Thursday, March 19, 2015

தனுவும் நிஷாவும் - சுந்தர ராமசாமி சிறுகதை

தாங்கள் ஆரம்பிக்க இருக்கும் புது கம்பெனியை நான் தான் திறந்து வைக்க வேண்டுமென்று திடீரென்று தனுவும், குட்டி நிஷி என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் நிஷாவும் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் கிரான்பா என்றுதான் என்னை அழைப்பார்கள். தமிழோ, இங்கிலீஷோ தாத்தா என்று அழைப்பதைவிட எனக்குப் பிடித்திருந்தது. தாத்தா என்று அழைக்கிறபோது எனக்கு பொக்கை வாய் - உண்மையில் அப்படியில்லை - இருப்பது போன்ற எண்ணம், கிரான்பா என்று அழைக்கிறபோது ஏற்படுவது இல்லை.

தனுவுக்குப் பன்னிரெண்டு வயது. குட்டி நிஷிக்கு ஏழு வயது. கம்பெனியா? நான் திறந்து வைத்ததே இல்லையே என்று சொன்னேன். நமக்கு ஆகாத விஷயத்திற்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள். எப்படி எல்லாம் மூளைகள் வேலை செய்யுமோ? தனுவும் நிஷியும் இங்கிதமாகச் சிரித்தார்கள். அதன் பொருளை, என்னைப் பற்றி அவர்கள் மனதில் இருந்த அபிப்பிராயத்தை வைத்து ஊகிக்க முடிந்தது. அமெரிக்காவிலேயே கௌரவமான பணிக்கு அழைத்தால் இப்படிப் பதில் சொல்கிறவர்களும் இருப்பார்களா?

குட்டி நிஷ் அரை நிஜாரில் முக்கால் பங்கு வெளியே துருத்திக்கொண்டிருந்த பெரிய டிராயிங் தாளின் சுருளை மேஜை மீது விரித்து ஓரங்களைப் பிடித்துக்கொண்டாள். நான் குனிந்து பார்த்தேன். அவளுடைய கைவண்ணம்தான். வழக்கம் போல் அரூப ஓவியம். அவள் எந்த ஜீவராசிகளை வரைந்தாலும் சரி அவற்றிற்கெல்லாம் பாரபட்சமில்லாமல் சிறகுகளைப் போட்டு விடுவாள். முயல், எலி, மான், கட்டெறும்பு, நாய், பூனை எல்லாவற்றிற்கும். மரம் செடி கொடிகளின் சிறகுகளில்தான் இலைகள் முளைத்திருக்கும். சிறகுகளில் பழங்களும் தொங்கும். இவள் வரைவதற்கே அவசியமில்லாமல் பறவைகள் சிறகுகளுடன் இருப்பதில் அவளுக்கு ஏமாற்றமோ என்னவோ. இவளுடைய பங்காக அவற்றின் சிறகுகளைக் கண்டபடி பெரிதாக்கி விடுவாள். குருவிகள், கழுகுகளைவிட பெரிய சிறகுகளை வைத்துக்கொண்டிருக்கும்.

டிராயிங் தாளின் நாலு ஓரங்களிலும் பல தாவரங்களும் பல ஜீவராசிகளும் சிறகுகளின் களேபரத்தில் மூழ்கிக் கிடக்க, மையத்தில், Plants and Pets என்று நவீன கோணல் எழுத்துக்கள் பெரிதாகத் தெரிந்தன. பங்குதாரர்கள்: தனு ராம்; நிஷா ராம் என்றிருந்தது. தனுவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும், நிஷாவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தன. கம்பெனியைத் திறந்து வைக்கிறவர் பெயர் காலியாக விடப்பட்டிருந்தது. தனு அவளுடைய பாண்ட் பாக்கெட்டிலிருந்து என் புகைப்படத்தை எடுத்து, மென்மையாகச் சிரித்தபடி, ஒட்டிக்கொள்ளவா, கிரான்பா? என்று கேட்டாள். குழந்தைகளின் ஆசை, இரண்டு பேரின் வயதைக் கூட்டினாலும் கூட பத்தொன்பதுதான். என்ன தன்னம்பிக்கை! என்ன தைரியம்! மனசு தழுதழுத்தது. சரி என்று என் வாயே சொல்லிவிட்டது. இருவரும் உணர்ச்சிவசப்பட்டு என்னை அணைத்துக்கொண்டார்கள்.

