Showing posts with label சுகுமாரன். Show all posts
Showing posts with label சுகுமாரன். Show all posts

Friday, April 3, 2026

முந்நூறு குழந்தைகள் - சுகுமாரன் கவிதை

 


*
முந்நூறு குழந்தைகள் - சுகுமாரன்

அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
அவர்களுக்கு
முந்நூறு அம்மாக்களும் 
முந்நூறு அப்பாக்களும் இருந்தார்கள்
அதை விட அதிகம்
அண்ணன்மாரும் அக்காள்மாரும்
தம்பிமாரும் தங்கைமாரும் இருந்தார்கள்.
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும் 
முந்நூறு வீடுகள் இருந்தன
அதைவிட அதிகம் 
செல்லப் பிராணிகளும் 
செல்லப் பறவைகளும் 
செல்லத் தாவரங்களும் இருந்தன. 
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும்
முந்நூறு புன்னகைகளும் முந்நூறு அழுகைகளும்
முந்நூறு பசிகளும் முந்நூறு விடாய்களும் இருந்தன
அதை விட அதிகம் 
விளையாட்டுகளும்  பாடல்களும் இருந்தன.
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும்
ஒரே பள்ளிக்கூடமும் ஒரே பாடமும்
ஒரே பள்ளிவாசலும் ஒரே இறைவனும் இருந்தன.
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும் 
முந்நூறு வண்ணமுள்ள
ஒரே ஊர் இருந்தது
பிசாசுகள்  தாண்டவமாடிய நாளுக்குப் பின்பு
அவர்கள் முந்நூறு பேருக்கும்
முந்நூறு குழிகளுள்ள  ஒரே இடுகாடு  இருக்கிறது.
*


Monday, July 11, 2016

தீர்வு - சி.மணி கவிதை

கவிஞர் நேசமித்திரனின் ஃபேஸ்புக்கில் பார்த்த இந்தக் கவிதையும், பெயர் சொல்லாமல் நேசன் தேர்ந்தெடுத்திருந்த Bryon Draper வடித்த சிற்பமும் பிடித்திருந்தது. நன்றியுடன் பகிர்கிறேன். - AB-


தீர்வு - சி.மணி

என்ன செய்வ திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றிருந் தால் பிரச்னை இல்லை
மற்ற நேரம் நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தொங்காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.

**
தொடர்புடைய சுட்டிகள் :
சி.மணி (1936 - 2009) - சுகுமாரன்
சி. மணியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்

Wednesday, July 17, 2013

'தனிமையின் நூறு ஆண்டுகள்’ ஏன் படிக்க வேண்டும்? - கே.என்.சிவராமன்

இதென்ன கேள்வி , இங்கே ஒரு பதிவு போடத்தான்! தமாஷ் இருக்கட்டும்.. -தினகரன் வசந்தத்தில் 14-7-2013 அன்று வெளியான நண்பர் சிவராமனின் இந்த முக்கியமான கட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் தாஜ். கதையின் சில மையப் பகுதிகள் அவருடைய 'இறந்தவன் காலம்' குறு நாவலை நினைவுறுத்துவதாக இருந்ததாம்.  சரி, இனி  தாஜ்க்கேஸ் என்று அழைத்துவிடுவோம் அவரை. 

சிறிய சைஸில் தனது கட்டுரையை ஸ்கேன் செய்து வெளியிட்டு  , ‘நண்பர்கள் பக்கங்களை சரிவர படிக்க முடியவில்லை என்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. ;-( ’ என்று வருந்தும் நம்  சிவராமனுக்கும் இது உதவக்கூடுமென்பதால் உடன் வெளியிடுகிறேன். நன்றி. - ஆபிதீன்

***
click to enlarge the image


தனிமையின் நூறு ஆண்டுகள்
காலச்சுவடு வெளியீடு:

ஏன் இந்த நாவலை படிக்க வேண்டும்?

