Sunday, July 28, 2013

மோடி பிரதமர்: மண்ணால் மாளிகை கட்டுகிறார்கள் - தாஜ்

என்ன ஆச்சரியம், 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?' என்று நான் பயங்கரமான முகபாவத்துடன் (அதாவது ,இயல்பாக) ஒருவரை நினைத்து பாடிக்கொண்டிருக்கும்போது அவரிடமிருந்தே கட்டுரை வந்தது...! - ஆபிதீன்

***
அன்பு ஆபிதீன்...
இது அரசியல் கட்டுரை.
நான் இன்னும் திருந்தவில்லை என்பதற்கு
நிதர்சனமான சாட்சி!
- தாஜ்
***

Image Courtesy : indiatimes.com

மோடி பிரதமர்:
மண்ணால் மாளிகை கட்டுகிறார்கள்


-தாஜ்

'யார் பிரதமர்...
கருத்து கணிப்பில் மோடி முன்னிலை!'
-தினமலர் - 27.7.2013

*
ஒரு டி.வி. சேனலும்,
ஓர் ஆங்கில பத்திரிகையும்
சேர்ந்து எடுத்த சர்வேயில்
மோடி முன்னிலையாம்!

குறிப்பிட்ட டி.வி. சேனலின் பெயரையோ
அந்த ஆங்கில பத்திரிகையின் பெயரையோ
தினமலர் வெளியிடவில்லை.

*
இது
'அரசியல் சித்து விளையாட்டின்
அரிச்சுவடிப் பாடம்.'
விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

மூன்றாம் தரமான
'சகுனி' என்கிற ஓர் தமிழ்ப் படத்தை
சமீபத்தில் பார்த்தேன்.
அதில்
இப்படியான சித்து விளையாட்டு அரசியல்களை
இன்னும்கூட
மேலாக காண்பித்திருக்கிறார்கள்!

*
ரிலையன்ஸ் மாதிரியான
குஜராத் தொழில் நிறுவன முதலாளிகள்
மோடியால்
கோடி கோடியாக பலன் பெற்றவர்கள்.
பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்!
அவர்கள் மோடிக்கு காட்டும்
பிரதி உபகாரம்தான் இது.
மோடியின் விருப்பம் அறித்து
அவரை பிரதமராக ஆக்கிப் பார்க்க
ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய தொழில் நிறுவன
முதலாளிகளிடம் விளம்பரம் பெறும்
அத்தனை இந்திய இதழ்களும்
டி.வி. மீடியாக்களும்
அந்த நிறுவனத்தார்கள் இடும் ஆணையை
சிரமேல் கொள்கிறார்கள்.
அதனால்தான்...
தேர்தல் வர
இன்னும் ஒரு வருஷ காலம் இருக்கிற போதே
ஜனங்களிடம் விற்கும் பொருள் மாதிரி
அவர்களின் மனதில் மோடியை பதிக்கவும்
ஏற்றுக் கொள்ள வைக்கவும்
M.B.A.
'வியாபார' நுணுக்கத்தோடு
அதிகத்திற்கும் அதிகமான
விளம்பரங்கள்
நித்தம் நித்தம் பல வழிகளில்
வெளிப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த வகையில் வந்திருப்பதுதான்
தினமலரில்
இந்தக் கருத்து கணிப்பு வெளியீடு!

வழிமுறையாக
அப்பப்ப செய்திகள் தந்து செயல்படுபவர்கள்
மோடிக்கு
கிட்டட்ட
செங்கோட்டையில்
அவருக்கு சிம்மாசன எழுப்பி
கிரீடமும் தரித்துப் பார்த்துவிட்டார்கள்.
ஆனால், மக்கள்தான் அது குறித்த
புரிந்த உணர்வை
வெளிப்படுத மாட்டேன் என்கிறார்கள்!
அதனால்தாலும்தான்
இப்படி திரும்பத் திரும்ப
வித விதமான விளம்பர யுக்திகளை
அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

பச்சை மணலால்
அவர்கள் கட்டும் மாளிகையை குறித்து
யார்தான் என்ன சொல்ல முடியும்?
எதிர் காற்றின் வேகம் அறியாத
சின்னக் குழந்தைகள் அவர்கள்.

*
மோடி பிரதமராகுவதற்கான
வாய்ப்புகள்தான் என்னென்ன?

எந்தெந்த மக்களிடம்
நீங்கள் அபிப்ராயம் கேட்டீர்கள்?

நாடு தழுவியா?
அல்லது
குஜராத்தில் மட்டுமா?

- இப்படியெல்லாம்
நீங்கள் சகஜமாக கேட்கும்பட்சம்
அந்த மீடியாக்காரர்களும் சரி...
பி.ஜே.பி.காரர்களும் சரி கோபப்படுவார்கள்.
இந்த பி.ஜே.பி.காரர்களின் கோபம்
கொஞ்சம் கூடுதலாகவே தெறிக்கும்.
அவர்களிடம்
அது எப்பவுமே ஸ்பெஷலானது.
வானுக்கும் மண்ணுக்கும்
தாண்டவமாடக் கூடியது.

தாண்டவமாடட்டும் பரவாயில்லை.
அதன் பின்னராவது தெளிவு செய்வார்களா?
மாட்டார்கள்.
"ஏக இந்திய வாக்காளர்களும்
மோடிக்கு ஓட்டளிக்க
துடியாய் துடித்துக் கொண்டிருக்கிற போது...
இது என்ன அற்பக் கேள்வி?"
கேள்வியோடு விட்டுவிட மாட்டார்கள்...
பார்வையால் நம்மை எரித்துவிடவும் பார்ப்பார்கள்.

உங்களுக்கு தெரியுமா...?
பி.ஜே.பி.காரர்களின் கோபம்
உலகப் பிரசித்தம்.
"இது எங்கள் நாடு.
காலச் சூழலில்
பவித்திரம் அற்ற அபிஷ்டுக்களிடம்
இந்நாடு சிக்கிக் கொண்டிருக்க...
எப்படி நீங்கள்
இப்படி கேள்வி கேட்கலாம்?' என்பதுதான்
அவர்களின் உடன் பதிலாக இருக்கும்.

உயர் ஜாதி மக்களின் கட்சியாயிற்றே
அவர்களும் அவர்கள் கட்சியும்!
நாமும் அவர்களை நோக்கி
கேள்விகளை வைப்பதும்
ஒருவகையில் தவறுதானே?

*
ஒரு எம்.பி., இரண்டு எம்.பி.கள் கொண்ட
வடகிழக்கு மாகாணங்கள்/ தீவு பிரதேசங்கள்/
பாண்டி/ கோவா/ டெல்லி.. போன்ற
சிறிய மாநிலங்களை தவிர்த்து
பெரிய மாநிலங்களாக கருதப்படும்
சுமார் 25-ல்
பி.ஜே.பி.க்கென்று நம்பகமான
ஓட்டு கிட்டும் மாநிலமாக கருதக் கூடியது
ஒரே ஒரு மாநிலம்தான்.
அது குஜராத்!
நான் சொல்லாவிட்டாலும்
உங்களுக்கே விளங்க வரகூடிய ஒன்று.

பிற அத்தனை மாநிலங்களிலும்
பி.ஜே.பி.க்கு அத்தனை செல்வாக்கு இல்லை,
மத்தியப் பிரதேசம்,
குஜராத் அளவில் அவர்களுக்கு சாதகமான
மாநிலமே என்றாலும்...
இன்றைய அரசியல் போக்கின் படிக்கு
மோடியை
அந்த மாநில முதல்வர் 100 சதவிகிதம்
ஏற்பதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தில்
நடைபெற போகும்
சட்டசபை தேர்தலில்
மோடியின் புகைப்படமில்லாத போஸ்டர்களை
உபயோகிக்க இருப்பதாகவும் செய்தி!

'போஸ்டரில் சுஷ்மா சுவராஜ்
போன்றவர்களின் படங்கள் இருக்கும் போது...
ஏன் மோடியின் புகைப் படத்தை
உபயோகிக்கவில்லை என்பதற்கு?'
ஏகதேசமாய் ஏதோ ஓர் காரணம் சொல்கிறார்
மத்தியப் பிரதேச பி.ஜே.பி. முதல்வர்...
சிவராஜ்சிங் சவுகான்!

பி.ஜே.பி.யின்
உத்திரப் பிதேசத்தின் நிலை..
சாட்சாத் தமிழகத்து பி.ஜே.பி.யின் நிலைதான்!
அத்தனைக்கு பாவம்.
கூட்டணிக்கு கட்சிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்!
இங்கே...
வி'ச'யகாந்தையும் / மருத்துவ மேதையையும்/
ஈழம் பெற்றுத் தந்த பேச்சாளர் சிங்கத்தையும்
கூட்டணிக்கு பி.ஜே..பி. நாடிக் கொண்டிருப்பது மாதிரி.