காரியங்கள் மடமடவென்று நடந்துகொண்டிருந்தன. அழைப்பிதழ் ஒவ்வொன்றையும் சிறிய ஓவியங்களின் நடுவில் எழுதிதான் சிநேகிதிகள் எல்லோருக்கும் தரவேண்டுமே தவிர கணினியில் அச்சுப் போட்டுத் தரக் கூடாது என்பது அவர்கள் தீர்மானம். படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க வேண்டும் என்று குட்டி நிஷியிடம் சொல்லத் தேவை இல்லை. இரண்டு படங்கள் ஒரே மாதிரியாக வேண்டும் என்று சொன்னால்தான் அவளுக்குப் பிரச்னையே.

குழந்தைகளுக்கு நேரம் மிகக் குறைவு. பள்ளிக்கு அதிகாலையில் போய்விட்டு பின்மாலையில் களைப்பில் சுருண்டு போய் வருவார்கள். அதன் பின் வீட்டுப்பாடச் சுமைகள். தவிர வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களுக்கு விளையாடச் செல்ல வேண்டும். ஸாக்கர், கூடைப் பந்து, நீச்சல், கராத்தே என்று வரிசையாக. தனுவுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வயலின். குட்டிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பியானோ. எப்படித்தான் ஈடு கொடுக்கிறார்களோ. அவர்கள் ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலைக் குளிர்சாதனப் பெட்டியில் ஒட்டி வைத்திருப்பதைப் படித்தாலே எனக்குத் தலை சுற்றும். நல்ல வேளை, இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் சாயம் வெளுக்காமல் எழுபத்திரெண்டு வயது வரையிலும் சமாளித்துக்கொண்டு வந்துவிட்டேன். எப்போதாவது குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்து, ஸாக்கர் 5 மணிக்கு, நேரமாகிவிட்டது. ஓடு, ஓடு என்று குட்டியை விரட்டும் போது என் மனசே வெட்கம் கலந்து சிரிக்கும்.

அது ஹைவேயை விட்டு ஒதுங்கியிருந்த தனி வளைவு. ஒரு குன்றும் அதைச் சுற்றியிருந்த பிரமாண்டமான சரிவுகளில் மரக்காடுகளும், ஆங்காங்கு வீடுகள் மொத்தம் பதினெட்டு. அதற்கு மேல் கட்ட கவுண்டி உரிமை அளிக்காது. அவ்வளவு பேரும் வெள்ளை அமெரிக்கர்கள். நாங்கள் மட்டும்தான் கறுப்பு இந்தியர்கள்.

தனுவும் குட்டியும் வீட்டுக்காரர்களின் சங்கக் கட்டிடத்தின் அறிக்கைப் பலகையில் பெரிய ஓவிய அழைப்பிதழை பின் பண்ணியிருந்தார்கள். நான் காலைநடை போகிறபோது கட்டிடத்தின் வராண்டாவில் ஏறி என் புகைப்படத்தைப் பார்ப்பேன். அமெரிக்க நீலக்கண்களுக்கு என் கறுப்பு மூஞ்சி எப்படிக் காட்சி அளிக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பேன். சிம்பன்சியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் இவர்களுக்கு என் முகத்தை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இராது என்றுதான் எனக்குத் தோன்றியது. அத்துடன் நான் லொடக்கு இந்தியக் கிழவனும் அல்ல. வளைவினுள் ஏகப்புகழ் பெற்றிருந்த தனுவுக்கும் நிஷிக்கும் கிரான்பா. தைலாவின் அப்பா. தைலா ஒருத்திதான் அந்த வளைவினுள்ளிருந்து பணிக்குப் போகிறாள். பிற பெண்கள் வீட்டு நிர்வாகத்தைதான் தேர்ந்தெடுத்திருந்தார்கள். டாக்டரான தைலாவின் நட்புக்கு அவர்கள் மனங்களில் மிகுந்த மதிப்பு இருந்தது. யார் வீட்டில் உடல் பிரச்சனை என்றாலும் அவசரத்திற்கு அவளிடம் ஒரு ஆலோசனை கேட்கலாம். அதற்கு மேலும் நெருக்கடி என்றால் தங்கள் வீட்டிற்கு உரிமையுடன் அழைத்துச் செல்லலாம். மேலும் தைலாவின் வீடுதான் குன்றின் ஆக உச்சியில் இருந்தது. நில நடுக்கத்தில் அந்த வீடு சிதிலம் அடைந்தபோது அதன் பழைய உரிமையாளர் அந்த வீட்டை ராம் - தைலா தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டார். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்த வீட்டைக் கட்டி எழுப்பிக்கொண்டார்கள். இப்போது பதினேழு குடும்பத்தினருக்கும் மனதிற்குள் அந்த வீடுதான் வேண்டும். மீண்டும் நிலநடுக்கம் வந்து வீடு தங்கள் தலையில் சரிந்தாலும் பாதகமில்லை. அது தவிர தைலா வீட்டில் மூன்று கார்களும் இருந்தன. அவளுக்கு லெக்ஸஸ். ராமிற்கு நாவிகேட்டா. குழந்தைகளுக்காக க்ரைஸர் வான். கார்கள் எல்லாமே தெருவில் உருள்பவைதான். அமெரிக்காவில் தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்குக்கூட இவை கார்கள் மட்டுமல்ல என்பது தெரியும்.

