Tuesday, December 5, 2017

Film : La Ultima Cena (The Last Supper)

La Ultima Cena . கலங்கவைத்த சினிமா. அதிரவைக்கும் உபகதை  42:50 to 46:28-ல் இருக்கிறது. அவசியம் பாருங்கள்.
Thanks to : opensourceguinea.org

Wednesday, November 29, 2017

'இரட்டை இலை' கொண்டாட்டம் - ‘துக்ளக்’ சத்யா

'இரட்டை இலை' கொண்டாட்டம் இப்படியும் நடக்கலாம்  - ‘துக்ளக்’ சத்யா
----------------------------------------------

( இரட்டை இலைச் சின்னமும் கட்சியும் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிக்கே உரியது என்ற தேர்தல் கமிஷன் தீர்ப்பை, அ.தி.மு.க.வினர் அளவாகக் கொண்டாடுவது நல்லது. தலைவர்கள் இப்போது உள்ள மனநிலையில், கொண்டாட்டம் இப்படி முடிந்து விடலாம்.)

எடப்பாடி:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் முடிஞ்ச பிறகு என்ன செய்யப் போறோம்னு ஒரே கவலையா இருந்தது. இனிமே கவலையில்லை. ஆட்சி முடியற வரைக்கும், இரட்டை இலைச் சின்னம் கிடைச்சதைக் கொண்டாடலாம். அவ்வளவு குட்டிக் கதைகளுக்கு எங்கே போறதுன்னுதான் தெரியலை.

மதுசூதனன்:
இரட்டை இலைச் சின்னம் கிடைச்சதிலே உங்களுக்கு என்ன வெற்றி? சசிகலாவுக்கு எதிரா நான் போட்ட வழக்குலே, எனக்கு ஆதரவா தேர்தல் கமிஷன் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அப்ப நீங்க சசிகலா அணியிலே இருந்தவர்தானே?

ஜெயக்குமார்:
ரெண்டு அணிகளும் இணைஞ்சுட்ட பிறகு, நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசக்கூடாது. எங்க அணியிலே நீங்க இருந்ததாலே உங்களுக்கும் சேர்த்து வெற்றி கிடைச்சிருக்குது. நீங்க நாங்கன்னு பேசறதை நிறுத்திட்டு, ஆர்.கே. நகர்லே உங்க வேட்பாளரை நிறுத்தறதா, எங்க வேட்பாளரை நிறுத்தறதான்னு பேசலாம்.

ஓ.பி.எஸ்:
சண்டை வேண்டாம். இரட்டை இலை மீட்பு வெற்றி விழாவிலே எல்லாரும் கலந்துக்கலாம். அரசாங்க வேலை எதுவாயிருந்தாலும் கவர்னர் பாத்துக்குவாரு. ஏதாவது பிரச்சனை வந்தா பிரதமர் பாத்துக்குவாரு. நாம ஏன் மோதிக்கணும்? மறுபடியும் பிரிஞ்சு, பேச்சு வார்த்தை நடத்தி, துணை முதல்வர் பதவியும் போய் நான் சாதா மந்திரி ஆகணுமா?

மைத்ரேயன்:
அணிகள் இணைஞ்சும் மனங்கள் இணையலை. அந்த இணைப்புக்கும் குழுக்கள் அமைச்சு பேசணும்.

செல்லூர்:
மனங்கள் இணைகிறது எப்படி? ஃபெவிகாலைத் தடவிகிட்டு கட்டிப் பிடிச்சா மனங்கள் ஒட்டிக்குமா? 

எடப்பாடி:
பொறுப்பை என்கிட்டே விட்டுருங்க. நான் படிப்படியா வளர்ந்தவன். சின்னம்மா கொஞ்சம் வளர்த்தாங்க, தினகரனாலே கொஞ்சம் வளர்ந்தேன். கூவத்தூர்லே கொஞ்சம் வளர்ந்தேன். கடைசியா ஓ.பி.எஸ்.ஸாலே கொஞ்சம் வளர்ந்து, மொத்தத்திலே எல்லோரையும் விட அதிகமா வளர்ந்துட்டேன். எனக்குத் தெரியாதா, கட்சியைத் எப்படி வளர்க்கணும்னு?

கே.பி.முனுசாமி:
முதல்வராயிட்டோம்னு ரொம்பத் துள்ளக் கூடாது. 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருக்குதுன்னு தேர்தல் கமிஷனே சொல்லிடுச்சு. இதை வெச்சுட்டு ஆட்சியை ஓட்டணும்னா எங்க தயவு இல்லாம முடியாது. நாங்களும் வெளியே போயிட்டா இரட்டை இலை கூட உங்களைக் காப்பாத்தாது.

ஜெயக்குமார்:
என்ன இரட்டை இலையை அவ்வளவு அலட்சியமாப் பேசறீங்க? அம்மாவும் இரட்டை இலையும் பர்கூர்லே தோற்றிருக்கலாம். 1996-லே இரட்டை இலை கேவலமா மண்ணைக் கவ்வியிருக்கலாம். இரட்டை இலை இருந்தும் அப்பப்ப ஆட்சியைப் பறி கொடுத்திருக்கலாம். மற்ற எல்லா சமயங்களிலும் இரட்டை இலைதானே நம்மை ஜெயிக்க வெச்சது?

தங்கமணி:
ஆமா. ஊழல், அராஜகம் ரெண்டும் சேரும்போதுதான் இரட்டை இலைக்கு பின்னடைவு வரும். வெறும் ஊழல் மட்டும் இருந்தா இரட்டை இலை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நாம தாராளமா சந்தோஷப்படலாம்.

மதுசூதனன்:
நாங்க கஷ்டப்படும் போது உங்களை சந்தோசப்பட விட்டுருவோமா? எங்களை விரோதிச்சுக்கிட்டு நீங்க ஆட்சி நடத்திட முடியுமா?

ராஜேந்திர பாலாஜி:
ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லேன்னா கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மோடி பார்த்துக்குவார். தினகரன் அப்பீல் பண்ணாலும் பிரச்னை இல்லை. மேலே இருக்கிறவர் பாத்துக்குவார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்லே பா.ஜ.க. நின்னாக் கூட அ.தி.மு.க.வை மோடி ஜெயிக்க வெச்சுடுவாரு. நாம ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை.

மைத்ரேயன்:
மோடியை எனக்கு நல்லாத் தெரியும். பெருந்தன்மை காரணமா பல விஷயங்களை நான் அவர் கிட்டே சொல்லலை. அதுக்காக எப்பவும் பெருந்தன்மையா இருந்துடுவேன்னு நினைக்காதீங்க. பேசினப்படி செட்டில் பண்ணலைன்னா இப்பவே டெல்லிக்குப் போறேன்.

எடப்பாடி:
எனக்கு மட்டும் பிரதமரைத் தெரியாதா? நாளைக்கே, தமிழக திட்டங்களுக்காக பிரமரை சந்திக்கப் போறேன்னு அறிவிச்சுட்டு, இரட்டை இலை கிடைச்சதுக்காக அவருக்கு நன்றி தெரிவிச்சுடறேன். அவர் ஏமாந்த சமயம் பார்த்து கால்லே விழுந்துடறேன்.

ஓ.பி.எஸ்:
நீங்க டெல்லிக்குப் போனா நானும் டெல்லிக்குப் போகணும். நம்முடைய முதல் எதிரி தினகரன்தான். நாம இல்லாத நேரத்திலே, அம்மா சாந்தி அடைய, ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு அவர் தானம் கொடுத்துட்டா என்ன பண்றது?

செல்லூர்:
அவருக்கு முன்னாலே நாம அ.தி.மு.க. வுக்கு ஆர்.கே. நகர்லே திதி கொடுத்துடலாமே.

ஓ.பி.எஸ்:
அபசகுனமாப் பேசாதீங்க.  அ.தி.மு.க.வுக்கு இப்ப திதி கொடுக்கக் கூடாது. அம்மாவுக்குத்தான் கொடுக்கணும்.

ஜெயக்குமார்:
அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. அம்மா நிரந்தர முதல்வரா இருந்தாங்க. எடப்பாடியாலே அவ்வளவு முடியாட்டாலும் நூறு வருஷமாவது அம்மா ஆட்சியை நடத்த முடியும். அதனாலே, பிரச்னை பண்ணாம தி.மு.க.வையும் தினகரனையும் மட்டும் திட்டுங்க. அதான் நம்ம கொள்கை.

கே.பி. முனுசாமி:
அம்மா மரணம் பற்றி விசாரணை நடக்கிறதை மறந்துட்டுப் பேசறீங்க. நாங்க மனசு வச்சா இப்ப கூட அம்மா மரணத்திலே உங்களுக்கெல்லாம் தொடர்பு இருக்குதுன்னு சந்தேகப்பட முடியும்.

சி.வி.சண்முகம்:
அப்ப முதல்வரா இருந்ததே ஓ.பி.எஸ்.தான். அவருக்குதான் எல்லா உண்மைகளும் தெரியும்னு நாங்களும் விசாரணைக் கமிஷன்லே சொல்ல முடியும்.

மதுசூதனன்:
கூவத்தூர்லே என்ன நடந்ததுன்னு வெளியே சொன்னா, உங்க மானம் கப்பலேறிடும். கூவத்தூர் பாக்கியும் செட்டில் ஆகலை. இணைப்பு பாக்கியும் செட்டில் ஆகலை. காலத்துக்கும் மந்திரிகள் கிட்டே பிச்சை எடுக்கணுமா நாங்க? அம்மா மரணம் தொடர்பா ஸி.பி.ஐ. விசாரணை வெச்சீங்களாய்யா?

கே.பி.முனுசாமி:
சசிகலாவையும் நீக்க மாட்டீங்க. எங்க கஷ்டத்தையும் கவனிக்க மாட்டீங்கன்னா என்னய்யா அர்த்தம்?

தம்பிதுரை:
பேசும் போதே ஏன் கையை ஓங்கறீங்க? அ.தி.மு.க.விலே எந்தப் பிளவும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையா இருக்கோம். அதை ஞாபகம் வெச்சுக்குங்க.

கே.பி.முனுசாமி:
ஊழல் ஆட்சி நடக்கிறதுன்னு அண்ணன் ஓ.பி.எஸ். சொன்னதை மறந்துட்டீங்களா? போனாப் போகுதுன்னு 'எடப்பாடி நல்லாட்சி நடத்துகிறார்'ன்னு வாய் கூசாமா அவர் புளுகினதுக்கு நீங்க காட்டற நன்றியா இது?

சி.வி.சண்முகம்:
அம்மா ஆட்சிக்கு எதிரா சட்டசபையிலே வாக்களித்த துரோகிகளை கட்சியிலே சேர்த்துகிட்டது எங்க தப்பு. நீங்க வெளியே போனாக் கூட கவலையில்லை. மோடி இருக்கார். சட்டசபையைக் கூட்டாமலேயே 2021 வரைக்கும் காலம் தள்ளிவிடுவோம். பார்க்கிறீங்களா?

மதுசூதனன்:
நாங்க மறுபடியும் பிரிஞ்சு, ஆர்.கே. நகர்லே தனியா போட்டியிட்டு ஜெயிக்க முடியும். பார்க்கிறீங்களா?

ஜெயகுமார்:
அறிவோட பேசுங்க. எங்க கூட சேர்ந்த பிறகு உங்களுக்கு என்ன மரியாதை இருக்குது? நீங்க எப்படி ஜெயிக்க முடியும்?

மைத்ரேயன்:
ஜெயா டி.வி.யிலே கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. மனசுலே இருக்கிறதையெல்லாம் பேட்டியிலே சொல்லிட முடியும். மனங்கள் இணையறதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யற வழியைப் பாருங்க. இல்லேன்னா, இரட்டை இலை வெற்றி விழாவை நாங்க தனியாக் கொண்டாடிக்கிறோம்.

எடப்பாடி:
ஏன் இப்படி கோபப்படறீங்க? அம்மா ஆட்சி தொடர்ந்தா, கோடி கோடியா நன்மை. அந்த வாய்ப்பு இன்னும் மூன்றரை வருஷம்தான் கிடைக்கும். அதுவரைக்கும் ஒற்றுமையா இருக்கக் கூடாதா?

ஓ.பி.எஸ்:
நீங்க இவ்வளவு தூரம் சொல்றதாலே, ஆர்.கே. நகர் தேர்தல் வரைக்கும் நாம இரட்டைக் குழல் துப்பாக்கியா செயல்படலாம். அதுகுள்ளே அதிருப்தியாளர்களுக்கு உரிய மரியாதை செய்யலைன்னா, அம்மா சமாதியிலே தியானம் பண்ணிட்டு, தனித் துப்பாக்கி தூக்க வேண்டியிருக்கும்.

*

நன்றி: சத்யா / துக்ளக் (06.12.2017)
தட்டச்சு செய்த நண்பர் தாஜூக்கும் நன்றி

Sunday, November 26, 2017

How to find a Good Painting ? - Tamojit Bhattacharya

Thanks to:   Tamojit Bhattacharya ,  சிபிச்சக்ரவர்த்தி (மணல்வீடு / May 2017)





Monday, November 20, 2017

இஸ்லாம் : கலங்க வைத்த அந்த வாசகங்கள்....

போர்வை பாயிஸ் ஜிப்ரி அவர்கள் எழுதிய இஸ்லாமிய நீதிக் கதைகளிலிருந்து ( Download PDF) ஒரு கதை - பெரும பீத்தகலயங்களுக்கு...
தொடர்புடைய பதிவு :

நன்றி : போர்வை பாயிஸ் ஜிப்ரி , நூலகம்



Saturday, November 11, 2017

உடைப்பு - அமரந்தாவின் சிறுகதை

இம்மாத கணையாழி இதழில் வெளியான தோழி அமரந்தாவின் அருமையான சிறுகதை. ஸ்கேன் செய்து அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி.









நன்றி : அமரந்தா , கணையாழி








Wednesday, November 1, 2017

'திருட்டுப்பொருளும் நேரடி சாட்சியும்' - ஆசிப் விமர்சனம்!

