Sunday, July 27, 2014

Take The Lead டான்ஸ்!

நோன்புப் பெருநாள் சமயத்தில் கவாலி, கஜல் என்று போட்டு அலுத்துவிட்டது. ஒரு மாறுதலுக்கு இந்தப் பதிவு.  இருமடங்கு சாப்பிட்டவர்கள் இலகுவாக இளைக்க இது உதவும். 'The first song is Wanna Ride by Wisin y Yandel and the second song is Teach Me How To Dance by Che'Nelle' என்கிறார் Maddy D .  'டான்ஸ் கீன்ஸ்லாம் ஹராம்ங்க..'  என்பவர்கள் , 'நான் ஒரு நாய். என்னைவிட பகுத்தறிவில் குறைந்த மிருகங்களாகிய மனிதர்கள் நீங்கள் என்பதால் உங்களுக்கு நீங்களே 'நாய்கள் பேசுவதில்லை' என்று சொல்லிக்கொள்கிறீர்கள். எனினும் பிரேதங்கள் பேசுகின்ற, அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பேயில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தும் பாத்திரங்கள் வருகின்ற கதையை மட்டும் நீங்கள் நம்புவீர்கள். நாய்கள் பேசும். ஆனால் கேட்பது எப்படி என்று தெரிந்தவர்களிடம் மட்டும்' என்று 'நான் ஒரு சிவப்பு' நாவலில் ஓரான் பாமுக் எழுதியது குறித்து யோசிக்கலாம். அல்லது எட்வர்ட் சயீதின் நேர்காணல் பார்க்கலாம். நன்றி. ஈத் முபாரக்!
**
**
Thanks to : ANCIENTTALES , Sadiq

Sunday, July 20, 2014

'லறீனா அப்துல் ஹக்'கின் படைப்புகளை முன்வைத்து: ஒரு மதிப்பீடு - தாஜ்

[லறீனா அப்துல் ஹக் எழுதிய நாவலான 'ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்' மற்றும் அவரது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'பொருள் வெளி' ஆகிய இரண்டையும் முன்வைத்தே இந்த மதிப்பீட்டு முயற்சி.] - தாஜ்

***

'ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்' - நாவல்

இந் நாவலின் போக்கில் கதையாசிரியர் தன் வாழ்வின் நிலைப்பாட்டை நிறுவியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. தலைப்பில் சுட்டியிருக்கும் 'தீப்பிழம்பு' கூட ஆசிரியரை அர்த்தப்படுத்துவதாக உணர்கிறேன்..

ரஹிமா டீச்சர், தனது பணிக்காலத்தில், தன் கண்முன்னே நிகழ்ந்தேறும் சிறார்களின் சிதைவுகளைக் கண்டு பொறுக்கமாட்டாதவராக இருக்கிறார். தன்னாலான உதவிகளையும் அச்சிறார்களுக்கு முன்வந்து செய்பவராக இருக்கிறார்! 

அவ்வாறான சேவை மனப்பான்மைதான் வாழ்வை அர்த்தப்படுத்தும் என்றும் நம்புகிறார். தன்னுடைய உறவுகள் தன் கண்முன்னே சிதைவதைக் கண்டவர் அவர். அதனாலோ என்னவோ பிறர் நலன் பேணுதலில் நிம்மதி கொள்வதாக சிலருக்குத் தோன்றக்கூடும். நிஜத்தில் அப்படியல்ல என்பது திண்ணம். அவரது சிந்தையின்படிக்கு, உறவுகள் உயிரோடு வாழ்ந்திருக்கும் பட்சமும் தன் வாழ்வின் ஓட்டத்தில் அவர் இப்படியான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவராகத்தான் இருந்திருப்பார். அவரது பிற எழுத்துக்கள் கிடைக்கப் பெற்று வாசித்திருக்கும் என்னையொத்த வாசகர்கள் என் கூற்றை எளிதில் அனுமானிப்பார்கள். .

போர்களில் ஈடுபடும் பூமியில், மக்களின் யதார்த்த வாழ்வுமாறி, நாசகாரச் சிதைவுகள் ஒருபாடு நடந்தேறும் என்பது தவிர்க்க முடியாத விதியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பூமியில் வாழநேரும் சிறார்கள், கல்வியில் தேர்ந்து, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பெருமை சேர்ப்பவர்களாக விளங்க வேண்டியவர்கள்,  இளம் பருவத்திலேயே கருகி மண்ணில் உதிர்வது கொடுமை. படைப்பாளியின் காலகட்டத்தில் அவரது மண்ணும் அப்படியான சாபத்திற்கு ஆட்பட்டுப் போனது என்பது சொல்லொண்ணா சோகம். ரஹிமா டீச்சரின் ஆளுமைக்கு உட்பட்ட பள்ளிவகுப்பில், அவரது கண்ணெதிரே சிதையும் சிறார்களுக்கான சேவையில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார். 

இந்த நாவலில், ரஹிமா டீச்சர், தான் பயின்ற  உளவியல் ரீதியான உதவியுடன் பிரச்சனைகளோடு பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளைத் தேற்றுகிறார். என்றாலும், அந்தச் சிறார்களின் வீடும் மக்களும் அவர்களை மீண்டும் சிதைத்து விடுகின்றார்கள். நேர்படுத்த முடிகிற சிறார்களுக்காக மனமகிழ்வு கொள்ளும் டீச்சர், முயன்றும் தன்னால் காபந்துசெய்ய முடியாமல் போகும் மாணவ மாணவிகளுக்காகத் துயரமும் கொள்கிறார். அதே கணம் வாசகனும் அப்படியொரு மகிழ்வையும், துயரத்தையும் அடைகிறான். நாவலின் வெற்றிகளில் இதுவும் ஒன்று! நாவல் எழுதுபவரின் மன நிலையை வாசக மனதில் ஏற்றிவைப்பது சாதாரணமானதல்ல!

நாவல் ஆசிரியரின் உரைநடை பெரிய பெரிய சங்கதிகளை எல்லாம் ரொம்பவும் லகுவாக, சர்வசாதாரணமாகச் சொல்லிக்கொண்டே போகிறது! இது அவரது முதல் நாவல். என்றாலும் அப்படித் தெரியவில்லை. அத்தனைக்கு வாசிப்பில் நம்மை ஒன்றவைக்கிறது. நதியோட்டமான, நளினமான, அர்த்தச் சுழிப்புகள் கொண்ட அவரது உரைநடை எவரையும் கவரும் மலைக்கவும் வைக்கும்!  

நாவல் என்பது நிச்சயம் சிறுகதை வடிவமோ, குறுநாவல் வடிவமோ அல்ல. கதைக்குள் எடுத்தாளும் கதாபாத்திரங்களின் எல்லாப் பரிமாணங்களையும் துருவித் துருவி அதன் உச்சம் தொட்டுச் சொல்ல வல்லதே நாவல்! ஆசிரியர் இந்த நாவலில் பத்துக்கும் மேற்பட்ட சிறார்களது ஒடுக்கப்படும் சம்பவங்களையும் அவர்களது சிதைவுகளையும் சொல்ல முற்படுகிறார். என்றாலும், கதையோட்டம் அம்பாய்ப் பாய்ந்து விண்ணென நாவலின் முடிவை சடுதியில் எட்டவே நிற்கிறது. 

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதான நாலாபுறச் சங்கதிகளையும் அதனூடான சாதகப் பாதகங்களையும் சொல்ல முற்பட்டிருக்க வேண்டிய நாவல், தன்னை சட்டென முடித்துக் கொள்கிறது. என்றாலும், நாவலில் சுபா என்கிற இளம் பெண்ணின் செய்திகள் மட்டும் கூடுதலாக விசாலம் கொண்டு இருப்பதை. மறுப்பதற்கு இல்லை. பாத்துமாவின் சங்கதியும் கூடுதல் குறைவாய் சொல்லப்பட்டிருந்தாலும் அது இன்னும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

ரஹிமா டீச்சரின் மகன் கண்ணிவெடியில் சிக்கி அவரது கண்முன்னே சிதைவதையும்.. அவரது. கணவர் ஆயுதக் குழுக்களால் பலி கொள்ளப்படுவதையும்  ஆசிரியர் கட்டாயம் விரிவாய் நாவலில் பதிந்திருக்க வேண்டும். இந்நாவலின் உயிர்ப்புக்கு அது எத்தனை உயிரோட்டமானதென ஆசிரியர் அறியாதவர் அல்ல. இன்னொரு பக்கம், இன்றையக் காலகட்டத்தில் அவரது மண்ணில் வாழ்ந்தபடிக்கு அப்படியெல்லாம் எதனையும் எளிதில் எழுதிவிட இயலாதென்பதும் 
நிதர்சனம். 

தமிழக மண்ணில், பெண்மையைப் போற்றுகிற பேர்வழிகளாய் இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி யென்று ஏகப்பட்ட எழுத்தாளர்கள் பிரபல வியாபார சஞ்சிகைகளில் ஒரு காலகட்டத்தில் கொடி போட்டவர்களாக இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர்களின் எழுத்துக்கள் அவர்கள் வாழ்கிற காலத்திலேயே, அவர்களது கண்முன்னேயே காணடிந்து கொண்டே இருக்கிறது. ஒத்தைக் குறிக்கோளுடனும், கொள்கைவயப்பட்டும் பிடிவாதமாய் எழுதப்படும் எழுத்தின் நாளைய 
நிலை என்பதும் இப்படித்தான். 

ஒரு எழுத்தாளன் தனது ஆக்கங்களில், அது சிறுகதையானாலும், குறுநாவல் ஆனாலும், நாவல், கவிதையென்றே ஆனாலும் தான் சார்ந்த கொள்கையினைத் தூக்கிப் பிடிக்கிற போது, அங்கே படைப்பு என்கிற நிலைமாறி, திரிந்தது பிரச்சாரமாக எதிரொலிக்கும். ஆனால், தான் சார்ந்த கொள்கையை நாவலின் விசாலப் பரப்பை பயன்படுத்தி கலைநேர்த்தியோடு இலைமறை காய்மறைவாய், பின்னலாய் எழுதப்படும் பட்சம் நாவல் பழுதில்லாமல் தப்பித்துவிடும். கொள்கை 
கோட்பாடுகள் பேசும் பெரிய பெரிய நாவல்கள் எல்லாம் இப்படியான கலை நேர்த்தியிலேயே சிறப்பு கொண்டுவிடுகிறது. 

நாவல் குறித்து நான் இத்தனை பேசினாலும் 'ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்' எனக்கு இஸ்டமாகவே இருந்தது. போரினால் முகம்மாறிய அந்த மண்ணில் சிறார்கள் எதிர் கொள்ளும் சிதைவுகளை இறுகிய மனத்துடன் வாசித்தேன் என்பதே உண்மை.

