.

கொஞ்ச நேரம் நெற்றியில் கோடுகள் படர, புருவங்களைச் சொருக விட்டு எதையோ கடுமையாகச் சிந்தித்துத் தலை நிமிர்ந்தவள், "சரி அங்கிள், பரவாயில்லை, நான் சமாளித்துக் கொள்றன்" என்று சொல்லி என் வயிற்றில் செல்லமாகத் தட்டிவிட்டுப் புன்னகையுடன் போய்விட்டாள். 

அவளது பாடசாலைக்கு அருகில் ஒரு ஃபென்சி ஸ்டோர் கடை இருந்தது. கடைக்காரர் தமிழ்ப் படங்களில் வரும் வில்லன்கள் போலிருப்பார். அண்டா வயிறு, பருத்த ஷரீரம், காட்டுத்தனமாக வளர்ந்துகிடக்கும் அரைவாசி நரைத்த தாடி, கழற்றாத தொப்பி, அஞ்சி நேரத் தொழுகையாளி, அஷில் முஸ்லிம், பெயர் நன்றாக நினைவில் உள்ளது, சொல்ல மாட்டேன். 

அந்தக் கடைக்கு சசி அடிக்கடி போவாள். பாடசாலை உபகரணங்கள் வாங்குவாள். அவள் கடைக்கு வந்தால் கடைக்காரர் குளிர்ந்துபோவார். பொருள்களை அவசரமாகக் கொடுத்து அனுப்பாமல் இழுத்தடிப்பார். அவளைச் சீண்டிவிட்டுப் பேச்சுக் கொடுத்துக் கலாய்ப்பார். பொருள்களைக் காட்டும் சாட்டில் கைகளைத் தொடுவார், தேவையில்லாமல் உரசிக்கொண்டு நிற்பார், பட்டும்படாத மாதிரி அவளது மார்பில் பிஷ்டங்களில் உதடுகளில் தட்டி, வருடி விடுவார்.. இவற்றையெல்லாம் அவள் கண்டுகொள்ளாமல் இருப்பாள், போகும்போது அவரிடமிருந்து இலவசமாகக் கிடைக்கும் டொஃபி, சுவிங்கம் மாதிரி அற்பச் சந்தோஷங்களுக்காக ! 

கடைக்காரரின் இந்தக் குஷால் செய்கைகள் பற்றியெல்லாம் சசி என்னிடமும் சொல்லியுள்ளாள். அந்த மனிதன் ஒரு புழுவைப் போல என மனக் கண்களில் தோன்றி மறைவார்...

என்னிடம் ஐயாயிரம் ரூபா கேட்ட அன்றைய தினம் மாலை சசி அந்தக் கடைக்குச் செல்கிறாள்...

வெற்றிலைக் கறைபடிந்த கோரமான பற்களைக் காட்டிச் சிரித்து வழிந்து சசியை வரவேற்கிறார்.

"மாமா, எனக்கொரு ஹெல்ப் பண்ணுவீங்களா..?"

"உனக்கில்லாத ஹெல்ப்பாடி செல்லம்.. சொல்லன் பார்ப்பம், உனக்காக நான் என்னெண்டாலும் செய்வன்.." சொல்லிக்கொண்டே அந்தப் புழு சசியின் கைவிரல்களைப் பிடித்து மெல்ல அழுத்துகிறது... 

"மாமா, வாப்பா வெளிநாட்டுல இரிந்து வாற மாசம் காசி அனுப்புவாங்க, காசி கிடைச்சதும் தந்துர்றன்..  எனக்கொரு ஐயாயிரம் ரூபாய் காசி கடனா தருவீங்களா..?

" என்ன புள்ள, இப்டி சிம்ப்பளா ஐயாயிரம்னு கேட்காய்.. பெரிய தொகையாச்சே.. எப்டி தாற சின்னப் புள்ள உன்னய நம்பி..?"

"என்ன மாமா.. சும்மா கதய வளக்காதீங்க, நான் பெரிய புள்ளயாகி மூணு வரிசம் இப்ப ! வாற டிசம்பருக்கு ஓ.லெவல் எழுதப் போறன், காசி தர ஏலுமா ஏலாதா, அவ்ளோதான் கத !"

"டியே, டியேய். கோவிச்சுக்காதடீ, இப்ப லாச்சிக்குள்ளால அவ்ளோ காசில்ல, அந்திக்கி யாவாரம் நடந்துதான் காசி சேரணும். நீ கவலப் படாத, நாளெக்கி ஸ்கூலுக்கு கொஞ்சம் நேரத்தோட வா, நான் சுபஹ் தொழுதிட்டு வந்து கொஞ்சம் சாஞ்சி கிடப்பன், கட துறக்கிறதுக்கு கொஞ்சம் முந்தி ஒரு 6.45 க்கிப் போல வா, கடக்கிப் பின்னால் வந்து கதவ தட்டு, நான் எழும்பி கதவ தொறந்து நீ கேட்ட காச தாறன்" என்று சொன்ன புழுவின் கண்கள் சசியின் மார்புகளின் மீது பரவுவதை சசி அவதானித்தாள்... அவளுக்கு உள்ளேயும் ஏதோ செய்வதாக உணர்ந்தாள்..

"சரி மாமா, நான் காலைல வாறன் .."  என்று நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து ஒரு யோகர்ட்டைத் திணித்தது புழு.

இன்று கையைப் பிடித்து இழுத்த இழுப்பில் நாளை காலை தனக்கு நடக்கப் போவதை நன்றாக உணர்ந்துகொண்டாள்.

மறுநாள் காலை 6.45 மணிக்குக் கடைக்குள் நுழைந்த சசி 7.00 மணிக்கு வெளியே வந்தாள்... 

சீருடையையில் கசங்கி இருந்த இடங்களை, பர்தாவை தடவிவிட்டுச் சரிசெய்தவாறே கைக்குட்டையால் உதடுகளையும் கன்னங்களையும் அழுத்தித் துடைத்தவாறு பாடசாலை 'கேட்'டை நெருங்கினாள்...

'கேட்' அருகில் நின்றுகொண்டிருந்த அவளது 'லவ்வ'ரின் கைக்குள் அந்த ஐயாயிரத்தை வேண்டா வெறுப்பாகத் திணித்துவிட்டு, அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் பாடசாலைக்குள் நுழைகிறாள்...

*

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா

https://www.facebook.com/slm.hanifa

Saturday, July 23, 2016

மொஹல் பிரியாணி - சமஸூம் ஹனீபாக்காவின் நாக்கும்!

புகழ்பெற்ற சமையற் கலைஞர் சுல்தான் எழுதிய தொடர் விகடனில் வந்தபோது, 'உங்களை அசத்திய ருசியான உணவு எது?' என்று வாசகர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டார். சுல்தான்பாய் சொன்னது நாகூர் பிரியாணியை! 'பிரத்தியேகமான மசாலாவைச் சேர்க்கிறார்கள்... அவ்வளவு மணம்'  என்று சொல்லியிருந்தார். பண்டாரி யூசுப்அத்தாவின் கைவண்ணத்தைச் சுவைத்திருப்பார் போல. நல்லது, தஞ்சாவூர் மொஹல்பிரியாணி பற்றி சமஸ் எழுதியதை ருசித்து ருசித்துப் படித்த ஹனீபாக்கா , அதை மட்டும் டைப் செய்து கொஞ்சம் குறிப்புகளும் சேர்த்து அனுப்பியிருக்கிறார்.  அஸ்மாவுக்கு சமர்ப்பணம் வேறு! அதைப் பகிராமல் வேறென்ன வேலை? மகள் சமைத்த பிரியாணியை 'மஹல் பிரியாணி' என்று சாமர்த்தியமாகச் சொல்லும் மஹா வாசகர்கள் இந்த மொஹல் பிரியாணியை ருசியுங்கள். நன்றி. - ஆபிதீன்
*
எனது நெஞ்சுக்கு நெருக்கமான முகநூல் நண்பர்களில் துரை சரவண சபாபதியும் ஒருவர். மிக மென்மையான உணர்வுகள் கொண்டவர். அன்பால் உருவாக்கப்பட்ட அபூர்வ மனிதர். அவ்வப்போது இருவரும் கதையாடல் செய்வோம். அவரைக் காண்பதற்காக வேண்டியாவது நான் மீண்டும் ஒரு தடவை தமிழகம் செல்ல வேண்டும். 

எங்கள் உரையாடலின் இடையிடையே எங்களூர் சமையல் பற்றியும் பேசிக் கொள்வோம். 

"சாப்பாட்டுப் பிரியரான நீங்கள் சமஸ் எழுதிய சாப்பாட்டுப் புராணம் நூல் படித்தீர்களா மாமா?" என்று கேட்டார். 

"இல்லை தம்பி" என்றதும், அடுத்த வாரமே அந்த நூலை எனது கைக்கு அனுப்பி வைத்தார். நன்றி துரை சரவண சபாபதி.

சாப்பாட்டுப் புராணம் எழுதிய சமஸுக்கு எனது வாழ்த்துக்கள். நூலை அழகுறக் கொண்டு வந்த துளி வெளியீட்டுக்கும் இந்த நூலை எழுதத் தூண்டிய தினமணிக் கதிர் ஆசிரியர் குழுவுக்கும் எனது நன்றிகள். 

புத்தகத்தைக் கரைத்துக் குடிப்பவன் என்று சொல்வார்களே, அவ்வாறு இந்த நூலின் 112 பக்கங்களையும் பல தடவைகள் கரைத்துக் கரைத்துக் குடித்து விட்டேன். 

நிற்க,

நாகூருக்குச் சென்ற வேளை, ஆபிதீனுடைய அருமை மனைவி அஸ்மாவின் கையினால் சாப்பிட்ட ஆட்டுக்கறி பிரியாணிக்கு நிகரான மொஹல் பிரியாணி பற்றிய ஒரு பதிவை ஆபிதீன் பக்க வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். - எஸ்.எல்.எம். ஹனிபா
***

மொஹல் பிரியாணி - சம்ஸ்

கல்யாணச் சாப்பாட்டுக்கு எப்படி ஒரு மவுசு உண்டோ, அதே போல் கறி விருந்துக்கும் ஒரு மவுசு உண்டு. தலை வாழை இலை நடுவே சோறு குவித்து, குழம்பு வெளியேறாமல் பாத்தி கட்டி, எலும்பில்லாத கறித் துண்டுக்காகத் தவமிருந்து அடுத்த முறை வருவதற்குள், மூச்சுமுட்ட முழுங்கி, தண்ணீர் குடிக்கும் அனுபவமே தனிதான். 

இப்போதோ காலம் மாறிப் போச்சு; கிராமங்களில் கூட பிரியாணிதான். என்னதான் மூன்று தினுசு குழம்போடு கறி சாப்பாடு போட்டாலும் பிரியாணி போல் விருந்து நெறக்கவில்லை என்கிறார்கள். எல்லோரையும் தன் மணத்தாலேயே அப்படியொரு மயக்கு மயக்கி வைத்திருக்கிறது பிரியாணி. 

ஆனாலும், தமிழர்கள் பிரியாணியை பிரியாணியாக சாப்பிடுவதில்லை தெரியுமா? ஆமாம். அதுதான் உண்மை. 

பிரியாணி வகையறாக்களிலேயே முதலாமவர் ஸ்ரீமான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மொஹல் பிரியாணி. அவருடைய ஜாதகப்படி ஆதியில் பிரியாணிக்கு தாளிச்சா, குருமா போன்ற ஜோடியெல்லாம் கிடையாது; ஒத்த ராசாதான். கொஞ்ச நாள் கழித்து விருந்துகளில் வெங்காயப் பச்சடியும் அகர்அகரும், (கடல் பாசி இனிப்பு) சேர்த்துச் சாப்பிட்டார்கள். பின்னாளில் தக்காளிப் பழரசமும் சேர்ந்தது. சாதத்தைக் குழம்புடன் குழைத்து அடிக்கும் நம் பழக்க தோசம் காரணமாகவே தாளிச்சாவும் குருமாவும் சேர்ந்து கொண்டன என்கிறது பிரியாணி வம்ச சரித்திரம். 

பிரியாணியை பிரியாணியாக சாப்பிட வேண்டும் என்றால் அதைத் தணித்துத்தான் சாப்பிட வேண்டும். அதுதான் உண்மையான ருசி. இது சாப்பிடுபவருக்கான விதி மட்டுமல்ல, சமைப்பவருக்கான விதியும் கூட.

இப்படிப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு சமைக்கப்படுவேத ஸ்ரீஸ்ரீஸ்ரீ மொஹல் பிரியாணி. பாரம்பரியமான மொஹல் பிரியாணியில் கோழி, இறால், மீன் வகையறாக்கள் எல்லாம் கிடையாது. ஆடு மட்டுந்தான். இதையும் பிரியாணி வம்ச சரித்திரம்தான் சொல்கிறது. சரி அது என்ன மொஹல் பிரியாணி?

இளம் கிடாக் குட்டிக் கறியுடன் மசாலா கூட்டி குழம்பு பதத்துக்குத் தண்ணீர் சேர்த்து, நல்ல கொதி விட்டு, அரிசி கலந்து போதுமானவரை தம் போட்டு இறக்கினால் அதுவே  மொஹல் பிரியாணி. 

தங்கள் போர் வீரர்கள் களத்தில் புஷ்டியுடன் குஸ்தி போடுவதற்காக மொஹலாயர்கள் தயாரித்த உணவு என்பதால், அவர்கள் பெயராலேயே நிலைத்துப் போயிற்று. அதற்காக மொஹலாயர் காலத்துக்கா போக முடியும். இப்போது எங்கையா அந்த பிரியாணி கிடைக்கும் என்றுதானே கேட்கிறீர்கள்!

தஞ்சாவூரில் கிடைக்கிறது. நாள் தோறும் மூன்று மணி நேரம் மட்டுந்தான். பகல் 12 மணி முதல் 3 மணி வரை. கடைப் பெயரே மொஹல் பிரியாணிதான். தாளிச்சா, குருமா மட்டுமல்ல, கறி வருவல், பிரட்டல் என்று எந்தப் பக்கவாத்தியமும் கிடையாது. போனால் போகட்டும் என்று வெங்காயப் பச்சடி மட்டும் தருகிறார்கள். எல்லாம் பிரியாணி செய்யும் தனி ஆர்வத்தனம். 

பிரியாணிக்குப் பதம் எது தெரியுமா? பிரியாணியின் ஒவ்வொரு பருக்கையும் கறி மணத்தில் கறி ருசியில் இருக்க வேண்டும். கூடுதலாகச் சொல்லவில்லை. தஞ்சாவூர் மொஹல் பிரியாணியில் அந்தப் பதம் கூடியிருக்கிறது. எப்படியென்று கேட்டால், கடை உரிமையாளர் முனாஃப் ஒரு உரையே நிகழ்த்துகிறார். 

ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு இயல்புண்டு. வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நல்ல காய்தான். ஆனால், அதன் தோல் உடலுக்கும் ருசிக்கும் கேடு. பூண்டு, இஞ்சிக்கு அவற்றின் தோல் கேடு. இப்படி எதுவெல்லாம் கேடு தருமோ, அதையெல்லாம் கனகச்சிதமாக நீக்கிவிட்டு சரக்கைச் சேர்க்க வேண்டும். பிரியாணி என்றால், கறி மட்டுந்தான். அதில் எலும்பு, ஈரல், கொழுப்பு என்று பிற வகையறாக்களுக்கு வேலையே இருக்கக் கூடாது. அதே போல் செய்யும் பிரியாணி அளவில் பத்தில் ஒரு பங்கு நெய், ஒன்றரைப் பங்கு எண்ணெய், அவ்வளவுதான் கணக்கு. காசுக்காக சரக்கைக் குறைக்கவும் கூடாது. இருக்கிறது என்பதற்காக அதிகளவு சேர்க்கவும் கூடாது. இப்படியாக எல்லா விதிகளையும் கடைப்பிடிப்பதுடன் "தாம் விரும்புவதையே தனை நாடி வருவோருக்கும் தந்து மகிழ்வதே தருமம்." எனும் சமையல் தர்மத்தையும் கடைப்பிடிப்பதுதான் வாடிக்கையாளரை வசீகரிக்கக் காரணம் என்கிறார் முனாஃப். 

மொஹல் பிரியாணி சரி. அது என்ன இடையில் பிரியாணி வம்ச சரித்திரம்? இனிமேல்தான் எழுத வேண்டும். சுவாமி!
--------------------------

மீண்டும் ஹனீபாக்கா
சாப்பாட்டுப் புராணத்திலிருந்து எழுதிய இந்தப் பத்தி நாகூரில் எனக்கு ஆட்டுக்கறி பிரியாணி சமைத்துப் போட்ட அஸ்மாவுக்கு சமர்ப்பணம். 

இன்னுமொரு குறிப்பு: மொஹல் பிரியாணியைப் படித்து விட்டு எமது மக்கள் எனது கிராமமான ஓட்டமாவடி நகரத்தில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் ஹோட்டல்களில் ஆட்டுக்கறி பிரியாணியை தேடி அலைய வேண்டாம் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறேன். அங்கு ஆட்டுத்தோலையும் முள்ளையும்தான் கறிக்குப் பதிலாக அவித்துக் கொட்டுகிறார்கள். 

