Monday, October 2, 2023

சிங்காவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், ரியாஸ்! - கவிஞர் சாம்ராஜ்

அனிஷா மரைக்காயர் (Mohamed Riyas) எழுதிய ‘சிகரி மார்க்கம்’ நூல் பற்றி எழுத்தாளர் சாம்ராஜின் விமர்சனம். ரியாஸின் ‘சிங்கா’ என்றதும் ஏதோ  சாமான் என்று நினைத்தேன். அல்ல, அது ஒரு சிறுகதை! - AB

*


பொதுவாக இஸ்லாமிய வாழ்வு, பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த எழுத்துகள் தமிழில் குறைவு. தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகிர் ராஜா, மீரான் மைதீன், ஆபிதீன் என்று உண்டென்றாலும் மொத்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்களின் தொகையோடு ஒப்பிடுகையில் இஸ்லாமிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே.

பிரதானமாக, இஸ்லாமிய எழுத்தாளர்கள் மாத்திரமே அவர்கள் எழுத்தை எழுதும் சூழல் உள்ளது. மலையாள சினிமாவில் காட்டப்படும் இஸ்லாமிய வாழ்வு அளவிற்குகூட இங்கு அது மையநீரோட்டத்தில் இல்லை. அங்கு ஒரு சாதாரண வெகுஜன சினிமாவில்கூட இஸ்லாமியப் பாத்திரங்கள் இயல்பாய் வந்து​போகும். இன்றும் இங்கு அதுவொரு ‘தனித்த’ பாத்திரம்தான்.சினிமாவே இப்படியிருக்க, இலக்கியம் இன்னும் தூரத்தி​லிருக்கிறது.

இப்படியான சூழலில் ரியாஸ் எழுதவருகிறார். இது அவருடைய இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்பு ‘அத்தர்’ சீர்மை வெளியீடாக வந்து கவனம் பெற்றது.

மொத்தம் ஒன்பது கதைகள் கொண்ட இந்த இரண்டாவது தொகுப்பில் எட்டு கதைகள் சமகாலத்திலும், ‘சிங்கா’ என்ற ஒரு கதை மாத்திரம் கடந்த காலத்திலும் நிகழ்கின்றன.

ரியாஸின் கதை உலகம் இஸ்லாமிய வாழ்வும் அதில் பெரும்பாலும் பாவப்பட்டவர்களின் பாடுகளுமாய் இருக்கின்றன. அப்படி ஒற்றைப் படையாய் சுட்டுவது ரியாஸின் மீதான வன்முறைதான்.பாவப்பட்டவர்களின் துயரத்தோடு, ‘உள்ளவர்களின்’ துயரமும் உள்ளது.

ரியாஸின் தனித்தன்மை முதன்முறையாக காவிரிப் பாசனத்திலிருந்து சற்று கீழே இருக்கும் கடற்புர இஸ்லாமிய வாழ்வை அதன் நுணுக்கங்களோடு துல்லியமாக முன்வைப்பதும், அதனோடு நின்றுவிடாமல் அந்த பிரதேசத்துக்காரர்களின் ஓட்டம்போல சிங்கப்பூர், மலேசியா என்று தன் கதைக்களத்தை விரித்துக் கொள்வதும்தான்.

பொதுவாக, பிழைப்புக்காக புலம்பெயர்ந்தவர்கள் எழுதும் கதைகளில் ஊர் குறித்தான ஏக்கங்களும், அங்கு ஒரு பொன்னுலகம் இருந்ததற்கான பாவனைகளும் இருக்கும். வாழும் நாட்டைப் பற்றிய ‘நான்காம் மாடி’ அவதானிப்பு கொண்ட கதைகளே அதிகம்.

நான்காம் மாடி அவதானிப்பென்பது, நான்காம் மாடி பலகணியில் நின்றுகொண்டு சாலையில் நடப்பவர்களை அவதானிப்பது.பொத்தாம் பொதுவான மனிதாபிமானக் கதைகள். சிங்கப்பூரில் உமா கதிரின் ‘ரோவெல் தெரு’ சிறுகதைத் தொகுப்பு இதற்கு ஒரு இனிய விதிவிலக்கு. தரையில் இருப்பவனை தரையிலிருந்தே பார்ப்பவை அவரது கதைகள்.

ரியாஸ் தன் கதைகளில் ஊர் குறித்தோ, தான் வாழும் நாட்டைக் குறித்தோ அப்படி எந்த மனமயக்கமும் பெருமிதமும் இன்றியே வாழ்வை முன்வைக்கிறார். அந்த வகையில், ரியாஸும் உமா கதிரும் ஒரு சாலை மாணாக்கர்கள். நுட்பமான விவரிப்புக்களைக் கொண்டது ரியாஸின் கதை உலகம்.

... கணக்குப்பிள்ளை நாசர் மூர்ச்சையாகிக் கிடந்தார். உடலை பள்ளிவாசலில் இருந்து தருவித்த மய்யத்துக்கான கட்டிலில் மாற்றி வைத்தவன், மய்யத்தைத் குளிப்பாட்டப் போவதாகவும் பெண்கள் அனைவரும் முற்றத்தை நீங்கும்​படியும் சத்தமாகக் கத்தினான் பெம்பலா. அவன்தான் இலந்தை இலை ஊறவைத்த அண்டா தண்ணீரில் சிறிது ஜம்ஜம் தண்ணீர் கலந்து கணக்குப்பிள்ளையின் உடலுக்கு ஏதுவாக வெந்நீர் கலந்து, நாள்பட்டுப் படுக்கையில் கிடந்த நாசரின் உடலை அவரின் முதுகுப் புண்களைக் கிழித்துவிடாத அளவு குவளையில் தண்ணீரை அள்ளி உடல் முழுதும் அள்ளி ஊற்றினான். நாசர் உடலை பின்பக்கம் திருப்பி ஆசனவாய்க்குள் தனது பெருவிரலை விட்டு நோண்டினான். ஆசனவாயில் இருந்து சிறிய மல உருண்டையை எடுத்து எறிந்தான். அவர் உடலை இறைவனிடம் பரிசுத்தமாக அனுப்ப வேண்டும் என்ற நோக்கில் மீண்டும் தன் விரலை ஆசனவாய்க்குள் விட்டவாறு குவளைத் தண்ணீரை ஊற்றிக்கொண்டே கூறினான், ‘அஷ்ஷஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ்’.

