Showing posts with label துக்ளக். Show all posts
Showing posts with label துக்ளக். Show all posts

Wednesday, November 29, 2017

'இரட்டை இலை' கொண்டாட்டம் - ‘துக்ளக்’ சத்யா

'இரட்டை இலை' கொண்டாட்டம் இப்படியும் நடக்கலாம்  - ‘துக்ளக்’ சத்யா
----------------------------------------------

( இரட்டை இலைச் சின்னமும் கட்சியும் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிக்கே உரியது என்ற தேர்தல் கமிஷன் தீர்ப்பை, அ.தி.மு.க.வினர் அளவாகக் கொண்டாடுவது நல்லது. தலைவர்கள் இப்போது உள்ள மனநிலையில், கொண்டாட்டம் இப்படி முடிந்து விடலாம்.)

எடப்பாடி:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் முடிஞ்ச பிறகு என்ன செய்யப் போறோம்னு ஒரே கவலையா இருந்தது. இனிமே கவலையில்லை. ஆட்சி முடியற வரைக்கும், இரட்டை இலைச் சின்னம் கிடைச்சதைக் கொண்டாடலாம். அவ்வளவு குட்டிக் கதைகளுக்கு எங்கே போறதுன்னுதான் தெரியலை.

மதுசூதனன்:
இரட்டை இலைச் சின்னம் கிடைச்சதிலே உங்களுக்கு என்ன வெற்றி? சசிகலாவுக்கு எதிரா நான் போட்ட வழக்குலே, எனக்கு ஆதரவா தேர்தல் கமிஷன் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அப்ப நீங்க சசிகலா அணியிலே இருந்தவர்தானே?

ஜெயக்குமார்:
ரெண்டு அணிகளும் இணைஞ்சுட்ட பிறகு, நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசக்கூடாது. எங்க அணியிலே நீங்க இருந்ததாலே உங்களுக்கும் சேர்த்து வெற்றி கிடைச்சிருக்குது. நீங்க நாங்கன்னு பேசறதை நிறுத்திட்டு, ஆர்.கே. நகர்லே உங்க வேட்பாளரை நிறுத்தறதா, எங்க வேட்பாளரை நிறுத்தறதான்னு பேசலாம்.

ஓ.பி.எஸ்:
சண்டை வேண்டாம். இரட்டை இலை மீட்பு வெற்றி விழாவிலே எல்லாரும் கலந்துக்கலாம். அரசாங்க வேலை எதுவாயிருந்தாலும் கவர்னர் பாத்துக்குவாரு. ஏதாவது பிரச்சனை வந்தா பிரதமர் பாத்துக்குவாரு. நாம ஏன் மோதிக்கணும்? மறுபடியும் பிரிஞ்சு, பேச்சு வார்த்தை நடத்தி, துணை முதல்வர் பதவியும் போய் நான் சாதா மந்திரி ஆகணுமா?

மைத்ரேயன்:
அணிகள் இணைஞ்சும் மனங்கள் இணையலை. அந்த இணைப்புக்கும் குழுக்கள் அமைச்சு பேசணும்.

செல்லூர்:
மனங்கள் இணைகிறது எப்படி? ஃபெவிகாலைத் தடவிகிட்டு கட்டிப் பிடிச்சா மனங்கள் ஒட்டிக்குமா? 

எடப்பாடி:
பொறுப்பை என்கிட்டே விட்டுருங்க. நான் படிப்படியா வளர்ந்தவன். சின்னம்மா கொஞ்சம் வளர்த்தாங்க, தினகரனாலே கொஞ்சம் வளர்ந்தேன். கூவத்தூர்லே கொஞ்சம் வளர்ந்தேன். கடைசியா ஓ.பி.எஸ்.ஸாலே கொஞ்சம் வளர்ந்து, மொத்தத்திலே எல்லோரையும் விட அதிகமா வளர்ந்துட்டேன். எனக்குத் தெரியாதா, கட்சியைத் எப்படி வளர்க்கணும்னு?

கே.பி.முனுசாமி:
முதல்வராயிட்டோம்னு ரொம்பத் துள்ளக் கூடாது. 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருக்குதுன்னு தேர்தல் கமிஷனே சொல்லிடுச்சு. இதை வெச்சுட்டு ஆட்சியை ஓட்டணும்னா எங்க தயவு இல்லாம முடியாது. நாங்களும் வெளியே போயிட்டா இரட்டை இலை கூட உங்களைக் காப்பாத்தாது.

ஜெயக்குமார்:
என்ன இரட்டை இலையை அவ்வளவு அலட்சியமாப் பேசறீங்க? அம்மாவும் இரட்டை இலையும் பர்கூர்லே தோற்றிருக்கலாம். 1996-லே இரட்டை இலை கேவலமா மண்ணைக் கவ்வியிருக்கலாம். இரட்டை இலை இருந்தும் அப்பப்ப ஆட்சியைப் பறி கொடுத்திருக்கலாம். மற்ற எல்லா சமயங்களிலும் இரட்டை இலைதானே நம்மை ஜெயிக்க வெச்சது?