***
'பொருள் வெளி' - ஆய்வுக் கட்டுரைகள்:

இந்தத் தொகுப்பில், ஏழு தலைப்பின் கீழ் ஆய்வு செய்திருக்கிறார் லறீனா அப்துல் ஹக். இந்த ஆய்வை எழுதியதற்காக அவர் நிரம்பப் பெருமை கொள்ளலாம். அத்தனைக்கு அடர்த்தியும் ஆழமும் வாய்ந்த ஆய்வாக இது இருக்கிறது. 

எடுத்துக் கொண்ட ஒவ்வொரு தலைப்பின் கீழும் அவர் ஆய்வு செய்திருக்கும் விதம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு படியாய் ஆய்வை மேலே நகர்த்திக் கொண்டே போகும் விதம் மெச்சத் தகுந்தது! 

இதனை எழுத, அவர் வாசித்ததாக குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை கொஞ்சமல்ல!. இதற்கென நேரமும் காலமும் பிரத்தியேகமாக ஒதுக்கினாலொழிய இதனை எழுதியிருக்க இயலாது போயிருக்கும். இந்த ஆய்வில் சில கட்டுரைகளுக்காக அவர் பிறமொழிகளில் இருந்து நிறைய சங்கதிகளை சிரமம்பாராது மொழிமாற்றமும் செய்திருக்கிறார்! 

1. கலை இலக்கியங்களில் 'பெண்' பற்றிய புனைவு: சில குறிப்புகள் / 2. கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் 'பெண்'ணின் விம்பம்: ஒரு பெண்ணியல் நோக்கு / 3. ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு / 4. கூண்டுப் பறவை பாடுவதேன் என நானறிவேன் / 5. போரும் கவிதையும்: மஞ்சுள வெடிவர்தனவின் மனிதத்தை நோக்கிய சகோதரத்துவக் குரல் / 6. கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சனைகளும்: சில அனுபவக் குறிப்புகள்/ 7. மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு: சில குறிப்புகள், ஆகிய தலைப்புகளில் தன் ஆய்வை நிகழ்த்தி இருக்கிறார். குறிப்பாய், கலை இலக்கியங்களில் 'பெண்' பற்றிய புனைவு: சில குறிப்புகள் / கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சனைகளும்: சில அனுபவக் குறிப்புகள், இந்த இரண்டு தலைப்பின்கீழ அவர் செய்திருக்கும், ஆய்வு சபாஷ் போடவைக்கிறது. 

1. கலை இலக்கியங்களில் 'பெண்' பற்றிய புனைவு: சில குறிப்புகள்

ஆய்வாளர் பார்த்த டி.வி. சிங்கள நாடகம் ஒன்றை நூல் பிடித்து இந்தத் தலைப்பின் கீழான ஆய்வை தொடங்குகிறார். அந்த நாடகத்தின் பெயர், 'பிய-செக்க-சாங்க்கா' இந்நாடகக்கதை புத்தரின் முற்பிறவிகள் பற்றிகூறும் '550 ஜாத்தக்க கதா' கதைகளில் 'சம்புலா ஜாத்தக்கய'-கதாவை கொண்டு தயாரிக்கப்பட்ட நாடகம் என்கிறார். அதில் குஷ்டரோகியான கணவன் ஒருவனுக்கு மனநிறைவோடு அவனது மனைவி பணிவிடை செய்கிற போதும், கணவன் அவளை சந்தேகிக்கிறான் 

என்று தொடங்கி, சீதையை ராமன் சந்தேகம் கொண்டு தீக் குளித்து நிரூபி என்றதையும், மாதவியை கோவலன் சந்தேகம் கொண்டதையும் மேல் உதாரணமாய்த் தந்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் என்பவள் ஆண் இனத்தால் சந்தேகத்திற்கு இலக்காகி அவஸ்த்தை கொள்வதே நடப்பாக இருக்கிறது என்று கம்பனின், வால்மீகியின், இளங்கோ அடிகளின் கவிதை வரிகளை தாராளமாய் எடுத்துவைத்து, பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகக் கொதித்திருக்கிறார். 

என்னைக் கேட்டால் அவர் அப்படி கொதித்திருப்பது சரி. ஆண்களில் பெரும்பாலோர் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள். கிருத்துருவம் பிடித்தவர்கள்!

2. கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் 'பெண்'ணின் விம்பம்: ஒரு பெண்ணியல் நோக்கு 
"சமூகம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்த ஓர் அமைப்பாகும். இருபாலினருக்கும் தனித்தன்மையான இயல்புகள், திறன்கள் உள்ளன. காலங்காலமாக சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால், 'மனித உயிரி' என்ற வகையில் இருபாலாரும் சமமானவர்களே." என்பதனை நிறுவ முனையும் ஆய்வுரையாளர், கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை கையில் எடுத்துக் கொள்கிறார்.

கௌரி கிருபானந்தன் அவர்களை தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். தெலுங்கில் இருந்து பிரபலமான சிறுகதைகளை குமுதத்திற்கு மொழிமாற்றம் செய்து தந்தவர். குமுதத்தின் வெற்றிகரமான மொழிமாற்றத் தொடர்களில் இதுவும் ஒன்று. இவரது மொழிமாற்றக் கதைகள் பலவற்றை முன்வைத்து ஆய்வாளர் இத்தலைப்பின் கீழ் ஆய்வை செய்திருக்கிறார். ஆய்வில் கிருபானந்தனின் சிறுகதைகளில் பலகூறுகளின் வழியே வெளிப்படும் பெண்ணிய நிலையின் சிதைவுகளை துல்லியமாக பதிந்திருக்கிறார். குறிப்பாய், ஆய்வாளர் இந்த ஆய்வை மிகுந்த ஆர்வமுடனும் சிரத்தையுடனும் செய்திருப்பதைக் காணமுடிகிறது! பெண்ணின் பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இப்படியான கதைகளை விடுத்து, யதார்த்தமாய்ப் பெண்ணியம் பேசும் நவீன கலை இலக்கியம் சார்ந்த கதைகளைத் தேடி எடுத்து அதனில் காணும் சாதக பாதகங்களை ஆய்வாளர் கண்டறிந்து, அதன் வழியே 'பெண்ணியல் நோக்கு' எழுதியிருக்கும் பட்சம், அந்தச் சவாலான பணியை எல்லோரும் வியக்க வழிவகுத்திருக்கும்.

3. ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு

"எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப் 

பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது" என்ற பிரகடனத்துடன், ஆய்வாளர் இக்கட்டுரையில் ஏகப்பட்ட ஈழத்துப் பெண் கவிஞர்களின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அதனில், 

இஸ்லாமியப் பெண் கவிஞர்கள் வியப்பளிக்கும் விதத்தில் ஒருபாடு இருக்கிறார்கள்! அவர்களில் சிலரது கவிதைகளை தமிழகத்து சிற்றிதழ்களிலும், இணையப் பக்கங்களிலும் நான் வாசித்திருக்கிறேன். வியந்தும் இருக்கிறேன்.

இக்கட்டுரையில் சில ஈழத்து பெண்கவிஞர்களின் பால்நிலை வெளிப்பாட்டின் தலைப்புக்கு ஒப்ப கவிதைகள் சிலவற்றை உதாரணத்திற்குத் தந்திருக்கிறார். அதனில் பல சிறப்பாக இருக்கின்றன. பால்நிலை வெளிப்பாட்டை, கவிதைகளில்காண 

ஈழத்துப்பெண் கவிஞர்களுக்குச் சொல்லவா வேண்டும்? உதாரணத்திற்கு, தங்கையும் கவிஞருமான அனார் இஸ்ஸத் ஒருவரே போதுமே! கவிதையில் பால் நிலை வெளிப்பாட்டில் அவரை விஞ்ச தமிழகப் பெண் கவிஞர்களும்தான் ஏது?.

4. "கூண்டுப் பறவை பாடுவதேன் என நானறிவேன்"

இந்தத் தலைப்பின் கவிதை வரிகளுக்கு சொந்தமானவர் கவிஞர் 'மாயா அஞ்சலோ!'

அமெரிக்க கருப்பின மக்களில் ஒருவராக அறியப்படும் 'மாயா அஞ்சலோ' தன் மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். இவரது பிம்பம் மலைக்க வைப்பதாக இருக்கிறது. புகழ்பெற்ற கவிதாயினி, கல்வியாளர், நாவலாசிரியர், நாடகாசிரியை, நடனக் கலைஞர், நடிகை, படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், வரலாற்றாசிரியர், மனித உரிமைப் போராளி... என்று இப்படி நீள்கிறது அவரது கீர்த்தி. அவரது கவிதைகள் தன் மக்களின் விடுதலையைப் பற்றி பேசுகிறது. 

அதாவது அதிகாரத்தை நோக்கி உரிமைப் போர் நிகழ்த்துகிறது. 

இவரது கவிதைகளில் ஒன்றை மொழியாக்கம் செய்து தன் ஆய்வில் பதிந்திருக்கிறார் ஆசிரியர். அந்த மொழியாக்கக் கவிதை சிறப்பாகவே உள்ளது. வரலாற்று இழிவென்னும் / குடில்களைத் தாண்டி / நான் எழுவேன்! / வலிகளில் வேரோடிய / கடந்தகாலத் தடமிருந்து / நான் எழுவேன்! / நான் ஒரு கருங்கடல் / ஆழ்ந்து அகன்றவள் / பொங்கியே ஆர்த்தெழும் / பேரலை ஆவேன்! / பயமெனும் இருள்களைப் / புறந்தள்ளி எழுவேன்! - இப்படி போர் முழக்கமிடும் 'மாயா அஞ்சலோ' கவிதையினை அவரது ஆய்வினூடே ஆசிரியர் இங்கே பதிந்திருக்கிறார் என்பதை நாம் ஆய்ந்தால், 'அதிகாரத்திற்கு எதிரான தன் குரலை' மாயா அஞ்சலோவின் குரல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் எனக் கொள்ளலாம்.

5. போரும் கவிதையும்: மஞ்சுள வெடிவர்தனவின் மனிதத்தை நோக்கிய சகோதரத்துவக் குரல்

சிங்கள கவிஞரான மஞ்சுள வெடிவர்தன-வை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர், அவரை மிகவும் மெச்சுகிறார். ஈழச் சகோதரர்கள் மீது சிங்கள அரசு நிகழ்த்திய யுத்தத்தை இந்தச் சிங்கள கவிஞர் சாடி பல கவிதைகள் எழுதியதின் பொருட்டு, அரசின் கோபப் பார்வை அவர் மீது விழ, அவர் தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார் என்றும், இன்னமும் அவர் தன் நிலையினை மாற்றிக் கொள்ளாது, சிங்கள அரசை எதிர்த்துக் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பதாகவும் தகவல் பதியப்பட்டிருக்கிறது.

