Monday, November 25, 2013

மச்சான் சொன்ன மஞ்சள் கதை - எஸ்.எல்.எம். ஹனிபா

இதே தலைப்பில் வேறெங்கும் இருக்கிறதா என்று இணையத்தை தேடினேன். அதிபயங்கர காமக்கதை ஒன்று வந்தது. சுட்டியெல்லாம் கொடுக்க முடியாது. அதைப் படித்துமுடித்துவிட்டு , மறக்காமல் முகம் சுளித்துவிட்டு , தொந்தரவு செய்யாத மஞ்சள் கதையை மட்டும் இங்கே பகிர்கிறேன். காக்கா வாழ்க. அப்படியே ஹாஜியார்களும்! - ஆபிதீன்
***

 மச்சான் சொன்ன மஞ்சள் கதை
எஸ்.எல்.எம். ஹனீபா

பத்து வருடங்களுக்கு முதல் ஒரு நாள் மச்சான் சொன்ன கதை இது. மச்சான் எனது உறவினர். உமர்லெப்பை சேகு இஸ்மாயில், வயது 78. ஒவ்வொரு நாளும் மச்சான் அரைக்கிலோ கோழித்தீன் வாங்க கடைக்கு வருவார். மச்சான் வசம் பத்துப் பன்னிரண்டு புறாக்கள். அவர் வீட்டிலிருந்து எனது கடை 3 கிலோமீற்றர் தூரம். தனது புராதன காலத்து சைக்கிள் வண்டியில் மிகவும் இலாவகமாக வந்து தீன் வாங்கிப் போவார். "இரண்டு கிலோ வாங்கிப் போங்களேன்" என்று சொன்னால் "வீணாக்கிப் போடுவார்கள்" என்பார். மச்சான் மிகவும் அப்புராணியான மனிதர். அவரைப் போல் மனிதர்களை ஊரில் காண்பது அரிதாகிப் போனது.

நல்ல மழை பொழிந்த ஒரு நாளின் பகற்பொழுதில் பகற் போசனத்துக்காக கடையை மூடி விட்டு வீடு சென்று கொண்டிருந்த போது, எதிரே மச்சான் பென்னம்பெரிய கோணிப்பையை தனது சைக்கிளின் கரியரில் வைத்துக் கட்டியவாறு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

"மச்சான், ஒவ்வொரு நாளும் மூட்ட மூட்டயா காய் கொண்டு போறீங்க. எனக்கும் ஒரு பத்துக் காய் கொண்டு தரலாந்தானே" இவ்வளவுதான் நான் சொன்னது.

என்னுடைய நினைப்பில் கோணிக்குள் இருப்பது மாங்காய் என்று எண்ணிவிட்டேன். கற்பனைக்கு என்ன குறைச்சல். உள்ளே இருந்ததோ வேறு.

மறுநாள் பகற் போசனத்துக்கு வீட்டுக்குச் சென்ற பொழுது, "உங்களுக்கு நபுசு அடங்காது, கண்ட கண்ட பலாயிலயெல்லாம் ஆசதான்".

நான் என்னவோ ஏதோ என்று திகைத்தேன். மீண்டும் மனைவி, "சேகு இஸ்மாயில் காக்கா மஞ்சள் பழம் பத்து தந்திட்டுப் போயிருக்கார். போட்டுக் குத்துங்க".

"பிள்ளெ, நான் மாங்காண்டு நினைச்சித்தான் கேட்டன்"

மறுநாள் மச்சான் கடைக்கு வந்தார். "மச்சான், நான் மாங்காண்டு நினைச்சித்தான் கேட்டன். அது மஞ்சள் பழம்" (இங்கு லாவுலு பழம் என்பார்கள்).

"மெய்தான், ஒவ்வொரு நாளும் மூட மூடயா கட்டிப் போறீங்களே. எங்க கொண்டு போறீங்க?"

"அது மச்சான், நம்மட பசார்ல இருக்கிற ஆஜியார்ர கொச்சிக்காய் மில்லுக்கு (கிரைண்டிங் மில்) கொண்டு போறேன். மூடெக்கு இரு நூறு ரூவா தருவார்" என்றார்.

"இந்தக் காய ஆஜியார் என்ன செய்யிறார்?" நான்.

"நல்லா முத்திய செங்காய நாலா வெட்டி வெய்யில்ல காய வெச்சி, பவுடராக்கி, மஞ்சள் தூளோடு கலந்து யாவாரம் செய்றார்" என்றவர், "இந்த வருஷமும் ஆஜியார், குடும்பத்தோட மக்காவுக்குப் போறார் மச்சான்" என்றார். 
***
நன்றி : ஹாஜி எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள்

Saturday, November 16, 2013

முகமது பஷீரின் 'சப்தங்கள்' - குளச்சல் மு. யூசுஃப் முன்னுரை

வைக்கம் முகமது பஷீர் வாசகர்கள் (fb) குழுமத்திற்கு நன்றியுடன்...
**


முன்னுரை (சப்தங்கள்)
குளச்சல் மு. யூசுஃப்

பிரபஞ்சம் பின்னிட்ட கோடானுகோடி தினங்களின் நிலவு போர்த்திய ஓரிரவு. அதன் ஒரு பகுதி முகமிழந்த மனிதர்களை வெறும் ‘சப்தங்க’ளால் சித்திரப்படுத்தியிருக்கிறார் பஷீர். மொழியின் வெறும் ஓசைகளே இதில் மானுட உன்னதங்களைக் குலைத்துப் போடுகின் றன.

விலைமாதர்களையும் பாலியல் நோய்களையும் ஓரின சேர்க்கை யாளர்களையும் கருவாகக் கொண்ட 12 அத்தியாயம் நீண்ட இந்தச் சிறுகதை அல்லது சிறு நாவலின் அர்த்தப்பாடுகள் மானுட விழுமியங்களை மட்டுமல்ல மனிதனின் இருப்பையே நிலைகுலைய வைக்கிறது. அதுவரையிலான இலக்கிய மரபியல் அறிஞர்களையும் கௌரவமான கதைச்சொல்லிகளையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெரும்புலவர்களும் பேரிலக்கியவாதிகளும் தேவலோகக் காரிகைகளின் அங்க லாவண்யங்களை உவகையுடன் எழுதிக் குவித்துக்கொண்டிருந்த போது காற்றுப் பிரிவது உள்ளிட்ட இயற்கை உபாதைகள் தசையுள்ள தாஜ்மகால்களுக்கும் உண்டு என்று சொன்னவர் பஷீர்.

காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடிய அதே காலகட்டத்தில் தான் பஷீர் பாம்பையும் பூரானையும் நரியையும் பிற உயிரினங்களையும் பூமியின் வாரிசுதாரர்கள் என்றார். நேரடியான வாழ்க்கையனுபவங்களிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் படைப்பையும் வெகுசன இரசனையையும் தீவிரமான வாசக அனுபவத்தையும் ஒன்றிணைவாகப் பயணிக்கச் செய்கிற இந்தத் திசையறிவுதான் பஷீரின் மிகப்பெரிய பலம். கலாச்சாரத்தை வாசனையால் புரிந்துகொள்ள முடியுமென்றால் ஓரினப் புணர்ச்சியாளர்களின் கலாச்சாரத் தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியுமென்பதை மக்களின் மொழியில் சொன்னவர் பஷீர். வார்த்தைகளுக்கு இலக்கணரீதியிலான அழுத்தம் தந்து மனித வாழ்க்கையை வர்ணனை செய்ய முற்படுகிற, சமூகத்தின் வெளியில் நிற்கும் ஒரு பார்வையாளனின் கதைச்சொல் முறையும், இலக்கிய வகை மாதிரி பூடகங்களின் அர்த்தத் தளங்களுக்குள் பயணிக்கும் திறன்படைத்த நுண்மான் நுழைபுலன்கொண்ட வாசகன் பயணிக்கும் திசையும் இதிலிருந்து அடிப்படையாகவும் முற்றிலும் மாறுபாடானதுமாகும்.

புறக்கணிக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மொழியின் இலக்கணத் தினுள் வகைப்படுத்தியும் மரபார்ந்த இலக்கிய வடிவத்தை விட்டு விலகி விடாமலும் எழுதும் டேபிள் ஒர்க் பஷீரைப் பொறுத்த வரை அன்னியமானது.

