Showing posts with label உவைஸுல் கர்னீ. Show all posts
Showing posts with label உவைஸுல் கர்னீ. Show all posts

Tuesday, May 31, 2022

உவைஸுல் கர்னீ

இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எழுதிய ’இஹ்யாவு உலூமித்தீன்’ நூலிலிருந்து ஒரு பகுதி  - மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் (பாகவி) அவர்களின் விரிவுரையில் (நூல் : இம்மையும் மறுமையும்).

உவைஸுல் கர்னீயைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர் ஓர் இறை பக்தர்; சிறந்த அறிவாளி. வீட்டிலுள்ளவர்கள் அவரைப் பைத்தியக்காரர் என்றார்கள். வீட்டு வாசலில் ஒரு சிறு அறை நிருமாணித்திருந்தார்கள். அவர் அங்கேயே குடியிருந்தார்கள். வருடக் கணக்கில் அவர் முகத்தை மற்றவர்கள் பார்க்க முடியாத நிலை பரவிற்று. அவர் மிகச் சாதாரண உணவை உட்கொண்டார். கேட்பாரற்றுக் கிடக்கும் கந்தல் துணிகளைச் சேர்த்து யூப்ரடீஸ் நதியில் அலசிவிட்டு அணிந்து கொண்டார். சிறுவர்கள் அவரைக் கல்லால் அடித்தார்கள். அவர்களுக்கு அவர் கோலம் 'தமாஷா'ய் இருந்திருக்க வேண்டும்.


அவரைப்பற்றிதான் பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புக் கொடுத்தார்கள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். ''யமன் தேசத்திலிருந்து இறைவனின் மூச்சு வருகிறது'' என்று பெருமானார் (ஸல்) அவர்கள் சிலேடையாகக் கூறினார்கள். இது உவைஸுல் கர்னீயைப் பற்றிய முன்னறிவிப்பு என்பது அநேகரின் கருத்து. உமர் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஒன்று இதற்கு ஆதாரமாய் அமைந்திருக்கிறது.


ஆட்சிப் பொறுப்பேற்றதும் அவர்கள் முஸ்லிம்களை எல்லாம் ஒன்று திரட்டினார்கள். “உங்களில் இரக் தேசத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அவர்கள் எழுந்து நிற்கட்டும்!''


கூட்டத்தின் நடுவிலிருந்து சிலர் எழுந்து நின்றனர். 


"கூபா வாசிகளைத் தவிர்த்து மற்றவர்கள் உட்காருங்கள்.” 


சிலர் உட்கார்ந்தனர். 


“முராத் வகுப்பாரைத் தவிர்த்து மற்றவர்கள் உட்காருங்கள்!" 

இன்னும் சிலர் உட்கார்ந்தனர். 


''கர்னீகளைத் தவிர மற்றவர்கள் உட்காருங்கள்!''


இன்னும் சிலர் அமர்ந்தனர். இப்போது அந்தப் பெருந்திரளுக்கு மத்தியில் ஒரே ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார்.


''நீர் கர்னீயா? கர்ன் என்ற குடும்பத்தைச் சேர்ந்தவரா நீர்?” 


"ஆம்!” என்றார் நின்று கொண்டிருந்தவர்.


''உவைஸ் பின் ஆமிர் கர்னீயை உமக்குத் தெரியுமா?'' - இது கலீபாவின் கேள்வி.


''அமீருல் முஃமினின்! அவனைப் பற்றி நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அவன் ஒரு முட்டாள்; பித்தன். எங்கள் குடும்பத்தில் அவனைப் போன்ற அறிவிலி எவருமில்லை.


உமரின் கண்கள் கண்ணீரால் நனைந்தன. ''போதும் நிறுத்தும்... நீர் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டீர். ஆனால், பெருமானார் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி என்ன முன்னறிவிப்புக் கொடுத்திருக்கிறார்கள், தெரியுமா? தம் முடைய அன்பிற் குரியவர் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.


