Tuesday, July 14, 2026

வீச்சம் - அழகிய பெரியவன் சிறுகதை

 ‘குறடு’’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து, நன்றியுடன்..

*


வீச்சம் - அழகிய பெரியவன்


காக்காசி நாறினான். காரை உதிர்ந்த மண் சுவரில் மூட்டைப் பூச்சிகளின் இரத்தம் பிதுக்கப்பட்ட கருஞ்சிவப்பு திட்டுகளின் இடையில் காக்காசி பிணையப்பட்டிருந்தான். கன்னங்கள் டொக்கு விழ ஆழமாகப் பீடியை இழுத்தான் அவன். வறண்டு எலும்புகள் தேலிய மார்பிலிருந்து புகைப்பொதிகள் விடாய்த்து வெளியேறின. இருமல் பீறிட்டது. மார்புக்கூடு பிளந்து விரியும் படியாக அவனை ஊடறுத்தது இருமல்.


செமித்த சாராய நாற்றமுடன் பீடியின் கடும் நாற்றமும் சேர்ந்து மேலும் நாறினான் காக்காசி. மலநாற்றம், செத்த உடல்களின் நாள் பட்ட நாற்றம் என நாற்றக் கலவை காற்றிலே இமிரி, அப்பன் முன்னிருக்கும் பாமாண்டியின் நாசித் துவாரங்களில் முண்டி யடித்தது. நுரையீரல் நிரம்பி உடல் நெளிந்தது. குமட்டிக் கொண்டு வந்தது அவனுக்கு.


தளர வெளிக்கிருக்கும் அவகாசத்தையும் பள்ளிக்கூடம் பறித்துக் கொள்வது பாமாண்டிக்கு வருத்தமளிப்பதாய் இருக்கும், முன்பெல்லாம் வகுப்பறையில் நாற்றம் புலன் பற்றியதும், முகம் சுழித்து, உவ்வே கொட்டி, வண்ணாத்திப்பூச்சிகளின் றெக்கைகளை அழுத்துவது போல் மூக்கை பிடித்துக் கொள்வான். கீஸ் கீஸ் என்று மூக்கடியில் தேய்த்துத் தவிப்பான். உடம்பெங்கும் குண்டிகளாய் ஆக்கப்பட்டு விட்டவர்களைப் போலத் தெரிவார்கள் அப்போது அவனுக்கு எல்லாரும்.


"பொணந்தின்னிங்க..."


மூக்கடைத்த கீச்சுக்குரலில் வசவுகளை சொல்வான் பாமாண்டி. பள்ளிக்குப் போகையிலும் வருகையிலும் மலக் குப்பல்களால் வரிசை கட்டிய தெரு கடக்க மூக்குப் பிடித்தே மீள்வான். செத்து உப்பிப் புழுத்திருக்கும் நாய் வீச்சம் வழியில் எங்கேனும் அணைந்தால் 'கிசுரு அடிக்கும். கிசுரு அடிக்கும்" என

ஓடும் அவன் கால்கள். கூட்டாளிகள் கெட்ட வார்த்தை பேசினால் அருவருத்து மாய்வான். பக்ரீத் காலமொன்றில் மழை பிடித்துக் கொண்டபோது வீட்டில் காயப்போட்டிருந்த கறித்தோரணங்கள் அழுகத் தொடங்கிவிட்டன. அவனைப் பார்க்க கூட்டாளி ஒருவன் வர நேர்ந்துவிட்டது. அப்போது அவமானத்தால் துவண்டு போனான் பாமாண்டி. அதைத் தொடர்ந்து கறிக் கவிச்சி பிடிக்காமல் சைவனாய் மாறி பின் அரை மனதுடன் மீண்டதும் உண்டு. வெளிக்கிருக்காத ஒரு மனிதனாக.. தான் மாறிவிட வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுதல் செய்து கொண்டு மிருக்கிறான் சில சமயங்களில்.


அவனை நெட்டிமுறிக்க முயன்ற போதெல்லாம் ஒரு புழுவாய் மாறியிருக்கிறாள் பாட்டி அவனுக்கு.


"நா உம் பீ வாராமெ, நா உஞ்சளி சிந்தாமெ வளர்ந்துட்டியாடா "நீ பாமாண்டி?"


"அவனுக்கு கற்பூரம் கவிச்சி அடிக்குதும்மா... இப்படி நீத்தம் பாக்குறவன் வேற எங்காச்சும் போயி பொறந்து தொலைக்க வேண்டியதுதானே."


செவந்தமணியும், பாட்டியும் தங்களின் நியாய நிறுவலில் மேலும் புழுவாய் மாறியிருக்கின்றனர் அவன் முன்.


ஞாபகங்களில் தங்கும் அத்தனை நாற்றப் படிவுகளும் பொடி யாகி உதிர்ந்து நாற்றப்புகைச் சுருள்களாய் இன்று அப்பன் காக்காசி முன் அமர்ந்திருந்த போது எழும்பி வந்து உலுப்பின. உப்பிப் பெருத்து சுவர் சார்த்தி இருத்தப்பட்ட பிணமென அப்பன் பாமாண்டிக்கு காட்சியளித்தான். அப்பன் பிணமென நினைவுகள் ஊடாடியதும், உலுப்பின கிளையென அதிர்ந்தான் அவன். பாமாண்டியின் நினைவுக் கண்ணிகள் முன்னெழுந்து கிளைத்தன.


ஒரு காற்றடி காலத்தில்தான் காக்காசி கிணறுகளைத்தோண்டிக் கொண்டிருந்த வேலையை விட்டு தோல் ஷாப்புக்குப் போனது. மண்ணின் சதைத் துண்டுகளை அகழ்ந்து அகழ்ந்து தண்ணீர் சுழிக்கும் நாளங்களைத் தேடிக் கொண்டிருந்ததை செவந்தமணி தடுத்து விட்டாள். பிணம் வசிக்க வீடு தோண்டும் வெட்டியானைப் போல் தினமும் காக்காசி மண்கோலி, மண்கோலி பாதாளங்களின் உட்பிரவேசித்து பிணமென மீள்வது செவந்தமணியை அவஸ்தையுறச் செய்தது. சடலத்தின் குளிர்ச்சி நிரந்தரமாய் கணவனின் உடம்பில் தங்கிவிட்டதாய் உணர்ந்த ராத்திரியில் அவனை தோல் ஷாப்புக்கு போகும்படி ஏவினாள். அங்கும் பிராணிகளின் உடல் நழுவிய தோல்களுடன் காக்காசி இருக்க நேர்ந்தது. நாற்றமும் சவமும், பிணைந்த வாழ்வின் சோகைத் தனத்தில் தோல்களை உயிர்ப்பிக்கும் செயல் அவனை அந்த வேலையில் ஈடுபட வைத்தது.


