‘குறடு’’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து, நன்றியுடன்..
*
வீச்சம் - அழகிய பெரியவன்
காக்காசி நாறினான். காரை உதிர்ந்த மண் சுவரில் மூட்டைப் பூச்சிகளின் இரத்தம் பிதுக்கப்பட்ட கருஞ்சிவப்பு திட்டுகளின் இடையில் காக்காசி பிணையப்பட்டிருந்தான். கன்னங்கள் டொக்கு விழ ஆழமாகப் பீடியை இழுத்தான் அவன். வறண்டு எலும்புகள் தேலிய மார்பிலிருந்து புகைப்பொதிகள் விடாய்த்து வெளியேறின. இருமல் பீறிட்டது. மார்புக்கூடு பிளந்து விரியும் படியாக அவனை ஊடறுத்தது இருமல்.
செமித்த சாராய நாற்றமுடன் பீடியின் கடும் நாற்றமும் சேர்ந்து மேலும் நாறினான் காக்காசி. மலநாற்றம், செத்த உடல்களின் நாள் பட்ட நாற்றம் என நாற்றக் கலவை காற்றிலே இமிரி, அப்பன் முன்னிருக்கும் பாமாண்டியின் நாசித் துவாரங்களில் முண்டி யடித்தது. நுரையீரல் நிரம்பி உடல் நெளிந்தது. குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.
தளர வெளிக்கிருக்கும் அவகாசத்தையும் பள்ளிக்கூடம் பறித்துக் கொள்வது பாமாண்டிக்கு வருத்தமளிப்பதாய் இருக்கும், முன்பெல்லாம் வகுப்பறையில் நாற்றம் புலன் பற்றியதும், முகம் சுழித்து, உவ்வே கொட்டி, வண்ணாத்திப்பூச்சிகளின் றெக்கைகளை அழுத்துவது போல் மூக்கை பிடித்துக் கொள்வான். கீஸ் கீஸ் என்று மூக்கடியில் தேய்த்துத் தவிப்பான். உடம்பெங்கும் குண்டிகளாய் ஆக்கப்பட்டு விட்டவர்களைப் போலத் தெரிவார்கள் அப்போது அவனுக்கு எல்லாரும்.
"பொணந்தின்னிங்க..."
மூக்கடைத்த கீச்சுக்குரலில் வசவுகளை சொல்வான் பாமாண்டி. பள்ளிக்குப் போகையிலும் வருகையிலும் மலக் குப்பல்களால் வரிசை கட்டிய தெரு கடக்க மூக்குப் பிடித்தே மீள்வான். செத்து உப்பிப் புழுத்திருக்கும் நாய் வீச்சம் வழியில் எங்கேனும் அணைந்தால் 'கிசுரு அடிக்கும். கிசுரு அடிக்கும்" என
ஓடும் அவன் கால்கள். கூட்டாளிகள் கெட்ட வார்த்தை பேசினால் அருவருத்து மாய்வான். பக்ரீத் காலமொன்றில் மழை பிடித்துக் கொண்டபோது வீட்டில் காயப்போட்டிருந்த கறித்தோரணங்கள் அழுகத் தொடங்கிவிட்டன. அவனைப் பார்க்க கூட்டாளி ஒருவன் வர நேர்ந்துவிட்டது. அப்போது அவமானத்தால் துவண்டு போனான் பாமாண்டி. அதைத் தொடர்ந்து கறிக் கவிச்சி பிடிக்காமல் சைவனாய் மாறி பின் அரை மனதுடன் மீண்டதும் உண்டு. வெளிக்கிருக்காத ஒரு மனிதனாக.. தான் மாறிவிட வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுதல் செய்து கொண்டு மிருக்கிறான் சில சமயங்களில்.
அவனை நெட்டிமுறிக்க முயன்ற போதெல்லாம் ஒரு புழுவாய் மாறியிருக்கிறாள் பாட்டி அவனுக்கு.
"நா உம் பீ வாராமெ, நா உஞ்சளி சிந்தாமெ வளர்ந்துட்டியாடா "நீ பாமாண்டி?"