பிரபலமான ஒரு ஹோட்டல் முதலாளி என்னிடம் இவ்வாறு சொன்னார்: "ஓட்டமாவடிக்காரருக்கு என்னத்த அவிச்சுக் கொட்டினாலும், அவர்கள் சாப்பிடுவார்கள். அவர்களின் நாக்குக்கு ருசி பிடிபடாது" இந்தப் பழியிலிருந்து மீள்வோமா நண்பர்களே.

*

நன்றி : சமஸ் , 'துளி',  ஹனீபாக்கா

Saturday, January 10, 2015

எஸ்.எல்.எம். ஹனிபாவின் காதல் கதை

அன்புள்ள ஆபிதீன், அஸ்ஸலாமு அலைக்கும். இது, எனது வாழ்நாளில் நானெழுதிய காதல் கதை. தொகுதியில் இடம்பெறாத கதை. இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது. கதையின் நாயகனே நான்தான். - ஹனீபாக்கா

***
சிவப்புக்கல்லு மூக்குத்தி

“தம்பி எப்பிடி?”

“வாங்கய்யா வாங்க”

“இன்றைக்கு வெள்ளென கடை திறந்தாப்போல…”

“நான் வழமையா சுப்ஹு தொழுத கையோட வந்திடுவன்” இரும்புக் கதிரையை மெதுவாக இழுத்து, எனது இடப்பக்கம் சண்முக நாதன் ஐயா அமர்ந்து கொண்டார்.

“உடனலம் எப்பிடி? முகம் வாடினாப்போல… மாஜிதா கெம்பஸிலரிந்து வந்தவவோ? பேத்திட பாடென்ன? அவக்கு இப்ப இடுப்பு வலி சுகம்தானே?”

ஒரு மூச்சில் முழுக் குடும்பத்தவர்களின் குசலத்தையும் ஐயா கேட்டு முடித்தார்.

“இரவெல்லாம் தூக்கமில்ல ஐயா. பி.பி.ஸி. கேட்டு.. இரவின் மடியில் கேட்டு, பிஸ்மில்லாகானின் ஷெனாய் கேட்டும் தூக்கமில்ல. யாரிட்டாவது சொன்னாத்தான் மனசு விடியும்”

“அப்பிடியென்ன?”

கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு ஐயா கேட்டார்.

நானோ நினைவின் வழியைத் தூசு தட்டித் துலக்குகிறேன்.

நேற்றுப் போலிருக்கிறதய்யா. நாற்பது வருஷம். நான் அய்ந்தாம் வகுப்பில் படிக்கிறேன்.

வகுப்பில் பத்துப் பேர். அய்ந்து பெண்கள், இந்திராணி, சுகிர்தா தேவி, ஜானகி, பியவதி, ராஹிலா என்று…

“ஹாஜியார்! ஸலாமலைக்கும்!”

“வ அலைக்குமுஸ்ஸலாம்!”

“வயல்ல அறக்கொட்டியான், எண்ணெய் வேணும், பம்மையும் தரணும்”

அவசரமாக கைமுழுத்த வியாபாரம்.

“ஐயா! என்ன சொன்னேன்?”

“உங்கட வகுப்பில படிச்ச ஜானகி…”

“ஓமோம். அப்பெ ஓட்டமாவடி ஸ்கூல்ல தமிழ் மாணவர்களும் படிக்கிற… சிங்கள மாணவர்களும். பேப்பர் மில்லில வேலை பார்க்கிற ஹின்னி அப்புஹாமிட பியவதி, சந்திரபால,

மகேந்திரபால எல்லோரும் படிச்சம்”

எவ்வளவு சந்தோஷமான நாள்கள்… எங்களுக்குள்ள ஒரு மனஸ்தாபம் வரலிய.

நானும் ஜானகியும்தானய்யா வகுப்பில் நல்லாப் பாடுவம். தியாமூர்த்திட்ட மிருதங்கம், பியவதிட்ட சுருதிப் பெட்டி, சங்கீத வாத்தியார் தர்மலிங்கம் ஐயாட்ட வயலின்…

நானும் ஜானகியும் பாடுவம்.

ஏது பாராய் முகம் ஏழையின் மீதே

ஏகனே யோகனே மாயனே தியாகனே

ஏது பாராய் முகம்…

ஜானகியின் மூடிய விழிகளில் மைத்தீட்டி, நாசி மடலில் சிவப்புக்கல் மூக்குத்தி, எண்ணெய்க் கசிவில் ஜால் அடிக்கும்.

நானும் கண்களை மூடி இசையில் கரைவேன்.

மூடி விழிகளுக்குள் ஜானகி – ஜானகி மட்டும் நர்த்தனமாடினாள்.

விடியற கையோட நான் பள்ளிக்கு வந்திடுவன். புத்தகத்தை மேசையில வீசிட்டு – ஜனாகி வாற ஒழுங்கையைப் பார்த்து நிற்பேன்.

காட்டு விதானையார் வேலியோரத்தாலே கையொழுங்கை. மருங்கைப் பழம் போல் குருத்து மணல். ஜானகி கஸ்தூரி மஞ்சள் பூசிய முகம் இரட்டைப் பின்னலில் குண்டு மல்லிகைக் கொத்து – பச்சைக்கரை மஞ்சள் பட்டுப் பாவாடை, கொண்டையைத் தழுவும் வெள்ளிக் கொலுசு.

ரெண்டு வெள்ளை முயல் குட்டிகள் பதுங்கி… பதுங்கி  வருவதைப் போல அவளது பாதங்கள் அந்த ஒழுங்கையில் மிதந்து வரும்.

காலைச் சூரியனின் தங்கக் கதிர்கள் வெள்ளிக்கொலுசில் விழுந்து… பஞ்சவர்ணக் கோலிக் குண்டுகள்… கெண்டைக் காலில் டால் அடிக்கும்.

அப்படித்தான் ஐயா ஜானகி நடந்து வருவாள்.

புத்தகத்தை மேசையில் அழகாக அடுக்கி வைத்து விட்டு – ஸ்கிப்பிங் கயிறோடு மைதானத்துக்குப் போவம்.

வெறும் மணலில் அய்ம்பது தடவைகள் – ஒரே மூச்சில் எனது கையிலிருக்கும் கயிறு என்னைச் சுற்றி வரும்.

பதினைந்து, பதினாறு, பதினேழு…

ஜானகி களைத்துப் போய் நின்று விடுவாள்.

கண் கொட்டாமல் என்னைப் பார்த்துப் பூரிப்பாள்.

வியர்வை நெடி பரவி நிற்கும்.

“ஐயா! உரமிருக்கா? உரத்துக்கு மேல உரம் போடுறம் – வெள்ளாமை வெளுத்துப் போய்த்தான் கிடக்கு. ஒரு மூடை உரம் வாங்க ரெண்டு மூடை நெல் விக்கோணும். ஒரு போத்தல்

நோய் எண்ணெய்க்கு ஆயிரம். கமக்காரன் பதராப் போனான்”

“தம்பி சேகர்! உரக் கொம்பனிகளை விடவும் உரத்தில் கலப்படம் செய்யிற கொம்பனிகள்தான் நாட்டில கூடிப் போச்சி. எ.பி.ஸில நல்ல உரமிருக்கா பாருங்க”

ஐயா! இப்படியே நாள்கள் நகர்ந்து போயின. ஒரு நாள் கயிறடிக்கும் போது ஜானகிட மூக்குத்தி காணாமல் போட்டுதையா.

நானும் அவளும் தேடிக் களைச்சிப் போனம். அந்த வருஷம்தான் எங்கட செயினம்பூ பெரியம்மா மக்காவுக்குப் போக வெளிக்கிட்டுது.

அந்த நாளையில தண்ணிக்கப்பல்… மக்காவுக்குப் போய் வர ஆறு மாதம்.

ஐயா! இத்தனை வருஷத்தில எங்கட பெரியம்மாவைப் போல் ஒரு அழகியை நான் பார்த்ததில்ல. அப்படி அழகு, அப்படியொரு வசீகரம்.

ஜானகி ராமன்ட ‘அம்மா வந்தாள்’ படிச்ச நீங்களோ? அதில வாற ஐயர் பெண்டாட்டி அலங்காரத்தம்மாளை ஒளிச்சிப் போட்டு பெரியம்மாவைக் காட்டலாம்.

பெரியப்பாட நாற்பத்தைந்து வயசில, பதினெட்டு வயசு பெரியம்மாவை வசியம் செய்து மணம் முடிச்சிட்டாராம். பில்லி, சூனியம், வசியம் என்று பேர் போன வைத்தியர். கர்ப்பிணியைப்

பார்த்து வயிற்றில் இருக்கிற சிசு ஆணா பெண்ணா என்று அப்பவே சொல்லிப் போடுவாரு.

எங்கட ஊரில மூக்குத்தி போடுற ஒரேயொரு பெண்ணும் பெரியம்மாதான்.

சிவப்புக்கல்லு மூக்குத்தி.

மக்காவுக்குப் போக வெளிக்கிட்டதும் – நகையெல்லாம் கழட்டி பரிசப் பெட்டில வச்சிட்டா. பெரியம்மாட்ட இருந்துதான் நான் பள்ளிக்குப் போவன்.

மறு நாள் பெரியம்மாக்குத் தெரியாம மூக்குத்திய பள்ளிக்குக் கொண்டு பெய்த்தேன். வழமைக்கு மாறாக ஜானகியும் அன்று நேரத்தோட வகுப்புக்கு வந்திருந்தாள்.

நெற்றி, முகம், கழுத்தென்று வியர்வை முத்துக்கள்…

இவள் மூக்குத்தியைத் தேடிக் களைத்துப் போய்விட்டாள் என்று எனது மனம் சொல்லிற்று.

“ஜானி! நேற்று ‘புட்போல்’ அடிக்கும் போது உன்ட மூக்குத்தி கிடைச்சிட்டுது”

“எங்கே?”

“இதென்ட மூக்குத்தியில்ல… தங்கமோ? பொன்னோ? நான் மாட்டேன்” என்றாள்.

கடைசில சம்மதிக்க வெச்சிட்டேன்.

மூக்குத்தியை வாங்கிப் போட்டுப் பார்த்தாள். முடியல்ல.

வகுப்பில என்னையும் ஜானகியையும் தவிர வேறு எவருமில்ல.

அவள் கையிலிருந்த மூக்குத்தியைப் பிடுங்கி நான் போடத் தொடங்கினேன்.

என் நாசி அவள் நெற்றிப் பொட்டில்… குங்குமப் பொட்டைக் கலைத்து…

நெஞ்சு படபடக்க அடி வயிற்றில் புகைந்து…

நூறு மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப நிலையில் நான் …

ஜானகியின் நெற்றியிலும் முகத்திலும் கழுத்திலுமாக மாறி மாறி முத்தமிட்டேன்.

முதல் முத்தம்… முதல் காதல் மறக்க முடியலய்யா.

சண்முகநாதன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் ஜானி பள்ளிக்கு வரல்ல… ஜானகியை நான் ஜானி என்றுதான் அழைப்பேன்.

பத்து நாளாப் போச்சிது… பத்து வருஷம் போல…

ஜானகிட வீடும் தெரியாது. ரயில் ரோட்டைக் கடந்து, கோயில் கடந்து… சவக்காலை கடந்து போகணுமாம்.

பியவதியும் இந்திராணியும் போய்ப் பார்த்து வந்தார்கள். ஒன்றும் சொல்லவில்லை.

பத்து நாளைக்குப் பிறகுதான் ஜானி வந்தாள். என்னை ஒரு யுகம் கடந்து போனது.

முகமெல்லாம் கஸ்தூரி மஞ்சளை அப்பியிருந்தாள். பட்டுப்பாவாடை, மஞ்சள் ரவிக்கை. வழமைக்கு மாறாக நீல நிறத்தில் தாவணி… காற்றில் பறந்து பறந்து சேதி ஒன்றை சொல்லத் தவித்தது போல்…

ஒழுங்கைக்குள் முயல் குட்டிகள் இறங்கியதும் - நான் பறந்து போனேன்.

ஒரு தேவதை போல் அவள் குருத்து மணல் ஒழுங்கையில் மிதந்து வந்தாள்.

“ஜானி!”

அவள் தலை குனிந்திற்று. உடல் வெளுத்துச் சோர்ந்து போய்…

“ஐயா! வழமைக்கு மாறாக அவள் அன்று மணத்தாள். அப்படி மணத்தாள். எப்படி என்று எனக்குச் சொல்லத் தெரியல்ல. அய்ம்பத்தைந்து வயதைக் கடந்து நிற்கிறேன். இன்றைக்கும் அந்த மணம் என் நாசிது துவாரங்களில் அலை பாய்கிறது.

அதற்கடுத்த இரண்டு மூன்று நாளையில எனக்குப் பெரியம்மை உடல் பூராவும் அள்ளி எறிஞ்சிட்டிது.

சந்தனமும் பன்னீரும் குழைத்துப் பூசி வேப்பங்குழையில படுக்கப் போட்டு வெள்ளைத் துணியால உம்மா போர்த்தி விடுவாள்.

கருக்கலில் வாப்பா சந்தனத்தில் வேப்பங்குழையைத் துவட்டி அம்மனை அழகுக் குழந்தையாக்கி தாலாட்டுப் பாடுவார்.

“அம்மா பாலகன் மீது இரக்கம் காட்டி தணி தாயே…!”

பாணிச் சேவலை தலையைச் சுற்றி வாசலில் வாப்பா வீசிடுவார்.

“என்ன சோனகப் புலியும் தமிழ்ப் புலியும் கதைச்சிக் கொட்டுது”

ஐயாவின் பக்கம் ஒண்ணரைக் கண்ணைச் சிமிட்டியவாறு ஹோட்டல் இஸ்மாயில் உரையாடலைக் குலைத்திட எத்தனித்தான்.

“பத்து நாளைக்குப் பிறகுதான் அம்மனுக்கு தீர்த்தம்”.

மஞ்சள் சோறாக்கி, முட்டை பொரித்து, துள்ளுமா இடித்து, நெல்லுப் பொரித்து - மச்சம் எடுக்க மாட்டார்கள்.

என் வயசுச் சிறுவர் சிறுமிகளையெல்லாம் வீட்டிற்கழைப்பார்கள். கிணற்றடிக்கு என்னை அழைத்து தலையில் தண்ணியை ஊற்றி…

மஞ்சள் வேப்பந்துளிர், சந்தனக் குழையல் என்று மேலெல்லாம் பூசி, வெள்ளைத் துணியை உடுத்தி, இன்னொரு வெள்ளைத் துணியால் போர்த்தி, என்னைச் சுற்றி சிறுவர் சிறுமியர்களுக்கு வாழையிலையில் படைப்பார்கள்.

சிறுவர்களெல்லாம் நேர்ச்சையை வாங்கிக் கொண்டு “போறம்…போறம்…போறம்” என்று திரும்பிப் பார்க்காமல் போவார்கள்.

“மஃரூப் செக் போடணும், பேங்கிற்குப் போயிட்டு வா”

“ஹாஜியார்! பசுவுக்கு நஞ்சுக் கொடி விழல்ல, கன்றுக்கு பாலுமில்ல, உங்கட மகன்ட கடையில மருந்து வாங்கிக் கொடுத்தேன், சரிவரல்ல”

“போங்க, கைபோட்டுத்தான் எடுக்கணும், பதினைந்து நிமிசத்தில வாறன்”

“கட்டாயம் வரணும் ஹாஜியார்!”

“ஐயா அப்பமும் பிளேன்டியும்”

“கதையை முடிச்சிட்டுக் குடிப்பம்”

“அம்மனுக்குப் பார்த்து இரண்டு கிழமைக்குப் பிறகுதான் பள்ளிக்குப் போனேன்”

புத்தகங்களை மேசையில வீசிப் போட்டு ஜானி வரும் ஒழுங்கைக்குள் ஓடினேன்.

முதலாம் மணி அடித்தும் ஜானகி வரல்ல. உடலும் உளமும் சோர்ந்து அடிவயிறு பற்றி எரிந்தது.

ஜானகி வரும் வழியில் பியவதி வந்து கொண்டிருந்தாள்.

“ஹனிபா! நம்ம ஜானகி ஏறாவூர் ஸ்கூலுக்கு மாறிப் போயிட்டாள்”.

மெசின்கார லெப்பை உப்புப் பிரம்பால் ‘சுளீ’ரென்று முதுகில் விளாசியதைப் போல.

மனசு…

பல்லியின் வால் அறுந்த துண்டின் அவலம்.

ஐயா! அடுத்த நாள் புத்தகங்களையெல்லாம் தம்பிப் பிள்ளை ஓவிசியர் தோட்டத்து முந்திரிகைக் காட்டிற்குள்ளே மறைச்சிப் போட்டு – ஏறாவூருக்குப் பஸ் ஏறிட்டன்.

பஸ்ஸுக்கு பத்து சதம். உமாட உண்டியலுக்குள்ள ஈக்கிலப் போட்டு காசி எடுப்பேன். எனக்கு ஏறாவூரில காசீம் ஸ்டோருக்கு முன்னாலுள்ள ஸ்கூலத்தான் தெரியும்.

பென்னம் பெரிய மர நிழலில நிப்பன். பள்ளி கலையும். ஜானகி மட்டுமில்ல.

அந்த கிழமை அப்படியே தொலைந்தது.

அந்த வயசில அந்த ஏமாற்றம், இந்த வயசிலயும் என்னைத் துரத்துகிறது.