ச்சே, இது தமிழ் இலக்கியம் சம்பந்தப்பட்டதல்ல, 'தொண்டி முதலும் த்ருக்சாட்சியும்' மலையாள சினிமா விமர்சனம் . இங்கே இதைப் பகிர்வதற்கு அனுமதி வேண்டியதற்கு 'அல்லாஹ்வே!! போட்டுட்டேன்ல பக்கின்னு சொல்றத விட்டுட்டு.. இது என்ன புதுசா அனுமதி?? உங்களுக்கு அஸ்மா மச்சிதான் சரி :-) ' என்றார் அட்டகாசமான விமர்சனம் எழுதிய தம்பி ஆசிப் மீரான்!
***


தமிழ் சினிமா காலம்‌காலமாக ஒரு டப்பா நியாயத்தைக் கற்பித்திருக்கிறது. நாயகன் திருடனாக இருந்தால் அவன்‌ திருடனாக மாறியதற்குப் பின்புலம் அமைத்து சூழலால் அவன்‌ அப்படி ஆகிவிட்டான்‌ என்பது போல ஒரு காட்சியில் அதனை நியாயப்படுத்தித் தொலைப்பார்கள். இது போன்ற எண்ணத்தோடு படம் பார்க்கிற கோஷ்டியில் நீங்களும் ஒருவரென்றால் இப்போதே தப்பித்து விடுங்கள்.. இது உங்களுக்கான சினிமாவே அல்ல

ஒரு சின்னத் திருட்டுச் சம்பவம். அதைத்‌ தொடர்ந்து நிகழும் தொடர் சம்பவங்கள். இதுதான் படத்தின் ஒற்றை வரிக்கதை. இந்தக் கதையை எப்படி சுவாரஸ்யமிக்க திரைக்கதையாக மாற்ற முடியுமென்பதில்தான் ஓர் எழுத்தாளரின் திறமை வெளிப்பட முடியும். அதுவே திரைக் காட்சிகளாக அதன் இயல்பு நிலை மாறாமல் விரியும்போது மனதில் நிலைத்துவிடும் படமாக அது நிலைத்து விடுகிறது

பேருந்தில் சங்கிலியைத் திருடி விழுங்கி விடுகிறான் அவன். கடைசி நிமிடத்தில் கூக்குரலெழுப்பி திருடனை அடையாளம்‌காட்டி பேருந்து காவல் நிலையத்துக்கு விடப்படுகிறது. அங்கே நடக்கும் விசாரணைதான் மீதிக்கதை

ஆலப்புழையின் காயலும் நகரப் பாய்ச்சல்களுக்கு ம் காஸர்கோட்டின் வறண்ட தன்மைக்குமான பரந்த நிலப்பரப்பிற்குள் படத்தின் மையச்சரடு

ஒரு விசாரணை எப்படி எவ்வாறு தன்னியல்பில் மாறுகிறது, அது யாரைப்‌ பாதிக்கிறது, அதிகாரத்திற்கு முன் சாதாரணர்களின்‌ விதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது, அதிகாரமே தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எப்படி அல்லாடுகிறது என்று ஏகப்பட்ட விசயங்கள்‌ படம் முழுதும் பரவிக் கிடக்கின்றன ஒரு மெல்லிய கண்ணுக்குப் புலப்படாத நூலிழை போல.

தன்னுடைய சங்கிலி திருடப்பட்டதிலிருந்து காவல் துறையிடம் அந்தச் சங்கிலியைப்‌ பெறுவதற்கான போராட்டம் ஒரு புறம்.. சாதாரணமாக அதை அலட்சியம்‌ செய்யும் காவல் துறையின் அலட்சியம் இன்னொரு புறம், திருடனிடமிருந்து சங்கிலியைப் பெற காவல்துறை நடத்தும் போராட்டம் ஒரு பக்கம், அந்தப் போராட்டத்திற்கிடையில் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள காவல் துறையே படும்பாடு மறுபக்கம் என்று ஓர் எளிய சம்பவம் தேர்ந்த சித்திரக்காரன் வெள்ளைத்தாளில் படம் வரைகையில் உருவாகும் வண்ணக்கலவை போல மெருகேறுகிறது.

நியாயங்கள் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் அதைச் சூழலும் சந்தர்ப்பங்களுமே தீர்மானிக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களது இருப்பை நிலைநிறுத்த அன்றாடம் சமரசங்களைச் செய்து கொள்கிறோம். அந்த சமரசங்களில் நமக்கான நியாயங்களும்‌ சமரசத்துக்குள்ளாக்கப்படுகின்றன. அதுபற்றிய பிரக்ஞை சம்பந்தப்பட்டவர்களுக்கு இருப்பதும்‌இல்லாமல் போவதும்‌கூட சந்தர்ப்ப சூழல்களால் மட்டுமே அமைகின்றன.

இரண்டு பவுன் சங்கிலி என்பது காதலித்து மணந்து கொண்டு ஊரை விட்டு வெகு தூரம் விலகி வந்து தனியாக வேளாண்மை செய்ய முயலும் இளம்‌ தம்பதியர்களுக்கு பெரும் சொத்து. காவல் துறைக்கோ, அதைத் திருடியவனுக்கோ இது ஓர் அன்றாட நிகழ்வுதான். இப்படியொரு சூழலுக்குள் மிக எளிய மனிதர்கள் தள்ளப்படும்போது காவல்துறை அவர்களை எப்படியெல்லாம் தங்கள் வசதிக்கும் இருப்பிற்குமேற்றவாறு மாற்றிக் கொள்கிறதென்பதை இத்தனை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்ல முடிந்திருப்பதுதான் இந்தப் படத்தை சாதாரணப் படங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.

ஷ்யாம் புஷ்கரனின் படம் முழுக்க இழையோடும் எளிய நகைச்சுவை வசனங்கள். சாதாரண திருட்டு வழக்கை வழிப்பறி கொள்ளை வழக்காக ஜோடிப்பதற்காகக் காவல்துறை முனையும் அந்தக் காட்சியின் இயல்பில் தொக்கி நிற்கும் அவல நகைச்சுவை ஓர் அசாத்திய உதாரணம்.

தனக்குக் கிடைத்த தேசிய விருது வெறும் தற்செயல் நிகழ்வல்ல;நல்ல கதாபாத்திரங்களை அனாயாசயமாகச் செய்யும் ஆற்றல் தனக்குண்டு என்பதை சுராஜ் வெஞ்ஞாரம்மூடு நிரூபித்திருக்கிறார். நாயகியாக வரும் நிமிஷா சஜயன் அளவான முகபாவங்களில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். ஃபஹதைப் பற்றிப் பேசவே தேவையில்லை. ஒரு சங்கிலித் திருடன் கதாபாத்திரம். படம் முழுக்க சுராஜ் வந்தாலும் கூட முக பாவனைகளில், உடல் மொழியில், வசனங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ஃபஹத் ஏன் நேசிக்கப்படும் நடிகனாக இருக்கிறான் என்பதை உணர்த்தி விடுகிறார். குறிப்பாக, உச்சக் காட்சியில் நாயகியோடு உரையாடும் காட்சி..அரக்கன்யா அவன். இப்படியொரு பாத்திரத்தில் ஃபஹதை நடிக்க அழைத்த இயக்குனரையா அல்லது அத்தனை‌முக்கியத்துவமில்லையெனினும் துணிந்து இதில் நடித்த ஃபஹதையா...யாரைப் பாராட்டுவது? மலையாள சினிமாவைப் பார்த்தால் பொறாமை வர இது போன்ற முயற்சிகளே காரணமும்‌கூட.

துணை காவல்‌ஆய்வாளராக வரும் அலன்சியர் வாழ்ந்திருக்கிறார். சூழல்களுக்கேற்ற மாறும் அவரது கதாபாத்திரத்தை அவ்வளவு அழகாக உள்வாங்கிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் மனிதன். அவரது தொப்பை மேலும் மெருகூட்டியிருக்கிறது இந்தக் கதாபாத்திரத்தை.

ஆலப்புழையின் நகர்க்கோலங்களையும் காயல் தீரங்களையும் காஸர்கோட்டின் வறண்ட நிலப்பரப்பையும் அழகுற உள்வாங்கிய அதே சிரத்தையோடு காவல் நிலையத்தின் உட்புற வெளிச்ச அசைவுகளையும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி

பிஜிபாலின் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி படத்தின் தேவையை மனதிற்கொண்டு அந்த அளவோடு உருவாக்கப்பட்டிருக்கின்றன

சஜீவ் பாழூரின் திரைக்கதை சம்பவங்களை அடுக்கடுக்காக நெய்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு கதாபாத்திர உருவாக்கத்திற்காகவும் அவர் மெனக்கெட்டிருப்பது சிறப்பான நடிகர்கள் தேர்வின் மூலம் இன்னும் சிறப்பாக்கப்பட்டிருக்கிறது.. ஊரில் திருவிழா முடியும்வரை குடித்து அழிச்சாட்டியம் செய்யும் கணவனை காவல் நிலையத்தில் வைத்திருக்கச் சொன்ன மனைவிக்காக சிறையிலடைக்கப்படுபவன் காவல்‌நிலையத்தில் நடப்பவைகளின் சாட்சியமாக மாறுவது போன்ற யதார்த்தமான கதைமாந்தர்கள் படத்தின் மற்றொரு சிறப்பு.

மஹேஷின்டெ ப்ரதிகாரத்தில் இடுக்கியின் பின்னணியில் கதை புனைந்த இயக்குனர் திலேஷ் போத்தன் இம்முறை தென் கேரளத்தில்‌தொடங்கி வடகேரளத்தின் கிராமத்தின் பின்னணியில் இதனை உருவாக்கியிருக்கிறார். மலையாள நவீன சினிமாவின் ரசிக்கத்தக்க ஓர் அடையாளமாக மாறியிருக்கும் இவரிடம் சினிமா என்ற காட்சி ஊடகம் பற்றிய தன்னுணர்வு நிறைந்திருப்பதை உணர முடிவது நம்பிக்கையளிக்கிறது.

படத்தின் உச்சகாட்சியை இப்படி வைக்க முடிந்த அவரது தன்னம்பிக்கை அவர் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது

நல்ல சினிமா பார்ப்பதில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் இதனைப் பாருங்கள். நான்தான் நேரடியான சாட்சி.
*

நன்றி : ஆசிப் மீரான்

Monday, October 30, 2017

நாகூர் ரூமிக்கு ஒரு கடிதம் (Dec'1995)

அமைதியாக எழுதும்போது ஆபிதீன் கையெழுத்து எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சான்று ! 'ரியாலத்' (ஆன்மீகப் பயிற்சி) சம்பந்தமாக நண்பர் ரஃபிக்கு - டிசம்பர் 1995-ல் எழுதியது. கடிதத்தின் பின்னணி ஓவியமாக இருப்பது - நான் வரைந்திருப்பது - எங்கள் ஹஜ்ரத். 'மீண்ட பொக்கிஷம்' என்ற தலைப்பில் ஒரு பதிவாக ரஃபி அவருடைய வலைப்பக்கத்தில் முன்பு இதைப் பகிர்ந்திருந்தார். எதற்கும் இங்கேயும் போடுகிறேன் :) - AB

இமேஜைப் பெரிதாக்க இங்கே 'க்ளிக்' செய்யவும்

தொடர்புடைய பதிவு :
நாகூர் ரூமியின் கடிதம் (2000)

Thursday, October 12, 2017

Anukul - A Short Film by Sujoy Ghosh

What happens when a machine starts questioning our ways of the world? Watch the gripping tale of ‘Anukul’ by Sujoy Ghosh based on Satyajit Ray’s short story.

*
கூகுள் ப்ளஸ்ஸில் சில தினங்களுக்கு முன்பு நண்பர் சுரேஷ் கண்ணன் எழுதியது : 

நண்பர் Anand Raghav மூலம் இந்தக் குறும்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. He made my day. சத்யஜித்ரே எழுதிய அறிவியல் புனைவு சார்ந்த சிறுகதையை அபாரமாக இயக்கியிருக்கிறார் சுஜாய் கோஷ்.

மனிதனா, மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திரமா, யார் சிறந்தவர் என்கிற தத்துவார்த்தமான கேள்விக்கு விடை காண முயற்சிக்கிறது குறும்படம். ஐசக் அசிமோவ் போன்றவர்கள் எழுதிய அபுனைவுகளிலிருந்து தமக்கான தாக்கத்தை சத்யஜித்ரே பெற்றிருக்கக்கூடும் என்றாலும் கீதை சொல்லும் தத்துவத்தின் மேல் நின்று இதிகாச பின்னணியில் அவர் இந்தச் சிறுகதையை எழுதியிருப்பது பிரமிக்க வைக்கிறது.

ரோபோ என்பதற்காக நுட்பங்களை இறைத்து எவ்வித கோணங்கித்தனங்களையெல்லாம் செய்யாமல் இயல்பான ஒரு கோயிஞ்சாமியை உலவ விட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

சவுரப் சுக்லா போன்ற நடிகர்கள் ஒரு படைப்பை மேலதிக உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். இனி ரேயின் சிறுகதையை தேடி வாசிக்க வேண்டும். அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் குறும்படம்.
*


Thanks to : Suresh Kannan & LargeShortFilms

Thursday, October 5, 2017

அரஸ் கார்ட்டூன் !

ஃபேஸ்புக்கில் பார்த்த இந்தக் கார்ட்டூன் செம்மயாக இருந்தது. கமெண்ட்களும் கலக்கல். பகிர்கிறேன். நன்றி : அரஸ்

Thursday, September 28, 2017

சூஃபி 1996 – துபாய் டைரிக் குறிப்புகள் (14)


அத்தியாயம் 14

ஆபிதீன்

*
25/5/1996

Relaxation-1 கேஸட்டிலிருந்து. ('SS'ன் ஆரம்பம் 25 வருடங்களுக்கு முன்பு இருக்கிறது..!)

சர்க்கார் :
'சங்கடப்பட்ட, வேதனையான சூழல்லெ நான் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டிக்கிறேன். நான் பண்ணுனது எதுக்குண்டா சக்தியை வளர்க்குறதுக்குலாம் அல்ல, என் வேதனையை குறைக்கிறதுக்கு. எனக்கு அப்ப leisurely time நிறைய கிடைச்சிச்சி..காரணம் எனக்கு வேலை எதுவும் கிடையாது. ஃபுல் டைமும் leisure-லெ இருந்த காரணத்துனாலே அது தூக்கத்துக்கு வந்திச்சி.. என்னாலே தூங்க முடியலே.. 24 Hours..ப்யூர் நெகடிவிடி... லைஃப்லெ எனக்கு ஏற்பட்ட வேதனை, ஆக்ஸிடெண்ட்...  இதை மாத்துறதுக்கு நான் ரிலாக்சேஷன் பண்ண ஆரம்பிச்சேன். சக்தியை திரட்ட அல்ல. திரட்ட முடியலே என்னால. ஏன்னா, ரிலாக்சேஷனுக்கு ஒரு purpose வேணுமில்லே? அது என்னெட்டெ இல்லே. என்னை மறந்தா போதும். குடிச்சா மறந்துடுலாம். ஆனா அதுக்கு நான் ரெடியா இல்லே. தப்புத்தவறு செய்யவும் நான் ரெடியா இல்லெ. அந்த வகையிலெ ஆரம்பிச்சதுதான் இந்த சிகரெட். அது ஒரு சின்ன பழக்கம். அதே சமயத்துலே அது ஒரு பயங்கரமான பழக்கம். அப்ப... அந்த ரிலாக்சேஷன் பயிற்சி பண்ணுறேன். பண்ணிப்பண்ணிப் பாக்குறேன், வரலே. அந்த Devine Force அப்ப work பண்ணுனிச்சி. எனக்கு காட்டுது. அந்தக் கனவை நான் அப்புறம் சொல்றேன். அந்த still small voice என்னெட்ட பேசுது.. 'நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்க, ஒரு மாத்திரை வேண்டும்டா போட்டுக்க'ங்குது.. நான் நினைக்கலே; அது சொல்லுது. நெனைப்பு வேறே அது சொல்லுற சொல்லு வேறேண்டு அனுபவத்துலேதான் தெரியும். நல்லா தெரியும், ரொம்பத் தெளிவா தெரியும். தான் பெத்த புள்ளைய என்னா டிரெஸ் மாத்திப் போட்டாலும் எப்படி அப்பனுக்கு தெரியுமோ அப்படி. தூங்கினாபோதும் நல்லதுங்குது. தூக்கம் வரமாட்டேங்குது ஆனா..இப்படியே ரெண்டுமாசம் செய்றேன். இந்த அவதிக்கு மத்தியிலே , திடீர்ண்டு ஒரு நாளு கனவு காணுறேன். ரிலாக்சேஷனுக்கு அரபிலெ 'துமானி நிய்யத்'துண்டு பேரு. அங்கே பாரு.. 'துமானி நிய்யத்' இக்கிதுண்டு என் உஸ்தாதுமார்கள்  காட்டுறாங்க. அதாவது அவங்க குரல் அப்படி கேட்குது..