"அவனுக்கு கற்பூரம் கவிச்சி அடிக்குதும்மா... இப்படி நீத்தம் பாக்குறவன் வேற எங்காச்சும் போயி பொறந்து தொலைக்க வேண்டியதுதானே."
செவந்தமணியும், பாட்டியும் தங்களின் நியாய நிறுவலில் மேலும் புழுவாய் மாறியிருக்கின்றனர் அவன் முன்.
ஞாபகங்களில் தங்கும் அத்தனை நாற்றப் படிவுகளும் பொடி யாகி உதிர்ந்து நாற்றப்புகைச் சுருள்களாய் இன்று அப்பன் காக்காசி முன் அமர்ந்திருந்த போது எழும்பி வந்து உலுப்பின. உப்பிப் பெருத்து சுவர் சார்த்தி இருத்தப்பட்ட பிணமென அப்பன் பாமாண்டிக்கு காட்சியளித்தான். அப்பன் பிணமென நினைவுகள் ஊடாடியதும், உலுப்பின கிளையென அதிர்ந்தான் அவன். பாமாண்டியின் நினைவுக் கண்ணிகள் முன்னெழுந்து கிளைத்தன.
ஒரு காற்றடி காலத்தில்தான் காக்காசி கிணறுகளைத்தோண்டிக் கொண்டிருந்த வேலையை விட்டு தோல் ஷாப்புக்குப் போனது. மண்ணின் சதைத் துண்டுகளை அகழ்ந்து அகழ்ந்து தண்ணீர் சுழிக்கும் நாளங்களைத் தேடிக் கொண்டிருந்ததை செவந்தமணி தடுத்து விட்டாள். பிணம் வசிக்க வீடு தோண்டும் வெட்டியானைப் போல் தினமும் காக்காசி மண்கோலி, மண்கோலி பாதாளங்களின் உட்பிரவேசித்து பிணமென மீள்வது செவந்தமணியை அவஸ்தையுறச் செய்தது. சடலத்தின் குளிர்ச்சி நிரந்தரமாய் கணவனின் உடம்பில் தங்கிவிட்டதாய் உணர்ந்த ராத்திரியில் அவனை தோல் ஷாப்புக்கு போகும்படி ஏவினாள். அங்கும் பிராணிகளின் உடல் நழுவிய தோல்களுடன் காக்காசி இருக்க நேர்ந்தது. நாற்றமும் சவமும், பிணைந்த வாழ்வின் சோகைத் தனத்தில் தோல்களை உயிர்ப்பிக்கும் செயல் அவனை அந்த வேலையில் ஈடுபட வைத்தது.
வேலைக்குப் போயிருந்த முதல் வாரத்தின் கடைசி நாள் மாலையில் இன்னும் வீடு மீளாதிருந்தான் காக்காசி. சூரியனின் துர்மரணத்துக்குப் பின் வளர்ந்த இருட்டில் பிள்ளையுடன் வாசல் காத்துக் கிடந்தாள் செவந்தமணி. நேரம் ஏறஏற யாருமற்ற தனிமையின் இரவில் அனாதையின் சோகம் போல் பொழுது மாறி சூழ்ந்தது அவர்களை. பாமாண்டி செவந்தமணியின் முகத்தை ஏறிட்டான்.
பரிவின் கசிவு ததும்பும் விழிகள் கன்னத்தின் உள்வாங்கிய குழிகளில் சுழன்றன அவள் முகத்தில்.
"ஏம்மா உன்னும் அப்பா வர்ல?"
"தெரியிலேயே சாமி. இப்ப வந்துனு இருப்பாரு."
அவளின் சொற்கள் ஆதரவற்றுத் தவித்தன. பாமாண்டிக்கு நம்பிக்கையின் சாரம் வற்றி சுயமனத்தேற்றலில் எண்ணங்கள் குழம்பின.
"ஒருவேளை அப்பா செத்துட்டிருப்பாரோ."
பாமாண்டியின் முதுகு அதிர்ந்தது. செவந்தமணியின் அடி களைத் தாங்காமல் காக்காசி வந்து தேற்றும் வரை அழுது சுணங்கிக் கொண்டிருந்தான். பலகாரங்கள் பொதியப்பட்ட பொட்டலத்தை மகன் கைகளில் திணித்துவிட்டு தின்னச்சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான் காக்காசி. அப்போதுதான் அறியப் பட்டு வந்த அப்பனின் மனித வாசனையுடன் புதிதாய் குடலைப் புரட்டும் நாற்றம் ஒன்றும் வெளிப்படுவதை நுகர முடிந்தது பாமாண்டியால்.