எல்லா இடத்திலயும் எல்லாரிட்டயும் நான் ஏமாந்து போகிறேன். இத்தனைக்கும் வெளில நான் ஓர் எச்சரிக்கையான மனிதன் என்று பெயர். தப்புக்கணக்கு போலும்.

அதற்குப் பிறகு ஜானகியைக் காணவேயில்லை.

இருபத்தைந்து வருடத்திற்குப் பிறகு 1980 கறுவாக்கேணி மீராவோடை ரோட்டிலிருக்கின்ற என்ட தோட்டத்து தென்னம்பிள்ளைக்கு தண்ணீர் வார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த வீதியால் ஒரு பெண் நடந்து…

அதே நட, பூமிக்கு நோகாத நட, இரண்டு வெள்ளை முயல் குட்டிகள்…

‘கேற்’றிற்கு ஓடிப் போனேன். எனது ஓட்டமும் நடையுமான அவசரத்தை அறிந்து கொண்டதைப் போல…

கொஞ்சம் பெருத்து… கொஞ்சம் உயர்ந்து, முகமும் பளீர் என்று…

நாசி மடலில் அதே மூக்குத்தி, மௌத்தாப் போன ஹாஜியானி பெரியம்மாட… சிவப்புக்கல்லு மூக்குத்தி… என்னைப் பார்த்துக் கலங்குவதைப் போல…

“ஜானகி!” என்றேன்.

“நீங்க?”

“நல்லாப் பார் பார்ப்பம்”

“ஹனிபாண்ண”

“இஞ்செ எங்கே?”

“நான் மீராவோடையில், தமிழ்ப் பகுதிக்குள், காளி கோயில் பக்கத்தில் வீடு”

“எனக்கிது தெரியாதே”

நாலைந்து தடவைகள் தோட்டத்து வளவில் அப்படிச் சந்தித்துக் கதைத்திருப்பேன்.

ஒரு சனிக்கிழமை காலை இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது பால்கார சின்னவன் என்னைத் தேடி வந்தான்.

“அண்ணன் ஜானகியைத் தெரியுமோ?”

“நானும் ஜானகியும் ஒன்றாய் படித்தவர்கள்”

“ஜானகி என்ட பெரியப்பாட மகனைத்தான் கட்டியிருக்கிறா”

“அப்படியா?”

ஜானகி விடை பெற்றுச் சென்று விட்டாள்.

சின்னவன் விட்ட பாடில்லை. என்னைப் பற்றிய கதையை அவனுக்குத் தொட்டுக் காட்டினேன்.

அதன் பிறகு பதினைந்து வருடங்களாக ஜானகியை நான் பார்க்கவேயில்லை.

இருபத்தைந்து வருட உத்தியோக வாழ்வில் இருபது இடங்களில் அலைக்கழிந்து மூன்றாவது ஈழப் போர் தொடங்கிய போதுதான் ஊர் வந்து சேர்ந்தேன்.

ஜானகி வாழ்ந்த ஊரும் உருக்குலைந்து போனது. ஜானகி பற்றிய நினைவுகளும் வாலைச் சுருட்டிக் கொண்டன.

நேற்று திடீரென சின்னவன் வந்தான். என்னையே பார்த்துப் பார்த்து கதைக்காமல் நின்றான்.

“சின்னவன் எப்படிச் சுகம்?”

“நல்லம் அண்ணே”

“மகள் கனடாவிலதானே”

“ஓம் அண்ணே”

“என்ன வந்தாய்?”

அவன் மௌனம் புதிராய்க் கிடந்தது.

“சொல்லு சின்னவன்”

“அது வந்து… உங்கட ஜானகி போன கிழமை செத்துப் போனாள் அண்ணே. இரண்டு நாள் காய்ச்சல்.. இரவெல்லாம் கதைச்சிப் பேசியிருந்தவள், காலையில் கண் மூடிக் கிடந்தாளாம்.

நானும் இளையவளைக் கனடாவுக்கு அனுப்ப கொழும்புக்குப் போய் நேற்றுத்தான் வந்தன். எனக்கும் அவளைக் கடைசியாகப் பார்க்கக் கிடைக்கல்லை. காய்ச்சல் வந்த மறுநாள் ஜானகி இந்தப் பொட்டலத்தை உங்ககிட்ட என்னிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னதாக அவள்ற இளைய மகள் பவானி தந்தாள் அண்ண”

வெள்ளைத் துணியில் முடிந்து…

நூறு மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் ஆரம்பக் கோட்டில் நான். அதே பதறல்.

எனக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. பொட்டலத்தை பரக்க பரக்க அவிழ்த்து…

சிவப்புக்கல் மூக்குத்தி.

நாற்பது வருடங்களுக்கு முதல் நான் ஜானிக்கு மாட்டிவிட்ட சிவப்புக்கல் மூக்குத்தி…

என்னைப் பார்த்துக் கண் கலங்கிற்று.

***

நன்றி : ஹனீபாக்கா  slmhanifa27@gmail.com

Sunday, August 24, 2014

நானும் தேனும் - எஸ்.எல்.எம். ஹனிபா

'When a male honey bee climaxes during sex, his testicles explode and he dies' என்று Unbelievable facts -ல் பார்த்த கணத்தில் காக்காவிடமிருந்த 'தேன்' சுரந்து விட்டது! - ஆபிதீன்
***
எஸ்.எல்.எம். ஹனிபா எழுதுகிறார்...

இது ஒரு சுத்தமான தேனின் கதை. நல்ல தேன், தேனீ வளர்ப்பு பற்றி இங்கு எழுதப் போகிறேன்.

தேனீ வளர்ப்பு இன்று நேற்று தோன்றியதல்ல, ஆதி மனிதன் தீயைத் தொடர்ந்து தேனையும் கண்டு பிடித்தான். தனது உணவுகளை (மாமிசம்) தேனைச் சிறந்த ஔடதமாகப் பயன்படுத்தினான்.

ஆரம்பத்தில் தேன் கூடு இருக்குமிடத்தை நாடிச் சென்று தேனைப் பெற்றுக் கொண்ட மனிதன் இன்று நினைத்த இடத்தில் தேன் கூடுகளை அமைத்து இருந்த இடத்திலேயே தேனைப் பெற்றுக் கொள்ள தகவமைத்துக் கொண்டான்.

முன்னோர் தேனீக்களையும் அழித்து தேன் கூட்டையும் அழித்தே தேனை எடுத்தார்கள். இன்று அழகான அடுக்கு மாடிக் கட்டடத்தில் (தேனீ வளர்ப்புப் பெட்டிகள்) வளர்க்கக் கற்றுக் கொண்டார்கள். தேனீக்களுக்குப் பாதகமில்லாமலும் தேன் கூடுகளை அழிக்காமலும் நம்மால் தேனை உற்பத்தி செய்து பெற முடியும்.

தேனீ பற்றிய எனது அனுபவங்களை எழுத, 200 பக்கங்களாவது தேவைப்படும். சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

1970களில் தம்பன்கடவை கால்நடை அபிவிருத்தித் திட்டத்தில் ஒரு செயற்கை முறைச் சினைப்படுத்துனராகக் கடமையாற்றிய பொழுதுதான், மரப்பொந்துகளில் தேனெடுக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டேன். எனது குருநாதர் ஏறாவூரைச் சேர்ந்தவர். மாவிலாறின் கரைகளில் புகையிலைத் தோட்டம் செய்பவர்களில் ஒருவர். பெயரென்னவோ அச்சி முகம்மது என்றாலும், அவரை அச்சி மாமி என்றே எல்லோரும் அழைப்பார்கள். இன்று திருநங்கையர் என்று அழைப்போமே அவர்களில் ஒருவர்.

எங்களூரிலும் அவரைப் போன்றொருவர் அகமது காக்கா என்ற பெயரில் உலா வந்தார். நடை, உடை, பாவனை அனைத்திலும் பெண்களின் சாயல் குடிகொண்டிருக்கும்.

(சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டீவியில் திருநங்கையரின் சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெற்றது. பார்த்தவர்கள் பாக்கியவான்கள்)

காலையில் எனது கடமை முடிந்ததும், பொங்கி நுரைத்தெழும்பும் மகாவெலி ஆற்றைக் கடந்து அச்சி மாமியின் வாடிக்குச் செல்வேன். அவர் அங்கு தயிரும், சோறும், தேனும் வைத்திருப்பார். சாப்பிட்டு முடிந்ததும் காலை 10 மணியளவில் நானும் மாமியும் காட்டில் இறங்குவோம். காடென்றால், நம்மில் பலருக்கும் மரங்கள்தான் நினைவுக்கு வரும். நானும் மாமியும் புழங்கிய காடு அப்படியில்லை. ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எத்தனை வகையான ஜீவராசிகள் வாழும் பிரபஞ்சம்.

மாவிலாற்றின் கரைகளில் பெரும் மரக்கூட்டங்கள். (நாசமாய்ப் போன கடைசி ஈழப்போர் ஆரம்பமான பிரதேசம். அப்போதெல்லாம் அங்கு வயலுமில்லை, மனிதர்களுமில்லை. திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் செழியன், தண்ணீரை விடாது வேளாண்மையைச் சாகடித்து உலகிற்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தெரியப்படுத்துவதாக பிபிசிக்கு நேர்காணல் வழங்கினார். அந்த இடம்)

மாமி, பூக்களிலிருந்து மகரந்த மணிகளைக் காவிச் செல்லும் தேனீக்களைப் பின்தொடர்ந்து செல்வார். திடீரென்று நடை தவிக்க, அவரின் காது மடல்கள் விடைத்து நிற்க, எதிரே நிற்கும் பிரம்மாண்டமான மரத்தைக் கூர்ந்து பார்ப்பார். குறுநகையொன்று அவரின் இதழ்க் கடையிலிருந்து குறுக்கு வெட்டாகும். தன்னுடைய வலது பக்கக் காதை மரத்தில் இணைத்து ஒலியைக் கேட்டறிவார். மாமி தலையை ஆட்டி மகிழ்ச்சியோடு மரத்திலேறுவார். எல்லாவற்றையும் நோட்டம் பார்த்து மரத்திலிருந்து இறங்கியவர், மரத்தில் இரண்டடி உயரத்தில் கோடரியால்  குழி பறிப்பார். இலட்சக்கணக்கான தேன் பூச்சிகளின் கிடுகிடுவென்று பேரிரைச்சல். மாமி ஏதோ மந்திரம் சொல்வார்.

பின்னர், கொஞ்சம் காய்ந்த சருகுகளைக் கொண்டு காற்று வலம் பார்த்து, அடி மரத்தில் புகை மூட்டி, அந்தப் புகையை மரப்பொந்துக்குள் அனுப்பிய மறுகணம், பல்லாயிரம் பூச்சிகளும் மேலெழுந்து வட்டமடிக்கும். மரப்பொந்தைப் பார்த்தால், தேன் வதைகள் அடுக்கடுக்காக அறைகளில் குடியிருக்கும். அந்தக் காட்சி, தேனீக்களின் அற்புதமான மாளிகை, அதன் அழகு, அதைச் சொல்ல வார்த்தையின்றி பின்னடைகிறேன்.

புசுபுசுவென்று தேன் வதைகளைக் கழற்றிக் கழற்றி மாமி வாளியில் குவிப்பார். நான் புகையடித்துக் கொண்டிருப்பேன். புழு நிலையிலிருக்கும் தேனீக்களின் குஞ்சுகளுக்கோ அல்லது இளம் ராணிக்கோ எந்தத் தீங்கும் நோவுமில்லாமல் இந்தக் கருமத்தை அவர் செய்வார். அவர் செயலில் அறம் இருக்கும்.

கொட்டும் வேலைக்காரத் தேனீயிலிருந்து தப்பிப்பதும், இராணித் தேனீயை அச்சொட்டாக அறிந்து பிடிப்பதும், பிற பூச்சிகள் பல்லிகள் எலிகள் கடும் குளிர், வெப்பம், காற்று, பெரும் மழை என்ற அனர்த்தங்களிலிருந்து தேனீக்களையும் பெட்டிகளையும் பாதுகாப்பதும் பெரும் சிரமம் என உணர்ந்த மனிதன், நாளடைவில் சீனி மூலம் தேன் உற்பத்தி செய்யும் நுகர்வுக் கலாசாரத்தின் நுட்பங்களையும் கைக்கொண்டான்.

தேன் உற்பத்தியில் உலகிலேயே அமெரிக்காவும் கனடாவும்தான் அன்றும் இன்றும் கொடி கட்டிப் பறக்கிறது. (அமெரிக்கர்கள் எதைத்தான் விட்டு வைத்தார்கள்) அப்படியிருந்தும் தேன் காய்ச்சும் சிறு கைத்தொழிலில் நமது நாடு பல வருடங்களாக முன்னணியில் திகழ்கிறது. அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தேன் காய்ச்சும் தொழிலில் பேரும் புகழும் பெற்றது. காத்தான்குடி தேன் காய்ச்சுபவர்கள், தமக்கான விற்பனை முகவர்களை நியமித்திருக்கிறார்கள். இந்த முகவர்கள் தங்கள் கடைக்கு முன்னால், ஒரேயொரு போத்தலை மட்டும் ஸ்டூலில் வைப்பார்கள். வாங்க வருபவர்கள் அபூர்வமாக ஒரேயொரு போத்தல்? முண்டியடித்துக் கொண்டு பாய்ந்து வாங்குவார்கள். வாடிக்கையாளர் கடையை விட்டுச் சென்ற அடுத்த கணம் மறு போத்தல் வந்து ஸ்டூலில் அமர்ந்து விடும்.

நல்ல தேனை எப்படி அறிந்து கொள்வது?

இது ரொம்பச் சிக்கலான விடயம் என்றாலும், அவசரமில்லாமல் ஆறுதலாக நல்ல தேனை அறிந்து கொள்ளலாம். தேன் பல நிறங்களில் தென்படும். மீனாட்சியம் பூ, பாலைப்பூ, இலுப்பைப்பூ காலங்களில் உற்பத்தியாகும் தேன், நல்ல தேநீரின் நிறத்திலிருக்கும். தாமரைப்பூ, வீரப்பூ, மருதம்பூ காலங்களில் உற்பத்தியாகும் தேன், வெளிறிய மஞ்சள் நிறத்திலிருக்கும். அன்று வெட்டிய தேனை போத்தலில் ஊற்றும் போது, போத்தலின் கழுத்துப் பாகத்தில் நுரை நிரம்பி, மூடியையும் தள்ளிக் கொண்டு வெளியேறும். சில போத்தல்கள் வெடித்தும் சிதறும். தேனின் அடிப்பாகத்திலிருந்து மேல் நோக்கி படிந்து செல்லும். அதாவது, அடிப்பாகத்தில் வெளிறிய நிறத்திலும், அடியிலிருந்து கழுத்து நோக்கிச் செல்லும் பொழுது நிறம் அதிகரித்துக் கொண்டு செல்லும். இன்னும் போத்தலின் அடியில் தேன் பூச்சிகளின் உடைந்த இறகுகள், கால் கைகள், மரப்பட்டைகளின் சிறு துணிக்கைகள், சிராய்ப்புகள் என்று அடியில் ஒரு சிறு படலம் உறைந்து கிடக்கும். எல்லா போத்தல்களிலும் இதைக் காண முடியாது. ஒரு பத்து போத்தல் தேன் இருக்குமிடத்தில் ஓரிரு போத்தல்களில் இந்த அடையாளங்களைக் கண்டால் அது சுத்தமான தேன் என்பதற்கான அறிகுறிகளாகும்.

தேனை உள்ளங்கையில் ஊற்றி, மெதுவாக உறிஞ்சும் போது, சிறிது புரையேறுவதுடன், தொண்டையில் கசப்புடன் கூடிய கமறலும் ஏற்படும். சீனிப் பாணிக்கு ஒருபோதும் இத்தகைய விளைவுகள் ஏற்படாது.

தேனை எவ்வாறு வாங்குவது?

தேன் விற்பவரிடம் செல்லுங்கள். ஒரு போத்தல் தேன் என்ன விலை என்று கேளுங்கள். இன்றைய தேன் விலை 800.00 ஆகும். அவரும் 800 ரூபாவே சொல்லுவார். நீங்கள் மிக ஆறுதலாக பத்து போத்தல் தேன் எடுப்பேன். 500 ரூபா போட முடியாதா என்று கேளுங்கள். தேன் வியாபாரி உங்களை மேலும் கீழும் பார்ப்பார். உங்கள் முகத்தில் ஏதாவது ஒரு அடையாளத்தை அவர் கண்டு பிடித்துக் கொள்வார். உடனே அவர், “ஹாஜியார்! முதலுக்கும் நஷ்டம். என்ன செய்வது, நீங்கள் கேட்கிறீர்கள், தருகிறேன்” என்று தேனைத் தர ஆயத்தமாவார். தயவு செய்து அந்தத் தேனை வாங்காமல் ஏதாவது ஒரு சாட்டுச் சொல்லி அந்த இடத்திலிருந்து அகன்று விடுங்கள்.

இந்த நாட்களில் தேன் பரவலாக புழங்குகிறது. 700 ரூபாவுக்குக் குறைய தேன் கிடைக்குமாக இருந்தால், நிச்சயமாக அந்தத் தேன் கலப்படம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில், மஞ்சள் தூளிலிருந்து மார்க்கம் வரையிலும் கலப்படம் ரொம்ப ஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தேனும் இதிலிருந்து நிச்சயமாகத் தப்ப முடியாது. தேன் வாங்குபவர்கள் ஜாக்கிரதையாக இருங்கள்.