வேலைக்குப் போயிருந்த முதல் வாரத்தின் கடைசி நாள் மாலையில் இன்னும் வீடு மீளாதிருந்தான் காக்காசி. சூரியனின் துர்மரணத்துக்குப் பின் வளர்ந்த இருட்டில் பிள்ளையுடன் வாசல் காத்துக் கிடந்தாள் செவந்தமணி. நேரம் ஏறஏற யாருமற்ற தனிமையின் இரவில் அனாதையின் சோகம் போல் பொழுது மாறி சூழ்ந்தது அவர்களை. பாமாண்டி செவந்தமணியின் முகத்தை ஏறிட்டான்.


பரிவின் கசிவு ததும்பும் விழிகள் கன்னத்தின் உள்வாங்கிய குழிகளில் சுழன்றன அவள் முகத்தில்.


"ஏம்மா உன்னும் அப்பா வர்ல?"


"தெரியிலேயே சாமி. இப்ப வந்துனு இருப்பாரு."


அவளின் சொற்கள் ஆதரவற்றுத் தவித்தன. பாமாண்டிக்கு நம்பிக்கையின் சாரம் வற்றி சுயமனத்தேற்றலில் எண்ணங்கள் குழம்பின.


"ஒருவேளை அப்பா செத்துட்டிருப்பாரோ."


பாமாண்டியின் முதுகு அதிர்ந்தது. செவந்தமணியின் அடி களைத் தாங்காமல் காக்காசி வந்து தேற்றும் வரை அழுது சுணங்கிக் கொண்டிருந்தான். பலகாரங்கள் பொதியப்பட்ட பொட்டலத்தை மகன் கைகளில் திணித்துவிட்டு தின்னச்சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தான் காக்காசி. அப்போதுதான் அறியப் பட்டு வந்த அப்பனின் மனித வாசனையுடன் புதிதாய் குடலைப் புரட்டும் நாற்றம் ஒன்றும் வெளிப்படுவதை நுகர முடிந்தது பாமாண்டியால்.


நாற்றங்களைப் பிரித்தறியும் வயது தொடங்கிய போதுதான் பாமாண்டி குருகுலவாசம் கற்கும் வேதியப் பொடியன் கணக்காய் வெளியூர்களின் பள்ளிவிடுதிகளில் தங்கிப் படிக்க நேர்ந்தது. நாற்ற உலகிலிருந்து நந்தவன பரப்புக்கு உட்பட்டு விட்டதாய் நினைக்கத் தொடங்கிய அவன் வீடு மீள்தலை அருவருத்தான். மலங்கழிப்பதின் அசூயையுடன் கல்லூரிக் காலங்களில்தான் பாமாண்டி எனும் தன் பெயரை சுக்கல் ஆக்கி கா.பா.மாண்டி என புனைந்து கொண்டதும் நடந்தேறின. மாமன்னன் அக்பர் உடலிருந்தும் அலெக்சாண்டரிடம் இருந்தும் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததான சுகந்த வாசனை பற்றிய குறிப்பைப் படித்ததும் அப்பன் அப்படி இருக்கலாகாதோ என எண்ணம் வருத்தியதும் உண்டு.


பணத்தேவைகளை முன்னிருத்திதான் வீட்டுக்கு வர நேர்ந்திருந்தது இப்போது பாமாண்டிக்கு. சாம்பல் பூத்த இருட்டுக் காலையில் சென்று, இருள் கவியும் மாலை திரும்பும் நாற்றம் பிடித்த தன் அப்பனை தவிர்க்கும் உபாயங்கள் அன்று தோற்றுப் போயின. பாமாண்டி காக்காசியிடம் சிக்கிக்கொண்டான். தன் ஒற்றை வித்து, கல்வியின் உயர் முகடுகளில் நின்று தன் நிமித்தமாய் உலகைப் பார்த்து கெக்கலியிடுகிறது. மகனின் பெருமித உணர்வுகளின் நெகழ்வில் ஆதூரமாய் மகனை உச்சி மோந்தான் காக்காசி.


அப்பனின் நடுங்கும் கைகளின் வழியாய் அணைக்கும் வெதுவெதுப்பு பாமாண்டிக்கு அருவருத்தது. தன் மீசை முடிகளை பிஞ்சி விரல்களால் அளைந்து நெஞ்சை உதைத்த மகனின் குழந்தைப் பருவ புளங்காகிதங்களால் ஆட்கொள்ளப்பட்ட காக்காசி நரை மண்டிய மீசை குத்தும்படிக்கு பாமாண்டியை முத்தம் செய்யத் தவித்தான். சாராயத்துடன் பீடியும் இணைந்த நாற்றக் கலவை காக்காசியிடமிருந்து கிளம்பி பாமாண்டியின் முகத்தை அறைந்தது. விதிர் விதிர்த்தான் பாமாண்டி. குபீரென அப்பனின் உடலிலிருந்து வெளிப்பட்ட பிணவாடை, சதைக் கவிச்சியாய் வெருட்டிக் குலைத்தது அவனை.


வறுத்த கறித்துண்டுகளை மெல்லும் தன்னை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காக்காசியின் முகக்கனிவையும் வாயில் குழைந்து கனலும் பீடியின் தீக்கண்ணையும் சந்திக்கத் திராணியற்று முகம் தாழ்த்தி பாமாண்டி நெளிந்தான். பரவியெழும் நாற்றப் புயலால் தாக்குண்டவனாகி சூலுற்றிருப்பவளைப்போல் வீட்டினுள்ளிருந்து எழுந்தோடி வாந்தி எடுத்தான் அவன். வாந்திக்கான எதுக்களிப்புகள் அடிவயிற்றிலிருந்து எழும்பி எழும்பி நெஞ்சு கிழித்தன. தலையின் பக்கங்களை கைகளால் அழுத்திச் சுருண்ட அவனை உடம்பு, மண்ணில் தலை புதையும் படியாய் இழுத்தது. பாமாண்டியின் வாயிலிருந்து உமிழ்நீர் சரங்கட்டியது.