தனுவும் நிஷாவும் தங்கள் வீட்டு நீச்சல் குளத்தின் கரையில் வைத்துதான் கம்பெனியின் திறப்பு விழாக் கூட்டம் என்று சொன்னார்கள். கம்பெனியைத் திறந்து வைக்கப் போகிறவன் என்ற அளவில் என்னிடம் சில யோசனை கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. தைலாவிடமும் கேட்கவில்லை. ராமிடமும் கேட்கவில்லை. அவர்களுக்குள் விவாதித்து முடிவெடுத்துக் காரியம் செய்துகொண்டிருந்தார்கள். சூரியாஸ்தமனம் இரவு ஒன்பது மணி வாக்கில் ஆகிக்கொண்டிருந்ததால் எட்டு மணிக்குத் திறப்பு விழா, ஆனால் அவர்களுடைய சிநேகிதிகள் எல்லோரும் மாலை ஐந்து மணிக்கே வந்து விடுவார்கள்.

முதலில் நீச்சல் குளத்தில் அட்டகாசமான குளியல். அதன் பின் குளத்தின் கரையிலேயே எல்லோருக்குமாக எல்லோரும் சேர்ந்து உணவு தயாரித்தல். அதற்கு பார்பக்யு என்றார்கள் குழந்தைகள். அந்தச் சொல்லின் ஓசைக்காகவாவது ஒரு துண்டு இறைச்சியைத் தின்று பார்க்கலாமா என்று எனக்குத் தோன்றியது. என் சாகஸம் பற்றி குழந்தைகளுக்குத் தெரியாதா என்ன? உங்களுக்கு வெஜ் தனியாக என்று முதலிலேயே சொல்லி ஆசுவாசப்படுத்திவிட்டார்கள்.

டெக்கில் வைத்துதான் கூட்டம் என்றும், நான் எட்டு மணிக்கு வந்தால் போதும் என்றும் தனுவும் நிஷாவும் சொன்னார்கள். நான் டை கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமா? என்று கேட்டேன். இருவருக்கும் வந்த சிரிப்பை அடக்கத் தெரியவில்லை. வழக்கம் போல் வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தால் போதும், கிரான்பா என்றாள் தனு. அவர்களைச் சிரிக்க வைக்க நான் ஹாஸ்யம் எதுவும் சொல்லத் தேவையில்லை. வாயைத் திறந்து பேசினாலே போதும் என்றாகிவிட்டிருந்தது.

சிநேகிதிகள் வரவர ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு வேலைகளில் ஈடுப்பட்டார்கள். நாற்காலிகளை டெக்கில் கொண்டு வந்து போட்டார்கள். என் நாற்காலி சற்று கௌரவமானதாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படி எதுவும் இல்லை. அவற்றை வரிசைப்படுத்திப் போடாததும் எனக்குக் குறையாக இருந்தது. சொன்னால் சிரிப்பார்களோ என்ற எண்ணத்தில் நான் ஒன்றும் சொல்லவில்ல.