"பொதுவாகவே கலை இலக்கியவாதிகளுக்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற மனிதநேயமும் அநீதிக்கு எதிரான தார்மீகக் கோபமும் இரத்தத்திலேயே கலந்திருக்கும் என்பார்கள். அந்த வகையில்,  இலங்கை வாழ் தமிழ் மக்கள் இப் போரினால் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்துப் பெரும்பான்மைச் சிங்கள இன ஊடகவியலாளரும், கலை இலக்கியவாதிகள் சிலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளனர். அவர்களுள் 90-களில் தென்னிலங்கையில் இடதுசாரிச் செயற்பாட்டாளராக தீவிரமாய்ச் செயற்பட்ட மஞ்சுள வெடிவர்தனவும் ஒருவர்" என்பதாக ஆய்வாளரின் குறிப்பை வாசிக்கும்கால் நமக்கு மஞ்சுள வெடிவர்தன மீது தனியொரு மரியாதை துளிர்க்கத்தான் செய்கிறது. உதாரணம் காண்பிக்கப்பட்டிருக்கும் அவரது கவிதைகளும் புரட்சித் தீயாகத்தான் இருக்கிறது.

6. கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சனைகளும்: சில அனுபவக் குறிப்புகள்

இந்த தலைப்பின் கீழ் வெளிப்பட்டிருக்கும் கட்டுரையை உச்சி முகரலாம். ஆய்வாளரின் அனுபவக் குறிப்புகள் மெச்சத்தகுந்தவை. மொழியியல் குறித்து அவரது அறிவு பரந்துபட்டு இருக்கிறது. அறிதல் புரிதலிலான நுட்பமும், அதனை வெளிப்படுத்தும் மொழியின் கூர்மையும் வியக்கவைக்கிறது.

"காலத்துக்குக் காலம் அறிஞர்களிடையே கவிதை மொழிபெயர்ப்பு சாத்தியமா இல்லையா என்ற நீண்ட பல விவாதங்களும் மாறுபட்ட கருத்தாக்கங்களும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கவிதை மொழிபெயர்ப்பின் போது கவித்துவம் இழக்கப்படுவதாகச் சிலர் கருதுகின்றனர்." என்று ஆய்வாளர் தனது கட்டுரையின் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பது மெத்த சரி. 'ஒரு கவிதை மொழியாக்கத்தின் போதுதான் மரணமடைகிறது' என்று ஒரு சொல் உண்டு. அது சரியே என்பது என் கட்சி..

தீர்க்கமான இன்னொரு மொழி கவிஞனின், பாங்கான கவிதையை மொழிமாற்றத்தில் சிதைவுகள் நிகழாது பிழைக்கவைத்துவிட முடியாது. பல மொழிக்காரர்களும் அக் கவிஞனின் கவிதையை வாசித்து பலன் அடையட்டுமே என்கிற சிந்தையில் தேர்ந்த மொழி மாற்றக்காரனால் மொழிமாற்றம் செய்கிற போது கூட அக்கவிதையின் சாரத்தைதான் தரமுடியும் என்கிற அளவில்தான் மொழிமாற்றம் அமைகிறது. அதுவும் அக்கவிதை இரண்டு மொழியை சுற்றிக் கொண்டு மூன்றாவது மொழியில் மொழிமாற்றம் கொள்கிற போது.., குற்றுயிரும் கொலையுயிருமாகப் பாவப்பட்டுவிடும். 

உரைநடையில் மொழிமாற்றத்தின்  இழப்புகள் பெரும்பாலும் குறைவு. மூலமொழியை ஒத்த அழகியலோடு மொழிமாற்ற உரைநடை சங்கதிகள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். கிளர்ச்சியும் கொண்டிருக்கிறேன். அத்தகையக் கிளர்ச்சி கவிதை மொழிமாற்றத்தில் சாத்தியமாகிக் கண்டதில்லை. 

இக்கட்டுரையின் கீழ் ஆய்வாளர் பல குறிப்புகளை வைத்திருக்கிறார். பல்வேறு மொழிக் கவிதைகளை மொழிமாற்றித் தந்தும் இருக்கிறார். அது அவரின் அபரிமிதமான மொழிமாற்ற ஈடுப்பாட்டை நமக்குச் சொல்வதாக இருக்கிறது. இப்படி நான் சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும், மொழிமாற்றத்தை முன்வைத்து சகலவிதமான கோட்பாடுகளையும் அவர் குறையில்லாமல் சொல்லி இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

7. மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு: சில குறிப்புகள்

'மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு' எனும் இக் கட்டுரையின் தொடக்கத்தில் ஆய்வாளர் இப்படிச் சொல்கிறார், "இலங்கை முஸ்லிம்களாகிய நம்மிடத்தில் உள்ள மிகப் பெரிய கொடை நமது பன்மொழி அறிவு என்றால் அது மிகையல்ல. அந்தக் கொடை மூலம் அன்றும் இன்றும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம், நம் தாய்த்திரு நாட்டிற்கு அபரிமிதமான சேவைகளை ஆற்றி வந்துள்ளோம்" என்று பெருமைப்பட்டிருக்கிறார். அந்தப் பெருமைக்கு ஏற்ப மொழிபெயர்ப்புத் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பை நிறையவே பட்டியல் இட்டிருக்கிறார். இந்தப் பட்டியல் தமிழக முஸ்லிம்களை நிச்சயம் தலைகுனியச் செய்யும். பெருவாரியாக தமிழக முஸ்லிம்கள் இப்படியெல்லாம் ஈடுபாடு கொண்டதில்லை. எழுத்தும் அதனையொட்டிய சேவையும் இங்கே நம்மவர்களுக்கு ஹராம் , இரண்டு பேர்கள் நீங்கலாக. ஒருவர் பேராசிரியர் நாகூர் ரூமி, இரண்டாம் நபர் குளச்சல் மு. யூசுப்.    

சமயநூல் மொழிபெயர்ப்பு, ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு, கவிதை மொழிபெயர்ப்பு, புனைகதை மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், சமூகவியல் ஆய்வு, வரலாறு மற்றும் கலைத்துறை சார்ந்த மொழிபெயர்ப்புகள் என ஏராளமான மொழிபெயர்ப்புகளை இலங்கை இஸ்லாமிய வல்லுனர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரையாளர் பெருமை பொங்கக் குறிப்பிட்டிருப்பதில் நமக்கும் பெருமையாக இருக்கிறது.

இந்த வரிசையின் தொடர்ச்சியாக மேலும் சில கீர்த்தி பெற்ற மொழிபெயர்ப்பாளர்களை ஆய்வாளர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இலங்கையின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான பண்ணாமத்துக் கவிராயர், 'சோவியத் நாடு' தமிழ்ச் சஞ்சிகைக்காக ஏராளமான மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார் என்றும், அபுதாலிப் அப்துல் லதீஃபும் பல்வேறு இடதுசாரிக் கொள்கை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளதாய் அறியக்கிடைக்கின்றதெனவும் ஆய்வாளர் பெருமை கொள்கிறார். 

இந்தத் தலைப்பின்கீழ் ஆய்வாளர் செய்திருக்கிற ஆய்வின் கடுமையான முயற்சிகள் மலைக்கவைக்கிறது. தன்னார்வத்துடன் அவர் இதனை செய்திருப்பதாகவே யூகிக்க முடிகிறது.

தமிழில் பட்டப்படிப்பும், மொழிமாற்றத்திற்கான டிப்ளமோ மாணவர்களுக்கான கற்பித்தல் அனுபவமும் பெற்ற ஒருவரால் இந்த அளவில் இந்த ஆய்வை நிகழ்த்தி வெற்றி கொண்டிருப்பது விந்தை! கலை இலக்கியத்திலும், அதன் வாசிப்பிலும், ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டமையிலும், மொழிமாற்றச் சிறப்பாலும், மேலாய் படைப்பில் சுய ஆர்வம் கொள்வதாலும் ஆய்வாளருக்கு இந்த வெற்றி இந்த அளவில் சாத்தியமாகி இருக்கிறது. இவரது குடும்பப் 
பின்னணியைச் சுட்டி, இவரது கலை இலக்கிய வெற்றியோடு முடிச்சுப் போட்டு ஓரிடத்தில் ஒரு குறிப்பைக் கண்டேன். அது குறித்த மேற் தகவல்கள் இல்லை. இரத்த வழியிலான பின்னணி ஒருவரை இந்த அளவில் செயலாற்றும் படிக்கு வாய்ப்பு உண்டுதான். மறுப்பதற்கில்லை. இதனைக் கொண்டு ஆய்வாளரது சுய முயற்சியினை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இன்னும் அவர் இப்படியான பல ஆய்வுகளையும் தீர்க்கமான நாவல்களையும் கொண்டுவர வேண்டும். 
கொண்டுவரவும் வருவார். நம்புகிறேன்.

தமிழகத்து நவீன கலை இலக்கியத்தின் மூத்த விமர்சகரான க நா சு அவர்கள் ஒன்றைச் சொல்வார்கள். தமிழின் நவீன படைப்புகளுக்கு முதல் எதிரி பல்கலைக்கழக தமிழ்த்துறை முதல்வர்கள்தான் என்று. தமிழில் நவீனம் பெரும் வளர்ச்சி கொண்ட பிறகும் அவர்கள் இந்தப் பக்கம் திரும்பியே பார்ப்பதில்லை என்பார். தீண்டாமை பாராட்டுகின்றார்கள் என்பார். தமிழ்ப் படிக்கும் மாணவர்களும் கூட பழந்தமிழ் ஒட்டியே சிந்திப்பவர்களாக, இயங்குபவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கைசேதப்படுவார். இங்கே ஆய்வு செய்திருக்கும் லறீனா அப்துல் ஹக் அவர்கள் தமிழ் படித்தவர். பல்கலைக் கழக்கத்தோடு நல்லுறவு கொண்டவர். அதனாலோ என்னவோ அவரது ஆக்கங்கங்களில் ஆங்காங்கே அந்தப் பழமை எதிரொலிப்பு இல்லாமலில்லை. குறிப்பாய் அவரது கவிதைகளில். அதனைக் காணமுடியும்.

