Wednesday, July 1, 2026

சரித்திர நாயகர்களும் சதம் கண்ட சங்கமும் - நாகூர் அப்துல் கையூம்

நாகூர் கௌதிய்யா சங்கத்தின் நூற்றாண்டு விழா மலரில் நண்பர் அப்துல் கையூம் எழுதிய கட்டுரை நன்றியுடன் பகிர்கிறேன். - AB

*


சரித்திர நாயகர்களும் சதம் கண்ட சங்கமும்

-        நாகூர் அப்துல் கையூம்

 

 

ஒரு நூற்றாண்டைத் தாண்டி வீறுநடை போடும் கெளதிய்யா சங்கத்தின் உன்னதங்களை ஒருசில பக்கங்களில் அடைத்துவிட இயலாது. BETTER LATE THAN NEVER என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. தாமதமாக கொண்டாடினாலும்  தகுந்த நேரத்தில் இச்சங்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தனித்துவமிக்க தரமான ஒரு ஓர் அற்புத நிகழ்வு. 

 



நாகூர் கெளதியா சங்கம் இதுவரை ஏராளமான பிரமுகர்களுக்கு வரவேற்பு அளித்து கெளரவித்திருக்கிறது. பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தலைவராக விளங்கிய  பனாத்வாலா - இப்படியாக எத்தனையோ முக்கியப் புள்ளிகள். இவ்வரவேற்புகளில் மிக முக்கியமானது நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பதில் சற்றும் ஐயமில்லை.  

 

காரணம் என்னவெனில் நாகூர் மண்ணின் மைந்தர் ஒருவர்  தமிழ்நாடு ஆளுநர் எனும் உயர்பதவியை ஏற்று சொந்த ஊருக்கு அடியெடுத்து வருகையில் அவர் பிறந்த மண்ணில் கொடுக்கப்படும் வரவேற்பு ஒரு சரித்திர நிகழ்வன்றோ?

 

பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிகத் தமிழக ஆளுநராக  நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்கள் நியமிக்கப்படுகிறார். 1980-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 27ஆம் நாள் அவர் பதவியேற்ற நன்னாள். பதவியேற்றபின்பு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நாகூர் கெளதிய்யா சங்கத்தில் அவருக்கு பிரமாண்டமான  வரவேற்பு அளிக்கப்படுகிறது.. 

 

பள்ளிப்பருவம் 

 

நாகூர்  மீயான்தெரு முனிசிபல் முகம்மதிய ஆண்கள் ஆரம்பநிலைப் பள்ளி. இப்பள்ளிக்கூடம்தான் இஸ்மாயீல் எனும் இலக்கிய இமயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த பாசறை. 

 

சிறுவன் இஸ்மாயீல் அப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரமது. தமிழ்நாடு மாநிலம்மெட்ராஸ் பிரஸிடென்ஸிஎன்று அழைக்கப்பட்ட காலம். ஒரு காலைப் பொழுதில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், வீதியில் பலத்த ஆரவாரம் ஒலிக்கின்றது. வாகனங்களின் அணிவகுப்பு சீராக வந்துக் கொண்டிருந்ததைக் கண்டு, பாடத்தை நிறுத்திவிட்டு, ஆசிரியர்களும் மாணவர்களை வேடிக்கை பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் செல்கின்றனர். திண்ணை மீதிருந்தும், சுற்றுச் சுவர் மீது ஏறி நின்றும், அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டு களிக்கின்றனர் மாணவர்கள்.

 

படோபகரமான வாகன அணிவகுப்புக்கிடையே ஒருமெர்ஸிடீஸ்படகுக்கார் பவனி வருகிறது. அதில் அட்டகாசமான தோரணையில் ஆங்கிலேய கவர்னர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். ஊர்வலம் பள்ளியின் வழியாக கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. உற்சாகம் மேலிட, வாகனங்கள் சென்ற வழியே, வைத்த பார்வை தீராது, வழிமேல் விழி வைத்து; கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருக்கிறான் சிறுவன் இஸ்மாயீல்.

 

இஸ்மாயீல் மீது பேரபிமானம் வைத்திருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐயர்டேய் பசங்களா! நம்ம இஸ்மாயீலும் ஒருநாள் இந்த மாதிரி கவர்னர் ஆகி அட்டகாசமாக ஊர்வலம் வருவான். பார்த்துக்கொண்டே இருங்க!என்று விளையாட்டாகச் சொன்னது அந்தச் சிறுவனின் காதில் அசரீரியாய்  ஒலித்துக் கொண்டிருக்கிறது. அன்பிற்குரிய ஆசிரியர் அகமகிழ்ந்து அளித்த நல்வாக்கு, ஒருநாள் உண்மையிலேயே பலிக்கும் என்று யாரும் ஊகித்திருக்க மாட்டார்கள். அந்த நல்வாக்கு பலித்து இப்போது நிறைவேறி இருந்தது. கெளதிய்யா சங்கம் அம்மாமனிதருக்கு அளித்த வரவேற்பு இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டு.

 

விளையும் பயிர் 

 

சிறுவன் இஸ்மாயீலுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. நாகூரில் நபிகள் நாயகத்தின் மீலாது விழாகொண்டாட்டம். அவ்விழாவில் இஸ்மாயீலுக்கு சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.  மடை திறந்த வெள்ளமென பேசி கேட்போரை வியப்பில் ஆழ்த்துகிறான் அச்சிறுவன்.விளையும் பயிர் முளையில் தெரியும்என்பார்களே, அதுபோல.

 

அதுமட்டுமன்றி, சிறுவயதில் அரபி மதரசா சென்று அரபி மொழியில் பயிற்சி பெற்று முறையாக முதிர்ச்சி பெற்றிருந்தான் அச்சிறுவன். பிற்காலத்தில் தமிழ்மொழியில் அபார பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், தொடக்க வயதில் அரபி மதரஸாவில் அடிப்படை மார்க்கக் கல்வி பயின்ற காரணத்தால் அதன்பின் ஆரம்பப் பள்ளியில் அடியெடுத்து வைத்த காலத்தில் அவனோடு படித்த மாணவர்களில் இவன்தான் வயதில் மூப்பு. இவன் வயதையொத்த பிற மாணவர்கள் மேல்வகுப்பில் இருந்ததைப் பார்த்து இவனுக்குள் ஒரு தீராத ஏக்கம். வாழ்க்கையில் ஏனோ பின்தங்கி விட்டதைப் போன்ற ஒரு திக்பிரமை. அதிகப்படியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம், தன் வயதையொத்த மாணவர்களுடன் தானும் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற உந்துதல், கல்வியில் இச்சிறுவன் காட்டிய பேரார்வம் இவையாவும் பள்ளி ஆசிரியர்களை இவன்பால் கவனத்தை ஈர்த்தது. 