ஒரு ஆறு ஓடுதுங்க.. ரொம்ப தெளிவான ஆறு.. ஓடுற ஓட்டம் கூடக் குறைவில்லாம , ஒரேமாதிரி ஓடுது. ஒரேமாதிரி சத்தம்.. சலசலங்கிற சத்தம்.. உள்ளே மீனுடைய எத்துக்குத்தான ஓட்டம் கிடையாது.. கண்ணாடி..ப்யூர் கண்ணாடி.. கிரிஸ்டல் க்ளீயர்..! ரொம்ப ஆழமா தெரியுது.. அதுல குளிக்க வாய்ப்பு வசதி இருக்குது.. 'தோண்டி' இருக்குது..குடம் இருக்குது, ஒரு வாளி இருக்குது..ஆனா யாருமே குளிக்கலே.. குளிச்சா அவங்க அசைவாலே எனக்கு டென்சன் ஏற்படலாம். அதுக்குப் பின்னாலே ஒரு மலை இருக்கு.. பசுமையான மலை.. அதே நேரத்துலே மலைக்குப் பின்னாலே சூரியன் உதயமாயிக்கிட்டு இருக்குது.. அந்த still small voice அப்ப சொல்லுது.. 'உனக்கு காலையிலே குளிச்சாலும் குளிராது..!' . அது என் வாய்ஸ்தானே, என்னட்ட உள்ளதுதானே.? நான் காலையிலே குளிக்க மாட்டேன்லெ, பகல்லெதானே? , அதுக்கு வேற காரணம் , அதுக்கு சொல்லுது அப்படி! நான் போயி குளிக்கிறேன். மெதுவா இறங்கி - 'கை காலு எல்லாம் புண்ணாயிருந்தா எப்படி அசைவியோ அப்படி அசைச்சிக்கிட்டு குளத்துலே இறங்கு'ங்குது. முக்குளி போடுறேன். தலையைத் தூக்கி சூரியனைப் பாக்குறேன். அது கிராஜுவலா உயரமா போவுது. 'மலையைவிட்டு ஒரு ஜான் உயரம் அது வந்த உடனேயே கரையேறிடு'ண்டு அவங்க சொல்றாங்க.. கனவுதான் எல்லாம். ப்யூர் கனவு. கனவு முடியிற வரைக்கும் க்ளீயரா தூக்கம் கலையாம இருந்ததுக்கு நான் பாக்கியம் செஞ்சதாத்தான் நான் நினைக்கிறேன். உடம்புலெ ஜில்லாப்பு.. சூரியன் கொஞ்சம் கொஞ்சமா மேலே ஏறிக்கிட்டு வருது. ஒரு ஜான் வந்துடிச்சி.. அப்ப அந்த ஆர்டர் வந்துடிச்சி..

இது கனவுதான்..ஆனா இதெ கனவாக நான் சொல்லலே.. ஆர்டராகத்தான் சொல்லுறேன். ஆர்டர் ஆக ஏற்றுக்கொண்டேன். ஆர்டர்தான் இது, எனக்கு நல்லாத் தெரியும். உங்களுக்கு அனுபவம் வரும்போது இது கனவல்ல, ஆர்டர்தாங்குறது தெரியும். தூக்கமும் விழிப்புமில்லாத நடுநிலையிலே பேசப்பட்ட தெய்வவாக்கு இது..

'ஒரு முக்குளி போட்டுட்டு கரையேறு'ங்குது.. ஏறுன உடனே முழிப்பு வந்திடிச்சி..நான் என்னெத்த தேடுனேன் தெரியுமா? தலையைத் துவட்டுறதுக்கு துவாலையைத் தேடுறேன் நான்..!

என்னெப்பொறுத்தவரைக்கும் கனவுலெ ஒரு காட்சி வந்தா நான் லைஃபாகவே நெனைப்பேன் நான். கனவுலெ ஒரு பொருளைப்பார்க்க ஆசைப்பட்டேண்டு சொன்னா அந்த இடத்துக்கு கனவுண்டு தெரிஞ்சிக்கிட்டே போவேன் நான், என் அனுபவத்துலே..! கனவுண்டு நெனைச்சா உங்களுக்குலாம் கலையும். எனக்கு கலையாது. இது கனவுதான் , இப்ப முழிக்கனும்டு நெனைச்சா என்னாலே முழிக்க முடியும். கனவுலேயே எந்திரிச்சி வந்து அப்படியே மணி பார்க்க முடியும் என்னாலே..அங்கேர்ந்து நாவப்பட்டினம் வந்து நீங்க என்னா செய்யிறீங்கண்டு என்னாலே பார்க்க முடியும்.. அமெரிக்கா போவனும்டா அமெரிக்கா போவலாம். கனவுண்டு புரிஞ்சிக்கிட்டோமுலெ?! எனக்கு கலையாது.. கண்டினியூ ஆவும்.

ம்.. துவாலையைத் தேடுறேன் நான்! கனவா நான் காணலே. Actually மேலுலாம் ஜில்லுங்குது.. இன்ஸ்ட்ரக்சன் எப்படி கிடைக்கிதுண்டு பாருங்க! எனக்கு எந்த கதியும் கிடையாது, நிர்க்கதியா உள்ளவன், நான் அனாதை. எங்க உஸ்தாதுமார்கள் கொடுத்ததை வச்சித்தான் நாங்க செய்யமுடியுமே தவிர நான் சொல்றமாதிரி எங்களுக்கு அவங்க சொல்லலே. கனவுதான் எங்களுக்கு அஸ்திவாரம். அதனாலேதான் தூங்குற இடத்துலே நான் யாரையும் நெருங்க விடுறதில்லே..ஆங்.. இந்த கனவு.. கிரிஸ்டல் க்ளீயரா தெரியுது. முழிச்ச உடனேயே ..., 12 மணிக்குதான் குளிப்பேன்.. மனசு வரமாட்டேங்குது - அதுதான் காத்தால குளிச்சிடோமேண்டு நெனைப்பு வருது.. ரிலாக்சேஷன் தேவையில்லேங்குற மாதிரி Body அவ்வளவு லேசா, ரிலாக்ஸ்டா இருக்குது..அப்ப என் கூட்டாளிலுவ சொன்னானுவ.. 'என்னா சர்க்கார்.. முகம் ஒரு மாதிரியா தெளிவா இக்கிது?!' ண்டு. ஒரு சந்தோஷமும் இல்லே, இந்த கனவுதான் காரணம்! அப்புறம் அடுத்த தடவை டென்சன் வந்தப்ப ரிலாக்சேஷன் பண்ணும்போது இந்த காட்சி வந்துச்சி ' இதெ பண்ணுடா'ண்டு. படுத்துக்கிட்டேன். தன்னை மறந்தேன், காலை மறந்தேன், கையை மறந்தேன், கம்ப்ளீட்டா என்னையே மறந்தேன். நான் அல்ல இப்ப, என் Body.. என்னை வுட்டு வெளிலே வந்து தனியா என் Bodyயை உத்துப்பாத்தேன். 'தூங்குனானா அப்துல் வாஹிது?' நானே பாக்குறேன்.. ரிலாக்ஸ்டா இக்கிறான்.. மறுபடியும் bodyயிலே நானே புகுந்துடுறேன். புகுந்த உடனே அந்த ஆறு வருது.. மெதுவா தண்ணிக்குள்ளே இறங்குறேன்.. காலுலேர்ந்து எனக்கு ஜில்லாப்பு ஏறுது.. முழங்கால்.. அப்புறம் இடுப்பு.. நெஞ்சுக்கு ஏறுது.. அப்புறம் கையை நனைக்கிறேன். முக்குளிவிட்டு ,மெதுவா எந்திரிச்சி , கண்ணை தொறந்து பாக்குறேன்.. பச்சை பசுமையான மலை தெரியுது.. சூரியன் உதயமாயிக்கிட்டிக்கிது..எப்படி கனவுலெ கண்டேனோ அதை கற்பனை பண்ணிக்கிட்டேன்.. Immediate ரிஸல்ட் கிடைச்சிச்சி எனக்கு. இந்த செய்தியை டைரிலெ குறிச்சி வச்சிக்குங்க.. ஒரு டைம்லெ நான் சொல்லுவேன் ரிலாக்சேஷனுக்கு. இத யூஸ் பண்ணுங்கம்பேன்..' - 'S'
*

'மனுஷன்ட்டெதான் நெகடிவிடி இக்கிதுண்டு நெனைக்காதீங்க நீங்க. ஒவ்வொரு பொருளிலுமே நெகடிவிடி இக்கிது. ஆத்துலெ உள்ள நெகடிவிடி வேற. மிருகம் குடியிருந்த கொட்டாயின் நெகடிவிடி வேற.. தப்புத்தவறு செய்யிற மனுஷன் குடியிருந்த வீட்டோட நெகடிவிடி வேற.. ஞானிகள் அடக்கமான ஸ்தலத்தினுடைய பாசிடிவிடி வேறே.. அப்படி பார்க்கப்போனா எல்லாப் பொருள்களிலேயுமே வைப்ரேசன் இக்கிதுண்டு நான் சொல்ல வர்றேன். சூரியனிலுள்ள வைப்ரேசன், பச்சைப் பசுமையான மலையிலுள்ள வைப்ரேசன், நீரிலுள்ள வைப்ரேசன் அனைத்துக்கும் மேலே எங்க குருமார்கள் கொடுத்த ஃபோர்ஸ்.. எல்லாம் சேர்ந்து வொர்க் பண்ணும்' - 'S'
*
27.05.1996

நாளை இந்திய அரசு கவிழும் என்கிறது சேன்னல்33. பி.ஜே.பி கவிழும். ஹாங்காங்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்களின் ஊடுருவல்களை ஆஸ்திரேலிய அரசு துவம்சம் செய்கிறது.. சோதனைகளின் தொடர்ச்சியாக நாளைய டி.வியில் முக்தார் அப்பாஸ் கவிழ்ந்ததையும் காட்டுவார்களா? அல்லது கம்பெனி அந்த ஹாங்காக் படகுகள் மாதிரி திசைதெரியாமல் இருத்தலில் வாழுமா? நான்கு முதலாளிகளும் ஒரு வருடப் பிரிவிற்குப் பிறகு இன்று ஒன்றுகூடினார்கள். தலை யாருக்குப் போகும், கை கால்கள் யாருக்குப் போகும் என்பது புரியவில்லை - அந்த சூடான பலுச்சி பாஷையில் . நான் பேசாமல் இறங்கி வந்துவிட்டேன். ஏழரை மணிக்கு. மொயீன்சாஹிப் இருந்தார் மேலே. அனைவருக்கு 'சஹி பாத்ஹை' சொல்ல அவர்தான் சரியான ஆள். அதனால்தான் மேனேஜர்? கிழே வந்தபிறகுதான் நினைப்பு வந்தது. 'அடடா..தண்ணீர் பாட்டிலை ஆஃபிஸ் கிச்சனிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டோமே.. மறுபடி மேலேபோனால் அந்த கூட்டத்திடம் மாட்டிக்கொள்வோமே' என்று நினைத்த அடுத்த நொடியில் டிரைவர் ஜாவித் வந்தான். ஸ்க்ரேப் எடுக்க நாளை அபுதாபி அவன் போகிறானாம். நாங்கள் பஸ்ஸில் 'தேரா' போய் வந்து கொள்ளவாம். இதைச் சொல்லத்தான் வந்தானாம். 'ஜாவேத்.. மேலே ஃப்ரிட்ஜில் தண்ணீர் பாட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்' - தயங்கிச் சொன்னேன். ஜாவேதும் பட்டான்தான். ஒரு அடிமை மாதிரி பவ்யத்துடன் மேலே ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து என் கையில் கொடுத்துவிட்டு மறைந்தான். தண்ணீர் பாட்டிலுக்கு முன் , ஆசைப்பட்ட ஒரு கேமராவும் கிடைத்தது. சென்றமுறை ஊர்போகும்போது 'Canon' வாங்கிப்போயிருந்தேன். அதன் ஆட்டோஃபோகஸ் திறனும் Mutiple Explosure வசதியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் லென்ஸுக்கு என்னைப் பிடிக்கவில்லை போலும். ஊரில் பழிவாங்கிவிட்டது , செலவு வைத்து. ஒரு Full Manual Camera வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். Canon ரிப்பேர் செய்தவர் , நான் சொன்ன pentax K1000ம் குப்பைதான் என்றார். Nikon FM2 உட்பட இப்போது - முக்கியமாக துபாயில் - China Makeதான் கிடைக்கிறதாம். இதற்கு கொள்ளை மலிவாக Zenith வாங்கிவிடலாம் பேசாமல். அதுபாட்டுக்கு கிடக்கும். அனீஸின் பேரன்கூட யூஸ் பண்ணிக்கொள்ளலாம் ஊரில். அல்லது பூவூர் மாமாவிடம் எடைக்குக்கூட விற்றுவிடலாம். ஆனால் திரும்பி வந்துபார்த்தால் ரஷ்யர்கள் உஷாராகி இருந்தார்கள். தம்பி ஹலால்தீனிடம் ஒன்று இருந்தது. கேட்டேன். கொடுக்கவில்லை. இது இந்த மாதத்திற்குள் என் ரூமில் இருக்கவேண்டும் என்று நினைத்தேன். இன்று ஹலால்தீன் ஃபோன் செய்து அந்த Zenithஐ எடுத்துக்கொள்ளச் சொன்னான். அவன் வேறு ஒரு நல்ல கேமராவாங்கப்போகிறானாம். Hasslebladஐ எல்லாம் அவனுக்கு சொல்லமுடியாது. Minolta X700 வாங்கு என்று சொன்னேன்.