நான் மணியைப் பார்த்தபடி என் அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய பேச்சு ஒன்னறை வாக்கியம்தான். அதை முப்பதாவது தடவையாக மனதில் மீண்டும் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஒவ்வொருவராக ஏகப்பட்ட பெண்கள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. புதுப் புதுப் பெயர்களாக காதில் விழுந்துகொண்டே இருந்தன. சோபியா, அலெக்ஸி, கெல்ஸி, சிட்னி, நிக்கேல், நயோமி, மிஷல், சமைலறை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பலரும் கரையிலிருந்து கரணமடித்து விழுந்து நீச்சல் குளத்தை இரண்டுபடுத்திக்கொண்டிருந்தார்கள். தலைகால் புரியாத சந்தோஷத்தில் கத்தினார்கள். ஈரத்தலையுடன் கரையில் டான்ஸும் நடந்தது.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பார்த்தபோது பார்பக்யு ஆரம்பமாகிவிட்டிருந்தது. பார்க்கவே விசித்திரமாக இருந்த அடுப்பு கபகபவென்று எரிய காரியங்கள் வேகமாக நடந்துகொண்டிருந்தன. சாப்பிட்ட இடத்தை எல்லோரும் சேர்ந்து சுத்தப்படுத்தினார்கள். சமையல் செய்து சாப்பிட்ட இடமாகவே அது தெரியவில்லை. அதன் பின் டெக் ஏணியில் சாடிக் குதித்தேறி கோணல் மாணலாக உட்கார்ந்துகொண்டார்கள்.

கிரேஸியின் அக்கா சோபியா டெக்கின் விளிம்பில் மரக் கைப்பிடி மீது உட்கார்ந்துகொண்டிருந்தாள். சரி, அது அவள் விருப்பம். ஆனால் மேல் சட்டத்தைப் பிடித்துக்கொள்ளாமல் இரண்டு கைகளையும் விசிறியபடி பேசிக்கொண்டிருந்ததுதான் வயிற்றைக் கலக்கிற்று. என்னை அறியாமலேயே அவளை அடிக்கடி கவனித்துக்கொண்டிருந்தேன். பின் பக்கம் விழுந்துவிட்டால் உருண்டு குன்றின் அடிவாரத்திற்கே போய் சேர்ந்துவிடுவாள். திடீரென்று அந்தப் பெண் என்னிடம், என் சட்டை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, கிரான்பா? என்று கேட்டாள். முன் பின் பேசியிராத பெண்ணிடம் எடுத்த எடுப்பிலேயே என்ன சகஜம். நான் அமெரிக்கப் பாணியில், இவ்வளவு அற்புதமான சட்டையை நான் வேறு எங்குமே பார்த்ததே இல்லை என்றேன். நீங்கள் அடிக்கடி கவனித்ததில் இருந்தே தெரிந்து கொண்டுவ்ட்டேன், கிரான்பா என்று தலையை உயர்த்திப் பெரிதாகச் சிரித்துக் கொண்டாள்.

கம்பெனியின் நோக்கத்தைப் பற்றி தனு சுமார் ஐந்து நிமிஷம் பேசினாள். நிஷாவின் பார்வை தனுவின் முகத்தின் மீது படிந்திருந்ததோடு அவளுடைய ஒவ்வொரு வாக்கியத்தையும் நிஷாவும் ஆமோதிப்பது போல் சுய நினைவின்றி அவளுடைய தலை அசைந்துகொண்டிருந்தது. நான் எழுந்திருந்து, கம்பெனியைத் திறந்து வைக்கிறேன். தனுவும் நிஷியும் ஆரம்ப்க்கும் இந்த கம்பெனி மிகச் சிறப்பாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றேன். இதைச் சொல்லி முடித்ததும் எல்லாப் பெண்களும் எழுந்திருந்து கையைத் தட்ட ஆரம்பித்தார்கள். தனுவும் நிஷாவும் கூட கரவொலியில் கலந்து கொள்வதைப் பார்த்ததும் நானும் கையைத் தட்டத் தொடங்கினேன். கைதட்டல் என் எதிர்பார்ப்புகளை மீறி நீண்டுகொண்டே போயிற்று. ஓசை தேய்ந்திறங்காமல் தாளகதியை எட்டிய போது பல யுகங்கள் அவை நீடித்து விடும் என்ற பிரமை மனதில் தோன்றியது.

சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாமா? என்று ஒரு பெண் கேட்டாள்.

தாராளமாக என்றாள் தனு.

எனக்கு தனு பிரச்சனையில் மாட்டிக்கொள்ளக் கூடிய கட்டம் முதலிலேயே உருவாகிவிட்டதே என்று தோன்றியது. பட்டுக்கொள்ளாமல் பதில் சொல்ல அவளுக்குத் தெரியும் வயதா?

மணிக்கு எவ்வளவு பணம்? என்ற அடிப்படையான கேள்வி முதலில் வந்தது.

ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்குப் பன்னிரெண்டரை டாலர் என்றால் தனு.

நாய், பூனை போன்றவற்றிற்கு உணவு அளிப்பது, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை கம்பெனி கவனித்துக் கொள்ளும் என்று சொன்னாய். செல்லப் பிராணிகளையும் கவனித்துக்கொள்ளுமா? என்னிடம் ஒரு வெள்ளைப் பன்றி இருக்கிறது என்றாள் ஒரு பெண்.

கினிபிக், வெள்ளை எலி, சுண்டெலி, கிளி, முயல், ஹாம்ஸ்டர் போன்ற கூண்டில் வளர்ப்பவற்றையும் கம்பெனி கவனித்துக்கொள்ளும். பாம்பு, பல்லி, இக்வானா, போன்ற ஒரு சிலவற்றை கம்பெனி இப்போதைக்கு எடுத்துக்கொள்ளாது. வினியோகிக்க இருக்கும் இந்த அறிக்கையில் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லியிருக்கிறோம் என்றாள் தனு. ஒரு காகிதக் கட்டைத் தூக்கிக் காட்டினாள்.

பாம்புகளைக் கவனித்துக்கொள்வதில் என்ன பிரச்சனை? என்று கேட்டாள் மற்றொரு பெண்.

எந்தப் பிரச்சனையும் இல்லை. தகுதி வாய்ந்த நபர் இன்னும் அமையவில்லை. அத்துடன் மற்றொன்றும் நான் சொல்ல வேண்டும். கூண்டுப் பிராணிகளைக் கவனித்துக்கொள்ளத் தருகிறவர்கள் எங்கள் வீட்டில் கொண்டுவந்து அவற்றை, அவற்றின் உணவுகளோடு தரவேண்டும். வெளியூரில் இருந்து வந்ததும் அவர்கள் பொறுப்பில் பெற்றுக்கொண்டு போக வேண்டும் என்றாள்.

அக்கா நன்றாகவே விஷயங்களை விளக்குகிறாள் என்ற பாராட்டுணர்வு நிஷாவின் முகத்தில் தெரிந்தது.

தனு சொல்ல விட்டுப் போன ஒரு விஷயம் நிஷியின் நினைவுக்கு வந்தது. அவள் அவசரமாக, செல்லப் பிராணிகளைக் கொண்டு தருகிறவர்கள் அவற்றின் பொம்மைகளையும் கையோடு தந்துவிட வேண்டும் என்றாள்.

தனுவின் கை தன்னையறியாமலே நிஷியின் முதுகைத் தொட்டது. நிஷி என் முகத்தைப் பார்த்தாள்.

வெளியூர் போகிறவர்கள் எத்தனை நாட்களுக்கு முன்பாகத் தெரிவிக்க வேன்டும்? என்று ஒரு பெண் கேட்டாள். தனு ஒரு நிமிஷம் தயங்கினாள். அக்காவும் தங்கையும் விவாதித்து முடிவெடுக்காத விஷயம்போல் பட்டது. நிஷ், தனுவின் காதில் ஏதோ சொல்லிற்று.

குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னர் என்றாள் தனு.

ஆமாம், குறைந்தது ஒரு வாரம் என்று நிஷியும் சேர்ந்து சொல்லிற்று.

