Friday, July 7, 2023

ஃபோன் நகரம்‼️ (சிறுகதை) - எஸ்.எல்.எம். ஹனீபா


ஃபோன் நகரம்

எஸ்.எல்.எம். ஹனீபா

அவன் அமரனான் : அவன் பொன்னகரம் படைத்தான் - நான் ஒரு போன் நகரம் எழுதினேன்..

வீட்டின் முற்றம் முழுவதும் விதவிதமான பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கும். அதிகாலையில் பனிகுளித்து, முகங்களில் அழகும் மணமும் துளிர்த்து புத்தம்புதிய மணமகள் போல நிற்கும் அந்தப் பூஞ்செடிகளைத் தினந்தினம் தரிசித்துத் திழைத்து நிற்கிறேன்..

அன்றும் வழக்கம்போல நிற்கிறேன், எனது பத்துவயதுச் செல்லக்குட்டி பாடசாலைக்குப் போக  ! அவளை தரிசிக்க.... 

அதோ வருகிறாள் எனது சசிக்குட்டி. அவளுக்குப் புன்னகையே முகமாக வாய்த்துள்ளது, அத்தனை அப்பாவித்தனமும் குறும்பும் நிறைந்த, நிலவில் வடித்த பேரழகு முகம் அவளுக்கு..

"ஹாய் அங்கிள் ! குட் மோர்னிங்"

"குட் மோனிங், குட் மோனிங்.. வாடா செல்லம்.. எப்டி இருக்காய் ?" - கேட்டுக்கொண்டே அந்தக் கணத்தில் பிறந்த ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பூஞ்செடிகளைப் பார்த்தேன்.. மிகவும் அழகானவை அந்தப் பூக்களா அல்லது எனது சசிக்குட்டியா ? சந்தேகம் கலைந்தது, சசிக்குட்டிதான் பேழகு ! 

அவள் பாடாசாலைக்குப் போகும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு வகையான பூக்களில் ஒன்றைப் பறித்துக் கொடுப்பேன். அன்றும் அவளுக்கு ஒரு ரோசா மலரைப் பறித்துக் கொடுத்தேன்..

முத்துப் பற்கள் பளிச்சிட "தேங்க் யூ அங்கிள், Bye.." 

எனக்கும் அவளுக்கும் இடையே இந்தச் சந்திப்புத் தினமும் நடக்கும்.. 

மாலை நேரங்களில் அவள் ஓதல் பள்ளிக்குப் போவாள். அப்போது சற்று வெயில் நேரமாக இருப்பதால் நான் கொஞ்சம் வீட்டுக்குள் சாய்ந்து கிடப்பேன். சொந்த வீட்டுக்குள் வருவதுபோல எனது அறைக்குள் வருவாள். படுத்துக் கிடக்கும் எனது கைகளைப் பற்றி, கைகுலுக்கிவிட்டுச் செல்வாள். சிலபோது எமது கைகளில், நெற்றியில், தலையில் முத்தமிட்டுச் செல்வாள். அந்த வயதில் எனக்கொரு மகள் இருந்து அவள் இதையெல்லாம் செய்தால் எத்தகைய உணர்வுகள் ஏற்படுமோ அதே உணர்வுகளைத்தான் சசியின் செய்கைகளும் எனக்குள் ஏற்படுத்தின. 

அவளுக்குச் சிறுசிறு பொருளாதாரத் தேவைகள் ஏற்படும். படிப்புச் செலவுகள், பாடசாலை உபகரணங்கள் வாங்க என்று என்னிடம் எப்போதாவது காசு கேட்பாள், அதையும் உரிமையோடு கேட்பாள். கொடுத்து உதவுவேன்.

வருடங்கள் அவளை முன்னோக்கி நகர்த்தி வந்தன. வேகமாக, அழகாக வளர்ந்து வந்தாள்.

ஒருநாள் மாலை நான் அறையில் சாய்ந்து கிடந்தேன். சசி திடீரென ரெண்டு பையன்களோடு எனது அறைக்குள் வந்தாள். ஓதல் பள்ளி போகிற வழியில் வந்திருக்கிறாள். அந்தப் பையன்களில் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஒருவனைச் சுட்டிக்காட்டி "அங்கிள், இவனைத்தான் நான் லவ் பண்றேன்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாகப் போயிற்று. இந்தச் சசிக்குட்டி அவ்வளவு வளர்ந்து விட்டாளா இப்போது ? எனக்குள் ஒருவிதமான பிரிவுத் துயரமும் அவளது வாழ்க்கை குறித்த அச்சமும் தோன்றிற்று... 