கூட்டத்திலிருந்து ஒருவர் துள்ளி எழுந்தார். ஹரம் பின் ஹய்யான் என்ற பெயருடைய அவர் உடனே கூபாவை நோக்கிப் புறப்பட்டார். அவர் மனத்தில் எப்படியாவது

உவைஸைச் சந்தித்துவிட வேண்டும் என்ற ஓர் ஆசை துளிர்விட்டு எறிந்தது.


கலகலவென்ற சப்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது புராத் நதி (யூப்ரடிஸ்). அதன் கரையில் உட்கார்ந்து 'உலூ' செய்து கொண்டிருந்தது ஓர் ஆண் உருவம். அடர்த்தியான தாடி, வழுக்கச் சிரைத்த சிரம். அனுதாபம் தேடும் முகம்-இந்த வர்ணனைகளுடன் காணப்பட்ட அந்த உருவம் தன் வேலையில் ஈடுபட்டிருந்தது. கண்கள் குழி விழந்திருந்தன. ஆனால், அவற்றில்தான் எத்துணைப் பிரகாசம்!


"அஸ்ஸலாமு அலைக்கும்!" என்றார் ஹரம்.


அந்த உருவம் வெடுக்கென்று திரும்பிற்று. ''வஅலைக்கு முஸ்ஸலாம்...'' ஒளி நிறைந்த அந்தக் கண்கள் ஹரமை எடை போட்டன.


ஹரம் நிதானித்துக்கொண்டு, கை குலுக்கும் எண்ணத்துடன் கையை நீட்டினார். பயனில்லை. உவைஸ் கைகொடுக்க மறுத்துவிட்டார்கள். அவர் அணிந்திருந்த உடை பார்ப்போர் மனத்தில் இரக்க உணர்ச்சியை உருவாக்கிற்று.


''உவைஸ்! நலம்தானே?” என்றார் ஹரம்.


''ஆம், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், ஹரம்?'' என்றார் உவைஸ்.


ஹரம் திடுக்கிட்டார். ஏனென்றால் உவைஸுக்கு ஹரமை அறவே தெரியாது. இதற்கு முன் ஒருவரையொருவர் சந்தித்ததும் கிடையாது. இப்படியிருக்கும்போது அவர் பெயர் எப்படி தெரிந்தது உவைஸுக்கு.


"ஒரு சந்தேகம்! என்றார் ஹரம், "என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரிந்தது? என் பெயரைச் சொல்லிக் கொடுத்தவர் யார்?''


உவைஸ் புன்னகை புரிந்தார்.


ஹரம் மீண்டும் கேட்டார். ''இப்போது தான் முதல் தடவையாக நாமிருவரும் சந்திக்கிறோம். என் பெயர் எப்படித் தெரிந்தது உங்களுக்கு?''


''இறைவன் அறிவித்தான்! நமக்கிடையில் நேரடிச் சந்திப்பு இல்லாவிட்டாலும், முஸ்லிம்கள் அனைவரும் ஒருவரை யொருவர் மானசீகமாகச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சந்திப்பு, உரையாடல் எல்லாம் மானசீகமாகவே நடைபெறுகின்றன.


இருவரும் வெகு நேரம் உரையாடினார்கள். கடைசியில் உவைஸ் கூறினார் : ''ஹரம்! இதுதான் நமக்கிடையில் கடைசிச் சந்திப்பு. இனிமேல் என்னைத் தேடிக்கொண்டு வராதீர்கள். இந்த மதிப்பும் பெருமையும் எனக்குப் பிடிக்காது... எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நான் உங்களுக் காகப் பிரார்த்தனை செய்கிறேன்...''


ஹரம் கூபாவை விட்டுப் புறப்பட்டார். சில சமயம் அவர் மனத்தில் உவைஸின் முகம் தோன்றுவதுண்டு. அப்போ தெல்லாம் அந்தக் கடைசிப் பேச்சை நினைத்துக்கொண்டு பேசாமலிருந்து விடுவார்.


''ஒரு நாள் அபரிமிதமான அன்பினால் உவைஸைப் பற்றிப் பலரிடம் விசாரித்தேன். அவரைப் பற்றி யாருக்குமே தெரியவில்லை !'' என்று வேதனையோடு கூறுகிறார் ஹரம்!


(பக் : 86-89)

*

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்