 

இளமையில் சோகம் 

 

இஸ்மாயீலின் இளமைக் காலத்து வாழ்க்கைப் பாதையில் பூக்கள் விரித்திருக்கப் படவில்லை. அவன் கரடு முரடான முட்பாதையைக் கடக்க வேண்டியிருந்தது.  பி.முஹம்மது காசிம் மரைக்காயர், ருகையா பீவி இருவருக்கும் செல்வப்புதல்வானாய் வந்து பிறந்தவர்தான் நம் நாகூர் நாயகன். உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவரின் பெயர் ஜக்கரியா மரைக்காயர். இன்னொருவர் உம்மு ஹனிமா என்றழைக்கப்படும் சகோதரி ஆவார். நாகூர் லுக்மான் ஆலிம் சாயபு என்பவரின் வாழ்க்கைத் துணைவியார்.

 

ஒன்பதாவது வயதில், பெற்ற தாயையும், பதிமூன்றாவது வயதில் தந்தையையும் பறிகொடுத்த சிறுவன் இஸ்மாயீலுக்கு உலகமே இருண்டு போகிறது. ஆறுதல் தேடும் வயதில், ஆதரவு வேண்டும் பருவத்தில், அனாதையாய் ஆகிவிடுவது அளப்பரிய கொடுமையன்றோ? இருந்த போதிலும் உறவினர்கள் அவனைக் கைவிடவில்லை; கண்ணுங் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள்.

 

மேல்நிலைக்கல்வி 

 

இஸ்மாயீலுக்கு தமிழ்மொழி மீது ஓர் அதீத ஈடுபாடு ஏற்பட்டது நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான். ஆசிரியர் என்.ஆராவமுதன் ஐயங்கார் அவனுக்கு அளித்த உற்சாகமும், ஊக்குவிப்பும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்.  இந்த ஆராவமுதன் யாரென்றால்  பாடகர்  ஏ.வி.ரமணனின் தந்தை, பாடகி உமா ரமணணின் மாமனார். எஸ்.எஸ்.எல்.சி. வரை இஸ்மாயீலின் ஆசிரியராக இருந்து அவன் ஆற்றலை வளர்த்தவர்,

 

இஸ்மாயீல் மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பை எட்டியபோது தமிழிலக்கியத்தில் மென்மேலும் தேர்ச்சி பெறக்கூடிய அரிய  வாய்ப்பு கிடைக்கிறது.  சங்க இலக்கியத்தில் பெருந்திறன் வாய்ந்த சந்தானம் ஐயர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் போன்றவர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பு அவர் செய்த பெரும்பேறு எனலாம்.

 

பிறர் நோக்கு

 

மனவியல் நிபுணர் பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்கப் பெண்மணி எழுதி, ஆக்ஸ்ஃபோர்ட் பதிப்பகம் வெளியிட்ட, “Questioning of Ramayanas” என்ற ஆய்வுநூல் பெரும் சர்ச்சையை கிளப்பிய நூல். இதில் இந்து சமயத்தவரின் மனதை புண்படுத்தும் வகையில் தகவல்கள் அடங்கி இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு எழுந்து, இந்நூலை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

 

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தின் சமய விரிவாளராக பணியாற்றும் பேராசிரியை வாசுதா நாராயணன் எழுதிய  “The Ramayana and its Muslim Interpreters” என்ற ஆய்வுக்கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அதில் அவர் நீதிபதி இஸ்மாயீல் அவர்களை வானளவப் புகழ்ந்திருந்தார். 

 

திருக்குறளின் மேன்மையை எடுத்துச்சொல்ல கானடாவில் பிறந்த ஒரு ஜி.யு.போப் தேவைப்பட்டதைப் போன்று, நாகூர்க்காரரின் மகிமையை எடுத்துச் சொல்ல நமக்கொரு அமெரிக்கா பேராசிரியை தேவைப்படுகிறது. இதைப் படித்த உள்ளூர்க்காரனான நான் இவரின் மகிமையை இதுநாள்வரை உணரவில்லையே  என வெட்கித்துப் போனேன்.

 

படிப்படி முன்னேற்றம்

 

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய அவர் வகிக்காத பதவிகளே இல்லை எனலாம். வழக்குரைஞராக, சென்னை விவேகானந்தா மற்றும் சட்டக் கல்லூரியில் பகுதிநேரப் பேராசிரியராக, தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக. தில்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக, சென்னை உயர்மன்ற நீதிபதியாக, பிறகு தலைமை நீதிபதியாக, தற்காலிக கவர்னராக, இடையே கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, சட்டக் கமிஷன் தலைவராக, தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் கமிட்டியின் தலைவராக, இப்படியாக அவர் வகித்த அனைத்துப் பதவிகளிலும் அக்மார்க் முத்திரை பதித்தார்.

 

சென்னை  கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவராக இருந்த அவர், தொடக்ககால முதல் தனது மரணம்வரை அவ்வமைப்பின் தலைவராக நீடித்து சாதனை புரிந்தவர் .  

 

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் உறவுக்காரப் பிள்ளைகள் அவரைஜட்ஜப்பாஎன்றுதான் பாசத்துடன் அழைப்பார்கள்.உங்களுக்கு ஜட்ஜப்பா பிடிக்கும். அவருக்கோ கவிக்கம்பனுடைய விருத்தப்பா பிடிக்கும்என்று நான் அவர் உறவினர் ஒருவரிடம் நகைச்சுவையாக கூறுவதுண்டு.

 

தவறான கண்ணோட்டம்

 

காலம் முழுதும் அவர் கம்பராமாயணத்தின் புகழைப் பரப்புவதிலும், பட்டிமன்றங்களில் இராமபிரானுக்கு வக்காலத்து வாங்குவதில் தன் காலத்தை செலவிட்டார் என்ற விமர்சனம் பரவலாகவே உண்டு. பெரும்பாலும் அவர் பிறாமணச் சகோதர்களுக்கிடையே வாழ்ந்து வந்ததால், அவருடைய உணவு முறைகூட சுத்த சைவமாகவே மாறிவிட்டிருந்தது. கம்பனின் எழுத்தாற்றலில் அவர் தன் மனதைப் பறிகொடுத்ததென்னவோ உண்மை. அதற்காக அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளிலிருந்து விலகிப்போய் விட்டார் என்பது அர்த்தமல்ல. 

 

இஸ்லாமிய இலக்கியம்

 

நீதியரசர் எழுதிய முதல் நூல் மெளலானா ஆஜாத் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு. அப்போது அவருக்கு வெறும் 24 வயது. இந்நூலுக்கு முன்னுரை வழங்கியவர் யார் தெரியுமா? மூதறிஞர் ராஜாஜி.