தேனால் என்ன பிரயோசனம்?

என்னுடைய அனுபவத்தில் இரவில் தூக்கம் வராத சில நாட்களில் இரண்டு மேசைக்கரண்டி தேனும் இரண்டு மேசைக்கரண்டி வெதுவெதுப்பான நீரும் கலந்து குடித்து விட்டுத் தூங்கப் போனால், அழகான தூக்கம் நம்மை ஆட்கொண்டு விடும். எமது வேத நூலாகிய திருக்குர்ஆனில் தேனைப் பற்றி, “அதிலே எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உண்டு” எனக் கூறப்பட்டுள்ளது. கலப்படம் இல்லாத தேனை உற்பத்தி செய்யவும் விற்கவும் வாங்கவும் இறைவன் நமக்கு அருள் புரிவானாக!
***
நன்றி : ஹனிபாக்கா (slmhanifa27@gmail.com)

Monday, January 27, 2014

ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும் ( 4 & 5 ) - எஸ்.எல்.எம். ஹனீபா

01 to 03  : http://abedheen.blogspot.ae/2014/01/blog-post_12.html
***

04
 
மச்சிக்குப் பேரு செய்னம்பு. மாமியப் போல சரியான வெள்ளெ. ராத்தாவும் வெள்ளெதான். எங்கட குடும்பத்தில நான் மட்டுந்தான் கறுப்பு. வாப்பாட வாப்பா போல எண்டு மரியெம் மாமி செல்லுவா. மச்சிக்கு நல்லா நீஞ்சத் தெரியும். உசன் மச்சான்தான் அவள நீச்சல் பழக்கின. ராத்தாக்கு மச்சிதான் நீச்சலக் காட்டிக் குடுத்தா.
ரெண்டு மூணு தரம் தண்ணிக்குள்ள தியாமுட்டி தியாமுட்டி… பார்த்திருக்கக்கொள கைய நீட்டி நீட்டி ஓடைய பின்னுக்கிழுத்து – பின்னங்களால் ரெண்டும் தண்ணிய உதைச்சி உதைச்சி….
ஒரு நாளைய கூத்து – ராத்தாக்கும் நீஞ்சத் தெரியும்… இன்னும் ரெண்டு வருசத்திலெ நானும் நீஞ்சப் பழகிருவென்.
மச்சியும் ராத்தாவும் போட்டி போட்டு நீச்சலடிப்பாங்கெ.
மாமிர ஊட்டுக் கரையிலெ சின்ன ஓடெ. ஓடைக்கு மேலால ரெண்டு தென்ன மரங்கள் கரையில் கையைக் குத்தி தண்ணிக்கு மேலால சாஞ்சி படுக்குது. இருந்தாப்போல வானத்தப் பார்த்து தலெ விரிச்சு ஆடும்.
ராத்தாவும் மச்சியும் மரத்திலெயிருந்து குதிரெ ஓடுவாங்கெ. ஓடையத் தொட்டுத் தொட்டு தென்ன மரங்கள் ஊஞ்சலாடும்.
மரவட்டுக்குள்ள மைனாக் குஞ்சுகள். பயந்து பயந்து – கேவிக்கேவி சிறகடிச்சி மாயும். பாவம்.
மச்சிக்கும் ராத்தாக்கும் பயமேயில்லெ. ஆளுக்கொரு மரத்தில போட்டிப் போட்டு ஏறுவாங்கெ.
தென்னெ மரத்திர உச்சிக்குப் போய்  வாளெ மீனெப் போலெ தலெக்குத்தின குதிப்பாங்கெ. குதிச்சா குதிச்சதுதான்.
அப்பிடியே கொஞ்சத்தூரம் சுழியோடிப் போய், ஓடெத் தொங்கலில உடும்பப் போலெ தலெயத் தூக்கி சடாரெனத் தாண்டு போவாள் மச்சி. ராத்தாக்கு சுழியோடத் தெரியாது. நீஞ்ச மட்டுந்தான் தெரியும்.
நான் இடுப்பு மட்டுத் தண்ணிலெ – சிரட்டையாலெ தண்ணிய அள்ளி அள்ளி தலெயில ஊத்திக்கிட்டு பயத்திலெ நிப்பென். அந்த நேரம் பார்த்து எனக்குத் தெரியாமெ விலாங்கு மீனப் போலெ வந்து – என்ட கவட்டுக்குள்ளால பூந்து சுழியோடிப் பெய்த்திருவாள் மச்சி. நான் பயத்திலெ தண்ணிக்குள்ள தாண்டு தாண்டு தியாமுட்டுவென்.
கண்ணாலெயும் மூக்காலெயும் தண்ணி புரெயேரி சிரசிலடிக்கும். உசிரு போறாப்போலெ இருக்கும். மச்சியோடெ செரியான கோவம் வரும்.
ஆத்துக்கு வீசப்போன மாமாவும் உசன்மச்சானும் கரையேறி வந்தா – ராத்தாவும் மறெஞ்சி மறெஞ்சி கரையேறி புன்னெ மரத்திலெ மறைஞ்சிருவா. ராத்தாக்கு மச்சானெக் கண்டா செரியான வெக்கம்.
மச்சி மட்டும் பொழுது உச்சிக்கு வந்தும் கரையேறெ மாட்டாள். தண்ணிலெயே மிதப்பாள்.
குட்டிக்குட்டி அலெயெல்லாம் மச்சிர தொடெய தொட்டுத் தொட்டு விளையாடும்.
கழுத்து மணிக் கோர்வையிலெ, கால் கொலுசில பொழுதிட பார்வெ பட்டு பச்செ, சிவப்பு, நீலமெண்டு சொலிக்கும்.
அப்படியே அவள் தண்ணிலெ மினுங்குவாள். இருந்தாப்லெ பெரிய அலெயொண்டு மச்சிட துண்டுப் புடெவெய உருவியெடுத்திட்டு ஓடெயிலெ ஓடும்.
மச்சியும் சுழியோடிப் போய் துண்டுப் புடெவெயெ எட்டிப் புடிச்சி … எழுந்து நிற்கெ … நான் அவள்றத்தெ…
மச்சிட தொடெயும் காலும் எப்பிடி வெள்ளெ…. முத்திப் பழுத்தெ பிலாச்சுழெ போலெ.
மச்சி துண்டுப் புடெவெயெ உரிஞ்சி உரிஞ்சி உடுப்பாள். நான் அவளக் கடெக்கண்ணாலெ பாப்பென். அவளும் என்னப் பாத்திடுவாள்.
“குட்டியான் செரியான ஹராங்குட்டிடி”
ராத்தா கைகொட்டிச் சிரிப்பாள்.
பொழுது உச்சாலெ கெளியும் மட்டும் ஓடெயும் நாங்களும் பட்டதுபாடுதான். குளிச்சி முடிச்செ கையோடெ என்னெயும் ராத்தாவெயும் மச்சிட தோணியிலெ ஏத்திக்கிட்டு பெரியெ ஓடெக்குக் கொண்டு போவாள். மச்சிர கையிலெ சவள். நான் முன்னணியித்திலெ ராத்தா நடுத்தோணியிலெ.
கொண்டெக் காத்தில தோணி தொடுக்காமலே பெரியோடெப் பக்கம் போகும். எங்களோடெ பந்துக்கா, பூக்கள், புச்சித்தேங்கா, அடிமட்டெ எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு ஊர்வலமா வரும். அப்பிடியே உப்பாத்துக்குப் போய் முகத்துவாரத்தாலெ கடலுக்கெ போயிடுமாம்.
பெரியோடெ மேட்டுலதான் வண்ணாரக் குடியெல்லாம் இரிக்காங்கெ. எங்களுக்கு உடுப்பு வெளிக்கிற பெரிய வண்ணாத்திர ஊடும் அங்கெதான். ஓடெக்கரெய ஒட்டினாப்லெ நீள நீளமான புடவெக் கொடிகள். வருசக் கூலிக்கு உடுப்பு வெளிக்கிற, அஞ்சு மரெக்கா நெல்லுக்கு ஒரு குடும்பத்திக்கு ஒரு வரிசம் பூரா வெளிக்கெணும்.
மோகினிப் பட்டிச் சோமன், பன்றுட்டிச் சேலெ, பச்செ வடம், சுங்காவடிச்சேலெ எண்டு வண்ணார வெட்டெயில நெறெஞ்சி கிடக்கும். மணச்சாமான் போட்டு வெளுத்த உடுப்புகள் காத்திலெ மணக்கும்.
நானும் மச்சியும் ராத்தாவும் புடவெக் கொடில புடவைகளெ மோந்து மோந்து பாப்பெம்.
காத்தும் மணந்தான், ஓடெயும் மணந்தான்.
எங்கடெ ஊரு வண்ணார ஆக்களெல்லாம் நல்லெ மனிசர். பத்தெட்டுக் குடிதான். நல்லெ ஒத்துமெ. அவங்கட கதெயச் சொல்லப் போனா அதுக்கொரு யுகம் வேணும்.
வண்ணாரெ ஆக்களெண்டாலும் மானம் மரியாதெயோடெ வாழ்ந்த மனிசர். எங்கடெ ஆக்கள் அவங்கள்ளெ செரியான அன்பு. அவங்களுக்கும் எங்கட ஆக்கள்ளெ செரியான மதிப்பும் மரியாதெயும்.
எங்கடெ பெரிய வண்ணாதி எங்கடெ உம்மாவ ராத்தாண்டு கூப்பிடுவா. இப்பெல்லாம் அந்தக் கனிவோடெ கூப்பிர்ர மனிசரக் காணேலாது.
“தங்கச்சியோ… உம்மா சோறு திங்க வரட்டாம்”
உசன் மச்சான்ட சத்தம் ஓடெக்கரெயெல்லாம் காத்திலெ அள்ளிட்டு… காதில புகுந்தது.
புறவத்திலெரிந்த மச்சி கொல்லாப் பக்கம் சவளப் போட்டு மெதுவாகத் தோணியெத் திருப்பி விட்டாள்.
“தங்கச்சியோ… உம்மா சோறு திங்க வரட்டாம்”

**

05
 
அழகான ஆட்டுக்கால. வாப்பாவும் நானும் கட்டிப்போட்டம். ஆமையர் மூத்தப்பாட்ட போய் ஆடும் வாங்கி வந்திட்டம்.
“வெள்ளெச்சிம்மா” ராத்தாதான் பேர் செல்லித் தந்தவ.
எந்தக் காட்டுலெ நிண்டாலும், வெள்ளெச்சிண்டு ஒரு சத்தம் வெச்சாப் போதும். காலுக்குள்ளெ வந்து வெள்ளெச்சி நிக்கும்.
ஆலங்கொத்து, தவிட்டங்கொத்து, இத்திக் கொத்தெண்டு ராப்பகலா சாப்பாடுதான். வெள்ளெச்சிர வவுறும் மத்ரசாவிலெ ஓதித்தாறெ லெவ்வெட வவுறும் ஒண்டுதான். முட்டி வவுறு.
குட்டித்தாச்சி வெள்ளெச்சி.
எனக்கி லெவ்வெண்டாச் செரியான பயம். ஓதித் தரக்கொள்ள ரெண்டு அடி போடாட்டி அவருக்குப் பத்தியமில்லெ. ஊரிலெ கஞ்சா புடிக்க வாற பொலிசெண்டாலும் பயந்தான். பள்ளி வளவுக்குள்ள மையத்திப் புட்டில நிக்கிற பேய்க்கும் பயந்தான். பேயெ நான் இன்னும் கண்ணால காணல்லெ. மத்தப்படி வேறொண்டுக்கும் பயமில்லெ.
ஆமையரப்பாவும் பேய்க்கு ஊதிப் பாப்பாரு. செய்த்தானுக்கும் ஊதிப் பாப்பாரு….
ஆமையரப்பாவெ நினைக்க நினைக்க…. அவர்ர புட்டிக்கெ ஆடு வாங்கப் போன நாளெ எனக்கி மறக்க ஏலாது. இந்த வயசுக்குள்ள அப்படியொரு காச்சியெ நான் காணல்லெ. ஆடு வாங்கிவர ஆமையரப்பாட்ட போன அண்டுத்தான் எங்கட ஊரெச் சுத்தி கடலுக்குப் போற பெரியாத்தெ முழுசாத் தெரியும்.
வாப்பா கரைல நிண்டு “மாமா”ண்டு சத்தம் வெச்சாரு… வாப்பாட சத்தம் ஆத்தங்கரெ, கண்ணாக்காடுண்டு இரெஞ்சிட்டுப் போய் – மா… மா.. மா… மா ண்டு எண்டெ காதெ சுத்திச் சுத்திக் கேட்டது.
நானும் திருப்பி, மா.. மா.. ண்டென். எனக்கிப் புறத்தாலெ ஆறும் கண்ணாக்காடும் மா… மா… ண்டது. எனக்குச் செரியான கொண்டாட்டாந்தான். அதெப்படிண்டு எனக்குச் செல்லத் தெரியெல்லெ.
எங்கடெ சத்தம் கேட்டவுடனெ அக்கரெயிலரிந்து ஆமையரப்பா தோணியெடுத்திட்டு வந்தாரு.
அப்பா புறவத்திலரிந்து தொடுக்க, நானும் வாப்பாவும் முன்னணியத்தில… வாப்பாட மடிக்குள நானிருந்தென்.
நாங்கெ போன நேரம் பொழுது அசரால சாஞ்சிட்டு.
தோணி கரெ தட்டிட்டு. புட்டிக்குள கால் வெச்சாந் தெரியும், கிடுகிடெண்டு ஒரே இரெச்சல்….
வக்கா, சாம்பல் கொக்கு, தாக்கத்தியான், மொட்டத் தலையான், அடெசல் மான் ண்டு ஒண்டெ ஒண்டு திரத்தி திரத்தி ஒண்டெ ஒண்டு கொத்திக் கொத்தி சண்டெ போட்டு, அது பெரிய களறி.
ஆத்துக்கு நடுவுல பென்னம்பெரிய புட்டி. புட்டி நிறைய கண்ணாக்காடு. கண்ணாக்காட்டுக்கு நடுவுலான் அப்பாட ஊடும் ஆட்டுக்காலெயும். கொஞ்சந் தள்ளி கொட்டுக் கிணறும்.
அந்தப் பக்கம் வீசப் போற எல்லாத் தோணிகளும் அப்பாட புட்டியெச் சுத்திச் சுத்தி வலம் வருவாங்க. மக்காவுக்குப் போன மூத்தம்மா எனக்கிட்ட சென்னா, அல்லாட பள்ளியெ சுத்திச் சுத்தி ஓர்ரதா. அப்படித்தான் ஆமையரப்பாட புட்டியெ சுத்தி வீசப் போற ஆக்களெல்லாம் தோணியெ ஓட்டுறாங்க. அவ்வளவு சங்கெ ஆமையரப்பாக்கு.
“மாமா! இவனெ கூட்டிட்டுப் போங்க. நான் கறிப்பாட்டுக்கு நாலு தூண்டல் போட்டுப் பாக்கென்”.
வாப்பா வந்த தோணிலரிந்து தூண்டல் போடத் தொடங்கிட்டாரு.
அப்பாட ஊட்டுக்கு முன்னால கறித்தட்டு போல வரம்பு போட்ட நாலு வரவெ. ரெண்டு மரெக்கால் விதைக்குமெண்டு வாப்பாக்கிட்ட அடிக்கொரு தரம் செல்லுவாரு.
அப்பாட ஊடு வளவெச் சுத்தி பத்துப் பதினெஞ்சு தென்ன மரங்கள், வானத்தெத் தொட்டாப் போல. குலெ குலெயா இளநியும் தேங்காயும்.
பழுத்த தேங்காயெல்லாம் வரவெக்குள்ள சிதறிக் கிடந்தது. ஊட்டெண்டா தேங்க உழுந்தெ கையோட நான் போய்ப் புறக்கிடுவென்.
இஞ்செண்டா எல்லா வேலெயும் அப்பாட கையக் காத்துக் கிடக்கும் போல. அப்பாட மூத்தம்மாக்கு ஒரு புள்ளெதான். அதுவும் பொம்பளப் புள்ளெ. சின்ன வயசிலெ நாலு நாள் வாந்தி பேதி வந்து மௌத்தாப் பெய்த்தா. அதுக்குப் புறவு புள்ளப் பூச்சில்லெ. புள்ளெ மௌத்தாப்போன கையோட ஊரெ விட்டு வந்து புட்டிக்குள்ள குடிலொண்டக் கட்டிக்கிட்டு வந்தவர்தான் ஆமையரப்பா. நாப்பது வருசமா இந்தப் புட்டிக்கு அவர்தான் ராசா.
ஆமையரப்பாவும் அவர்ர ராசதானியும்.
கொக்குகளும் நீர்க்காகங்களும் உலகத்தில உள்ள அத்தனெ பறவெ பக்கிசாரங்களும் அவர்ர மக்கள். அது எத்தெனயோ சாதி. அப்பாட அனுமதியோடெதான் அவங்கள்ளாம் புட்டிக்கெ நுழையணும்.
புட்டியெ வளெச்சி அப்பா எனக்குக் காட்டினாரு. கண்ணாப் பத்தெயில, கைக்கெட்டின தூரத்திலெ பறவைகள்ற கூடுகள். கூட்டுக்குள்ளெ மஞ்சள், கறுப்பு, பழுப்பு நிறங்கள்ளெ முட்டைகள்.
“இது நத்தை கொத்திர முட்டெ. இது தாக்கத்தி கொக்குட முட்டெ. இது நீர்க் காகத்திட முட்டெ. இது இளநீலம், அண்டக் காகத்திட முட்டெ”.
அப்பா செல்லித் தந்தாரு. “ஒரு முட்டெயையும் கையால தொடப் போடாதுரா மனெ”. இது அப்பாட கண்டிப்பான உத்தரவு. முட்டெய அளெஞ்சா தாய்ப்பறவை கூட்டெ உட்டு அப்புறப்படுத்திடுமாம்.
அநியாயம். இந்தக் கொக்கு குருவிகளாலாம் நம்மடெ ஊரில மீனும் இறாலும் பெருகி வழியுது. இதுகள்ற எச்சிலத் திண்டு திண்டுதான் மீன்களெல்லாம் கொழுத்து பெரிய பெரிய சினையும் வெச்சி….
அப்பாட கண் தெரிய ஆரும் கொக்குக் குஞ்சுகளெ எடுக்கேலாது. ராவில கொக்கடிக்கப் போறவங்களுக்கெல்லாம் அப்பா ஒரு சட்டம் போட்டிருக்காரு.
பச்ச மரத்திலெ கூடு கட்டி வாழ்ற பறவைகளெ அடிக்கேலாது. பட்டெ மரத்திலெ வாழ்றத மட்டும் கறிப்பாட்டுக்கு புடிக்கச் செல்லுவாரு.
அவர்ரெ அனுபவத்திலெ பச்செ மரம் கூட்டுக் குடும்பம். பட்டெ மரமெல்லாம் தனிச்சவங்கடெ தங்குமிடம்.
கூட்டிலெ அடெப்படுக்கிற கொக்கு நம்மட அமானிதம் என்பாரு.
புள்ளெ இல்லாத அவருக்கு, இந்தப் பறவைகளும் ஆடுகளுந்தான் அவர்ர சொத்தும் இனசனமும்.
ஆத்தில மீன் நிறெஞ்சி வழியுது. இவனுகள்ற வாய்க்கு கொக்குக் கறி வேணுமாம். ஆமையரப்பா புறுபுறுண்டு கதைக்கிறது எண்டெ காதுக்குக் கேக்குது.
“என்ன பேரன்! ஆட்டுகளெ ஆட்டுக்காலையிலெ ஏத்துவமா?
“தம்பியோவ்… வாங்க”
ஆமையரப்பா வாப்பாக்கு குரல் விட்டாரு. கண்ணாக் காடும் புட்டியும் “தம்பியோவ்….” ண்டு சொல்லிச் சொல்லிக் கரெஞ்சி போனது.
நானும் அப்பாவும்
கால….. கால…. கால…. கால….
ஆடுகள் ஒவ்வொண்டா முன்னங்கால மரக்குத்திலெ தூக்கி வெச்சி ஒரே பாய்ச்சல்லெ புரவாடிக்குள்ள புசுபுசுண்டு ஏறி நிறெஞ்சிட்டு.
“பேரன், உனக்குப் புடிச்செ ஆட்டக் காட்டு பாப்பம்”
நான் வெள்ளெச்சிய காட்ட, அவர்ர கையிலரிந்த கவுத்த வெள்ளெச்சிர கழுத்தில போட்டு,
வெள்ளெச்சி அடம்புடிச்சி அடம்புடிச்சி அலறத் தொடங்கியது. புரெயிலரிந்து மெதுவாகத் தூக்கி நிலத்திலெ விட்டாரு. தோளில கிடந்த துண்டெ எடுத்து தலையிலெ போட்டுக்கிட்டு –
“பிஸ்மில்லா, அல்லாட கிருபையால என்டெ பேரனுக்கு பட்டி பெருகணும்” வானத்தப் பார்த்து – வாப்பாட கைல கொடுத்தாரு.
வாப்பாவும் தோளில கிடந்த துண்ட தலையில போட்டு – பவ்வியமா வாங்கிட்டாரு.
என்டெ கைல களக்கம்பும், மீன் கோர்வையும். வாப்பாட கைல வெள்ளெச்சி.
பயத்திலெ வெள்ளெச்சி தோணிக்குள்ள ஒடுங்கிட்டு. புட்டிலெ பறவெ பக்கிசாரங்களெல்லாம் மேகத்திலரிந்து இறங்கி வந்து கண்ணாக்காடுகளில மிதக்கத் தொடங்கிட்டு.
நடு ஆத்திலரிந்து புட்டியெப் பாத்தென். மரங்கள்ற கைகள்ள பெரிய பெரிய வெள்ளெப் பூக்கள். கொண்டல் காத்தில அசைந்து அசைந்து…
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாய மயிலே சாய்ந்தாடு
ராத்தா படிச்சித் தாற பாட்டு காதுக்குள்ள வந்து போனது.
கொக்குகளும் பறவைகளும் சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடம்மா சாய மயிலே சாய்ந்தாடு.
எங்கடெ கால்கள் ஊர்க் கரையைத் தொட்ட போது ஆமையரப்பாட புட்டியெ பொழுது நெருப்புத் தண்ணிக்குள்ள போட்டிருந்தது.
***
 