கே.என்.சிவராமன்

நல்ல கேள்விதான் இல்லையா? தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களை படிக்கவே நேரமில்லாமல் தவிக்கும்போது ஸ்பானிய மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலை எதற்காக வேலை மெனக்கெட்டு வாசிக்க வேண்டும்?

காரணமிருக்கிறது. 1967-ல், ஸ்பானிஷ் மொழியில் வெளியான இந்த நாவலின் பெயர், 'Cien años de soledad' எழுதியவர் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez). தென் அமெரிக்க நாடுகளில் சக்கைப் போடு போட்ட இந்த நாவல், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 'One Hundred Years of Solitude' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்தது.

அதற்கு பிறகு இன்றுவரை ஏறக்குறைய 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புதினம், இதுவரை 20 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. இது அதிகாரப்பூர்வமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை. இது தவிர, திருட்டுத்தனமாக பல மொழிகளில் இந்த நாவல் வந்திருக்கிறது. இந்த 'கள்ளக் கடத்தலில்' இருந்து இந்தியாவும் தப்பவில்லை.

யெஸ், மலையாளத்திலும், இந்தியிலும் மட்டுமே ரைட்ஸ் வாங்கி இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்கள். வங்காள மொழியில் அப்படி செய்யவில்லை. காதும் காதும் வைத்தது போல கமுக்கமாக மொழிபெயர்த்து ரிலீஸ் செய்துவிட்டார்கள். நாவலும் ஜோராக விற்றது. இந்த மொழிபெயர்ப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு வங்காள இயக்குனர், மெய்மறந்து இந்தப் புதினத்தை படமாக்க ஆரம்பித்துவிட்டார். பிடித்தது சனி. தகவல் மார்க்கேஸின் காதுகளுக்கு போனது. உடனே வழக்கு தொடரப்பட்டது. இதெல்லாம் பழங்கதை.


இப்படியான அசம்பாவிதம் எதுவும் தமிழ் மொழி பெயர்ப்புக்கு ஏற்படவில்லை. 'பாண்ட்' பேப்பரில் கையெழுத்திட்டு முறைப்படி உரிமை வாங்கிதான் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

ரைட், இதற்காகத்தான் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டுமா? இல்லை. இதெல்லாம் சும்மா ஸ்நாக்ஸ்தான். ஆரோக்கியமான டிஷ், உண்மையில் வேறு. அது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் வலு சேர்ப்பது என்பதுதான் இதிலுள்ள ஸ்பெஷல்.

என்று நாவலும், சிறுகதைகளும் தமிழில் எழுதப்பட ஆரம்பித்ததோ, அன்று முதல் பிற மொழி எழுத்தாளர்களின் தாக்கம் அல்லது சாயல் பாலில் கலந்த தண்ணீராக நம் மொழியில் உடன் பயணிக்கிறது. இதை தவறென்று சொல்ல
முடியாது. காரணம், யாரும் 'காப்பி' அடிக்கவில்லை. பதிலாக பிற மொழி எழுத்தாளர்களின் படைப்பில் 'இன்ஸ்பையர்' ஆகியிருக்கிறார்கள்.

சிறு பத்திரிகை இலக்கியத்தை குத்துமதிப்பாக புதுமைப்பித்தனிடமிருந்து தொடங்குவோம். இவரிடம் மாப்பஸான், ஓ ஹென்றியின் தாக்கம் உண்டு. இவருக்கு பின் வந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் செகாவ், டால்ஸ்டாய்,
தாஸ்தாவெஸ்கி, காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோரின் பாதிப்பை சர்வ நிச்சயமாக காணலாம்.

அதே போல வெகுஜன எழுத்தாளர்களில் கல்கியிடம், அலெக்சாண்டர் டூமாஸின் சாயல் உண்டு. அதன் பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள் எந்தெந்த பிறமொழி எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்டார்கள் என்பதை அகதா கிறிஸ்டியில் தொடங்கி, சிட்னி ஷெல்டனில் மையம் கொண்டு, இன்றைய டான் பிரவுன் வரை ரூம் போட்டு ஆராயலாம்.