... செவத்தகனி கொழும்பு மருதானையில் படித்த காலத்தில்​தான் அலிமாப்பூ அவருக்கு அறிமுகம். செவத்தகனி வாப்பாவின் தாஜ் டீ ஹவுஸ் வெள்ளவத்தையில் வெகு செல்வாக்கு செலுத்தியிருந்த காலம். செவத்தகனி சிங்கள ஆக்களைப் போல் படிக்க வேண்டும் என்று செவத்த​கனியை கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார் செவத்தகனி வாப்பா. ஆனால் ஒருநாள் சிலோனில் இருந்து கோட்டை​யூருக்கு வரும் சரக்குப் படகு நெய்னார் சர்வீசில் செவத்த​கனியும் அலிமாப்பூவும் ஜோடியாய் வந்திறங்கினர். காங்கேசந்துறையில் இருந்து கோட்டையூருக்கு வந்திறங்கும் சரக்கு மெயிலில் செவத்தகனி ஜோடியாக வந்திறங்கினார் என்று செவத்தகனி வாப்பா அவரை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

... வழமையான நேரமாக இருந்தால் இந்நேரம் சர்க்கஸ் கூடாரம் களைகட்டியிருக்கும். க்ளோன் சேர், ரசியன் ரோப், காமிக் ஜாக்கிங், புல் பெண்ட் ரோலிங், அக்ரோபேட் ஸ்டேச், சைனீஸ் வாக்கிங் லேடர், டெத் குளேப், ரிங் ஷிப்-அப், டெத் எட்ஜ், ஸ்கை வாக், ஆப்பிரிக்கன் நெருப்பு நடனம், ரசியன் டிராம்போ, பிரமிட் இப்படி எண்ணற்ற கலைகளோடு மிருக வித்தைகளையும் மக்கள் கண்டுகளித்திருப்பார்கள். சிங்கம் காணாமல் போனதிலிருந்து பதட்டம் இருந்தாலும் அரசாங்கம் தினசரி புதிய கட்டுப்பாடுகளுடன் இரண்டு காட்சிகளை நடத்த அவர்களுக்கு அனுமதி தந்திருந்தது.

விசிலடித்ததும் தன் கால்களைத் தூக்கி மக்களுக்கு சலாம் போடும் பாமரனியன், டால்மியன், பாண்ட் நாய்கள், பாரசீகப் பூனைகள், ஓநாய்கள், நீர்யானை, வரிக்குதிரை, பஃபூன் குரங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாஷையில் பேசிக்கொண்டிருந்தது.

... பயம், தெய்வீகம் இரண்டும் கலந்த ஒன்றாக சங்கரனின் சர்க்கஸ் கூடாரச் சிங்கம் அந்நிய நிலத்தில் மாறிக்​கொண்டிருந்தது. சீன கம்போங்கிலோ கதை வேறு மாதிரி உருவெடுத்தது. புராணத்தில் வரும் நியென் மிருகம் மீண்டும் உலவுவதாக நம்பினார்கள். வீடுகளில் சிவப்பு விளக்கை ஏற்றிவைத்தார்கள். அவர்களது கிராமத்தை கொள்ளை நோய் ஆட்டியது. நோயில் மடிந்து​கொண்டிருந்​தவர்களில் சிலர் குணம் பெற்றது சர்க்கஸ் சிங்கம் தப்பித்துப்போன நாள்களில் நிகழ்ந்தது. முற்றாக அவர்கள் குணம்பெற்ற அடுத்தடுத்த நாள்களில் அம்மக்களே சர்க்கஸ் சிங்கத்திற்கு தாமாக முன்வந்து வைத்த பெயர்தான் ‘சிங்கா’.

... எந்த நாளில் இவ்வளவு கறார்தன்மையை உருவேற்றிக்​கொண்டாள் என்று தெரியவில்லை. மூன்றுமுறை கருத்​தரித்தும் கறுப்பும் சிவப்புமாக இரத்தக் கட்டிகள் வெளியாகி​விட்ட ஏதோ ஒரு நாளிலா? ஏப்புக்காட்டும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று தோன்றிய ஒரு நாளிலா? யாரையோ எடுத்து வளர்ப்பதற்கு பதிலாக தன் அண்ணன் மகனையே எடுத்து வளர்த்தாள். ஆசையசையாய் அவனுக்கு புதிய துணிமணிகள் வாங்கிப்போட்டு ‘செல்லான், செல்லான்’ என்றழைத்தவளை, அவன் பெரியவனானதும் ‘இங்கிரு மாமி... என்ன அங்கின உக்காராதே, இதை செய்யாதேனு பெரிய சட்டம் போடுற? நீ ஒன்னும் என்னய பெத்த உம்மா கிடையாது’ என்று சொன்னதும் அழுகையும் விம்மலுமாக ஹலிமா மனம் உடைந்து சுக்குநூறாக உடைந்துபோன ஒரு நாளிலா?

... பாதாம் துறைமுகத்தைச் சுற்றியும் கடல். தூரத்தில் எங்கோ பள்ளிவாசலில் தொழுகைக்கான அழைப்பு. தான் தவறவிட்ட பாதை கடலுக்குள் ஒரு பச்சை மினாரா நோக்கிச் செல்கின்றது.அவனுடைய அத்தா பள்ளிவாசலின் உள்விதானம் நிழல் படியும் தரையில், ஒரு விரிப்பில் முழங்காலிட்டுப் பிரார்த்திப்பவராகத் தெரிகின்றார். கடலின் ஓரத்தில் படகில் இருந்த மீனவன், வலையைத் தூக்கி கடலுக்குள் எறிகின்றான். வலை முக்காலத்திற்கும் அப்பால் போய் விழுகிறது. இனி என்றும் மீட்க முடியா தூரத்தில் போய் அவனுக்குள் விழுகின்றது. பாதை மெல்ல கடலுக்குள் சரிகின்றது. உண்மையில் மனிதனுக்கு இரக்கம், அன்பு, கருணை ஆகியவை அவனைத் தீண்டும்போது மனிதன் பலவீனமடைந்துவிடுகிறான்.

இப்படி நுட்பமாய் சிறுகதைகளை நெய்வதன் வழி ரியாஸின் கதை உலகம் நமக்கு அணுக்கமாகிறது.

இந்த தொகுப்பிலுள்ள ஒன்பது கதைகளின் சுருக்கத்தையும், பழைய ‘B.இரத்தின நாயக்கர் & சன்ஸ்’ வெளியீடுபோல விவரித்துக்கொண்டு போவதில் எனக்கு உவப்பில்லை. சாரமாக ரியாஸ் கதைகள் என்ன முன் வைக்கின்றன என்பதை சொல்வதே சரி. ரியாஸின் கதை உலகு துரோகம், கருணை, வன்மம், மிகுபுனைவு, வீழ்ச்சி, வாய்மொழி வரலாறு என விரிகிறது.

புதுமைப்பித்தன் 99 கதைகள் எழுதினார். அதற்குப் பின் வந்த எல்லோரும் அந்த நூறாவது கதையைத்தான் எழுத முயல்கிறோம் எனப் பகடியான வரியுண்டு. ரியாஸும் அந்த நூறாவது கதையை எழுத விரும்புகிறார் என்றே நான் நம்புகிறேன்.

நமக்கு கலையில் என்னதான் வேண்டும்? எது நம்மை ஈர்க்கிறது?  இந்தக் கேள்விகள் பதில் சொல்ல முடியாத அத்வைதக் கேள்வி​களோ இருப்பியல் கேள்விகளோ அல்ல.