பீகார் முதல்வர் நிதீஷ்குமார்...
கடந்த குஜராத் கலவரத்திற்குப் பிறகு
மோடியை
அவர் ஏற்பதே இல்லை.
சோஷலிஸ்ட் வழி வந்தவரிடம்
கொஞ்சம் சுரணையும் இருக்கிறது.

ஒரிசா...
அப்படியும் இப்படியுமான நிலை.

ராஜஸ்தான்...
ஒரு காலத்தில் பி.ஜே.பியின்
கோட்டையாக இருந்தது நிஜமென்றாலும்...
போன பாராளுமன்ற தேர்தலோடு
அந்த அதிர்ஷ்டம்
அவர்களை விட்டு போய்விட்டது.

ஹரியான...
இரண்டு கூட்டணிக்கும் சம அளவில்
கை கொடுக்கலாம்.

மேற்கு வங்கத்தைப் பற்றி...
பி.ஜே.பி. கனவு கூட காணமுடியாது.
காங்கிரஸ் மாதிரி தேர்தலை
வேடிக்கை மட்டும் பார்க்கலாம்.
இருந்தும்
பி.ஜே.பி.யைவிட காங்கிரஸ் அங்கே மேல்.

பஞ்சாப்பில்...
அகாலிதளத்தின் ஆதிக்கம்தான் எப்பவும்
அவர்களே இப்பவும் வெல்ல வாய்ப்புண்டு.
அகாலி தளம் பி.ஜே.பி.யின்
நிரந்தர கூட்டணி நண்பன் என்பதால்
பி.ஜே.பி. மார்தட்டிக் கொள்ள முடியும்.

மகாராஷ்டிராவில்..
அவர்களது ஆர்த்மார்த்தமான
'சிங்கிடி முங்கிடி' தோழமையான
சிவசேனா இரண்டாக
உடைந்து போய்விட்டநிலையில்
முன்பு பெற்ற தொகுதிகளைக் கூட
அவர்கள் இம்முறை வெல்ல முடியாது.
தவிர, மகாராஸ்டிரா
காங்கிரஸின் சீதன பூமி.

தெற்கில் உள்ள நான்கு மாநிலங்களிலும்
பி.ஜே.பி. கூட்டணி
10 -15 எம்.பி.தொகுதிகளை பெற்றாலே அதிகம்.
தெற்கிற்கும் பி.ஜே.பி.க்கும் ஆகாது.
கர்நாடக மக்கள் திடுமென அவர்களை
தலையில் வைத்து கூத்தாடி வேகத்திலேயே
போட்டும் உடைத்துவிட்டார்கள்!

குறிப்பாக நம் தமிழகத்தில்...
ஜெயலலிதா அதிக வெல்லும் வாய்ப்பிருக்கிறது.
2-g பணத்தை கலைஞர் குடும்பம்
என்றைக்கு எண்ணத் துவங்கியதோ
அது இன்னும் தீர்ந்தபாடில்லை!
அவ்வளவு பணத்தையும்
அத்தனை எளிதில்
எண்ணித் தீர்த்துவிட முடியுமாயென்ன?
இந்த இடைவெளியில்
ஜெயலலிதாவின் கொடி
விண்ணைத் தாண்டிப் பறக்கிறது.

தமிழகத்து முதல்வர் ஜெயலலிதா
பி.ஜே.பி.க்கு ஆதரவாளராக இருப்பதால்...
அவர் பி.ஜே.பி. கூட்டணியில் சேராவிடினும்
தேர்தலுக்குப் பிறகு
கொல்லைபுறமாக பி.ஜே.பி.க்கு...
அதுவும் நண்பர் நரேந்திர மோடிக்கு மட்டும் 
ஆதரவு தர வாய்ப்புண்டு.

அதுவும்...,
அந்த நேரத்து
குழப்பங்களையும் -
தெளிவுகளையும் பொருத்த விசயமது!
பேசியபடிக்கு,
உதவிப் பிரதமர் பதவியை கௌரவக் குறைவாக கருதி
நேரடியாக 'பிரதமர்'தான் வேண்டுமென்று
கேட்டாலும் உண்டு.

காஷ்மீரில் உள்ள
மாநிலக் கட்சி
பி.ஜே.பி.க்கு ஆதரவு தருவதைவிட
காங்கிரஸுக்கு
அதிகம் கருணைக் காட்ட வாய்ப்பிருக்கிறது.

பொதுவில்....
பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்துக் கொள்ள
அகாலிதளம் / சிவசேனா நீங்களாக
எந்தவொரு பெரிய மாநில கட்சியும்
ஆர்வம் காட்டவில்லை.
பி.ஜே.பி.யை
ஒரு தீண்டத்தகாத கட்சியாகவே
அவர்கள் கருதுகிறார்கள்.

தேர்தல் வர இருக்கும்
இன்னும் ஒரு வருடத்தில்...
இந்திய அரசியலில் வானில்
எத்தனையோ மாற்றங்கள் வரலாம்.
சுனாமி/ பூகம்பம் கூட நிகழலாம்.
அதாவது...
இதனை யோசிக்கு தருணம்
இன்றைக்கு...
'மோடி பிரதமராக வெல்வார்' என்பது பேதமை!

இது தவிர...
பி.ஜே.பி.யின் உட்கட்சி குழப்பம்
மகா பிரசித்தமாகி கொண்டிருக்கிறது.
அது வெடித்து
அக்னிக் குழம்பை
பெருக்கெடுக்க செய்தாலும் ஆச்சரியமில்லை!

இதுதான்...
யதார்த்த நிலை.
இத்தனையும் ஒன்றுமில்லை என்பது மாதிரி...
அதாவது,
சோற்றில் பூசணிக்காயை மறைப்பது மாதிரி
எல்லாவற்றையும் மறைத்துவிட்டு
"மோடி அடுத்த பிரதமர்...!"
"மோடி அடுத்த பிரதமர்...!"
"மோடி அடுத்த பிரதமர்...!" என்று
நாள் தவறாமல் மக்கள் மத்தியில்
கார் சக்கரத்தில் அடிப்பட்ட
நாய்குட்டியாட்டம்
குய்யோ முய்யோவென கத்துகிறார்கள்.
வலுகட்டாயமாக
செய்திகளையும் பரப்புகிறார்கள்.

அவர்கள் ஆசைப்படிக்கு..
மோடி பிரதமராகுவது
மக்கள் கையில் இருக்கிறது.
அவர்கள் ஓட்டுப் போட வேண்டும்.
மீடியாக்கள் கத்துவதால் நடந்துவிடாது.

இப்படிதான்...
சென்ற முறை அத்வானியை முன்நிறுத்தி
மஹா கூப்பாடு போட்டார்கள்.
என்ன ஆனது கதை?

இந்த அரசியல் சூழ்ச்சி கொண்ட
பரப்புரைக்கு
படித்தவர்களும்/ விபரம் அறிந்தவர்களும்
எப்படி...
கொஞ்சமும் சிந்திக்காமல்
ஊதுகுழலாக செயல்படுகிறார்கள்
என்பதுதான்...
இன்னொரு புரியாத புதிர்!!!

*
பின்குறிப்பு:

இன்றைய சூழ் நிலையில்
அடுத்த மாத நெருக்கத்தில்
பாராளுமன்ற தேர்தல் வரும் பட்சம்..
காங்கிரஸ் கூட்டணி - 185 to 200
பாரதிய ஜனதா கூட்டணி 90 to 105
அண்ணா தி.மு.க. கூட்டணி 25 to 30
மற்றைய எம்.பி. தொகுதிகளை
கம்யூனிஸ்ட்டுகளும்/ மாநில கட்சிகளும்
பங்குப் போட்டுக் கொள்ளலாம்.

உத்திர பிரதேசத்தில் மாநில கட்சிகள்
இரண்டு தேசிய கட்சிகளை ஒன்றுமில்லை என்றாக்கி
கூடுதலாக எம்.பி. தொகுதிகளை வெல்லும் பட்சம்...
இந்த என் கணிப்பு மாற இடம் உண்டு.

இந்த முறை
பிரதமர் பதவிக்கு
பல தலைகள் குறிவைத்திருப்பதால்...
தேர்தலுக்குப் பிறகு
எம்.பி.களை துரத்திப் பிடிக்கும்
குதிரை வியாபாரம்
டெல்லி மாநகரில் பலமாக இருக்கும்.