அந்த வகையில் 1990க்கு பிறகு வந்த சிறுபத்திரிகை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களிடம் இருவரின் தாக்கம் உண்டு. ஒருவர், போர்ஹே. அடுத்தவர் மார்க்கேஸ். இவர்களில் மார்க்கேஸ், சம்திங் ஸ்பெஷல். ஏனெனில், மேஜிக்கல் ரியலிசம்' எனப்படும் மாய யதார்த்தவாத படைப்புகளின் முன்னோடி இவர்தான். அதாவது, கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் துவைத்த துணிகளை வரிசையாக கொடியில் உலர்த்துவதாக கொள்வோம். ஒரு கட்டத்தில் உலர்த்தப்படும் துணி, விண்ணுலகம் நோக்கி சென்று விடும்! இதைத்தான் மேஜிக்கல் ரியலிஸம் என்கிறார்கள்.

ஆனால், மார்க்கேஸ், 'நான் யதார்த்த பாணியில்தான் எழுதுகிறேன். அது உங்களுக்கு மாய யதார்த்தமாக தெரிகிறது. கரீபியன் பகுதி மக்கள் எப்படி பேசுகிறார்களோ, எந்த உவமைகளை சொல்கிறார்களோ அதைத்தான் எழுத்தாக வடிக்கிறேன்' என்கிறார்.

இது உண்மையும் கூட. அடிப்படையில் மார்க்கேஸ் பத்திரிகையாளர். எனவே மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர், இருப்பவர். அவர்களது எதிர்பார்ப்பும், தேவைகளும் மற்றவர்களைவிட இவருக்கு நன்றாகவே தெரியும். 'ElEspectador'
பத்திரிகையில் இவர் பணிபுரிந்த காலத்தில், சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நிறைய எழுதியிருக்கிறார். அவை சர்ச்சையையும் கிளப்பியிருக்கின்றன. தடை செய்யப்பட்டும் இருக்கின்றன.

எனவே மறை பொருளாக சமூக அவலங்களை சொல்ல நினைத்தவருக்கு நாவலின் பக்கம் கவனம் திரும்பியது. 1948ல், 'லீஃப் ஸ்ட்ராம்' (Leaf Storm) என்ற தன் முதல் நாவலை எழுதினார். ஆனால், அது பிரசுரமாக ஏழு ஆண்டுகள் பிடித்தது. அதன் பின்னர் தன் தாய்வழி தாத்தா பாட்டியின் வீட்டை மையமாக வைத்து ஒரு புதினத்தை எழுத விரும்பினார்.

ஆனால், எவ்வளவு யோசித்தும் நாவலின் எழுத்து நடை கை கூடவே இல்லை. இந் நிலையில் ஒரு நாள் தன் மனைவி, குழந்தைகளுடன் காரில் பிக்னிக் சென்றார். பாதிவழியில் அதுநாள்வரை இவர் தேடிக் கொண்டிருந்த எழுத்து நடை மின்னலென தாக்கியது. பாட்டியின் கதை சொல்லும் பாணி...

உடனே பிக்னிக் கேன்சல் என்று அறிவித்துவிட்டு காரை திருப்பி வீட்டுக்கு வந்தார். கையோடு தன் ராஜினாமா கடிதத்தை பத்திரிகைக்கு அனுப்பினார். இருந்த காரை விற்று வந்த பணத்தை தன் மனைவியிடம் கொடுத்தார். 'எனது அறையில் தங்கி ஒரு நாவலை எழுதப் போகிறேன். கண்டிப்பாக அது உலகளவில் பேசப்படும். என்னை நம்பு. நாவல் எழுதி முடிக்கும் வரை வீட்டுச் செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக் கொள்...'

மார்க்கேஸின் மனைவி மெர்சிடஸ் பர்ஷா (Mercedes Barcha) இதற்கு தடையேதும் சொல்லவில்லை. காதலித்து மணந்தவருக்கு கணவரின் அருமை பெருமை தெரியாதா என்ன?