‘உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ எனும் அவரது குறுநாவலின் நாயகி பாடுகிற பாடலின் முதல் வரியே இப்படித்தான் தொடங்கும்: ‘குத்தினி ஹாலிக்க லித்தாப்போ...’ இதற்கான அர்த்தம் உலகிலுள்ள எந்த ஒரு மொழியிலும் கிடையாது.

ஆனால் எழுத்து வடிவிலான இந்த ‘சப்தங்’களுக்கு மலையாள நாட்டின் அரசியலில் அர்த்தமிருக்கிறது. ஆசிரியராக பணியாற்றுகிற அவரது இளைய சகோதரன் அண்ணனுக்கு இலக்கண இத்தியாதிகளைப் பற்றி எதுவுமே தெரியவில்லை என்பதால், “காக்கா, எதற்கும் கொஞ்சம் இலக்கணம் படிப்பது நல்லது” என்கிறார். பஷீருக்குக் கோபம் வந்தாலுமே இதற்காக அவர், தமையனுடன் இலக்கணம் பற்றிய சர்ச்சைக்குள் இறங்கிவிடவில்லை. “போடா, நீ. வீட்டிலிருந்த நெய்யை எல்லாம் திருடித் தின்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லித் திரிந்தவன்தானே நீ. உன்னுடைய இலக்கணத்தின் இலட்சணம் எனக்கா தெரியாது” என்று பதில் சொல்கிறார். தன்னுடைய படைப்புகள் ஆங்கில நாவல்களிருந்து தழுவப்பட்டவை என்ற விமர்சனத்தையும் பஷீர் இவ்வாறே எதிர்கொண்டார்: “வாய் வழியே சாப்பிடுவதாலும் வட்ட முகமும் ஒரு ஜோடி கை கால்களும் இரண்டு கண் களுமிருப்பதாலும் மேற்படியானை சர்ச்சிலின் மகனென்று சொல்லி விட முடியுமா?”

எழுதுகோலைத் தீட்டி காகிதங்களை எழுதுவதற்குப் பத்திரப்படுத்தி விட்டு அனுபவங் களைத் தேடிப் புறப்பட்டவரில்லை பஷீர். அவர் பயணங்களை நோக்கி துரத்தியடிக்கப் பட்டவர். யாரால் துரத்தப் படுகிறோம் என்பது இங்கே முக்கியமில்லை. மனித மனத்தின் இனம்காண முடியாத சூட்சுமப் பகுதி அது. வாழ்க்கை சுகப்படவில்லையென்பதற்காக பஷீர் யாரை நோக்கியும் தனது சுட்டுவிரலைத் தூண்டவில்லை. ஆகவேதான் தோட்டத்தில் நுழைந்த பாம்பு மனைவி பார்ப்பதற்குள் போய் விட்டால் நல்லது என்று அவர் பதைபதைப்பதுவும் அவரால் எதையுமே வெறுக்க இயலாமல் போனதுவும். வைக்கம் முகம்மது பஷீரின் கனவில் திருச்சூரில் உறையும் வடக்கும் நாதர் வந்து சொல்கிறார்: நன்றாகப் பழுத்தப் பாக்கு கிடைக்காமல் வாயெல்லாம் என்னவோ போலிருக்கிறது என்று. மறுநாள் பாக்குகளை வாங்கிப் பொட்டலமிட்டு கோயில் சுவர்களுக்குள் வீசி யெறிகிறார் பஷீர். மனம் பிறழ்வுபட்ட நிலையில் தான் எதிர்பாராமல் வந்துகிடைத்த இதுபோன்ற ஓராயிரம் அனுபவங்கள். இதைத்தான் மலையாள எழுத்தாளர் எம்.பி. போள், வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிய்த்தெடுத்ததும் ஓரங்களில் இரத்தம் துளிர்த்து நிற்பதுமான படைப்புகள் என்று வர்ணித்திருந்தார்.

பஷீரின் அதிஅற்புதப் படைப்புகளான பாத்துமாவின் ஆடு, பால்யகால தோழி, உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்ததுபோன்ற கதைகளை ஒருவேளை திறமையான கதாசிரியர்கள் யாராவது எப்போதாவது எழுதி விடுவார்களாக இருக்கலாம். ஆனால் மனிதனின் ஈனஸ்வரத்திலான இந்தப் பேரோசையை பஷீரைத் தவிர வேறு யாராலுமே எழுப்ப இயலாது. தமிழ்ச்சூழலில் அண்மைக்காலத்தில் பெயர் சூட்டப்பட்ட விளிம்பு நிலை மக்களின் குரலை நாற்பதுகளிலேயே பிரதிபலித்து விட்டவர் பஷீர். அன்றுவரை யாரும் சொல்லாததும் அதற்குப் பின்னாலும் யாரும் சொல்லாததுமான ஹூருலீன் (சுவர்க்கலோகத் தாரகை) பெண்ணொருத்தி குசு விடுவதைப் பற்றிய சிறுகதையான பர்ர்ர்... ஐ பஷீர் எழுதி நாற்பது வருடங்கள் கடந்து விட்டன.

மலையாளத்தில் ‘பஷீரியம்’ எனும் இலக்கியக் கோட்பாட்டை மொழிசார்ந்தும் வடிவம் சார்ந்தும் ஏற்றுக்கொண்ட மலையாள வாசகர்களில் பெரும்பான்மையினரும் இன்று பஷீரைப் பற்றிய நினைவுபடுத்துதல்களைக்கூட இலக்கியத்தின் மற்றொரு முகமாக வரவேற்கிறார்கள். வாழும்போது மாந்திரீக கதாசிரியராகப் போற்றப் பட்டவரின் ஞாபகங்கள்கூட மாந்திரீகத் தன்மையுடனிருப்பதை அவரது வாழ்க்கையின் அதிசயமாகவே கருதவேண்டியதிருக்கிறது.
***


நன்றி : குளச்சல் மு. யூசுஃப் , காலச்சுவடு பதிப்பகம்
***
ஒரே ஒரு சுட்டி : உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு : பஷீர்

Wednesday, November 13, 2013

ரகசியம் - நிஷா மன்சூர்

புதைக்கப்படும்போது
புதைக்கப்படும்..!!

***

நன்றி : நிஷா மன்சூர்
https://www.facebook.com/nisha.mansur

**
குறிப்பு : 

நண்பர் தாஜ்,  'ரகசியமாக' ஃபேஸ்புக்கில் கீழ்க்கண்ட உரைவீச்சு ஒன்றை (தத்துவக் கவிதை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...) வீசியிருந்தார். அதற்கு சகோதரர் நிஷா மன்சூர் எழுதிய இரண்டு சூப்பர் வரிதான் மேலேயுள்ளது.


இது தாஜ்எழுதியது :


யாரிடமும் சொல்ல முடியாத
சிலபல ரகசியங்கள்
எல்லோரிடமும் உண்டு.
கட்டாயம் இருக்கும்.
நிஜத்தில்
அதை யாரிடமும்
சொல்ல முடியாதும் கூட
கடைசி........... வரை.
***

Sunday, November 10, 2013

கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்

'கொ’ என்று தவறாக அடித்ததுமே கொக்கோகம் என்று முதலில் தருகிறான் குறும்பு செய்யும் கூகுளான்! கொத்தமல்லி, கொள்ளு, கொக்கு என்றும் தருகிறான் பிறகு என்றாலும் முதலில் தந்ததற்காக அங்கேபோய் அதிவீரராம பாண்டியனை அறியாமல் இருக்க முடியுமா? அப்புறமாத்தான் ’கோ’வை அடித்தேன்’ ; கோபாலகிருஷ்ண பாரதியாரையும் தரிசித்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். எதற்கு?  நந்தன் புகழ் பாடியவர்,   நாகூர் பக்கத்து நரிமணத்தில் பிறந்தவர் என்பதால் ஒரு பிரியம். அவ்வளவே. இப்போது பகிரும் இந்த ஒலிப்பதிவில் அவர்  இயற்றிய ஏழு அருமையான பாடல்கள் இருக்கின்றன. சிக்கல் குருசரன், சௌம்யா, ஓ.எஸ்.தியாகராஜன், ஜி.என்.பி., சீதளாபதி பாலசுப்ரமணியம், நீலா ராம்கோபால், நிஷா பி. ராஜகோபால் என்று பலர் பாடினாலும் எழுந்து நிற்க வைப்பது எங்கள்  ஜி.என்.பியின் குரல்தான். கேளுங்கள்.