***

நன்றி :  (திருந்தாத உள்ளத்துடன்)  தாஜ் | satajdeen@gmail.com

Wednesday, July 24, 2013

காணொளி : கவிஞர் சலீம் பற்றி 'கவிக்கோ'

நாகூர் சலீம் நினைவலைகள் என்ற இரங்கல் கூட்டத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் சலீம் மாமா பற்றிப் பேசியது. நன்றி : கவிக்கோ, நாகூர்ரூமி, தீன்.
***

Wednesday, July 17, 2013

'தனிமையின் நூறு ஆண்டுகள்’ ஏன் படிக்க வேண்டும்? - கே.என்.சிவராமன்

இதென்ன கேள்வி , இங்கே ஒரு பதிவு போடத்தான்! தமாஷ் இருக்கட்டும்.. -தினகரன் வசந்தத்தில் 14-7-2013 அன்று வெளியான நண்பர் சிவராமனின் இந்த முக்கியமான கட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பியிருக்கிறார் தாஜ். கதையின் சில மையப் பகுதிகள் அவருடைய 'இறந்தவன் காலம்' குறு நாவலை நினைவுறுத்துவதாக இருந்ததாம்.  சரி, இனி  தாஜ்க்கேஸ் என்று அழைத்துவிடுவோம் அவரை. 

சிறிய சைஸில் தனது கட்டுரையை ஸ்கேன் செய்து வெளியிட்டு  , ‘நண்பர்கள் பக்கங்களை சரிவர படிக்க முடியவில்லை என்கிறார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை. ;-( ’ என்று வருந்தும் நம்  சிவராமனுக்கும் இது உதவக்கூடுமென்பதால் உடன் வெளியிடுகிறேன். நன்றி. - ஆபிதீன்

***
click to enlarge the image


தனிமையின் நூறு ஆண்டுகள்
காலச்சுவடு வெளியீடு:

ஏன் இந்த நாவலை படிக்க வேண்டும்?

கே.என்.சிவராமன்

நல்ல கேள்விதான் இல்லையா? தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களை படிக்கவே நேரமில்லாமல் தவிக்கும்போது ஸ்பானிய மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நாவலை எதற்காக வேலை மெனக்கெட்டு வாசிக்க வேண்டும்?

காரணமிருக்கிறது. 1967-ல், ஸ்பானிஷ் மொழியில் வெளியான இந்த நாவலின் பெயர், 'Cien años de soledad' எழுதியவர் கார்சியா மார்க்கேஸ் (Gabriel Garcia Marquez). தென் அமெரிக்க நாடுகளில் சக்கைப் போடு போட்ட இந்த நாவல், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 'One Hundred Years of Solitude' என்ற பெயரில் ஆங்கிலத்தில் வந்தது.

அதற்கு பிறகு இன்றுவரை ஏறக்குறைய 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த புதினம், இதுவரை 20 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன. இது அதிகாரப்பூர்வமாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை. இது தவிர, திருட்டுத்தனமாக பல மொழிகளில் இந்த நாவல் வந்திருக்கிறது. இந்த 'கள்ளக் கடத்தலில்' இருந்து இந்தியாவும் தப்பவில்லை.

யெஸ், மலையாளத்திலும், இந்தியிலும் மட்டுமே ரைட்ஸ் வாங்கி இந்த நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்கள். வங்காள மொழியில் அப்படி செய்யவில்லை. காதும் காதும் வைத்தது போல கமுக்கமாக மொழிபெயர்த்து ரிலீஸ் செய்துவிட்டார்கள். நாவலும் ஜோராக விற்றது. இந்த மொழிபெயர்ப்பால் ஈர்க்கப்பட்ட ஒரு வங்காள இயக்குனர், மெய்மறந்து இந்தப் புதினத்தை படமாக்க ஆரம்பித்துவிட்டார். பிடித்தது சனி. தகவல் மார்க்கேஸின் காதுகளுக்கு போனது. உடனே வழக்கு தொடரப்பட்டது. இதெல்லாம் பழங்கதை.


இப்படியான அசம்பாவிதம் எதுவும் தமிழ் மொழி பெயர்ப்புக்கு ஏற்படவில்லை. 'பாண்ட்' பேப்பரில் கையெழுத்திட்டு முறைப்படி உரிமை வாங்கிதான் தமிழாக்கம் செய்திருக்கிறார்கள்.

ரைட், இதற்காகத்தான் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டுமா? இல்லை. இதெல்லாம் சும்மா ஸ்நாக்ஸ்தான். ஆரோக்கியமான டிஷ், உண்மையில் வேறு. அது உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் வலு சேர்ப்பது என்பதுதான் இதிலுள்ள ஸ்பெஷல்.

என்று நாவலும், சிறுகதைகளும் தமிழில் எழுதப்பட ஆரம்பித்ததோ, அன்று முதல் பிற மொழி எழுத்தாளர்களின் தாக்கம் அல்லது சாயல் பாலில் கலந்த தண்ணீராக நம் மொழியில் உடன் பயணிக்கிறது. இதை தவறென்று சொல்ல
முடியாது. காரணம், யாரும் 'காப்பி' அடிக்கவில்லை. பதிலாக பிற மொழி எழுத்தாளர்களின் படைப்பில் 'இன்ஸ்பையர்' ஆகியிருக்கிறார்கள்.

சிறு பத்திரிகை இலக்கியத்தை குத்துமதிப்பாக புதுமைப்பித்தனிடமிருந்து தொடங்குவோம். இவரிடம் மாப்பஸான், ஓ ஹென்றியின் தாக்கம் உண்டு. இவருக்கு பின் வந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் செகாவ், டால்ஸ்டாய்,
தாஸ்தாவெஸ்கி, காஃப்கா, ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோரின் பாதிப்பை சர்வ நிச்சயமாக காணலாம்.

அதே போல வெகுஜன எழுத்தாளர்களில் கல்கியிடம், அலெக்சாண்டர் டூமாஸின் சாயல் உண்டு. அதன் பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள் எந்தெந்த பிறமொழி எழுத்தாளர்களால் ஈர்க்கப்பட்டார்கள் என்பதை அகதா கிறிஸ்டியில் தொடங்கி, சிட்னி ஷெல்டனில் மையம் கொண்டு, இன்றைய டான் பிரவுன் வரை ரூம் போட்டு ஆராயலாம்.

அந்த வகையில் 1990க்கு பிறகு வந்த சிறுபத்திரிகை எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களிடம் இருவரின் தாக்கம் உண்டு. ஒருவர், போர்ஹே. அடுத்தவர் மார்க்கேஸ். இவர்களில் மார்க்கேஸ், சம்திங் ஸ்பெஷல். ஏனெனில், மேஜிக்கல் ரியலிசம்' எனப்படும் மாய யதார்த்தவாத படைப்புகளின் முன்னோடி இவர்தான். அதாவது, கதையில் வரும் ஒரு கதாபாத்திரம் துவைத்த துணிகளை வரிசையாக கொடியில் உலர்த்துவதாக கொள்வோம். ஒரு கட்டத்தில் உலர்த்தப்படும் துணி, விண்ணுலகம் நோக்கி சென்று விடும்! இதைத்தான் மேஜிக்கல் ரியலிஸம் என்கிறார்கள்.

ஆனால், மார்க்கேஸ், 'நான் யதார்த்த பாணியில்தான் எழுதுகிறேன். அது உங்களுக்கு மாய யதார்த்தமாக தெரிகிறது. கரீபியன் பகுதி மக்கள் எப்படி பேசுகிறார்களோ, எந்த உவமைகளை சொல்கிறார்களோ அதைத்தான் எழுத்தாக வடிக்கிறேன்' என்கிறார்.

இது உண்மையும் கூட. அடிப்படையில் மார்க்கேஸ் பத்திரிகையாளர். எனவே மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர், இருப்பவர். அவர்களது எதிர்பார்ப்பும், தேவைகளும் மற்றவர்களைவிட இவருக்கு நன்றாகவே தெரியும். 'ElEspectador'
பத்திரிகையில் இவர் பணிபுரிந்த காலத்தில், சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து நிறைய எழுதியிருக்கிறார். அவை சர்ச்சையையும் கிளப்பியிருக்கின்றன. தடை செய்யப்பட்டும் இருக்கின்றன.

எனவே மறை பொருளாக சமூக அவலங்களை சொல்ல நினைத்தவருக்கு நாவலின் பக்கம் கவனம் திரும்பியது. 1948ல், 'லீஃப் ஸ்ட்ராம்' (Leaf Storm) என்ற தன் முதல் நாவலை எழுதினார். ஆனால், அது பிரசுரமாக ஏழு ஆண்டுகள் பிடித்தது. அதன் பின்னர் தன் தாய்வழி தாத்தா பாட்டியின் வீட்டை மையமாக வைத்து ஒரு புதினத்தை எழுத விரும்பினார்.