கலை நம்மை ஆட்கொள்ள வேண்டுமென விரும்புகிறோம். அவை நமக்கு உள்ளே போய் நம்மை தொந்தரவுசெய்ய வேண்டுமென விரும்புகிறோம். அந்நிய நிலத்திலோ அருகிலோ சிந்தப்படும் குருதியில் நம் இரத்தமும் இருப்பதாக உணர விரும்புகிறோம். நம்மைத் தேடுகிறோம். பிரபஞ்சத்திற்குப் பொதுவான, மறுக்க முடியாத, நிரந்தரமான அறத்தைத் தேடுகிறோம். அங்கு ஏசு சிலுவையில் அறையப்பட்டால், நாம் வலப்பக்கம் பாரபாஸைத் தொங்கவிட விரும்புகிறோம்.

அப்பொழுதில் விமர்சகர்கள் வேண்டுமானல் ஏரோது மன்னனாக நின்று வேடிக்கை பார்க்கட்டும். நாம் கண்ணீர் விட விரும்பு​கிறோம். நம் கண்ணீரை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி அதைப் பரிசோதித்து வகைப்படுத்துவது பேதமை மிகுந்த விமர்சகனின் பணி.

நாம் கலையில் சரணடைய விரும்புகிறோம். அது-நாம் என்ற வேறுபாடின்றி அதனோடு கலக்க விரும்புகிறோம்.

தஸ்தயேவ்ஸ்கியை விட இவ்வுலகில் யார் மீது கூடுதலாக கண்ணீர் சிந்தப்பட்டிருக்கும்?! இன்றும் அவரின் கல்லறையில் கண்ணீர் நதியில்தான் நாம் மிதந்துகொண்டிருக்கிறோம்.

சிங்கா, நகுதா, ஏழாவது வானத்தில் வீடு, பெம்பலா — இந்த நான்கு கதைகள்தாம் என்னைப் பொறுத்தவரையில் இத்தொகுப்பில் ஆகச் சிறந்தவை.

கலையில் ஒரு கொடூர விதியிருக்கிறது. அதாவது, ஆக மோசமான வறுமையைக் கூட மிகுந்த கலையுணர்வுடனும் அழகியலுடனும்​தான் நாம் முன்வைக்க வேண்டும்.

கலைஞன் டப்பிங் ஆர்டிஸ்ட் அல்லன். அவன் அழவைக்க வேண்டுமேயொழிய அவனே அழக்கூடாது. டப்பிங் ஆர்டிஸ்டுகள் நிறைந்த இக்காலத்தில் மிகுந்த கவனமாய் இருக்க வேண்டி​யிருக்கிறது. குழந்தையைக் கிள்ளிவிட்டு கிள்ளியவர்களே அழும் காலம் இது.

இந்தக் கதைகளில் ரியாஸ் நம்மை தொந்தரவு செய்கிறார். கதையை வாசித்த பின், அன்றாடத்திற்குள் நம்மால் உடனடியாக நுழைய முடியவில்லை. நாம் கோட்டையூர் தர்காவின் வாசலிலோ, 1950​களின் சிங்கப்பூரில் விமலா சர்க்கஸிலோ நிற்கிறோம். பெரியம்மா நம் கைபிடித்து சந்தனக்கூட்டிற்கு அழைத்துப் போகிறாள். சீனன் வளர்க்கும் மலைப்பாம்பு நம் மீது ஊர்ந்துசெல்ல, பெம்பலா நம் காதருகே வந்து புலம்புகிறான். துரோகத்தின் நாணயங்களை வீசி எறிய ஹலீமா எதிரே வந்துகொண்டிருக்கிறாள்.

நிழல் சிறுகதை நாவலாய் விரிய வேண்டியது. மலே பாஜு சிறுகதை இந்த தொகுப்பின் குழுப் புகைப்படத்தில் கூச்சப்பட்டுக் கொண்டு நிற்கிறது. ரியாஸிடம் நாம் எதிர்ப்பார்ப்பது மலே பாஜுக்களை அல்ல.

ரியாஸ் நமக்கு புதிய நிலப்பரப்புகளையும், வாழ்முறைகளையும், பிரச்சனைகளையும் காட்டுகிறார். அவை தமிழுக்குப் புதியவை. கலையின் நியாயத்தைக் கைவிடாதவையாகவும் இருக்கின்றன. அதுவே ரியாஸிடம் நம் எதிர்ப்பார்ப்பைக் கூட்டுகிறது.

1950களில் நிகழும் சிங்கா கதையில் தொலைந்த சிங்கம் கடைசிவரை பிடிபடாமல் ஓரு தொன்மாக மாறிவிடுகிறது. சந்தா சாகிபு வீட்டில் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கையுண்டு. அந்த சிங்கம் சந்தா சாகிப் வீட்டிலிருந்து தப்பி ரியாஸ் வீட்டில் தலைமறைவாக அல்லது குரல் மறைவாக வாழ்வதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த தொன்ம சிங்கம் ரியாஸுக்கு இன்னும் நிறைய கதைகளை வழங்கட்டும். அந்த சிங்காவை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ரியாஸ். சிங்கா இருக்கும்வரைதான் நாம். அல்லது, நாம் இருக்கும் வரைதான் சிங்கா.

மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ரியாஸ்!

ஆன்லைனில் ஆர்டர் செய்ய: https://www.commonfolks.in/books/d/sigari-maarkkam

📞 வாட்ஸ்அப்பில் ஆர்டர் செய்ய: +91-755017476

*

நன்றி : கவிஞர் சாம்ராஜ்






*

தொடர்புடைய ஒரு சிறுகதை :

நகுதா - முஹம்மது ரியாஸ்

Monday, August 28, 2023

மன்னிப்பு (சிறுகதை ) - நாகூர் ரூமி



மன்னிப்பு - நாகூர் ரூமி


சாயங்காலம் ஆரம்பித்த வேதனை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான். கால்வலிக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. என்றாலும் எங்கோ நெருடுவதை அவனால் உணர முடிந்தது.


வலது பாதத்தைப் பார்த்தான். பெரு விரலிலிருந்து கணுக்கால் வரை வெட்டி எடுத்து விடலாம் போலத் தோன்றியது. ஆயிரம் கோடாரிகளை வைத்து யாரோ உள்ளே கொத்துகிறார்கள். நின்றால், நடந்தால் ம்ஹூம் சாயங்காலத்திலிருந்து விரலைக்கூட அசைக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. எப்படிச் சொல்வது? பாட்டிக்கு மட்டும்தான் தெரியும். அவள் 'அப்பவே சொன்னேனே' என்று அரற்ற ஆரம்பித்து விட்டாள். பாட்டியின் புலம்பலை ஒரு முறைப்பு அடக்கிவிடும். ஆனால் மனசாட்சியின் புலம்பலை? சாயங்காலத்திலிருந்தே அவனது அறிவு சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து கிடக்கிறது. மீசையில் மண் ஒட்டிவிடுமே என்று சமாளித்து வந்தான். இனிமேல் முடியாது.


பாட்டியின் நாற்பது வருஷ மூடநம்பிக்கைகள் பச்சிலை உருவில் பாதத்தில் தேய்க்கப்பட்டனவே தவிர, வலி குறையவில்லை. பாட்டியின் நம்பிக்கை பச்சிலையாகக் காய்ந்து, உதிர்ந்து விட்டிருந்தது. ராமநாதன் சில தைலங்களின்மீது நம்பிக்கை வைத்திருந்தான். அதில் சிங்கப்பூர் 'கோடாலி' தைலமும் ஒன்று. அவனைப் பொறுத்தவரை அதுவும் சர்வரோக நிவாரணி மாதிரி. அதையும் காலில் கொட்டியாயிற்று. விறுவிறுவென்று ஏறியதே தவிர, பாதத்தினுள்ளே நரம்புகளுக்குப் பதில் அக்கினிக் கட்டிகள் தான்.