'சரி, Zenithக்கு 100 திர்ஹம் கூட என் கையில் இல்லையப்பா..'

'வச்சிக்குங்க நானா!'

அது என் பொருள் ஹலால்தீன், நான் பார்த்து ஆசைப்பட்ட மாத்திரத்திலேயே! அந மர்கஜ் உல்.....

Canonஐ கொடுத்துவிட்டு அவனது கம்ப்யூட்டரை வாங்கிக்கொள்ளலாமா?! - என் புது யோசனை!
*

28.05.1996

முஸ்லீம்களுக்குத்தான் எவ்வளவு கொண்டாட்டம், வாஜ்பாய் ராஜினாமா கொடுத்ததில்! பர்துபாய் டெக்ஸ்டைல் பஜாரின் சிந்திகள், பாப்ரிமஸ்ஜித் இடிக்கப்பட்டபோது பகிர்ந்துகொண்ட லட்டை நினைத்துக்கொள்ளலாம் இப்போது. அவர்களும் அப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொள்ள வேண்டியதில்லை. அரசுதானே மாறியிருக்கிறது. அரசியல் அல்லவே! ஆகவே சகோதரர்களே... அடுத்த செங்கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த முஸ்லீம்களுக்கும் ரசனை உணர்ச்சியே கிடையாது. ராமருக்கு தொப்பி வைத்தால் நன்றாகத்தானே இருக்கிறது! மாற்றங்கள் இந்தியாவில் வரலாம், முக்தார் அப்பாஸில் வராது. நேற்றைய கூட்டம் ஊரின் விசாரணைக் கமிஷன்கள் மாதிரி ஆகிவிட்டது. முடிவு இல்லை. அதனால்? கம்பெனி 
அப்படியே ஓடும்.

'எதுவரைக்கிம் மொயீன்சாஹிப்?'

' பஸ்..குதா ஜான்த்தாஹை!'

அல்லா , அறிந்தவன்தான். 'அல்லா இல்லை' என்று சொல்லிக்கொண்டிருந்தவன் - சௌதியில் பட்ட அடியில் மாறி, துபாய் விசா பிரச்சனையில் தொழ ஆரம்பித்த என்னை அறிந்தவன். 'நான் திருந்திவிட்டேன்' என்று சொல்லும் சர்க்காரையும் அறிந்தவன். ஆனால் சர்க்கார் யாரையும் தொழவேண்டாம் என்று சொன்னதில்லை. தானாக திருந்தட்டும் என்று அல்ல! சர்க்காரின் ரியாலத்துகளில் இருந்துகொண்டு அதற்கு நாலுமடங்கு குறைவாக மனசைக் கூராக்கும் தொழுகையைக் கண்டு சில நாட்களாகக் குழப்பம். இன்று பகல் ரிலாக்சேஷன்-2 கேஸட்டைக் கேட்டு தெளிவடைந்தது மனசு.

இபாதத் :

'மனுஷன் செய்ற எல்லா செயலும் 'இபாதத்'தான். அல்லாஹூத்தஆலா சொல்றான்,' என்னை வணங்குவதற்காகவே மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்'ண்டு. ஜின்னைப் பற்றி நமக்குத் தெரியாது, சின்ன ராவுத்தரைப்பற்றித்தான் நமக்கு தெரியும். நாம மனுஷனைப்பத்தி பேசுவோம். அவன் தப்பு செய்ய முடியாதுல்ல? முடியுமா முடியாதா? அவன் ஏமாறுவானா?' - 'S'

'ஏமாற மாட்டான்'

'இப்ப நான் கேட்குறேன். வணங்குவதற்காக மனிதனைப் படைத்தேண்டு அல்லாஹுத்தஆலா சொன்னபிறகு மனுசன் வணங்காம போனா எதுக்காக படைச்சானோ அந்த purpose நிறைவேறவில்லைண்டுதானே அர்த்தம் ? எந்த நோக்கத்துக்காக படைச்சானோ அந்த நோக்கத்துலே அவன் ஏமாந்துட்டான்னுதானே அர்த்தம்ங்க?'

'அவன் ஏமாந்தாண்டு சொல்ல முடியாது. இவன் ஏமாத்துறான்'

'அப்ப, அல்லா ஏமாந்துட்டான்லெ?! அமைதியா யோசனை பண்ணிப்பாருங்க. அப்ப என்னா அர்த்தம்? அவன் திறமைசாலிண்டா எவனாலேயும் ஏமாத்தமுடியக்கூடாதே? ஏமாத்துனாலும் உடனே தண்டனை வந்துடுனுமே!'
'இவன் தன்னைத்தானே ஏமாத்திக்கிறான்'

சர்க்கார் கிண்டலாக சிரிக்கிறார்கள்.

'லாஜிக் பிரகாரம் பார்த்தா நீங்க சொல்றது சரிதான். ஆனால்...' - சீடர். ஆனா? 'அப்ப, ஏமாளிப்பையன் ஆண்டவங்குறீங்க!' - சர்க்காரின் சிரிப்பு தொடர்கிறது.'நான் என்னா சொல்ல வர்றேன்..., மனிதன் செய்யிற எந்த செயலும் சரி, 'இபாதத்'துக்கு அப்பாற்பட்டதல்லங்கிறேன். பாம்பு உங்களை கடிக்குதா? கடிபடுறது இபாத்துங்குறேன். பண்டியை அடிக்கிறீங்களா? அது இபாதத்துங்குறேன். வெளிக்கி உக்காந்திருக்கீங்களா? இபாதத்துங்குறேன் நான். பொண்டாட்டிகூட படுக்குறிங்களா? இபாதத்துங்குறேன் நான். தொழுவுறீங்களா? அது இபாதத்தே அல்லங்க! உலகத்துலே இபாதத் பண்ணுறதுக்குள்ள டிரைனிங் அது! அத கண்டிப்பாக செய்யத்தான் வேணும். இது செய்யலேண்டா சோத்துல உள்ள இபாதத் கட் ஆயிடும். பொண்டாட்டிய முச்சம் வுடும்போது ஏற்படுற இபாதத் கட் ஆயிடும். புள்ளய கொஞ்சும்போது படுற இபாதத் கட் ஆயிடும்.. பிசினஸ் சேர்லெ உட்கார்ந்து டெலிஃபோன் புடிக்கிம்போது பன்னுற இபாதத் கட் ஆயிடும். எனவே, தொழுகை கடமை - உங்களுக்கு! தொழுகைங்கிறது டிரைனிங். நினைப்புல வச்சுக்குங்க. அது இபாதத்தே அல்ல அது. அதனாலதான் ஹஜ்ரத் இமாம் கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி சொல்றாஹா..'யாருடைய இபாதத், யாருடைய தொழுகை அவங்க வாழ்க்கையிலே, எண்ணத்துலே மாறுதலை ஏற்படுத்தவில்லையோ அவங்க தொழவே இல்லை!'ண்டு. என்னங்க, ஆண்டவன்ற 'ரஹ்மானியத்' நம்ம நெஞ்சிலே இக்கிது, நம்ம ஏங்க தொழுவனும்? நாம் செய்யிற செயலெல்லாம் இபாத்தா இருக்கும்போது எதுக்குங்க தொழுவனும்? அப்படியான இபாதத் நம்மள்ட்டெ இல்லை. நம்மள்ட்டெ 'ஷைத்தானியத்' கலந்து நிக்கிது. 'ரஹ்மானியத்'ட ஒரு பிட் இக்கிது. நம்ம லைஃப்லெ வரக்கூடிய சீக்குக்கெல்லாம் பெரும்பான்மையான காரணம் 'நஃப்சானியத்' மனசுலெ நிக்கிறதனாலேயும் 'ஷைத்தானியத்' மிகைச்சி நிக்கிறதுனாலேயும்தான் வருது. 'ரஹ்மானியத்' மிகைச்சி நிக்கிற சமயத்துலே மனுஷன் செய்யிற எல்லா செயலுக்கும் இபாத்துண்டுதான் பேரு. அப்படி பார்க்கப்போனா மனுஷன்ற எந்த அசைவுலேயும் இபாதத் இல்லாம இல்லே.. அப்ப ஆண்டவன் ஏமாற இல்லை!' - 'S'
*

29.05.1996

Mind Wandering (from Relaxation II கேஸட்) :

'எப்ப Body ரிலாக்ஸா இக்கிம்? Mindஐ அலைய வுடுறீங்கள்லெ? அலையிறதை செக் பண்ணுனீங்கண்டு சொன்னா! எப்ப நீங்க செக் பண்ணுறீங்களோ செக் பண்ணுன காரணத்துனாலேயே அது ஒரு டிரைனிங்கா மாறிடும். இதுக்கும் , பொதுமக்கள் மனசை அலையவுடுறதுக்கும் வித்யாஸம் இக்கிது. ஜனங்க வேண்டுமென்றே கற்பனை பண்ணலே; மனசு தானா அலையுது. இப்ப நாம வேணும்டே மனசை அலையவுடுறோம். ரெண்டுக்கும் வித்யாஸத்தைப் பாருங்க. குதிரை தானா ஓடுறதுக்கும் நீங்க லகானை புடிச்சிக்கிட்டு தானா அலையவுடுறதுக்கும் வித்யாஸம் இக்கிது. எறும்பை உள்ளங்கையிலே வுட்டுக்கிட்டு எங்கே ஓடுது பார்க்கலாம்டு பார்க்குறதுக்கும், நாம தொழுவிக்கிட்டிக்கிம்போது காலு கையிலே ஏறி அது நம்ம கொட்டையிலே கடிக்கிறதுக்கும் வித்யாஸம் இக்கிதுல்ல? இதே மாதிரி வித்யாஸம்!' - 'S'
*

ஜெதபு :

'அல்லாஹ்வைப் பத்தி நெனைக்கிம்போது - 'திக்ரு' பண்ணும்போது- 'அல்லாஹூ ஹாழிர் அல்லாஹூ நாழிர்' - ஆண்டவன் 'ஹாழிர்'-ஆ இருக்கிறான், ஆண்டவன் பாத்துக்கிட்டே இக்கிறான் - இப்படி சொல்லும்போது அல்லா இருக்குறதாக கற்பனை பண்ணுங்க. பார்த்துக்கிட்டிக்கிறாண்டு கற்பனை பண்ணுங்க. கற்பனை பண்ணி கொஞ்சநேரம் ஆயிடிச்சிண்டு சொன்னா, இல்லே பக்குவம் பத்தாம கொஞ்ச நாள் ஆயிடுச்சிண்டு சொன்னா , அவன் இருக்குறதாகவே உங்களுக்கு நம்பிக்கை வந்துடும். அவன் இருந்தா Body எப்படி நடுங்குமோ அவ்வளவு நடுங்கும் உடம்பு. உதறும் அப்படியே.. என்னாங்க, ஒரு மினிஸ்டர் ரூமுலெ நமக்கு உட்கார தைரியம் இல்லே, அல்லா வந்து நிக்கிறான் , பாக்குறாண்டு சொன்னா?! எப்படி இக்கிம் நமக்கு?' - 'S'

'கற்பனை பண்ணும்போது அவனை உருவகப்படுத்திக்குனுமா?' - சீடர்

'நல்ல கேள்வி. அப்படி அல்ல. நாம ரேடியோ ஸ்டேசன்லெ பேசிக்கிட்டிக்கிம்போது நம்ம பேச்சை எத்தனை பேரு கேட்குறாங்க? தெரியுதுலெ? அதேமாதிரி , நான் டெலிஃபோன்லெ பேசறேண்டு வைங்க. அதை ஒரு ஆளு கேட்குறாங்கண்டு புரியுதுலெ? அதே மாதிரி நம்மளை பாக்குறாண்டு நெனைச்சிக்குங்கண்டு சொல்றேன். அவனை நீங்க பார்க்க சொல்லலே. அவன் உங்களை பாக்குறதா நெனைக்கலாமுல்லே? அவன் எப்படி இக்கிறாங்குற கதை வேறே. அவன் யாரு மாதிரி இருந்தாலும் உங்களுக்கு கவலை இல்லை. ஆனா அவன் உங்களை பாக்குறான்.. Present!. நாம பேசுற பேச்சுலாம் ரிகார்ட் ஆவுது, உலகம் பூரா பரவுதுண்டா உங்களுக்கு எப்படி இக்கிம்? எவ்வளவு கரெக்டா இருப்பீங்க? அப்ப, எப்படி உட்கார்ந்திருந்திங்களோ அப்படியேதான் இருப்பீங்க. மரத்துப் பொய்டும் அப்படியே.. அசைவே இருக்காது. நீங்க நீங்களா இருக்க மாட்டீங்க. வேறொரு பொருளா இருப்பீங்க. இந்த கட்டத்துலெதான் 'ஜெதபு' வர்றது. இந்தக் கட்டத்துலெதான் காட்சிகள் தெரியிறது. முதல்லெ வட்டம் தெரியும். whole universeண்டு அர்த்தம். அப்புறம் புள்ளி தெரியும். வட்டத்துக்கு பிறகு புள்ளியும் தெரியும். நடுவே முக்கோணமும் தெரியும். தெய்வத்தன்மை materialise ஆகி- உலகுக்கு வந்து - இந்த கட்டுப்பட்ட உலக வாழ்க்கையிலே , இந்த அடிமை வாழ்க்கையிலே.. - ஆயிரக்கணக்கான பொருள்களுக்கில்ல நாம அடிமை! காத்துக்கு அடிமை, தண்ணிக்கு அடிமை, சோத்துக்கு அடிமை, சூத்துக்கு அடிமை..! - இந்த வாழ்க்கையிலே வளர்ந்து இம்ப்ரூவ்மெண்ட் ஆன உடனேயே, ஒரு குறிப்பிட்ட தகுதி வந்த உடனேயே , இது பிக்அப் பண்ணுது - மேலே உள்ளது. 'இங்கே வாடா.. நீ வளர்ந்துட்டா!'ண்டு கூப்பிடுது. 'இல்லே..எனக்குப் பத்தலே..நான் அங்கே வரப்போறேன்'டு இவன் போறான். ரெண்டும் ஒண்ணுதான். காந்தத்தை இரும்பு கூப்பிட்டாலும் சரிதான், இரும்பை காந்தம் கூப்பிட்டாலும் சரிதான். ஃபைனல் ரிஸல்ட், இணைப்பு. இரண்டறக் கலத்தல். எங்கிருந்து வந்தோமோ அங்கே இணையிறோம்..' - 'S'
*