அறையே கதியென்று கிடந்தார் மார்க்கேஸ். மடமடவென எழுதினார். எழுதியதை கிழித்துப் போட்டார். மீண்டும் எழுதினார். அதை அடித்துத் திருத்தினார். வேளாவேளைக்கு உணவு தேடி வந்தது. கேட்டபோதெல்லாம் காபி கிடைத்தது. ஒரு வழியாக பதினெட்டு மாதங்களுக்கு பிறகு விரும்பியபடி நாவலை எழுதி முடித்தார்.

அதன் பிறகு அறையைவிட்டு வெளியே வந்தவருக்கு சில உண்மைகள் முகத்தில் அறைந்தன. அதில் முதலாவது, வீட்டு வாடகை ஒன்பது மாதங்கள் பாக்கி. மளிகை கடைக்கு பத்து மாதங்களாக பணம் தரவில்லை. இந்த விஷயம் தெரிந்தால் எங்கே மார்க்கேஸின் எழுத்து பாதிக்கப்பட்டு விடுமோ என்று மறைத்து கடன்காரர்களை தனியாகவே சமாளித்தார் மெர்சிடஸ் பர்ஷா.

இப்படி காதல் மனைவியின் பராமரிப்பில் மார்கேஸ் எழுதிய நாவல்தான், இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் 'தனிமையின் நூறு ஆண்டுகள்'. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்த நாவலின் கதை, ஒரு வகையில் ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளின் வரலாறுதான்.

பத்தொன்பது குடும்பங்களுடன் ஹோசே அர்க்காத்தியோ புயேந்தியா தன் ஊரை விட்டு வெளியேறுகிறார். மரணத்தின் நிழல்படாத 'மகோந்தா' என்னும் புதிய ஊரை அவர்கள் உருவாக்குகிறார்கள். வெளியுலகத்தோடு தொடர்பற்று இருக்கும் இந்த ஊரைத் தேடி ஜிப்சிக்கள் தங்கள் வித்தைகளுடன் வருகிறார்கள். 'மகேந்தா'வின் மக்கள் அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் அவர்கள் வழியாகவே அறிகிறார்கள். உலகின் அறிவியல் பாய்ச்சலுக்கு 'மகோந்தா' ஈடுகொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட புயேந்திரா, வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ள முயன்று இறுதியில் பித்துப்பிடித்து ஒரு மரத்தடியில் மரணமடைகிறார்.

முதல் புயேந்தியாவின் கனவுகள் அவருடைய வாரிசுகளின் காலத்தில் நிறைவேறுகிறது. 'மகோந்தா' நகரத்துக்கு ரயில் வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் நுழைகின்றன. பன்னாட்டு நிறுவனம் வருகிறது. போர் வருகிறது. பசியும், பஞ்சமும், மரணமும் வருகின்றன. தொழிலாளர் புரட்சி வெடிக்கிறது. தேவாலயம் எழுகிறது. துருக்கியர்களும், அராபியர்களும், கருப்பர்களும் வருகிறார்கள். நீதிபதி வருகிறார். ராணுவம் வருகிறது. இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. மெல்ல அந்த ஊர் தன் ஆன்மாவை இழக்கிறது. இயற்கை ஏமாற்றுகிறது. நான்கு வருடங்கள் தொடர்ந்து மழை பெய்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் மழையே இல்லாமல் வறட்சியில் வாடுகிறது. ஒரு கட்டத்தில் மக்களால் கைவிடப்பட்டு, ஒட்டு மொத்தமாக அழிந்து போகிறது 'மகோந்தா...'

இதுதான் இந்த நாவலின் கதை. இதுவேதான் நம் நாட்டின் சரித்திரமும். இப்போது தலைப்பை படித்துவிட்டு முதல் பத்தியில் இருந்து மீண்டும் இந்தக் கட்டுரையை வாசிக்கத் தொடங்குங்கள்.