கேட்பதற்கு முன்பு ஒரு ஜோக்.  ”ஸங்கீத ஸரிகமபதநி' இதழில் ரா.கி.ரங்கராஜன் படித்ததை பசுபதிஐயா தளத்தில் பார்த்தேன்:

'என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்...'

'சரி, நீ என்ன பண்ணறே?'

'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது?'.
***
***
Thanks to : Lakshminarayanan Noorani
+

கோபாலகிருஷ்ணபாரதியார் பாடல்கள்

Tuesday, November 5, 2013

ஏழையின் சாபம் - பிரேம்சந்த் சிறுகதை (தமிழாக்கம் : மஜீத்)


Image Courtesy : mvnu
***
ஏழையின் சாபம்
(Garib Ki Hai)

சாந்த்பூர் கிராமத்தின் பெரிய பணக்காரர் முன்ஷி ராம்சேவக். கிராமத்தின் சிறுமுறையீடுகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் கோர்ட்டான  வெட்டவெளிப் பொட்டலில், ஒரு வேப்பமரத்தடியில் கிடந்த உடைந்த பெஞ்சில்தான் அவர் தினமும் உட்கார்ந்திருப்பார். எந்தக் கோர்ட்டிலும் அவர் வாதாடுவதையோ அல்லது பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்வதையோ யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் எல்லோரும் அவரை வக்கீல் என்று அழைத்தனர். எப்போது அவர் அந்தப் பஞ்சாயத்துப் பொட்டலுக்கு போனாலும் கிராமத்தினர் கூட்டமாக அவரைப் பின் தொடர்ந்தனர். அனைவரும் அவர் மீது மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். சரஸ்வதிதேவியின் முழுகடாட்சமமும் பெற்ற பேச்சாற்றல் கொண்டவர் என்று அவரைப் புகழ்ந்தனர். ஆனால் இவை எல்லாமே குடும்ப பாரம்பர்யம்பற்றி வெற்றுப்பெருமைபேச மட்டுமே உதவியது. அவருக்கென்று பெரிய வருமானம் ஒன்றும் வரவில்லை. அவரது வாழ்வாதாரமே கிராமத்தின் ஆதரவற்ற விதவைப்பெண்களும் மற்றும் விபரம்போதாத பணக்காரக் கிழவர்களும்தான். விதவைப்பெண்கள் அவர்களிடமிருந்த பணத்தை, பாதுகாப்புக்காக அவரிடம் கொடுத்துவைத்தனர்; கிழவர்களோ தங்களது உதவாக்கரை மகன்களுக்குப் பயந்து தங்களது சொத்துக்களை அவரிடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால், அவரது கைக்குப் போன பணம் போனதுதான்; திரும்பி வரும் வழியை மறந்துவிடும்!

அதே கிராமத்தில் முங்கா என்ற பிராமண விதவைப்பெண் வாழ்ந்து வந்தாள். அவளது கணவன் இந்திய ராணுவத்தின் சுதேசிப்படைப் பிரிவில் சார்ஜன்ட்டாக இருந்து அங்கேயே போரில் இறந்துவிட்டான். அவனது சிறப்பான சேவைக்காக அரசாங்கம் வெகுமதியாக 500 ரூபாய் அளித்திருந்தது. விதவை என்பதாலேயே மிகுந்த கஷ்டத்திலிருந்த அந்த பாவப்பட்ட சீவன், தன்னிடமிருந்த முழுத்தொகையையும் ராம்சேவக்கிடம் ஒப்படைத்து விட்டு மாதாமாதம் மிகச்சிறிய தொகையை பிச்சைவாங்குவது போலப் பெற்று வயிற்றைக் கழுவி வந்தாள். முன்ஷிஜியும் தனது கடமையை பலவருஷங்கள் மிக நேர்மையாகவே செய்து வந்தார். ஆனால் முங்காவுக்கு நிறைய வயதாகிவிட்டாலும் சாவதற்கான அறிகுறியே இல்லாததைக் கண்ட அவர், அவளது ஈமக்கிரியைக்கான செலவில் பாதியைக்கூட மிச்சம் விட்டுவைக்க மாட்டாள் என்று உணர்ந்தார்.

ஒருநாள் அவளிடம், “நீ சாகப்போகிறாயா, இல்லை சாகவே மாட்டாயா? உனது ஈமக்கிரியை செலவை நீயே பார்த்துக் கொள்வதாக ஒப்புக்கொள்” என்று சொல்லவும், அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அவரிடம் மீதமிருக்கும் முழுத்தொகையையும் தன்னிடம் திருப்பித் தந்துவிடும்படி சொன்னாள். முன்ஷியின் கணக்குப் புத்தகம் தயாராக இருந்தது. அதன்படி ஒரு பைசாக்கூட மீதம் இல்லை! உடனே அவள் முரட்டுத்தனமாக அவரது கையைப்பற்றி, “நீ எனது  250 ரூபாயை அபகரித்துவிட்டாய்; ஆனால் அதில் ஒருபைசாவைக்கூட நீ வைத்துக்கொள்ள நான் விடமாட்டேன்” என்று கத்தினாள். ஆனால் அந்த பாவப்பட்ட விதவையின் கோபத்தினால் பெரிய பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. அவளுக்கு எந்த நீதிமன்றத்திலும் யாரையும் தெரியாது; எழுதப்படிக்கவும் தெரியாது. அவளிடம் கணக்குவழக்கும் கிடையாது; இருந்தாலும் கிராமசபை பஞ்சாயத்தில் அவளுக்குக் கொஞ்சம் நம்பிக்கை நிச்சயமாக இருந்தது. பஞ்சாயத்தும் கூடியது; சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர். முன்ஷியும் அசத்தலான தோரணையுடன் தயாராக இருந்தார். அவர் எழுந்து நின்று சபையோரிடம் பேச ஆரம்பித்தார்: “நண்பர்களே! நீங்கள் எல்லோரும் உன்னதமானவர்கள். உண்மைக்கு உங்களை அர்ப்பணித்து விட்டவர்கள். உங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். உங்களது பெருந்தன்மைக்கும் கருணைக்கும், உங்கள் தொண்டுக்கும் அன்புக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இந்த துரதிருஷ்டசாலியான கைம்பெண்ணின் பணத்தை நான் நிஜமாகவே எடுத்துக்கொண்டதாக நீங்கள் நினைக்கிறீர்களா?”

சபையோர்கள் ஒருமித்த குரலில், “இல்லை, இல்லை! நீங்கள் அந்தமாதிரி ஒரு செயலை செய்திருக்க முடியாது” என்று கூறினர்.

முன்ஷிஜி, “அப்படி நான் அவளது பணத்தைத் திருடிவிட்டதாக நீங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டால், ஆற்றிலோ குளத்திலோ மூழ்குவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் பணக்காரனுமில்லை. பெரிய பரோபகாரி என்று பெருமைபட்டுக்கொள்ளவும் என்னால் முடியாது.  ஏதோ என் பேனாவாலும் உங்கள் பேரன்பாலும் நான் ஏழையும் இல்லை. ஒரு விதவையின் பணத்தைத் திருடும் அளவுக்கா நான் கீழானவன்?” என்றார். சபையோர்கள் மீண்டும் ஒருமித்தனர். “இல்லை, இல்லை! அந்தமாதிரி ஒரு செயலை செய்திருக்க முடியாது”.

சபை அவரை விடுவித்துவிட்டது.

முங்கா ஒரு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டபடி, “இங்கே என் பணத்தைப் பெற என்னால் முடியவில்லை; இருக்கட்டும். இங்கே அது எனக்குக் கிடைக்காமல் இருக்கலாம்; ஆனால் மேலுலகில் அதைத் திரும்பப் பெறுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். அங்கே முங்காவுக்கு உதவவோ அவளது சோகத்தைக் கேட்கவோ யாரும் இல்லை. வறுமை அளித்த துயரங்கள் அத்தனையையும் அவள் ஒருசேர சகித்துக்கொண்டாள். அவளுக்கு நல்ல உடல் வலிமை இருந்தது. அவள் நினைத்திருந்தால் அவளால் கடுமையாக உழைக்க முடிந்திருக்கும். ஆனால் அந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வந்த நாளிலிருந்து இனி வேலைக்குப் போவதில்லை என்று உறுதிகொண்டாள். தனது பணத்தைப் பற்றிய நினைப்பே இப்போது அவளை முழுதுமாக ஆட்கொண்டிருந்தது. பகலிலும் இரவிலும், நடக்கும்போதும் உட்காந்திருக்கும்போதும் அவள் மனதில் ஒரே எண்ண ஓட்டம் தான் ; அது முன்ஷி ராம்சேவக்கைத் திட்டித்தீர்ப்பது.