மாலை நேரங்களிலும் அவள் எங்காவது போகும்போது என்னையும் கூப்பிடுவாள். இருவரும் இரண்டு சைக்கிள்களில் சவாரி போவோம் கண்டதையும் பேசிச் சிரித்தபடி... பாடசாலையில் நடக்கும் சுவாரஷ்யமான விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பாள்.. அவளுக்குள் அப்போது பால்யபருவக் காதல் உணர்வுகள் முனைப்புற்றிருந்தன.. அவளது 'லவ்வர்' பையன் தூரத்தில் தென்பட்டதும் எனக்குச் சைகை காட்டி, என்னைக் 'கழற்றி விட்டுவிட்டு' அவனை நோக்கிச் சைக்கிளில் பறந்துவிடுவாள்.. 

அப்போது அவள் முன்னைய பையனை விட்டுவிட்டு இன்னொரு பையனுடன் நட்பாகி இருந்தாள். அது குறித்தும் அவளிடம் கேட்டேன். "என்னடி சசி, ஆளை மாத்திட்டியா ? 

"அவன் சரில்லை அங்கிள், என்னை விட்டுட்டு இன்னொருத்தியப் புடிச்சிட்டான், எனக்கென்ன ஆளா பஞ்சம், நானும் ஆள மாத்திட்டன்" என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.! 

இவள் தொடர்ந்து நன்றாகப் படிப்பாளா ? பொறுப்புடன் நடந்து கொள்வாளா ? வாழ்க்கையில் சறுக்கி விடுவாளா ? என்ற கேள்விகள் என்னை அடிக்கடி துளைத்தெடுத்தன.

ஒருநாள் மாலை பாதையில் என்னைச் சந்தித்தவள் திடீரென "அங்கிள், எனக்கொரு ஐயாயிரம் ரூபா காசு வேணும்" என்றாள். நானோ திடுக்கிட்டுப் போனேன்.

"என்னத்துக்குச் சசி உனக்கு இப்ப இவ்வளவு காசு ? என்ன அவசரம் ?" என்றேன்.

"நான் நாலைஞ்சி பொடியன்மார லவ் பண்ணிட்டன் அங்கிள்.. எல்லானும் ஏமாத்திப்போட்டு விலகிட்டான்கள். இப்ப இருக்கிறவனும் போய்ருவானோ எண்டு பயமாக் கிடக்குது, அவனும் இல்லாம எனக்கு இரிக்க ஏலாது. வாற கிழம அவன்ட பிறந்த நாள். அவனுக்கொரு ஃபோன் வாங்கிக் குடுக்கணும்,  அவனும் அதத்தான் கேட்கான் அங்கிள்.. எப்டியாவது வாங்கிக் குடுக்கத்தான் வேணும், அதுக்குத்தான் ஐயாயிரம் ரூபா வேணும்" 

நான் சிலையாகிப் போனேன் ! இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் ! இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறது ? சசியைப் பற்றிய ஒரு பேரச்சம் எனக்குள் பொங்கிப் பிரவாகித்து வெடித்தது ! 

"உன்ட நெலெம எனக்கு விளங்குது சசி.. ஆனா இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோன்னுதான் கவலையாக் கிடக்கு. நீ அவனுக்கு போன் வாங்கிக் குடுக்க நினெக்கிறதுல தப்பில்ல.. நான் பென்ஷன்காரன், ஒனக்குத் தெரியும்தானே சசி, இருநூறு முன்னூறுன்னா எடுத்துக்கேலும்..

ஐயாயிரத்திற்கு ஒடனமே எங்க போற நான்.. அதான் கவலையாக் கிடக்குது..." - நான் மிகுந்த சங்கடப் பட்டேன்.

கொஞ்ச நேரம் நெற்றியில் கோடுகள் படர, புருவங்களைச் சொருக விட்டு எதையோ கடுமையாகச் சிந்தித்துத் தலை நிமிர்ந்தவள், "சரி அங்கிள், பரவாயில்லை, நான் சமாளித்துக் கொள்றன்" என்று சொல்லி என் வயிற்றில் செல்லமாகத் தட்டிவிட்டுப் புன்னகையுடன் போய்விட்டாள். 

அவளது பாடசாலைக்கு அருகில் ஒரு ஃபென்சி ஸ்டோர் கடை இருந்தது. கடைக்காரர் தமிழ்ப் படங்களில் வரும் வில்லன்கள் போலிருப்பார். அண்டா வயிறு, பருத்த ஷரீரம், காட்டுத்தனமாக வளர்ந்துகிடக்கும் அரைவாசி நரைத்த தாடி, கழற்றாத தொப்பி, அஞ்சி நேரத் தொழுகையாளி, அஷில் முஸ்லிம், பெயர் நன்றாக நினைவில் உள்ளது, சொல்ல மாட்டேன். 