தங்கமணி:
ஆமா. ஊழல், அராஜகம் ரெண்டும் சேரும்போதுதான் இரட்டை இலைக்கு பின்னடைவு வரும். வெறும் ஊழல் மட்டும் இருந்தா இரட்டை இலை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நாம தாராளமா சந்தோஷப்படலாம்.

மதுசூதனன்:
நாங்க கஷ்டப்படும் போது உங்களை சந்தோசப்பட விட்டுருவோமா? எங்களை விரோதிச்சுக்கிட்டு நீங்க ஆட்சி நடத்திட முடியுமா?

ராஜேந்திர பாலாஜி:
ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லேன்னா கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மோடி பார்த்துக்குவார். தினகரன் அப்பீல் பண்ணாலும் பிரச்னை இல்லை. மேலே இருக்கிறவர் பாத்துக்குவார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்லே பா.ஜ.க. நின்னாக் கூட அ.தி.மு.க.வை மோடி ஜெயிக்க வெச்சுடுவாரு. நாம ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை.

மைத்ரேயன்:
மோடியை எனக்கு நல்லாத் தெரியும். பெருந்தன்மை காரணமா பல விஷயங்களை நான் அவர் கிட்டே சொல்லலை. அதுக்காக எப்பவும் பெருந்தன்மையா இருந்துடுவேன்னு நினைக்காதீங்க. பேசினப்படி செட்டில் பண்ணலைன்னா இப்பவே டெல்லிக்குப் போறேன்.

எடப்பாடி:
எனக்கு மட்டும் பிரதமரைத் தெரியாதா? நாளைக்கே, தமிழக திட்டங்களுக்காக பிரமரை சந்திக்கப் போறேன்னு அறிவிச்சுட்டு, இரட்டை இலை கிடைச்சதுக்காக அவருக்கு நன்றி தெரிவிச்சுடறேன். அவர் ஏமாந்த சமயம் பார்த்து கால்லே விழுந்துடறேன்.

ஓ.பி.எஸ்:
நீங்க டெல்லிக்குப் போனா நானும் டெல்லிக்குப் போகணும். நம்முடைய முதல் எதிரி தினகரன்தான். நாம இல்லாத நேரத்திலே, அம்மா சாந்தி அடைய, ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு அவர் தானம் கொடுத்துட்டா என்ன பண்றது?

செல்லூர்:
அவருக்கு முன்னாலே நாம அ.தி.மு.க. வுக்கு ஆர்.கே. நகர்லே திதி கொடுத்துடலாமே.

ஓ.பி.எஸ்:
அபசகுனமாப் பேசாதீங்க.  அ.தி.மு.க.வுக்கு இப்ப திதி கொடுக்கக் கூடாது. அம்மாவுக்குத்தான் கொடுக்கணும்.

ஜெயக்குமார்:
அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. அம்மா நிரந்தர முதல்வரா இருந்தாங்க. எடப்பாடியாலே அவ்வளவு முடியாட்டாலும் நூறு வருஷமாவது அம்மா ஆட்சியை நடத்த முடியும். அதனாலே, பிரச்னை பண்ணாம தி.மு.க.வையும் தினகரனையும் மட்டும் திட்டுங்க. அதான் நம்ம கொள்கை.

கே.பி. முனுசாமி:
அம்மா மரணம் பற்றி விசாரணை நடக்கிறதை மறந்துட்டுப் பேசறீங்க. நாங்க மனசு வச்சா இப்ப கூட அம்மா மரணத்திலே உங்களுக்கெல்லாம் தொடர்பு இருக்குதுன்னு சந்தேகப்பட முடியும்.

சி.வி.சண்முகம்:
அப்ப முதல்வரா இருந்ததே ஓ.பி.எஸ்.தான். அவருக்குதான் எல்லா உண்மைகளும் தெரியும்னு நாங்களும் விசாரணைக் கமிஷன்லே சொல்ல முடியும்.

மதுசூதனன்:
கூவத்தூர்லே என்ன நடந்ததுன்னு வெளியே சொன்னா, உங்க மானம் கப்பலேறிடும். கூவத்தூர் பாக்கியும் செட்டில் ஆகலை. இணைப்பு பாக்கியும் செட்டில் ஆகலை. காலத்துக்கும் மந்திரிகள் கிட்டே பிச்சை எடுக்கணுமா நாங்க? அம்மா மரணம் தொடர்பா ஸி.பி.ஐ. விசாரணை வெச்சீங்களாய்யா?