படிப்படியாக அவள் மனம் பேதலித்தது. தலையிலும் உடம்பிலும் ஒட்டுத் துணியில்லாமல் கையில் ஒரு சிறிய கத்தியுடன் ஆள்நடமாட்டமில்லாத இடங்களில் உட்கார்ந்திருப்பாள். அவளது குடிசைக்குப் போவதுமில்லை. ஆற்றோரத்தில், பிணங்களைத் தகனம் செய்யும் எரிமேடைப் பக்கமாக பரட்டைத்தலையுடனும், சிவந்த கண்களுடனும் மெலிந்த கை,கால்களுடனும் வெறித்த பார்வையோடு அவள் சுற்றித்திரிந்தாள். இந்தக்கோலத்தில் அவளைப் பார்த்தவர்கள் பயந்து நடுங்கினர். யாரும் வேடிக்கைக்காகக்கூட அவளைக் கிண்டல் செய்யவில்லை. எப்போது அவள் கிராமத்துக்குள் வந்தாலும் பெண்கள் தங்கள் வீடுகளின் கதவுகளை மூடிக்கொண்டனர். ஆண்களும் நழுவி ஒதுங்கிக்கொண்டனர். குழந்தைகள் அலறி ஓடினர். ஆனால் ஒரே ஒரு குழந்தை மட்டும் பயந்து ஓடுவதில்லை – அது முன்ஷிஜியின் மகனான ராம்குலம். கிராமத்தின் மாறுகண்காரர்கள் மற்றும் ஊனமுற்ற மனிதர்கள் அவனை மிகவும் வெறுத்தொதுக்கினர். பரிதாபமாக குழம்பித்தவிக்கும் முங்காவை அவன், கிராமத்து நாய்களைவிட்டு துரத்தவிட்டு, முங்கா குடியிருப்புப்பகுதியை விட்டு வெளியேறும்வரை கைகளைத்தட்டிக்கொண்டு விரட்டிச் செல்வான்.

தன் பணத்தோடு புத்திசுவாதீனத்தையும் சேர்த்து இழந்த முங்கா உள்ளூரில் பைத்தியம் என்ற பட்டத்தைப் பெற்றாள். தனிமையில் அமர்ந்து ராம்சேவக்கைத் தாக்கி அழிக்கும் தனது அடங்காத ஆசையை வெளியிட்டபடி மணிக்கணக்கில் தனக்குள் பேசிக்கொள்வாள். அவளது வெறுப்பு உச்சக்கட்டம் அடையும்போது, தனது முகத்தை ராம்சேவக்கின் வீடு இருக்கும் பக்கமாத் திருப்பி, ஆக்ரோஷத்துடன், “உன் ரத்தத்தைக் குடிப்பேன்டா” என்று பயங்கரமாகக் கூச்சலிடுவாள்

முன்ஷிஜி ஒரு தைரியமான உறுதியான மனிதர்தான். ஆனாலும் முங்காவின் அந்த கொடூரமான வார்த்தைகளைக் கேட்டதும் பயந்துவிட்டார். மனிதர்கள் வழங்கும் தீர்ப்புக்கு வேண்டுமானால் நாம் அச்சப்படாமலிருக்கலாம், ஆனால் கடவுள் வழங்கும் தீர்ப்புக்கான அச்சம் மனிதர்களின் மனதில் எப்போதும் இருக்கும். முங்காவின் இரவுநேர நடமாட்டங்களால் ஈர்க்கப்பட்ட அந்த மாதிரியான பயம், சிலசமயங்களின் அவர் மனதிலும் பிரதிபலித்தது. அவர் மனைவி நாகினின் மனதில் இன்னும் அதிகமாகவே பிரதிபலித்தது. நாகின் மிகவும் புத்திசாலியான பெண்மணிதான். அவள் அடிக்கடி அவரது தொழில் நடவடிக்கைகளில் ஆலோசனை கூறுவாள். அவளது பேச்சு அவரது எழுத்துபோலவே ஜொலிக்கும். ஒருநாள் நடுராத்திரியில் முன்ஷிஜி தூங்கியபிறகு முங்கா திடீரென்று அவரது வீட்டுவாசலில் நின்று கூச்சலிட்டு, உன் ரத்தத்தைக் குடிக்கப் போறேன்டா என்று கத்தினாள். அவளது கொடூரச்சிரிப்பைக் கேட்ட அவர் அதிர்ச்சியில் துணுக்குற்றார். கால்கள் பயத்தால் நடுங்கின. இதயம் படபடத்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவைத் திறந்தார்; நாகினையும் எழுப்பினார்  இருவரும் சத்தமில்லாமல் வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தனர். முங்காவின் மங்கலான உருவம் தரையில் கிடந்தது. அவள் மூச்சிரைப்பதும் அவர்களுக்குக் கேட்டது, இப்படியே இரவும் கடந்துவிட்டது. வாசற்கதவை மூடிவிட்டாலும் ராம்சேவக்கும் நாகினும் மணிக்கணக்கில் உட்கார்ந்தே இருந்தனர். முங்கா வீட்டுக்குள் வரமுடியாது, ஆனாலும் அவளது குரலை யார் தடுத்து நிறுத்தமுடியும்? முங்காவின்  குரல்தான் அவள் குணாதிசயங்களிலேயே மிகவும் கொடூரமானது.

முங்கா முன்ஷிஜியின் வீட்டுவாசலில் கிடக்கும் செய்தி கிராமம் முழுதும் பரவியது. கிராமத்தினர் முன்ஷிஜி அவமானப்பட்டதையும் மதிப்பிழந்ததையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். எல்லோரும் ஒரே நேரத்தில் குழுமினர். சிறுவன் ராம்குலம் இந்தக் கூட்டத்தை விரும்பவில்லை; அவனுக்கிருந்த கோபத்தில் அவனுக்கு சக்தி இருந்தால் முங்காவைக் கிணற்றில் தூக்கிவீசி இருப்பான். ஒரு வாளியில் மாட்டுச்சாணத்தைக் கொண்டுவந்து பாவப்பட்ட முங்காமீது கொட்டினான். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீதும் கொஞ்சம் சாணம் தெரித்தது. முங்கா முற்றிலும் சாணத்தால் மூடப்பட்டாள். வேடிக்கை பார்த்தவர்கள் சட்டென்று பின்வாங்கி, முன்ஷி ராம்குலத்தின் வாசலில்தான் இப்படியான நல்ல நிகழ்ச்சிகளைக் காணமுடியும் என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.

முன்ஷிஜி தன் மகனின் புத்திசாலித்தனதையும், ஒன்றுக்கும் உதவாத கூட்டத்தை இப்படி நயதந்திரமாக விரட்டியதையும் வெகுவாகப் பாராட்டினார். ஒருவழியாக கூட்டம் முழுமையும் கலைந்து சென்றுவிட்டது. ஆனால் முங்கா இன்னும்  அப்படியே கிடந்தாள். அன்று இரவு அவள் முழுவதும் அன்னம் தண்ணீரின்றிக் கிடந்தாள். முன்ஷிஜியும் நாகினும் முன்னிரவுபோலவே மீண்டும் தூங்காமல் விடியும்வரை விழித்திருந்தனர். இன்று முங்காவின் கூச்சலும் சிரிப்பும் முன்பைவிடக் குறைவான தடவைகளே கேட்டதால், வீட்டிலிருந்தவர்கள் தொல்லைவிட்டது என்றுதான் நினைத்தனர். விடிந்தவுடன் முன்ஷிஜி கதவைத் திறந்ததும் முங்கா அசைவில்லாமல் கிடந்ததைப் பார்த்தார். அப்போது அந்த கிராமம் கண்ட பரபரப்பையும் ராம்சேவக்கிற்கு ஏற்பட்ட அவமானத்தையும் வார்த்தையால் விவரிக்க முடியாது. அவர் சேர்த்துவைத்திருந்த கௌரவம் எல்லாம் நொடியில் மறைந்துவிட்டது. ஆம், முங்கா அவரது வீட்டு வாசலில் உயிரை விட்டிருந்தாள்.  உயிரோடு இருக்கும் போது அவளால் பெரிதாக ஒன்றும் சாதிக்கமுடியாது என்பதையும் செத்தபின் தன்னால் சாதிக்கமுடியும் என்பதையும் அவள் அறிந்தேயிருந்தாள்.