அந்தக் கடைக்கு சசி அடிக்கடி போவாள். பாடசாலை உபகரணங்கள் வாங்குவாள். அவள் கடைக்கு வந்தால் கடைக்காரர் குளிர்ந்துபோவார். பொருள்களை அவசரமாகக் கொடுத்து அனுப்பாமல் இழுத்தடிப்பார். அவளைச் சீண்டிவிட்டுப் பேச்சுக் கொடுத்துக் கலாய்ப்பார். பொருள்களைக் காட்டும் சாட்டில் கைகளைத் தொடுவார், தேவையில்லாமல் உரசிக்கொண்டு நிற்பார், பட்டும்படாத மாதிரி அவளது மார்பில் பிஷ்டங்களில் உதடுகளில் தட்டி, வருடி விடுவார்.. இவற்றையெல்லாம் அவள் கண்டுகொள்ளாமல் இருப்பாள், போகும்போது அவரிடமிருந்து இலவசமாகக் கிடைக்கும் டொஃபி, சுவிங்கம் மாதிரி அற்பச் சந்தோஷங்களுக்காக ! 

கடைக்காரரின் இந்தக் குஷால் செய்கைகள் பற்றியெல்லாம் சசி என்னிடமும் சொல்லியுள்ளாள். அந்த மனிதன் ஒரு புழுவைப் போல என மனக் கண்களில் தோன்றி மறைவார்...

என்னிடம் ஐயாயிரம் ரூபா கேட்ட அன்றைய தினம் மாலை சசி அந்தக் கடைக்குச் செல்கிறாள்...

வெற்றிலைக் கறைபடிந்த கோரமான பற்களைக் காட்டிச் சிரித்து வழிந்து சசியை வரவேற்கிறார்.

"மாமா, எனக்கொரு ஹெல்ப் பண்ணுவீங்களா..?"

"உனக்கில்லாத ஹெல்ப்பாடி செல்லம்.. சொல்லன் பார்ப்பம், உனக்காக நான் என்னெண்டாலும் செய்வன்.." சொல்லிக்கொண்டே அந்தப் புழு சசியின் கைவிரல்களைப் பிடித்து மெல்ல அழுத்துகிறது... 

"மாமா, வாப்பா வெளிநாட்டுல இரிந்து வாற மாசம் காசி அனுப்புவாங்க, காசி கிடைச்சதும் தந்துர்றன்..  எனக்கொரு ஐயாயிரம் ரூபாய் காசி கடனா தருவீங்களா..?

" என்ன புள்ள, இப்டி சிம்ப்பளா ஐயாயிரம்னு கேட்காய்.. பெரிய தொகையாச்சே.. எப்டி தாற சின்னப் புள்ள உன்னய நம்பி..?"

"என்ன மாமா.. சும்மா கதய வளக்காதீங்க, நான் பெரிய புள்ளயாகி மூணு வரிசம் இப்ப ! வாற டிசம்பருக்கு ஓ.லெவல் எழுதப் போறன், காசி தர ஏலுமா ஏலாதா, அவ்ளோதான் கத !"

"டியே, டியேய். கோவிச்சுக்காதடீ, இப்ப லாச்சிக்குள்ளால அவ்ளோ காசில்ல, அந்திக்கி யாவாரம் நடந்துதான் காசி சேரணும். நீ கவலப் படாத, நாளெக்கி ஸ்கூலுக்கு கொஞ்சம் நேரத்தோட வா, நான் சுபஹ் தொழுதிட்டு வந்து கொஞ்சம் சாஞ்சி கிடப்பன், கட துறக்கிறதுக்கு கொஞ்சம் முந்தி ஒரு 6.45 க்கிப் போல வா, கடக்கிப் பின்னால் வந்து கதவ தட்டு, நான் எழும்பி கதவ தொறந்து நீ கேட்ட காச தாறன்" என்று சொன்ன புழுவின் கண்கள் சசியின் மார்புகளின் மீது பரவுவதை சசி அவதானித்தாள்... அவளுக்கு உள்ளேயும் ஏதோ செய்வதாக உணர்ந்தாள்..

"சரி மாமா, நான் காலைல வாறன் .."  என்று நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து ஒரு யோகர்ட்டைத் திணித்தது புழு.

இன்று கையைப் பிடித்து இழுத்த இழுப்பில் நாளை காலை தனக்கு நடக்கப் போவதை நன்றாக உணர்ந்துகொண்டாள்.

மறுநாள் காலை 6.45 மணிக்குக் கடைக்குள் நுழைந்த சசி 7.00 மணிக்கு வெளியே வந்தாள்... 

சீருடையையில் கசங்கி இருந்த இடங்களை, பர்தாவை தடவிவிட்டுச் சரிசெய்தவாறே கைக்குட்டையால் உதடுகளையும் கன்னங்களையும் அழுத்தித் துடைத்தவாறு பாடசாலை 'கேட்'டை நெருங்கினாள்...

'கேட்' அருகில் நின்றுகொண்டிருந்த அவளது 'லவ்வ'ரின் கைக்குள் அந்த ஐயாயிரத்தை வேண்டா வெறுப்பாகத் திணித்துவிட்டு, அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் பாடசாலைக்குள் நுழைகிறாள்...

*

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா

https://www.facebook.com/slm.hanifa