ஆனால், எவ்வளவு யோசித்தும் நாவலின் எழுத்து நடை கை கூடவே இல்லை. இந் நிலையில் ஒரு நாள் தன் மனைவி, குழந்தைகளுடன் காரில் பிக்னிக் சென்றார். பாதிவழியில் அதுநாள்வரை இவர் தேடிக் கொண்டிருந்த எழுத்து நடை மின்னலென தாக்கியது. பாட்டியின் கதை சொல்லும் பாணி...

உடனே பிக்னிக் கேன்சல் என்று அறிவித்துவிட்டு காரை திருப்பி வீட்டுக்கு வந்தார். கையோடு தன் ராஜினாமா கடிதத்தை பத்திரிகைக்கு அனுப்பினார். இருந்த காரை விற்று வந்த பணத்தை தன் மனைவியிடம் கொடுத்தார். 'எனது அறையில் தங்கி ஒரு நாவலை எழுதப் போகிறேன். கண்டிப்பாக அது உலகளவில் பேசப்படும். என்னை நம்பு. நாவல் எழுதி முடிக்கும் வரை வீட்டுச் செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக் கொள்...'

மார்க்கேஸின் மனைவி மெர்சிடஸ் பர்ஷா (Mercedes Barcha) இதற்கு தடையேதும் சொல்லவில்லை. காதலித்து மணந்தவருக்கு கணவரின் அருமை பெருமை தெரியாதா என்ன?

அறையே கதியென்று கிடந்தார் மார்க்கேஸ். மடமடவென எழுதினார். எழுதியதை கிழித்துப் போட்டார். மீண்டும் எழுதினார். அதை அடித்துத் திருத்தினார். வேளாவேளைக்கு உணவு தேடி வந்தது. கேட்டபோதெல்லாம் காபி கிடைத்தது. ஒரு வழியாக பதினெட்டு மாதங்களுக்கு பிறகு விரும்பியபடி நாவலை எழுதி முடித்தார்.

அதன் பிறகு அறையைவிட்டு வெளியே வந்தவருக்கு சில உண்மைகள் முகத்தில் அறைந்தன. அதில் முதலாவது, வீட்டு வாடகை ஒன்பது மாதங்கள் பாக்கி. மளிகை கடைக்கு பத்து மாதங்களாக பணம் தரவில்லை. இந்த விஷயம் தெரிந்தால் எங்கே மார்க்கேஸின் எழுத்து பாதிக்கப்பட்டு விடுமோ என்று மறைத்து கடன்காரர்களை தனியாகவே சமாளித்தார் மெர்சிடஸ் பர்ஷா.

இப்படி காதல் மனைவியின் பராமரிப்பில் மார்கேஸ் எழுதிய நாவல்தான், இப்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் 'தனிமையின் நூறு ஆண்டுகள்'. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்த நாவலின் கதை, ஒரு வகையில் ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளின் வரலாறுதான்.

பத்தொன்பது குடும்பங்களுடன் ஹோசே அர்க்காத்தியோ புயேந்தியா தன் ஊரை விட்டு வெளியேறுகிறார். மரணத்தின் நிழல்படாத 'மகோந்தா' என்னும் புதிய ஊரை அவர்கள் உருவாக்குகிறார்கள். வெளியுலகத்தோடு தொடர்பற்று இருக்கும் இந்த ஊரைத் தேடி ஜிப்சிக்கள் தங்கள் வித்தைகளுடன் வருகிறார்கள். 'மகேந்தா'வின் மக்கள் அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் அவர்கள் வழியாகவே அறிகிறார்கள். உலகின் அறிவியல் பாய்ச்சலுக்கு 'மகோந்தா' ஈடுகொடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட புயேந்திரா, வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ள முயன்று இறுதியில் பித்துப்பிடித்து ஒரு மரத்தடியில் மரணமடைகிறார்.

முதல் புயேந்தியாவின் கனவுகள் அவருடைய வாரிசுகளின் காலத்தில் நிறைவேறுகிறது. 'மகோந்தா' நகரத்துக்கு ரயில் வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் நுழைகின்றன. பன்னாட்டு நிறுவனம் வருகிறது. போர் வருகிறது. பசியும், பஞ்சமும், மரணமும் வருகின்றன. தொழிலாளர் புரட்சி வெடிக்கிறது. தேவாலயம் எழுகிறது. துருக்கியர்களும், அராபியர்களும், கருப்பர்களும் வருகிறார்கள். நீதிபதி வருகிறார். ராணுவம் வருகிறது. இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிகின்றன. மெல்ல அந்த ஊர் தன் ஆன்மாவை இழக்கிறது. இயற்கை ஏமாற்றுகிறது. நான்கு வருடங்கள் தொடர்ந்து மழை பெய்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் மழையே இல்லாமல் வறட்சியில் வாடுகிறது. ஒரு கட்டத்தில் மக்களால் கைவிடப்பட்டு, ஒட்டு மொத்தமாக அழிந்து போகிறது 'மகோந்தா...'

இதுதான் இந்த நாவலின் கதை. இதுவேதான் நம் நாட்டின் சரித்திரமும். இப்போது தலைப்பை படித்துவிட்டு முதல் பத்தியில் இருந்து மீண்டும் இந்தக் கட்டுரையை வாசிக்கத் தொடங்குங்கள்.

***

நன்றி: கே.என்.சிவராமன் , தினகரன் ஞாயிறு மலர் (14.7.2013) , தாஜ்

Wednesday, July 10, 2013

அல் ஜஹ்ராவி (Albucasis) - ஹமீதுஜாபர் கட்டுரை


அருட்கொடையாளர்கள் வரிசையில் பதினாறாவதாக வரும் கட்டுரை இது. போகிறபோக்கில் தன் ஊர் மஞ்சக்கொல்லை நாட்டுவைத்தியர் இஸ்மாயில்,  கேன்சரைக்கூட குணப்படுத்தினார் என்று 'கூடக்கூட’ நானா ஆதாரமில்லாமல் சொல்வதுதான் குறை (அட, அரை விக்கி பக்கம் இருக்க வேணாம்?). ஆமாம், அந்த பிரபல வைத்தியரை 'பைத்தியம் இஸ்மாயில்' என்றல்லவா நாகூரில் சொல்வார்கள். ஓ, குணப்படுத்தும் வைத்தியருக்கு 'பைத்தியம்' என்று பெயர் போல. அல்லது நானாவின் மத நோயை அவர் குணப்படுத்தியிருப்பார்! - ஆபிதீன்

***

சுமார் ஐம்பது அறுபதாண்டுகளுக்கு முன்புவரை ஆப்பரேஷன் என்றால் குலை நடுங்கும். வேறு வகையில் சொன்னால் நோயாளி பிழைப்பதே அரிது என்ற மனோபாவம் இருந்த சூழல். இது ஒருபக்கம் இருந்தாலும் அப்போது நோய் என்று டாக்டரிடம் சென்றால் கையைப் பிடித்து நாடித்துடிப்பை கவனிப்பார்கள், இமையை நீக்கி கண் விழிகளைப் பார்ப்பார்கள், நாக்கை நீட்ட சொல்லி பார்த்துவிட்டு பிறகுதான் ஸ்டெத்தையே தூக்குவார்கள். நாகை சுற்றுவட்டாரத்தைப் பொருத்தவரை பெரும்பாலவனவர்களின் அன்பிற்கு பாத்திரமான டாக்டர் ஆர்தர் MBBS இதைதான் செய்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் கொடுக்கும் மிக்சர் (mixture medicine) மூன்று வேளைக் குடித்தால் போதும் நோய் குணமாகிவிடும். இதில் குணமாகாவிட்டால்தான் ஊசியைத் தூக்குவார்.

நாட்டு வைத்தியர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம், வெறும் கைநாடி மட்டும்தான், நோயைப் பிட்டுப்பிட்டு வைப்பார்கள். எங்கள் ஊர் மர்ஹூம் இஸ்மாய் நானா வைத்தியர் அவர்களிடம் சென்றால் (அதி காலை 5 மணிக்கு செல்லவேண்டும்) மூன்று பொட்டலத்தைக் கொடுத்து (அதற்குமேல் கிடையாது) தேனில் கலந்து அல்லது இஞ்சி சாறில் கலந்து வெறும் வயற்றில் மூன்று நாளைக்கு சாப்பிடச் சொல்வார் (நோய்க்குத் தகுந்தபடி). குடல் புண்ணுக்கு பசு நெய்யில் கலந்துக்கொள்ளவேண்டும்.  அவர் தீர்க்காத நோய்கள் இல்லை என்று சொல்லலாம். வெறும் மருந்தினால் கேன்சர், முடக்குவாதம் வரை குணப்படுத்தியிருக்கிறார்.