ஆய்வாளர் இன்றைய தமிழ் வளர்ச்சியினை ஒட்டி நவீன கலை இலக்கிய வட்டத்திற்குள் நுழைந்து பார்க்கும் பட்சம் யாரும் சொல்லாமலேயே மொழியில் பல அற்புதங்களைத் தானே நிகழ்த்துவார் என்பது என் நம்பிக்கை. தமிழக நவீன கலை இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளின் மீதும், சிற்றிதழ்களின் மீதும், நவீன கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும் வெளியீடுகளின் மீதும் அவருக்கு ஆர்வம் வாய்க்க வேன்டும். ஒரு நிமிட யோசிப்பில் அது அவருக்கு சரியெனத் தோணும் பட்சம் என் நம்பிக்கை வெல்லும். 

***  
நன்றி : தாஜ் , லறீனா அப்துல் ஹக்
**
சில சுட்டிகள் :

'துருவம்' நேர்காணல்

ஒவ்வொரு புள்ளியிலும் தொடங்கி... - பெண்ணியம் இதழில் வெளியான கட்டுரை

லறீனா ஏ. ஹக்கின் 'ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்' நாவல்: சில குறிப்புகள் -  எல். வஸீம் அக்ரம்

Crossing_fires-lareena (Youtube)

Saturday, July 5, 2014

தென்றல் மறந்த கதை - சு.மு.அகமது

"ஏய் கெளவி அந்த சக்கரமில்லு பாய்க்கு தோப்ப உட்டு கீது.பத்து மணிக்கு பாய் வந்து தோப்ப  பாக்கப்போறானாம்.எங்கியும் பூடாதே”.சொல்லிட்டு போயிட்டாரு மாணிக்கம்.

கெளவி மாணிக்கத்துக்கு தூரத்து சொந்தம் தான்.ஊருல நாயக்கர்களும் மந்திரிமார்களும் ரொம்பப்பேர் இருந்தாங்க.எல்லாம் ஆண்டு அனுபவிச்சி ஆய்ஞ்சி ஓய்ஞ்சிப்போன கட்டைங்க.இப்போ எங்க இருக்குது அந்த படோடபமெல்லாம்.மைனர் செயின் மரிக்கொழுந்து அத்தர் ஜவ்வாது சந்தனம் ஜிப்பா எல்லாம் பூடுச்சி.இப்போ இன்னாமோ புஸ்ஸூ புஸ்ஸூன்னு அடிச்சிக்கிறானுங்க நாத்தம் புடுச்ச சென்ட்டுன்னுப்புட்டு.பாயிங்க கட்டிக்கிற லுங்கியத்தான் இவனுங்களும் 
கட்டிக்கிறானுங்க. சிங்கப்பூரு சிலோனு பாலியஸ்டர் லுங்கின்றாங்க.இடுப்புல நிக்கலன்னாலும் பில்ட்டு போட்டு கட்டிக்கினு சுத்தறானுங்க.

ஆங்...யாரோ பாய்யாமேன்னதும் கெளவி ஏதோ கைலி கட்டிக்கினு தொப்பிய போட்டுக்கினு வருவான்னு நெனச்சிட்டா.ஆனா குட்குட்டாவுலே கோணிப்பை மாதிரி கலர்ல கனம்மா பேண்ட்டும் புச்சர்ட்டும் போட்டுக்கினு சேப்பா வந்து எறங்கினவன பாத்தப்புறம் உலகம் சுற்றும் வாலிபன் வாத்யார பாத்த மாதிரி நெஞ்செல்லாம் ரொம்பிப்புடுச்சி கெளவிக்கு.இன்னாத்த சொல்றது இன்னா பண்றதுன்னு புரியாம கொஞ்ச நேரம் கல்லு மாதிரியே நின்னுபுட்டா.

“ஏம்மா நீங்க தான் தோப்புல இருக்குறதா”ன்னுட்டு பாய் கேட்டப்புறம் தான் அகலிகையா திரும்புனா.

”ஆமா எஜ்மான்” என்றாள்.லுங்கி கட்டிக்கினு தொப்பி போட்டுக்கினு இருந்தா பாய்ன்றது.கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா இல்ல பேண்ட் சர்ட்டோ போட்டுக்கினு இருந்தா எஞ்மான்றது.சாயபுமார்களுக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையுண்டு.

‘ஏம்மா தோப்புல எத்தினி மரம் கீது.காப்பு எப்டி.தோப்புக்காரன் எத்தினி ராசி மரம் வச்சிக்கினு இர்க்கான்”கேள்வி மேல கேள்வியா பாய் கேடக கெளவி எதுக்கு மொதல்ல பதில் சொல்றதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் கம்முன்னு இருந்துட்டு,

“எஜ்மான் ஆயிரத்துக்கு கொறயாது.நல்லா காப்பு காச்சிக்கினு இர்க்குற மரங்க தான்.ஒரு வெட்டு தள்ளி போட்டாக்கா நல்லா இர்க்கும்.இதோ பம்ப்பு செட்டுகிட்ட இர்க்குற ரெண்டு மரந்தான் ராசிக்குன்னு மந்திரி வச்சிக்கினு கீறாரு”என்றாள்.

மெதுவாக பாயின் பின்னாலேயே நடந்துகிட்டு வந்த கெளவி பாய் கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக்கினு வந்தா.அந்த தென்னந்தோப்பு ஞானமலை அடிவாரத்திலே மலையை ஒட்டியே இருந்தது.

பாய் திடீர்னு ”ஏம் பாட்டி அது இன்னா எல்லா மரமும் நல்லா வளந்து காப்பு காச்சிக்கினு கீது. ஷெட்ரூம் பக்கத்துல கீற மரம் மட்டும் பட்டுப்போன மாதிரி காப்பும் இல்லாம கழிசலுமில்லாம நிக்குதே.அது இன்னா எப்பவும் அப்புடிதானா.இல்ல எந்த தேவாங்காவது மருந்து கிருந்து வெச்சிபுட்டானுங்களா” என்றான்.

கெளவி பாய் காமிச்ச மரத்த கொஞ்ச நேரம் கண் கொட்டாம பாத்துக்கினே இர்ந்தவ கண்ணுல தண்ணீ வர ஆரம்பிச்ச நெலமைல,
“இல்லீங்க எஜ்மான் அது பெரீய்ய கதன்னு” ராகத்தோட ஆரம்பிச்சா.

ஏதோ விசயம் மட்டும் இர்க்குற மாதிரி பாய்க்கும் பட்டுச்சி.அதனாலே கெளவி இன்னாத்த தான் சொல்றான்னு காது குடுத்து கேக்க ஆரம்பிச்சான்.

மலச்சரிவிலேர்ந்து சரிஞ்சி வந்த காத்து தென்ன மரத்துங்க மேல மோதி வலுவில்லாம மறுபடியும் தென்னமரத்துலேர்ந்தே தென்றல் காத்தா மாறி பாயின் ஒடம்ப தொட்டப்ப சிலுசிலுப்பா இர்ஞ்சி பாய்க்கு.கெளவியைவே வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கினு இர்ந்தான்.

புதுப்பாளையின் நுனி கண்ணுக்கு தெரிஞ்ச்சி.பச்சையுமில்லாம சாம்பலுமில்லாம ஒரு கலரு.நங்கூரம் பாச்சிட்டு நெலையா நிக்குற பாய்மரக்கப்பலின் ஒரு முனையாட்டம் கூராய் நீட்டிக்கினு இர்ந்தத கண்ணம்மா பல்லு வெளக்க வேப்பங்குச்சி ஒடைக்க போறப்ப தான் கவனிச்சா.ஒடனே மஞ்சள கொழச்சி தென்ன மரத்து அடிக்கால்ல வட்டமா வட்டம் போட்டு குங்குமப்பொட்டு எல்லாம் வெச்சிட்டு தேங்காய ரெண்டா சரிபாதியா ஒடச்சி வச்சிட்டு கற்பூரத்தை கொளுத்திபுட்டு உளுந்து உளுந்து கும்பிட்டுக்கினா.மரத்துக்கு வேப்பில பாவாடை கட்டி வச்சிட்டு ரவிக்க மட்டும் போட  மறந்துட்டா.உரிமை மறுக்கப்பட்ட பொம்பள மாதிரி தலைய குனிஞ்சிக்கினு இர்ந்துச்சி அந்த தென்ன மரம். அஞ்சு வருசத்துக்கு  முன்னாடி ஆம்பூர்ல வெள்ளிக்கெழம சந்தையில வாங்கியாந்து அடுத்த நாளு நல்லால்லைன்னு நாள் பாத்து ஒன்றைக்கு ஒன்றை குழிவெட்டி ஆத்து மணல்ல கல்லு உப்பு கலந்து போட்டு அந்த தென்னங்கன்ன நட்டது வெள்ளையன் தான்.

”அஞ்சு வருசத்துல காப்பு காய்க்கும்னு சொல்லிக்கீறான்”நம்பிக்க தெரிஞ்சிச்சி அவன் சொன்னதில.இவெ மட்டும் அப்புராணி மாதிரி,“உப்பு போட்டு நட்டுக்கிறீயே கரிக்காதான்னு’’கேட்டப்ப தான் இவனுக்கு சிரிப்பா வந்திடுச்சி.

“எல்லாம் பாலாத்துல ஒரு வாட்டி தண்ணீ வந்திச்சின்னா உப்பு கிப்பு எல்லாம் கரிஞ்சிபுடுது”ன்னான் இவனும்.ஏதோ பாலாத்துல வெள்ளம் வந்தாக்கா ஒரு கிலோமீட்டர் தூரத்துல இவன் நட்டுக்கீற தென்னமரத்துக்கு நேரா தண்ணீ வந்துபுடுற மாதிரி நெனப்பு அவனுக்கு.

இப்ப...தென்ன மரத்துல கூட பூ பூத்திடுச்சி.ஆனா பாலாத்துல தண்ணீயே வரல.பத்தாததுக்கு கெணத்துல கீற தண்ணீ கூட உப்பு மாதிரி கரிச்சிக்கினு இர்க்குது.இன்னாமோ ’இப்புளாயிண்ட்’ன்றான்ங்கோ.தோல் ஷாப்புல தோல களுவி ஆத்துல அப்புடியே உட்றான்களாம்.அது அப்பிடியே கீள போயி கெனத்துல கீற தண்ணீ கூட கனிஷன் பண்ணிக்கினு உப்பாயிக்கினே வர்துன்றாங்கோ.இன்னாமோ போ...சலிச்சிக்கினு தான் வாழ்க்கைய ஓட்டிக்கினு கீறா கண்ணம்மா.