பன்றியின் உடம்பில் உறைந்து உலர்ந்த சாக்கடை பொருக்குகளின் நிறமொத்து இருட்டு இருந்தபோது காக்காசி வெளியே கிளம்பிவிட்டான். கல் கல்லென்று இருமி இருமி இரவெல்லாம் மல்லாந்தபடி சுவர்க்கோழிகளின் கீச்சலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான் அவன். தாவில்தங்காது தாவரித்துக் கிடந்தது படுக்கையில் அவன் உடம்பு. கோழை கட்டிய விலாப்படிகளில் மேலேறி கீழிறங்கி ஆட்டம் போட்டது இருமல்.


இருமல் புகைந்து மூச்சுத் திணறிய அவஸ்தைகளின் போதெல்லாம் அருகில் படுத்திருக்கும் செவந்தமணியின் குறட்டைகள் கேலி செய்தன அவனை. எச்சிலும் பிணத்தை சபிப்பதுபோல் அவள்மீது துப்பினான் காக்காசி. அருகிலிருக்கும் வீட்டிலிருந்து எழுந்து அடங்கிய சாமனின் ராக ஆலாபனையையொத்த நீண்ட கொட்டாவி மேலும் எரிச்சலூட்டியது காக்காசியை. தன் ஆங்காரத்தை பிரதி எடுத்து வசவுகளாய் சாமனின் வீட்டுத் திசையில் எறிந்தான் அவன்.


அருகிலிருக்கும் சிறு நகரின் மையத்திலிருந்த மசூதியின் தொழுகை அழைப்பு கேட்டபோது, அது அதிகாலை நான்கு மணிக் கானது என உணர்ந்து எழுந்துவிட்ட காக்காசி படுக்கையை விட்டகன்று சந்துக்குப் போனான். ஒன்றுக்கிருந்து, இடிந்த சுவரின் மண்ணால் நரநரவென பல்தீட்டி, மொரிக்கிச் சட்டியில் குளிர்ந் திருந்த நீரில் வாய் கொப்பளித்தான். நடையில் கிடந்த நாய் உண்ணியின் பிடுங்கல்களால் பின்னங்கால்களால் உதைத்து ஒலி யெழுப்பியது. முடங்கிக்கிடந்த குடிசையின் மேற்கால் கிளைத் திருந்த கோணப் புளியமரத்தில் சிக்கிக் கிழிந்து அலையும் பாலிதீன் பையாக நிலா வெறித்தது. பாத்திரங்களை உருட்டி கஞ்சியில் கை உளைந்த போது செவந்தமணி அரற்றினாள். 


"யாருடி நாயீ அது."


"கம்முனு படுமே, நாந்தான்."


"இன்னிக்கு புள்ளே போயிடறானாங். காலேஜில பீசு ணுமாமே. உம்பாட்டுக்கு கமானமா போயிட்டா எப்படி?"


"ஒரு பத்துமணிக்கா ஷாப்பாண்ட வரச் சொல்லுமே. எஜமாங்கிட்ட கேட்டு வாங்கித் தாரென் எதானாச்சும்."


நடுத்தெருவின் கோழி கூப்பிடும் சப்தம் இருட்டை பலவீன மாக்கியது. தெருவில் மண்டிக் கிடக்கும் இருட்டில் அமிழ்ந்து இருமல் ஒலிகளுடன் கரைந்தான் காக்காசி. முகங்கள் துலங்க ஆரம்பித்த மெல்லிய இருளில் தோல் ஷாப்பை அடைந்த காக்காசி ஆடைகளைக் களையத் தொடங்கினான். சுருண்ட வேட்டியையும்

சட்டையையும் உருண்டை பிடித்ததுபோல் ஒரு மூலையில் பத்திரப்படுத்திவிட்டு கோணிப்பையின் துண்டு ஒன்றால் கோவணத்தின் மேல் அரை கட்டிக்கொண்டான். தோல் ஷாப்பின் விரிந்த கட்டிடமும், தோல்களை ஊறப்போட்டிருந்த தொட்டிகள் வரிசையிடும் பெரும் கொட்டகையும் என எல்லாமே நாற்றத் துண்டுகளால் எழுப்பப்பட்டது போலிருந்தன. பச்சைத் தோல்கள் வேதிப் பொருட்களிலும் சுண்ணாம்பிலும் புளித்து ஊறி நாற்றம் பரப்பின. சவ்வுகளும், தோல் கழிந்த மயிர்களும் இரைந்திருக்கும் பரப்பு எங்கும் கொடூரக் கவிச்சி நாற்றம். தோல்கள் ஊறும் தொட்டிகளில் கரைசல் நீர் புளித்து, குமிழ்கட்டி, சீழ் நிறத்தில் இருந்தது.


காக்காசி தோல்களை திருப்பிப் போடவும் இடம் மாற்றவுமாக தொட்டிகளில் இறங்கத் தொடங்கினான். கொடூர குளிர்வின் ஊசித் தீண்டல்கள் அவனை வதைத்தன. மரத்து இற்ற தேகம் எதையும் சட்டை செய்யாமல் தோல்களைத் தூக்கி வீசியது. இறுகலாய்த் தழுவி அவன் எலும்புகளை நொறுக்கின. தோல் குவியல்களை இடம் மாற்றி, பச்சையாய் ஊறி நீர்ச்சொட்டும் அவற்றை அந்தரத்தில் தொங்கும் கொக்கிகளில் பிணைத்து முறுக்கிப் பிழிந்து, உலருவதற்கென கொட்டடிகளில் காயவிட்டு உழன்றான். வேதிநீர் கரைசல்களில், சவ்வுக் குவியலில், தோல்களின் கவிச்சிநெடியில் நாற்றம் பொதிந்த ஜடமாய் உருமாற்றம் கொண்டிருந்தான் அவன். 


மகன் வருகையின் எதிர்பார்ப்பும், எஜமானிடமிருந்து பணத்துக்கென எதிர்கொள்ளவிருக்கும் பதிலின் அனுமானமும் அவனை மேலும் ஆயாசம் கொள்ளச் செய்து பெருமூச்சைக் கிளப்பின.


இளம் வெயில் பொழுதில் அவன் மகன் அங்கு வந்து சேர்ந்தான். முக்கால் நிர்வாணியாய் தன்னை நோக்கி ஓடிவரும் அப்பனைப் பார்த்ததும் பெரும் மனத்தாக்குதலுக்கு ஆளானான் பாமாண்டி. கவிச்சி வீச்சம் வாரி அடித்தபடி இருக்கும் சூழலில் நாறும் மனிதனாய் எதிரே நிற்கும் அப்பனைக் காணச் சகிக்கவில்லை அவனுக்கு.