நன்றி : ஹனீபாக்கா

Sunday, January 12, 2014

ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும் - எஸ்.எல்.எம். ஹனீபா

எல்லாம் பூந்து வால் மட்டும் இருக்கக்கொல ஹனீபாக்கா கதெ எழுதத் தொடங்கியிருக்காரு. - ஹனீபாக்கா!

***

01

என்டெ சின்ன வயசுக் கதெ. அப்பெ நான் படிக்கப் போகல்ல. ஆட்டுக்குட்டியக் கண்டா அதுக்குப் புறத்தால போயிருவன். மேய்ச்சலுக்கு வாற ஆட்டில எனக்கு விருப்பமான குட்டியப் புடிச்சி, வாழ நாரால கட்டி விளையாடுவென். திடீரெண்டு நாரப் பிச்சிட்டு குட்டி ஓடிடும்….

மனசும் கூடவே ஓடும்.

இப்படித்தான் ஒரு நாள் ஆமையரப்பா ஊட்ட வந்தாரு. நான் ஊராட்டு ஆட்டுக்குட்டியப் புடிச்சிட்டு…. கட்டி விளையாடுறதப் பார்த்திட்டாரு….

ஏன் வந்தார், எதுக்கு வந்தாரு எண்டெல்லாம் ஞாபகமில்லெ.

போறப்ப, “தம்பி சாய்ந்தரம் இவனக் கூட்டிட்டு வாடிக்கு வாங்க”

ஆமையரப்பா வாடிக்குப் பெய்த்தாரு.

ஆமையரப்பா அசல் ஆமையைப் போலான். மூணு முழ கொட்டான் மனுஷன். நல்ல கறுப்பு. கட்டையான பெரிய வவுறு. பழுப்புல அரக்கை வாலாமணி. வெள்ள தாடியும் தலையில தொப்பியும்.

ஆமையரப்பாட்ட ஒரு மாதிரியான உப்புத்தண்ணி வாசம் வரும். எங்க வாப்பாட்டயும் அந்த வாசந்தான். ஆத்தில, கடல்ல தொழில் செய்யிற எல்லாரிட்டயும் அந்த வாசந்தான்.

தடுமல் மூக்கோட வாப்பாவ கட்டிப் புடிச்சிக்கிட்டுப் படுத்தா நல்லாருக்கும். தலப்பாரம் குறெஞ்சிரும்.

மெய்தான், இது என்டெ கதெ மட்டுமில்லெ. ஆமையரப்பாட கதையுந்தான்.

ஐ.பி. ஆறுமுகமும் இதுக்குள்ள வருவாரு, ஆட்டுக்கள்ளன் ரமுழாரும் வந்து போவாரு. பழைய மனுசர்ர கதெ கேக்கப் புதுசா இருக்கும்.

ஆமையரப்பாக்கு ஏன் அப்படிப் பேரெண்டு இண்டைக்கும் விளங்கல்ல…

எங்கெட ஊர்ல அப்படித்தான் பேரு.

உம்மா, வாப்பா ஒரு பேரு வெப்பாங்க. பள்ளிக்கூடத்தில இன்னொரு பேரு. கூப்பிர்ர வேறொரு பேரு. பதிவுல, அது வேற. கடெசில ஆரோ ஒருத்தன் வெச்ச பட்டப்பேருதான் மௌத்தாகி மண்ணுக்குள்ள போன புறவும் நிலெச்சி நிக்கும்.

ஆமையரப்பா, வாப்பாக்கு மாமா. எனெக்கி மூத்தப்பா. அந்த நாளெய பேர நினெச்சா புதினமா கிடக்கு.

புகையிலயெரு, வத்தக்காயெரு, கொச்சிக்காயெரு, கத்தரிக்காயெரு, புடலங்காயெரு, கால்ராத்தலெரு, ஈக்கிலெரு, அரிப்பாரு, அதக்க விழுங்கியெரு, பூலாவெரு, புறப்பட்டாரு, மாலையெரு, கிராணம் பாத்தாரு, புக்கையெரு, சோவையெரு, களட்டிக்காயெரு, பனமரத்தாரு…

இத எழுதப்போனா பொழுது விடிஞ்சிடும்.

இண்டெக்கி யாரு இப்பிடி பேரு வெக்கிர, எல்லாம் அறபுப் பேரு.

அண்டெக்கி எல்லாம் மரக்கறிப் பேரு, சைவப் பேரு.

இண்டெக்கி அர்த்தம் பாத்து, கணக்குப் பாத்து வெக்கிற பேரு. முதலாம் நம்பர், அஞ்சாம் நம்பர், எட்டாம் நம்பர்… எல்லாம் அரசியலுக்கு வாசான பேராம். நம்பருக்கா எழுத்தெ மாத்தினா தலெயெழுத்தும் மாறுமாம்.

பேத்தி வாராள். என்ன காலையிலேயே எழுத்துக் கிறுக்கு.

முப்பது ரூபாய்க்கு பராட்டாவும் சம்பலும் வாங்கிட்டு வாங்க.

மெய்தான், இது ஆமையரப்பாட கதெ.

***


02

என்னைக் கூட்டிவரச் சென்ன கையோட, ஆமையரப்பா ஏறு கடப்பால ஏறி புறவளவுக்க போனாரு. பிலா மரம் காய்க்கத் தொடங்கினா, ஆரையும் அந்தப் பக்கம் வாப்பா போக உடமாட்டாரு. அடி மரத்திலயும் வேர்லயும் பிலா வடுக்கள்... கழுத்தில ஆலங்கா மணிக் கோர்வ போல வரிசையாக் கிடக்கும்.

வாப்பாவும் நானும் பிலா மரத்தச் சுத்தி பன மட்டயால வேலி கட்டுவம். மர ஊசால நான் குத்திக் குடுக்க வாப்பா சும்பாக் கவுறால இறுக்கிக் கட்டுவாரு.

பிலா மரத்துக்கு பாவாட தச்சாப் போல இருக்கும்.

வாப்பாட ஒவ்வொரு காரியமும் அழகா, நுப்பமா, கறாரா இருக்கும். வாப்பாட கைலெ இருக்கிற கத்தி பளபளன்னு மின்னும். என்னத் தொடவும் விடமாட்டாரு.

வேலி கட்டினா என்னெ, மீன் கூட பின்னினா என்னெ, காத்தாடிக் கம்பு கமுகு வைரத்திலெ சீவிச் சீவி...

அதுவும் ஒரு அழகுதான்.

அவங்கல்லாம் செய்ற தொழில செப்பமெண்டாக்கள், தெய்வமெண்டாக்கள். செப்பமெண்டாலும் தெய்வமெண்டாலும் அழகுதான.

அப்படித்தான் அந்தக் கால மனிசர்.

இவனுகளுக்கு கிழப்பிக் காட்டினாத்தான் அழகு. அவங்களுக்கு மூடிக் காட்டினாத்தான்...

அப்படித்தான் வாப்பா பிலா மரத்தெ மூடிக் காட்டினாரு.

ஆமையரப்பா, வேலிய நீக்கிப் பாத்த கையோட வானத்தெப் பாத்து மாஷா அல்லாஹ் எண்டு பிலா மரத்துக்கு துஆ கேட்டாரு.

நான் ஏறு கடப்பிலெ ஏறி நிண்டு இதெல்லாம் பாத்துக்கிட்டன்.

என்னெக் கைல புடிச்சிக் கூட்டி வந்த ஆமையரப்பா, "தம்பி! இந்த முறெயும் எனக்கொரு துண்டுப் பழம் அனுப்பணும்"

"கட்டாயம் மாமா"

"மெய்தான், புதுசா ஏதோ நெல்லு வந்திருக்காமே, என்னெயோ போர் ண்டானுகள். உங்கட கூட்டாளி கந்தையா ஓவிசர்தான் போடிமாருக்கெல்லாம் ஆளுக்கொரு பக்கெட்டுக் குடுத்தெயாம்"

"ஓம் மாமா எச்.ஃபோர்"

"ஓம் தம்பி, அதான் பேரு, எனக்கும் ஒரு சுண்டு நெல்லுத் தாங்களென். புட்டிக்குள்ளெ ஒரு வரவுத் துண்டு செரிக்கட்டி வெச்சிரிக்கென். கொத்து நெல்லா கொத்துவொம்"

"கட்டாயம் தாரன், தலெமழெயோடு வாங்கிட்டுப் போங்க"

"மாமா, உங்களுக்கிட்டெ சீனட்டி நெல்லு இருக்கா? வாப்பா கேட்டாரு"

"அதென்னத்துக்கு தம்பி, ரெண்டு மாசத்தில வெட்டணும், ரெண்டு நாள் பிந்தினாலும் வெறும் கதிர்தான் மிஞ்சும், எல்லாம் கொட்டிரும். சோத்துக்கு நல்லாருக்கும். நாம நாய் பாடா பட்டு வெள்ளத்திலெயும் தண்ணிலெயும் அழிய உடலாமா?

இளங்கலையென்ல விதைங்க. வெள்ளத்துக்கும் நிண்டு புடிக்கும், சோத்துக்கும் நல்லாருக்கும்"

ஆமையரப்பா தலையெ ஆட்டி ஆட்டி வாப்பாவோட கதெச்சாரு. வாப்பாவும் தலெய ஆட்டி ஓம் போட்டாரு.

வாசல்ல, பாயும் தண்ணிக் கோப்பெயும்.

"இரிங்க சாச்சா" உம்மா மண்டபத்துக்குள்ள இருந்து தேயிலெ ஊத்துற சத்தத்தோடு உம்மாட சத்தமும்...

உம்மாட ஒரு கைலெ தேயிலெயும் இடது கைலெ சீனி போத்தலும்.

அப்பா, வலது உள்ளங்கைலெ சீனியக் கொட்டி, நாக்கெ நீட்டி, நக்கி நக்கி - 'த்ச்' கொட்டி நாலு முடறு குடிச்சி, சீனிக்கையெ நல்லா நக்கி, வலது தொடெயிலெ தட்டி எழும்பிட்டாரு.

ஆத்துக்கு போற ஒழுங்கயிலெ ஆமையரப்பா. பொழுது பத்தெக்குள்ள இறங்கிட்டு.

***


03

விடிஞ்சா வெள்ளிக்கிழமெ.கொத்துவா நாள். வெள்ளிக்கிழமெண்டா எங்கட ஊர்ல பெருநாள்தான்.

கிழமெய்ல ஒரு நாள்தான் பகச்சோறு. அது வெள்ளிக்கிழமெய்ல. ஒவ்வொரு நாளா எண்ணியெண்ணி இருப்பெம்.

இறெச்சிக் கறியும் புளித்தண்ணியும் வயிறு முட்டப் புடிக்கலாம்.

வாப்பாக்கு வெள்ளிக்கிழமெயும் வேலதான். ஒரு வேலெ முடிஞ்சா இன்னொரு வேலெ. அவர்ர காலடியிலெ வேலெ காத்துக்கிட்டுக் கிடக்கும்.

போன கிழமெ தொடக்கம் கூட பின்னுற வேலெ.

கர வலெயில மீன் காலம்.

வாப்புமாமா, மலாயரு, மாத்தாண்டன் மாமா, சண்முகத்தாரு, கொல்லாவரு, பறங்கியரு ண்டு எல்லாருக்கும் வாப்பாதான் மீன் கூடெ பின்னிக் குடுப்பாரு.

கவுறு போட்டுப் பின்னிக் குடுக்க அஞ்சு ரூவா.

கவுத்திலெ உறியும் கூடெயும்.

எங்கட ஊர்ல மீன் கூட பின்றத்திலெ வாப்பாவ அடிக்க வேறாள் இல்லெ. நல்லா முத்தி விளெஞ்ச பிரம்புலெ அழகழகா இளெப்பாரு.

பிரம்படித் தீவுக்குப் போய், பிரம்பு வெட்டி வருவாரு. மத்தவங்க வெட்டிவாற பிரம்பு வாப்பக்குப் புடிக்காது.

நல்லா முத்தின பிரம்பு, சுரவணியம் பழத்தெப் போலெ மினுங்கும். அடிப்பிரம்பிலெ கறுப்புக் கறுப்பா பட்ட கிளெம்பும்.

எங்கட ஓதுற பள்ளி லெவ்வெட கைலயும் அப்படிப் பிரம்புதான்.

முரட்டுக் கைகள், முத்தின பிரம்பு, மனுசனுக்கு விசரு வந்து அடிச்சாருண்டா, முதுகத் தீச்சிட்டுப் போவும்.