முன்ஷி சட்டம் நன்கறிந்தவர். சட்டப்படி அவர் குற்றமற்றவர். அவர்மீது சட்டநடிவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய வகையில் முங்கா சாகவில்லை. இந்தமாதிரி உதாரணங்களை இந்திய தண்டனைச் சட்டத்திலுங்கூட  காணமுடியாது. முன்ஷியும் அவர் மனைவியும் தங்களுக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டுதான் தங்களைத் தேற்றிக்கொண்டனர். ஆனால் மாலை வந்தவுடன் அவர்களின் பகுத்தறிவுச் சமாதானங்கள் நீர்த்துப் போக ஆரம்பித்தன. இரவு வந்ததும் பயமும் பற்றிக்கொண்டது. நேரம் ஆக ஆக இந்தப்பயம் கூடிக்கொண்டே போனது. வீட்டின் முன்கதவை அவர்கள் மூடமறந்துவிட்டபடியால் அது திறந்தே கிடந்தது. எழுந்து சென்று அதை மூடுவதற்கான தைரியம்கூட அவர்களில் யாருக்கும் இல்லை. கடைசியில் நாகின் ஒரு விளக்கை எடுத்துக்கொள்ள, முன்ஷி ஒரு கோடரியையும், ராம்குலம் அரிவாளையும் எடுத்துக்கொண்டு, மூவரும் ஒன்றாக நடுங்கிக்கொண்டும் பதுங்கிக்கொண்டும் கதவருகே சென்றனர். கதவை மூடியபிறகு மூவரும் சமையலறைக்குச் சென்று ஏதோ சமைக்கத் தொடங்கினர்

ஆனாலும் முங்கா அவர்களது உணர்வுகளுக்குள் முழுதாய் நிறைந்திருந்தாள். அவர்கள் தங்களது நிழலைப் பார்த்தால்கூட நிச்சயமாய் அது முங்காதான் என்று பயந்து தாவிக் குதித்தனர். ஒவ்வொரு இருட்டு மூலையிலும் அவள் உட்கார்ந்திருப்பதாய் அவர்களுக்குத் தோன்றியது. சமையலறையில் மாவு, பருப்பு போன்றவற்றை வைத்திருக்கவேண்டி பெரியபெரிய மண்பாண்டங்கள் இருந்தன. அங்கங்கே சில பழைய பிடிதுணிகளும் இறைந்துகிடந்தன. அப்போது பசியெடுத்த சுண்டெலி ஒன்று இரைதேடி அந்தப்பக்கமாய் துணிகளுக்கிடையே ஊர்ந்துவரவே, சரசரவென்று சத்தம் கேட்க, அங்கே பரப்பிக்கிடந்த துணிகளும் முங்காவில் ஒல்லியான கால்கள் மாதிரியே தெரிய, அதைக்கண்ட நாகின் பயத்தில் குதித்து அலறி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள். என்ன நடந்ததென்று அறியாத முன்ஷி கதவை நோக்கிப் பாய, திடீரென்று ஓட ஆரம்பித்த ராம்குலம் தன் தந்தையின் கால்களுக்கிடையில் சிக்கிக்கொண்டான். அப்போது சுண்டெலி வெளிப்பட, அதைக் கண்டபின்னரே அவர்கள் இந்தக் களேபரத்தில் இருந்து மீண்டனர்.

சாப்பிட்டு முடித்துவிட்டு மூவரும் படுக்கையறைக்கு வந்தனர். ஆனால் அங்கும் அவர்களை முங்கா நிம்மதியாய் இருக்க விடவில்லை. அவர்கள் பேசிக்கொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தனர். என்னதான் அவர்கள் மறக்கமுனைந்தாலும் அவர்களின் மனத்திரையை விட்டு முங்கா அகலவில்லை. ஒரு சிறிய அதிர்வுகூட அவர்களைத் திடுக்கிடவைத்தது. இலைகளின் சலசலப்புகளைக் கேட்டாலும் அவர்களின் ரோமக்கால்கள் குத்திட்டு நின்றன.

நாகின் தூங்கிக்கொண்டிருக்குப்போது, முங்கா சிவந்த கண்களோடும், கூரியபற்களோடும், தனது மார்பில் அமர்ந்துகொண்டு அரற்றியதுபோலத் தோன்றியதால், அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நாகின் பெருங்குரலுடன் அலறிக்கொண்டு, முற்றத்தை நோக்கி பைத்தியக்காரி போல ஓடினாள். பிறகு சடாரென சுயநினைவை இழந்து தரையில் விழுந்தாள். வியர்வை தெப்பலாக நனைத்துவிட்டிருந்தது. அவளது அலறலைக் கேட்டு முன்ஷி விழித்துக்கொண்டாலும் அச்சத்தில் கண்களைத் திறக்கவில்லை. குருடனைப் போல் தட்டுத்தடுமாறி, தடவிக்கொண்டே சென்று, நீண்டநேரத்திற்குப் பிறகு கதவைக் கண்டுபிடித்தார். பிறகு ஒருவழியாக அவர் முற்றத்தை அடைந்தார். அங்கே நாகின் தரையில் விழுந்து கிடந்தாள். முங்காவின் பயம் அவளைக் கொன்றுவிட்டிருந்தது. உயிரோடிருக்கும்போது முங்கா, நாகினின் சீற்றத்துக்கு எப்போதும் பயந்துகொண்டிருந்தாள். தன் உயிரைத் துறந்தபிறகு, நாகினின் சீற்றத்தை எதிர்கொள்ள இப்போது அவளால் முடிந்தது!

நாகினின் கதையை முடித்துவிட்டாலும், முங்கா முன்ஷிஜியை வெறுமனே விட்டுவிடப் போவதில்லை. ஓவ்வொரு கணமும் அவளது உருவம் அவரது கண்முன்னே தெரிந்துகொண்டுதான் இருந்தது. அவர் எங்கே இருந்தாலும் அவரது நினைவு மட்டும் அவளைச் சுற்றியே எப்போதும் வட்டமிட்டது. தனியறைச்சிறையில் அகப்பட்டதைப் போல எப்படியோ பத்துப் பன்னிரென்டு நாட்களைக் கழித்துவிட்டார். இரண்டு வாரங்களுக்குத் துக்கம் அனுசரித்தபின், ஒருநாள் தன் உடைகளை மாற்றிக்கொண்டு, தான் உட்காரும் பாய் மற்றும் தோளில் மாட்டும் பெட்டியுடன் பஞ்சாயத்துப் பொட்டலுக்குச் சென்றார்.

அவரது தோற்றம் கொஞ்சம் பிரகாசமாகத் தெரிகிறது. அன்றைக்கு நிறைய வாடிக்கையாளர்கள் அவரை மொய்க்கப்போகிறார்கள்; நிறைய துக்கவிசாரிப்பெல்லாம் நடக்கும். தாம் சிறிது கண்ணீர் சிந்தவேண்டிக்கூட வரலாம் என்றெல்லாம் நிறைய எதிர்பார்ப்புடன் சென்றார். தொழிலிலும் அன்று முன்கூட்டி மீட்கப்படும் கடன்களும், புதிய அடமானங்களும், ஒப்பந்தப்பத்திரங்களும் மிகுதியாக வரும்; நாம் பணத்தில் கொழிக்கலாம் என்றெல்லாம் கணக்குப் போட்டார். இதே எண்ணங்களுடனேயே அவர் பொட்டலை அடைந்தார்.

ஆனால் அங்கே நடந்ததோ வேறு; மிகுதியான அடமானங்கள், முன்கூட்டிய கடனடைப்புக்கள், வாடிக்கையாளர்களின் சந்தோஷமான வாழ்த்துக்கள், இவைகளுக்குப் பதிலாக மோசமான ஏமாற்றத்தைத்தான் அவர் எதிர்கொண்டார். தனது பெட்டியைத் திறந்துவைத்துக்கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருந்தும் யாரும் அவர் அருகில் வரவில்லை; ஒருவரும் அவர் இத்தனை நாள் எப்படி இருந்தார் என்று விசாரிக்கக்கூட முன்வரவில்லை. புது வாடிக்கையாளர்கள்தான் வரவில்லையென்றால், காலங்காலமாக முன்ஷிஜி குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த பழைய வாடிக்கையாளர்கள் கூட தங்கள் முகங்களை அவரிடம் இருந்து மறைத்துக்கொண்டனர். முழுநாளையும் இவ்வாறு பொட்டலில் வீணாய்க் கழித்தபின் வீட்டுக்குச் சென்று, கவலையிலும் ஏமாற்றத்திலும் மூழ்கினார். வீட்டுக்கு அருகில் வந்தவுடன் முங்காவின் உருவம் அவர் முன்னே தோன்றியது. கதவைத் திறந்தவுடன் ராம்குலம் அடைத்துவைத்திருந்த இரண்டு நாய்கள் பாய்ந்தோடி வெளியேற, மிகுதியான பயத்தால் தன்னுணர்வை முற்றிலும் இழந்த அவர் ஓலமிட்டு அலறி, சுயநினைவற்றுத் தரையில் சரிந்து விழுந்தார்.