 

அவரெழுதிய இஸ்லாமிய நூல்களில்அல்லாவுக்கு ஆயிரம் திருநாமங்கள்என்ற முத்தமிழ் நூல், இஸ்லாமிய எழுத்துலகில் முத்திரை பதித்த தித்திக்கும் படைப்பு. அரபுமொழியில்அஸ்மாவுல் ஹுஸ்னாஎன்றால் அழகிய திருநாமங்கள் என்று அர்த்தம். இந்நூலில் அவர் மார்க்க அறிஞர்களே வியக்கக் கூடிய அளவுக்கு பல நுட்பமான விஷயங்களை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். அரபு மொழியிலும்தமிழ் மொழியிலும் வல்லமை பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய ஓர் அறிவுபூர்வமான ஒரு நூலை வெளிக்கொணர இயலும் என்பது வெள்ளிடைமலை 

 

நபிகள் நாயகத்தின் நிறைவான வாழ்க்கை உமறுப்புலவருக்கு 'சீறப்புராணம்' என்ற காப்பியத்தை வடிக்க காரணமாக அமைந்தது. இப்றாஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் சேகுனாப் புலவருக்குதிரமணிமாலைஎன்னும் இலக்கியத்தைப்  படைக்க  உந்துதலாக இருந்தது. அதேபோன்று சுலைமான் நபியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வண்ணக் களஞ்சியப் புலவருக்குஇராஜநாயகம்என்னும் இலக்கியக் காப்பியம் வடிக்கத் தூண்டியது. யூசுப் நபியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் சாரணபாஸ்கரனாருக்கு "யூசுப்-ஜுலைகாஎன்ற காப்பியத்தை வடிக்க காரணமாயிருந்தது

 

சீறாப்புராணம்”, “யூசுப்-ஜுலைகா காவியம்”, “இராஜ நாயகம்போன்ற இலக்கியச் சுவைமிக்க இஸ்லாமியப்  படைப்புகள் அத்தனையும் அவர் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்துள்ளார்.  அந்த அற்புதமான திறனாய்வுகளை கட்டுரைகள்நூல்கள்சொற்பொழிவு  வாயிலாக தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு தரமானதாய் வார்த்தும் இருக்கிறார். சாரணபாஸ்கரனாரின்யூசுப்-ஜுலைகாகாப்பியத்திற்கு அணிந்துரை வழங்கியவர் நீதியரசர் மு.மு.இஸ்மாயீல்.

 

வண்ணக்களஞ்சியப் புலவரின்இராஜநாயகம்என்ற காப்பியத்தை திறனாய்வு செய்து நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் எழுதியஇனிக்கும் இராஜ நாயகம்என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

 

8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணக்களஞ்சியப் புலவரின் இயற்பெயர் செய்யது ஹமீது இப்ராஹிம் என்பதாகும். வண்ணம் என்னும் சந்தச் செய்யுள் பாடுவதில் வல்லவரான இவரை வண்ணக்களஞ்சியப் புலவர் என்ற பெயரைச்சூட்டி இவரைச் சிறப்பித்தனர். வண்ணக்களஞ்சியப் புலவர் மீசல் என்னும் ஊரில் பிறந்தார். அவர்  நாகூருக்கு அருகில் உள்ள பொறையார் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பதாயி மரைக்காயர் எனும் செல்வந்தரின் மகளை மணமுடித்துக் கொண்ட இவர், தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை நாகூரிலேயே கழித்தார்.  இவர் நாகூர்க்காரராகவே அறியப்பட்டார்.புலவர் கோட்டைஎன்றழைக்கப்பட்ட நாகூரில் செயலாற்றிய புலவர்கள் சபை இவருக்குவண்ணக்களஞ்சியப் புலவர்என்ற சிறப்பு பட்டத்தை அளித்து கெளரவித்தது.


காந்தியவாதி

2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம் வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைக் கண்ணால் காண்பதற்கு திருச்சி மாநகருக்கு  ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய் மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரமது.

 

இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்திஜீயின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்தவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன். புகழ் பெற்ற காந்தியவாதியான அவர் மகாத்மா காந்தியின் நூல்களைத் தொகுத்தவர். நீதியரசர் காந்தியச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். 

 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயீலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற்திறனும் சுவாமிநாதனை மிகவும் ஈர்த்தது. தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீல்  அவரைத் தன் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் போற்றினார்.

 

ஒரு பேட்டியின் போதுதங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்என்று கூறினார். அவரது நினைவாகபேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசுஎன்ற ஒன்றையும் நிறுவினார். 

 

இளம் வயதிலிருந்தே காந்தியின்ஹரிஜன்இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.

 

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச் சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்

 

கம்ப இராமாயணம் 

 

திருக்குறள் விளக்கத்திற்கு திருக்குறள் முனுசாமியைப் போன்று, சிலம்பதிகார விளக்கத்திற்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யைப் போன்று, கம்ப ராமாயணத்திற்குஅத்தாரிட்டியார் என்றால் எல்லோருடைய  நினைவிலும் உதிப்பது  நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுடைய  பெயர்தான். இன்றளவும் மதநல்லிணக்கத்திற்கு நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களைத்தான் எல்லோரும் உதாரணம் காட்டுகிறார்கள். 

 

1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணினார். அதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டபோது அவர் கலந்தாலோசனை செய்தது நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம்தான். இசையரசிக்கு இஸ்மாயில் சொன்ன யோசனை இதுதான். கம்பராமாயணப் பாடல்களை முதலில் மனனம் செய்து, அதன் பொருளுணர்ந்து அதன் பின்னர் பாடல் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் ஒரு பவ்யமான சிஷ்யையைப் போன்று அவ்வப்போது கம்பராமாயணத்தைப் பற்றிய சந்தேகங்களையும் அதன் அருஞ்சொற்பொருளையும் அவ்வப்போது ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

 

இலக்கியச் செல்வரும் எம்.ஜி.ஆரும்

 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாம் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சி 1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம்தேதி பகல் 12 மணிக்கு நடைந்தேறியது.  பதவியேற்பு சம்பிரதாயங்கள் முடிந்ததும் எம்.ஜி.ஆரும், கவர்னர் பட்வாரியும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொண்டனர். பதவியேற்ற 17 அமைச்சர்களும் எம்.ஜி.ஆர். காலைத் தொட்டு வணங்கினார்கள்.

 

மேடையிலிருந்து வேகமாக கீழிறங்கி வந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். முன் வரிசையில் அமர்ந்திருந்த நீதியரசரின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பவ்யமாக வணங்கி வாழ்த்துப் பெற்றார். நீதியரசர் மீது மற்றவர்கள் கொண்டிருந்த மரியாதைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

 

கெளதிய்யா பைத்து சபா

 

"கெளதிய்யா சங்கம்" என்பது  ஓர் ஆலமரம். கெளதிய்யா பள்ளிக்கூடம், கெளதிய்யா பைத்துசபா, கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் இவையாவும் அதன் விழுதுகளாக பரவிய அமைப்புகள். கெளதிய்யா பைத்துசபா, புலவர் ஆபிதீன் போன்ற இலக்கிய ஆளுமைகளையும், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா போன்ற இசை மேதைகளையும் உருவாக்கியது என்ற விவரம் மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும். இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக, நாகூருக்கு வருகை தந்த சரித்திர நாயகர்களுக்கு தந்த வரவேற்பைப் பற்றிய விவரங்கள் இன்றைய இளந்தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.

 

நான் சிறுவனாக இருக்கையில் என் தந்தைவழி பாட்டி அதை ஒரு சுவையான நிகழ்வாக விவரித்துச் சொல்ல நான் கேட்டு களித்திருக்கின்றேன்.