கம்பெனியை ஆரம்பித்த பின் ஒரு சில மாதங்கள் சான்டாக்ரூஸிலேயே இருந்தேன். தனுவும் நிஷியும் கம்பெனியை மிக நன்றாக நடத்தினார்கள். சில சமயம் சண்டை போட்டுக்கொண்டு விடுவார்கள் இருவரும். நிஷ் முன் கோபக்காரி என்பதால், இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு புத்தகப் பையுடன் தனியாகப் போய் காரில் ஏறிக்கொள்வாள். தொழிலைக் கவனிக்க வேண்டிய நேரம் மாலை ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணி வரையிலும். சரியாக தனு ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்து விடிவிடு என்று நடந்து போவாள். அவளுக்காக வெளி பெஞ்சில் காத்துக்கொண்டிருக்கும் நிஷா சோர்ந்து போன நடையில் அவள் பின்னால் போகும். இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் வந்ததும் தொழில் சம்பந்தமான விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொள்ளத் தொடங்குவார்கள்  இது பற்றி ஒரு நாள் தனுவிடம் பேசிய போது அவள் நேரான அர்த்தத்திலேயே எடுத்துக்கொண்டு, கிரன்பா, ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து டாலர் கம்பெனி பில். வாடிக்கையாளர்கள் நலங்களைக் கவனிக்கவில்லை என்றால் கம்பெனி மூழ்கிவிடும். இப்போதே என் சிநேகிதிகளில் பத்துப் பேருக்கேனும் இதே போல் ஒரு கம்பெனியை ஆரம்பிக்கலாமா என்ற யோசனை இருக்கிறது என்றாள்.

உனக்குப் போட்டியாகவா? என்று நான் கேட்டேன்.

அப்படி நான் அதை எடுத்துக்கொள்ளவில்லை, கிரன்பா யார் வாடிக்கையாளர்களின் நலங்களைப் பாதுகாக்கிறார்களோ அவர்கள் கம்பெனி தானே வளரும் என்றாள்.

மாலை நடை போகிறபோது எனக்குக் குழந்தைகள் செய்யும் காரியத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் அவர்கள் கண்ணில் படுவது சுலபமாகவே இருக்கவில்லை. எந்த வீட்டைத் திறந்து எந்தப் பூனைக்கு அல்லது நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்.

வெளியூரிலிருந்து வீடு திரும்புகிறவர்கள் தவறாமல் ஹனுவையும் நிஷாவையும் போனில் அழைத்து அவர்களைப் பாராட்டுவார்கள். அவர்கள் அம்மாவிடமும் தனியாகப் பாராட்டுவார்கள். ஒரு நாள் மிகுந்த வசதி படைத்த லோரா என்பவர் - வக்கீலாகக் கணவனுடன் சேர்ந்து தொழில் நடத்தி, குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் தொழிலை முற்றாக விட்டவர் - தைலாவை அழைத்து, உன் பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா, தைலா? ஒரு நாள் பள்ளியிலிருந்து டிராபிக் ஜாமினால் வீடு திரும்பப் பிந்திவிட்டதால் டைகருக்கு அரை மணி நேரம் பிந்தி உணவு தரவேண்டியதாகிவிட்டதாம். அதற்காக அவர்களாகவே பில்லில் ஐந்து டாலர்கள் குறைத்துப் போட்டிருக்கிறார்கள். என்ன பொறுப்பு! உணர்ச்சிவசப்பட்டதில் எனக்கு அழுகையே வந்துவிட்டது, தைலா என்று சொல்லியிருக்கிறார்.

தனுவும் நிஷாவும், தோட்டங்களில் ஸ்ப்ரிகலரைத் திறந்துவிட்டு செடிகளை நனைப்பதையும், சில வீடுகளில் ரப்பர் குழாய் வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதையும், இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் கண்ணில் பட்டால் முகத்தைத் திருப்பாமல் இடது கையை லேசாகத் தூக்கி ஒரு 'ஹை' மட்டும்தான் எனக்கு. அதற்கு மேல் பேச்சுக் கிடையாது.