காலம் நகர்ந்தபோது மருத்துவமனைகளில் கைகடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே நோயாளியின் நாடித்துடிப்பை கவனித்து பல்ஸை எழுதினார்கள் தாதிமார்கள். இன்று நவீன உலகில் அறிவியலின் வளர்ச்சி நோயாளியின் கையில் ஒரு பட்டையைக் கட்டி பொத்தானை தட்டினால் இரத்த அழுத்தம் நாடித்துடிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் சொல்லிவிடும் கருவிகள் வந்தபின் கைபிடித்து நாடி பார்க்கும் அறிவு இல்லாமலே போய்விட்டது எனலாம்.

இன்றைய காலக்கட்டத்தில் ஆங்கில வைத்தியத்தில் எதெற்கெடுத்தாலும் ஸ்கேன் செய்ய சொல்கிறார்கள் அதன் பிறகு ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்று கத்தியை தூக்குகிறார்கள். அலோபதி என்று சொல்லப்படும் வார்த்தை 19 ம் நூற்றாண்டில் பெறப்பட்டதாகும். (Allopathic medicine and allopathy (from the Greek prefix ἄλλος, állos, "other", "different" + the suffix πάϑος, páthos, "suffering") are terms coined in the early 19th century[4] by Samuel Hahnemann, the founder of homeopathy, as a synonym for mainstream medicine). அறுவை சிகிச்சை முறை கி.மு.600ல் சுஷ்ருதா சம்ஹிதா என்ற இந்திய மருத்துவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேற்கத்திய உலகைப் பொருத்தவரை Father of Medicine என்றைழைப்படுகிற ஹிப்போகிரட்ஸை மருத்துவத் துறைக்கு முதன்மைப் படுத்துகின்றனர். என்றாலும் அலக்ஸாண்டிரியாவின் அறிஞர் Gelan காலத்திலிருந்து அறுவை சிகிச்சை பின்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, கிரேக்கோ ரோமோ (146 B.C to 415 A.D) காலத்திற்கு பிறகு பொதுவாகப் பார்க்கப்போனால் ஐரோப்பாவில் எந்த துறையிலுமே
முன்னேற்றம் ஏற்படவில்லை. குறிப்பாக மருத்துவத் துறை அன்றிருந்தபடியே நீடித்து வந்தது. இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சி  காலம் வரை இந்நிலை இருந்ததாகவும், இது ஐரோப்பாவின் இருண்ட காலம் என்றும் மத்திய காலகட்டம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஒன்பது மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளுக்கிடையே முஸ்லிம் உலகம் பெரும் புரட்சி செய்துக்கொண்டிருந்தது. இஸ்லாமிய ஆதிக்கம் ஆட்சி பொறுப்போடு நின்றுவிடாமல் சமூகப் பொருளாதாரக் கல்வித் துறைகளிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தியது. இதன் விளைவாக அறிவியல், மொழிஇயல், மருத்துவம், பொறிஇயல், கணிதம், வானசாத்திரம் முதலியவை வளரத் தொடங்கி இன்றைய நவீனத்துவத்திற்கு வித்திட்டன.

அவ்வகையில் இன்றைய நவீன அறுவை சிகிச்சை முறைக்கு வித்திட்டவர் பத்தாம் நூற்றாண்டில் அந்துலுசியாவில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞரான அல் ஜஹ்ராவி என்ற உண்மையை மருத்துவ உலகம் மட்டுமல்ல இஸ்லாமிய உலகமும் மறந்துகொண்டிருக்கிறது.

குறிப்பு: மருத்துவ வார்த்தைகள் அனேகம் தமிழில் கிடைக்காததால் சில இடங்களில் ஆங்கிலத்தில் தந்துள்ளேன். மொழியியல் அறிஞர்கள் சரியாக மொழிமாற்றம் செய்து தந்தால் திருத்திக்கொள்கிறேன்,

***


அல் ஜஹ்ராவி (A.D.936-1013)
The Father of Modern Surgery

அபுல் காஸிம் கலஃப் பின் அப்பாஸ் அல் ஜஹ்ராவி என்ற முழு பெயரையுடைய இவரை  Albucasis  என்று லத்தின் மொழியில் மேற்கத்திய உலகத்தில் அறியப்படுகிறது. அந்துலுசியா என்றழைக்கப்படும் இன்றைய ஸ்பெயினில் அன்றைய இஸ்லாமிய தலைநகராக இருந்த கொர்தோபாவிலிருந்து வடமேற்கே 6 மைல் தூரத்து புறநகர் பகுதியான அல் ஜஹ்ரா என்ற இடத்தில் கிபி 936 க்கும் 940 க்கும் இடையே பிறந்தார்.  பிறந்தது, வளர்ந்தது, கல்வி, தொழில்,  என எல்லாமே கொர்தோபாவில்தான். தொழில் நிமித்தமாகவோ அல்லது கல்விக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ வேறு எங்கும் செல்லவில்லை.

தன் வாநாள் முழுவதும் மருத்துவத்திற்காக  செலவிட்ட உத்தமர் மறைந்ததும் கொர்தோபாவில்தான்.

கொர்தோபா (Cordova)

கி.பி எட்டாம் நூற்றாண்டில் அந்துலூசியா இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததும் உமையா கலிஃபா முதலாம் அப்துற் ரஹ்மான் கொர்தோபாவை 755ல் நிர்மாணித்தார். அது பத்தாம் நூற்றாண்டில்  மிகச் சிறந்த தலைநகரமாக விளங்கியது. இதை உலகின் ஓர் அதிசயம் என்றால் மிகையாகாது. காரணம் வளம் மிகுந்த (zenith of it flowering) அக் காலக்கட்டத்தில்  அதன் மக்கட்தொகை பத்து லட்சம், குடியிருப்புக்கள் (வீடுகள் முதல் மாளிகை வரை) இரண்டு லட்சம், பள்ளிவாசல்கள் 600, பொது குளியல் அறை 900, ஆரம்பக் கல்விக்கூடம் 80, உயர்நிலைப் பள்ளிகள் 27, பொது நூலகம் 300, அவற்றில் இருந்த நூல்களின் எண்ணிக்கை 10,00,000. (இப் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் அம்மக்களின் செல்வம், கல்வி, வாழ்க்கைத் தரம் எப்படி இருந்திருக்கும் என்பதை கணித்துக்கொள்ளவும்). அப்போது ஆட்சி செய்த கலிஃபா அல் நாசர் தனது பிரத்தியேக நூலகத்தில் 30,000 நூற்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான நூல்களில் அடிக்குறிப்பும், கருத்துரையும் எழுதி வைத்திருந்தார்.

இதே காலக்கட்டத்தில் ரோம் நகரின் மக்கட்தொகை 50,000 ஐ எட்டவில்லை. லண்டன் நகரின் மக்கட்தொகை 18,000 க்கும் குறைவு. அன்று ஐரோப்பாவின் மிகப் பெரிய நூலகம் என்று சொல்லப்பட்ட  The Library of the Monastery St. Gall in
Switzerland ல் மொத்தமாக வெறும் 35 நூல்களே இருந்தன.

ஐரோப்பாவின் கல்விக்கூடமாக இருந்த கொர்தோபாவைப் பற்றி13 ம் நூற்றாண்டு இத்தாலிய கவிஞன் 'Lane-pool' இப்படி எழுதி வைத்துள்ளான். 

“To Cordoba belong all the beauty and ornament
That delights the eye, or dazzles the sight.
The dress is of banners of learning, well knit together
By the men of science and the masters of every art”
(source: Al Zahrawi-The Father of Modern Surgery Vol 2, No 2, April 2006)

மருத்துவம் பற்றி சில வரிகள்

மருத்துவ அறிவியலிலும் அறுவை சிகிச்சையிலும் புகழ் பெற்றிருந்த அல்ஜஹ்ராவியைப் பற்றி கூறுவதற்குமுன் அக்காலக் கட்டத்திலிருந்த மருத்துவ மனைகளின் இயக்கம் பற்றி சில வார்த்தைகள். 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மருத்துவமனைகள் அழகுக்கு எடுத்துக்காட்டாக அவை மருத்துவமனைதானா அல்லது அரண்மனைகளை மருத்துவமனைகளாக மாற்றியமைக்கப்பட்டனவா என்று சொல்லமுடியாத அளவுக்கு இருந்தன. அவை, இஸ்லாமிய பண்பாடு மனித சமுதாயத்துக்கு அளித்த பங்களிப்பு எனலாம்.

ஒவ்வொரு மருத்துவமனையும் ஆண்  பெண் நோயாளிகளுக்கு தனித்தனியான வார்டுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை  ஜுரம், தொற்றுநோய், கண் நோய், mania, diarrhea and female disorders என நோயின் தன்மையைப் பொறுத்து தனித்தனி அறையில் (ward) சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைபெறும் நோயாளிகள் மருந்துக்கள் வாங்க வேறு எங்கும் போகவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அம் மருத்துவமனைக்குள்ளேயே மருந்தகமும் இருந்தது.