 

இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கிலாஃபத் இயக்கத்தின் தலைவர்களாக விளங்கிய அலி சகோதரர்கள் குறித்து உலகமே நன்கறியும். ஆங்கில ஏகாதிபத்திய காலனிய அரசுடன் ஒத்துழைக்க மறுத்து ஆங்கிலேயர்களை  கதிகலங்க வைத்தவர்கள் இந்த அலி சகோதரர்கள்.

 

இதில் மெளலானா முஹம்மது அலி ஜவஹர் இளைய சகோதரர். மெளலானா சௌகத் அலி கான் மூத்த சகோதரர்.  இவர்களின் தாயார் பீ அம்மா (Bi Ammaa) என்று அன்புடன் அழைக்கப்படும் ஹாஜியா ஆலாஜி பானு பேகம் அவர்களும் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட மகத்தான பெண்மணி ஆவார். கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்குகதர்என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்குகதர் ஆடைஎன்ற பெயர் வந்தது.

 

கெளதிய்யா சங்க கட்டடம் எழும்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அலி சகோதரர்கள் தங்கள் தாயார் பீ அம்மாவுடன் 1921ஆம் ஆண்டு எப்ரல் மாதம்  நாகூர் வருகை தந்தனர். ‘பைத்துபாடி  தப்ஸ்முழக்கத்துடன் கெளதிய்யா சங்கத்தாரும், நாகூர் முஸ்லிம் சங்கம் ஜமாத்தாரும் ஒன்றுகூடி தந்த பிரமாண்டமான வரவேற்பு நாகூரில் நடைபெற்ற ஒரு சரித்திர நிகழ்வு.

 

மெளலானா முகமது அலி அவர்கள் ஈரோட்டில் நடந்த உலமாக்கள் மாநாட்டுக்கு வருகை தந்தபோது ஈ.வெ.ரா பெரியார் இப்படிச் சொன்னார்.இந்த தேசம் காந்தியிடம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ இதோ இந்த மெளலானா முகமது அலி அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்" என்றார். அந்த அளவுக்கு இந்திய சுதந்திர வேள்வியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மெளலானா முகமது அலி. இந்த அலி  சகோதரர்களைப் பற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, “என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றனஎன்று காந்திஜி பெருமையாகச் சொன்னார். 

 

1930-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பற்றி கலந்துபேச லண்டனில் வட்டமேசை மாநாட்டுக்கு மெளலானா முகமது அலி அழைக்கப்பட்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணி நேரம் முழங்கினார்.

 

எனது நாட்டுக்கு சுதந்திரம் கொடுங்கள். அல்லது உங்கள் மண்ணில் அடக்கமாக எனக்கு கல்லறையில் இடம் கொடுங்கள்" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். சுதந்திரம் தரப்படவில்லை. ஆனால் இறைவன் அவரது நாட்டத்தை நிறைவேற்றினான். லண்டன் வட்டமேசை மாநாட்டில் உடல்நலக் குறைவோடு முழங்கிய அவர் 04-01-1931–ல் லண்டன் மாநகரிலேயே உயிர் பிரிந்தார்.

 

அவரது ஜனாஸாவை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த 22 நாடுகள் அந்தப் புனித மகானின் உடலைத் தங்களது மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்று கோரி வரிசையில் நின்றன. இறுதியில் ஜெருசலத்தின் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் உள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

அலி சகோதரர்களுக்கு பைத்து பாடி தப்ஸ்முழக்கத்துடன் நாகூர் மக்கள் அலி சகோதர்களுக்கும், அவர்களுடைய தாயார் பீ அம்மாவுக்கும் வரவேற்பு அளித்தனர் என்று பார்த்தோம் அல்லவா?  அந்த வரவேற்பு தந்த உற்சாகத்தின் பேரில் சொந்தமாக பைத்து சபா ஒன்றை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது.  கெளதிய்யா பைத்து சபாஅமைய இந்நிகழ்வு அடித்தளம் கண்டது.

 

முற்றும்

*



நன்றி : அப்துல் கையூம்

Thursday, June 25, 2026

பை (கவிதை) - ஜெயபாஸ்கரன்

பை - கவிஞர் ஜெயபாஸ்கரன்

கண்ணிமைக்கும் நேரத்தில் ,

என் கைப்பையைக் களவாடி கொண்டு போனவனைக் குறித்து கவலைப்படுகிறேன் நான்

யூகிக்க முடியாத ஏதோ ஒரு இடத்தில் வைத்து அதை பிரித்த அவன் 

எப்படியெல்லாம் குழம்பி இருப்பான்?

அவனையும் அழைக்கின்ற இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்களை என்ன செய்யப் போகிறான்?

கொடுத்த கடனை கேட்டு என்னை மிரட்டிக் கொண்டிருக்கும் மனோகரனின் கடிதத்திற்கு என்ன பதில் எழுத முடியும் அவனால்?

இப்போதைக்கு தர இயலாது என்பதற்கான எல்லா காரணங்களையும் மனோகரனுக்கு எழுதி அனுப்பி விட்டதை எப்படி அறிவான் அவன்?

அதை விடுங்கள்,

மதிப்புரைக்கு வந்திருந்த அந்த இரு நூல்களை பாராட்டித் தொலைப்பானா ஒரு வேளை?


எக்கேடோ  கெடட்டும்

இனி கைப்பையை களவு கொடுத்தது குறித்து எனக்கு ஒரு மகிழ்ச்சியும் அதை களவாடியது குறித்து அவனுக்கு ஒரு துயரமும் என்றைக்கும் எஞ்சி இருக்கும்

இனி அவன் எந்த பையை திருடினாலும் என் பையாக இருக்குமோ என அஞ்சுவான்.

*

Thanks to Yazhini

Visit : https://www.youtube.com/shorts/amXzT8CascI


Tuesday, June 16, 2026

கத்தார் காசிம் (சிறுகதை) - ஜபினத்

படைப்பு பதிப்பகம் வெளியிட்ட ’சீன் டபாக்கு டம் டம்’ சிறுகதைத் தொகுதியிலிருந்து நன்றியுடன் பகிர்கிறேன். - AB

*


கத்தார் காசிம் 

மம்மாயிஷா தனது அறையின் ஜன்னல் வழியே சாலையில் விளையாடிக்கொண்டிருந்த பேரனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனின் மூக்கும் முன் நெற்றியும் கணவர் காசிமின் முகச்சாடையை ஒட்டி இருந்தது. பேரன் காசிமைப் பார்க்கும் போதெல்லாம் மம்மாயிஷாவிற்கு இளவயது காசிமின் முகம் நினைவுக்கு வந்து புன்னகையை வரவைக்கும்.


இன்று சனிக்கிழமை. காசிமிற்கு விடுமுறை நாள். கொஞ்சம் தாமதமாகத்தான் எழுவார். லுஹர் பாங்கு சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து மம்மாயிஷாவின் செல்போன் அடித்தது.


“என்னஸ்ஸி என்ன செய்றாவோ?"


"என்னத்த செய்யப்போறேன் ஒங்க பேரனைத்தான் பாத்துட்டு நிக்கன்."


"நல்லா பாத்தவொ, என்ன வெஞ்சனம்."