ஈஸிசேரில் சாய்ந்தபடி காலைத் தூக்கி எதிரிலிருந்த கட்டிலில், மெத்தைமீது போட்டுக் கொண்டான். கொஞ்சம் வசதியாக இருந் தாலும் கோடாரிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.


ராமநாதன் தன் நண்பன் ரவியின் உபாயத்தைக் கையாண்டு பார்த்தான். உடலில் எங்காவது அரித்தால் ரவி சொறிய மாட்டான். மனதின் திடத்தன்மைக்கு உடனே ஒரு போட்டி. 'அரிக்கிறாயா...ம்... அரி... எவ்வளவு நேரம் அரிப்பாய்... பார்க்கிறேன்... நான் சொறியவே மாட்டேன்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்து கொள்வான். தோலின் தினவையும் நகங்களின் பரபரப்பையும் அவன் மனம் வெற்றி கொள்வதை ராமநாதன் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறான். அதை நினைத்துக்கொண்டான். 'வலிக்கிறாயா... பார்ப்போம்... எவ்வளவு நேரம் வலிப்பாய்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்துகொண்ட கனமே அது சுக்கு நூறாய் உடைந்து போனது. ஆயிரம் ரவிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத வலி.


நத்தைபோல் வந்தது இரவு. ராமநாதன் முனங்க ஆரம்பித்தான். பாட்டி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள். ஒருமுறை முறைத்து, “உடனே டாக்டர் சீனிவாசனை வரச்சொல்லி ஃபோன் பண்ணு," என்றான்.


'அப்பவே சொன்னனே... மாரியாத்தாட்ட விளையாடாதடான்னு'' - போகும்போதும் புலம்பிக் கொண்டே சென்றாள் பாட்டி.


மாரியாத்தா, நகங்களும் மீசையும் கொண்ட மாரியாத்தா! சே... என்ன அறிவு கெட்டவர்கள் என்று நினைத்தான். வலி அதிகமாகியதுபோல் இருந்தது. கண்ணை மூடிக் கொண்டான். பல்லைக் கடித்துக் கொண்டான்.


சீனிவாசன் வந்தார். பாதத்தைத் தட்டிப் பார்த்தார். திருப்பினார் அப்படியும் இப்படியும் சுண்டினார். கடைசியில் ராமநாதனிடம், 'வாட் ஹாப்பண்ட் ஆக்ச்சுவலி?" என்றார். இப்போது என்ன சொல்வது? ஒரு கணம்தான். தயக்கம் உணரப்படுவதற்குமுன் பதில் சொல்லிவிட வேண்டும்.


"காலை உதறினேன். சுவரில் இடித்துவிட்டது''. பாட்டியைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்துக் கொண்டான். அவள்தானே ஒரே சாட்சி. சாட்சியும் மௌனித்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே.


"இடிச்சுதுன்னா சொல்றே?" வீக்கமே இல்லையே?" ஆச்சரியப்பட்டார் சீனிவாசன். 'ஓகே... ஒரு ஆயின்ட்மென்ட் தாரேன், தடவிக்கோ" என்றார்.


''சார்... இரவு நான் எப்படியாவது தூங்கணூம்."


'ஏன், அவ்வளவு வலிக்கிறதா?” என்று கேட்டு ஒரு இன்ஜெக்சன் போட்டார்.


ஊசி போட்ட வலியை உணர முடியவில்லை. இமைகள் லேசாக கனத்தன. டாக்டர் காலையில் வருவாராம்.


மனத்தில் அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடந்தது.


வீட்டுக்குள் வந்தபோது பாட்டியைத் தவிர யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் சிதம்பரம் கோயிலுக்கு. பாட்டி அடுப்பங்கரையில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தான் ராமநாதன். ஓசைப்படாமல் வழக்கம்போல. அப்போது தான் அது நடந்தது.


பாட்டியின் பக்கவாட்டில் எவர்சில்வர் ப்ளேட்டில் மல்லிகைப் பூவாய்ச் சாதம். பாட்டி திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தாள். அவள் பார்க்காதபோது, சோற்றில் வாயை வைத்து நக்கிக் கொண்டிருந்தது மாரியாத்தா. மாரியாத்தா, வீட்டுப் பூனை. பாட்டியின் செல்லப் பூனை. பாட்டி வைத்தபெயர். பாட்டியின் இஷ்ட தெய்வம் மாரியாத்தா. இஷ்டத்துக்குச் சாதத்தை எச்சில் பண்ணிக் கொண்டிருந்தது.


ராமநாதனுக்குப் பூனைகள் என்றாலே கால்கள் பரபரக்கும். நக்கும் சுவாரஸ்யத்தில் மாரியாத்தா இவனைக் கவனிக்கவில்லை. மெல்ல மெல்லப் பூனைபோல் ஓசைப்படாமல் நடந்து அதனருகில் சென்றான்.


அதன் வயிற்றுக்குக் கீழ் தன் வலது பாதத்தை நுழைத்தான். பாட்டி திரும்பிக் கொண்டிருந்தாள். அதற்குள் காரியத்தை முடித்து விடவேண்டும். இல்லையேல் சத்தம் போட்டுக் கிழவி காரியத்தைக் கெடுத்துவிடுவாள். இந்தச் சனியன் பிடித்த பூனை இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது.


கால் பந்தை 'கோல்' நோக்கி உதைப்பதுபோல ஒரே எத்து. பூனை எதிரே இருந்த சுவரில் 'டக்' என்ற ஒலியுடன் பயங்கரமாக மோதிக் கீழே விழுந்தது. விழுந்தபோது 'மோவ்' என்று பரிதாபகரமான ஒரு ஒலியை எழுப்பியது. அந்த ஒலி ராமநாதனைச் சற்றுப் பயமுறுத்தியது. பின்பு பூனை ஓடிவிட்டது.


பாட்டி பார்த்துவிட்டு, "அடப்பாவி! மாரியாத்தா சூலிடா, அடப் படுபாவி” என்று பதறினாள்.


சூல்கொண்ட மாரியாத்தா. ராமநாதனுக்கும் சற்றுப் பாவமாக இருந்தது. அவசரத்தில் வயிற்றின் உப்பலைக் கவனிக்கவில்லை. 


''சரி ...சரி ...இந்தச் சோத்தை வெளியிலே கொட்டு... மாரியாத்தாவாம் மாரியாத்தா...” என்று திட்டிவிட்டு வந்ததுதான். அரைமணியில் ஆரம்பித்தது வலி.


திடீரென்று விழிப்பு வந்தது. மணி பார்த்தான். இரவு ஒரு மணி. வீடு பாட்டியோடு சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவனோடு சேர்ந்து வலது பாதம் விழித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் கோடரிகள்.