'ஷரீஅத்' எந்தப் பாதையை காட்டுனிச்சோ , எந்த கதவைக் காட்டுனிச்சோ , அந்தக் கதவுக்கு உள்ளே உள்ள செய்தி இது.. அது கதவை காட்டுனிச்சி.. இவன் அதுல சாஞ்சிக்கிட்டு தூங்குறான்! நாம இப்ப கதவை திறந்துகிட்டு உள்ளெ போயி பாக்குறோம். அதனாலெ , பாமரர்கள்ட்டெ இந்த செய்திகள பேசிட வாணாம். பேசுனா ஒண்ணும் ஆகப்போறதில்லே.. என்னைப்பத்தி தப்பா நெனைப்பாங்க.. உங்களைப்பத்தி தப்பா நெனைப்பாங்க.. நான் பேசுறபேச்சு பூரா - எனக்கு ஒரு கடமை இக்கிது, பொறுப்பு இக்கிது, அதை எவ்வளவு சீக்கிரம் நிறைவேத்தனுமோ அதை நிறைவேத்தனும். நிறைவேத்திடுவேன் நான். அது என் கடமை. அதை நீங்க பாதுகாக்கனும். அப்பதான் அது பரக்கத் செய்யிம். 'பரக்கத் செய்யிம்'டு பொண்டுவ சொல்றமாதிரி நான் சொல்லலே. நான் உணர்ந்து சொல்றேன். ஷெய்குமார்கள் யாரும் இப்படி காட்ட (சொல்ல) மாட்டாங்க. நான் ஏன் இப்படி காட்டுறேண்டு கேட்டா நான் நம்புறேன். இப்படி விளக்கி சொல்லுவதற்கு எனக்கு அதிகாரம் இருக்குண்டு நம்புறேன். ஷெய்குமார்கள் சொல்லமாட்டாங்க; செஞ்சிப் பாருங்கண்டுதான் சொல்லுவாங்க. 'ஓதிப்பாருங்க'ம்பாங்க. 'என்னா லாபம்?'டு கேட்டா 'உனக்கு கொடுத்த 'இபாதத்' 'கட்'டுண்டு சொல்லிடுவாங்க. சோத்தைக் கொடுத்து , 'உண்ணு'ம்பாங்க. 'உண்டு என்னா லாபம்'டு கேட்டா சோத்தை புடுங்கிக்குவாங்க! பயமும் காட்டுவாஹா. 'திக்ரு' பண்ணு, கொஞ்சநாள்லெ அறிவு மழுங்கிடும்'ம்பாஹா! இந்த பயங்கரமான அவஸ்தையிலாம் உங்களுக்கு இல்லே இப்ப. நான் உரிச்சி, சுளை சுளையா தர்றேன். இப்பதான் 'கோபாலா எங்கே போறா.?' கதை வந்துடுச்சே! காலத்தோட நஸீபு, இத பத்தி சொல்ல முடியாது. உங்களுக்கு அப்படி சிரமம் இல்லே' - 'S'
*

25 வருடங்களுக்கு முன்பு பேசிய பேச்சு. குரலில் இளமை துள்ளுகிறது. இப்போதும் அறிவின் ஆட்சிதான் என்றாலும் வயதின் நடுக்கம். ஆனால் தீராத பழத்தின் விளைந்துகொண்டேயிருக்கும் சுளைகளிலிருந்து உரித்து உரித்துக்கொடுக்கும் களைப்பற்ற தன்மை ஆச்சரியம். இதற்கு பசி காரணமா, பழம் காரணமா?
*

31.05.1996 வெள்ளி செஷன் முடிந்து.

இன்றுகாலை மஸ்தான் மரைக்கானின் ரூம் போனவுடன் 'ஜெப்பார்நானா ரெண்டுதடவை ஃபோன் பண்ணுனாஹா' என்ற செய்தி. ஏதோ சாமான் இருக்கிறது என்று சொன்னார்களாம். சர்க்காரின் புதிய கேஸட்கள் வந்திருக்குமோ, அல்லது, ரவூஃப்தான் materials அனுப்பி வைத்திருப்பானா அல்லது சர்க்கார் ஏதாவது செய்தி சொல்லியிருப்பார்களா..? போனால் , ஒருமாதத்திற்கு முன்பு ஜெப்பார்நானாவிடம் யூசுஃப் அலியின் Quran translation வேண்டும் என்று சொன்னதற்குப் பரிசு காத்திருந்தது. யூசுஃப் அலியும் வேண்டும், காசும் கொடுக்கக்கூடாது என்றால் பரிசுதானே? ஹம்ரியாவிலுள்ள இஸ்லாமிய அழைப்பு மையத்திலிருந்து -எனக்காகச் சொல்லி , வாங்கி வைத்திருந்து - அன்பளிப்பாகக் கொடுத்தார். இன்று இரவு சௌதி சென்றிருக்கும் ஃபரீதுக்கு ஃபோன் செய்து அங்கிருந்து கொண்டுவரச் சொல்லவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் யூசுஃப் அலிக்கு என் மேல் உண்மையிலேயே பிரியம் போலும். பெரியார், மார்க்ஸ், சார்த்தர் to யூசுஃப் அலி! மாற்றம்தான்! ஆசைப்பட்டது சரி, எதற்காக வேண்டும் என்று நினைத்தோம்? யூசுஃப் அலி பெரிய ஸ்காலர் என்றா? இந்த ஸ்காலர்கள்! இவர்கள் மேலுள்ள ஆச்சரியம் ஏன் மறையமாட்டேன் என்கிறது? தெய்வத்தின் குரல் சாமானியர்களுக்குப் புரியும் அளவு ஸ்காலர்களுக்குக்ப் புரியுமா? தெய்வம்தான் யாருக்கு? ஏன் 1810 பக்க சுமையை நான் விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஆங்கிலத்தில் மேற்கோள் காட்டலாம் என்றா? குழப்பத்துடன் வந்து செஷனில் அமர்ந்து சர்க்காரின் 8-12.12.95 கேஸட் கேட்டபோது சர்க்கார் பேசினார்கள்:

'எந்த பணக்காரனுக்கும் நீங்க மதிப்பு கொடுக்கக்கூடாது. எந்த ஸ்காலருக்கும் மரியாதை கொடுக்கக்கூடாது. நீங்க மதிக்க வேண்டிய ஒரே ஆள் நானாகத்தான் இருக்கனும். ஏன் அதுவும்? அப்பதான் நான் சொல்றது உங்க மனசுல இறங்கும். நான் சொல்றதுதான் தெய்வவாக்கு. அல்லா ரசூல் எல்லாம் எனக்குப் பின்னால்தான். ஏன்? அல்லாஹ் யாரு, ரசூல் யாருண்டு நான்தானே காட்டுவேன். என்னா, 'நஜாத்' மாதிரி இக்கிதுண்டு பாக்குறீங்களோ? 'நஜாத்'ஐ விட ரொம்ப ரொம்ப மேலே இது. அல்லது ரொம்ப ரொம்ப கீழே. இது 'ஷரீஅத்' அல்ல. 'தரீக்கா'. 'தரீக்கா'வும் அல்ல. 'மஹ்ரிபா'. 'ஹகீகத்' இது. உண்மை இதுதான்'
*

வியாழன் காலை ஆஃபீஸிலுள்ள 486 கம்ப்யூட்டரில் வைரஸ். மூளையால் கம்ப்யூட்டரை உருவாக்கலாம். அழிக்கவும் செய்யலாம் . பின் எதற்கு கம்ப்யூட்டர்? எனக்கு வேலை கொடுக்கவா? என்னிடம் Solomon Toolkit புது வெர்ஷன் இருந்தது. virus remover. அதில் வைரஸ் புகுந்திருந்தது! நான் பதட்டப்படாமல் முயற்சித்துக்கொண்டிருந்தேன். clean boot செய்து, A Driveல் முயற்சித்தாலும் பலனில்லாமல் இருந்தது. திடீரென்று, இதை மாலையில் செய்தால் என்ன என்று என்னுள் கேட்டது. மாலை ஆஃ·பீஸ் வந்ததும் உடனே ஆரம்பிக்காமல் 'அஸர்' தொழுதுவிட்டு, ஒரு டீ குடித்துவிட்டு , சிகரெட் குடித்துவிட்டு, பத்து நிமிடம் மொயீன்சாஹிபிடம் பாகிஸ்தான் 'பச்சை'களை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு உட்கார்ந்துபாரேன் என்றது. அதன்படியே உட்கார்ந்தேன். வைரஸ் போச்சு. Virus நான்தான் போலும்!
*

'எது செய்கிறதோ அது நமக்குள்தான் இருக்கிறது, நம்மில் ஒரு பகுதியாக இருக்கிறது, அதனுடைய ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம். இதுதான் நம்ம பிரின்ஸிபிள்' - 'S'

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் - தமிழ் குர்ஆன்.
'Praise be to God. The Cherisher and Sustainer of the *Worlds' - யூசு·ப் அலி.

*
20-27.10.95 கேஸட் :

'மெமரி வீக்கா இக்கிது, அவர்ட்டெ கேட்டுக்கலாம், இவர்ட்டெ கேட்டுக்கலாம்டு இக்கிறது சரியல்ல. இது எப்படீண்டா நீங்க பீயை பேண்டுட்டு அவரை சூத்து கழுவ சொல்றது. நீங்கதான் கழுவனும்!' - 'S'
*

'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!'.. எந்த முட்டாப் பயலோ சொல்லிப்புட்டான். அந்த மனசை நீங்க லைஃப்லெ வச்சீங்க..ஒண்ணுமே செய்ய முடியாது. ஒரு மயிரையும் புடுங்க முடியாது. இப்ப ஆண்டவன் வந்து கேக்குறான், என்ன வேணும்டு. என்னா கேப்பீங்க?'

'நீயே வேணும்டு கேட்பேன்' - ஒருவர்

'ஹை, இது என்னை வெடைக்கிறது! ஒழுங்கா சொல்லுங்க'

'தீர்க்கமான தெளிவான முடிவை எடுக்கும்...'

'அதாவது உண்மையை உண்மையாகக் காட்டு, பொய்யை பொய்யாகக் காட்டு? பரவாயில்லை; பரவாத்தான் இல்லை'

'நாமும் வாழ்ந்து மத்தவங்களையும் வாழவைக்..'

'அந்த தியாக மனப்பான்மையிலாம் வாணாம். நீங்க நல்லா வாழுங்க. உங்களைப்பார்த்து அவன் காப்பியடிப்பான். இப்படிச் சொன்னஹ எத்தனையோ பேரு காணாப்பொய்ட்டாஹா. நீங்க நல்லா வாழுங்க. அந்த வாழ்க்கையோட brightness மத்தவங்களை கவரட்டும். ஆனா மத்தவங்களை கவர வாழாதீங்க; கீழே பொய்டுவீங்க. நீங்க மெழுகுவத்தியாக இருக்க வாணாம். டார்ச்லைட்டா இரிங்க. வெளிச்சத்தைக் கொடுத்துட்டு அழிஞ்சிடாதீங்கங்குறேன். நபிமார்கள் அப்படி இருந்திக்கலாம். குத்புமார்கள் அப்படியிருந்திருக்கலாம். நீங்க குத்பும் அல்ல, நபியும் அல்ல. 'யான் பெற்ற இன்பம் இவ்வையகம் முழுதும் பரவுக'. இதே தப்புங்கிறேன். 'யான் பெற்ற இன்பம்' சரி, அந்த இன்பத்தை பரப்புவதற்காகவே வாழுறோம்லெ? அங்கெதான் தப்பு வருது. அது பொய். அப்படி வாழ்ந்தா முட்டாள்தனம். இப்படி சொல்றது இஸ்லாமிக் பிரின்ஸிபிளை உடைக்கிறமாதிரி இருக்கும். நீங்க சரியா புரிஞ்சிக்கலை. 'Misunderstood Religion' அப்படீண்டு ஒரு புக் வந்திக்கிது. அதை படிச்சிப்பாரு -சும்மா சொல்றேன், படிக்காதே! - எது இஸ்லாம் அல்லண்டு நெனைச்சிக்கிட்டிக்கிறோமோ அதுதான் உண்மையான இஸ்லாம்! என்னா காரணம்? மத்த மதத்துலே ஞானத்தை அடிப்படையா போதிச்சாங்க. நாம் அதைவிட அரசியலையும் சமுதாய வாழ்க்கையையும்தான் போதிச்சோம். அப்ப ஞானம் யாருக்காக? சமுதாயத்துலெ கலந்து கலந்து போதிய அளவு டைம் உள்ளவன் ஞானத்துலெ பூரட்டும். அவன்ட்டெ சக்தி திரளும்போது , அந்த வெளிச்சத்துனாலே மத்தவங்க கவரப்பட்டு வரட்டும். அதனாலெ ஞானமார்க்கத்துலெ போறவங்க வைரக்கல்லு மாதிரி இரிப்பாங்க, கொஞ்சக்கோனு. 'டேலா' (கட்டிக்கல்) மாதிரி நிறைய இருக்க மாட்டாங்க. ஆக மொத்ததுலெ, லைஃப்லெ ஒரு குழந்தைட்டெ கேட்டா சொல்லும், கமர்கட் முட்டாய் வேண்டும்டு. அட்லீஸ்ட் அன்னக்கி உள்ளது. கிழிஞ்சி போன பட்டம் வச்சிக்கிற புள்ள நல்ல பட்டம் கேட்கும். ஒரு பிசினஸ்மேன் டாப் 1, நம்பர் 1 கம்பெனியாகனும்டு சொல்லுவான். உங்களுக்கோ பதில் சொல்லத் தெரியலே. அல்லா வேணும்டு ஞானம் பேசுறீங்க! வேதாந்தம் பேசுறீங்க. எந்த ஒண்ணுக்காக கொட்டை அரிக்கும்போதுகூட சொறியாம இக்கிறீங்களோ அதுக்காகத்தான் நீங்க வாழுறீங்கண்டு அர்த்தம். ஷோக்கான 'க்ளூ' - glue அல்ல! - குறிப்பு! பெரிய பெரிய இன்பங்களையெல்லாம் எந்த ஒண்ணுக்காக தியாகம் பண்ணுறீங்களோ அந்த ஒண்ணுக்காகத்தான் வாழுறீங்க. எந்த ஒண்ணு அது? அது இன்றைக்கு வந்து நாளைக்கி அழியக்கூடியதாக இருக்கக்கூடாது. permanentஆ இருக்கனும். ஒரு பிரச்சனையை எடுக்கனும், அது பூரா life long வந்துக்கிட்டே இருக்கனும். இருக்கா இல்லையா?'

'நிம்மதி' - ஆரி·ப்.

'ஹூம்.. என்னா ஆரிஃப்..கீழே கீழே போறீங்க..' - சர்க்கார் அலுத்துக் கொள்கிறார்கள். 'ஆறுலேயும் வரலாம் அறுபதிலேயும் வரலாம் சாவு. நிம்மதி, கையிலே வெறுமையா இருந்தாலும் வரலாம். நிறைய காசிருந்தாலும் வரலாம். நிம்மதியை சொல்லாதீங்க, எனக்கு நிம்மதியா இக்கிம்!.. என்னாங்க.. வாழ்க்கையைப் பத்தி புரிஞ்சிக்கிடாம எது வேணும்டு கேட்கத் தெரியாம, புரியாம இக்கிறீங்கண்டா நான் என்னா செய்யிறது?'