"கெண்டையத்தான் ஆனம் வச்சி சாலையை வறுத்தாவொ சின்னவன் யாவாரத்துக்கு பெங்களூர் போயிருக்கானாம். அவம் பொஞ்சாதியும் புள்ளைவுளும் இங்குட்டுதான் நிக்குதுவொ."


கொட்டாவி விட்டபடி. "சரிடி நான் கொஞ்சம் அழுக்கு துணி கெடக்கு கழுவனும் பொறவு பேசுதேன்."


"என்னங்க எங்கன ஓடுறியோ? அரபிக்கிட்ட லீவுக்கு பேசினியளா இல்லியா நோன்பு வருது நாளு நெருங்குது, பெருனாவுக்குள்ள வந்துடுவியோ தானே."


"ஆமா, இவ அத்தா கட்டி வச்சிருக்குறோ கூப்புட்டவுடனே வரதுக்கு வரண்டி."


"இப்ப நீங்க கேட்டியளா இல்லையா? அதை சொல்லுங்க." 


"இருடி, பெரியம்மாட்ட பேசிருக்கேன் அவங்க மவண்ட்ட பேசிட்டு சொல்லுவோ, கெடந்து குதிக்காத.”


இருவருக்கும் உரையாடல் தொடர்ந்தது.


'காசிம்.காசிம்' என்று சொல்வதைவிட 'கத்தர் காசிம்' என்றால்தான் ஊருக்குள் தெரியும். முஹம்மது ஆயிஷாவை மம்மாயிஷா கத்தர் காசிம்ட பொஞ்சாதி என்றுதான் அடையாளப்படுத்துவார்கள்.


மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், பதினெட்டு பேரப் பிள்ளைகள் என பெரிய குடும்பம் அவர்களுடையது. மம்மாயிஷா காசிமின் தாம்பத்தியத்திற்கு மூன்றாவது மகனின் பதினைந்து வயதுதான் சாட்சி. அவனை உண்டாகி இருந்தபோது ஊரும் குடும்பமும் கேலி பேசி சிரித்தாலும் அதை கடுகளவும் காதில் போட்டுக் கொள்ளாமல் கெத்தாகப் பெத்தெடுக்க ஒரே காரணம் காசிமின் கத்தர் சம்பளம் தான். கணவருடைய சம்பளத்தில் இருக்கிறோம் என்பதே மம்மாயிஷாவின் நடைக்கும் உடைக்கும் காரணமாக இருந்தது.


கடந்த முறை காசிம் சபருக்கு வந்திருந்தபோது உடல் நிலையில் ஏற்பட்ட கோளாறுகளினால் இரண்டு மாத விடுப்பு தாண்டியும் ஊரிலேயே இருக்க நேரிட்டது. அந்த மூன்று மாதங்களில் அவர் பல விசயங்களைப் புரிந்துகொண்டார். நேரிடையாக கேட்காமல் சாடைமாடையாக வந்த கேள்விகளின் விபரீதத்தை உணர்ந்து அரபியிடம் கெஞ்சிக் கூத்தாடி மறுபடி கத்தருக்கே வந்துவிட்டார்.


"என்னங்க, முடிச்சிட்டு தானே வாரேன்னு சொன்னிங்க” என்ற மனைவியிடம் மகன்களையும் மருமகள்களையும் காட்டிக் கொடுக்காமல் அரபி வற்புறுத்தி அழைப்பதாகக் கூறி வந்து விட்டார். பிள்ளைகள் தன்னை மரியாதையுடன் நடத்துவதாக நம்பிக்கொண்டிருக்கும் அந்தப் பைத்தியத்துக்கு கடைசி வரை அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்று நினைத்தார்.


கத்தர் சென்றதும், அவருடைய பண வரத்து தொடர்ந்ததும், உம்மாமீது மகன்களும், மாமியார்மீது மருமகள்களும் மரியாதையை அதிகரித்தனர். மம்மாயிஷாவைப் 

பொறுத்தவரை அதெல்லாம் தன் மீதான அன்பில் வருகிறது. காசிமிற்கு மட்டுமே அதன் உள் அர்த்தம் புரியும். அதனாலேயே மூன்று வருடம் ஊருக்குத் திரும்பாமலே இருந்து விட்டார்.


மம்மாயிஷாவிற்கு இப்போதெல்லாம் காசிமை அதிகமாக தேடியது. சிலசமயம் அவரைப் பார்க்காமலே உலகைவிட்டு சென்று விடுவோமோ என்று பயந்து கொண்டிருந்தாள்.


மூத்த மகன் வீடு கட்டிக்கொண்டிருக்கிறான், இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த புது வீட்டில் தனக்கான அறையில் காசிமோடு மீதி காலத்தைக் கெத்தாகக் கழித்துவிட வேண்டும் என்பதுதான் அவளின் கனவு. சொந்த வீட்டில் புருசன் மடியில் கெட்டுக் கழுத்தியா போய் சேர்ந்துட்டான்னு ஊர் பேசனுமென்பதை ஒவ்வொரு தொழுகையிலும் வேண்டிக்கொண்டிருந்தாள்.


மம்மாயிஷாவின் கவலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த பெருனாவுக்குள் காசிம் வந்துவிட வேண்டுமே என மனதுக்குள் பிதற்றிக்கொண்டே இருந்தாள்.

“அத்தம்மா, அத்தம்மா” பேரன் அபூவின் குரலுக்கு நினைவுக்கு திரும்பினாள்.


“என்னஸ்ஸீ."


"அம்மா அடிச்சிடுச்சி."


அழுதவனை இழுத்து மடியில் போட்டுக்கொண்டு தலைமுடியை கோதிவிட்டாள்.


“அவதான் வேலையா இருக்குதால்ல. அவகிட்ட போனா கோவம் வரும்தானே. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க அத்தம்மா எடுத்து தாரேன்.”


அபூ அத்தம்மாவின் மடியில் படுத்துக்கொண்டே விம்மிக்கொண்டிருந்தான்.


“சந்தைல கலர் கலர் கோழிகுஞ்சு பாத்தேன். எனக்கு அது வாங்கித் தா அத்தம்மா.”


மம்மாயிஷாவுக்கு சிரிப்பு வந்தது. இதுக்கா போய் சண்டை போட்டவொ.


"புது வீட்டுள அதுவுல்லாம் பேண்டு அசிங்கமாக்கிடுமாம். அம்மா தர மாட்டேன் சொல்லிடுச்சி.”


'சரித்தா....அத்தம்மா வாங்கி தர்றேன் அழுவாத."


மம்மாயிஷா தன் மணிப்பர்ஸைத் திறந்து இரண்டு நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தாள்.


அபூ சிரித்துக்கொண்டே வாங்கிய அடுத்த நொடி காற்றாய் ஓடி மறைந்தான்.


காசிம் அனுப்பும் பணம் யாவும் இப்படித்தான் காற்றாய் பறந்துகொண்டிருந்தது.