கே.பி.முனுசாமி:
சசிகலாவையும் நீக்க மாட்டீங்க. எங்க கஷ்டத்தையும் கவனிக்க மாட்டீங்கன்னா என்னய்யா அர்த்தம்?

தம்பிதுரை:
பேசும் போதே ஏன் கையை ஓங்கறீங்க? அ.தி.மு.க.விலே எந்தப் பிளவும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையா இருக்கோம். அதை ஞாபகம் வெச்சுக்குங்க.

கே.பி.முனுசாமி:
ஊழல் ஆட்சி நடக்கிறதுன்னு அண்ணன் ஓ.பி.எஸ். சொன்னதை மறந்துட்டீங்களா? போனாப் போகுதுன்னு 'எடப்பாடி நல்லாட்சி நடத்துகிறார்'ன்னு வாய் கூசாமா அவர் புளுகினதுக்கு நீங்க காட்டற நன்றியா இது?

சி.வி.சண்முகம்:
அம்மா ஆட்சிக்கு எதிரா சட்டசபையிலே வாக்களித்த துரோகிகளை கட்சியிலே சேர்த்துகிட்டது எங்க தப்பு. நீங்க வெளியே போனாக் கூட கவலையில்லை. மோடி இருக்கார். சட்டசபையைக் கூட்டாமலேயே 2021 வரைக்கும் காலம் தள்ளிவிடுவோம். பார்க்கிறீங்களா?

மதுசூதனன்:
நாங்க மறுபடியும் பிரிஞ்சு, ஆர்.கே. நகர்லே தனியா போட்டியிட்டு ஜெயிக்க முடியும். பார்க்கிறீங்களா?

ஜெயகுமார்:
அறிவோட பேசுங்க. எங்க கூட சேர்ந்த பிறகு உங்களுக்கு என்ன மரியாதை இருக்குது? நீங்க எப்படி ஜெயிக்க முடியும்?

மைத்ரேயன்:
ஜெயா டி.வி.யிலே கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. மனசுலே இருக்கிறதையெல்லாம் பேட்டியிலே சொல்லிட முடியும். மனங்கள் இணையறதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யற வழியைப் பாருங்க. இல்லேன்னா, இரட்டை இலை வெற்றி விழாவை நாங்க தனியாக் கொண்டாடிக்கிறோம்.

எடப்பாடி:
ஏன் இப்படி கோபப்படறீங்க? அம்மா ஆட்சி தொடர்ந்தா, கோடி கோடியா நன்மை. அந்த வாய்ப்பு இன்னும் மூன்றரை வருஷம்தான் கிடைக்கும். அதுவரைக்கும் ஒற்றுமையா இருக்கக் கூடாதா?

ஓ.பி.எஸ்:
நீங்க இவ்வளவு தூரம் சொல்றதாலே, ஆர்.கே. நகர் தேர்தல் வரைக்கும் நாம இரட்டைக் குழல் துப்பாக்கியா செயல்படலாம். அதுகுள்ளே அதிருப்தியாளர்களுக்கு உரிய மரியாதை செய்யலைன்னா, அம்மா சமாதியிலே தியானம் பண்ணிட்டு, தனித் துப்பாக்கி தூக்க வேண்டியிருக்கும்.

*

நன்றி: சத்யா / துக்ளக் (06.12.2017)
தட்டச்சு செய்த நண்பர் தாஜூக்கும் நன்றி

Sunday, November 3, 2013

நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....! - -'துக்ளக்' சத்யா



Image Courrtesy : outlookindia
***
நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....!

சத்யா

// நிரா ராடியாவின் டெலிஃபோன் உரையாடல்களில் உள்ள முக்கியமான ஆறு பயங்கர அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என ஸி.பி.ஐ.-க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த ஆறு பயங்கரங்கள் எவை என்று விவரமாக வெளியிடப்படாததால், என்னவோ ஏதோ என்ற கவலையில் ஆழ்ந்தோம். ஆய்வு செய்வதற்கு முன்பாக, அந்த பயங்கரங்கள் குறித்து ஸி.பி.ஐ. நிரா ராடியாவிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தினால் அது இப்படிதான் இருக்குமோ? //

ஸி.பி.ஐ. அதிகாரி :
உங்க டெலிஃபோன் உரையாடல்களிலே இருக்கிற பயங்கரங்களைக் கேட்டு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி அடைந்திருக்குது. அதைப் பத்தி ஆய்வு செய்யணும்னு உத்தரவு போட்டிருக்குது. மொதல்லே உங்களை விசாரிச்சுட்டா ஆய்வைத் தொடர வசதியா இருக்கும்.