அவற்றிலிருந்து பெறப்படும் மருந்துகள் அனைத்தும் இலவசம். இஸ்லாமியர்கள் தொழுவதற்கு பள்ளிவாசலும் கிறுத்துவர்களுக்கு தேவாலயமும் அகத்தே இருந்தன.  இதல்லாமல் கலந்தாய்வுக் கூடம், நூலகம், மருத்துவ மாணவர்கள் பயில்வதற்கான கல்விக்கூடம் ஆகிவையும் இருந்தன.  அனுமதிப் பெற்ற தகுதியுள்ள மருத்துவர்கள்  மட்டுமே பணியாற்றமுடியும். அனுமதி வழங்குவதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "Muhtasib" என்ற தனி ஆணையம் இருந்தது.

மருந்தாளர்களின் (pharmacists) நியமனமும், மருந்துக்களின் தரக்கட்டுப்பாடும், விற்பனையும்  அதன் கண்காணிப்பிலேயே இருந்தன என்பது மற்றொரு சிறப்பம்சம்.

மருத்துவமனைக் கொள்கை

மருத்துவமனைக் கொள்கையின் வேறொரு சிறப்பம்சம்,  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆண் பெண் நோயாளிகள் அனைவரும் நோய் முற்றிலும் குணமாகும் வரை அங்கேயே தங்கியிருக்கவேண்டும். மருத்துவத்திற்கான செலவு அனைத்தையும் அம் மருத்துவமனையே ஏற்றுக்கொள்ளும். நோயாளி உள்ளூரிலிருந்தோ அல்லது பக்கத்து ஊரிலிருந்தோ அல்லது வெகு தூரத்திலிருந்தோ அல்லது வெளி நாட்டிலிருந்தோ வந்திருந்தாலும்; நோயாளி உயர் சாதியாக இருந்தாலும் அல்லது தாழ் சாதியாக இருந்தாலும்; ஏழையாக இருந்தாலும் அல்லது வசதி படைத்த செல்வந்தராக இருந்தாலும்; வேலை உள்ளவராக இருந்தாலும் அல்லது வேலையற்றவராக இருந்தாலும்; அங்கம் குறை உள்ளவராக
இருந்தாலும் அல்லது மாற்று திறனாளியாக இருந்தாலும்; கல்வி கற்றவராக இருந்தாலும் அல்லது கல்வி கற்காதவராக இருந்தாலும் அனைவருக்கும் பாரபட்சமின்று ஒரே மாதிரியான சிகிச்சை முழு அளவில் அளிக்கப்பட்டது. அதே சமயம் தற்காலத்தைப் போல உண்மைக்குப் புறம்பாக நோயாளியாக நடித்துக்கொண்டோ அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அளிக்கப்படு்ம் ராஜபோக சிகிச்சையை அனுபவிக்கமுடியாது.

அக்காலக்கட்டத்தில் மருத்துவர்கள் மிகவும் மதிப்புடையவர்களாகக் கருதப்பட்டனர். ஒரு மருத்துவரின் ஆண்டு வருமானம் சுமார் ஐந்து மில்லியன் திர்ஹத்தைத் தொட்டது. ஆனால் ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவு வெறும் ஆயிரம் திர்ஹம் மட்டுமே.

வாழ்க்கை குறிப்பும் தொடர்ந்த பணிகளும்

அன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான அறிஞர்கள் பல்வேறு துறைகளில் (polymath) சிறந்து விளங்கினர். ஆனால் அல் ஜஹ்ராவி மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார். தான் எடுத்துக்கொண்ட துறையில் மட்டுமே கவனம்
செலுத்தியதால் என்னவோ அதில் மாபெரும் நிபுணத்துவம் பெற்றார். இளம் வயதிலேயே மன்னர் இரண்டாம் அல் ஹாகமின் பிரத்தியேக  அரசவை மருத்துவராக மட்டுமில்லாது பொது மருத்துவமனையில் மருத்துவராகவும் மருத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் பெரும்பாலும் விபத்து மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததின் மூலம் அறுவை சிகிச்சையில் தனி முத்திரை பதித்தார்.

ஐம்பதாண்டுகால மருத்துவ சேவையில் மருத்துவராக, அறுவை சிகிச்சை நிபுணராக, எலும்பு சிகிச்சை நிபுணராக, கண்மருத்துவ நிபுணராக, மருத்துவப் பேராசிரியராக, ஊட்டஉணவு நிபுணராக பரிணமித்தார்.  உலகிற்கு வரப்பிரசாதமாக அளித்தது அவர் எழுதிய 'அத் தஸ்ரிஃப் லிமன் அஜிஜா அன் அத் தஃலிஃப்' (The Method of Medicine) என்ற நூல்.  மருத்துவ உலகின் பேரகராதி என்று பின்னால் வந்த மேற்கத்திய அறிஞர்களால் சொல்லப்படுகிறது.

முதன்முதலில் மார்பக புற்று நோய்க்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார். lithotrities for bladder stones, புதிய உக்தியைக் கையாண்டு thyroid cysts ஐ நீக்கினார். அக்காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னோடியாக
இருந்து பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.

இவர் தலைசிறந்த பல்மருத்துவராகவும் விளங்கியுள்ளார். பல் மருத்துவத்துக்காகப் பயன் படுத்த பல்வேறு வகையான ஆயுதங்களை இவரே வடிவமைத்து உருவாக்கினார். ஒழுங்கற்ற பல்வரிசைகளை எப்படி சீர்படுத்துவது என்பதை அல் தஸ்ரிஃபில் குறிப்பிட்டுள்ளார். தவிர செயற்கைப் பற்கள் தாயாரிக்கும் முறையையும் அவற்றை பதிக்கும் முறையையும் விளக்கியுள்ளார். வழக்கத்துக்கு மாறான நோயையும்(unusual disease), பரம்பரை இரத்த ஒழுக்கு நோயையும்  குணப்படுத்த  எத்தகைய மருந்து கொடுக்கவேண்டும் என்று முதன்முதலில் விளக்கியதும் இவரே (the first to describe clearly the hereditary circumstances surrounding haemophilia.  He also described ligaturing of blood vessels long before Ambroise Pare). மாறிய கருத்தரிப்பு (ectopic pregnancy) க்கு சிகிச்சை அளித்த முதல் மருத்துவரும் இவரே.  

சற்றேறக்குறைய 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கான கருவிகளை வடிவமைத்தார் (From a tongue depressor and tooth extractor to catheter and an elaborate obstetric device). தஸ்ரிஃபில் இவர் விளக்கியுள்ள பல்வேறு வகையான
அறுவை சிகிச்சை முறைகள் பிரமிப்பூட்டுவனவாக இருக்கிறது என்கின்றனர். In his treaties Al Zahrawi discussed cauterization, bloodletting, midwifery and obstetrics and the treatment of wounds. He described the exposure and division of the temporal artery to relieve certain types of headaches,  diversion of urine into the rectum, reduction mammoplasty for excessively large breasts and the extraction  of cataracts. மேலும் எலும்பு முறிவு, மூட்டுகளின் பிரச்சினை, மூக்கு எலும்பு, முள்ளெலும்பு (vertebrae)  முறிவுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார். In fact 'Kocher's method'  for reducing a dislocated shoulder was described in Al Thasrif long before Emil Theodor Kocher  was born.

அல் ஜஹ்ராவி கண்டுபிடித்த கருவிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது மூன்று வகை கருவிகள். 1. காதின் உட்பகுதியை சோதிக்கும் கருவி, 2. சிறுநீர் குழாயின்(urethra) உட்பகுதியை சோதிக்கும் கருவி, 3. தொண்டையிலிருக்கும் தேவையற்ற பொருளை (foreign bodies) நீக்க அல்லது வெளிக்கொணர பயன்படுத்தும் கருவி.

அல் தஸ்ரிஃப்

முப்பது பிரிவுகள் (volumes) கொண்ட இந்நூல் பல்வேறு மருத்துவ செய்திகளை விளக்குகிறது. முதல் மூன்று பிரிவு (babs) களில் 190 அத்தியாயங்களை (fasls) உள்ளடக்கி மருத்துவத்துறைக்குத் தேவையான எல்லா செய்திகளையும்
சொல்கிறது. சுடுவைத்திய(cautery) முறையும் அதன் உபகரணங்கள், venesection, cupping, withdrawal of arrows from the injured body, and various kinds of needles and threads for stitching wounds; simple and compound fractures, luxation and bone settings.