'கிடைச்ச அறிவை இழக்காம..'

'ஷர்புன் நியமத்' கூடாதுங்கிறீங்களா? நல்ல பதில்தான். நான் உங்க லைஃப்லெ மேஜர் Aim என்னாங்குறேன். சிம்பிளான கேள்வி. ஒன்னும் இதுவரைக்கிம் ஃபார்ம் ஆவலேண்டு சொல்லுங்க, how to liveங்குறதுக்கு பதில் சொல்ல முடியலேண்டாவது சொல்லித் தொலைங்க'

'எனக்கு பணம் வேணும்' - ரவூஃப்

'.... ..... .... '

'வேற ஒண்ணும் வாணாம். ஏண்டா மத்த எல்லாத்தையும் நான் கொண்டு வந்துவிட முடியும்' - தொடர்ந்தான் ரவூஃப்.

'இது உன் மனசுல ஏற்பட்டிருக்கிற காயத்தினாலே ஏற்பட்ட விளைவு. இது பதிலே அல்ல. எந்தப் பயலும் - பிசினஸ்மேன் உட்பட - பணம் கேட்க மாட்டான். பணத்தாலே ஆகக்கூடிய காரியத்தைத்தான் கேட்பான். இது பதில் அல்ல. அட்லீஸ்ட் இப்படியாச்சும் சொல்லலாமுல்லெ? 'லைஃப்லெ அப்பப்ப எனக்கு தேவைகள் இருந்துக்கிட்டிக்கிம். இன்னக்கி தேவையில்லாதது நாளைக்கு தேவையா இக்கிம். எதையும் அடையிற சக்தி எனக்கு வேணும். நினைச்சதை முடிக்கிற சக்தி எனக்கு வரணும். அதுவும் , சிரமமில்லாம நினைச்ச உடனே நடக்கனும். விரலசைச்சா அண்ட சராசரமும் அசையிற மாதிரி சக்தி வரணும்'. இதைக்கூட நான் சொல்லிக் கொடுக்கனுமா?! Specific-ஆ 'What we want'டுண்டு புரியாத வரைக்கிம் நடக்காது எதுவும். ஆண்டவன்உங்களைப்பார்த்துப்புட்டு specificஆ கேக்குறவன்ட்டெ பொய்டுவான்!' - 'S'
*

'தாஜ்மஹால் பீடி இருக்குதா?'
'இல்லே'
'Wills சிகரெட்?'
'இல்லே'
'Charminar சிகரெட் இருக்குதா, ஹைதராபாத் சின்னம் போட்டிருப்பான்லெ அது'
'இல்லே'
'மான் மார்க் சுருட்டு?'
'இல்லே' - கடைக்காரர் பரிதாபப்பட்டு ஒரு 50 பைசா சாக்லெட்டை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் போன பிறகு சிரித்தாரம் ஒரு சிரிப்பு. 'இப்படியிருக்கானுவ மனுஷனுவ!' என்றாராம்.

இந்தப் பழைய சம்பவத்தை சொல்லிவிட்டு சர்க்கார் சொன்னார்கள் : 'நீங்க அவன்மாதிரிதான் இரிக்கிறீங்க!'. 'know thyself. உன்னை உணர். இதை லட்சியமா வைக்கலாமுல்லே? அல்லாவை கட்டியணைக்கனும்குறதைவிட அழகான வார்த்தையில்லையா இது?' - 'S'
*

'உலகத்தை நாடுறவன் பொம்பளை, அவன் எல்லைக்குள்ளேயேதான் அவன் சந்தோஷப்பட்டுக்குவான். மறுமையை நாடுறவன் கோஷா. அவன் அதை அடையறதுக்கு 'குப்பி'தான் கொடுக்கனும், அதுல இன்பம் இக்கிதா இல்லையாண்டு பிறகு கேட்டுப் பார்த்துக்கலாம், இவன் இன்னக்கி இருக்குற ரொட்டியை வுட்டுப்புட்டு நாளைக்குள்ள ரொட்டியை நினைக்கிறவன். ஒரு சின்ன மிஸ்டேக்கால அது கிடைக்காமகூட பொய்டலாம். அப்ப.. ஆம்பள சிங்கம் யாரு? அல்லாஹ்வை நாடுறவண்டு ஒரு சூஃபி சொன்னாஹா. உங்க பொண்டாட்டி , 'நாளைக்கி பெருநாள் வருது, காசு தாங்க'ண்டு கேக்குறா.. 'அல்லாஹூ ஜல்ல ஜலாலஹுத்தஆலா தான் நாடிய நேரத்தில் கொடுப்பான்'டு அங்கே வேதாந்தம் பேசிப்பாருங்களேன்.! சோத்துல உப்பை அள்ளிபோட்டு விரட்டி வுட்டுடுவா!' - 'S'
*

'உன்னை உணர்'ந்த பிறகு ஆண்டவனை நீ வாண்டு கூப்பிட வேண்டியதில்லை. அவந்தான் இருக்கிறானே. கூப்பிட என்ன இருக்கு?' இதை லட்சியமா வைக்கலாமுல்லே?' - 'S'

வைக்கலாமா?

(தொடரும்)

குறிப்புகள் :
ரியாலத் - பயிற்சி
இபாதத் - இறைவனைப் பற்றிய சிந்தனை
ரஹ்மானியத் - நல்லசக்தி, இறைசக்தி
ஷைத்தானியத் - தீயசக்தி, ஷைத்தானின் குணம்
நஃப்சானியத் - பேராசை
திக்ரு - தியானம்
ஜெதபு - பரவசம்
ஷெய்கு - குரு
நஸீபு - தலைவிதி
ரசூல் - முகமது நபி (ஸல்)
நஜாத் - இஸ்லாத்தின் 'தூய்மை'வாதிகள்
ஷரீஅத் - மார்க்கச் சட்டம்
தரீக்கா - ஞானப்பாதை
மஹ்ரிபா - மெய்ஞ்ஞான நிலைகளுள் ஒன்று
ஹகீகத் - உண்மை
அஸர் - மாலைநேரத் தொழுகை
குத்பு - மெய்ஞ்ஞானிகளின் தலைவர்
குப்பி - ஓரினப்புணர்ச்சி

Wednesday, September 27, 2017

வவுத்துவலிக்கு போக காமெடி :)

கோடுகள் பாடுகள் அல்லது why bad things happen to good people ?

நேற்று ஒரு புதிய நண்பர் போன் செய்து அறிமுகப்படுத்திக்கொண்டு ''சார் நாங்க ஒரு சிறு பத்திரிக்கை கொண்டுவரோம் .உங்க கதையோ கவிதையோ தாங்க''என்றார் நான் வழக்கமாக சரி என்று சொல்லிவிட்டு மறந்துவிடுவேன் .அல்லது அடுத்த நிமிடமே எழுபது பக்கத்துக்கு போகும் ஒரு கதையை அனுப்பி 'இதை உங்க பத்திரிகைல போடலாமான்னு பாருங்க'என்பேன்.அவர்கள் பத்திரிகையே முன் அட்டை பின்னட்டையில் ''படிச்சே செத்தே!'என்று வெருட்டும் வாசகங்களுடன் ஸ்பான்சர்களின் 'எஸ் மாணிக்கம் நாடார் பலசரக்கு மாளிகை .எங்களிடம் சமையலுக்குத் தேவையான நயமான பருப்புவகைகள் உட்பட எல்லாம் சகாயவிலையில் கிடைக்கும்.கறவை மாடுகளுக்கான மாட்டுத் தீவனமும் உண்டு 'விளம்பரங்களுக்குப் போக (மறுபக்கம் மங்கலாய் தெரிதாவின் ஒரு mugshot கமலாதாஸின் கண்ணிடுங்கிய புன்னகை )நாற்பது பக்கங்கள்தான் வரும்.அன்றைக்கு என்ன திதியின் எந்த பாதத்தில் இருந்தேனோ ''உங்க பத்திரிகையின் கோட்பாடு என்ன ?''என்று கேட்டுவிட்டேன்.(கோட்பாடு என்பது சிக்கன்குனியாவை விட மோசமான வைரஸ்.ஒருதடவை ரத்தத்தில் ஏறிவிட்டால் அது ஆயுசுக்கும் போகாது என்று எனது நண்பர் சொன்னது உண்மைதான் போல )

நண்பர் ''சார் ?'என்றார்

நான் ''கோட்பாடு கோட்பாடு ?''என்றேன் ''ஐடியாலஜி ?இலக்கியப் பார்வை ?உலகப் பார்வை ?''

மறுமுனை சற்று அமைதியாக இருந்தது .நான் ''ஹலோ?''

''இருக்கேன் சார் சொல்றேன்''என்றார் அவர்.''அதாவது பார்த்தீங்கன்னா நான் மார்க்சிய பின்னணில வளர்ந்தேன் ''

''ஓ சரி இடதுசாரியா நீங்க ''

''இல்லே சார் அப்படி வளர்ந்தாலும் பிறகு வளர்ந்தபிறகு மார்க்ஸ்கிட்டே ஒரு போதாமை இருக்குன்னு தோணுச்சு .பெரியாரைப் படிச்சேன்.வர்க்க நீதி மாதிரியே சமூக நீதின்னு ஒண்ணு இருக்கில்லே? ''

''உண்மை உண்மை ''

''அதுல தீவிரமா இருந்தேன்.இந்த சின்னக் குத்தூசி இருக்கார் இல்லீங்க அவர்கிட்டே கூட ஏறக்குறைய ஒரு சீடன் மாதிரி இருந்தேன் ''

''ஓ ரொம்ப நல்லது.அவரு பெரிய தலையாச்சே ?''

''ஆமா ஆனா அப்படிப் பெரியார் படிச்சிகிட்டே வரும்போதுதான் எனக்கு ஒரு ஆக்சிடன்ட் ஆகுது ''

''ஓ சாரி என்னாச்சி ''

''ஒரு டிராக்டர் என் கால்லே ஏறிடுச்சு''

''டிராக்டர் ?''

''ஆமா ''

நான் மிக வியந்து ''டிராக்டர் மெதுவாதானே வரும்?"'என்றேன் ''அது எப்படி உங்க கால்ல ஏறுச்சு ?"'

''அது மெதுவாத்தான் வந்திருக்கும்.எனக்குத் தெரியலை .நான் மயக்கமா கிடந்தேன் ''

''ஏன் ?''

''அது முந்தின நாள் ஒரு இலக்கியக் கூட்டம் அதுல கொஞ்சம் சரக்கு போட்டிருந்தேன் ''
"'ஓ ''என்றேன் பிறகு மெதுவாக பெரியாருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தேன்

''ஒரு மூணு மாசம் உங்க ஊர் ஆஸ்பத்திரிலதான் கிடந்தேன் காலெல்லாம் நட்டு போல்ட்டு போட்டு முறுக்கி வச்சிருந்தாங்க ''

''அய்யோ வலி.''

''பயங்கர வலி .புண்ணு குணமே ஆக மாட்டேங்குது.கைக்காசெல்லாம் போயிடிச்சு.ரொம்ப உடைஞ்சி போயிட்டேன்.அப்போதான் அவங்க வந்தாங்க ''

''யாரு ''

''ஏசுவும் கன்னி மேரியும் ''

''யாரு ?''

''ஏசுவும் அன்னை மேரியும் ''

''எப்படி வந்தாங்க''

அவர் அசராமல் ''கார்லதான் ''என்றார் ''ஒரு வெள்ளை பிரீமியர் பத்மினி .''என்றவர் ''நோயாளிகளுக்கு பிரேயர் பண்றவங்க''

நான் சற்று ஆசுவாசமடைந்து ''தயவு செஞ்சு படிமங்கள்ல பேசாதீங்க எனக்கு நெஞ்சுவலி வருது 'என்று சொல்லலாமா என்று யோசித்தேன்.ஆனால் ஒரு சிறு பத்திரிகையாளரை அவ்விதம் சொல்வது பெரும் வன்முறையாகும் என்று நான் உணர்ந்தேன்

''அவங்க என் கால்ல கைவச்சி பிரார்த்தனை பண்ணாங்க .நம்புவீங்களா அடுத்த வாரமே எனக்கு நடக்க வந்திருச்சு''

''சரி ''என்றேன்

''இது பாருங்க எனக்கு பெரிய தத்துவச் சிக்கலை உண்டு பண்ணிருச்சு.பெரியார் கடவுள் இல்லைன்னு சொல்றார் .ஆனா இதை எப்படி விளக்கமுடியும் ?''

''அப்போ பெரியார் தப்புன்னு சொல்றீங்க ''

''அப்படில்ல .பெரியார் மட்டுமே சரின்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன் ''

நான் சற்று ஆசுவாசமடைந்து 'அப்ப நீங்க ஒரு ஆன்மீகவாதி மனம் திரும்பிய கிறித்துவர் இப்போ இல்லையா ?''

அவர் இரக்கமே இன்றி ''இல்லை ''என்றார்

நான் ''ஏன் ?''என்றேன்

''ஆனா நீங்க சொன்னது போல ஒரு தீவிரமான கிறித்துவராத்தான் அதுக்குப் பிறகு இருந்தேன் .நிறைய ஊர்ல போய் பொதுக் கூட்டங்கள்ல ரத்த சாட்சி சொல்லிருக்கேன்.மார்த்தாண்டம்,குளச்சல்.வெள்ளறடை,புன்னம்புரா ..ஆண்டவர் தினம்தோறும் என்கிட்டே ராத்திரி பேசிக்கிட்டிருந்தார் ''

''பேசிக்கிட்டிருந்தார்னா ......?" நான் தயக்கத்துடன் கேட்டேன்

''ஒரு வெளிச்சம்.ஒரு உஷ்ணம் .நீங்க படுத்துக்கிட்டிருக்கும்போதே உங்களை நெருங்கி வரும்.அதை உங்களால உணரமுடியும்''

''ஓ ''

''அப்போ நீங்க இலக்கியமெல்லாம் விட்டுட்டீங்க இல்லையா ''

''ஏன் விடணும்?அது எனது மூச்சுக்காத்து தோழர்.அதை எப்படி நானா விட முடியும் ?எனது நம்பிக்கைக்கு உட்பட்டு எழுத்திட்டிருந்தேன்.ஆர் எஸ் ஜாக்கப் அப்போ கிறித்துவ வாலிபன்னு ஒரு பத்திரிக்கை நடத்திட்டிருந்தார் .அதுல 'யாத்திரீகன்'ன்னு பேர்ல நிறைய எழுதினேன் ''

''ஓ நல்லது நான் ஜாக்கப் படிச்சிருக்கேன் எனக்கு பிடிக்கும் ''

''அப்புறம் பாருங்க ஒரு மூணுவருசம் கழிச்சி எனக்கு இன்னொரு ஆக்சிடன்ட் ஆயிடுச்சி''

நான் ''ரோட் ரோலர் ?''