இதற்குப் பிறகு முன்ஷிஜிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. பல நாட்களாக அவர் பொட்டலுக்குச் செல்வதையும் வாட்டத்துடன்ன் திரும்பி வருவதையும் பலரும் பார்த்தனர். பிற்பாடு அவர் பத்ரிநாத் கோவிலுக்குப் புறப்பட்ட பிறகு பலமாதங்களுக்கு அவர் யார் கண்ணிலும் தென்படவில்லை.  ஒருநாள் அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையுடனும், நீண்ட சிக்குப்பிடித்த சடைமுடியுடனும் இருந்த அவர் கையில் ஒரு தண்ணீர் வைத்துக்கொள்ளும் மண்கலயம் இருந்தது. அவரது முகவெட்டு ஏறக்குறைய ராம்சேவக்கை ஒத்திருந்தது. அவரது பேச்சும்கூட ராம்சேவக்கிடம் இருந்து அத்தனைக்கு மாறுபடவில்லை. ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தார். அன்று இரவில் ராம்சேவக்கின் வீட்டில் இருந்து புகை கிளம்பியது; பிறகு நெருப்பின் ஒளிர்வும் தென்பட்டது;; அதன்பின் தீ பற்றிக்கொண்டு கொளுந்துவிட்டு எரிந்தது.

முன்ஷிஜி காணாமல் போனவுடன், ராம்குலம் தனது உறவினர் வீட்டுக்குச் சென்று, அவர் வீட்டில் சிறிதுகாலம் காலந்தள்ளினாலும், அவனது குணங்களுக்கு யாரும் ஒத்துப்போக முடியவில்லை. ஒருநாள் இன்னொருவரின் முள்ளங்கிகளைத் தோண்டியெடுக்க, தோட்டத்தின் உரிமைக்காரர் அவனைப்பிடித்து அறைந்துதள்ளிவிட்டார். இது அவனது கோபத்தைக்கிளறவே, அவரது களஞ்சியத்துக்குச் சென்று அதற்குத் தீவைத்துவிட்டான். களஞ்சியம் முற்றிலும் எரிந்து, ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் பொருள்கள் சாம்பலாகிவிட்டன. போலிஸ் வந்து விசாரித்து ராம்குலம் கைது செய்யப்பட்டான். இந்தக் குற்றத்துக்காக, இப்போது அவர் சுனாரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் இருக்கிறான்.
***
நன்றி : நண்பர் மஜீத் |  amjeed6167@yahoo.com
***
தொடர்புடைய ஒரு பதிவு :
Sadgati (The Deliverance) - Hindi film, primarily made for TV, by Satyajit Ray, based on a short story of same name by Munshi Premchand.

Sunday, November 3, 2013

நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....! - -'துக்ளக்' சத்யா



Image Courrtesy : outlookindia
***
நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....!

சத்யா

// நிரா ராடியாவின் டெலிஃபோன் உரையாடல்களில் உள்ள முக்கியமான ஆறு பயங்கர அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என ஸி.பி.ஐ.-க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த ஆறு பயங்கரங்கள் எவை என்று விவரமாக வெளியிடப்படாததால், என்னவோ ஏதோ என்ற கவலையில் ஆழ்ந்தோம். ஆய்வு செய்வதற்கு முன்பாக, அந்த பயங்கரங்கள் குறித்து ஸி.பி.ஐ. நிரா ராடியாவிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தினால் அது இப்படிதான் இருக்குமோ? //

ஸி.பி.ஐ. அதிகாரி :
உங்க டெலிஃபோன் உரையாடல்களிலே இருக்கிற பயங்கரங்களைக் கேட்டு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி அடைந்திருக்குது. அதைப் பத்தி ஆய்வு செய்யணும்னு உத்தரவு போட்டிருக்குது. மொதல்லே உங்களை விசாரிச்சுட்டா ஆய்வைத் தொடர வசதியா இருக்கும்.

நிரா ராடியா :
என்னுடைய 180 நாள் பேச்சைத்தான் வருமான வரித்துறை பதிவு செஞ்சுது. இதுக்கே இவ்வளவு பயங்கரமான்னு குதிக்கிறவங்க, மொத்த பேச்சையும் கேட்டா என்ன சொல்வாங்களோ? உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன? சின்ன
பயங்கரமாயிருந்தாதான் நான் டெலிஃபோன்ல பேசுவேன். பெரிய விசயம்னா, நேராத்தான் பேசுவேன். அது எங்க இண்டஸ்ட்ரியல் பாலிஸி.

ஸி.பி.ஐ. :
நல்லவேளை, உங்க டெலிஃபோன் பேச்சை மட்டும்தான் ஆய்வு பண்றோம். 'அரசு உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறதுக்கே பல கோடி செலவாகிவிடுது.'ன்னு உங்க தோழிகிட்டே சொல்லியிருக்கீங்க.......

நிரா :
இதுலே என்ன பயங்கரம் இருக்குது? அவங்க செய்யற வேலைக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது எங்க கடமை இல்லையா? 'இதுலே சலுகை காட்டுங்க, அதுலே வரியை ரத்து பண்ணுங்க, அந்த வேலையை எங்க நிறுவனத்துக்குக்
கொடுங்க'ன்னு உரிமையா கேக்கிறோம். சொன்னபடி செய்யுறாங்க. அந்த வேலைக்கு சம்பளம் கொடுக்கிறது தப்பா?

ஸி.பி.ஐ. :
அரசு உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் உங்க கிட்டே எப்படி சம்பளம் வாங்கலாம்?

நிரா :
எங்க கிட்டே மட்டுமல்லே, பல தொழிலதிபர்கள் கிட்டேயும் சம்பளம் வாங்கறாங்க. அவங்களை எல்லாம் விசாரிச்சீங்களா? மாட்டிக்கிட்டேன்னு தானே கேள்வி மேலே கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தறீங்க?

ஸி.பி.ஐ. :
சரி, அவுங்க பெயர் பட்டியலைக் கொடுங்க. சுப்ரீம் கோர்ட் ரொம்ப தொந்தரவு பண்ணா, கேஸ் போட உபயோகமா இருக்கும்.

நிரா :
லிஸ்ட் எல்லாம் கொடுக்க முடியாது. பேரை வெளியே சொல்றதில்லைன்னு அக்ரிமெண்ட் போட்டிருக்கோம். இதுவும் ஸ்விஸ் பேங் கறுப்புப் பண ஒப்பந்தம் மாதிரிதான். உயிரே போனாலும் எந்தத் தகவலும் வெளியே வராது. அப்படியொரு தொழில் கூட்டணி தர்மம்.

ஸி.பி.ஐ. :
'சீனாவும் பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதியிலே ஊடுருவ ஆசைப்படுது. அவர்களை இந்தியா தடுக்கக் கூடாது'ன்னு நீங்க ஒரு மத்திய மந்திரி கிட்டே பேசியிருக்கீங்க. அவரும் 'உரிய நடவடிக்கை எடுக்கிறோம்'னு உறுதி
அளிச்சிருக்காரு.

நிரா :
ஆமா, சீனாவிலேயும் பாகிஸ்தானிலேயும் கூட எங்க வியாபாரம் நடக்குது இல்லே? அதுலே லாஸ் வந்தா நீங்கள் ஏத்துப்பீங்களா? இதெல்லாம் பிஸ்னஸ், நீங்க தலையிடாதீங்க. உங்களுக்குத் தெரியாது.

ஸி.பி.ஐ. :
நீங்க சொன்னா மந்திரிகள் எப்படிகேக்கறாங்க?