வளைவிலேயே உருவத்திலும் மூர்க்கத்திலும் பெயர் பெற்ற நாயாக இருந்தது, டெரீஸா வீட்டு பாஞ்சாவைக் கவனித்துவிட்டு வரும் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு விசயங்களையாவது என்னிடம் சொல்வாள். ஒரு ஜெர்ஸிப் பசுவின் கன்றுக்குட்டியின் உயரத்தில் இருக்கும் அது என்றார் ராம். அதற்கு தனியான அவுட் ஹௌஸ் இருந்தது. ஹீட்டரும் ஏர்கண்டிஷனரும் இருந்தன. அதற்கு உஷ்ணம் ஆகவே ஆகாது. அரை முழத்திற்கு தொங்கும் நாக்கிலிருந்து வெளியே வழியும் எச்சில் அறையை முழுக்க ஈரமாக்கிவிடும். ஆஸ்துமா நோயாளியைப் போல் மூச்சு இரைக்கும். ஆனால், எவ்வளவு கொடுமையான குளிரும் அதற்குப் பிடிக்கும். குளிர் பூஜியத்திற்கு கீழே போனால் மட்டும் டை இல்லாமல் கம்பளி கோட்டு போட்டுக்கொண்டிருக்கும். சங்கிலியில் கட்டிப் போட்டு தோலாலான வாய்க்கூடையும் அணிவித்திருந்தார்கள். சங்கிலியை அறுத்துக்கொண்டு காற்று வாங்கக் கிளம்பிற்று என்றால் எதிர்படும் முதல் மனிதரைக் குதறுகிற குதறலில் மண்டையோடு மட்டுதான் மிச்சமிருக்கும். இதெல்லாம் தெரிந்த போது இனிமேல் வாக்கிங்கை டெக்கிலேயே வைத்த்க் கொள்ளலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

அந்த நாட்களில் தனு நிஷாவைப் பற்றி ராமிடம் ஒரு புகார் சொன்னாள். நீங்கள் சொல்லுங்கள் டாடி - நிஷ் ஒவ்வொரு நாளும் பாஞ்சாவை முத்தமிடுகிறாள். நிஷாவும் பக்கத்தி நின்றுகொண்டிருந்தது. ராம் நிஷியைப் பார்த்து, நாளொன்றுக்கு எத்தனை முத்தம்? என்று கேட்டார். ஐந்து அல்லது ஆறு, அதற்கு மேல் இல்லை என்றாள் நிஷா. பாஞ்சா இவளிடம் அதிக முத்தம் கேட்கிறது டாடி என்றாள் தனு. கொடுத்துப் பழக்கியிருக்கிறாள் என்றாள். ராம், நிஷியின் முகத்தை கூர்ந்து கவனித்தார். அதிகம் பேசுவதில் நம்பிக்கை இல்லாத நிஷி இமைகளைக் கொட்டாமல் மௌனமாக நின்றாள். முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இவளைப் பார்த்ததும் பாஞ்சா மேலே பார்த்து மின் விசிறியைப் போடச் சொல்கிறது, என்று தொடர்ந்து முடுக்கினாள் தனு. ராமின் உள்சிரிப்பு முகத்தில் தெரிந்தது. இந்த வாரக் கடைசியில் எல்லோரும் உட்கார்ந்து பேசி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் என்றார் அவர்.

அன்று தனுவுக்குக் காய்ச்சல். எந்த உடல் கஷ்டத்தையும் வெளியே சொல்லும் பழக்கமே இல்லாத அவள் சோபாவில் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பாஞ்சாவுக்கு உணவு தர கிரான்பாவை அழைத்துக்கொண்டு போ, தனியாகப் போகக் கூடாது என்று நிஷியிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி மருத்துவமனைக்குப் போய்விட்டாள் தைலா. என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். என்னுடைய துரதிருஷ்டம் அவளுக்குக் கேட்கத் தோன்றவில்லை.

மாலையில் நிஷ் முன்னே போக நான் பின்னால் போய்க்கொண்டிருந்தேன். நிஷ் மிகத் தைரியமான பெண். அவளை நம்பி சிங்கத்தின் கூண்டுக்குள்கூடப் போகலாம் என்று மனதிற்குல் சொல்லிக் கொண்டேன். பஞ்சாவைச் சந்திக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்த நேரத்திலேயே, அதன் குரைப்பு கேட்கத் துவங்கிற்று. நான் வருகிறேன் என்பது பஞ்சாவுக்குத் தெரிந்துவிட்டது என்றாள் நிஷ். கம்மிங் பாஞ்சா, கம்மிங் என்றாள் நிஷ் தனக்குத்தானே. பாஞ்சாவுக்குக் கேட்பது போல தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள். தனுவைப் பார்க்க முடியாததால் ரொம்பவும் வருத்தப்படும் கிரான்பா என்றாள்.