***

நன்றி: கே.என்.சிவராமன் , தினகரன் ஞாயிறு மலர் (14.7.2013) , தாஜ்

Monday, November 19, 2012

ஓவியர் ஜான் மீரோ - கவிஞர் சுகுமாரன்


“The painting rises from the brushstrokes as a poem rises from the words. The meaning comes later.” - John Miro

***
மதிப்பிற்குரிய பிரம்மராஜனின்  'மீட்சி' சிற்றிதழில் (மார்ச்-ஏப்ரல், 1984) நண்பர் சுகுமாரன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பதிவிடுகிறேன். 'திசைகளும் தடங்களும்' தொகுப்பில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட தொகுப்பு இது. வாசிப்பின் புதிய எல்லைகளை அறியத் தூண்டுதலாக இருந்திருக்கிறார் எஸ்.வி.ஆர் - நமக்கு சுகுமார் மாதிரி. ''இலக்கியமும் கலையும் இருத்தலியல் அனுபவங்கள். இருப்பிலிருந்து வாழ்வு நோக்கி உயர மனித மனம் கொள்ளும் வேட்கையின் வினையும் எதிர்வினைகளும்தான் அவற்றின் அடிப்படை' என்பார் சுகுமார் , தன் முன்னுரையில். இந்தத் தொகுப்பு பற்றி நண்பர் பி.கே.எஸ் எழுதிய விமர்சனம் காண இங்கே க்ளிக் செய்யுங்கள். ஏற்கனவே இந்தத் தொகுப்பிலிருந்து எடுத்த வான்காவின் கடிதங்களை நண்பர்கள் படித்திருக்கலாம்.  'முயற்சிகளின் முடிவில் மீரோ , மீரோவைக் கண்டடைந்தார்' என்று ஆன்மீகமாகச் சொல்லும் சுகுமாரனை இதிலும் காணலாம். கண்டடையுங்கள் - நேற்று கூகில்+-ல் மீரோவின் புகைப்படத்தை - பெயரைக் குறிப்பிடாமல் - போட்டு,  நாளை இவர் பற்றிய கட்டுரை வெளியாகும் என்று தமாஷ் செய்த சில நொடிகளில் ஐஃபோன் உதவியுடன் சித்தார்த்தும் ( 'ஐஃபோன்ல இருக்கற கூகுள் நிரல்ல கூகுள் காகில்ஸ்னு ஒரு விஷயம் இருக்கு. அத போட்டதும், எத தேடனும்? படம் பிடின்னு காமராவ ஆன் செஞ்சிது. இந்த புகைப்படத்த குறிப்பா அந்த முகத்த படம் பிடிச்சேன். சரியா 2 நொடிகள். பேர கொண்டு வந்து வந்துருச்சு!') images.google.com-ல் தேடி சென்ஷியும் கண்டடைந்தார்களே... அந்த மாதிரி..! - ஆபிதீன்

**
ஜான் மீரோ

சுகுமாரன்

யெஹான் மீரோ (John Miro 1893-1984) சென்ற ஜனவரியில் காலமானார். ஓவியக் கலையில் நவீன யுகத்தை நிறுவி வளர்ந்த முன்னோடிகளில் கடைசி நபரும் காட்சியரங்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

1893இல் ஸ்பானிய பிரதேசமொன்றில் பிறந்தார். கிராமிய வாழ்வின் உயிர்த்துடிப்புள்ள மனப்படிமங்களுடன் 1919இல் பாரிசில் குடியேறினார். மனிதனின் இளமை, மரபு ரீதியான பழக்கங்கள், புராணிகங்கள் மீரோவின் மூலமாக ஓவியங்களில் இடம்பெற்றன.