"மயிரு... நா போயீ துட்டு வாங்கினு வருணுமா? நா போகல. அந்த நாத்தம் புடிச்ச ஷாப்புக்காவெல்லாம்."


"ராஜா, ஒரு வாட்டி மட்டும் போயிட்டு வந்துரப்பா. நா ஒரு வேலையா கெடக்கிறேங்."

நாற்றத்தின் குரூர அருவருப்பில் அதிர்ந்தவனாகவே அவனால் வீட்டில் இப்படி செவந்தமணியிடம் சொல்ல நேர்ந்தது. அந்த வீரியம் அப்பனின் கோலத்தை உள்வாங்கியதும் சரிவது போல் இருந்தது இப்போது. வார்த்தைகள் அடைபட்டு நெஞ்சு வீக்கம் கொண்டது. காக்காசியிடம் பேசவும் திராணியற்று மனம் சரிந்தான். நாற்றப் பண்டமாய் மாறிப்போனதை அந்த நொடியில் உணர்ந்தான் பாமாண்டி. முன் தீர்மானங்களின் பட்டை உரிந்து மெதுவாய் ஒரு பீக்குண்டுக்குள் அமிழ்ந்து வெளியேறினான் அவன். பாமாண்டியின் நாற்றப் பிரதிகள் அவனிலிருந்து உதிர்ந்து வீழ்ந்தபடியே இருந்தன.

(END)

நன்றி : அழகிய பெரியவன் , கலப்பை, சென்ஷி

Wednesday, July 1, 2026

சரித்திர நாயகர்களும் சதம் கண்ட சங்கமும் - நாகூர் அப்துல் கையூம்

நாகூர் கௌதிய்யா சங்கத்தின் நூற்றாண்டு விழா *மலரில் நண்பர் அப்துல் கையூம் எழுதிய கட்டுரை நன்றியுடன் பகிர்கிறேன். - AB

*


சரித்திர நாயகர்களும் சதம் கண்ட சங்கமும்

-        நாகூர் அப்துல் கையூம்

 

 

ஒரு நூற்றாண்டைத் தாண்டி வீறுநடை போடும் கெளதிய்யா சங்கத்தின் உன்னதங்களை ஒருசில பக்கங்களில் அடைத்துவிட இயலாது. BETTER LATE THAN NEVER என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. தாமதமாக கொண்டாடினாலும்  தகுந்த நேரத்தில் இச்சங்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தனித்துவமிக்க தரமான ஒரு ஓர் அற்புத நிகழ்வு. 

 



நாகூர் கெளதியா சங்கம் இதுவரை ஏராளமான பிரமுகர்களுக்கு வரவேற்பு அளித்து கெளரவித்திருக்கிறது. பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தலைவராக விளங்கிய  பனாத்வாலா - இப்படியாக எத்தனையோ முக்கியப் புள்ளிகள். இவ்வரவேற்புகளில் மிக முக்கியமானது நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பதில் சற்றும் ஐயமில்லை.  

 

காரணம் என்னவெனில் நாகூர் மண்ணின் மைந்தர் ஒருவர்  தமிழ்நாடு ஆளுநர் எனும் உயர்பதவியை ஏற்று சொந்த ஊருக்கு அடியெடுத்து வருகையில் அவர் பிறந்த மண்ணில் கொடுக்கப்படும் வரவேற்பு ஒரு சரித்திர நிகழ்வன்றோ?

 

பிரபுதாஸ் பட்வாரிக்கு பதிலாக தற்காலிகத் தமிழக ஆளுநராக  நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்கள் நியமிக்கப்படுகிறார். 1980-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 27ஆம் நாள் அவர் பதவியேற்ற நன்னாள். பதவியேற்றபின்பு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நாகூர் கெளதிய்யா சங்கத்தில் அவருக்கு பிரமாண்டமான  வரவேற்பு அளிக்கப்படுகிறது.. 

 

பள்ளிப்பருவம் 

 

நாகூர்  மீயான்தெரு முனிசிபல் முகம்மதிய ஆண்கள் ஆரம்பநிலைப் பள்ளி. இப்பள்ளிக்கூடம்தான் இஸ்மாயீல் எனும் இலக்கிய இமயம் உருவாவதற்கு அடித்தளம் அமைத்துத் தந்த பாசறை. 

 

சிறுவன் இஸ்மாயீல் அப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரமது. தமிழ்நாடு மாநிலம்மெட்ராஸ் பிரஸிடென்ஸிஎன்று அழைக்கப்பட்ட காலம். ஒரு காலைப் பொழுதில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், வீதியில் பலத்த ஆரவாரம் ஒலிக்கின்றது. வாகனங்களின் அணிவகுப்பு சீராக வந்துக் கொண்டிருந்ததைக் கண்டு, பாடத்தை நிறுத்திவிட்டு, ஆசிரியர்களும் மாணவர்களை வேடிக்கை பார்ப்பதற்கு வெளியே அழைத்துச் செல்கின்றனர். திண்ணை மீதிருந்தும், சுற்றுச் சுவர் மீது ஏறி நின்றும், அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டு களிக்கின்றனர் மாணவர்கள்.

 

படோபகரமான வாகன அணிவகுப்புக்கிடையே ஒருமெர்ஸிடீஸ்படகுக்கார் பவனி வருகிறது. அதில் அட்டகாசமான தோரணையில் ஆங்கிலேய கவர்னர் கம்பீரமாக வீற்றிருக்கிறார். ஊர்வலம் பள்ளியின் வழியாக கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. உற்சாகம் மேலிட, வாகனங்கள் சென்ற வழியே, வைத்த பார்வை தீராது, வழிமேல் விழி வைத்து; கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருக்கிறான் சிறுவன் இஸ்மாயீல்.

 

இஸ்மாயீல் மீது பேரபிமானம் வைத்திருந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஐயர்டேய் பசங்களா! நம்ம இஸ்மாயீலும் ஒருநாள் இந்த மாதிரி கவர்னர் ஆகி அட்டகாசமாக ஊர்வலம் வருவான். பார்த்துக்கொண்டே இருங்க!என்று விளையாட்டாகச் சொன்னது அந்தச் சிறுவனின் காதில் அசரீரியாய்  ஒலித்துக் கொண்டிருக்கிறது. அன்பிற்குரிய ஆசிரியர் அகமகிழ்ந்து அளித்த நல்வாக்கு, ஒருநாள் உண்மையிலேயே பலிக்கும் என்று யாரும் ஊகித்திருக்க மாட்டார்கள். அந்த நல்வாக்கு பலித்து இப்போது நிறைவேறி இருந்தது. கெளதிய்யா சங்கம் அம்மாமனிதருக்கு அளித்த வரவேற்பு இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டு.