நிரா :
என்ன கேள்வி கேக்கறீங்க? பிரதமரே கேக்கும்போது மந்திரிகள் கேட்க்க மாட்டாங்களா?

ஸி.பி.ஐ. :
ஆ...! பிரதமரும் கேட்பாரா?

நிரா :
நீங்களும் சுப்ரீம் கோர்ட் மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் ஷாக் ஆகறீங்களே? நான் சொன்னபடி கேக்கலைன்னா, பிரதமர் பத்தி ஒபாமா கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் இல்லே? அந்த பயம் அவருக்கு இருக்காதா?

ஸி.பி.ஐ. :
புரியலை; பிரதமருக்கு நீங்கதான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கறீங்களா?

நிரா :
எல்லாத்தையும் சொல்லித் தரமாட்டேன். பிஸினஸ் மட்டும்தான். உதாரணத்துக்கு, எந்தெந்த நிலக்கரிச் சுரங்கங்களை எந்தெந்த நிறுவனத்துக்கு ஒதுக்கணும்னு அவருக்கு என்ன தெரியும், பாவம்? நான்தானே சொல்லணும்! கோடிக் கணக்கிலே பணம்புரள்ற விசயமாச்சே! கொஞ்சம் ஏமாந்தாக் கூட அநியாயத்துக்கு கவர்மெண்டுக்கு லாபமாயிடுமே.

ஸி.பி.ஐ. :
நிலக்கரிச் சுரங்கங்களை விதி முறைப்படிதானே ஒதுக்கணும்?

நிரா :
கண்டிப்பா, நாம யாருக்கு ஒதுக்கீடு பண்றோமோ, அதுக்குத் தகுந்த மாதிரி நிலக்கரித் துறை அதிகாரிகள் விதிமுறைகளைத் திருத்திடுவாங்க.

ஸி.பி.ஐ. :
தீவிரவாதி ஜெயில்லேர்ந்தும், கோர்ட்லேர்ந்தும் தப்பிக்கப் போற விஷயத்தைக் கூட ஒரு ஜர்னலிஸ்ட்கிட்டே பேசியிருக்கீங்க.

நிரா :
இந்திய முஜாஹ்தீன் தீவிரவாதி தப்பிச்சதைப் பத்தி கேக்கறீங்களான்னு புரியலை. பொதுவா தப்பிக்கிற தேதி, டைம் மட்டும்தான் எங்க லெவல்லே முடிவு பண்ணுவோம். மத்த விஷயங்களை நீங்க ஆஃப்கானிஸ்தானுக்கு ஃபோன் பண்ணிதான் கேக்கணும். லைன் போட்டுத் தரட்டுமா

ஸி.பி.ஐ. :
ஐயையோ வேண்டாம்.

நிரா :
ஒரு தடவை என்ன ஆச்சு தெரியுமா? காஷ்மீரைத் தாக்கறதா, கல்கத்தாவைத் தாக்கறதான்னு தீவிரவாதிகளுக்குள்ளே சண்டை. நான்தான் தலையிட்டு, இந்த மாசம் காஷ்மீர், அடுத்த மாசம் கல்கத்தான்னு சமரசம் பண்ணிவெச்சேன். இதுக்காக பிரதமர் கூட எனக்கு தேங்ஸ் சொன்னாரு.

ஸி.பி.ஐ. :
என்னது? பிரதமர் தேங்ஸ் சொன்னாரா?

நிரா :
ஆமா. விஷயம் தெரிஞ்சுட்டு, அதுக்கேத்த மாதிரி பிரதமர் வெளிநாடு போயிட முடியுது இல்லே? அதை விடுங்க. சட்டீஸ்கர்லே கூட கலெக்டரைக் கடத்தறதா, கமிஷனரைக் கடத்தறதான்ற மாதிரி சமயங்களிலே தீவிரவாதிகளுக்கு நான்தான் கன்ஸல்டண்டா இருக்கேன். கோரிக்கை நிறைவேறினதும், அவங்களை விடுவிக்கறதுக்கும் ஏற்பாடு பண்றேன். அதனாலே ரெண்டு பக்கமும் என் பேர்லே மரியாதை உண்டு.

ஸி.பி.ஐ. :
சரி. பயமாயிருக்குது. தீவிரவாத விஷயத்தை விடுங்க. நிர்வாக ரீதியான நல்ல பயங்கரங்களைப் பத்திப் பேசலாம். 'எக்கச்சக்கமா சொத்து சேர்ந்து போச்சு, பணத்தை எப்படிக் காப்பாத்தறதுன்னே புரியலை, சொத்து கணக்கு வேறே கேக்கிறாங்க'ன்னு ஒரு மத்திய மந்திரி ஃபோன்லே அழுது புலம்பியிருக்காரு. நான் எப்படியாவது ஹெல்ப் பண்றேன்னு நீங்க அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கீங்க.

நிரா :
எல்லா மந்திரிகளுக்கும் இந்த மாதிரி பிரச்னை ஏற்படறது சகஜம்தான். வருமான வரிச் சட்டத்திலேர்ந்து அமைச்சர்களுக்கு விலக்கு வழங்கற அவசர சட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு பண்றேன்னு உறுதி அளிச்சேன். சுப்ரீம் கோர்ட் கவனிக்கிறதாலே கொஞ்சம் டிலே ஆகுது. மத்திய அமைச்சர்கள் ரகசியக் கூட்டத்திலேயும் இந்த சப்ஜெக்ட் வருது.

ஸி.பி.ஐ. :
அமைச்சர்கள் கூட்டத்திலே கூட நீங்க கலந்துக்குவீங்களா?

நிரா :
ஊஹும். அங்கே எதைப் பத்தி விவாதிக்கணும்னு அஜெண்டா தயார் பண்ணிக் குடுக்கறதோட என் வேலை முடிஞ்சுடும்.

ஸி.பி.ஐ. :
மந்திரி சபை கூட்ட அஜெண்டாவை நீங்க தயார் பண்றீங்களா?

நிரா :
எல்லா கூட்டத்துக்கும் நான் தயார் பண்ண மாட்டேன். முக்கியமான கூட்டத்துக்கு மட்டும்தான் 'மத்திய அரசு - தொழிலதிபர்கள் ஒப்பந்த’ப்படி அரசு நடக்கலைனா, அதை சரி செய்ய வேண்டியது என் வேலையாச்சே!

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே ஒரு தடவை ஸி.பி.ஐ. அதிகாரிகள் கிட்டே நீங்க கோபமா பேசினது கூட பதிவாயிருக்குது. இதோ... பேச்சைக் கேளுங்க....

நிரா :
ஓ...... இதைச் சொல்றீங்களா? மத்திய அமைச்சர்களும் அவங்களுக்கு வேண்டிய அதிகாரிகளும் வழக்குலே மாட்டும் போது, ஸி.பி.ஐ. சார்பா அவங்க மேலே எஃப்.ஐ.ஆர். போடறது சட்ட அமைச்சரோட வேலை. ஒரு தடவை சட்ட அமைச்சர் வெளிநாடு போயிருந்தப்போ, ஸி.பி.ஐ.யே எஃப்.ஐ.ஆர். போட்டுடுச்சு. அதான் 'சட்ட மந்திரி இல்லைன்னா என்ன? என் கிட்டே கேட்டிருந்தா நானே எஃப்.ஐ.ஆர். போட்டிருப்பேன் இல்லே? உங்களுக்கு என்ன அதிகாரம்?'ன்னு நல்லா கேட்டேன். அதான் இது.

ஸி.பி.ஐ. :
எஃப்.ஐ.ஆர். நீங்க எப்படிப் போடலாம்?

நிரா :
ஏன்? நான் என்ன புதுசாவா எஃப்.ஐ.ஆர். போடுறேன்? நம்ம ஆளுங்க, வழக்குலேர்ந்து நல்லபடியா தப்பிச்சு வர வேண்டாமா? ஏதாவது பிரச்சனை ஏற்பட்டா, எங்க பாஸ் என்னைத்தானே கேப்பார்?

ஸி.பி.ஐ:
கிரிமினல் எம்.பி.க்கள் பிரதமரை கேரோ பண்ண திட்டம் போட்டிருக்கிறதாக நீங்களும் ஒரு பெண் நிருபரும் பேசியிருக்கீங்க....