ஒரு யோசனை தோன்றியது. அப்படிச் செய்துவிட வேண்டியது தான் என்ற முடிவோடு எழுந்தான். ஹாலின் கிழக்கு மூலையில் உள்ள அலமாரிக்குப் பின்புறம்தான் மாரியாத்தாவின் குடித்தனம். இந்நேரம் அங்கிருக்கிறதோ என்னவோ.


ஹால் விளக்கைப் போட்டான். அலமாரிக்குச் சென்றான். பின்னால் பார்க்கப் பயம். மாரியாத்தா மேலே பாய்ந்து விடுமோ?


மெதுவாக எட்டிப் பார்த்தான். மாரியாத்தா குட்டிகள் ஈன்றிருந்தது. இரண்டு குட்டிகள். வெள்ளையும் சாம்பலுமாய். குட்டிகளை நக்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை நுழைத்தான். இவனைப் பார்த்தவுடன் பளபளக்கும் கண்களுடன் போருக்குத் தயாராவதுபோல் எழுந்து நின்றது.


ராமநாதன் என்ன ஆனாலும் சரியென்று மண்டியிட்டு அமர்ந்தான். மிகுந்த சிரமத்துடன் இரு கைகளையும் குவித்து வணங்கினான். வார்த்தைகள் பயனற்றுப் போயின. கரகரவென்று கன்னங்களில் சூடாகக் கண்ணீர் வழிந்தோடியது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தானென்று தெரியாது. 'சரி போ' என்று மாரியாத்தா உத்தரவு கொடுத்ததுபோல் இருந்தது. எழுந்து வந்து, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.


காலையில் காப்பியுடன் பாட்டி எழுப்பினாள். விசாரித்தாள். ராமநாதன் பாதத்தைப் பார்த்தான். கோடரிகள் புதைக்கப்பட்டிருந்தன. வலி இறந்து விட்டிருந்தது. உற்சாகமாகப் பாதத்தை ஆட்டிக் காட்டினான். பாட்டி வாஞ்சையாகத் தலையைக் கோதினாள். அறைக்குள் பார்வையை ஓட்டினான் ராமநாதன். அறை வாசலில் நின்று மாரியாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.

*

(குமுதம் 27.8.1987)

*

நன்றி : மாரியாத்தா &  நாகூர் ருமி

Friday, August 11, 2023

Soul Searcher - L Shankar

பேஸ்புக்கில் வாசு பாலாஜி :

முதல் முதல்ல இசையமுதம்ல 74 வாக்குல ஓட்டை ட்ரான்ஸிஸ்டர்ல குப்புறப் படுத்து ரெண்டு கையும் குழிவா வச்சு காதைப் பொத்திக்கிட்டு (ஸ்டீரியோ எஃபக்ட் வரும்) வயலின் ட்ரையோ எல்.வைத்தியநாதன், எல். சுப்ரமணியம், எல். ஷங்கர் பஞ்சநடை வர்ணம் கேட்டதும் வேலைக்குப் போனதும், கேசட் ப்ளேயர் வாங்குனதும்னு பக்கெட் லிஸ்ட்ல போட்டது. அப்புறம் கேசட் பைத்தியம் புடிச்சதும் ரெகார்ட் ஸ்டூடியோவா அலைஞ்சும் கிடைக்கலை. 

அப்புறம் சக்தி க்ரூப்ல சிலதெல்லாம் கிடைச்சாலும் என்னமோ நிறைவில்லை. 

ஒரு நாள் டாரண்ட்ல தேடுவோம்னு தேடுனா எல். ஷங்கர் மட்டும் கிடைச்சது. ஆபேரி, கீரவாணி, சங்கராபரணம்னு எல்லாம் ராகம் தானம் பல்லவி. டபுள் வயலின்ல ஆபேரி, கீரவாணி, முக்கியமா சங்கராபரணத்துல கூடவே பாடி வாசிக்கறது கேட்டதும் கூஸ் பம்ப்ஸ். அய்யோ இந்த மனுஷன் முழுசா பாடிண்டே வாசிச்சா எப்படி இருக்கும்னு ஏக்கமாவே இருந்தது. 

நடுவுல தேடறப்போ எல். ஷங்கெர்னு போட்டு சிலது கிடைச்சது. அதுலயும் ஒரு 55 நிமிஷ கான்ஸர்ட். விக்கு, ஜாஹீர் ஹுசேன் முந்தா நேத்து கிடைச்சது. வழக்கம் போல இங்க ஷேர் பண்ணேன். நோ டேக்கர்ஸ். அப்படியே கிடைக்கிறதெல்லாம் பார்த்துட்டிருந்தேன். எல்லாம் வெள்ளக்காரப் பயலுவ கலக்ஷன். 

இப்ப சாப்பிட்டு வந்து உட்கார்ந்தேன். எவனோ ஒரு வெள்ளக்காரப் பாவி சைட்ல ஸோல் செர்ச்சர் எல் ஷங்கர்னு போட்டிருந்தான். ரெண்டு விஷயம் கிடைச்சது.

1. எல் ஷங்கர், ஷங்கெர்னு மட்டும் தேடுனா போறாது. லக்ஷ்மி நாராயணன் ஷங்கர்னும் தேடணும்.

2. என்னப்பா கேட்ட. முழுசா பாடியும் கேட்கணுமா. இந்தான்னு 50 நிமிஷம் காபி ராகம் தானம் பல்லவி. 

3. இன்னைக்கு ஆடிக் கிருத்திகையா. முருகன் பாட்டு

புடிச்சி 320க்கு கன்வர்ட் பண்ணி இறக்கியாச்சு. 😄

*

Thanks to : Aljosha Thomas / Nicodemus  & Vasu Balaji


Friday, July 7, 2023

ஃபோன் நகரம்‼️ (சிறுகதை) - எஸ்.எல்.எம். ஹனீபா


ஃபோன் நகரம்

எஸ்.எல்.எம். ஹனீபா

அவன் அமரனான் : அவன் பொன்னகரம் படைத்தான் - நான் ஒரு போன் நகரம் எழுதினேன்..

வீட்டின் முற்றம் முழுவதும் விதவிதமான பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கும். அதிகாலையில் பனிகுளித்து, முகங்களில் அழகும் மணமும் துளிர்த்து புத்தம்புதிய மணமகள் போல நிற்கும் அந்தப் பூஞ்செடிகளைத் தினந்தினம் தரிசித்துத் திழைத்து நிற்கிறேன்..

அன்றும் வழக்கம்போல நிற்கிறேன், எனது பத்துவயதுச் செல்லக்குட்டி பாடசாலைக்குப் போக  ! அவளை தரிசிக்க.... 

அதோ வருகிறாள் எனது சசிக்குட்டி. அவளுக்குப் புன்னகையே முகமாக வாய்த்துள்ளது, அத்தனை அப்பாவித்தனமும் குறும்பும் நிறைந்த, நிலவில் வடித்த பேரழகு முகம் அவளுக்கு..