மாதம் பிறந்ததும் பத்திலிருந்து பதினைந்து தேதிக்குள் காசிம் பணம் அனுப்பி விடுவார். அந்தத் தேதியை தோதுபடுத்தி மகன்களுக்கு உம்மா மேல் பாசம் அதிகமாக வரும், மகள்கள் பிள்ளைகளோடு வீடு தேடி வருவார்கள். மருமகள்கள் மாமியாரை உள்ளங்கையில் தாங்குவார்கள். பேரக்குழந்தைகள் கூட அத்தம்மா மேல் அதீத அன்போடு நடந்து கொள்வார்கள். பணம் காலியானதும் அத்தனை பேரும் இயல்பு வாழ்கைக்குத் திரும்பி விடுவார்கள்.


மம்மாயிஷாவுக்கு இதெல்லாம் குறையாகக்கூடப் பட்டதில்லை. என் பிள்ளைக என்கிட்ட தானே கேட்குதுவொ,. என்ற பெருமையோடு எடுத்துக் கொடுப்பாள்.


காசிம் எப்போதாவது போனில் கேட்பார் “என்னட்டி எதாவது சேர்த்து வச்சிருக்கியா? உன்னிய நம்பித்தான் ஊருக்கு வருவேன்” மம்மாயிஷா சிரித்துக்கொண்டே “ "ஆமா பரண்லத்தான் பொட்டலமா கட்டி போட்டு வச்சிக்குதேன் "மச்சான் வந்து தான் எடுத்து தருவனும்” என்னும்போது 'மச்சான்' என்ற இடத்தில் வெட்கத்தைக் கலந்து சிரிப்பை உதிர்ப்பாள்.


கத்தரில் இருக்கும் காசிமிற்கு இதெல்லாம் தெரியாமல் இல்லை. கடந்த முறை வரும் வரை அவனும் மம்மாயிஷாவைப் போலத்தான் மகன்களின்மீது பெரும் நம்பிக்கையோடு இருந்தான். 


“அத்தா, எப்ப வரிங்க? வருசம் ரெண்டாச்சி” என்று ஓயாமல் அழைத்து, ஒரு வழியாக ஊருக்கு வந்து இறங்கினார் காசிம். வந்த இரண்டு மூன்று நாள் தடபுடலாக விருந்து கேலி என வீடே கலகலப்பாக இருந்தது...


"அத்தா உங்ககிட்ட பேசனும்” என்று மகன்கள் இருவரும் கூப்பிட்டு நடுக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். காசிம் நாற்காலியில் அமர, அவரை ஒட்டிய படி தரையில் மம்மாயிஷாவும் அமர்ந்துகொண்டார்.


மகன்கள் இருவரும் காசிமின் பெயரில் உள்ள தென்காசி இடத்தை விற்றுத் தருவதற்கு தான் பூசி மெழுகினர். காசிம் தன்னுடைய முப்பது வருட சம்பாத்தியத்தை முழுவதுமாக அந்த இடத்தில்தான் கொட்டி வைத்திருந்தார். வெகுகாலமாகவே அவர்களுடைய கண்களை உருத்திக்க்கொண்டிருந்தது. காசிம் மோவாயைத் தடவியபடி யோசித்துக்கொண்டிருந்தார். மம்மாயிஷா ஏதோ யோசனைக்குப் பின், மகன்களை கண் காட்டி உள்ளே போகச் சாடை காட்டினாள். பிள்ளைகள் நகர்ந்ததும் காசிமின் முழங்காலை வருடியபடி பேசினாள். 


அவளுடைய சிரிப்பு கலந்த பேச்சில் வெகுளித்தனம் வழிந்தது. "என்னத்த யோசிக்கிறவொ? மத்த புள்ளைலவளபோல அப்பன் எடத்தை ஏமாத்தி வித்துட்டு வந்து நிக்காம எவ்வளவு பொறுப்பு கேக்குறானுவோ, தங்கச்சியளுவக்கும் பங்கு தர்ரேன்னுறாவொ, சின்னவனையும் படிக்க வச்சிடுவானுவோ. பொறவு என்னத்துக்கு யோசிக்கிறவோ?


நாம என்ன நடுத்தெருவுல நிப்பாட்டுத புள்ளையளையா பெத்துதுக்குறோம். அஞ்சும் அஞ்சி கண்ணுமணிவொ அதுவுளுக்கோ கொறையே அதுவோ எல்லார்கிட்டயும் நம்மளால இருக்க முடியலன்னுதான்.


போதும் இந்த சபரு, அலைச்சலு எல்லாம். பேசாம குடுத்துப்புட்டு ஊரோட உக்காருங்க. எனக்கும் நீங்க இல்லாம இருக்கவே முடியுல. மேலுக்கு நோவுதுன்னா முதுவை தடவி வுட கூட ஆளில்ல மருமவ கிட்ட சொல்லவும் வெக்கமா இருக்கு மவளுவோ எல்லா வேலையும் போட்டுபொட்டு வந்து எவ்வளவு காலம் நிக்க முடியும்”


பேசிப் பேசி காசிமை சம்மதிக்க வைத்தாள். ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்து பணப் பட்டுவாடா செய்ததும் மூத்தவன் தன் பங்கில் வீட்டு வேலையைத் துவங்கினான் சின்னவன் தொழிலில் போட்டுவிட்டு ஊர் ஊராகச் சுற்ற, மகள்கள் புது வண்டி, நகை என மின்னினார்கள்.


காசிமிற்கு மிஞ்சிய பணத்தில் மம்மாயிஷாவிற்கு ஆறு பவுனில் கருகமணி கோர்த்து செயின் வாங்கி கொடுத்தார். கல்யாணம் ஆன புதிதில் தனக்காக கழட்டிக் கொடுத்த செயினை மீண்டும் அணிய அவளுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கு. "இப்பவும் எனக்கு எதுக்குங்க? பேத்தியளுக்கு" என்று வாய் எடுத்தவளை தன் அதிகாரக் குரலால் அமைதி ஆக்கினார் காசிம்.


அந்த செயினை மாட்டிக்கொண்டு தோழிக வீடு, குடும்பத்து வீடு, தெருவாசிங்க வீடுன்னு ஒரு ரவுண்டு போய் பெருமை அடித்து வந்துவிட்டாள் மம்மாயிஷா. அவளுடைய புது நகையைவிட அதிகமாக மின்னியது கிழவியின் வெட்கம் தான். காசிம் அதை பார்த்துப் பார்த்து ரசித்தான். "உனக்கு மட்டும் வயசே ஆவ மாட்டேங்குதுடி” என்றவனை, "போங்கங்க அங்குட்டு" என்று வெட்கத்தோடு கோவப்பட்டுக்கொண்டாள். 


நாட்கள் நகர்ந்தன. பணம் தீர்ந்ததும் மகன்களின் பேச்சில் இரட்டை அர்த்தங்கள் வெளிப்பட்டன. கறி ஆனம் கோப்பையில் சவ்வும் எலும்பும் மட்டுமே வந்தது. "மாமா, ரேசன் கடைக்கு" என்று கேட்ட பொண்டாட்டியை அடக்காமல் மகன் "இல்லத்தா வேலைக்கு போவனும் நேரமாச்சு அதான்” என்று பதிலுக்கு காத்திராமல் விரைந்தான். தன் இடம் பறிபோனதை காசிம் உணர்ந்தாலும் மம்மாயிஷாவைவிட்டுப் பிரியப் பயந்தார். 