 

விளையும் பயிர் 

 

சிறுவன் இஸ்மாயீலுக்கு அப்போது வெறும் ஒன்பது வயது. நாகூரில் நபிகள் நாயகத்தின் மீலாது விழாகொண்டாட்டம். அவ்விழாவில் இஸ்மாயீலுக்கு சொற்பொழிவாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.  மடை திறந்த வெள்ளமென பேசி கேட்போரை வியப்பில் ஆழ்த்துகிறான் அச்சிறுவன்.விளையும் பயிர் முளையில் தெரியும்என்பார்களே, அதுபோல.

 

அதுமட்டுமன்றி, சிறுவயதில் அரபி மதரசா சென்று அரபி மொழியில் பயிற்சி பெற்று முறையாக முதிர்ச்சி பெற்றிருந்தான் அச்சிறுவன். பிற்காலத்தில் தமிழ்மொழியில் அபார பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், தொடக்க வயதில் அரபி மதரஸாவில் அடிப்படை மார்க்கக் கல்வி பயின்ற காரணத்தால் அதன்பின் ஆரம்பப் பள்ளியில் அடியெடுத்து வைத்த காலத்தில் அவனோடு படித்த மாணவர்களில் இவன்தான் வயதில் மூப்பு. இவன் வயதையொத்த பிற மாணவர்கள் மேல்வகுப்பில் இருந்ததைப் பார்த்து இவனுக்குள் ஒரு தீராத ஏக்கம். வாழ்க்கையில் ஏனோ பின்தங்கி விட்டதைப் போன்ற ஒரு திக்பிரமை. அதிகப்படியாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம், தன் வயதையொத்த மாணவர்களுடன் தானும் சேர்ந்து படிக்க வேண்டும் என்ற உந்துதல், கல்வியில் இச்சிறுவன் காட்டிய பேரார்வம் இவையாவும் பள்ளி ஆசிரியர்களை இவன்பால் கவனத்தை ஈர்த்தது. 

 

இளமையில் சோகம் 

 

இஸ்மாயீலின் இளமைக் காலத்து வாழ்க்கைப் பாதையில் பூக்கள் விரித்திருக்கப் படவில்லை. அவன் கரடு முரடான முட்பாதையைக் கடக்க வேண்டியிருந்தது.  பி.முஹம்மது காசிம் மரைக்காயர், ருகையா பீவி இருவருக்கும் செல்வப்புதல்வானாய் வந்து பிறந்தவர்தான் நம் நாகூர் நாயகன். உடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். ஒருவரின் பெயர் ஜக்கரியா மரைக்காயர். இன்னொருவர் உம்மு ஹனிமா என்றழைக்கப்படும் சகோதரி ஆவார். நாகூர் லுக்மான் ஆலிம் சாயபு என்பவரின் வாழ்க்கைத் துணைவியார்.

 

ஒன்பதாவது வயதில், பெற்ற தாயையும், பதிமூன்றாவது வயதில் தந்தையையும் பறிகொடுத்த சிறுவன் இஸ்மாயீலுக்கு உலகமே இருண்டு போகிறது. ஆறுதல் தேடும் வயதில், ஆதரவு வேண்டும் பருவத்தில், அனாதையாய் ஆகிவிடுவது அளப்பரிய கொடுமையன்றோ? இருந்த போதிலும் உறவினர்கள் அவனைக் கைவிடவில்லை; கண்ணுங் கருத்துமாக கவனித்துக் கொண்டார்கள்.

 

மேல்நிலைக்கல்வி 

 

இஸ்மாயீலுக்கு தமிழ்மொழி மீது ஓர் அதீத ஈடுபாடு ஏற்பட்டது நாகை தேசிய மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போதுதான். ஆசிரியர் என்.ஆராவமுதன் ஐயங்கார் அவனுக்கு அளித்த உற்சாகமும், ஊக்குவிப்பும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்.  இந்த ஆராவமுதன் யாரென்றால்  பாடகர்  ஏ.வி.ரமணனின் தந்தை, பாடகி உமா ரமணணின் மாமனார். எஸ்.எஸ்.எல்.சி. வரை இஸ்மாயீலின் ஆசிரியராக இருந்து அவன் ஆற்றலை வளர்த்தவர்,

 

இஸ்மாயீல் மேல்நிலைப்பள்ளி இறுதி வகுப்பை எட்டியபோது தமிழிலக்கியத்தில் மென்மேலும் தேர்ச்சி பெறக்கூடிய அரிய  வாய்ப்பு கிடைக்கிறது.  சங்க இலக்கியத்தில் பெருந்திறன் வாய்ந்த சந்தானம் ஐயர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் போன்றவர்களிடம் கல்வி கற்கும் வாய்ப்பு அவர் செய்த பெரும்பேறு எனலாம்.

 

பிறர் நோக்கு

 

மனவியல் நிபுணர் பாவ்லா ரிச்மேன் என்ற அமெரிக்கப் பெண்மணி எழுதி, ஆக்ஸ்ஃபோர்ட் பதிப்பகம் வெளியிட்ட, “Questioning of Ramayanas” என்ற ஆய்வுநூல் பெரும் சர்ச்சையை கிளப்பிய நூல். இதில் இந்து சமயத்தவரின் மனதை புண்படுத்தும் வகையில் தகவல்கள் அடங்கி இருக்கின்றதென்ற குற்றச்சாட்டு எழுந்து, இந்நூலை தடை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

 

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக் கழகத்தின் சமய விரிவாளராக பணியாற்றும் பேராசிரியை வாசுதா நாராயணன் எழுதிய  “The Ramayana and its Muslim Interpreters” என்ற ஆய்வுக்கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அதில் அவர் நீதிபதி இஸ்மாயீல் அவர்களை வானளவப் புகழ்ந்திருந்தார். 

 

திருக்குறளின் மேன்மையை எடுத்துச்சொல்ல கானடாவில் பிறந்த ஒரு ஜி.யு.போப் தேவைப்பட்டதைப் போன்று, நாகூர்க்காரரின் மகிமையை எடுத்துச் சொல்ல நமக்கொரு அமெரிக்கா பேராசிரியை தேவைப்படுகிறது. இதைப் படித்த உள்ளூர்க்காரனான நான் இவரின் மகிமையை இதுநாள்வரை உணரவில்லையே  என வெட்கித்துப் போனேன்.