It also includes about 150 depictions and drawing of tools, surgical instruments, droppers and syringes; descriptions of medico-pharmaceutical technology, and detailed operation of lithotomy. Another figures and procedures deal with dental tools and oral hygiene, as well as dental archies to bind loose teeth, and surgical operations. Here  clearly recorded for the first time in medical history by author, interdiction of amputations above knee, and the elbow due to a dangerous situation; spinal paralysis caused by injury to the medulla or the spinal cord; cranioclastic delivery of dead fetus.

Volume 1 & 2:  தன்னுடைய நாற்பது ஐம்பது வருட அனுபவங்களைக் குறிப்பிடுகிறார். தான் சந்தித்த நோயாளிகள், நோய்களின் தன்மை, நோயாளியின் மனோஇயல், நோயாளியுடனான உறவு முறை, உடற்கூறுவியல், கூற்றியல், anatomy, physiology, constitution of body and condition; classification of drugs and diseases and clinical medicine முதலானவற்றை  குறிப்பிடுகிறார்.

Volume 3 to 9:  பல்வேறு வகையான மருந்துக்கள், விஷ மருந்துக்கள்;  புளித்து நுறைத்துப்போன பழைய காடி; புளிப்பு, இனிப்பு வகை மாத்திரைகள், மலம் இளக்கிகள்; எதிரிகளால் கொடுக்கப்பட்ட விஷங்கள்; use of pessaries and
suppositories and their pharmacological virtues.

Volume 10 to 18:  Cathartic nuts; electuaries; aphrodisiacs and geriatrics; fattening and anti obesity, ordinary syrups with or without vinegar and robs; strong and purgative aromatic juices, decoctions and infusions; sternutatories inhalers, gargles and medicinal dusting powders for the treatment of wounds.

Volume 19 to 25:  Cosmetics and richly spiced perfumery, toiletries, hair dressing and delicacy and charmer adornments; eye salves. collyria and compresses; unguentum. unctions, embrocations, balms and liniments; dentifrices; prophylactic and preventive medical remedies and mouth gum drugs. Also it describes various tumours lumps and swellings, expectorants and dressings.

Volume 26 & 27: Therapy, and the properties of diets and drugs, and their reparation; restoration. amelioration and cooking procedures; identifying of cereals, breads, wines, waters, soft drinks, legumes, meats, fishes, and wools; and the suitability of clothing and
outfitting of raiments and colors.

Volume 28 & 29: Aging of drugs; medico-pharmaceutical nomenclature, and technology and weight and measures.

Volume 30:  In the 11th chapter of his book he put many principles in that surgical field . He used ink to mark the incisions in his patients preoperatively which became now as a routine standard procedure .In (chapter 26 ) he explained the differences between

primary and secondary wound closure and also the importance of wound Debridement before closure.
In (chapter 47 ) he described the surgical options to treat Gynecomastia as he recommended  removal of the glandular tissue by a C-shaped incision.

இறுதிக் காலம்

அறுவை சிகிச்சையின் தந்தையாக விளங்கிய இவர் மரணிப்பதற்கு இரண்டாண்டுகள் முன்பு காஸ்டிலிய - அந்துலுசிய சண்டையில் அல் ஜஹ்ரா நகரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அந்நிகழ்வுக்குப் பின் கி.பி 1013 ல் தனது 77ம் வயதில் இறையடி சேர்ந்தார். இவரது பணி, ஆற்றல், செல்வாக்கு, புகழ் வெளி உலகிற்கு தெரியமலிருந்தது. மூரிஷ் ஸ்பெயினிலுள்ள முக்கிய மருத்துவர்களைப் பற்றி அபு முஹம்மது பின் ஹாஜம் (993-1064)
எழுதும்போது அல் ஜஹ்ராவியையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அல் ஜஹ்ராவியின் வாழ்க்கை வரலாற்றை அவர் இறந்து அறுபதாண்டுகளுக்குப் பின் அல் ஹுமைதி எழுதிய 'ஜத் அத் அல் முக்தபிஸ் (On Andalusian Savants) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அல் ஜஹ்ராவியின் சம காலத்தில் வாழ்ந்த அந்துலுசிய வேதியியலார் இபுனு அல் வாஃபித், மஸ்லமாஹ், அல் மிஜ்ரிதி, Artepuius ஆவர்.

பிற அறிஞர்கள் பார்வையில்...

Al Zahrawi was described by Pietro Argallata (died 1423) as "without doubt the chief of all surgeons". Jacques Delechamps (1513-1588), another French surgeon, made extensive use of At-Tasrif in his elaborate commentary, confirming the great prestige of Al Zahrawi throughout the Middle Ages and up to the Renaissance.

At-Tasrif was translated into Latin by Gerard of Cremona in the 12th century and alongside Avicenna's Canon, played a major role as a medical text in the universities of Europe from the 12th to the 17th century AD. Two of El Zahrawi's treatises deserve special mention. Firstly his 28th treatise, known in Latin as Libber servitors de preparation Medici arum simplified, describes chemical preparations, tablet making, filtering of extracts and related pharmaceutical techniques. This treatise was printed in Venice in 1471 by Nicolaus Jensen. இத்துடன் நின்றுவிடவில்லை, 1497 மற்றும் 99 லும் அச்சிடப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் 20 க்கு மேற்பட்ட முறை மீண்டும் அச்சிடப்பட்டது.

சாதனை - ஒரு சிறு கண்ணோட்டம்

1. பல் மருத்துவத்தில் தலை சிறந்த நிபுணராக இருந்தார். அவரது நூலில் பல்வேறு பல் மருத்துவத்துவத்திற்கு  பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளை ஓவியமாக வரைந்ததுடன் பல்வேறு பல் அறுவை சிகிச்சைகளையும் விளக்கியுள்ளார்.

2. சிதைந்துபோன அல்லது வரிசையற்ற பல் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முறையை விவாதித்துள்ளார்.

3. சிதிலம் அடைந்த பற்களுக்குப் பதிலாக செயற்கை பற்கள் பொருத்தும் முறையை மேம்படுத்தியுள்ளார்.

4. முதன்முறையாக பாரம்பரிய இரத்து ஒழுக்கு நோயையும் வழக்கத்துக்கு மாறான நோயையும் விவரித்துள்ளார்.

5. அறிஞர் அம்ப்ரோஸ் பேர்(Ambroise Pare) க்கு முன்பே ligaturing of blood vessels பற்றி விவரித்துள்ளார்.

6. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளின் விளக்கப்படங்களுடன் வழங்கிய முதல் மருத்துவர் அல் ஜஹ்ராவி ஆவார்.

7. அறுவை சிகிச்சையில் எரிகாரத்தின் (caustics) பயன்பாட்டை ஓரளவு விளக்கிவிட்டு உள் நாக்கு அறுவை (tonsillectomy), மூச்சுகுழல் துளை அறுவை (tracheotomy), மண்டைத் திறப்பு (craniotomy) அறுவைகளை விரிவாக விளக்கியதோடு இறந்த சிசுவை (dead foetus) அறுவை மூலம் நீக்கியுள்ளார்.

8. மூக்கின் விழுதை (polyp) நீக்க கொக்கி(hook)யை எப்படி உபயோகிக்கவேண்டும்;  இவர் கண்டுபிடித்த பல்ப் சிரஞ்சியைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு எனிமா எப்படி கொடுக்கவேண்டும்; மூத்திரப்பை கல்லை எடுக்க மெட்டாலிக் ப்ளாடர் சிரஞ்சியை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை இவரே விளக்குகிறார்.

9. சூடுகோல் கொண்டு தீய்த்து (cauterization) வியாதியை குணப்படுத்துவதில் நிபுணராக இருந்தார், இந்த கலையைப் பயன்படுத்தி 50 க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.

'என் குழந்தைகளே..!' என்று தன் மாணவர்களை எப்போதும் அன்புடன் அழைத்த பண்பாளர் அல் ஜஹ்ராவி மறைந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து போனாலும் அவர் வடிவமைத்த கருவிகள் இன்றும் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நமக்குத்தான் அதன் மொழி புரியவில்லை....

அல் ஜஹ்ராவி கண்டுபிடித்த கருவிகள் சில :


Sources:

http://www.islamicity.com/Science/scientists/Al-Zahrawi.shtml
http://www.facebook.com/pages/Abu-Al-Qasim-Al-Zahrawi-Father-of-Modern-Surgery/279150523567
http://www.ismaili.net/mirrors/57_sina/zahrawi.htm
http://www.iosworld.org/download/Al-Zahrawi.pdf
http://www.esinislam.com/Muslim_Biography/Selected_Muslims_In_Civilization/Selected_Muslims_In_Civilization_Al-Zahrawi.htm#AllahIsGreat
http://www.aps.eg.net/back_issue/vol2/issue2_april2006/pdf/1-Al%20Zahrawi.pdf
http://www.factofarabs.net/ERA.aspx?id=99
***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Tuesday, July 9, 2013

அவள் அதி புத்திசாலி தாஜ்...!