"ஹாய் அங்கிள் ! குட் மோர்னிங்"

"குட் மோனிங், குட் மோனிங்.. வாடா செல்லம்.. எப்டி இருக்காய் ?" - கேட்டுக்கொண்டே அந்தக் கணத்தில் பிறந்த ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பூஞ்செடிகளைப் பார்த்தேன்.. மிகவும் அழகானவை அந்தப் பூக்களா அல்லது எனது சசிக்குட்டியா ? சந்தேகம் கலைந்தது, சசிக்குட்டிதான் பேழகு ! 

அவள் பாடாசாலைக்குப் போகும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு வகையான பூக்களில் ஒன்றைப் பறித்துக் கொடுப்பேன். அன்றும் அவளுக்கு ஒரு ரோசா மலரைப் பறித்துக் கொடுத்தேன்..

முத்துப் பற்கள் பளிச்சிட "தேங்க் யூ அங்கிள், Bye.." 

எனக்கும் அவளுக்கும் இடையே இந்தச் சந்திப்புத் தினமும் நடக்கும்.. 

மாலை நேரங்களில் அவள் ஓதல் பள்ளிக்குப் போவாள். அப்போது சற்று வெயில் நேரமாக இருப்பதால் நான் கொஞ்சம் வீட்டுக்குள் சாய்ந்து கிடப்பேன். சொந்த வீட்டுக்குள் வருவதுபோல எனது அறைக்குள் வருவாள். படுத்துக் கிடக்கும் எனது கைகளைப் பற்றி, கைகுலுக்கிவிட்டுச் செல்வாள். சிலபோது எமது கைகளில், நெற்றியில், தலையில் முத்தமிட்டுச் செல்வாள். அந்த வயதில் எனக்கொரு மகள் இருந்து அவள் இதையெல்லாம் செய்தால் எத்தகைய உணர்வுகள் ஏற்படுமோ அதே உணர்வுகளைத்தான் சசியின் செய்கைகளும் எனக்குள் ஏற்படுத்தின. 

அவளுக்குச் சிறுசிறு பொருளாதாரத் தேவைகள் ஏற்படும். படிப்புச் செலவுகள், பாடசாலை உபகரணங்கள் வாங்க என்று என்னிடம் எப்போதாவது காசு கேட்பாள், அதையும் உரிமையோடு கேட்பாள். கொடுத்து உதவுவேன்.

வருடங்கள் அவளை முன்னோக்கி நகர்த்தி வந்தன. வேகமாக, அழகாக வளர்ந்து வந்தாள்.

ஒருநாள் மாலை நான் அறையில் சாய்ந்து கிடந்தேன். சசி திடீரென ரெண்டு பையன்களோடு எனது அறைக்குள் வந்தாள். ஓதல் பள்ளி போகிற வழியில் வந்திருக்கிறாள். அந்தப் பையன்களில் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஒருவனைச் சுட்டிக்காட்டி "அங்கிள், இவனைத்தான் நான் லவ் பண்றேன்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாகப் போயிற்று. இந்தச் சசிக்குட்டி அவ்வளவு வளர்ந்து விட்டாளா இப்போது ? எனக்குள் ஒருவிதமான பிரிவுத் துயரமும் அவளது வாழ்க்கை குறித்த அச்சமும் தோன்றிற்று... 

மாலை நேரங்களிலும் அவள் எங்காவது போகும்போது என்னையும் கூப்பிடுவாள். இருவரும் இரண்டு சைக்கிள்களில் சவாரி போவோம் கண்டதையும் பேசிச் சிரித்தபடி... பாடசாலையில் நடக்கும் சுவாரஷ்யமான விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பாள்.. அவளுக்குள் அப்போது பால்யபருவக் காதல் உணர்வுகள் முனைப்புற்றிருந்தன.. அவளது 'லவ்வர்' பையன் தூரத்தில் தென்பட்டதும் எனக்குச் சைகை காட்டி, என்னைக் 'கழற்றி விட்டுவிட்டு' அவனை நோக்கிச் சைக்கிளில் பறந்துவிடுவாள்.. 

அப்போது அவள் முன்னைய பையனை விட்டுவிட்டு இன்னொரு பையனுடன் நட்பாகி இருந்தாள். அது குறித்தும் அவளிடம் கேட்டேன். "என்னடி சசி, ஆளை மாத்திட்டியா ? 

"அவன் சரில்லை அங்கிள், என்னை விட்டுட்டு இன்னொருத்தியப் புடிச்சிட்டான், எனக்கென்ன ஆளா பஞ்சம், நானும் ஆள மாத்திட்டன்" என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.! 

இவள் தொடர்ந்து நன்றாகப் படிப்பாளா ? பொறுப்புடன் நடந்து கொள்வாளா ? வாழ்க்கையில் சறுக்கி விடுவாளா ? என்ற கேள்விகள் என்னை அடிக்கடி துளைத்தெடுத்தன.

ஒருநாள் மாலை பாதையில் என்னைச் சந்தித்தவள் திடீரென "அங்கிள், எனக்கொரு ஐயாயிரம் ரூபா காசு வேணும்" என்றாள். நானோ திடுக்கிட்டுப் போனேன்.

"என்னத்துக்குச் சசி உனக்கு இப்ப இவ்வளவு காசு ? என்ன அவசரம் ?" என்றேன்.

"நான் நாலைஞ்சி பொடியன்மார லவ் பண்ணிட்டன் அங்கிள்.. எல்லானும் ஏமாத்திப்போட்டு விலகிட்டான்கள். இப்ப இருக்கிறவனும் போய்ருவானோ எண்டு பயமாக் கிடக்குது, அவனும் இல்லாம எனக்கு இரிக்க ஏலாது. வாற கிழம அவன்ட பிறந்த நாள். அவனுக்கொரு ஃபோன் வாங்கிக் குடுக்கணும்,  அவனும் அதத்தான் கேட்கான் அங்கிள்.. எப்டியாவது வாங்கிக் குடுக்கத்தான் வேணும், அதுக்குத்தான் ஐயாயிரம் ரூபா வேணும்" 

நான் சிலையாகிப் போனேன் ! இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் ! இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறது ? சசியைப் பற்றிய ஒரு பேரச்சம் எனக்குள் பொங்கிப் பிரவாகித்து வெடித்தது ! 

"உன்ட நெலெம எனக்கு விளங்குது சசி.. ஆனா இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோன்னுதான் கவலையாக் கிடக்கு. நீ அவனுக்கு போன் வாங்கிக் குடுக்க நினெக்கிறதுல தப்பில்ல.. நான் பென்ஷன்காரன், ஒனக்குத் தெரியும்தானே சசி, இருநூறு முன்னூறுன்னா எடுத்துக்கேலும்..

ஐயாயிரத்திற்கு ஒடனமே எங்க போற நான்.. அதான் கவலையாக் கிடக்குது..." - நான் மிகுந்த சங்கடப் பட்டேன்.

கொஞ்ச நேரம் நெற்றியில் கோடுகள் படர, புருவங்களைச் சொருக விட்டு எதையோ கடுமையாகச் சிந்தித்துத் தலை நிமிர்ந்தவள், "சரி அங்கிள், பரவாயில்லை, நான் சமாளித்துக் கொள்றன்" என்று சொல்லி என் வயிற்றில் செல்லமாகத் தட்டிவிட்டுப் புன்னகையுடன் போய்விட்டாள். 