நிஷ் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவள் காலில் விழ்ந்து கெஞ்சத் தொடங்கிற்று பாஞ்சா. நான் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிஷா தியானம் செய்ய உட்காருவது போல் பாஞ்சா முன்னால் அமர்ந்து கொண்டாள். பாஞ்சா நிஷியின் காதை நக்கத் தொடங்கிற்று. வலது காதை நக்கிவிட்டு இடது காதை நக்க ஆரம்பித்தது. நிஷி அதன் கழுத்தை ஆவேசமாகக் கட்டிக்கொண்டு அதன் நெற்றியில் முத்தங்கள் சொரிந்தாள்

நான் ஜன்னலிலிருந்து கதவின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன்.

நிஷ் சுவரோரம் இருந்த பெரிய அலமாரியை மலக்கத் திறந்து போட்டிருந்தாள். ஏகப்பட்ட டப்பாக்கள். பெரிது பெரிதாக கண்ணாடிப் புட்டிகள். அலமாரியைத் திறந்ததும் பாஞ்சா சங்கிலியை அறுத்துவிடும் அளவுக்கு அதற்கு சாத்தியமான விட்டத்திற்குள் மாறி மாறிக் குதிக்கத் தொடங்கிற்று. பேபி, ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும் என்று செல்லக் கோபத்தில் சொன்னாள் நிஷ். பாஞ்சா முன் காலை நீட்டிப் படுத்துக் கொண்டு அழுவது போல குரல் எழுப்பிற்று. ந்ஷ் என்னைப் பார்த்து சின்னக் குழந்தை என்றாள். குழந்தையா? என்று நான் கேட்டேன். குழந்தைதான், இன்னும் எட்டு மாதம்கூட ஆகவில்லை என்றாள். எனக்கு ஒரு மனிதக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து வந்து எழுந்து உட்கார முயல்வது போல் ஒரு சித்திரம் மனதில் வந்து போயிற்று.

அந்த வருடம் நான் சற்று முன்கூட்டியே சாந்தா க்ரூஸில் இருந்து ஊருக்கு வந்துவிட்டேன். ஒரு நாள் தைலா போனில் அழைத்தபோது அவளிடம் பேசிய பின் தனுவிடமும் பேசினேன். நிஷியும் லைனில் இருந்தாள்.

கம்பெனி எப்படி நடக்கிறது அம்மா? என்று கேட்டேன்.

மிக நன்றாக நடக்கிறது கிரான்பா என்றாள் தனு.

முதல் ஆறு மாதத்தில் நல்ல லாபமா?

நல்ல லாபம், கிரான்பா என்று இருவருமே உரக்கச் சொன்னார்கள்.

தனு, என்னையும் ஒரு பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ள முடியுமா அம்மா ? என்று நான் கேட்டேன்.

சில வினாடிகள் மௌனம்.

உங்கள் சேவையைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இன்னும் கம்பெனிக்கு வரவில்லை, கிரான்பா என்றாள் தனு.

சரிம்மா, உங்க விருப்பம்.

கிரான்பா , கம்பெனி கணக்கில் உங்க பெயரில் பன்னிரெண்டரை டாலர் வரவாக இருக்கிறது என்றாள் தனு.

அது ஏன் ?

பாஞ்சாவுக்கு உணவு கொடுக்க ஒரு நாள் எனக்குப் பதில் நீங்கள் போனீர்கள், நினைவிருக்கிறதா கிரான்பா ? ஒரு மணி நேரத்திற்கு பனிரெண்டரை டாலர்கள்.

கொஞ்சம் சேர்த்துப் போடக்கூடாதா, அம்மா ?

இருவரும் ஒரே நேரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டது.

மிகக் கௌரமான சம்பளம் அது, கிரான்பா என்றாள் தனு.

சரி, உங்கள் இஷ்டம் அம்மா என்றேன் நான்.
------------------------------------------------------------
ஆகஸ்ட்டு - 2003 , கலிஃபோர்னியா

 
நன்றி : காலச்சுவடு பதிப்பகம் ( மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் (சிறுகதைத் தொகுப்பு) ,  தாஜ் ( satajdeen@gmail.com )