சூப்பர் பேத்தி. அவள்  இன்று செய்த செம வேலை போல நானும் தாஜின் அத்தனை கவிதைகளையும் செய்யலாம் என்றுதான் நினைக்கிறேன். முடியலையே.. சமயத்துல மனுசன் நல்லாவும் ஃபேஸ்புக்குல உண்மையை எழுதிடுறாரு...!.. - ஆபிதீன்

***


விமோசனம்  -  தாஜ்

மறைந்த
மூத்த படைப்பாளி ஒருவரின்
ஆக்கத்தை
வாசித்து சிலாகித்து
விசேசம் பொருந்தியதென
எத்தனைக் காலம்
பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்!
அந்த மக்கிய காலத்தை
கரையான் தின்னக் கூட
அனுமதித்ததில்லை நான்.

இன்றைக்கு
என் ரெண்டு வயது பேத்தி..
அந்தப் புத்தகத்தை
என் கண் முன்னாலேயே
எடுத்து போய்
வெளிச்சமற்ற
ஓர் மூலையில் உட்கார்ந்தபடி
பக்கம் பக்கமாய்
பிரித்துப் பார்த்து மழலையில்
புரிந்தும் புரியாமல் ஏதேதோ வாசிக்க
கண்டு சிரித்து
திரும்பிய நாழிகைக்கெல்லாம்
கிழித்தெறிந்து விட்டது.

எப்படிப் பார்த்தாலும்
இறந்த காலத்திற்கு
உரிய விமோசனம் தந்த
குழந்தை என்னைவிட
புத்திமான்!

***

நன்றி : பேத்திக்கு!

Monday, July 8, 2013

தொப்பிபாய் - 'சின்னப்பயல்' கட்டுரையிலிருந்து...

அன்புள்ள சகோதரருக்கு (அன்புள்ள சின்னப்பயலுக்கு என்றா சொல்வது?!)

துபாய்பாய் . இன்றைய கீற்று தளத்தில் உங்களின் 'பாம்பேட்ரீம்ஸ்'
நன்றாக இருந்தது. நீங்கள் அனுமதி அளித்தால் 'தொப்பிபாய்' பகுதியை மட்டும் என் வலைப்பக்கத்தில் பதிவேற்றுவேன்.

நன்றி

அன்புடன்

ஆபிதீன்

***

பகிர்ந்துக்கொள்ளுங்கள் ஆபிதீன் , மிக்க நன்றி 

சின்னப்பயல்

***

‘தொப்பிபாய்’

மல்லு பஜார் ஷாப்பிங் மாலில், கல்லாவில் இருக்கும் ஒரு பாய் (முஸ்லீம்), ரம்ஜானுக்காக அன்னிக்கு ஒரு புது தொப்பி ஒண்ணு போட்டிருந்தார். நிறைய வேலைப்பாடுகளும், எம்ப்ராய்ட்ரிகளுமா ஏகத்துக்கு நல்லாருந்தது. சில்க் துணியால தைத்தது போல,அந்த நினைப்பிலேயே அவர் அன்னிக்கு பில் போட்டுக்கிட்டு இருந்தார். கடைல எடுத்து வந்த சாமான்களை பில் போட வந்தவன், அவர் தொப்பியை பார்த்து , ‘என்ன பாய் பிரமாதமா இருக்கே’ என்று சொன்னேன். சிரித்துக்கொண்டே ஹ்ம்,,என்றார் , நான் சொன்னதை ரசிக்கவில்லை போல. ஏதோ நினைப்பிலிருந்த நான் என்னையும் அறியாமல் ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்துவிட்டேன். அவரது முகம் பார்க்கச்சகிக்காது போனதை என்னால் பார்க்க முடிந்தது. இருந்தாலும் அந்த நினைப்பு என்னை உள்ளூர அரித்துக்கொண்டுதானிருந்தது. பிறகு அதே கடைக்கு செல்லும்போதெல்லாம் என்னைப் பார்ப்பதை தவிர்க்கிறார் என்று தெரிந்தது. நானும் அதை உணர்ந்து கவனியாது விட்டது போலவே காட்டிக்கொண்டேன். எப்படியாவது இந்த இறுக்கத்தை தளர்த்திவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

வெகு நாட்கள் கழித்து சாலையோர கடையில் தேநீரருந்திக்கொண்டிருந்தார் அவர்.. என்ன பாய் “சாய் கிடைக்குமா” என்று போகிற வாக்கில் அவரிடம் கேட்டேன். ‘இந்தா குடி’ என்று தம்ளரை என்னை நோக்கி நீட்டி என்மேல் கவிழ்த்து விடுவது போல பாவனை காட்டினார். சரி ஏதோ என்னாலியன்ற அளவு நிலைமையை , இறுக்கத்தை தளர்த்தி விட்டேன் என்று நினைத்துக்கொண்டு , சிரித்தபடியே வீட்டிற்கு வந்து விட்டேன். இப்போது ஓரளவு அவரது மனம் ஆசுவாசப்பட்டிருக்கும் போல என்றெண்ணி எனக்குள் மகிழ்ச்சி.

மீண்டும் அதே கடைக்குத்தான் போயாக வேண்டும், அருகிலிருக்கும் கொஞ்சம் பெரிய கடை , எல்லாம் கிடைக்கும் என்பதால்.எப்போது போனாலும் அந்த ‘தொப்பிபாய்’ இருக்கிறாரா என்றே கண்கள் தேடும். அன்று என் முன்னாலேயே வந்துவிட்டார். அவர் முகம் வழக்கத்தை விடவும் சுருங்கிப் போயிருந்தது. ‘என்ன பாய் என்னாச்சு’ என்றேன். “இல்ல அன்னிக்கு எல்லார் முன்னாலயும் டீக்ளாஸ உயர்த்திக்காமிச்சு, ஊத்த முயற்சிச்சது தப்பு தான், மன்னிக்கணும்’ என்றார்.

இந்த மன்னிப்பை நான் அன்னிக்கு அவரப் பார்த்து சிரிச்சப்பவே கேட்டிருந்தால், இவ்வளவு தூரம், இத்தனை காலம் பிடித்திருக்காது, இறுக்கம் தளர்வதற்கு.ஹ்ம்...!

**

கீற்று இணையதளத்திலுள்ள இவரது மற்ற ஆக்கங்களை (குறிப்பாக : ‘இசை என்ற இன்ப வெள்ளம்’) வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Sunday, July 7, 2013

Thursday, July 4, 2013

கங்கைத்தாய் (Ganga Maiya)

ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா எழுதிய இந்தி நாவலான 'கங்கைத்தாய்’-ல் ஒரு பத்தி... (தமிழில் திருமதி சரஸ்வதி ராம்னாத்)
***

துயரமும் துக்கமும் எத்தனை சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இயற்கை அதைவிட அதிகமாகவே அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியையும் அளித்துள்ளது. துக்கத்திற்கு வரையறைக்கப்பட்ட எல்லை என்பது எப்படி இல்லையோ, அப்படியேதான் அதைத் தாங்கும் சக்தியும் எல்லையற்றது. எந்தத் துக்கத்தைப் பற்றிய கற்பனை கூட ஒருவனுடைய ஆன்மாவின் அஸ்திவாரத்தையே கலகலக்கச் செய்து நடுங்க வைக்கிறதோ, அதே துக்கம் சற்றும் எதிர்பாராது, திடீரெனத் தலையில் வந்து விழும்போது, அதைச் சகித்துக்கொள்ளும் சக்தியும் எங்கிருந்தோ அவனுக்கு வந்துவிடுகிறது. அதை அவன் சிரித்துக்கொண்டோ அல்லது அழுதுகொண்டோ தாங்கிக் கொள்கிறான். துக்கமெனும் கருமேகத்தினடியிலே அமர்ந்து அவன் துடிக்கிறான். அழுகிறான். அழுது அழுது அவன் அத்துக்கத்தை மறக்கிறான். மேகம் விலகுகிறது; மகிழ்ச்சியின் பிரகாசம் மின்னலிடுகிறது. மனிதனும் சிரிக்கிறான். தன்மீது துயர மேகங்கள் படிந்திருந்தன, தான் அழுதோம், துடித்து தவித்தோம் என்பதைக் கூட அவன் மறந்து விடுகிறான். இது ஒருசில அசாதாரணமான மனிதர்களுக்குப் பொருந்தாமலிருக்கலாம். ஆனால் சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரையில் முற்றிலும் உண்மையானது இது.

***

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி 

***
Cover Designed by Deo Prakash Choudhary