நாற்றங்களைப் பிரித்தறியும் வயது தொடங்கிய போதுதான் பாமாண்டி குருகுலவாசம் கற்கும் வேதியப் பொடியன் கணக்காய் வெளியூர்களின் பள்ளிவிடுதிகளில் தங்கிப் படிக்க நேர்ந்தது. நாற்ற உலகிலிருந்து நந்தவன பரப்புக்கு உட்பட்டு விட்டதாய் நினைக்கத் தொடங்கிய அவன் வீடு மீள்தலை அருவருத்தான். மலங்கழிப்பதின் அசூயையுடன் கல்லூரிக் காலங்களில்தான் பாமாண்டி எனும் தன் பெயரை சுக்கல் ஆக்கி கா.பா.மாண்டி என புனைந்து கொண்டதும் நடந்தேறின. மாமன்னன் அக்பர் உடலிருந்தும் அலெக்சாண்டரிடம் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததான சுகந்த வாசனை பற்றிய குறிப்பைப் படித்ததும் அப்பன் அப்படி இருக்கலாகாதோ என எண்ணம் வருத்தியதும் உண்டு.
பணத்தேவைகளை முன்னிருத்திதான் வீட்டுக்கு வர நேர்ந்திருந்தது இப்போது பாமாண்டிக்கு. சாம்பல் பூத்த இருட்டுக் காலையில் சென்று, இருள் கவியும் மாலை திரும்பும் நாற்றம் பிடித்த தன் அப்பனை தவிர்க்கும் உபாயங்கள் அன்று தோற்றுப் போயின. பாமாண்டி காக்காசியிடம் சிக்கிக்கொண்டான். தன் ஒற்றை வித்து, கல்வியின் உயர் முகடுகளில் நின்று தன் நிமித்தமாய் உலகைப் பார்த்து கெக்கலியிடுகிறது. மகனின் பெருமித உணர்வுகளின் நெகழ்வில் ஆதூரமாய் மகனை உச்சி மோந்தான் காக்காசி.
அப்பனின் நடுங்கும் கைகளின் வழியாய் அணைக்கும் வெதுவெதுப்பு பாமாண்டிக்கு அருவருத்தது. தன் மீசை முடிகளை பிஞ்சி விரல்களால் அளைந்து நெஞ்சை உதைத்த மகனின் குழந்தைப் பருவ புளங்காகிதங்களால் ஆட்கொள்ளப்பட்ட காக்காசி நரை மண்டிய மீசை குத்தும்படிக்கு பாமாண்டியை முத்தம் செய்யத் தவித்தான். சாராயத்துடன் பீடியும் இணைந்த நாற்றக் கலவை காக்காசியிடமிருந்து கிளம்பி பாமாண்டியின் முகத்தை அறைந்தது. விதிர் விதிர்த்தான் பாமாண்டி. குபீரென அப்பனின் உடலிலிருந்து வெளிப்பட்ட பிணவாடை, சதைக் கவிச்சியாய் வெருட்டிக் குலைத்தது அவனை.
வறுத்த கறித்துண்டுகளை மெல்லும் தன்னை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காக்காசியின் முகக்கனிவையும் வாயில் குழைந்து கனலும் பீடியின் தீக்கண்ணையும் சந்திக்கத் திராணியற்று முகம் தாழ்த்தி பாமாண்டி நெளிந்தான். பரவியெழும் நாற்றப் புயலால் தாக்குண்டவனாகி சூலுற்றிருப்பவளைப்போல் வீட்டினுள்ளிருந்து எழுந்தோடி வாந்தி எடுத்தான் அவன். வாந்திக்கான எதுக்களிப்புகள் அடிவயிற்றிலிருந்து எழும்பி எழும்பி நெஞ்சு கிழித்தன. தலையின் பக்கங்களை கைகளால் அழுத்திச் சுருண்ட அவனை உடம்பு, மண்ணில் தலை புதையும் படியாய் இழுத்தது. பாமாண்டியின் வாயிலிருந்து உமிழ்நீர் சரங்கட்டியது.