அவளது பாடசாலைக்கு அருகில் ஒரு ஃபென்சி ஸ்டோர் கடை இருந்தது. கடைக்காரர் தமிழ்ப் படங்களில் வரும் வில்லன்கள் போலிருப்பார். அண்டா வயிறு, பருத்த ஷரீரம், காட்டுத்தனமாக வளர்ந்துகிடக்கும் அரைவாசி நரைத்த தாடி, கழற்றாத தொப்பி, அஞ்சி நேரத் தொழுகையாளி, அஷில் முஸ்லிம், பெயர் நன்றாக நினைவில் உள்ளது, சொல்ல மாட்டேன். 

அந்தக் கடைக்கு சசி அடிக்கடி போவாள். பாடசாலை உபகரணங்கள் வாங்குவாள். அவள் கடைக்கு வந்தால் கடைக்காரர் குளிர்ந்துபோவார். பொருள்களை அவசரமாகக் கொடுத்து அனுப்பாமல் இழுத்தடிப்பார். அவளைச் சீண்டிவிட்டுப் பேச்சுக் கொடுத்துக் கலாய்ப்பார். பொருள்களைக் காட்டும் சாட்டில் கைகளைத் தொடுவார், தேவையில்லாமல் உரசிக்கொண்டு நிற்பார், பட்டும்படாத மாதிரி அவளது மார்பில் பிஷ்டங்களில் உதடுகளில் தட்டி, வருடி விடுவார்.. இவற்றையெல்லாம் அவள் கண்டுகொள்ளாமல் இருப்பாள், போகும்போது அவரிடமிருந்து இலவசமாகக் கிடைக்கும் டொஃபி, சுவிங்கம் மாதிரி அற்பச் சந்தோஷங்களுக்காக ! 

கடைக்காரரின் இந்தக் குஷால் செய்கைகள் பற்றியெல்லாம் சசி என்னிடமும் சொல்லியுள்ளாள். அந்த மனிதன் ஒரு புழுவைப் போல என மனக் கண்களில் தோன்றி மறைவார்...

என்னிடம் ஐயாயிரம் ரூபா கேட்ட அன்றைய தினம் மாலை சசி அந்தக் கடைக்குச் செல்கிறாள்...

வெற்றிலைக் கறைபடிந்த கோரமான பற்களைக் காட்டிச் சிரித்து வழிந்து சசியை வரவேற்கிறார்.

"மாமா, எனக்கொரு ஹெல்ப் பண்ணுவீங்களா..?"

"உனக்கில்லாத ஹெல்ப்பாடி செல்லம்.. சொல்லன் பார்ப்பம், உனக்காக நான் என்னெண்டாலும் செய்வன்.." சொல்லிக்கொண்டே அந்தப் புழு சசியின் கைவிரல்களைப் பிடித்து மெல்ல அழுத்துகிறது... 

"மாமா, வாப்பா வெளிநாட்டுல இரிந்து வாற மாசம் காசி அனுப்புவாங்க, காசி கிடைச்சதும் தந்துர்றன்..  எனக்கொரு ஐயாயிரம் ரூபாய் காசி கடனா தருவீங்களா..?

" என்ன புள்ள, இப்டி சிம்ப்பளா ஐயாயிரம்னு கேட்காய்.. பெரிய தொகையாச்சே.. எப்டி தாற சின்னப் புள்ள உன்னய நம்பி..?"

"என்ன மாமா.. சும்மா கதய வளக்காதீங்க, நான் பெரிய புள்ளயாகி மூணு வரிசம் இப்ப ! வாற டிசம்பருக்கு ஓ.லெவல் எழுதப் போறன், காசி தர ஏலுமா ஏலாதா, அவ்ளோதான் கத !"

"டியே, டியேய். கோவிச்சுக்காதடீ, இப்ப லாச்சிக்குள்ளால அவ்ளோ காசில்ல, அந்திக்கி யாவாரம் நடந்துதான் காசி சேரணும். நீ கவலப் படாத, நாளெக்கி ஸ்கூலுக்கு கொஞ்சம் நேரத்தோட வா, நான் சுபஹ் தொழுதிட்டு வந்து கொஞ்சம் சாஞ்சி கிடப்பன், கட துறக்கிறதுக்கு கொஞ்சம் முந்தி ஒரு 6.45 க்கிப் போல வா, கடக்கிப் பின்னால் வந்து கதவ தட்டு, நான் எழும்பி கதவ தொறந்து நீ கேட்ட காச தாறன்" என்று சொன்ன புழுவின் கண்கள் சசியின் மார்புகளின் மீது பரவுவதை சசி அவதானித்தாள்... அவளுக்கு உள்ளேயும் ஏதோ செய்வதாக உணர்ந்தாள்..

"சரி மாமா, நான் காலைல வாறன் .."  என்று நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து ஒரு யோகர்ட்டைத் திணித்தது புழு.

இன்று கையைப் பிடித்து இழுத்த இழுப்பில் நாளை காலை தனக்கு நடக்கப் போவதை நன்றாக உணர்ந்துகொண்டாள்.

மறுநாள் காலை 6.45 மணிக்குக் கடைக்குள் நுழைந்த சசி 7.00 மணிக்கு வெளியே வந்தாள்... 

சீருடையையில் கசங்கி இருந்த இடங்களை, பர்தாவை தடவிவிட்டுச் சரிசெய்தவாறே கைக்குட்டையால் உதடுகளையும் கன்னங்களையும் அழுத்தித் துடைத்தவாறு பாடசாலை 'கேட்'டை நெருங்கினாள்...

'கேட்' அருகில் நின்றுகொண்டிருந்த அவளது 'லவ்வ'ரின் கைக்குள் அந்த ஐயாயிரத்தை வேண்டா வெறுப்பாகத் திணித்துவிட்டு, அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் பாடசாலைக்குள் நுழைகிறாள்...

*

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா

https://www.facebook.com/slm.hanifa

Monday, April 10, 2023

இனியொரு கோபாலன் - போகன் சங்கர்


நேற்று மாலை குழித்துறை கோபாலன் இறந்துவிட்டான். கோபாலன் இந்தவிடத்துப் பிரசித்தி பெற்ற கோவில் யானை. நிறைய குழந்தைகளின் ஹீரோ. நிறைய பெரியவர்களின் குழந்தை. எதிர்பார்த்த மரணம்தான். கொஞ்ச நாளாகவே அவனுக்கு உடல் நலமில்லை. வயிற்றுப் புண், சர்க்கரை வியாதி என்று என்னென்னவோ சொன்னார்கள்.

‘தேரி ஏறும்போது மூச்சிரைக்குது. இருமறான்' என்றார்கள். "இங்கேயானா எல்லா இடமும் தேரி.' இன்னும் சிலர், 'அதெல்லாம் இல்லை சார். அவனுக்குச் சரியா சாப்பாடில்லை. அவ்ளோதான். ஆனைன்னா அதுக்குள்ள சாப்பாடு தரணும். ஆனையை ஆனையா வச்சிருக்குறது அதோட சாப்பாடுதானே? இவங்க போடற பிச்சை அதோட தும்பிக்கைக்குப் போதாது.’