நிரா :
ஐயோ... அது பயங்கர ஜோக்! சீனியர் கிரிமினல் எம்.பி.க்கள் மேலே பல வழக்குகள் இன்னும் வாபஸ் ஆகாம இருக்குது. அதை எல்லாம் வாபஸ் வாங்க உடனே நடவடிக்கை எடுக்கணும்னு பிரதமரை ஹவுஸ் அரெஸ்ட் செய்ய திட்டம் போட்ட தகவல் எனக்கு கிடைச்சது. பிரதமரை எப்படியாவது காப்பாத்திட்டா, நமக்கு பெரிய அஸைன்மெண்ட் கிடைக்கும்னு எங்க பாஸ் என்கிட்டே சொன்னார். உடனே நான் கிரிமினல் எம்.பி.க்களோட ஃபோன்லே பேசி, வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா ஃபைல்ஸும் கூடிய சீக்கிரம் காணாமப் போகும்னு உறுதி அளிச்சேன். அப்புறம்தான் பிரச்னை முடிஞ்சது.

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே நீங்க நல்ல விஷயமே பேசினது இல்லையா?

நிரா :
எப்பவாவது அப்படி பேச்சு வரும். உடனே 'ராங் நம்பர்'னு வெச்சுடுவேன்.

***

நன்றி: துக்ளக் (30.10.2013) , சத்யா, 
தட்டச்சு உதவி : தாஜ்

Friday, November 1, 2013

நானும், குலாம் ஃப்ரீத் மக்பூல் சாப்ரியும் - சடையன் அமானுல்லா

ஜெதபு என்ற தலைப்பில் ஆபிதீன் நானா குலாம் ஃபரீத் மக்பூல் சாப்ரியின் ஒரு கவ்வால் பாடலை ( எல்லோரையும் போல கவ்வாலி என எழுத பிடிக்கவில்லை, தமிழில் காவாலி என்றால் கெட்ட சகவாசம் உள்ளவன் எனும் அர்த்தமாம்) ப்ளஸ் ல் இட்டிருந்தார்கள்

எனக்கு சாப்ரி பிரதர்ஸ் பரிச்சயமானது 1974 ல், ஊரிலே ஒருமுறை ட்ரான்சிஸ்டர் ரேடியோ வை உருட்டிக் கொண்டிருந்த போது, சாப்ரியின் பாடல் சிற்றலையில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. சாப்ரி சகோதரர்களின் குரலே ஆடறுக்க கத்தியை தீட்டும் போது கரகர வென சத்தம் வருமே அதுபோல கரகர குரல், அதுவும் சிற்றலையின் கர கரப்பும் சாப்ரியின் கர கரப்பும் சேர்ந்து, ஒரே கறகற இருந்தாலும் பாடலின் இனிமையில் ஈர்க்கப்ப்ட்டு ரசித்துக் கொண்டிருந்தேன். சிற்றலையில் வந்தது குவைத் வானொலி. சொல்லி வைத்தது போல தினமும் இந்திய நேரப்படி 9.30 மணிக்கு சாப்ரி கவ்வால் வந்து கொண்டிருந்தது. அன்றிலிருந்து சாப்ரி யின் பரம ரசிகனாகி விட்டேன்.

அந்தக்காலம் முதுகலை முடித்து விட்டு ஊரில் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தேன். முதுகலை படித்துக் கொண்டிருந்த போது என் மாமி , “ எம் மருமொவன் எம்.ஏ படிக்கிறாரு, படிச்சு முடிச்சுட்டா வீட்டு வாசலுக்கு ஜீப் வரும் வேலை கொடுக்க “ என்பார்கள். ஒரு சைக்கிள் கூட வரவில்லை என்பது வேறே விஷயம். கடைசியில் எல்லோரும் போல நானும் துபாய் எனும் பாலைவன ஜோதியில் (1976) ஐக்கியமாகி விட்டேன்.

துபாயில் வேலையில்லாத “ கொமரு” ஆக ஒரு 3 மாதம் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில், காலையில் டிபன் சாப்பிட்ட பிறகு காதர் ஹோட்டல் பக்கம் வந்து விடுவேன். அல் மாலிக் நியூஸ் ஏஜன்சியில் நின்று கொண்டே குமுதம் ஆனந்த விகடன் வார இதழ் , அடுத்து தந்தி தினமணி படித்து விடுவேன். அல் மாலிக்கில் தாடி வைத்த பாகிஸ்தானி ஒருவன் ஜாவ், ஜாவ் என்பான் , காதிலேயே வாங்கிக் கொள்ளமல் படித்து விட்டுதான் கிளம்புவேன். அடுத்த படையெடுப்பு, அல் மாலிக்கை சுற்றியுள்ள கேசட் கடைகள் அங்கே சாப்ரி பிரதர்சின் பாடல்களை பெரிய ஸ்பீக்கர் வைத்து ஏதோ தேவர் ஜெயந்தி விழாவில் ஒலிபரப்புவது போல ஒலிபரப்புவான். சாப்ரி பாடல்களை கேட்கும் போதே ஒரு ஜதபு,இஷ்க் ஏற்படும். அப்புறம் வேலை கிடைத்து  சம்பளம் வாங்கிய போது ஒரு நேசனல் தாமரைப்பூ கேசட் பிளேயர் வாங்கி சாப்ரி பிரதர்ஸ் பாடல்கள் எல்லாம் சலிக்க சலிக்க கேட்டேன். ஊருக்கு ஸஃபர் செய்யும் காலங்களில் இந்தக் கேசட்டை வாங்கிவந்து ஊரிலும் கேட்பேன். சாப்ரி பிரதர்சின் பாடல்கள் என் அம்மாவிற்கும் பிடித்துப் போய்விட்டது. அசர் தொழுகைக்குப் பின் " தம்பி அந்த அல்லா பாட்டை போடேன்" எனச் சொல்லும் அளவிற்கு ரசிகையாகி விட்டார்கள். என் மாமி வந்தால் "நாகூர் தர்காவில் இருப்பது போல இரிக்கி அந்த பீர்சா பாட்டை போடு" என்பார்கள்.

1985 களில் PTV 1 , PTV 2  சேனல்களில் ஜுமேராத் (வியாழன் மாலை) சாப்ரி பிரதர்சின் கவ்வால் பாடல்கள் ஒலிபரப்பாகும். நல்ல சத்தமாக வைத்து கேட்டுக் கொண்டிருப்பேன். ரூமுக்கு வரும் நண்பர்கள், துபாயில் பாக்கிஸ்தான் டி.வி பாக்குற ஒரே தமிழன் நீதான் என்பார்கள்.

1990 துபாயில் சாப்ரி பிரதர்சின் லைவ் கச்சேரி, விடுவேனா , முதல் ஆளாக டிக்கட் வாங்கி வைத்து விட்டேன். அல் நாசர் ஐஸ் ரிங்கில் கச்சேரி. பாவிப்பசங்க ஐஸ்தரையின் மேலே ப்ளைவுட் பலகையப் போட்டு அதற்கு மேலே நாற்காலியை போட்டு வைத்திருந்தார்கள்,  குளிர் நடுக்கி எடுத்து விட்டது.   சுமார் 2 மணி நேரக் கச்சேரி, பாக்கிஸ்தானியர்கள் ஜதபு வந்து ஒரே மாதிரி ஆடி ஆடி ரூபாய் நோட்டை சாப்ரி பிரதர்சின் ஆர்மோனியத்தின் மேல் வைத்துக் கொண்டிருந்தார்கள்.

கச்சேரி முடிந்ததும், எல்லோரும் வரிசையில் நின்று கை கொடுத்து வந்தார்கள். நானும் வரிசையில் நின்று கொண்டேன். என் முறை வந்தது. கை கொடுத்தபோதே “ ஆப் கிதர் கா ஹே “ என்றார். சாப்ரி பிரதர்சின் மூத்தவர். மத்ராசி என்றேன்.

”பஹ்ஹுத் அச்சா மத்ராஸ் மே ப்ரோக்ராம் கியா, மவுண்ட் ரோட் தர்கா மே” என்றார். இன்னும் அதிகம் பேச ஆசை பின்னால் நின்றவன் பஸ் பஸ் ஜாவ் என்றான். நகர்ந்து வந்து விட்டேன். இன்றளவும் சாப்ரி பிரதர்ஸ் கவ்வால் என்றால் ஒரு தனி இஷ்க்  

***

நன்றி : அண்ணன் சடையன் சாபு
***

Thanks to : Kyle Musicbizpro

Who am I? - J. Krishnamurti

Someone asked Jiddu Krishnamurti "Who are you?"...
***

***
Thanks to : tamedmind