மீரோவின் படைப்புகள் அசாதாரண எளிமையும், அதேசமயம் நினைவுகளைத் தொந்தரவு செய்யக்கூடிய தீவிரத் தன்மையும் கொண்டவை. மீரோவின் இந்தத் திறன் ·ப்ராய்ட், யுங் ஆகிய உளவியலாளர்களின் சித்தாந்தங்களால் தூண்டப் பெற்று செயல்பட்டு வந்த அமெரிக்க ஓவியர்களான ஜாக்ஸன் பொல்லாக், ஆர்ஷெல் கார்க்கி, ராபர்ட்மதர்வெல் போன்றவர்களின் இயக்கத்தைத் திசை திருப்பியது. கட்டற்ற வர்ணப் பரப்புகளின் மீது புராணிக விஷயங்களை இணைத்து நவீனத்துவமான மதிப்பீடுகளை உருவாக்கும் முறையை இந்த ஓவியர்கள் மீரோவிடமிருந்து கற்றுக்கொண்டு பரவலாக்கினார்கள்.

பாரிஸை அடைந்த மீரோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் பிந்திய இம்ப்ரஷனிஸ ஓவியங்களின் செல்வாக்கு இருந்தது. தொடர்ச்சியான சோதனை முயற்சிகளின் முடிவில் மீரோ மீரோவைக் கண்டடைந்தார். மீரோ எந்தக் குழுவிலும் சாராமல் தணித்து நின்றார். எனினும் சர்ரியலிஸம் என்னும் இயக்கத்திற்கு மீரோ தேவைப்பட்டார். பெரும்பாலும் கவிஞர்களே நிறைந்திருந்த சர்ரியலிஸ இயக்கத்திற்கு மீரோவின் கான்வாசுகள் புதிய பரிமாணத்தை அளித்தன. 1926இல் முதலாவது சர்ரியலிஸ ஓவியக் கண்காட்சியில் மீரோ பங்கேற்றார். 'சர்ரியலிஸ்டுகளில் மிகப் பெரிய சர்ரியலிஸ்ட்' என்று சிறப்பிக்கவும்பட்டார்.

1930களில் இடைப்பகுதியில் மீரோவின் ஓவிய உலகம் மாறுதலடைந்தது. அடர்ந்த நிறங்களும் ராட்சச வடிவங்களும் அவரது திரைகளில் இடம்பெற்றன. தனது தாய்நாடாகிய ஸ்பெயின் மீது பாசிஸம் செலுத்திய ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதாக அவை அமைந்தன.

நிறங்களில் வெற்றுப் பரப்பில் நிறைய சிறிய உருவங்களைப் பரவவிட்ட பாணியை மீரோவின் படைப்புகளில் காணலாம். வயது ஆக ஆக மீரோவின் பாணி மாற்றமடைந்து வந்தது. பிற்கால ஓவியங்கள், வெறும் நிறப்பரப்பில் ஒற்றை உருவங்கள் கொண்டவையாக இருந்து, கடைசிக்கட்ட ஓவியங்கள் விரிந்த நிறப்பரப்பில் தீர்க்கமான தூரிகை வீச்சுக்களை மட்டுமே கொண்டிருந்தன.

யெஹான் மீரோவை, பாப்லோ பிக்காஸோவுடன் ஒப்பிடலாம். பிக்காஸோவைப் போலவே மீரோவும் ஸ்பானிய மரபிலிருந்து தோன்றியவர். எந்தக் குழுவிலும் அடைபடாமல் சுதந்திரமாகச் செயல்பட்டவர். தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டவர். சமகாலக் கலைஞர்களிடம் வலுவான செல்வாக்குச் செலுத்தியவர். கிராபிக்ஸ், எட்சிங், சுவர் ஓவியங்கள், சிற்பம் என்று பல சாதனைங்களையும் வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர். பிக்காஸோவைப் போலவே தொண்ணூறுகளின் தொடக்க வயதில் இறந்தும் போனார்.

பிக்காஸோவுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமும், புகழும் மீரோ என்ற சர்ரியலிஸ்டை அணுகவில்லை. எனினும், நவீன ஓவியக் கலைக்கு உயிர் கொடுத்ததில் யெஹொன் மீரோ வகித்த இடம் பிக்காஸோவுக்குச் சமமானது.

***
நன்றி : சுகுமாரன், மீட்சி, அன்னம் பதிப்பகம்
***