வெள்ளையன் ஆம்பூர் சந்தைக்கி போய்ட்டு வந்தாலே எதாவது புது விசயத்தோட தான் வருவான்.நேத்து கூட இன்னாமோ வந்து சொல்லிக்கினு இர்ந்தான்.ஏதோ சோலூர்ல டேனரியாம்.கச்சரா தண்ணீய சேரிப்பக்கமா திருப்பி உட்டுர்றாங்களாம்.கம்பெனி காம்பவுண்ட்டுக்கு பக்கத்துலேயே ஊடுங்க இருக்குறதால கச்சரா தண்ணீயெல்லாம் சேந்து கச்சரா தொட்டி மாதிரி ஆயி அதுலயிருந்து கொசு பிசு எல்லாந் சேந்துக்கினு கடிச்சி ரெண்டு பசங்களுக்கு காலே பூட்ச்சாம்.இன்னாமோ ’போலியா’வாம்.

ஒலக விசயமெல்லாம் தெரிஞ்சிக்கினு கீது.ஆனா என் வவுத்த ரொப்புற விசயம் மட்டும் தெரியாம பூட்ச்சி அதுக்கு.இல்லேன்னா இந்நேரத்துக்கு ஒண்ணோ ரெண்டோ ஓடிக்கினு ஓடியாந்துக்கினு இர்க்கும்.பெர்ஸ்ஸா ஒரு பெருமூச்சு உட்டதுதான் மீஞ்ச்சி கண்ணம்மாவுக்கு.

வயசுக்கு வந்து இன்னா ஏதுன்னு தெரியறதுக்கு முன்னாடியே வெள்ளையனுக்கு புட்ச்சி கட்டி வச்சுபுட்டானுங்க.அதான் ஒன்னுந்தெர்ல.ஒரு பொண்ணு பெரியவளா ஆனா ஒரு ஓரமா குந்தவச்சி புதுசா பாக்காதத பாத்துப்புட்ட மாதிரி இன்னா இன்னாமோ செஞ்சிபுடறாங்க.அது பாவம் பயிந்து போயி அரக்க பரக்க முழிச்சிக்கினு இர்க்கும் பாருங்க,ரொம்ப கோடூரமா இர்க்கும்.அதே கொஞ்சம் ஜாஸ்தியாயி பொண்ணு பேசாம கம்முனு இர்ஞ்சின்னா இன்னாமோ காத்தோ கருப்போ அடிச்சிப்புடுச்சிடான்னு அலட்டிக்கினு கொட்டாங்குச்சியில உப்பு புளி காஞ்ச மொளகா எல்லாம்  வச்சி அவ தலைய சுத்தி ஒடம்ப சுத்தி ‘அந்த கண்ணு இந்த கண்ணு’அது இதுன்னு எதாவது பெணாத்திபுட்டு கடேசில அத்தயெல்லாம் அடுப்புல போட்டு கொளுத்திப்புடுவாங்க.அது டப்டிப்ன்னு வெடிக்குறத பாத்து,“பாரு எவ்ளோ கண்ணு திஷ்டி பட்டுக்கீது.அதான் புள்ள பெணாத்துதுன்னு”ப்புட்டு பச்ச ஓல மறப்புல வேப்பங்கொழுந்து மாங்கொழுந்து எல்லா கொழுந்தும் கட்டிப்புடுவாங்க.போற போக்குல ‘புள்ள ஒடம்ப தேத்துங்கடி”ன்னு ஒரு கெழசு சொல்லிப்புட்டு போயிடும்.அவ்ளோ தான்.ஒரே வாரத்துல அந்த பொண்ணு பாக்காதத எல்லாம் திண்ணாதத எல்லாம் குடுத்து குடுத்து அது ஒம்பாம வாந்தியெடுத்து ஒடம்பே எளச்சிடும்.அப்ப கூட கொஞ்ச நஞ்சம் ஒடம்புக்கு ஒத்துக்கினு ஒடம்பு பூசிப்புடும்.

இதெல்லாம் அனுபவிக்காமலேயா கண்ணம்மா கண்ணாலம் கட்டிக்கினு வெள்ளையன் கூட வாழ்க்கைய ஒப்பேத்திக்குனு இர்க்குறா.பூசுன ஒடம்பு.செகப்பா இருக்குற மாதிரி தெரியிற கலரு.பாத்தா பாக்கச்சொல்லும்.பேசுனா பேச சொல்லும்.கலரு கம்மியா கீறவங்களுக்கு பொறாமைல பிஞ்சிப்புடும் செருப்பு.என்னா இர்ந்து என்னா.புள்ளக்குட்டிக்கான வலியத்தான் காணோம்.இந்த கோராமையை எங்க போயி சொல்றது.புரியாமத்தான் இவ்ளோ நாளா ஒப்பேத்திக்கினு 
இருக்குது கண்ணம்மா.

வெள்ளையன் மாடு மாதிரி தான் வேலய செய்றான்.ஒடம்பு சும்மா கர்லா கட்ட மாதிரி ‘கன்’னா இர்க்குது.இன்னா இர்ந்து இன்னா.அவனுக்கு இன்னா கொறன்னே தெரிலே.எல்லாந் நல்லாத்தான் கீதுன்றாங்க.ஆம்பூர்ல டாக்டரு பாத்துப்புட்டு, “இன்னாம்மா அவனுக்கு இன்னா நல்லா கீறான்.போம்மா கொஞ்ச நாள்ல சரியா புடும்”ன்னு சொல்லி அனுப்பிபுட்டாரு.

ம்..ஆயி பூட்ச்சே அஞ்சி வருசத்துக்கும் மேல.அவன் வச்ச தென்ன்ங்கன்னு பூத்திடுச்சி.அது பூத்த நேரந் நல்லா இர்ந்து தனக்கு ஏதாவது வயிறு ரொம்புதா பாக்கலாம்ன்னுட்டு ரொம்ப நம்பிக்கப்பட்டு பூட்டா கண்ணம்மா.

இப்பிடி தான் ஏதோ ரோசனைல கண்ணம்மா ஒக்காந்துக்கினு இர்ந்தப்ப வந்து சேர்ந்தான் அந்த ‘பாடாலப்பான்’ கிஸ்ணண்னு பேரு வச்சிக்கினு.எல்லாம் அதே வேலைய்ங்க.வாத்யாரா கீறானாம்.அதோ ஊட்லேர்ந்து பாத்தா தெரியிதே மஞ்சள் கலரு பில்டிங்கி அத்தாங் உஸ்கோலு. தெனிக்கும் வேலூர்லர்ந்து வந்து போறதுக்கு கஸ்டமா கீதுன்னுட்டு இங்க தங்கறதுக்கு ரூம்பு  வாடிகிக்கு வேணும்னு கேட்டுக்கினு தான் நொழஞ்சிச்சு அந்த ஆமே.குள்ளமா இர்ந்தான்.வெள்ளையன் 

கர்லாக்கட்டைன்னா இவன் தமுக்குக்குச்சி மாதிரி.கன்னம் கூட ஒட்டிக்கினு தான் இர்ஞ்ச்சி.பீடி கீடி குடிக்கிறானோ இன்னாவோ.அப்புறந்தான் தெரிஞ்ச்சி  சிசர்ன்னு இன்னாமோ வெள்ள பீடி குடிக்கிறான்னுட்டு.அதில்லாம பட்டை வேற போட்டுக்கினு அவன் ஆடுன ஆட்டம் கீதே,யப்பா போதும்டா சாமி.ஒலகமே காரி துப்பிச்சே. அன்னிக்கி உஸ்கோலு பசங்கயெல்லாம் வந்து பாத்துட்டு பாத்துட்டுப்போச்சிங்க.

எல்லாந் அந்த கொஞ்ச நேர சபலந்தான் காரணமா இர்க்கும்னு நெனக்கிறேன்.

தென்ன மரத்துல பால போட்டுடிச்சிடா சாமி.நேரந் நல்லா இர்க்கும்னு பாத்தா எவன் நொள்ளக்கண்ணு பட்டுச்சோ தெரியில “அரிக்கண்ணு சொறிக்கண்ணு.அம்பன்கண்ணு நொள்ளக்கண்”ணா போன மாதிரி வாழ்க்க மாறி பூட்ச்சி.

ஏதோ வாத்தியாச்சே பசங்களுக்கு நல்லது சொல்லி தர்ற பொழப்பாச்சேன்னு பாத்தா அவன் “மாரு வரிக்கும் நனயுமா மாராப்பு நழுவுமா”ன்னு மோப்பம் புடிக்கிற மொசக்குட்டி மாதிரி புசுபுசுன்னு சிலுப்பிக்கினு இர்ப்பான்.அது ஏதோ இவெ செஞ்ச புண்ணியமோ இன்னாமோ ரொம்போ நாள் வரிக்கும் இளுத்துக்கினு வந்துட்டா.

இன்னா தான் இர்ந்தாலும் இவனுக்கு ரூம்பு வாடிகிக்கு குடுத்திருக்கக்கூடாது.வந்து பாத்துட்டு போன மூணாந் நாளே வந்து நொளஞ்சிடிச்சி ஆமே.வீடே வெளங்காம போப்போவுதுன்னு அப்போ தெரியாம பூட்ச்சி.

உஸ்கோல்லர்ந்து வந்ததும் எதாவது ஒரு பொஸ்தகம் எடுத்துக்கினு மாங்காமரத்துக்கு அடிலே போய் ஒக்காந்துபுட்டா வெள்ளை பீடி எரிஞ்சிக்கினே இர்க்கும்.இந்த நாத்தம் தான் இவெ வாழ்க்கையையே நாறடிச்சிட்ச்சி.வெள்ளையன் நாளெல்லாம் ஒளச்சி வேர்வை நாத்தத்தோட தான் வீட்டுக்கே வருவான்.குளிச்சாலும் பாசப்பெணப்பு அதிகமா பூட்ட மாதிரி பின்னிப்பெணஞ்சி புட்டிருக்கும் வாசனை மட்டும்.

தெனிக்கும் ஞானமலைல பொட்டி பாடுற பாட்டு “அத்தரும் ஜவ்வாதும் அள்ளித்தெளித்தும் அங்கம் மணக்கவில்லையே முருகையான்”றது கேட்டுக்கினு தான் இர்க்கும்.இன்னா இர்ந்தாலும் அந்த மாதிரி ரோசனை பண்ணி பொழப்ப நடத்தற புத்தி இன்னும் அவளுக்கு வர்ல.அதாங் வெள்ளை பீடி வாசனை இன்னாமோ பண்ணி புடுச்சி அவள.

அது மட்டுந் தானா...

சக்கர மில்லுல சனிக்கெழம ரோசாப்பூ ரவிக்கைக்காரி பயாஸ்கோப் பாத்துப்புட்டு இப்டி கூட ஒரு பொம்பள இருப்பாளான்னுட்டு காறி துப்பிக்கினே வந்தவ தானே இப்போ தரய்ய கூட பாக்க முடியாம அளுதுக்கினு இருக்கிறா.