''இல்லே ஸ்கூட்டர்.ஆனா இந்த தடவை எனக்கு ஒன்னும் ஆகலை ''

நான் 'கர்த்தருக்கு தோத்திரம் ''என்றேன்

''ஆனா பாருங்க என் ஸ்கூட்டர்ல மாட்டி ஒரு கிழவி மண்டையை போட்டிருச்சி ''

எனக்கு கடும்கோபம் வந்தது அடக்கிக்கொண்டு ''அப்போ ஆக்சிடன்ட் ஆனது அவங்களுக்குத்தான் உங்களுக்கில்லை ''

''ஆமா.அதுல பாருங்க அந்த கிழவியோட ஆளுங்க எல்லாம் என் மேல கேஸ் போட்டாங்க ரூபா கேட்டு மிரட்டினாங்க .எல்லோருமே விளிம்பு நிலை மக்கள்.எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் .ஏன்னா நான் ஜீனே , அமைப்பியல் ,தமிழவன்,சாறு நிவேதிதா எல்லாம் படிச்சிருக்கேனே ''

''அது சரி.பிறகென்ன ?''

''ஆனா அவங்க அதெல்லாம் படிக்கலையே ?''என்றார் அவர் ''அது ஒரு வருஷம் போச்சு.கோர்ட்டு,கேசு,கட்டப் பஞ்சாயத்து ,அடிதடி காசு விரயம்னு .எனக்கு ஒரு விரக்தி வந்துடுச்சி.இது ஏன் எனக்கு நிகழுது ?உண்மையில நான் இந்த விபத்தை தானா நிகழ்த்தலை.அது முழுக்க ஒரு அபத்தமான விபத்து ''

நான் ''எல்லா விபத்துகளுமே அப்படித்தானே ?''

''இல்லை அதுல ஒரு சயின்ஸ் இருக்கு .''என்றார் ''எனக்கு பெரிய அதிர்ச்சியா அது இருந்தது .ஏறக்குறைய ஒரு தவசி மாதிரி ஆண்டவரின் வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டிருந்த எனக்கு இது எப்படி நிகழ்ந்தது ?ஆண்டவர் இப்படி இதை நிகழ அனுமதிச்சார் ?ஒரு முன்னறிவிப்பு கூட ஏன் கொடுக்கலை ?இவ்வளவுக்கும் அதுக்கு முந்தின நாள் ராத்திரி கூட என் கூட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார்.ஏறக்குறைய அதே சமயத்துலதான் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எவாஞ்சலிஸ்ட் குடும்பத்த்திலேயும் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்து சில பேரு இறந்துட்டாங்க.எனக்கு முழுமையாவே நம்பிக்கை உடைஞ்சிடுச்சி ''என்றவர் சற்று அமைதிக்குப் பிறகு ''அப்போதான் நான் இருத்தலியல் என்கிற விசயத்துக்கு பக்கத்தில போறேன் .அப்படித்தான் சார்த்தர் என் வாழ்க்கைல வந்தார் ''

''அப்போ நீங்க ஒரு இருத்தலியல் வாதின்னு சொல்லுங்க.ஆனா சார்த்தரை பூக்கோ எப்பவோ காலி பண்ணிட்டாரே ''

அவர் ''அங்கேதான் வரேன் ''என்றார்.''இந்த பிரச்சினைக்கு நடுவில எனக்கு ஒரு காதல் வந்தது.அந்தக் கிழவி கேஸை எடுத்து வாதாடின வக்கீல்தான் அது ''

''ஓ ''என்றேன் ''புரியுது ''உண்மையில் எனக்குப் புரியவில்லை

''எங்களுக்கு திருமங்கலத்துல வச்சி கல்யாணம் நடந்தது .நாலே நாலு பேர்.நான் அவ.அவளோட சீனியர்.நான் வழக்கமா முடிவெட்டிக்கிற கடைப் பையன் ''

''ரொம்ப புரட்சிகரமான திருமணமா இருக்குதே ''

''ஆமா.அவங்க அது அப்படித்தான் நடக்கணும்னு சொன்னாங்க.அவங்க ஒரு பெமினிஸ்ட ''என்றார்

நான் ''எந்தப் பள்ளி ?''என்று கேட்க நினைத்து அடக்கிக்கொண்டேன்

''பாருங்க அதுவும் ஒரு பிரச்சினைலதான் முடிஞ்சுது '

நான் ''எப்படி ''என்று இம்முறை கேட்கவில்லை .எனக்கே அது அப்படித்தான் முடியும் என்று தெரிந்திருந்தது

''அவங்களுக்கு சார்த்தரைப் பிடிக்கவே இல்லை.ஒரு கட்டத்துல அவரை ரொம்ப அபியூஸ் பண்ண ஆரமிச்சாங்க .நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன்.ஒரு கட்டத்துல டிவோர்சுக்குப் போயிடுச்சி ''

நான் நம்ப முடியாமல் ''தோழர் ?ழீன் பால் சார்த்தருக்காகவா விவாகரத்து பண்ணிக்கிட்டீங்க!''என்றேன்

அவர் 'மெயினா அவருக்காகத்தான்.கூடவே நான் வேலைக்குப் போக மாட்டேங்கிறேன் .காலைல பனிரெண்டு மணிக்கு எந்திரிக்கிறேன்.குடிக்கிறேன்னு சில சில்லரைக் காரணங்கள் ''என்கிறார் ''ஒரு தத்துவத்தை எப்படி விட்டுக் கொடுக்கறது தோழர் ?''

நான் ''கஷ்டம்தான் ''என்றேன்

''அது ஒரு MESSY DIVORCE .அவ ஒரு வக்கீல் வேற இல்லியா .என் மேல இல்லாத கேஸெல்லாம் போட்டு பதினஞ்சு நாள் மதுரை ஜெயில்ல இருந்தேன் மிகத் துயரமான நாட்கள் .அய்யய்யோ .அவ என்கிட்டே ஜீவனாம்சம் எல்லாம் கேட்டு ரொம்ப சித்திரவதை பண்ணா .நானே வேலை இல்லாம சிறுபத்திரிகை நடத்திட்டு இருக்கேன்.எங்கிருந்து கொடுப்பேன் ?''

''பிறகு என்ன பண்ணீங்க ?''

''என்னோட குடும்ப வீடு இருந்தது அதை வித்து கொடுத்தேன்.எங்க அம்மாவுக்கு அதுல ரொம்ப வருத்தம்.கடைசிவரை என்னை சாபம் கொடுத்துகிட்டே இருந்துச்சு.ஒருநா பழனிக்குப் போறேன்னு போச்சு வரவே இல்லை திரும்பி''

''அய்யோ நீங்க தேடலியா ''

''ஏன் தேடாம?காசி வரைக்குப் போயி தேடுனேன் .கிடைக்கலை.''என்றவர் சற்று மவுனமாக இருந்தார் ''அப்போதான் நான் காசில இந்த ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவி ஒருத்தரைச் சந்திச்சேன் ''

நான் இப்போது அவசரமாக ''உங்க ஈமெயில் ஐடி கொடுங்க தோழர் ''என்றேன்

''அவரு சொன்னாரு ..''

''நான் நிச்சயமாக உங்களுக்கு கதை தாரேன் ''

''ஒரு புத்தகம் இருக்கு ஒரு யூதப் பாதிரி எழுதினது ..''

''நிச்சயமா அனுப்பறேன் தோழர்.அனுப்பிட்டு உங்களுக்கு செய்தி அனுப்பறேன்"

''புத்தகத்தோடு பேரு ..Why bad things happen to good people?''

''அதுல என்னன்னா பாதிரியாரோட பையனுக்கு ஒரு வினோத நோய் ...''

''நல்லது தோழர்.வணக்கம் ''

''இந்த கர்மக் கோட்பாடு இருக்கில்லையா ..அது பற்றி அவர் சொன்னார்.கிறித்துவத்துல யூதத்துல இஸ்லாமிலே இந்தக் கர்மக் கோட்பாடு இல்லே .அதான் அவங்க ஒரு பிரச்சினைக்கு நோய்க்கு இது யார் பாவம் ?அப்பா பாவமா பிள்ளை பாவமா ?இந்த துன்பத்தை கொடுத்தது கடவுளா சாத்தானா ன்னு எல்லாம் கேட்டுகிட்டு அலையுறாங்க.உண்மைல நாமதான் நாம படற துன்பத்துக்குக் காரணம் .நல்லது தீயதுக்கு நடுவில சமன்வயம்னு ஒன்னு இருக்கு வேதாந்தம் அதைத்தான் சொல்லுது ''

''தோழர் நான் ஆபிசுக்குப் போணுமே ?

''அவரு எனக்கு குண்டலினி யோகம் கத்துத் தந்தாரு.கிரியா யோகா பள்ளி.பிஹார் ஸ்கூல் ஒப் யோகா இருக்கில்லையா ?"'

''தோழர்...''

''இமயமலைல இரண்டுவருசம் இருந்தேன்.சிவானந்தா ஆசிரமம் இருக்கில்லே அங்கே கொஞ்ச நாள் ..''

''அது வந்து ....''

''ஆனா அதுவும் நிலைக்கலை .குண்டலினி யோகத்தை அதிகமா பண்ணி என் உடல் பழுதாயிடுச்சி.திடீர்னு எனக்கு ரத்த பேதியா போக ஆரம்பிச்சுது.நிக்கவே இல்லை.ஆசிரமத்துல கொஞ்ச நாள் பார்த்தாங்க.அப்புறம் நீங்க கீழே போய் உடம்பு சரி பண்ணிட்டு வாங்கன்னு அனுப்பிட்டாங்க '

''நான் சாயங்கலாமா ..''

''எப்படியோ கீழிறங்கி முகல்சராய் ரயில் நிலையத்துல கிடந்தேன்.காசில போய்ச் செத்துடலாம்னு தோணிடுச்சு.கையில காசு இல்லை.உடம்பில வலு இல்லை .ஒரு நாள் ..ஒரு வெள்ளிக்கிழமை அது அரை மயக்கமா கிடந்தப்போதான் அது நிகழ்ந்தது .எங்கியோ பாங்கு விளிக்கற சத்தம் கேக்குது யாரோ என்னைத் தொட்டு எழுப்பினாங்க ''

''யாரு ?"

''முழுக்க பர்தா போட்டுக்கிட்டு ஒரு பாயம்மா ''

''ஓ ''

''அவங்க எனக்கு சாப்பிட ரொட்டி கொடுத்தாங்க .அவங்க யாருன்னு நினைக்கறீங்க ?"

நான் 'அன்னை மேரியோ ?'என்று சொல்ல நினைத்து இல்லியே பர்தா போட்டிருக்கிற பாயம்மா என்கிறாரே?அன்னை கதீஜாவா ?

''நீங்களே சொல்லுங்க''

''எங்கம்மா ''

நான் ''பாயம்மா 'என்று திருத்தினேன்

''இல்லே எங்கம்மாதான் பாயம்மா.அவங்க மார்க்கம் மாறிட்டிருக்காங்க ''

நான் சட்டென்று அவசரமாக போனை வைத்துவிட்டு சுவரை வெறிப்பது பார்த்துவிட்டு மனைவி கவலையுற்று அருகில் வந்து ''என்னாச்சு ?காலங்காத்தாலியே வேர்க்க விறுவிறுக்க என்ன போன் ?ஆபிசுக்குப் போகலே ?"என்றாள்

நான் ''இல்லே எனக்கு ஒருபடியா வருது கூடவே வயத்தையும் வலிக்கி ''என்றேன்.

பாத்ரூமுக்குள் பாய்ந்து நுழைந்துவிட்டு திரும்ப வந்து ''நான் மெடிக்கல் லீவ் போடணும்னு நினைக்கறேன் .ரத்த பேதி போலத் தெரியுது '' என்றேன்
*
Thanks to : Bogan Sankar

Monday, September 18, 2017

நுரை தள்ளிய வரிகள் - பாதசாரி


1. வாழ்வெனும் போதை தெளிய வைத்து
தெளிய வைத்து அடிக்கிறது
2. உனக்கு நான் கடவுள்
எனக்கு நீ கடவுள்
போய்த் தூங்கு சாமி.
3. என் காலம் என் கோமாளி.
4. மனதின் வெற்றிடம் நிரப்பத்தான் காலம்.
இடம் தெரிவதும் மறைவதுமே வாழ்வு சாவு.
5. இருப்பை அளக்க இன்மையே அளவுகோல்.
6. நிபந்தனை அற்ற அன்பு பொது மூச்சுக்காற்று.
7. அருளும் பொருளும் பகையானால் மண்ணில்
மருளும் மனித முகம்.
*

நன்றி : பாதசாரி , குங்குமம்

Thursday, September 14, 2017

காட்சிகள் - ஜே.எம். சாலியின் முத்திரைக் கதை

1980-ல் ஆனந்தவிகடனில் பிரசுரமான இச்சிறுகதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் பரிசைப் பெற்றது.
*

இன்றைக்கு பத்தாம் நாள் இரவு. பந்தலில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

எந்நேரமானாலும் இருந்து இறுதி வரை கதையைக் கேட்டுவிட்டுத்தான் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற தீர்மானத்துடன் வசதியாக இடம் பிடித்து உட்கார்ந்திருந்தான் வேணுகோபால். தாமதித்து வீட்டுக்குப் போனாலும் கேட்பதற்கு ஆளில்லை. ரூபா, தாய் வீட்டுக்குப் போயிருக்கிறாள். ரகு இவனை எதிர்பார்க்கமாட்டான். இரண்டு பேரிடமும் பத்து நாட்களுக்கு முன்பே உபந்நியாசம் கேட்க 'பர்மிஷன்' வாங்கியாயிற்று

புலவர் நீலமேகம் 'சரணாகதி சாஸ்திரம்' என்ற தலைப்பில் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

'அனுமனுடைய செயல்கள் ஒப்புயர்வற்றவை. வேறு யாராலும் செய்ய முடியாதவை. இதன் காரணமாகத்தான் அனுமனை உலகம் தலைசிறந்த இராம பக்தனாகவும் இராமனுடைய தொண்டனாகவும் சேவகனாகவும் கொண்டாடுகிறது, போற்றுகிறது, புகழ்கிறது..'

நீலமேகம் மிக எடுப்பான குரலில் சொற்சித்திரம் வரைந்து அனுமனைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். வேணுகோபாலுக்கு மெய்சிலிர்க்கிறது. கதையில் ஒன்றிப் போனாலும் காட்சிகள் மாறி மாறி மனத்தில் வருகின்றன. இரட்டை ரயில் பாதையில் ஏக காலத்தில் இரண்டு வண்டிகள் ஓடுவதைப்போல எண்ணங்கள் இரண்டாகக் கிளைத்து மிதமான கதியில் ஓடுகின்றன. ஒரு பக்கம் கதை; இன்னொரு பக்கம் யதார்த்தம்.