பன்றியின் உடம்பில் உறைந்து உலர்ந்த சாக்கடை பொருக்குகளின் நிறமொத்து இருட்டு இருந்தபோது காக்காசி வெளியே கிளம்பிவிட்டான். கல் கல்லென்று இருமி இருமி இரவெல்லாம் மல்லாந்தபடி சுவர்க்கோழிகளின் கீச்சலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். தாவில்தங்காது தாவரித்துக் கிடந்தது படுக்கையில் அவன் உடம்பு. கோழை கட்டிய விலாப்படிகளில் மேலேறி கீழிறங்கி ஆட்டம் போட்டது இருமல்.
இருமல் புகைந்து மூச்சுத் திணறிய அவஸ்தைகளின் போதெல்லாம் அருகில் படுத்திருக்கும் செவந்தமணியின் குறட்டைகள் கேலி செய்தன அவனை. எச்சிலும் பிணத்தை சபிப்பதுபோல் அவள்மீது துப்பினான் காக்காசி. அருகிலிருக்கும் வீட்டிலிருந்து எழுந்து அடங்கிய சாமனின் ராக ஆலாபனையையொத்த நீண்ட கொட்டாவி மேலும் எரிச்சலூட்டியது காக்காசியை. தன் ஆங்காரத்தை பிரதி எடுத்து வசவுகளாய் சாமனின் வீட்டுத் திசையில் எறிந்தான் அவன்.
அருகிலிருக்கும் சிறு நகரின் மையத்திலிருந்த மசூதியின் தொழுகை அழைப்பு கேட்டபோது, அது அதிகாலை நான்கு மணிக் கானது என உணர்ந்து எழுந்துவிட்ட காக்காசி படுக்கையை விட்டகன்று சந்துக்குப் போனான். ஒன்றுக்கிருந்து, இடிந்த சுவரின் மண்ணால் நரநரவென பல்தீட்டி, மொரிக்கிச் சட்டியில் குளிர்ந் திருந்த நீரில் வாய் கொப்பளித்தான். நடையில் கிடந்த நாய் உண்ணியின் பிடுங்கல்களால் பின்னங்கால்களால் உதைத்து ஒலி யெழுப்பியது. முடங்கிக்கிடந்த குடிசையின் மேற்கால் கிளைத் திருந்த கோணப் புளியமரத்தில் சிக்கிக் கிழிந்து அலையும் பாலிதீன் பையாக நிலா வெறித்தது. பாத்திரங்களை உருட்டி கஞ்சியில் கை உளைந்த போது செவந்தமணி அரற்றினாள்.
"யாருடி நாயீ அது."
"கம்முனு படுமே, நாந்தான்."
"இன்னிக்கு புள்ளே போயிடறானாங். காலேஜில பீசு ணுமாமே. உம்பாட்டுக்கு கமானமா போயிட்டா எப்படி?"
"ஒரு பத்துமணிக்கா ஷாப்பாண்ட வரச் சொல்லுமே. எஜமாங்கிட்ட கேட்டு வாங்கித் தாரென் எதானாச்சும்."
நடுத்தெருவின் கோழி கூப்பிடும் சப்தம் இருட்டை பலவீன மாக்கியது. தெருவில் மண்டிக் கிடக்கும் இருட்டில் அமிழ்ந்து இருமல் ஒலிகளுடன் கரைந்தான் காக்காசி. முகங்கள் துலங்க ஆரம்பித்த மெல்லிய இருளில் தோல் ஷாப்பை அடைந்த காக்காசி ஆடைகளைக் களையத் தொடங்கினான். சுருண்ட வேட்டியையும்
சட்டையையும் உருண்டை பிடித்ததுபோல் ஒரு மூலையில் பத்திரப்படுத்திவிட்டு கோணிப்பையின் துண்டு ஒன்றால் கோவணத்தின் மேல் அரை கட்டிக்கொண்டான். தோல் ஷாப்பின் விரிந்த கட்டிடமும், தோல்களை ஊறப்போட்டிருந்த தொட்டிகள் வரிசையிடும் பெரும் கொட்டகையும் என எல்லாமே நாற்றத் துண்டுகளால் எழுப்பப்பட்டது போலிருந்தன. பச்சைத் தோல்கள் வேதிப் பொருட்களிலும் சுண்ணாம்பிலும் புளித்து ஊறி நாற்றம் பரப்பின. சவ்வுகளும், தோல் கழிந்த மயிர்களும் இரைந்திருக்கும் பரப்பு எங்கும் கொடூரக் கவிச்சி நாற்றம். தோல்கள் ஊறும் தொட்டிகளில் கரைசல் நீர் புளித்து, குமிழ்கட்டி, சீழ் நிறத்தில் இருந்தது.