பாவம் வெள்ளையன்.அவனுக்கு எப்டி இர்ந்திருக்கும்.அந்த கன்றாவிய பாத்ததும் இடிஞ்சிப்போயி ஒக்காந்துடிச்சே.அதும் மூஞ்சே பாக்கவே தெம்பில்லாமத்தான் ஓரமா ஒக்காந்துக்கினு தரைய பாத்துக்கினு கீறா கண்ணம்மா.

அன்னிக்கு ஞாயித்திக்கெழம.வெள்ளையன் காலையிலேயே கழனிக்கு ‘சால்’ அடிக்க போயிட்டிருந்தான்.இவே எப்பவுமே காலையிலேயே குளிச்சிடறவ.அன்னிக்குன்னு பாத்து வெயிலு ஏறனப்புறம் குளிக்கிறதுக்கு போனா.வானம் பாத்த பாத்ரூமுக்கு ஆறடி ஒசற சுத்துச்சுவரு மட்டுந்தான் தடுப்பு.கையில மொடஞ்ச தென்ன ஓலப்பாயி தன் தடுக்கு தடுப்பெல்லாம்.அது மேல துணிய போட்டுப்புட்டு உள்ளாற போயிட்டா யாரோ குளிக்கிறாங்கன்னு அர்த்தம்.

உள்ள போனவ வெயிலு அதிகமா கீதுன்னுட்டு மொத்த துணியையும் கழட்டிபுட்டு நாலு சொம்பு பச்ச தண்ணிய ஒடம்புக்கு போட்டுக்கினு தலைக்கு போட தலைய தூக்குனப்ப தான் பாத்தா மொட்டை மாடில அந்த கம்முனாட்டி நின்னுன்னு இர்ந்தத.பெதறிப்போயி துணிய இளுத்து மேல போட்டுக்கினு வெளியே ஓடியாந்தவ ரூமுக்குள்ள நொளயறப்ப தான் பாத்தா அவன் இவுளுக்கு முன்னாலயே வந்து அங்க நின்னுகினு இர்க்கான் அரக்கனாட்டோம்.அவன் கண்ணு செவப்பா நெருப்புத்துண்டாட்டம் எரிஞ்சிக்கினு இர்ஞ்ச்சி.

அவன் அவள தொட்டப்ப பயந்து ஒதுங்குனவள அப்பிடியே கோழிக்குஞ்ச அமுக்குற மாதிரி அமுக்கி...மேல எதுவும் நடக்குறதுக்குள்ள நல்ல வேளை கண்ணாயிரம் தாத்தா இத்தய பாத்துப்புட்டாரு.

”டோய்...இன்னாடா அக்குறும்பா கீது.வெள்ளையா வெள்ளையா”ன்னு கொரல குடுக்கவும்  வெள்ளையன் சால் அடிச்சிட்டு திரும்பி வந்துக்கினு இர்ந்தவன் வேகமா ஓடியாந்தான்.அலங்கோலமா கண்ணம்மாவையும் கூடவே கிஸ்ணணையும் பாத்த வெள்ளையன் இன்னா செய்யிறதுன்னு புரியாம ஒக்காந்துட்டான்.

கண்ணாயிரம் தாத்தா தான் போயி தகவல நாட்டாமைக்கிட்ட சொல்லியிருக்கனும்.நாட்டாமை கோயிந்தன் வந்து சேர்ந்தான்.ஊரு சனமெல்லாம் வந்தாங்க.கிஸ்ணண தென்னமரத்துல கட்டி வெச்சி நொங்கு நொங்குன்னு நொங்கினாங்க.அப்ப கூட அமைதியா தான் இர்ந்தான்.ஒரே வார்த்த கூட பேசல.உஸ்கோலு பசங்க வந்தானுங்க.பாத்தானுங்க.போனான்ங்க.அவங்க வந்தப்ப தான் தலைய கமுத்திக்கினு கீளயே இன்னாத்தியோ பாத்துக்கினு இர்ந்தான்.சாய்ங்காலம் வரிக்கும் அந்த தென்ன மரத்துலேயே கட்டி வச்சிருந்தாங்க அவனை. 

எல்லாம் பைசல் பண்ணி உஸ்கோல்லேர்ந்து வாத்திய தூக்கிட்டானுங்க.அதுக்கப்புறம் அவன் எங்க போனான் இன்னா ஆனான்னே யாருக்கும் தெரில.கண்ணம்மாவும் வெள்ளையனும் கூட இந்த தோப்ப மந்திரிக்கு வித்துட்டு எங்கேயோ போயிட்டாங்க.

”இப்ப ஏதோ ஆரணி பக்கத்துல இர்க்குறதா சொல்லிக்கிறாங்க”ன்னு கெளவி சொல்லி முடிக்க பாய் எளுந்து குட்குட்டாவை ஸ்டார்ட் பண்ணி கெளம்பவும் சரியா இர்ஞ்சி.

குட்குட்டாவை மெதுவா ஓட்டிக்கினே இஸ்மாயில் அவனுக்கு எடப்பக்கமா மஞ்ச கலர்ல தெரிஞ்ச அந்த உஸ்கோலையே வெச்ச கண்ணு மாறாம பாத்துக்கினே இர்ந்தான்.காவல் கெளவி சொன்ன கத மனசுல இன்னாமோ செஞ்சிச்சு.அது உண்மையா இர்க்குமா.இவன் இந்த உஸ்கோல்லத்தான் படிச்சான்.பத்தாங்கிளாஸ் படிக்கிறப்ப தான் கிஸ்ணண் வாத்தியாரு வந்தாரு.பாரதியாரோட புதுமைப்பெண்,பாரதிதாசன் கவிதைகள்னு எல்லாத்தையும் சொல்லிக்குடுத்தாரு.ரொம்ப நல்லா புரியுற மாதிரி சொல்லிக்குடுப்பாரு.அமைதியா இர்ப்பாரு. 
ஒரு நாள் இவன் பாத்ரூம் பக்கமா போனப்ப இவனப்பாத்ததும் அவசர அவசரமா எதையோ  கீள போட்டு கால்ல நசுக்கினாரு.

“இன்னா தம்பி இன்னும் இண்டர்வெல் விடலியே.நீ ஏன் வந்தே’ன்னாரு பதறின தொனியில்.

“சார் ஒண்ணுக்கு அவசரமா வந்துச்சி.அதாங் கேட்டுக்கினு வந்துட்டேன்’னு சொன்னவன் கண்ணிலே அந்த சிகரெட் துண்டு பட்டுச்சி.

திரும்பி வரும் போது தான் ஸ்டாப் ரூம்ல வாத்யாரு சேர்ல ஒக்காந்துக்கினு குனிஞ்சி எதோ படிச்சிக்கினு இர்ந்தத பாத்தான்.தூரத்துல சரளா டீச்சரும் ஒக்காந்துக்கினு இர்ந்தாங்க.இவுரு எப்பவுமே டீச்சருங்க கிட்ட கூட பேசறதில்ல.தலைய குனிஞ்சிக்கினு நடந்தார்ன்னா மேல கூட பாக்க மாட்டாரு.

நெனவலைங்க எங்கெங்கேயோ பறந்து போயி திரும்பி வந்தப்ப இஸ்மாயிலுக்கு மனம் கனத்துப்போன மாதிரி இர்ஞ்ச்சி.கெளவி சொன்ன வாத்தியாரும் இவரும் ஒருத்தரா இருக்க முடியுமா.எப்டி நம்புறது.எதுவுமே புரியற வரைக்கும் புரியாத புதிர் தான்.ஒரு வேளை அந்த  தென்னமரந்தான் இதுக்கு சரியான பதில தருமோ என்னமோ.

அடுத்த நாள் அந்த தென்ன மரத்த பாத்தப்போ, தான் ஒரு வன்செயல பாத்துப்புட்டு எதுவுஞ் செய்ய முடியாம போனதால மனம் வெதும்பி பூக்கிறதையும் காய்க்கிறதையும் மறந்து போயிட்டேன் நானுன்னு சொல்ற மாதிரி இர்ஞ்ச்சி அதோட மௌனமொழி.இவனுக்கு மட்டும் அந்த மொழி புரிஞ்சிச்சி.யாருகிட்டயோ தன் பாரத்தை எறக்கி வச்சிட்ட சந்தோஷத்துல மெதுவா தலையசைச்சிச்சி அந்த தென்னமரம்.

லேசாக தென்றல் காற்று இவன தழுவனப்ப தான் மனசு லேசாகி ஏதோ கசிய ஆரம்பிச்சிச்சி இவனுக்குள்ள.
***
நன்றி :  சு.மு.அகமது | https://www.facebook.com/musthaqsyedahmed/
***
மேலும் சில சிறுகதைகள் :
மருதாணிப்பூக்கள் - http://malaigal.com/?p=5226
சிறை பட்ட மேகங்கள் - http://abedheen.blogspot.ae/2014/05/blog-post_26.html

Wednesday, July 2, 2014

காதர்பாய் டீ கடை - (ஜாலியான) தாஜ்பாய்

'டீக்கடை' என்றே சிராஜ் என்ற சகோதரர் ஒரு தளம் வைத்திருப்பதை இன்றுதான் பார்த்தேன்.  'மார்க்கமும் வரம்பு மீறா நகைச்சுவையும்' உள்ள தளம் அது. நம் தளம் அப்படியல்லவே... வம்பு செய்யாத கவிஞர்கள் கூட வரம்பின்றி கதை ஆத்தலாம் இங்கே! கதையில் வரும், 'பிறமதச் சகோதர்களை, இஸ்லாமிய இளைஞர்கள் 'மாப்ள, மச்சான், அண்ணன்' என்கிற அடைமொழி கொண்டு இணக்கம் காட்டியே பேசுவார்கள்.. ஆனால், இவர்கள் தங்களுக்குள் ஒரு நாளும் அத்தகைய  இணக்கத்தையோ ஒற்றுமையோ காட்டிக் கொள்ள மாட்டார்கள். எப்பவும் வாடா போடாதான், முரண்தான்.' என்ற கிண்டலை மிகவும் ரசித்தேன். பின்னே வெட்டித்தனமாக இதற்குமா சண்டை போடுவார்கள், அதுவும் நோம்பு நேரத்தில்? 'தங்கல் அமீர்' குறுநாவலை சிரத்தைக் கொண்டு எழுதினேன்; வாசகர்களிடம் எதிரொலிப்பு இல்லை. அதனால் இப்படி வலியற்று எழுதுவோம் என்று எழுதி இருக்கிறேன்' என்கிறார் தாஜ். அதற்காக , வாசகர்களுக்கு வயிற்றுவலி உண்டு பண்ணலாமா கவிஞரே? -  ஆபிதீன்
**