 

படிப்படி முன்னேற்றம்

 

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறிய அவர் வகிக்காத பதவிகளே இல்லை எனலாம். வழக்குரைஞராக, சென்னை விவேகானந்தா மற்றும் சட்டக் கல்லூரியில் பகுதிநேரப் பேராசிரியராக, தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக. தில்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக, சென்னை உயர்மன்ற நீதிபதியாக, பிறகு தலைமை நீதிபதியாக, தற்காலிக கவர்னராக, இடையே கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, சட்டக் கமிஷன் தலைவராக, தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் கமிட்டியின் தலைவராக, இப்படியாக அவர் வகித்த அனைத்துப் பதவிகளிலும் அக்மார்க் முத்திரை பதித்தார்.

 

சென்னை  கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவராக இருந்த அவர், தொடக்ககால முதல் தனது மரணம்வரை அவ்வமைப்பின் தலைவராக நீடித்து சாதனை புரிந்தவர் .  

 

நீதிபதி இஸ்மாயீல் அவர்களின் உறவுக்காரப் பிள்ளைகள் அவரைஜட்ஜப்பாஎன்றுதான் பாசத்துடன் அழைப்பார்கள்.உங்களுக்கு ஜட்ஜப்பா பிடிக்கும். அவருக்கோ கவிக்கம்பனுடைய விருத்தப்பா பிடிக்கும்என்று நான் அவர் உறவினர் ஒருவரிடம் நகைச்சுவையாக கூறுவதுண்டு.

 

தவறான கண்ணோட்டம்

 

காலம் முழுதும் அவர் கம்பராமாயணத்தின் புகழைப் பரப்புவதிலும், பட்டிமன்றங்களில் இராமபிரானுக்கு வக்காலத்து வாங்குவதில் தன் காலத்தை செலவிட்டார் என்ற விமர்சனம் பரவலாகவே உண்டு. பெரும்பாலும் அவர் பிறாமணச் சகோதர்களுக்கிடையே வாழ்ந்து வந்ததால், அவருடைய உணவு முறைகூட சுத்த சைவமாகவே மாறிவிட்டிருந்தது. கம்பனின் எழுத்தாற்றலில் அவர் தன் மனதைப் பறிகொடுத்ததென்னவோ உண்மை. அதற்காக அவர் இஸ்லாமியக் கோட்பாடுகளிலிருந்து விலகிப்போய் விட்டார் என்பது அர்த்தமல்ல. 

 

இஸ்லாமிய இலக்கியம்

 

நீதியரசர் எழுதிய முதல் நூல் மெளலானா ஆஜாத் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு. அப்போது அவருக்கு வெறும் 24 வயது. இந்நூலுக்கு முன்னுரை வழங்கியவர் யார் தெரியுமா? மூதறிஞர் ராஜாஜி.

 

அவரெழுதிய இஸ்லாமிய நூல்களில்அல்லாவுக்கு ஆயிரம் திருநாமங்கள்என்ற முத்தமிழ் நூல், இஸ்லாமிய எழுத்துலகில் முத்திரை பதித்த தித்திக்கும் படைப்பு. அரபுமொழியில்அஸ்மாவுல் ஹுஸ்னாஎன்றால் அழகிய திருநாமங்கள் என்று அர்த்தம். இந்நூலில் அவர் மார்க்க அறிஞர்களே வியக்கக் கூடிய அளவுக்கு பல நுட்பமான விஷயங்களை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார். அரபு மொழியிலும்தமிழ் மொழியிலும் வல்லமை பெற்ற ஒருவரால் மட்டுமே இத்தகைய ஓர் அறிவுபூர்வமான ஒரு நூலை வெளிக்கொணர இயலும் என்பது வெள்ளிடைமலை 

 

நபிகள் நாயகத்தின் நிறைவான வாழ்க்கை உமறுப்புலவருக்கு 'சீறப்புராணம்' என்ற காப்பியத்தை வடிக்க காரணமாக அமைந்தது. இப்றாஹிம் நபி மற்றும் இஸ்மாயில் நபி அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் சேகுனாப் புலவருக்குதிரமணிமாலைஎன்னும் இலக்கியத்தைப்  படைக்க  உந்துதலாக இருந்தது. அதேபோன்று சுலைமான் நபியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வண்ணக் களஞ்சியப் புலவருக்குஇராஜநாயகம்என்னும் இலக்கியக் காப்பியம் வடிக்கத் தூண்டியது. யூசுப் நபியின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் சாரணபாஸ்கரனாருக்கு "யூசுப்-ஜுலைகாஎன்ற காப்பியத்தை வடிக்க காரணமாயிருந்தது

 

சீறாப்புராணம்”, “யூசுப்-ஜுலைகா காவியம்”, “இராஜ நாயகம்போன்ற இலக்கியச் சுவைமிக்க இஸ்லாமியப்  படைப்புகள் அத்தனையும் அவர் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்துள்ளார்.  அந்த அற்புதமான திறனாய்வுகளை கட்டுரைகள்நூல்கள்சொற்பொழிவு  வாயிலாக தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு தரமானதாய் வார்த்தும் இருக்கிறார். சாரணபாஸ்கரனாரின்யூசுப்-ஜுலைகாகாப்பியத்திற்கு அணிந்துரை வழங்கியவர் நீதியரசர் மு.மு.இஸ்மாயீல்.

 

வண்ணக்களஞ்சியப் புலவரின்இராஜநாயகம்என்ற காப்பியத்தை திறனாய்வு செய்து நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்கள் எழுதியஇனிக்கும் இராஜ நாயகம்என்ற நூல் குறிப்பிடத்தக்கது.