காக்காசி தோல்களை திருப்பிப் போடவும் இடம் மாற்றவுமாக தொட்டிகளில் இறங்கத் தொடங்கினான். கொடூர குளிர்வின் ஊசித் தீண்டல்கள் அவனை வதைத்தன. மரத்து இற்ற தேகம் எதையும் சட்டை செய்யாமல் தோல்களைத் தூக்கி வீசியது. இறுகலாய்த் தழுவி அவன் எலும்புகளை நொறுக்கின. தோல் குவியல்களை இடம் மாற்றி, பச்சையாய் ஊறி நீர்ச்சொட்டும் அவற்றை அந்தரத்தில் தொங்கும் கொக்கிகளில் பிணைத்து முறுக்கிப் பிழிந்து, உலருவதற்கென கொட்டடிகளில் காயவிட்டு உழன்றான். வேதிநீர் கரைசல்களில், சவ்வுக் குவியலில், தோல்களின் கவிச்சிநெடியில் நாற்றம் பொதிந்த ஜடமாய் உருமாற்றம் கொண்டிருந்தான் அவன்.
மகன் வருகையின் எதிர்பார்ப்பும், எஜமானிடமிருந்து பணத்துக்கென எதிர்கொள்ளவிருக்கும் பதிலின் அனுமானமும் அவனை மேலும் ஆயாசம் கொள்ளச் செய்து பெருமூச்சைக் கிளப்பின.
இளம் வெயில் பொழுதில் அவன் மகன் அங்கு வந்து சேர்ந்தான். முக்கால் நிர்வாணியாய் தன்னை நோக்கி ஓடிவரும் அப்பனைப் பார்த்ததும் பெரும் மனத்தாக்குதலுக்கு ஆளானான் பாமாண்டி. கவிச்சி வீச்சம் வாரி அடித்தபடி இருக்கும் சூழலில் நாறும் மனிதனாய் எதிரே நிற்கும் அப்பனைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு.
"மயிரு... நா போயீ துட்டு வாங்கினு வருணுமா? நா போகல. அந்த நாத்தம் புடிச்ச ஷாப்புக்காவெல்லாம்."
"ராஜா, ஒரு வாட்டி மட்டும் போயிட்டு வந்துரப்பா. நா ஒரு வேலையா கெடக்கிறேங்."
நாற்றத்தின் குரூர அருவருப்பில் அதிர்ந்தவனாகவே அவனால் வீட்டில் இப்படி செவந்தமணியிடம் சொல்ல நேர்ந்தது. அந்த வீரியம் அப்பனின் கோலத்தை உள்வாங்கியதும் சரிவது போல் இருந்தது இப்போது. வார்த்தைகள் அடைபட்டு நெஞ்சு வீக்கம் கொண்டது. காக்காசியிடம் பேசவும் திராணியற்று மனம் சரிந்தான். நாற்றப் பண்டமாய் மாறிப்போனதை அந்த நொடியில் உணர்ந்தான் பாமாண்டி. முன் தீர்மானங்களின் பட்டை உரிந்து மெதுவாய் ஒரு பீக்குண்டுக்குள் அமிழ்ந்து வெளியேறினான் அவன். பாமாண்டியின் நாற்றப் பிரதிகள் அவனிலிருந்து உதிர்ந்து வீழ்ந்தபடியே இருந்தன.
(END)
நன்றி : அழகிய பெரியவன் , கலப்பை, சென்ஷி