காதர்பாய் டீ கடை

தாஜ்
-------

ஊர் பெரிய பள்ளிவாசல் எதிரே உள்ள கடைத் தொகுப்பொன்றில் டீக்கடை போட்டிருந்த காதர்பாயிக்கு வியாபாரம் அவ்வளவு சுகமில்லை. சௌதியில் இருந்து 'ஒன்வே'யில் திரும்பியவர், வீட்டில் உட்காரப் பிடிக்காமல் இந்தக் கடையை வைத்தார். அது அவரை ரொம்பவும் சோதித்தது. பள்ளிவாசலுக்கு எதிரே டீக்கடை இருந்தபடியால், தொழப்போகும் பெரியவர்களில் சிலர் 'காதர் சக்கரை கம்மியா ஒரு டீ' என்றளவில் அங்கு வந்து போனார்களே தவிர, மற்றவர்களின் வருகை சொல்லும்படி இல்லை. குறிப்பாய் இளைஞர்களின் வருகை ரொம்பவும் கம்மி. கடைக்கு பெரியவர்கள் வந்து போய்கொண்டிருப்பது இளைஞர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கலாம். தவிர, பிற மதத்தவர்களின் வருகையும் கூட சகஜமாக இல்லை. எல்லா தரப்பு மக்களும் வந்து போகிறமாதிரி ஓர் இடம் பார்த்து கடையை மாற்றணும் என்கிற தீர்மானம் சில மாதங்களாகவே காதர்பாயிக்கு இருந்தது. இடம் தேடி காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார்...   

அதே மெயின்ரோட்டில் வடக்கில் நாலு தெரு தள்ளி, புதிய தெரு ஒன்றின் முனையில் கடை கிடைக்க, தன் கடையை அந்த இடத்திற்கு மாற்றினார். பழைய கடையில் இருந்த டீ மேஜை, புரோட்டா மேஜை, வடை போண்டாக்களை சுட்டு அடுக்கிவைக்கும் கண்ணாடி ஸ்டால் ஆகியவற்றை இடம் மாற்றுவதென்பதுதான் புதிய கடை நிர்ணயிப்பின் பெரிய வேலை! மத்தப்படி கடைக்கு வேண்டிய அடுப்பு என்பதெல்லாம் இடம்கண்ட இடத்தில் சேற்றாலும் செங்கல்லாலும் வேண்டிய உயரம் தூக்கி மேலே மூன்று குமிழ் வைக்கும் சங்கதி! அரைநாள் வேலை!..மற்றப்படி, பழைய கடையில் இருந்து எடுத்துவரப்பட்ட ஏழெட்டு பிளாஸ்டிக் ஸ்டூல், ஒடிந்து ஆணி அறைந்து சரிசெய்யப்பட்ட மூன்று விசுப்பலகை, (கடைக்கு வெளியே போட அதில் ஒன்று கட்டாயம்) மேலே பொக்கை கண்ட இடங்களில் கீற்று அடுக்கு!. அவ்வளவுதான். டீக்கடை ரெடி

புதிய இடத்தில் நாலு தெருவின் இளைஞர்களும் தாராளமாக வந்தார்கள். காலை ஆறரை மணி தொடங்கி அங்கு வந்து கூடும் இளைஞர்களில் பெரும்பாலோர் இஸ்லாமியர்கள்! அவர்கள். எட்டு எட்டரை வரை 'வாடா போடா' போட்டு சுதந்திரமாய் பேச்சோ பேச்சென்று பேசி, இடையிடையே தங்களது அரசியலையும், ஊர் நடப்பையும் தீர அலசித் தீர்ப்பார்கள் கட்டாயம் ஆளாளுக்கு இரண்டு மூன்று டீயும், வடையும் சாப்பிட்டு, 'தம்' அடித்து புகை பரப்பியபடி பேச்சில் சுவாரசியம் கொள்வார்கள். இந்த இளைஞர்கள் வருவார்கள் பேசுவார்கள் என்றாலும் குழுக் குழுவாகத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். சமீப காலமாய் இஸ்லாத்தில் பல்வேறு அரசியல் மற்றும் சமய சீர்த்திருத்த இயக்கங்கள் வளர்ந்துவிட்டபடியால், இப்படியான பிரிவுகளும் அவசியமென ஆகிப்போனது. .ஏந்தவொரு இயக்கமும் இல்லாத அசலான 'ஈமாந்தாரிகளான' தப்லிக்காரர் கூட இங்கே டீ குடிக்க வருகிற போது இன்னொரு தப்லிக்காரரைத் தேடிப் பார்த்தே அமர்ந்து பேசவே நினைப்பார்... . 

காதர்பாயின் புதிய கடையை ஒட்டிய இறக்கத்தில் கார் பழுதுபார்க்கும் நாலு மெக்கானிக் ஒர்க் ஷாப் இருந்தது. அங்கே வேலை செய்பவர்கள் மட்டுமில்லாது, ஒர்க்‌ஷாப்பில் பழுதுபார்க்க வாகனங்களை விடவும் எடுத்துச் செல்லவும் வருபவர்கள் இந்த டீ கடைக்கு எந்நேரமும் வருவதும் போவதுமாக இருந்தபடியால் கடையின் வியாபாரம் குறைவில்லாமல் இருந்தது..அதனால்தான் என்னவோ காலையில் கடைக்கு வந்து, அங்கேயும் இங்கேயும் நின்றபடிக்கும் உட்கார்ந்தபடிக்கும் கண்டதையும் பேசும் தனது இன இளைஞர்களை காதர்பாய் கண்டு கொள்வதில்லை. பொதுவாக அவர் சுபாவமும் அப்படித்தான்!

ஒர்க் ‌ஷாப்பில் இருந்தும் இன்னும் பல இடங்களிலிருந்தும் அங்கே வருகிற பிறமதச் சகோதர்களை, இஸ்லாமிய இளைஞர்கள் 'மாப்ள, மச்சான், அண்ணன்' என்கிற அடைமொழி கொண்டு இணக்கம் காட்டியே பேசுவார்கள்.. ஆனால், இவர்கள் தங்களுக்குள் ஒரு நாளும் அத்தகைய  இணக்கத்தையோ ஒற்றுமையோ காட்டிக் கொள்ள மாட்டார்கள். எப்பவும் வாடா போடாதான், முரண்தான்.

வெளியே போடப்பட்டிருக்கும் பெஞ்சில் வந்தமர்ந்து, டீ குடித்தபடி இளைஞர்களின் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஊர் நாட்டாண்மைகளில் ஒருவரான ஹசன்பாய் எந்தவோர் பிரச்சனையிலும் தலையிடாத சாது என்று பெயர் போட்டவர். தினமும் காலையில் இந்த டீக்கடை அமர்வில் வந்தமரும் வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர். அரசியல் பேசும் இளைஞர்கள் இவரது வாயைக் கிளறுவதில் குறியாக இருப்பார்கள். அவர்கள் பேசும் அரசியல் சர்ச்சைகளுக்கு இவரிடம் நியாயம் கேட்பார்கள். ஊர் பஞ்சாயத்துலேயே வாய்திறக்காத ஹசன்பாய் இங்கே மட்டும் வாய்திறந்துவிடுவாரா என்ன? ஆனால் யார் எந்தவோர் அபிப்ராயம் கேட்டாலும் வாய்விட்டு சிரிக்கத் தவறமாட்டார். பதில்தான் பெயராது. அவர்கள் ஏதும் கேட்காவிட்டாலும் கூட சிரிக்கக் கூடியவராகவே இருப்பார். நாட்டு நடப்பும், தம் இளைஞர்களின் போக்கும் அவருக்கு சிரிப்பாக போய்விட்டதோ என்னவோ. அப்படி தீரவும் சொல்லிவிட முடியாது, அப்பப்ப இரண்டொரு வார்த்தைகள் பேசவும் பேசுவார்..
  
சமீபத்திய பாராளுமன்ற தேர்தல் - 2014 முடிந்து, புதிய ஆட்சி அமைந்த நேரம் அது! அங்கே கூடும் அந்த இளைஞர்களின் விவாதப் பொருள் அதுவாகவே இருந்தது. அவர்களின் மொக்கை விவாதங்கள் எப்பவும் சூடு கொண்டது. ஹசன்பாய் வழக்கத்தைவிட இன்றைய விவாதங்களை கேட்டு பெரிதாக சிரித்துக் கொண்டிருந்தார்.

'அம்மா' கட்சியில் இருக்கும் ஆதம்ஷா தே.மு.தி.க. கட்சிக்காரனான அனீஸிடம் சப்தமாக கேட்டான். "முடியாது முடியாதுன்னிங்களே, இப்ப அம்மா ஓஹோன்னு ஜெய்த்துட்டாங்க பாரு! இப்ப என்னடா சொல்றீங்க?" 

"இந்தப் பாருடா, எங்கத் தலைவர் பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்துவிட்டதாலே முஸ்லிம்களின் ஓட்டு எங்களுக்கு விழலை. நாங்களும் முஸ்லிம்களிடம் ஓட்டு கேட்க முடியலை. ஓட்டு குறைஞ்சு போச்சு தோற்று போயிட்டோம்."

"பெரிய கூட்டணி அமைச்சிருக்கோம், இந்தியா பூராவும் 'மோடி அலை' அடிக்குதுன்னு நீங்கதானாடா சொன்னீங்க?"

"ஆமாம் சொன்னோம். வடக்கே பூரா மோடி அலை அடித்ததா இல்லையா? அவர் ஆட்சியில் அமர்ந்தாரா இல்லையா? நீங்க என்னவோ அம்மாவ அடுத்த  பிரதமராக்கப் போறத சொல்லிக்கிட்டு திரிஞ்சிங்களே... என்ன ஆச்சு இப்ப அது? மூச்சு விடமாட்டேங்கிறீங்க?"  

ஹசன்பாய் இப்போது வேகமாக சிரித்தார். "ஏன் ஆதம்ஷா.., அனீஸு கேட்கிறது சரிதானேடா?" 

"என்னங்க ஹஸன்பாய், அவன்தான் அவுங்க தலைவர் மாதிரி அரசியல் புரியாம பேசுறானா நீங்களும் சேர்ந்துகிட்டு பேசுறீங்களே! பொறுத்து இருந்து பாருங்க. மேலே குழப்பம் வருதா இல்லையான்னு. அப்போ தெரியும் நாங்க சொன்னதின் அர்த்தம். ஆனானப்பட்ட தி.மு.க.வையே சைபராக்கி மூளையில் உட்கார வச்சிருக்கிறவங்க நாங்க!"