 

8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணக்களஞ்சியப் புலவரின் இயற்பெயர் செய்யது ஹமீது இப்ராஹிம் என்பதாகும். வண்ணம் என்னும் சந்தச் செய்யுள் பாடுவதில் வல்லவரான இவரை வண்ணக்களஞ்சியப் புலவர் என்ற பெயரைச்சூட்டி இவரைச் சிறப்பித்தனர். வண்ணக்களஞ்சியப் புலவர் மீசல் என்னும் ஊரில் பிறந்தார். அவர்  நாகூருக்கு அருகில் உள்ள பொறையார் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பதாயி மரைக்காயர் எனும் செல்வந்தரின் மகளை மணமுடித்துக் கொண்ட இவர், தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை நாகூரிலேயே கழித்தார்.  இவர் நாகூர்க்காரராகவே அறியப்பட்டார்.புலவர் கோட்டைஎன்றழைக்கப்பட்ட நாகூரில் செயலாற்றிய புலவர்கள் சபை இவருக்குவண்ணக்களஞ்சியப் புலவர்என்ற சிறப்பு பட்டத்தை அளித்து கெளரவித்தது.


காந்தியவாதி

2.2.1946 தேதியன்று காந்தியடிகள் கடைசி முறையாக தமிழகம் வந்தபோது மு.மு.இஸ்மாயீலும் அவரைக் கண்ணால் காண்பதற்கு திருச்சி மாநகருக்கு  ஓடோடி வந்தார். காந்திஜியின் ஆத்மார்த்த சீடாராய் மு.மு.இஸ்மாயீல் மாறியிருந்த நேரமது.

 

இளைஞர் இஸ்மாயீலுக்கு காந்திஜீயின் மீது மிகுந்த அபிமானமும், பிரியமும் ஏற்படக் காரணமாயிருந்தவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன். புகழ் பெற்ற காந்தியவாதியான அவர் மகாத்மா காந்தியின் நூல்களைத் தொகுத்தவர். நீதியரசர் காந்தியச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டது பேராசிரியரிடமிருந்துதான். 

 

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இஸ்மாயீலின் எழுத்தாற்றலும், இலக்கிய ஆர்வமும், சொற்திறனும் சுவாமிநாதனை மிகவும் ஈர்த்தது. தன் வளர்ப்புப் பிள்ளையாக கருதி இஸ்மாயீல் மீது பாசத்தைக் கொட்டி அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தார். சிறுவயதில் தாய் தந்தையரை இழந்த இஸ்மாயீல்  அவரைத் தன் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் போற்றினார்.

 

ஒரு பேட்டியின் போதுதங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் எது?” என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு முக்கியக் காரணம். பேராசிரியர் கே.சுவாமிநாதன் போன்ற உத்தமர்கள் என்னை ஆதரித்ததும் ஒரு காரணம்என்று கூறினார். அவரது நினைவாகபேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசுஎன்ற ஒன்றையும் நிறுவினார். 

 

இளம் வயதிலிருந்தே காந்தியின்ஹரிஜன்இதழ்களை வால்யூம் வால்யூமாக பைண்ட் செய்து வைத்துக்கொண்டு தம் வாழ்நாளின் இறுதிவரை பாதுகாத்து வந்தார் இஸ்மாயில்.

 

மாணவப் பருவத்தில் இஸ்மாயீலை காந்தியவாதியாக ஆக்கிய பெருமை இரண்டு பேர்களைச் சாரும். ஒருவர் கம்பனடிப்பொடி சா. கணேசன். இன்னொருவர் பேராசிரியர் கே.சுவாமிநாதன்

 

கம்ப இராமாயணம் 

 

திருக்குறள் விளக்கத்திற்கு திருக்குறள் முனுசாமியைப் போன்று, சிலம்பதிகார விளக்கத்திற்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யைப் போன்று, கம்ப ராமாயணத்திற்குஅத்தாரிட்டியார் என்றால் எல்லோருடைய  நினைவிலும் உதிப்பது  நீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களுடைய  பெயர்தான். இன்றளவும் மதநல்லிணக்கத்திற்கு நீதியரசர் மு.மு.இஸ்மாயீல் அவர்களைத்தான் எல்லோரும் உதாரணம் காட்டுகிறார்கள். 

 

1990-ஆம் ஆண்டு, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி கம்பராமாயணப் பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்ய எண்ணினார். அதற்கான ஆயத்தங்களை அவர் மேற்கொண்டபோது அவர் கலந்தாலோசனை செய்தது நீதிபதி இஸ்மாயீல் அவர்களிடம்தான். இசையரசிக்கு இஸ்மாயில் சொன்ன யோசனை இதுதான். கம்பராமாயணப் பாடல்களை முதலில் மனனம் செய்து, அதன் பொருளுணர்ந்து அதன் பின்னர் பாடல் பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களும் ஒரு பவ்யமான சிஷ்யையைப் போன்று அவ்வப்போது கம்பராமாயணத்தைப் பற்றிய சந்தேகங்களையும் அதன் அருஞ்சொற்பொருளையும் அவ்வப்போது ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

 

இலக்கியச் செல்வரும் எம்.ஜி.ஆரும்

 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரண்டாம் முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சி 1980-ஆம் ஆண்டு ஜுன் 9-ஆம்தேதி பகல் 12 மணிக்கு நடைந்தேறியது.  பதவியேற்பு சம்பிரதாயங்கள் முடிந்ததும் எம்.ஜி.ஆரும், கவர்னர் பட்வாரியும் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக்கொண்டனர். பதவியேற்ற 17 அமைச்சர்களும் எம்.ஜி.ஆர். காலைத் தொட்டு வணங்கினார்கள்.

 

மேடையிலிருந்து வேகமாக கீழிறங்கி வந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர். முன் வரிசையில் அமர்ந்திருந்த நீதியரசரின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, பவ்யமாக வணங்கி வாழ்த்துப் பெற்றார். நீதியரசர் மீது மற்றவர்கள் கொண்டிருந்த மரியாதைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

 

கெளதிய்யா பைத்து சபா

 

"கெளதிய்யா சங்கம்" என்பது  ஓர் ஆலமரம். கெளதிய்யா பள்ளிக்கூடம், கெளதிய்யா பைத்துசபா, கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் இவையாவும் அதன் விழுதுகளாக பரவிய அமைப்புகள். கெளதிய்யா பைத்துசபா, புலவர் ஆபிதீன் போன்ற இலக்கிய ஆளுமைகளையும், இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா போன்ற இசை மேதைகளையும் உருவாக்கியது என்ற விவரம் மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும். இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக, நாகூருக்கு வருகை தந்த சரித்திர நாயகர்களுக்கு தந்த வரவேற்பைப் பற்றிய விவரங்கள் இன்றைய இளந்தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பே இல்லை.

 

நான் சிறுவனாக இருக்கையில் என் தந்தைவழி பாட்டி அதை ஒரு சுவையான நிகழ்வாக விவரித்துச் சொல்ல நான் கேட்டு களித்திருக்கின்றேன்.