வாப்பாட ஒவ்வொரு காரியமும் அவர்ர கையாலெ செஞ்சாத்தான் அவருக்குப் பத்தியம்.

உம்மாவ கையுதவிக்குக் கூப்பிட்டா… வாப்பா ஒண்டெச் செல்ல உம்மா வேறொண்டெச் செய்வா. ஒரே சண்டெதான்.

உம்மா-வாப்பா சண்டெ எப்பான் முடியுமோ. அல்லாவுக்கு வெளிச்செம்.

இப்பெல்லாம், உம்மாவ, வாப்பா ஒண்டுக்கும் கூப்பிட மாட்டாரு. நான் பெரியாளாப் போனென். என்னெத்தான் கூப்பிடுவாரு. வாற வருசம், அரிவரி படிக்க ராத்தாவோட பள்ளிக்கூடம் போவப்போறென்.

சொண்டுக் கத்தியெ எடுத்திட்டு வா, மர ஊசியும் சணலும் கிடக்கிறெ கடவத்தக் கொண்டா…

உம்மாட்ட முட்டித் தண்ணில வாங்கிட்டு வா

பொழுது விடிஞ்சா வாப்பா ஒவ்வொண்டா செல்லுவாரு. நானும் ஓடியோடி ஒவ்வொண்டாச் செய்வென்.

வாப்பாக்கு என்னில சரியான இரக்கம்.

ஆமையாரப்பா ஊட்ட வந்து போய், விடிஞ்சா ஒரு கிழமெ.

இன்னும் அப்பாட ‘புட்டி’க்க என்னக் கூட்டிட்டுப் போகெல்ல.

“ஆட்டுக்குட்டிக்கு முதல்ல கால கட்டணுண்டா மன, அதுக்குப் புறவுதான் ஆட்டக் கொண்டு வரணும். மழைல ஆடு நனெஞ்சா செத்துப் போவும்”.

“நாளெக்கி ராத்தாவும் நீயும் ஓடக்கரெ மாமிட்ட போய், பத்து கிடுகு மட்ட வாங்கிட்டு வரணும்”.

மாமிட்ட போரெண்டா எனக்கி இல்லண்டெ கொண்டாட்டம். போற வழியெல்லாம் வாக மரக் காடுதான். நாம எண்ணிக்கிட்டு இரிக்கெம், காடுண்டா மரங்களெண்டுதான், காட்டுக்குள்ள விதம் விதமான குடும்பங்கள். மனிசரில்லாத குடும்பங்கள்.

ஒவ்வொரு மரத்திலெயும் பொன்னி வண்டுகள் ஆட்டுக்குட்டிகளெப் போல மேஞ்சிக்கிட்டுக் கிடக்கும். மேலெல்லாம் தங்கத் தண்ணிலெ போட்டு எடுத்தாப் போல மினுமினுக்கும்.

பெரிய ஈக்கில்ல பொன்னி வண்டுற தலெய நூலால கட்டி. – ரெண்டு கையாலெயும் சுத்தச் சுத்த வண்டு சிறகெ விரிச்சி விரிச்சி மூச்சு விடாம, ஈக்கில சுத்திச் சுத்திப் பறக்கும்.

பாக்கிறதுக்கு பெருநாளைல அலிக்குட்டி ஓடாவியார்ர தொட்டி ஊஞ்சல் போல இருக்கும்.

ஓடக்கரையெல்லாம் வாக மரமும் புங்க மரமுந்தான். புங்க மரம் நல்ல கறுப்பு. வண்ணார வெட்டைல காச்சலுக்கு ஊதிப் பாக்கிற சீனியன் கட்டாடியன் போல.

வாக மரம் நல்ல வைரமெண்டு வாப்பா செல்லுவாரு. கிறுக்கூஞ்சல் செய்ய நானும் மச்சிட காக்கா உசன் மச்சானும் வாக மரத்திலெதான் அச்சுச் செய்வம்.

ஒரு மரத்த ஒரு நாளெக்கெல்லாம் கிடந்து தறிப்பெம். மரத்திலெ கத்தி ஏறாது. அப்பிடி வைரம். கசறுக் கட்டி போல…

உசன் மச்சான் படிக்கப் போகல்லெ. மாமாவோட ஆத்துக்குப் போற. மாமா வீச, மச்சான் தொடுப்பான்.

அணியத்திலெரிந்து – அவன் சவளை, தோணிய அணைச்சாப்லெ – திடீரென ஆத்துக்குள்ள சவளெக் குத்தி… ஆறு குழிவிட்டு குழிவிட்டு சிரிக்கிறாப் போலெ இருக்கும். அழகா இருக்கும்.

கையெ ஆத்துக்குள்ள விட்டா, சிரிப்பூ அகப்படாது, சிதறிப் போகும்.

ஆத்துக்குள்ள சவளெப் போட்டு – சின்னச் சின்ன தண்ணி மடுவெத் தோண்டித் தோண்டி உசன் மச்சான் தோணி உடுவான். நான் தோணிட தொங்கல் அணியத்திலெரிந்து பாத்துக்கிட்டு இருப்பென்.

தலை சுத்தும்.

(ஆமை நகரும்)
***

Monday, November 25, 2013

மச்சான் சொன்ன மஞ்சள் கதை - எஸ்.எல்.எம். ஹனிபா

இதே தலைப்பில் வேறெங்கும் இருக்கிறதா என்று இணையத்தை தேடினேன். அதிபயங்கர காமக்கதை ஒன்று வந்தது. சுட்டியெல்லாம் கொடுக்க முடியாது. அதைப் படித்துமுடித்துவிட்டு , மறக்காமல் முகம் சுளித்துவிட்டு , தொந்தரவு செய்யாத மஞ்சள் கதையை மட்டும் இங்கே பகிர்கிறேன். காக்கா வாழ்க. அப்படியே ஹாஜியார்களும்! - ஆபிதீன்
***

 மச்சான் சொன்ன மஞ்சள் கதை
எஸ்.எல்.எம். ஹனீபா

பத்து வருடங்களுக்கு முதல் ஒரு நாள் மச்சான் சொன்ன கதை இது. மச்சான் எனது உறவினர். உமர்லெப்பை சேகு இஸ்மாயில், வயது 78. ஒவ்வொரு நாளும் மச்சான் அரைக்கிலோ கோழித்தீன் வாங்க கடைக்கு வருவார். மச்சான் வசம் பத்துப் பன்னிரண்டு புறாக்கள். அவர் வீட்டிலிருந்து எனது கடை 3 கிலோமீற்றர் தூரம். தனது புராதன காலத்து சைக்கிள் வண்டியில் மிகவும் இலாவகமாக வந்து தீன் வாங்கிப் போவார். "இரண்டு கிலோ வாங்கிப் போங்களேன்" என்று சொன்னால் "வீணாக்கிப் போடுவார்கள்" என்பார். மச்சான் மிகவும் அப்புராணியான மனிதர். அவரைப் போல் மனிதர்களை ஊரில் காண்பது அரிதாகிப் போனது.

நல்ல மழை பொழிந்த ஒரு நாளின் பகற்பொழுதில் பகற் போசனத்துக்காக கடையை மூடி விட்டு வீடு சென்று கொண்டிருந்த போது, எதிரே மச்சான் பென்னம்பெரிய கோணிப்பையை தனது சைக்கிளின் கரியரில் வைத்துக் கட்டியவாறு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

"மச்சான், ஒவ்வொரு நாளும் மூட்ட மூட்டயா காய் கொண்டு போறீங்க. எனக்கும் ஒரு பத்துக் காய் கொண்டு தரலாந்தானே" இவ்வளவுதான் நான் சொன்னது.

என்னுடைய நினைப்பில் கோணிக்குள் இருப்பது மாங்காய் என்று எண்ணிவிட்டேன். கற்பனைக்கு என்ன குறைச்சல். உள்ளே இருந்ததோ வேறு.

மறுநாள் பகற் போசனத்துக்கு வீட்டுக்குச் சென்ற பொழுது, "உங்களுக்கு நபுசு அடங்காது, கண்ட கண்ட பலாயிலயெல்லாம் ஆசதான்".

நான் என்னவோ ஏதோ என்று திகைத்தேன். மீண்டும் மனைவி, "சேகு இஸ்மாயில் காக்கா மஞ்சள் பழம் பத்து தந்திட்டுப் போயிருக்கார். போட்டுக் குத்துங்க".

"பிள்ளெ, நான் மாங்காண்டு நினைச்சித்தான் கேட்டன்"

மறுநாள் மச்சான் கடைக்கு வந்தார். "மச்சான், நான் மாங்காண்டு நினைச்சித்தான் கேட்டன். அது மஞ்சள் பழம்" (இங்கு லாவுலு பழம் என்பார்கள்).

"மெய்தான், ஒவ்வொரு நாளும் மூட மூடயா கட்டிப் போறீங்களே. எங்க கொண்டு போறீங்க?"

"அது மச்சான், நம்மட பசார்ல இருக்கிற ஆஜியார்ர கொச்சிக்காய் மில்லுக்கு (கிரைண்டிங் மில்) கொண்டு போறேன். மூடெக்கு இரு நூறு ரூவா தருவார்" என்றார்.

"இந்தக் காய ஆஜியார் என்ன செய்யிறார்?" நான்.

"நல்லா முத்திய செங்காய நாலா வெட்டி வெய்யில்ல காய வெச்சி, பவுடராக்கி, மஞ்சள் தூளோடு கலந்து யாவாரம் செய்றார்" என்றவர், "இந்த வருஷமும் ஆஜியார், குடும்பத்தோட மக்காவுக்குப் போறார் மச்சான்" என்றார். 
***
நன்றி : ஹாஜி எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள்

Monday, October 7, 2013

விட்டல் ராவின் உன்னதங்கள் - எஸ்.எல்.எம். ஹனீபா

அன்புள்ள ஆபிதீன், 

வெய்யில் நெருப்பாகக் கொதிக்கிறது. இந்த வருட ஆரம்பத்தில் காய்த்த தென்னை மரங்கள் தலைக்காயுடனேயே தலையெழுத்தை முடித்துக் கொள்ளும் போல் தெரிகிறது. மனத்தில் இன்றெல்லாம் பெரும் வலி. கடந்த ஏழு வருடங்களில் இவ்வருடத்து வறட்சி மிகக் கொடுமையானது. விட்டல் ராவின் நூலைப் பார்த்தீர்களோ நானறியேன். நானும் மகன் ஸபீர் ஹாபிஸும் இதை டைப் பண்ணி அனுப்புகிறோம். 

அன்புடன்
ஹனீபாக்கா 
***


வாழ்வின் சில உன்னதங்கள்

1970களில் வீறு  கொண்ட நவீன தமிழ் கலை இலக்கிய முன்னோடிகளில் விட்டல் ராவ் முக்கியமான ஆளுமை. நல்ல சிறுகதையாளராக மட்டுமல்லாமல், போக்கிடம், நதிமூலம், வண்ணமுகங்கள் போன்ற அவரின் நாவல்களால் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். 

நூற்றாண்டைக் கடந்து விட்ட தமிழ் நாவல்களின் வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் நிச்சயமாக போக்கிடம் அதிலொன்றாக இருக்கும். அது மட்டுமல்ல, நல்ல புகைப்படக் கலைஞர், ஓவியர், வரலாற்று ஆர்வலர் என்று அவர் செயல்பாடு நீள்கிறது. 

இன்று தான் வாழ்ந்த காலத்தினூடே பார்த்துப் பழகிப் படித்துப் பரவசமடைந்த எழுத்தின் மீதும் மனிதர்கள் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக தன் வாழ்வின் உன்னத தருணங்களை அவர் நமக்கு அளித்திருக்கும் அருமையான கட்டுரைகளின் தொகுப்புத்தான் "வாழ்வின் சில உன்னதங்கள்" என்ற நூலாகும். 

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விஜய் ரி.வி. விருது விழாவில் பங்கேற்கச் சென்ற மதிப்புமிகு கவிஞர் அனார் வசம், பாரத தேசத்தில் எனது பிள்ளையாக நான் கொண்டாடும் என்னருமை ஷாஜி (எழுத்தாளர், இசை விமர்சகர், நடிகர் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)) எனக்கு அன்புடன் வாங்கியனுப்பிய நூலும் இதுவே. 

இந்த புத்தகம் பற்றி இன்னுமொரு சிறப்பான தகவல். பாரத தேசத்தில் தேசியளவில் கலைஞர்களை கௌரவிக்கும் "குசுமாஞ்சலி விருது" இவ்வாண்டின் தொடக்கத்தில் திரு விட்டல் ராவ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நமது வாழ்த்துக்கள். சிறப்பான அந்த நூலிலிருந்து நம் சமூகத்தின் கண்ணியத்திற்குரிய இளமையில் நமக்கெல்லாம் தன்னம்பிக்கையூட்டிய பன்னூலாசிரியர் அவர்களுக்கும் விட்டல் ராவ் அவர்களுக்குமான உறவின் ஒரு பத்தியை ஆபிதீன் பக்க நேயர்களுக்காக இங்கு பதிவேற்றம் செய்கிறேன். 

-------------------

"இன்னா வோணும்?" கேட்டார் பாய். 

"மத்தியானம் வந்திருந்தப்ப போஸ்ட் பத்திரிகைகள் கொஞ்சமிருந்திச்சி. பார்த்து வச்சிட்டு, இதோ போயிட்டு வர்ரேனு போனேன். இப்ப அதைக் காணோம்"

"அவ்ளோதான், வித்துப் போச்சி."

"சொல்லி வச்சிட்டுப் போனனே?"

"சொல்லிட்டுப் போனா, அதே ஞாபகமா எனுக்கு? வியாளக்கெளம தர்கா நாளுக்கூட்டம். எதனாச்சி அட்வான்சு குடுத்திட்டுப் போயிருந்தா ஞாபகமிருந்திருக்கும். ஒத்தரு எப்பவும் வருவாரு நம்போ கடைக்கு. காலேஜு புரொபசரு. கேட்டாரு, குடுத்திட்டேன்"

என் பழம்புத்தகக் கடையனுபவத்தில் ஏற்பட்ட முதல் அனுபவமாக அதை எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். அறை வாசலில் நின்றிருந்த போது அடுத்த அறை வாசலில் வசிக்கும் நண்பர் - இன்னும் அறிமுகமே ஆகாத நிலையில் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது கையில் வைத்திருந்த பத்திரிகைகளைத் தற்செயலாகப் பார்த்தேன். 

சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் பத்திரிகைகள்!

"சார், மன்னிக்கணும், ஒரு நிமிஷம்" என்றேன். 

அவர் தன் அறை வாசலில் நின்றவர், திரும்பிப் பார்த்து முறுவலித்தார். என் பெயரைச் சொல்லிக் கொண்டேன். 

"ஓ, டெலிஃபோன்ஸிலயிருக்கீங்களா? நான் அப்துல் ரஹீம். நியூ காலேஜில் புரொபசராயிருக்கேன். உள்ளே வாங்க" என்றார். 

உள்ளே டெல்லி மோடாக்கள் ஒன்றில் உட்கார்ந்தேன். செட்டென்று கைலிக்கு மாறிக் கொண்டவர், வெகு விரைவில் மண்ணெண்ணெய் ஸ்டவ்வை ஏற்றி தேநீர் தயாரித்து விட்டார். இடைச்சி மார்க் பால் மணம் தேயிலை மணத்தையும் மீறியிருந்தது. என் ஒரு கண் மேஜை மீது அவர் வைத்த போஸ்ட் இதழ்கள் மீதே இருந்தது. 

"இதெல்லாம் பாருங்களேன். வேணுமானா எடுத்திட்டுப் போய் படிச்சிட்டுக் கொண்டாங்க"

"எங்கே வாங்கினது?"

"தர்கா பக்கத்தில, ஒரு கடையில..."

"தெரியும், மத்தியானம், அங்கே இதையெல்லாம் பார்த்து வச்சிட்டு ரூமுக்குப் போய்ட்டு வர்ரேனு சொல்லி வந்தேன். காசையெடுத்திட்டுப் போனா, வித்துப் போச்சினு சொல்லிவிட்டார் அந்தப் பெரியவர்"

"அடடா, நீங்க பாத்து வச்சதா இதெல்லாம்? நா மாமூலா அவர்கிட்டே வாங்கறேன். கேட்டதும் குடுத்திட்டாரு. ஒங்களுக்கு வேணும்னா எடுத்துக்குங்க."

***
எழுத்தாளர்களின் அனுபவங்கள் எத்துணை உன்னதமானது. நமது மனக்கண்ணில் அப்துல் ரஹீமும் விட்டல் ராவும் அப்துல் ரஹீம் தயாரித்த பால் தேநீரும் ஆவி பறக்கும் காட்சியாக அலைபாய்கிறது. 

அண்மைக்காலமாக இப்படியொரு கட்டுரைத் தொகுதியை நான் படிக்கவில்லை. எத்துணை விஷயங்கள் .எத்துணை மனிதர்கள். புத்தகத்தை வாங்கியனுப்பிய ஷாஜிக்கும், பத்திரமாக என்னிடம் கைளயளித்த கவிஞர் அனாருக்கும், இந்த நூலை தேடிப் படிக்கப் போகும் நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 

பழம் புத்தகங்களை வழங்கிய கரீம் பாய் பற்றிய கதையை வரும் நாளில் பதிவேற்றம் செய்கிறேன். 


அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா

Monday, March 25, 2013

இன்னும் மனிதனாக இருப்பதனால்.... - வேதாந்தி

தவிர்க்கவே இயலாத இஸ்லாமிய இலக்கிய ஆளுமையான நாகூர் ரூமியை மறந்துவிட்டு "தமிழ்ச் சிறுகதை - முஸ்லிம்களின் பங்களிப்பு" பற்றி எழுதிய ஹனீபாக்காவின் சிறுகுறிப்பை படியுங்கள் முதலில். பிறகு வேதாந்தியின் கதையை வாசிக்கலாம்.  அந்தக் குறிப்பைப் படித்தவுடன் எனக்கு உருப் (பி.சி. குட்டி கிருஷ்ணன்) எழுதிய உம்மாச்சு நாவலில் வரும் சின்ன வாக்கு வாதம்தான் நினைவுக்கு வந்தது (நன்றி : சென்ஷி) . "பெரும்படப்பிலிருக்கிற பள்ளிவாசல், குண்டோட்டியிலிருக்கிற பள்ளிவாசலைவிட ஒசந்தது’ என்று பீரான் சொல்வான்.  எப்படி? ”அதோடே கும்பம் தங்கக்கட்டியாக்கும்! அதோடே உச்சுக்கு ஏறி நின்னு பாத்தா மக்காவும் மதீனாவும் தெரியும்!” ”சரியான டாவு!” என்று சொல்லி மாயன் மடக்குவான் இப்படி : “ குண்டோட்டி பள்ளிவாசல் உச்சிக்கு ஏறினா சொர்க்கத்துக்கே போகலாம்! ஒரு முழ உயரத்திலே எட்டிப்பாத்தாக்கூட சொர்க்கத்திலே தேவதைங்க நடமாடறதைப் பார்க்கலாம்”
 
அது மாதிரியல்லவா இருக்கிறது! - ஆபிதீன்

***


இன்னும் மனிதனாக இருப்பதனால்.... 



 
வேதாந்தி (எம்.எஸ். சேகு இஸ்ஸதீன்)

நான் ரொட்டியைச் சாப்பிட்டுக் கொண்டு தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தேன். எனக்குத் தள்ளி அருகில் வந்து ஒரு காகம் அமர்ந்தது. நான் சாப்பிடுவதை அது ஏக்கமாகப் பார்த்தது. காகங்களிற்கு லட்சணமான ஜாக்கிரதை உணர்வு அதனிடம் அபரிமிதமாகவே தென்பட்டது. தன் உயிரிற்குப் பெறுமதி இல்லையென்பதை விட ஒரு முறை தன்னை விட்டு அகன்றால் திரும்பவும் அந்த உயிர் உடலில் புகுந்து கொள்ளாது என்பதை அறிந்து கொண்டது போல அது தன் நிலையில் மிக எச்சரிக்கையாகவும், சுற்றாடலில் மிக விழிப்புள்ளதாகவும் நின்று கொண்டிருந்தது. இருந்தும் அதன் கண்களில் ஏனோ ஒருவித ஏக்கம் மிக விசாலமாக வியாபித்திருந்தது. அது ஒரு மெலிந்த காகம். எல்லாக் காங்களும் எங்கெல்லாமோ அவசரமாய்த் தத்தம் குடலை நிரப்ப உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கையில் இது மட்டும் வெகு சாதாரணமாக ரொட்டியைத் தின்று கொண்டிருந்த என் தனிமையைப் பயன்படுத்தும் நோக்கில் ஏங்கி பார்த்துக் கொண்டிருந்தது.
 
நான் உண்மையில் அந்தக் காகத்திற்காகப் பரிதாபப்பட்டேன். சகல காகங்களாலும் புறக்கணிக்கப்பட்டதாய் நின்று கொண்டிருந்த அந்த ஒற்றைக் காகத்தில் இயற்கையாகவே என் இரக்கம் விழுந்தது. தனித்து விட்டவற்றின் துணைக்குத் தனித்துவிட்டவைதான் பொருந்த வேண்டும். எனவே, நான் அக்காகத்தின் துணைக்குத் தயாரானேன். என் கையில் எஞ்சியிருந்த அரைவாசிக்கும் அதிகமான மீதி ரொட்டியை அக்காகத்தோடு அக்காகத்திற்காகப் பகிர்ந்து கொள்வதாய்ச் சங்கற்பித்துக் கொண்டேன். என் நிலையைப் புரிந்து கொண்டு என்னோடு சகஜமாக பயமற்றுப் பழக வேண்டுமென்று அக்காகத்தை நான் விரும்பினேன்.
 
ரொட்டியில் ஒரு துண்டை எடுத்து சற்று அஜாக்கிரதையாகவே எறிந்தேன். அந்தத் துண்டு ரொட்டி எனக்கும் அந்தக் காகத்திற்கும் இடைப்பட்ட தூரத்தை இரண்டாக ஆனால் அதற்குப் பாதகமாகப் பிரித்துக் கொண்டு விழுந்தது. அந்தக் காகம் அந்த ரொட்டியை எடுக்கப் பயப்பட்டது தெரிந்தது. எனக்குத் தர்ம சங்கடமாய்ப் போய்விட்டது. எறியப்பட்ட துண்டு ரொட்டியை முதலில் அது தின்ன வேண்டுமென்பது என் விருப்பம். மற்றக்காகங்களைப் போல் தெத்தித் தெத்தி ஜாக்கிரதையாக வந்து அதைக் கௌவிக் கொண்டோடி தூரத்தே நின்று தின்ன வேண்டுமென நான் நியாயமாகவே பிரியப்பட்டேன். ஆனால் அது அப்படிச் செய்யவில்லை. என் அசைந்து கொண்டிருந்த வாயையும் கையையும் எச்சரிக்கையோடு கவனித்துக் கொண்டிருந்தது. என் உடலில் அசைவிருக்கும் வரை அது என்னையே இமைக்காது பார்த்துக் கொண்டு நிற்கும் போல் தெரிந்தது. நான் இறந்து விட்ட பின்னர்தான் அது ரொட்டித் துண்டை எடுத்துச் சாப்பிடக் காத்திருக்கிறதா? எனக்குக் கோபத்தின் தொனி இதய அடிப்பில் எழுந்தது. இருந்தும் அக்காகத்திற்கு உதவி செய்ய நான் உடலில் எந்த அசைவுமற்றவனாய் என்னை ஆக்கிக் கொண்டு பாசாங்கிற்காய் சுவரில் சாய்ந்தபடியே இறந்து விட்டவனாய் நின்றேன்.
 
'படபட'வென்ற சிறகுச் சப்தம் திடீரென எழுந்து அடங்கிய பின்னர் கண்களை விழித்துப் பார்த்தேன். அந்த ரொட்டித் துண்டு காகத்தின் வாயிலிருப்பது தெரிந்தது. என்னுள் சந்தோஷ நரம்புகள் சிலுப்பி விட்டுக் கொள்ளச் சற்று முன்னர் வேறு ஒரு காகம் நிற்பது தெரிந்தது. நான் அடையாளம் கண்டு கொண்டேன். அதுதான் தன் புதுமாதிரியான ஏக்க நிலையால் என் பரிதாபத்தைச் சம்பாதித்துக் கொண்ட அந்த மெலிந்த காகம். ஆனால் அதன் வாயில் ரொட்டி இருக்கவில்லை. சும்மாதான் எதனையோ பறிகொடுத்த அதே பார்வை பரம்ப நின்று கொண்டிருந்தது. ஆகவே ரொட்டித் துண்டை எடுத்தது புதுக்காகம். என் இரங்கலைப் பெற்றுவிட்ட காகத்தில் எனக்கு எரிச்சலும் பாவமும் எழுந்தன. 'அசட்டுக் காகம்' என்று சொல்லிக் கொண்டேன். புதுக்காகம் அந்த ரொட்டித் துண்டை தின்று முடிக்கு முன் நான் அவசரப்பட்டு இரண்டாம் துண்டையும் உடைத்து இந்த முறை கொஞ்சம் கவனமாகவே என் காகத்தின் அருகேயே விழுமாறு போட்டேன். ரொட்டித் துண்டு பூமியில் விழுமுன் 'டப்'பென்று அதனைச் சொண்டுகளில் முதற் துண்டு விழுந்து விடாமலேயே இரண்டாம் காகம் பிடித்துக் கொண்டது. என் காகத்தின் இயலாமையில் எனக்கு அதிருப்தியும் மற்றக் காகத்தின் சாமர்த்தியத்தில் வியப்பும் ஏற்பட்டது. அதன் சாமர்த்தியத்தை நான் மெச்சிக் கொள்ளவில்லை. பேராசைக்காரர்களின் வெற்றியை ரசிக்கவோ திருடர்களின் திறமையைத் தட்டிக் கொடுக்கவோ என்னால் முடியக்கூடாது என்று நான் விரும்பினேன். அவர்களை அதற்காகச் சபித்தேன்.
 
நான் என் காகத்தின் அசட்டுத் தனத்தில் மனம் கசிந்தேன். அதன் நிராயுத நிலைக்கு இளகினேன். எதேச்சையான ஒரு சிறு காரணத்திற்காக எனக்கு அந்தக் காகத்தில் ஏற்பட்ட பிடிப்பைப் போலவே, அதன் சோர்ந்த நிலைக்கு வருத்தப்படும் என் மனோ நிலையும் எனக்கு விசித்திரமாகத்தான் இருந்தது. பிடிப்பும் வெறுப்பும் இப்படி எதேச்சையானவைதான். பிடிப்பிற்கும், வெறுப்பிற்கும் அதாவது எதேச்சையான உணர்வுகளின் நிலைப்பிற்காக மனிதனிடம் எவ்வளவு கசப்பு; எத்தனை போராட்டங்கள்; எப்படி ரகளைகள். எனக்கும், என்னினத்திற்கும் நானே ஒரு சிறிய அளவில் ஒரு பெரிய உதாரணமாக எனக்குள் நிற்கிறேன்.
 
மூன்றாம் காகமொன்று இங்கு நோக்கி வந்து கொண்டிருப்பதை நான் தற்செயலாகக் காண நேரிட்டது. நான் என் காகத்திற்காய் என்னை மேலும் அலட்டிக் கொண்டு உசாரானேன். அவசர அவசரமாய் மூன்றாம் துண்டை உடைத்து இரண்டாம் காகத்திற்கு ரொட்டியை வேறு ஒரு திசையில் எறிவதாய்ப் போக்குக் காட்டி அதை ஏமாற்றி வேறு ஒரு இடத்திற்கு நகர்த்தி விட்டு உடனே என் காகத்தின் அருகில் அதனைப் போட்டேன். இந்த முறை அந்தத் துண்டு என் காகத்தின் காலடிக்கு அருகிலேயே விழுந்தது. அது விளைவுகளை யோசித்துக் கொண்டு நிற்பதாய் சற்று நேரம் நிதானித்து விட்டு என் அசைவுகளைப் படிக்க சாவகாசமாய் ஒரு முறை என்னையும் பார்த்து விட்டு அதன் பின்னர் அந்தத் துண்டு ரொட்டியைக் கௌவ முயன்றது. அதற்குள் எப்படியோ இரண்டாம் காகம் முந்திக் கொத்திக் கொண்டு மிக அலட்டிக் கொள்ளாமல் என்னைப் பார்த்தது. அதற்கு, நான் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் அனைத்தும் மெலிந்த காகத்தின் மேல் எனக்கு அன்பும் ஈடுபாடும் என்பவை காரணமாக என்று புரிந்து விட்டது போலிருந்தது. நிலைமை இப்படி ஒரு புதுக்கோணத்தில் ஏற்படுவதும் உண்டு. நமது அன்பிற்குப் பாத்திரமானவர்கள் தாம் இன்னாரின் அன்பிற்குப் பாத்திரமாகி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளு முன்னர், அவர்களுக்கு வேண்டாத நமக்கும் ஆகாதவர்கள் அதனை மிக இலகுவாக அறிந்து கொள்வதைப் போல.
 
அதன் பார்வையில் பொதிந்திருந்த அனர்த்தக் கேலியும், அலட்சியமிடுக்கும் எனக்கு ஆக்ரோஷத்தை ஏற்படுத்தின. அதனளவில் நான் தோற்றவன் என்று அது கருதி என்னை அவமதிப்பில் பார்த்ததில் எனக்குப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் அதன் பேராசை பிடித்த மனோவலிமையை நான் மனமார வெறுத்தேன். அந்தக் கொழுத்த காகம் நாசமாய்ப் போகச் சபித்தேன். என் காகம் போன்றவையாக இப்படியான தன் நலக் காகங்களோ காரணமென்பதில் நான் இப்படியான காகங்கள், இவை போன்றவை அனைத்தையும் ஒரே மூச்சில் மிக வலுவற்றனவாய் ஆக்கிவிடும் தத்துவம் நம்மிடம் இல்லாமற் போயிற்றேன என ஏங்கினேன். அந்தப் பேராசைக் காகம் மிக நிதானமாய்ப் பக்கத்திலிருந்த 'நறிவிலி'யில் ஏறிச்சுகமாகக் குந்திக் கொண்டு ரொட்டித் துண்டுகளைக் காலுக்கடியில் லாவகமாகப் பிடித்துக் கொண்டு வித்தியாசமாய் இருமுறை கரைந்துவிட்டு ரொட்டியைச் சுவைக்கத் தொடங்கிற்று.
 
இதற்குள், காகங்களாய் பதினைந்து இருபதும், இரு கோழிகளும் கூடி விட்டன. இதுதான் அந்தப் பேராசைக் காகத்தின் 'குறி' போலும். என் காகத்தைத் தனிமையில் விட விரும்பாததிலும், தன்னால் இனி மேலதிகமாக ஒன்றையும் பெற முடியாது என்பதிலும் அது கரைந்து மற்றக் காகங்களைக் கூட்டி விட்டது. 'காக்கை கரவா கரந்துண்ணும்' என்பது இதுதானா? இருக்க முடியாது. தன் நலிந்த சகோதரக் காகத்திற்கு ஒரு துண்டையும் விடாமல் தானே பறித்துக் கொண்ட அந்தக் காகமா கரந்துண்ண நினைக்கும். என் காகத்தில் பொறாமை கொண்டுதான் அது அப்படிச் செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சாப்பிட நிற்கும் பொழுதே மற்றக் காகங்களையும் அழைக்கக் கரைந்திருக்கலாமே. மட்டுமல்லாமல் காகம் உணவைக் கண்டால் கரைவது தனியாக அகப்பட்டுக் கொள்வோமோ என்ற பயத்தில்தானேயொழிய ஒன்றும் பெரிய காகத் தன்மையினாலல்ல. இனி இப்படித்தான் நான் நம்புவேன். பழமொழி பழையது என்பதற்காக ஏற்றுக் கொள்ள நான் தயாரில்லை. புதுமொழியும் உண்மையற்றிருந்தால் ஏற்றுக் கொள்ள நான் எப்படித் தயாரில்லையோ அது போல.

கடைசி வரையில் என் காகத்தை ஒரு துண்டு ரொட்டியாவது பெற வைப்பது எனத் தீர்மானித்து நான் தின்பதை முற்றாக நிறுத்திக் கொண்டேன். பலவகைகளில் முயன்று அதிகமான துண்டுகளை என் காகத்திற்கு அருகில் விழ எறிந்தேன். அது ஒரு சிறு முயற்சி செய்திருந்தாலாவது பல துண்டுகளைப் பெற்றிருக்கும். ஆனால் அதுவோ எல்லாக் காகங்கட்கும் மிகப் பின்னால் நின்று கொண்டிருந்ததாலும் அதன் உதவிக்கும் துணைக்கும் வந்த என்னை தன் உயிரைக் குடிக்கப் போகும் எமனாக அறிந்து கொண்டது போலவும், தன் பசியை ஒரு துண்டு ரொட்டியிலாவது போக்கி விட வேண்டுமென்று ஆசை கொண்டது போலவும் நின்றிருந்தது. அதற்கு மட்டும் ஏன் அவ்வளவு பயமென்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை நான் பரிவு காட்டியதுதான் அது பயரக் காரணமோ. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அதன் ஆத்மா உள்ளூர அதற்கு ஏதாவது எச்சரிக்கை விடுத்திருக்குமோ? ஆம், இல்லையென்பது பற்றி எனக்கு நிச்சயமில்லை.
 
என் கையிலிருந்த ரொட்டி சிறிதாகிச் சிறிதானதைக் கண்டு என் மனம் சஞ்சலப்பட்டது. எங்கே, என் காகத்திற்கு ஒரு துண்டு ரொட்டியாவது கிடைக்காமற் போய் விடுமோ எனப் பயந்து வேதனைப்பட்டது. இருந்தாலும் அதற்கு உதவும் முயற்சியையும் நம்பிக்கையையும் நான் என்னுள் தளரவிடவில்லை. கடைசித் துண்டு ரொட்டி கையில் எஞ்சியதும் அதனையும் என் காகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன். இந்தத் துண்டு ரொட்டியாவது அதன் வாயுள் இறங்கி, வயிற்றுள் சீரணமாக ஏலவே விதிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று நான் மிகவும் விரும்பினேன். ஒரு திட்டத்துடன் சில கணங்கள் காத்திருந்தேன். இதற்குள் அதிகமாக எல்லாக் காகங்களும் போய் விட்டிருந்தன. சற்றுப் பின்னர் என் காகம் மட்டுமே அங்கு நின்று கொண்டிருந்தது. நான் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்பட வைக்க கடைசித் துண்டு ரொட்டியை அக்காகத்தருகே போட்டேன். ரொட்டித் துண்டை 'சடக்'கென்று கௌவுவதை விட்டு அது என்னை மிகச் சோர்ந்து நொந்து போய்ப் பார்த்தது. பின்னர் அதன் கண்களில் ஒரு கனிவு தெரிந்தது. நன்றியுணர்விற்குரிய கனிவாய் அது இருக்கலாம். ஆனால் நான் அது அப்படிப் பார்த்து நேரத்தைக் கடத்துவதை விரும்பவில்லை. அது ஒரேயடியாய் அந்த ரொட்டித் துண்டைச் சாப்பிட்டுவிட வேண்டுமென மிக ஆவலானேன்.
 