இதில் ஓரளவு உண்மை உண்டு. இடையில் இது சம்பந்தமாக போராட்டம் எல்லாம் நடத்தப்பட்டு அவனுக்குக் கூடுதலாய் சாப்பாடு வாங்க நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இன்னும் கொஞ்சம் தென்னம் மட்டைகளும் மரப்பட்டைகளும். ஆனால் எல்லாம் ரொம்பத் தாமதமாக வந்து சேர்ந்தது.

இன்று காலை அடக்கம் என்று சொன்னார்கள். அலுவலில் இருந்து அவசரமாக விடுவித்துக்கொண்டு அவனைப் பார்க்க ஓடினேன். வழியில் அவனுக்கு அஞ்சலி செலுத்திப் பெரிய பெரிய போஸ்டர்கள் இருந்தன. நல்ல கூட்டம். கோவில் யானை என்றாலும் கம்யூனிஸ்டுகளும் ஒரு செவ்வணக்கம் செய்திருந்தார்கள். அவர்களது குழந்தைப் பருவத்திலும் அவன் உண்டு அல்லவா? 

ஆனால் நான் போயிருந்திருக்கக் கூடாது. அங்கே நான் போனபொழுது கோபாலன் இல்லை. அவனது உடல்தான் முழுக்க அக்கக்காய்ப்ப் பிரிக்கப்பட்டு, தனித்தனியாக திசைக்கொன்றாக ரத்த விளாரியாகக் கிடந்தது. நான்கு கால்களும் ஒரு இடி விழுந்த கட்டிடத்தின் நான்கு தூண்கள்போலச் சிதறிக் கிடந்தன. மூன்று பேர், வெறும் முண்டு மட்டும் உடுத்திக்கொண்டு வியர்வை வழிய அவனது வயிற்றிலிருந்து ஈரலைக் கயிறு கொண்டு இழுத்து உரிக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

நான் அதிர்ச்சியடைந்து, ‘என்ன இது?” என்றேன்.

ஒருவர், 'போஸ்ட் மார்ட்டம் என்றார்.

'எதற்கு? கோபாலனை யாராவது கொன்றுவிட்டார்களா?அல்லது அது தற்கொலை செய்துகொண்டுவிட்டதா?'

அவர் என் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, 'வயதான யானைகள் பல விஷமிட்டுக் கொல்லப்படுவதுண்டுதான்' என்றார். பிறகு சிந்தனையுடன், 'நாட்டில் பழக்கப்படுத்தப்பட்டு உலவும் யானைகள் தற்கொலைதான் செய்துகொள்கின்றன என்பது எனது சந்தேகம்.' 

கோபாலன் பல நாட்களாகச் சரியாக உணவெடுக்கவில்லை. அதைத் தற்கொலை என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. 

அந்த நபர் கசப்புடன் சிரித்து, 'இவையெல்லாம் அரசியல்சரியாகச் சொல்லப்படும் காரணங்கள். உண்மையான காரணம் அதோ' என்று காட்டினார்.

அங்கே எப்போதும் ஒரு நடன அசைவுபோல ஆட்டி ஆட்டி நடக்கும் கோபாலனின் தலை தனியாக கிடந்தது. ஒரு வலுத்த ஆள் வியர்வை சொட்ட அதன் தலையைக் கோடாலியால் பிளந்துகொண்டிருந்தான். அவன் ஒவ்வொரு தடவை கோடாரியை அடிக்கும்போதும் ஓர் உலோகச் சத்தம் கேட்டது. ஒவ்வொரு தடவை கோடாரியை அடிக்கும்போதும் அந்த அதிர்ச்சியைத் தாங்க மாட்டாற்போல கோபாலனின் மூடியிருந்த கண்கள் திறந்து திறந்து மூடின.

ரமேஷ் பேடி எழுதிய 'யானை: காடுகளின் அரசன்' நூலில் (நேஷனல் புக் ட்ரஸ்ட்) யானைகள் சாவதற்கு, வனத்தில் தனிமையை நாடிப் போய்விடுகின்றன என்கிறார். பொதுவாகவே கூட்டமாய்த் திரியும் குணமுடைய யானை, தான் ஒரு சுமையாகிவிட்டோம் என்று தோன்றுகையில் எல்லாரையும் விட்டுவிட்டு நீர் நிலைகளையோ சதுப்பு நிலங்களையோ நாடிப் போய் விடுகிறது என்கிறார். ஒரு தடவை வேட்டைக்காரார்களால் சுடப்பட்டுத் தப்பிய யானையை நான்கு மாதங்கள் கழித்து ஒரு நதியின் அடியில் கண்டுபிடிக்கிறார். பெரிய எலும்புக்கூடாக. அது ஆற்றில் அமிழ்ந்துகொண்டு உணவு ஒரு பிடிகூட உண்ணாமல் கொஞ்சம் கொஞ்சமாக இறந்திருக்கிறது. யானை தான் இறப்பதை மற்றவர்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்கிறார் அவர்.

நான்என்னைச் சுற்றியுள்ள கூட்டம் பெருகுவதைக் கவனித்தேன். 

‘டாக்டர் காலைல ஊசி போட வந்தார். அதால நிக்க முடியலை. கிரேன் வச்சித் தூக்க ட்ரை பண்ணோம். அதுவும் நடக்கலை. பிறகு கோபாலன் தும்பிக்கையால் மூன்று தடவை தரையில் அடித்தான். பிறகு செத்துப்போனான்' என்று விளக்கிக்கொண்டிருந்த பெரிய மனிதரின் பெரிய காதுகளையே நான் பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றிருந்தேன்.

இப்போது காற்றில் மெலிதாக ஒரு வீச்சம் பரவத் தொடங்கியிருந்தது.

‘தந்தங்கள்!' என்றார் அந்த முதல் நபர். 'அதற்காகத்தான் இத்தனை நாடகமும்.'

நான் மிகுந்த தளர்ச்சியாய் உணர்ந்தேன். கோபாலனின் இளமைக் காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க முயன்றேன். அங்கம் அங்கமாக ஒரு விபத்து நடந்ததுபோல இங்கே சிதறிக் கிடக்கும் அவன் எங்கே பிறந்தான்? அவன் எப்போது பிடிக்கப்பட்டான்? இறக்கையில் என்ன நினைத்துக்கொண்டான்?

என் பக்கத்தில் இப்போது இன்னொரு வயதான நபர் தள்ளாடியவாறே வந்து நின்றார். குடித்திருக்கிறார் என்று தெரிந்தது.

"என்ன கெம்பீரமான யானை! கஜ ராஜன் அல்லவா கோபாலன்' என்றார்.

நான், 'அதெல்லாம் இல்லை. அவனொரு அடிமை. அவனது கால் சங்கிலிகளை நீங்கள் பார்த்ததில்லையா' என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டேன்.

அவர், 'இனியொரு கோபாலன் இனி எங்கு காணாம் பத்தும்?' என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.

‘இனியொரு கோபாலனை நாம் எங்கும் காணண்டாம் பெரியவரே' என்றேன் நான்

*


நன்றி : போகன் சங்கர் & கிழக்கு பதிப்பகம்