அவளுக்கு எதாவது நடந்து விடுமோ என்பதிலேயே அவர் பிடி கெட்டியாக இருந்தது. ஆனால் வருமானம் இல்லாமல் மகன்கள் கணவரை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள் என்று தெரிந்தால் அவள் உயிரையும் விட்டுவிடுவாள் என்பதை உணர்ந்தார்,தான் கூட இருப்பதைவிட தன் பணமும் மகன்கள் மீதான நம்பிக்கையும் இன்னும் அவளை நன்றாக வைத்திருக்கும் என்பதால் மீண்டும் கத்தருக்கே கிளம்பி வந்து விட்டார்.


அவர் நினைத்தபடியே ஒவ்வொரு முறை பேசும்போதும் மகன்கள், மகள்கள் பெருமை பேசாமல் போனை வைக்கமாட்டாள் மம்மாயிஷா. ஆனால் இந்த முறை காசிம் தங்களுக்கென தனிச் சேமிப்பை தெளிவாக செய்து வைத்திருந்தார். மம்மாயிஷாவிடம் பேசும் போதெல்லாம் 'உன்னை நம்பித்தான் வரேன்' என்று கேலி செய்தாலும் 'உன்னை விட்டுவிட மாட்டேண்டி மச்சான். சேர்த்து வச்சிருக்கேன்' என்று மனசுக்குள் கர்ஜித்துக் கொள்வார். 


இம்முறை காசிமை மம்மாயிஷா வருந்தி அழைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம் இருந்தது. அவர்களுடைய ஐம்பதாவது கல்யாண நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. இருபத்தி ஏழாவது நோன்பு அன்றைக்குதான் அவர்களுக்கான ஐம்பதாவது திருமண நாளும் வருகிறது, தொடர்ந்தாற்போல மூன்று வருடம் கத்தரிலேயே இருந்து விட்டதால் இந்தப் பெரு நாளிலாவது இரண்டு பேரும் இணைந்து இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தாள் மம்மாயிஷா. ஆனால் காசிமால் இப்போ வரை விடுப்பு எடுக்கவே முடியவில்லை என்பதே அவளுக்கு கலக்கமாக இருந்தது.


கத்தர் மன்னனின் தூரத்து உறவினரான சேக் தாவூத் பின் அகமது என்ற அரபியின் வீட்டில்தான் காசிம் சமையல் பணியில் இருந்தார். காசிமோடு சேர்த்து இருபது சமையல்காரர்கள், இது தவிர ஏழெட்டு டிரைவர்கள், செக்யூரிட்டிகள் என ஒரு கூட்டமே அந்த வீட்டிற்கு பணி செய்து வந்தது. அரபியின் பாட்டிதான் அந்தக் குடும்பத்தின் தலைமை ஆனவர். பெரியம்மா சொன்னால்தான் அங்கு எதுவும் நடக்கும். மகன்கள் பேரன்கள் என வீட்டிற்குள் ஒரு ராஜாங்கத்தையே நடத்திக்கொண்டிருந்தார். 


காசிமிற்கு விடுப்பு கேட்க போகும் போதெல்லாம் எதாவது ஒரு தடங்கல் வந்துகொண்டே இருந்தது. அவரும் அப்போ பாத்துக்கலாம் இப்போ பாத்துக்கலாம் என்று நாட்களைக் கடத்திவிட நோன்பு காலமும் துவங்கியது.


‘அத்தம்மா' என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள் அஃப்ரின்.


பேத்தி அஃப்ரினுக்கு ஐந்து வயதிருக்கும். உம்மாவுடன் புது வீட்டுக்கு சென்றுவிட்டு வந்திருந்தாள். 


"என்னட்டி...புது வூட்டை பாத்தியா, அழகாயிருந்துசா” 


வீட்டில் பூச்சு வேலை நடந்துகொண்டிருந்தது. 


"அத்தம்மா வீடு அழகாயிருந்துச்சி. நம்ம வீட்டுல டயில்ஸ் போடலையாம் க்ரானைட்டுதான் போடுறாகளாம்" 


"அதென்னட்டி க்ரானைட்டு'


"அது தரையை தொட்டா குளுகுளுன்னு இருக்குமாம். தண்ணி ஊத்திருந்தா வழுக்கி உழுந்துருவமாம். வேற அப்பப்போ உழுவுற பாத்து கம்பு வச்சி நட என்னா”


அப்ரின் மழலை மொழியில் பேசிக்கொண்டிருந்தாள். 


மம்மாயிஷாவுக்குப் புரிந்தது. மருமகளை அழைத்தாள். "எம்மா நீ தஸ்தகிருட்ட சொல்லு. மாமாக்கும் எனக்கும் காலு சரியில்ல. முன்ன மாதிரி பதிஞ்சி நடக்க முடியல். அதனால் கருத்த ராவுத்தர் வூட்ல போட்டாக்ல புள்ளி வச்ச டைல்ஸே போட சொல்லும்மா. முழுசுக்கும் வேணா, மாமாட ரூமுக்கு மட்டும் போட்டா போதும். எங்க காலத்துக்கு பொறவு நீங்க மாத்திக்கங்க. சரியாமா"


"சரிங்க மாமி, நான் அவுகட்ட சொல்லிடுறேன்" சலித்தபடி சென்றாள்.


"ஏங்க, உங்க அம்மா நம்மகூடவா இருக்கப் போவுது? நீங்கத்தானே சொன்னிய, புது வீட்டுக்கு போறப்ப சின்னவுக கூட்டிட்டு போயிடுவாங்கன்னு. அதைச் சொல்லித்தானே அவ பொஞ்சாதி அவங்க அம்மா வூட்டையே பங்குத் தொகைல வெல குடுத்து வாங்கிச்சி.”


"ஆமாடி, அவங்க அப்படித்தான் சொன்னாங்க அம்மா மனசுல என்ன வச்சிருக்குன்னு தெரியலயே."


முறைத்தபடி எழுந்தாள்.


"இத்தனை வருசம் நாந்தானே சேவகம் பண்ணேன். காணாததாக்கும் நான் மட்டுமா மருமவ."


"ஏண்டி கத்துறே? எங்கம்மாவை பத்தி எனக்கு தெரியும். அது இந்த வீட்டைவிட்டு வராது. இருபத்தி வருசமா வாடகைக்கு இருக்கோம் அது இதை சொந்த வீடாத்தான் பாக்குது பேச்சுக்கு ரெண்டு நாள் நம்ம வீட்டுக்கு வந்து தங்கிட்டு திரும்பிரும். அதுக்கு இங்க இருந்து நாலு பேர் கிட்ட பொரணி பேசுனாத்தான் பொழுதே போவும் நீ சும்மா கெட."


"அப்ப க்ரானைட்டு தானே முழு வூட்டுக்கும் போடுவியே." 


"ஆமாடி. அமைதியா கெட்டி. சும்மா சலம்பிட்டு" அவளை இறுக்கி அணைத்தபடி அமைதி ஆக்கினான்.