இதயபூர்வமாக விரும்பி மனமார முயன்றால் நமது முயற்சி நிரப்பமாகாது விடுவதில்லை என்பார்கள். நான் இதயபூர்வமாக விரும்பி மனமார முயன்றதற்காகவோ என்னவோ அது நிறைவேறவில்லை. 'லபக்'கென்று வேறொரு காகம் அந்தத் துண்டையும் எடுத்துக் கொண்டு பறந்தது. எனது மனம் இடிந்து குமைந்தது. அதனில் இரக்கப்பட்டதற்காகவே என் மன நிலையைச் சங்கடப்படுத்தி விட்ட என் காகத்தில் எனக்கு சொல்லொணா எரிச்சல் ஏற்பட்டது. என் முயற்சிகளும் பாடுகளும் விரயமானதில் அக்காகத்தில் எனக்கிருந்த இரக்க உணர்வு வேர் பெயர நீக்கப்பட கோபமே மிகப் பெரிதாய் உருவாகி உச்ச நிலையை அடைந்தது. அதிருப்தி விஷமாய்ப் பரந்தது. இப்படியான பலஹீனக்காகம் வாழ்வதற்கு லாயக்கற்றது என்றே எனக்குப் பட்டது. அது இந்த உலகத்தின் இம்சைக்கு ஈடுகொடுத்து வாழத் தகுதியற்றிருப்பதாய் நான் முடிவெடுத்தேன். என் பரிதாபம் அதன் மேல் விழாதிருந்திருக்குமானால் அதனை அதன் போக்கில் அனுமதித்திருப்பேனென்பது எனக்குத் தெரியும். இப்பொழுது என் நிலை அதுவல்ல. எனவே நான் கசந்ததில் வெகுண்டேன். உள்ளே போய் ஒரு துண்டுத் தடியை எடுத்துக் கொண்டு வந்து அதைப் பின்னால் மறைத்தபடி நின்றிருந்தேன். காகம் சற்று சற்றாய் அயர்வது தெரிந்தது.
 
நான் இனி அதை நோக்கி எறியலாம். திடீரென மனம் பிடித் தளர்த்தியது. இதயம் எதையோ எச்சரித்தது. வழக்கத்திற்கு விரோதமாக என் குறி தவறி எறியப்படும் காகத்திலேயே பட்டுவிட்டால்... 'சவம்'. அழிந்து தொலையட்டும்! என்று வாயாரச் சொல்லிக் கொண்டேன். ஆனால் மனம் மட்டும் அப்படி நடந்து விடக்கூடாதென்று பிரார்த்தித்தது. ஆனால் நான் எறிந்து தானாவது என்று தீர்த்துக் கொண்டேன். எறிவது பட்டாலும் படாவிட்டாலும் 'எறிதல்' நிகழ்ந்து தானாக வேண்டும். எறிபடுவது என் கையிலில்லை. எறிவது என் கையில். எறிந்தால்தான் அந்த மெலிந்த காகத்திற்காய் என்னுள் வளர்ந்திருக்கும் கோபம் சற்றாவது தணியும். என் உணர்வுகளை என்னுள் அடைத்துப் பாதுகாக்க என்னால் முடியாது. முழுப் பூசணிக்காயை ஓர் அகப்பைச் சோற்றில் மறைப்பது போல அல்ல இது. நெருப்புப் பொறியைப் பஞ்சின் பக்கத்தில் சேர்த்து வைப்பது போல. என் உணர்வுகள் வெளிப்பட்டு எந்த ஒரு வடிவையாவது பெற்று என்னை விட்டு அகல நான் நிச்சயம் எனக்கு உதவி செய்து தானாக வேண்டும். அவற்றை நிர்த்தாட்சண்யமாக எந்த ஒரு போலிக் காரணத்திற்கும் மறுத்து விடுவதில் என் மனத்தைக் குப்பை கூளங்களின் மடுவாக என்னால் ஆக்க முடியாது. எனவே, நான் எங்காவது அந்தத் தடியை எறிந்து என் உணர்வை ஒரு வழியில் கைகொடுத்து உதவ வேண்டும். அரசியல் எதிரியை அவமதிப்பதற்கு அவனுக்குக் கொடும்பாவி கட்டிச் சித்திரவதை செய்வது போல. உடலளவில் தொடர்பு கொள்ள முடியாமற் போகும் ஓர் இயலாமைக்காக மனத்தளவில் வேண்டியவரோடு சல்லாபம் புரிந்து மன இச்சைக்கு உதவி செய்வது போல. மனிதனில் பாசம் வைக்க மனமில்லாத போது பிராணிகள் வளர்த்து அநுசரிப்பது போல.

நான் மிகவும் நிதானித்து என் காகம் பறப்பதற்கு அவகாசம் கொடுக்குமளவில் நின்று தடியை வீசினேன். மனத்தின் எங்கோ ஒரு சதுக்கமான மூலையில் ஆரவாரமின்றி உதித்த என் எதிர்பார்ப்புதான் நடந்தது. தலையிலடிபட்டுக் காகம் கிறுகிறுத்து விழுந்தது. எனது இருதயம் வெளியேற்றிய வியாகுலப் பெருமூச்சில் காகத்திற்கு அடிபடுவதை நான் கொஞ்சமும் விரும்பியிருக்கவில்லையென்றே தோணிற்று. என் கண்களில் நீர் கசிந்தது. விசித்து அழ எனக்கு வராது. விக்கலையும் விழுங்கி என் அழுகையையும் என்னுள்ளேயே ஆக்குவதுதான் எனக்குப் பழக்கம். ஏனோ நான் அழுதேன். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்த காகத்தைக் கொண்டு வந்து கோப்பையிலிருந்த தண்ணீரை அதில் தெளித்து மூடுவதற்கு ஏதும் அகப்படாததில் நானே நின்று என் சீலையால் மூடினேன். இப்படிச் செய்வது எதற்காக என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படிச் செய்வதைப் பல முறை கண்டிருக்கிறேன். அதனால் தான் நான் இயல்பூக்கத்தால் தொழிற்படுவது போல சற்றும் யோசியாமல் தொழிற்பட்டேன். அதிலுள்ள உண்மைகள் என்னவென்று உண்மையில் எனக்குத் தெரியாவிட்டாலும் அதில் உண்மைகளே இல்லை என்று சொல்ல எனக்குத் தெம்புதர வேறு மாறான உண்மைகள் என்னிடமில்லை. தன் வருத்தம் சுகமானால் சரி என்பதற்காக எந்த விதமான அர்த்தங்களுமற்ற மூட நம்பிக்கைகளையும் விசுவாசிக்கும் ஒரு சராசரி மனிதனாய் நானும் என் பரிதாபத்தைப் பெற்றுவிட்ட காகம் மயக்கம் தெளிந்து பழையபடி ஆகவேண்டுமென்பதற்காய் சும்மாவே செயல்பட்டேன். ஒரு வேளை உண்மைகள் ஏதாவது இருந்து விட்டால் என்ற பயம் எழுந்ததற்காகவும் செய்தேன். நான் அதிக நேரம் அந்தக் காகத்தை என்னுள் வைத்து நின்று விட்டதாகத் தெரிந்ததும் அதை வெளிப்படுத்தக் கவனமாக விலகினேன். காகம் விறைத்துக் கிடந்தது. சரிதான். அதன் உயிர் என்னாலேயே அறுதியாக்கப்பட விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததும் நாம் மிகவும் சஞ்சலமானேன். எல்லா அசைவுகளையும் தரிப்புகளையும் போல காகம் இறந்ததும் ஏற்கனவே பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்படும் எண்ணம் கர்த்தரின் சிந்தையில் தெரிந்த அன்றே - தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒன்றாக இருக்குமானால் அதனை மாற்றக் காகத்தைப் போலவே ஆனால் காகத்திலும் சித்ரவதை கூடிய படைப்பில் ஒரு வனான என்னால் என்ன செய்து விட முடியும். நான் அழுந்த வருந்தினேன். நான் வருந்தியும் ஆக வேண்டும் என்பதும் அந்தத் 'தெளிவான புத்தகத்தில்' எங்கோ ஒரு குறிப்பில் உள்ள வாசகம்தானா? அதனால்தான் அந்தக் காகம் அப்படி நின்றதா? அதன் ஆத்ம துடிப்பை, எச்சரிக்கையை, இறுதி மூச்சுகளைப் புரிந்தும், எமன் உருவில் என்னை அறிந்து கொண்டும் தனது ஊழியை நீட்டிக் கொள்ளச் சக்தியற்று சற்று முன்னால் என் முன்னே நின்ற இக்காகத்தின் நிலையை என்னால் அட்சரம் ஒன்று கூட விடாமல் இன்னும் பார்க்க முடிந்தது. நான் அதைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு வந்து அமர்ந்தேன்.
 
என் மனோ நிலை விகாரப்பட்டு வெறி கொள்வது எனக்கு ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. நான் என் பிரச்னைகட்கு முடிவுகளை எடுக்காத ஒரு மத நிலை இது. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. விவாத மேடைகளும் ரணகளங்களும் பிரளயங்களும் மனத்தைத் தம்போக்கில் நிர்ணயிக்கத் தலைப்பட்டன. நெஞ்சு, கதிரவன் போல அனந்த எண்ணக் கதிர்களுக்கு ஆரை தந்த மையமாயிற்று. நான் தலையைப் பாங்கு பாவனையறியாதவன் போல் அழுத்தமாய்ச் சீய்த்துக் கொண்டேன்.
 
அது என் தடியினால் இறக்குமென்று நான் தெளிவாக எதிர்பார்த்தே இருக்க வேண்டும். என் மன உணர்வுகட்கு உதவி செய்வதை இன்னும் அபாயமற்ற முறையில் முயன்றிருக்க வேண்டும். அல்லாமல் போயிருந்த வரையில் நான் அறிவற்றவன் பச்சாத்தாபமற்றவன். என் தவறு எனக்குப் புரிந்தால் சிறப்பு. அது 'பலஹீனமானது' என்று நான் அடக்கிக் கொள்ள முடியாது ஆத்திரப்பட்டது எங்ஙனம் முறையாகும். பலஹீனர்கள் இருக்கக் கூடாது என்பதுதான் எனக்குப் பிடித்த கொள்கையா? எனவேதான் நான் அதன் மேல் ஆத்திரப்பட்டேனா? இல்லை. ஒருபோதும் அப்படி இல்லை; எனக்கு என் ஆத்திரத்திலுள்ள வேறுபாடும் அதன் அடியில் நான் உயிர்களிடத்தில் கொண்டிருந்த கசிவின் இரகசியமும் புரிந்தது. வேண்டுமானால் பலஹீனர்கள் உலகில் நிறைய இருக்கட்டும். அதில் எனக்குப் பிரச்னை அதிகமில்லை. ஆனால் எனக்கு வேண்டியவர்கள் என் உதவி நேரடியாக கிட்டியவர்கள் எவரும் பலஹீனர்களாய் இருப்பதில் எனக்கு எள்ளளவும் பிடித்தமில்லை.
 
காகம் அதி ஜாக்கிரதையாக அதிக விழிப்புணர்ச்சியுள்ளதாயும் இருந்தது அதன் பலவீனமா?... அதுதான் நிஜப்பலம்... இருக்கலாம். சாதாரண ஜாக்கிரதையுணர்வு கொண்ட கூட்டத்தில் ஜாக்கிரதையற்று இருப்பது எப்படி ஒரு குறையோ பலஹீனமோ அது போலத்தான் அதி ஜாக்கிரதையாயிருப்பதும். சராசரியான அறிவு கொண்ட மனித சமுதாயத்தில் அறிவற்றிருப்பதும் அதிக அறிவு கொண்டிருப்பதும் குறையாயத் தென்படுவது போல. அறிவற்ற தன்மையில் தன்னிச்சைப்படி நடந்து கொண்டால் 'பைத்தியம்' என்பார்கள். அறிவு மிக மிகைத்த தன்மையில் சுயேச்சையாய் நடந்து கொண்டால் 'கிறுக்கு' என்பார்கள். அதை போலத்தான் இதுவும். எடுபடாத உண்மை வழக்கத்திலுள்ள பொய்க்குச் சேவகம் செய்வதைப் போல. நிலத்தின் கீழ் வளரும் வேர் தேவையையொட்டி தண்டுப்பகுதியொன்றில் வளர்ந்தால், 'இடம் மாறிப் பிறந்த வேர்' என்று வித்தியாசப்படுத்தப் படுவதைப் போல. தொகைதான் பலம். தொகைதான் வழக்கத்தை நிர்ணயிக்கும். ஆகவே அக்காகம் அழிந்தது சரிதான்!

நான் வாழ்வதைக் கணிதச் சமன்பாடு ஒன்று என்று நினைக்கவில்லை. நான் காகத்தைக் கொலை செய்தது சரியா? கொலை செய்வது சரியா? ஐந்தும் ஐந்தும் பத்து என்பதைப் போல சரியா? அல்லது ஒன்பது என்பது பிழை என்று சொல்வதைப் போலுள்ள சரியா? நாம் நம்மை அறியாது நம்முள் ஏற்பட்டிருக்கும் சில வகையான ரசனைகளைக் கொண்டிருக்கு மட்டும், மனவிகாரங்களைப் பெற்றிருக்கு மட்டும், காரணமற்று எழும்பும் உணர்வுகளின் பக்கம் சாய்ந்து கொடுப்பது இன்னும் இவற்றிற்குச் சமமான பலவீனங்களை அடியோடு கெல்லி அகற்றுமட்டும் வாழ்வது கடைசி மட்டும் ஒரு கணிதச் சமன்பாட்டைப் போன்றதல்ல. எனவே சரியென்றும் பிழையென்றும் ஒன்றுமே கிடையாது. என் காகம் என் எறிக்கு இலக்கானது துரதிர்ஷ்ட வசமான ஒரு கை பிழைபாடு. ஆனால் எறிய வேண்டுமென எழுந்த எண்ணம்? அது திட்டமிடப்பட்டது. சில்லறையான உணர்வின் வழிப்பட்டதில் கேவலப்பட்டதாய் மனம் என்னை நடுச்சந்தியில் நிர்வாணமாய் நிறுத்திய அசூசையுணர்வைத் தந்தது. காகம் கெட்டழிய வேண்டுமென்று விரும்பி நான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. எனது நோக்கு நல்லெண்ண வாய்ப்பட்டதற்றதெனினும் தீய எண்ணத்தின் பாற்பட்டதல்ல. சோரம்போன இந்த உலகில் நிறைய நன்மை தரும் உண்மைகளை அறிந்திருந்தும் தனித்து விடப்பட்டதினால் அவஸ்தையுறுவதை விட ஒரேயடியாச் செத்துத் தொலைப்பது மேல்தான். ஆகவே, மிக விழிப்புணர்வாயிருந்ததற்காய் காகம் அழிந்தது முறை.
 
நான் அக்காகத்தை அநியாயமாக, அது வாழ்வதற்கு வெறுக்கிறதா என்று அறியாதும் கூட இப்படி ஒரு நேரத்தில் இறக்க விட்டது தர்மம்தானா? ஏன் மரண அவஸ்தையில் துடித்த ஆட்டினை ஒரேயடியாய்க் கொன்றுவிடச் சொன்ன மகாத்மாவும் அதன் வலியைத் தாங்க முடியாத அதன் பலவீனத்தை உணர்ந்தும், பின் தன் மனச்சாந்திக்காயும்தானே அப்படிச் சொன்னார். நானும் ஏறக்குறைய அதைத்தானே செய்யும்படி ஆயிற்று.

இருந்தும், நான் காகம் செத்ததை வருந்தினேன். என் மனம் ஒன்றை நினைத்து மிகப் பலமாக வருந்திற்று. நாளை ஒருவேளை என் காகமும் மற்றவைகளைப் போல் வாழ்க்கையோடு போராடும் படிச் சந்தர்ப்பம் கிடைத்து மாற இருக்குமானால்...? என்னை இந்தக் கேள்விக்கு எப்படிச் சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை. ஒரு காரணத்தைக் காட்டி என்னை சாந்திப்படுத்த துடித்தேன்.
 
நாளையே எந்தவித நிச்சயமும் அற்ற போது, நாளை அது திருந்துவது மட்டும் சந்தேகமற்ற நிச்சயமானதாய் விடுமா? 'இருக்கலாம்' என்றே எனக்குப் பட்டது. எதற்கும், எனக்காக வேண்டி 'இல்லை' என்றே சொல்லிக் கொண்டேன்.

***

நன்றி : வேதாந்தி , .எல்.எம். ஹனீபா, ஸபீர் ஹாபிஸ்