"வேணு,,, உன்னை மாதிரி இன்னொருத்தன் எனக்கு இத்தனை விசுவாசத்தோட உதவி ஒத்தாசை செய்ய முடியாதுப்பா.. இந்த ஜன்மத்திலே உன்னைப்போல ஒருத்தனை நான் பார்க்க முடியாது!" -எத்தனை முறை திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறான் ரகு!

"அப்படியெல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்தாதீங்கோ!"

"நான் சொல்லணும் வேணு. சொல்லாம இருந்தா நான் உன்னை ஒதுக்கி வக்கிற மாதிரி ஆயிடுமோன்னு உள்ளுக்குள்ளே எனக்குப் பயம்!" என்பான் ரகு.

இரண்டு பேரும் அதிகமாகவே பேசினார்கள். அதாவது, ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு, படிப்படியாக அது குறைந்துகொண்டு வந்திருக்கிறது.  அதில் குறையோ தவறோ இல்லைதான். பரஸ்பர அன்பும் மரியாதையும் வாய் வார்த்தைகளிலும், வெளித்தோற்றத்திலுமா இருக்கின்றன? இல்லை, அடிமனத்தில்தான் இருக்கிறது என்பது போல் ஆரவாரமெல்லாம் அடங்கிவிட்டன இருவரின் உறவில்.

பத்து வருஷம் இருக்கலாம். ரகு இளம் பட்டதாரியாகப் பத்மநாபன் ஏஜென்ஸியில் பயிற்சியாளனாகச் சேர்ந்திருந்த சமயம். அப்பொழுதுதான் முதல் முறையாக ரகுவை ஏற இறங்கப் பார்த்தான் வேணுகோபால். சம வயது இருக்கும்... படிப்பு இல்லாததால் பத்மநாபனின் டிரைவராக இருந்தான் அவன். ஒரு வாரத்திற்குள் ரகுவும் வேணுவும் பழகிவிட்டார்கள். ரகு வெளியே போகிற சமயங்களில் வேணுதான் சாரதி.

"உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா.."

"என்ன வேணு? சும்மா சொல்லு!" - ரகு தூண்டினான்.

"உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. சிநேகம் வச்சிக்கிற அளவுக்குப் படிப்பு இல்லே, அந்தஸ்து இல்லே, இருந்தா நான் ஒரு நல்ல நண்பனா இருப்பேன்.."

"இப்ப மாத்திரம் என்ன வேணு? நீ எனக்கு நண்பன்தான். சிநேகத்துக்குப் படிப்பும், பணமும் தடையில்லே. சொல்லப்போனா நான் பரம ஏழை. எப்படியோ ஒரு டிகிரி மட்டும் வாங்கிட்டேன். அவ்வளவுதான்!"

“வருங்காலத்திலே இது மாதிரி ஒரு ஏஜென்ஸியில் எக்ஸிகியூடிவ் ஆகப் போறீங்க.. அது நிச்சயம்.. அப்பவும் கூட நான் டிரைவாகவேதான் இருப்பேன்.”

"இது மாதிரி காம்ப்ளெக்ஸ் இருக்கக்கூடாது வேணு. இப்பத்தான் வேலையிலே சேர்ந்திருக்கேன். எக்ஸிகியூடிவ் ஆகணுங்கிற கனவெல்லாம் இப்ப எனக்கு இல்லே. எது எப்படி ஆனாலும் சரி, நீ என்னோட சகஜமா பழகணும். நண்பனா நினைக்கணும். சரிதானே?"

சம்மதப் புன்னகை.

இரண்டு வருஷம்கூட ஆகியிருக்காது. பதற்றத்தோடு வேணுகோபாலைக் கூப்பிட்டான் ரகு.

"வேணு, இந்த பத்மநாபன்கிட்டே என்னாலே வேலை பார்க்க முடியாது. இனிமே அதுக்கு சாத்தியமில்லே.." என்றான் ரகு. படபடப்பு அடங்கவில்லை.

நெற்றியைச் சுருக்கிக் கொண்டான் வேணு.

"மிஸஸ் பத்மநாபன்?" என்று ஒரே சொல்லிலேயே கேள்வியையும் முடக்கினான்.

"ஆமாம், வேணு! பயமா இருக்கு.. ரசாபாசமா அயிடுமோன்னு..!"

சூசகமாகவே பேசிக்கொண்டார்கள். மிஸஸ் பத்மநாபனின் பலவீனம் வேணுகோபாலுக்குத் தெரியாததல்ல. 

ரகுவைப் போல் எடுப்பான பட்டதாரி இளைஞன் எதிரில் நடமாடும்போது அந்தப் பெண்மணி சபலப்படாமல் இருப்பாளா? பத்மநாபன் அவளை விட இருபது வயது பெரியவர். இது ஒரு காரணம்.

"இதுக்குப் பயந்தா எக்ஸிகியூடிவ் ஆகறது எப்படி?" என்று விஷமமாகக் கேட்டான் வேணுகோபால்.

"அநாயவசியமா நான் எதுக்குப் பழிக்கு ஆளாகணும்? இந்தப் பரீட்சையெல்லாம்ம் எனக்கு வேண்டாம்..."

சொன்னபடியே செய்துவிட்டான் ரகு. அடுத்த மாதம் வேணுகோபால் தனியனாகிவிட்டான். வேறொரு ஏஜென்சியில் சேர்ந்தபிறகுஅவனுக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதியிருந்தான் ரகு.

'இராமனுடைய தொண்டன், அடிமை என்பதைத் தவிர வேறு எந்தவிதமான உறவையும் இராமனோடு கொள்ளாதவன் அனுமன். அத்தகைய அனுமனை இராமன் எப்படி நடத்தினான், அவனிடம் இராமனின் மனப்போக்கு எப்படி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்."

புலவர் நீலமேகம் கம்பீரமாகக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். சரணாகதி தத்துவம் சதிராட்டம் போடுகிறது.

மறுபடியும் வேணுகோபாலின் எண்ண ஓட்டம்...

ரகுவைப் போலவே வேணுவும் பத்மநாபன் ஏஜென்ஸி வேலையை உதறிவிட்டு வேலையின்றி அலைந்து திரிந்துகொண்டிருந்த நேரத்தில் தற்செயலாக ரகுவைச் சந்தித்தபோது - 

காரிலிருந்து இறங்கிய ரகு, "என்ன பாக்கறே, வேணூ? இப்ப நான் ஒரு எக்ஸிகியூடிவ். ஏறு வண்டியில்!" என்று கையைப்பிடித்து இழுத்தான்.

பிரமிப்புக் கலையாமல் ரகுவை வெறித்துப் பார்த்தாலும் உள்ளம் தாமரையாக அகன்று விரிந்தது, பூரிப்பில்.

"இப்பவாவது உன்னைக் கண்டுபிடிச்சேனே! இனி உன்னை எங்கேயும் விடமாட்டேன்!' என்றான் ரகு. தன்னுடைய வளர்ச்சியைப் பற்றி அவனிடம் விவரித்தான். பத்மநாபனைவிட்டு வெளியேற நேர்ந்த விவரத்தை வேணுகோபால் சொன்னான்.

"இனிமே நீஎன்னோடவே இருக்கலாம்."

"டிரைவராகவா?"

"அதுக்கும் மேலே!"

"வேற எதுவும் வேண்டாம். டிரைவர் வேலை போதும்."

"சர்ச்சை எதுக்கு...? வா என்னோட..!"

வசதியான வீடு, பங்களா பாணியில். கார் ஷெட், அவுட்ஹவுஸ் வசதிகள்.

"நான் அவுட் ஹவுஸில் தங்கிக்கறேன்."

"நீ எனக்கு டிரைவர் இல்லே.."

"அதுதான் எனக்கும் கௌரவம்."

"உன் இஷ்டம். என்னமோ வித்தியாசமே நீ நெனைக்காம இருந்தா சரிதான்."

ரகுவின் பேரில் வேணுவுக்குப் பக்தி. அது என்ன பக்தி? எப்படி வந்தது? அவதார புருஷனைப் போல ரகுவை மதிக்கத் தோன்றுகிறது அவனுக்கு. முப்பது வயதுக்குள் அபாரமாக வளர்ந்து உயர்ந்துவிட்டான் என்ற பிரமிப்பினாலா?

வேணு எந்தப் பதிலையும் தேடவில்லை. அதற்கெல்லாம் அவசியம் இருப்பதாக அவன் நினைக்கவில்லை.

ரகுவை அடுத்து ரூபா...

"ரூபா! நான் சொல்லிக்கொண்டேயிருப்பேனே, அந்த வேணுகோபால்தான் இதோ, இங்கே.." என்று மனைவியிடம் அறிமுகப்படுத்தினான்.

அடக்கமாக அவளைப் பார்த்துவிட்டு ராமனுக்கேற்ற சீதை என்று உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

பத்மநாபனுக்கு அவனுக்கும் கல்யாணப் பத்திரிகை அனுப்பி வைத்ததைப் பற்றி ரகு சொன்னான். அது, தான் விலகிவிட்ட சமயம் என்பதை வேணு உணர்த்தினான்.

தொண்டனா, தோழனா என்பது புரியாமல், பேதப்படுத்திப் பார்க்க அவசியம் எதுவும் இல்லாமல், ரகுவின் வீட்டில் வேணுவும் ஒரு அங்கமாகி வருஷங்கள் ஓடிவிட்டன.

'அனுமனிடத்தில் இராமன் கொண்டிருந்த அன்பும் நன்றியும் மிகுதிப்பட, அதன் காரணமாக அனுமனை இடைவிடாது திரும்பத் திரும்ப தழுவிக் கொள்கிறான் இராமன். உதவி செய்வதற்கு உன்னையொத்தவர், நீ அல்லாமல், வேறு யார் இருக்கிறார்கள்? நீ செய்த பேருதவிக்கு உன்னைத் தழுவிக்கொள்வதைவிட நான் செய்யக்கூடிய செயல் வேறு எதுவுமில்லை என்கிறான் இராமன்..'

புலவர் நீலமேகம் கூட்டத்தைக் கட்டிப் போட்டுவிட்டார். அவர் பேச்சில் அத்தனை உருக்கம். நெகிழ்ச்சி. 

சரணாகதி தத்துவத்தைச் சாரலாகப் பொழிந்து தள்ளுகிறார்.

வேணுகோபாலின் விழிகள் கலங்கிவிட்டன. இவனுடைய உறவும் இப்படித்தானோ? வேணுவுக்கும் ரகுவுக்குமிடையே வித்தியாசம், முரண், எதுவும் தோன்றவில்லை. விந்தைதான்.

ரகுவும் ரூபாவும் ஏக குரலில் ஒருநாள் அவனை விசாரித்தார்கள்.

"வேணு! உனக்கு இப்ப என்ன வயசாச்சுன்னு நெனைக்கிறே?" - ரகுநாதன் கேட்டான்.

"அவசியமான கேள்வியா இது?"

"ஆமாம்.. இன்னும் விளையாட்டுப் பிள்ளைங்கிற நெனைப்பா?" என்று ரூபா குறுக்கிட்டாள்.

இரண்டு பேரும் என்ன பேச நினைக்கிறார்கள் என்பது புரிந்துவிட்டது.

"உங்களோட நான் இருக்கறது பிடிக்கலேன்னு சொல்லுங்கோ..!"

உன்னோட இன்னொருத்தியும் இங்க இருக்கணும்னு ஆசைப்படுறோம் வேணு.”

“இப்ப அதுக்கு அவசியமில்லே!”

“சரி. கூடிய சீக்கிரம் முடிவுக்கு வந்தா சரிதான்.”

முற்றுப்புள்ளி வைத்தாயிற்று.

பத்து நாட்களுக்கு முன்பு, ரூபா ஊருக்கு கிளம்பியபோது மறுபடியும் நினைவுபடுத்தினாள்.

“கல்யாணத்தைவிட எனக்குக் கடமை முக்கியம்!” என்றான்.

ரூபா விடவில்லை. “கடமைன்னு எதைச் சொல்றே?”

“உங்க ரெண்டு பேருக்கும் சேவை செய்யறதை!”

“அனுமார்னு நெனைப்போ?”

“அப்படித்தான் வச்சிக்கோங்களேன்.”

ரூபா பேச முடியாமல் திணறிப் போனாள். தங்கள் பேரில் இத்தனை பக்தியா என்ற மலைப்பு அவளுக்கு!

‘தன்னையே தன் அடியானுக்குத் தரக்கூடியவன் இராமன். அதனால் அனுமனை அவன் தழுவிக்கொண்டதுமல்லாமல் தன்னை இறுகத் தழுவிக் கொள்ளும்படி சொன்னான், அனுமனுக்கு விடை கொடுக்கும் போது.’

புலவர் நீலமேகம் கதையை முடிக்கும்போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. வெளியே மழை பிசுபிசுத்துக்கொண்டிருந்தது.

வேணுகோபாலின் சிந்தை முழுதும் சரணாகதி சாஸ்திரம் வியாபித்து நின்றது.

ரகுவையும் ரூபாவையும் நினைத்தபடி நடையைப் போட்டான் . முன்பே வீட்டுக்குத் திரும்பியிருப்பான் ரகு. 

இவன் தாமதித்துப் போய்ச் சேர்ந்தாலும் அவன் கேட்கப் போவதில்லை. அவுட் ஹவுஸில் அவசரமில்லாமல் முடங்கப் பொகிறவன்தானே!

ரூபா மட்டும் இப்பொழுது வீட்டில் இருந்தால் இவன் கேட்ட கதையை, காலையில் விவரிக்கச் சொல்லி, கேட்காமல் விட மாட்டாள். ரகுவுக்கு அத்தனை ஆர்வம் கிடையாது. அப்படிக் கேட்டாலும், நன்றிப் பெருக்கில் அனுமனை இராமன் தழுவிக்கொண்ட காட்சியை அவனிடம் வருணித்துச் சொல்லவா முடியும்?

மழைத்துளியாகவும், சாரலாகவும், குமிழாகவும் எண்ணங்கள்.. வீட்டை நெருங்கிக் கொண்டிருந்தபோது இடையிடையே மின்னல்கள்.

வாசலில் கார் நிற்பது முதலில் பார்வையில் பட்டது. ரகு அப்பொழுதுதான் வந்திருக்க வேண்டும். அவன் கார் கதவைத் திறக்கும்போது சன்னமாக வெட்டிய மின்னல்களோடு ஒரு பெண்ணை அடையாளம் காட்டியது. நிச்சயமாக அவள் ரூபா இல்லை.

அவள் இறங்கியதும் ரகு கையை நீட்ட, நெருக்கத்துடன் நடந்துபோனார்கள் இருவரும்.

இன்னொரு மின்னல்! அந்தப் பெண்ணின் தோள்களைத் தழுவியபடி கதவைத் திறந்துகொண்டு மறைந்தான் ரகு.

வெளியே நிலைகுத்தி நின்றான் வேணு. எக்ஸிகியூடிவி ரகு, ‘ராமன்’ இல்லையா?

*

நன்றி : ஜே.எம். சாலி, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்ஷி