பக்கத்து அறையில் குளிருக்கு மின் விசிறியை நிறுத்தி இருந்தவளுக்கு அத்தனை பேச்சும் காதில் விழ, அதிர்சியில் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி படுத்துக்கொண்டாள் மம்மாயிஷா. 


நோன்பு ஓடியது. மம்மாயிஷாவின் பேச்சில் உற்சாகம் குறைந்திருந்ததை காசிம் உணர்ந்தார். ஆனால் அரபி வீட்டில் நாளுக்கு நாள் உறவினர்களின் வருகை அதிகமானதால் விடுப்புக்கான அனுமதி மறுக்கப்பட்டது. 


விடிந்தால் இருபத்தி ஏழாவது நோன்பு, ஐம்பதாவது கல்யாண நாள். இரண்டு முறை அழைத்தும் மம்மாயிஷா போனை எடுக்கவில்லை. நல்ல கோபத்தில் இருப்பாள். பிறகு சமாதானப்படுத்திக் கொள்ளலாம். 'அதை கொண்டாங்க இதைக்கொண்டாங்க' என்ற ஆர்டர்களுக்கு மத்தியில் அதை அப்படியே விட்டுவிட்டு வேலைக்குள் மூழ்கி மம்மாயிஷாவை மறந்தார் காசிம். 


"பெரியம்மா உங்களை கூப்பிடுறாங்க" பாகிஸ்தான்கார சக பணியாளனின் குரலுக்கு அவனைத் தொடர்ந்தபடி ஓட்டமும் நடையுமாக ஓடினார் காசிம்.


பெரியம்மாவின் அரேபியக் குரல் கம்பீரமாக ஒலித்தது.


”அடேய் காசிம் இன்னிக்கு இஃப்தாருக்கு என்ன செஞ்சிருக்க?” 


"மஜ்பூஸ், கப்சா, அரீஷ்." 


"இனிப்பு என்ன செஞ்சிருக்க?” 


"குனாஃபா அசீர்.”


"ஊருக்குப் போகனும்னு கேட்டிருந்தியா?"


'ஆமாம்' என அவசரமாக தலை ஆட்டினார். "அதெல்லாம் அனுப்ப முடியாது" என்று உரக்க சிரித்தபடி குட்காவை இழுத்தார்.


காசிமின் முகம் இறுகியது.


"இன்னும் இரண்டு மூணு நாளைக்கு நிறைய சொந்தக்காரங்க வருவாங்க. சாப்பாடுலாம் சூப்பரா இருக்கனும். இல்லன்னா உன்னையைத்தான் கேட்பேன் புரிஞ்சுதா?"


காசிம் மெதுவாக சரி என்பதாக தலை ஆட்டினார். "உன் கூடமாட ஒத்தாசைக்கு இந்தப் பொம்பளையையும் கூட்டிட்டு போ” என்று கைகாட்ட அவர் கை காட்டிய இடத்தில் மிரட்சியாக நின்றுகொண்டிருந்தாள் மம்மாயிஷா. 


காசிமிற்கு தன் கண்களைத் தானே நம்ப முடியாமல் தடவிக்கொண்டு மறுபடி பார்க்க பெரியம்மாவின் வெடிச்சிரிப்பில் அதிர்ந்தார்.


"கல்யாண நாள் வாழ்த்துக்கள் காசிமே இரண்டு மணி நேரம் உனக்கு ஃப்ரீ டைம். போ, போய் உன் பொண்டாட்டி கூட இஃப்தாரை கொண்டாடு." 


மம்மாயிஷாவின் கையை இழுத்துக்கொண்டு ஓடினார் காசிம். தங்க நிறத்தில் பளிங்குகளால் மின்னிய அந்த அடுக்களை அவர்களுக்கு தாஜ்மஹாலைப் போல் இருந்தது. 

அவர்களை தனிமையில் விட்டு விட்டு மற்ற பணியாளர்கள் ஒதுங்கி நின்றனர்.


"எப்படிடீ வந்தே" இருவரின் கைகளும் நடுங்கிக்கொண்டிருந்தன. 


மம்மாயிஷாவுக்கு காசிம் கோபத்தில் அடித்து விடுவானோ என்ற பயம் இருந்தது. ஆனால், அவர் கண்களில் உள்ள கண்ணீரைக் கண்டதும் பதறிப் போனாள்.


பதில் சொல்ல வாய் எடுத்தாலும் வார்த்தை வராமல் உளறினாள்.


காசிம் அவளுக்குத் தண்ணீரைக் கொடுத்து அமைதி ஆக்கினான்.


"நம்ம பாத்திமுத்து மவன் சொய்பு இங்கத்தானே இருக்கான். அவன் பொஞ்சாதி புள்ளை பெத்திருக்கா. கூட இருந்து பாத்துக்க நாப்பது நாளைக்குன்னுட்டு வேலைக்கு ஆள் கேட்டான்னு சின்னவன் சொல்லிட்டு இருந்தான். அதான் புள்ளைலுவள கேக்காம நான் பாத்திமுத்துட்ட சொல்லி இங்கன வந்துட்டேன்.” 


“வீட்டு வேலைக்கா?” காசிமின் குரல் தழுதழுத்தது. 


"அப்படி இல்லிங்க. பாத்திமுத்து மவண்டா எனக்கும் மவன் தானே இது என்ன வேத்து வேலையா?” அவள் படபடத்தபடி அவனை சமாதானம் செய்தாள். 


"ஏண்டி, என்னை கேக்காம இவ்வளவு தூரம் வர்ற அளவுக்கு" 


"என் மச்சானுக்காக எவ்வளவு தூரம்னாலும் வருவேன்" காசிம் அவளை கண்ணீருடன் பார்த்தார்.


இருவரும் ஒரே தட்டில் உணவை வைத்துக்கொண்டு எதிர் எதிரே அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள, தூரத்தில் ருந்து ரசித்தாள் பெரியம்மா. 


"எல்லாருக்கும் இந்தப் பாக்கியம் கிடைச்சிடாது மம்மதே, உங்க மொதலாளிக்கிட்ட பெரியம்மா சொன்னேன்னு இந்த வருசத்துக்கு வீடு கட்டிக் கொடுக்குற பத்து பேர்ல காசிம் பேரையும் சேர்க்கச் சொல்லு, அவரு ஊர்ல அவர் கேட்குற வசதியோட எந்தக் குறையும் இல்லாம கட்டிக் கொடுக்கனும் சரியா" பெரியம்மாவின் உதவியாளர் முஹம்மது என்கிற மம்மது 'ஆகட்டும் மா, ஆகட்டும் மா” என தலையாட்டிக்கொண்டிருந்தார். 


"எட்டி, கருவமணி எங்கட்டி"


"காக்கை தூக்கிட்டு கத்தாருக்கு போயிருச்சி மச்சான்" என்று வெட்கத்தோட சிரித்தாள் மம்மாயிஷா.

**

(இந்தச் சிறுகதை 'கதிராளிகள்' என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது)

*


நன்றி : ஜபினத்