 

இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கிலாஃபத் இயக்கத்தின் தலைவர்களாக விளங்கிய அலி சகோதரர்கள் குறித்து உலகமே நன்கறியும். ஆங்கில ஏகாதிபத்திய காலனிய அரசுடன் ஒத்துழைக்க மறுத்து ஆங்கிலேயர்களை  கதிகலங்க வைத்தவர்கள் இந்த அலி சகோதரர்கள்.

 

இதில் மெளலானா முஹம்மது அலி ஜவஹர் இளைய சகோதரர். மெளலானா சௌகத் அலி கான் மூத்த சகோதரர்.  இவர்களின் தாயார் பீ அம்மா (Bi Ammaa) என்று அன்புடன் அழைக்கப்படும் ஹாஜியா ஆலாஜி பானு பேகம் அவர்களும் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட மகத்தான பெண்மணி ஆவார். கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்குகதர்என்று பெயரிட்டவர். தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்குகதர் ஆடைஎன்ற பெயர் வந்தது.

 

கெளதிய்யா சங்க கட்டடம் எழும்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில் அலி சகோதரர்கள் தங்கள் தாயார் பீ அம்மாவுடன் 1921ஆம் ஆண்டு எப்ரல் மாதம்  நாகூர் வருகை தந்தனர். ‘பைத்துபாடி  தப்ஸ்முழக்கத்துடன் கெளதிய்யா சங்கத்தாரும், நாகூர் முஸ்லிம் சங்கம் ஜமாத்தாரும் ஒன்றுகூடி தந்த பிரமாண்டமான வரவேற்பு நாகூரில் நடைபெற்ற ஒரு சரித்திர நிகழ்வு.

 

மெளலானா முகமது அலி அவர்கள் ஈரோட்டில் நடந்த உலமாக்கள் மாநாட்டுக்கு வருகை தந்தபோது ஈ.வெ.ரா பெரியார் இப்படிச் சொன்னார்.இந்த தேசம் காந்தியிடம் இருக்கிறது. ஆனால் அந்த காந்தியோ இதோ இந்த மெளலானா முகமது அலி அவர்களின் சட்டைப் பையில் இருக்கிறார்" என்றார். அந்த அளவுக்கு இந்திய சுதந்திர வேள்வியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மெளலானா முகமது அலி. இந்த அலி  சகோதரர்களைப் பற்றி ஒரு முறை குறிப்பிடும்போது, “என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றனஎன்று காந்திஜி பெருமையாகச் சொன்னார். 

 

1930-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரம் பற்றி கலந்துபேச லண்டனில் வட்டமேசை மாநாட்டுக்கு மெளலானா முகமது அலி அழைக்கப்பட்டார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இரண்டு மணி நேரம் முழங்கினார்.

 

எனது நாட்டுக்கு சுதந்திரம் கொடுங்கள். அல்லது உங்கள் மண்ணில் அடக்கமாக எனக்கு கல்லறையில் இடம் கொடுங்கள்" என்று உணர்ச்சிகரமாகப் பேசினார். சுதந்திரம் தரப்படவில்லை. ஆனால் இறைவன் அவரது நாட்டத்தை நிறைவேற்றினான். லண்டன் வட்டமேசை மாநாட்டில் உடல்நலக் குறைவோடு முழங்கிய அவர் 04-01-1931–ல் லண்டன் மாநகரிலேயே உயிர் பிரிந்தார்.

 

அவரது ஜனாஸாவை ஆங்கில ஏகாதிபத்திய மண்ணில் அடக்கம் செய்ய முஸ்லிம் நாடுகள் சம்மதிக்கவில்லை. கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த 22 நாடுகள் அந்தப் புனித மகானின் உடலைத் தங்களது மண்ணில் அடக்கம் செய்ய வேண்டுமென்று கோரி வரிசையில் நின்றன. இறுதியில் ஜெருசலத்தின் பைத்துல் முகத்தஸ் பள்ளியில் உள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

அலி சகோதரர்களுக்கு பைத்து பாடி தப்ஸ்முழக்கத்துடன் நாகூர் மக்கள் அலி சகோதர்களுக்கும், அவர்களுடைய தாயார் பீ அம்மாவுக்கும் வரவேற்பு அளித்தனர் என்று பார்த்தோம் அல்லவா?  அந்த வரவேற்பு தந்த உற்சாகத்தின் பேரில் சொந்தமாக பைத்து சபா ஒன்றை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது.  கெளதிய்யா பைத்து சபாஅமைய இந்நிகழ்வு அடித்தளம் கண்டது.

 

முற்றும்

*



நன்றி : அப்துல் கையூம்

* Download the Malar (pdf)

Thursday, June 25, 2026

பை (கவிதை) - ஜெயபாஸ்கரன்

பை - கவிஞர் ஜெயபாஸ்கரன்

கண்ணிமைக்கும் நேரத்தில் ,

என் கைப்பையைக் களவாடி கொண்டு போனவனைக் குறித்து கவலைப்படுகிறேன் நான்

யூகிக்க முடியாத ஏதோ ஒரு இடத்தில் வைத்து அதை பிரித்த அவன் 

எப்படியெல்லாம் குழம்பி இருப்பான்?

அவனையும் அழைக்கின்ற இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்களை என்ன செய்யப் போகிறான்?

கொடுத்த கடனை கேட்டு என்னை மிரட்டிக் கொண்டிருக்கும் மனோகரனின் கடிதத்திற்கு என்ன பதில் எழுத முடியும் அவனால்?

இப்போதைக்கு தர இயலாது என்பதற்கான எல்லா காரணங்களையும் மனோகரனுக்கு எழுதி அனுப்பி விட்டதை எப்படி அறிவான் அவன்?

அதை விடுங்கள்,

மதிப்புரைக்கு வந்திருந்த அந்த இரு நூல்களை பாராட்டித் தொலைப்பானா ஒரு வேளை?


எக்கேடோ  கெடட்டும்

இனி கைப்பையை களவு கொடுத்தது குறித்து எனக்கு ஒரு மகிழ்ச்சியும் அதை களவாடியது குறித்து அவனுக்கு ஒரு துயரமும் என்றைக்கும் எஞ்சி இருக்கும்

இனி அவன் எந்த பையை திருடினாலும் என் பையாக இருக்குமோ என அஞ்சுவான்.

*

Thanks to Yazhini

Visit : https://www.youtube.com/shorts/amXzT8CascI