Tuesday, March 30, 2021

'கிரணம்’ எழுதிய ஓவியன் - பிரேம்

முகநூலில் நண்பர் பிரேம் எழுதிய பதிவு, நன்றியுடன்...

*


கிரணம் எழுதிய ஓவியன்

'கிரணம்'  காலாண்டிதழ் எனப் பெயரிடப்பட்டு 1987-இல் சாரு நிவேதிதா-சம்யுத்தா (அமரந்தா) இருவரால் வெளியிடப்பட்டது, தில்லி முகவரியில் இருந்து.

அச்சகத்தின் பெயர் அதில் இருக்காது என்பது ஒப்பந்தம்.

அச்சுக்கு வரக்கூடாத எழுத்து என்பது அச்சிட்ட கலைஞரின் கருத்து. 

எப்படியோ அச்சாயின நான்கு இதழ்கள். என் எழுத்துக்காகவே அதனை வெளிக்கொணர்ந்தார் அன்று என் மீது பாசம் கொண்டிருந்த சாரு நிவேதிதா. 

கிரணம் என் வாழ்வின் மருந்தா நஞ்சா என இன்று வரை முடிவுசெய்ய இயலாமல்தான் இருக்கிறேன்.

வாழ்வின் ஒரு பகுதியை இழந்து மனதின் ஒரு பகுதியால் மட்டும் வாழ்ந்து பித்தின் தெளிவோடு பிரதிகளின் பெருங்காட்டில் அலைந்து மீண்டு வர அக்காலம் விதிக்கப்பட்டது.

ஆனாலும் அக்காலம் அன்பால் நிறைந்திருந்தது. அதைவிட பல அன்புகளை விலக்கியும் இருந்தது.

கிரணம் எழுத்து வடிவை இன்று உற்றுப் பார்த்திருந்தேன். கிரணம்-எழுத்து அமைப்பு: ஆபிதீன்.

ஆம், அவர் என்னைப் பொருத்தவரை எழுத்து வடிவம் மட்டுமே. 

கடிதங்கள், கடிதங்கள், ஒரு நாவல்; அரபி எழுத்தின் வரைவு போல கவரும் கையெழுத்து. 

அவரது கடிதங்கள் என ஒரு கட்டுத் தாள்கள். அவற்றைப் படித்து பக்கங்களைக் கலைத்து அடுக்கி குறைத்தும் சிதைத்தும் இரண்டு மூன்று நாட்களில் ஒரு நாவலை தொகுத்து 

"அறிந்தவர்களைக் குறித்து அறியாதவர்களுக்கு" எனப் பெயரிட்டு ஒரு முன்னுரையும் எழுதினேன். அச்சுக்குப் போகலாம் என்ற நிலையில் இருந்தது. அது தடைபட்டது. ஆபிதீன் அதுபற்றி அதிகம் பொருட்படுத்தவில்லை. அதன் முன்னுரை பற்றி "ஏதேதோ சொல்கிறார், அப்படித்தானா" என்பது போல ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக நினைவு.

"எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்ஸி பனியன்களும்" அதற்குள் உருவாகி இருந்தது. அதற்கும் முன்னுரை எழுதி இருந்தேன். கி.பி என இக்காலத்தைக் குறிப்பிடலாம் "கிரணத்திற்குப் பின்". 

இயங்கியல் எல்லாவற்றையும் வழி நடத்தியது. கிரணத்திலிருந்து "நிறப்பிரிகைக்கு" நகர்ந்த  வாழ்வு. இப்போது எல்லாம் நாவலின் பக்கங்கள்தான் ஆனால் நிகழும் போது அப்படியில்லை. அது ஒருபக்கம் இருக்கட்டும், சாரு நிவேதிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டு சந்திப்பே இல்லாமல்  தொலைதூர நண்பர்களில் ஒருவராக இருந்த ஆபீதீனை நண்பர் ஜமாலன் 'புது இல்ல விழா' வில்தான் நேரில் சந்தித்தேன். அதற்குப் பிறகு எழுத்து வழி மட்டுமே. மாயநடப்பியல் போலத்தான் உள்ளது கிரணம் எழுத்து அமைப்பு அளித்த ஓவியர் ஆபிதீன் தொடர்பு. சுயசரிதம் எழுதவே போவதில்லை என்பதால் நாவல் ஒன்றில் வருவார் ஆபிதீன். அந்த நாவலுக்கு அவரிடமே எழுத்து அமைப்பு கேட்கலாம் எனவும் இருக்கிறேன்.

*

நன்றி : பிரேம்

தொடர்புடைய ஒரு பதிவுகள் :

கடிதங்கள் இலக்கியமாகுமா? - முகநூலில் பிரேம்