டீ மேஜைக்கிட்டே டீ குடித்துக் கொண்டிருந்த தாவூத் சீறினான். "ஓட்டுக்கு பெரிய நோட்டு கொடுத்து ஜெய்ச்சவனெல்லாம் தங்களது வெற்றியை பற்றி பெரிசா பேசவந்துட்டானுங்க." 

"இவரு பெரிய தி.மு.க. வஸ்தாது! கோபம் வந்துடுச்சு. நீங்க மட்டும் ஓட்டுக்கு நோட்டு நோட்டா கொடுத்ததில்லை? ஒரு தொகுதி விடாம தோத்துட்டு என்ன வேண்டி கிடக்கு ரோஷம்?"

ஹசன்பாய் இப்ப குறுக்கே வந்தார், "ஏய்.. தாவூது, அவனுங்க டெய்லி பேசுற பேச்சைத்தான் இன்னைக்கும் பேசுறானுங்க, அது புரியாம நீ ஏன் கோபப்படுற?" 

"இல்லை பாய், எங்க கூட கூட்டணி வைத்துக் கொண்ட த.மு.மு.க. இந்த தொகுதியில் தோத்து போச்சுதானே? அந்தக் கட்சி தோக்கிற தொகுதியா பாய் இது? ஒரு லட்சத்தி அறுபதினாயிரம் முஸ்லிம்கள் ஓட்டு சாலிடா இருக்கிற தொகுதி பாய் இது! அப்புறம்...தி.மு.க., விடுதலைச் சிறுத்தைங்க ஓட்டுண்ணு ஏகப்பட்ட ஓட்டு வேற!. இவ்வளவு ஓட்டு இருந்தும் பின்னே எப்படி த.மு.மு.க. தோத்துச்சி? சொல்லுங்க பாய்? இவனுங்க கட்சி, கடைசி நேரத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்ததால்தான் எங்க வெற்றி வாய்ப்பு தலைகீழா மாறிடுச்சு! மயிலாடுதுறைக்கு ஸ்டாலின் வந்தப்போ என்ன கூட்டம் தெரியுமா பாய்?"

"கடைசி மூணு நாளுக்கு முந்தி, இதான் எங்க சின்னமுன்னு மக்ககிட்ட காட்டுனா... எப்படி மக்களுக்கு சின்னம் பிடிப்படும்? ரெட்டை மெழகுவர்த்தியாம்!   அதுவும் அணைந்து போன மெழகு வார்த்தி!. எப்புடீ... ஜெயிக்கும்?" என்று இடித்துரைத்தான் ஆதம்ஷா.

கடையின் உள்பகுதியில் தன் ஆட்களோடு பேசிக்கொண்டிருந்த த.மு.மு.க.காரரான அகம்மது சுல்தான் வெளியே வந்து, "இந்தப் பாரு ஆதம்ஷா, பேசத்தெரியும் என்பதற்காக எதுவேணு முன்னாலும் பேசாதே. நேற்று இங்கே சொன்னதைதான் இன்னைக்கும் சொல்றேன். இந்த தொகுதியில, அம்மா கட்சி, ஓட்டுக்கு பணத்தை தாராளமா கொடுத்தது என்பதும், எங்க சின்னம் புது சின்னம் என்பதும் அதனால வெற்றி தட்டிப் போச்சுங்கிறதெல்லாம் உண்மைதான். ஆனா, நாங்க தோற்றதுக்கு பெரிய காரணம் வேற. இந்தத் தொகுதியில் உள்ள ஒரு லட்சத்து அறுபதினாயிரம் முஸ்லிம் ஓட்டுக்களில் கால்வாசிகூட எங்களுக்கு விழலை! அதாவது இஸ்லாமியனுக்கு இஸ்லாமியன் ஓட்டு போடலைங்கிறதுதான் மாபெரும் நிஜம்." 

"இங்க பாரு அகம்மது" ன்னு பேசத் தொடங்கினார் நாட்டாண்மை ஹசன்பாய். "இந்தத் தொகுதி பூராவும் இருக்கிறவனெல்லாம் சுன்னத்து ஜமாத்த சேர்ந்தவங்க. நீங்க தவ்ஹீத் அமைப்பை சேர்ந்தவங்க இல்லை என்றாலும், நீங்களும் தொப்பி போட்டு தொழமாட்டேன், மார்ல கையை வச்சுகிட்டுதான் தொழுதுக்குவேன், விரல ஆட்டிக்கிட்டேதான் தொழுதுக்குவேன் என்கிற ஆட்கள்தான். பின்னே எப்படி நீங்க சுன்னத்து ஜமாத் ஓட்டை எதிர்ப்பார்க்கலாம்? குற்றம் சொல்லலாம்? சொல்லுப்பா. உங்களுக்கு தவ்ஹீது ஜமாத்தே ஓட்டுப்போட மாட்டேமுன்னு அறிக்கைவிடுறப்ப, சுன்னத்து ஜமாத்து எப்படி ஓட்டுப் போடும்? இதை யோசிக்காம  நீ எப்படி எங்களை குறை சொல்லுற?"  என்றார்.

அந்தப் பக்கமா பைக்கில் வந்த பெரியவர் ஜியாவுதீன் வண்டியை ஓரமா நிறுத்திட்டு டீக்கடையைப் பார்க்க வந்தார். சப்தம் திடுதிப்புன்னு ஓய்ந்து போனது.. ஜியாவுதீனுக்கென்று இந்த ஆக்கூரில் ஒரு மரியாதை இருக்கிறது. எல்லா இன மக்களும் விரும்பி அழைத்து பேசக் கூடியவராக அவர் இருந்தார். ஊரில் ஒரு காலக்கட்டத்தில் அரசியல், அடிதடி என்று இருந்தவர். ஊர் நிர்வாகப் பதவியில் இருந்தவர். பையன்கள் தலையெடுத்ததுக்குப் பிறகு எல்லாவற்றிலிருந்தும் ஓய்வு பெற்றமாதிரி கடந்த பத்து பன்னிரெண்டு வருஷமாய் தான் உண்டு தன் தொழில் உண்டு என்றிருக்கிறார். பையன்களையும் அப்படியே பழக்கி வைத்திருக்கிறார். இந்த டீ கடை வைத்திருக்கும் காதர்பாயும் அவரது செட்டுதான்!. .        

"இங்க உட்காருண்ணே என்று நாட்டாண்மை ஹசன் எழுந்து நிற்க, ஹசனது தோளில் கை போட்டபடி "வேண்டாம்டா" என்றார்.

"வா ஜியாபு, ஏது இந்தப் பக்கம்?" என்று காதர் கேட்க....

"செட்டியார் தாமேதரன் நம்ம கடையில புண்ணாக்கும் எண்ணையும் எடுத்து போயி ஒரு மாசத்து மேலே ஆகுது. பணம் வரலை. அதான் அவரை பார்த்துட்டு வரேன். நீ இங்கே கடையை மாற்றி இருக்கிறதா சொன்னாங்க, அப்படியே பார்த்துப் போகலாமுன்னுதான் நிறுத்தினேன். என்றார் ஜியாபு.  

"ஓ... சரி சரி  இந்தா ஜியாபு டீயைக் குடி" என்று அன்பு ததும்ப டீயை அவர் கையில் கொடுத்தார் காதர்.  

"இங்கே புள்ளிங்க வாதம் பண்ணிக்கிற சப்தம் நான் வர வழியிலேயே கேட்குது. நீ ஒண்ணும் சொல்ல மாட்டியா காதர்?" என்று ஜியாபு கேட்கவும் எல்லா பிள்ளைகளும் சிரித்தார்கள்.

"சும்மாதான் இப்படி சத்தம் போட்டு பேசிக்குவாங்க. வம்புதும்பெல்லாம் கிடையாது. தினைக்கும் காலைவேளையில் இங்கே நடக்கிற சங்கதிதான் இது." என்று தன் கடையின் சிறப்புகளில் ஒன்றாக காதர் சொல்லவும், மறுபடியும் பிள்ளைகள் சிரித்தார்கள்.

"தினைக்குமா?" என்று வியந்தவாறு கேட்டார் ஜியாபு.

"தினைக்கும் பொழுது விடியுதுல்ல?" என்றார் காதர். மறுபடியும் சிரிப்பலை.

"நானும் இப்படியெல்லாம் பேசிகிட்டு... அரசியலு, லொட்டு லொசுக்குன்னு திரிஞ்சவன்தான்! கைகாசு செலவு பண்ணிகிட்டு காலத்தை வீணா கழிச்சதுதான் மிச்சம்." நொந்து கொண்டவராக காதரைப்பார்த்து சொன்னார். "எனக்கு தெரியாதா ஜியாபு" என்ற காதர் சிரித்தார்.

நாட்டான்மை ஹசனின் தோளில் கை போட்டப்படி பேசிக்கொண்டிருந்த ஜியாபு, ஹசன் பக்கம் சட்டென திருப்பி "எங்கடா அவன காணோம்?" என்று கேட்டார்.

"அவன்னா யாரை காணோம்கிற?"

"அதான்டா சாமி இல்ல பூதமில்லைன்னு விவாதம் பண்ணுவானே?"

"ஒன் மாமா மகன் சிராஜுதீனை கேட்கிறீயா? அவன் இப்பல்லாம் எங்கேயும் எதையும் பேசுறது கிடையாது. அவனுக்கு அவன் வேலையைப் பார்க்கவே நேரம் போதலை!"

"அதான் அவனை பார்க்கவே முடியலையா!"

"சரி நாட்டாமை, இந்தப் புள்ளைகளுக்காவது ஏதாவது சொல்லக் கூடாதாடா?"

"ஓ சொல்லலாமே" என்று சிரித்துக்கொண்டே "அண்ணனுக்கு இன்னொரு ஸ்பெஷல் டீ குடு காதர்பாய்." என்றார் ஹஸன்பாய். கூடியிருந்த எல்லோருமே சிரித்தார்கள்.

"டேய்... நான் என்ன சொன்னேன்? நீ என்ன சொல்றே?"

"அண்ணே..., சொன்னா கேட்கிற புள்ளவோலா இதுங்க! உங்காலம் எங்கலமெல்லாம் வேற! இன்னிய காலம் வேற! நான் தெனைக்கும் இங்கே வந்து சிரிச்சுகிட்டு உட்கார்திருப்பது எனக்குத்தான் தெரியும்?" என்று நாட்டாண்மை ஹசன் சொல்லவும், காதர்பாய் "ஆமாம்... ஆமாம்" என்று விழுந்து விழுந்து சிரித்தார்.
***

***

தொடர்புடைய ஒரு பதிவு : கடைப் பலகை. -  LKS.Meeran Mohideen