நிரா ராடியா :
என்னுடைய 180 நாள் பேச்சைத்தான் வருமான வரித்துறை பதிவு செஞ்சுது. இதுக்கே இவ்வளவு பயங்கரமான்னு குதிக்கிறவங்க, மொத்த பேச்சையும் கேட்டா என்ன சொல்வாங்களோ? உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன? சின்ன
பயங்கரமாயிருந்தாதான் நான் டெலிஃபோன்ல பேசுவேன். பெரிய விசயம்னா, நேராத்தான் பேசுவேன். அது எங்க இண்டஸ்ட்ரியல் பாலிஸி.

ஸி.பி.ஐ. :
நல்லவேளை, உங்க டெலிஃபோன் பேச்சை மட்டும்தான் ஆய்வு பண்றோம். 'அரசு உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறதுக்கே பல கோடி செலவாகிவிடுது.'ன்னு உங்க தோழிகிட்டே சொல்லியிருக்கீங்க.......

நிரா :
இதுலே என்ன பயங்கரம் இருக்குது? அவங்க செய்யற வேலைக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது எங்க கடமை இல்லையா? 'இதுலே சலுகை காட்டுங்க, அதுலே வரியை ரத்து பண்ணுங்க, அந்த வேலையை எங்க நிறுவனத்துக்குக்
கொடுங்க'ன்னு உரிமையா கேக்கிறோம். சொன்னபடி செய்யுறாங்க. அந்த வேலைக்கு சம்பளம் கொடுக்கிறது தப்பா?

ஸி.பி.ஐ. :
அரசு உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் உங்க கிட்டே எப்படி சம்பளம் வாங்கலாம்?

நிரா :
எங்க கிட்டே மட்டுமல்லே, பல தொழிலதிபர்கள் கிட்டேயும் சம்பளம் வாங்கறாங்க. அவங்களை எல்லாம் விசாரிச்சீங்களா? மாட்டிக்கிட்டேன்னு தானே கேள்வி மேலே கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தறீங்க?

ஸி.பி.ஐ. :
சரி, அவுங்க பெயர் பட்டியலைக் கொடுங்க. சுப்ரீம் கோர்ட் ரொம்ப தொந்தரவு பண்ணா, கேஸ் போட உபயோகமா இருக்கும்.

நிரா :
லிஸ்ட் எல்லாம் கொடுக்க முடியாது. பேரை வெளியே சொல்றதில்லைன்னு அக்ரிமெண்ட் போட்டிருக்கோம். இதுவும் ஸ்விஸ் பேங் கறுப்புப் பண ஒப்பந்தம் மாதிரிதான். உயிரே போனாலும் எந்தத் தகவலும் வெளியே வராது. அப்படியொரு தொழில் கூட்டணி தர்மம்.

ஸி.பி.ஐ. :
'சீனாவும் பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதியிலே ஊடுருவ ஆசைப்படுது. அவர்களை இந்தியா தடுக்கக் கூடாது'ன்னு நீங்க ஒரு மத்திய மந்திரி கிட்டே பேசியிருக்கீங்க. அவரும் 'உரிய நடவடிக்கை எடுக்கிறோம்'னு உறுதி
அளிச்சிருக்காரு.

நிரா :
ஆமா, சீனாவிலேயும் பாகிஸ்தானிலேயும் கூட எங்க வியாபாரம் நடக்குது இல்லே? அதுலே லாஸ் வந்தா நீங்கள் ஏத்துப்பீங்களா? இதெல்லாம் பிஸ்னஸ், நீங்க தலையிடாதீங்க. உங்களுக்குத் தெரியாது.

ஸி.பி.ஐ. :
நீங்க சொன்னா மந்திரிகள் எப்படிகேக்கறாங்க?

நிரா :
என்ன கேள்வி கேக்கறீங்க? பிரதமரே கேக்கும்போது மந்திரிகள் கேட்க்க மாட்டாங்களா?

ஸி.பி.ஐ. :
ஆ...! பிரதமரும் கேட்பாரா?

நிரா :
நீங்களும் சுப்ரீம் கோர்ட் மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் ஷாக் ஆகறீங்களே? நான் சொன்னபடி கேக்கலைன்னா, பிரதமர் பத்தி ஒபாமா கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் இல்லே? அந்த பயம் அவருக்கு இருக்காதா?

ஸி.பி.ஐ. :
புரியலை; பிரதமருக்கு நீங்கதான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கறீங்களா?

நிரா :
எல்லாத்தையும் சொல்லித் தரமாட்டேன். பிஸினஸ் மட்டும்தான். உதாரணத்துக்கு, எந்தெந்த நிலக்கரிச் சுரங்கங்களை எந்தெந்த நிறுவனத்துக்கு ஒதுக்கணும்னு அவருக்கு என்ன தெரியும், பாவம்? நான்தானே சொல்லணும்! கோடிக் கணக்கிலே பணம்புரள்ற விசயமாச்சே! கொஞ்சம் ஏமாந்தாக் கூட அநியாயத்துக்கு கவர்மெண்டுக்கு லாபமாயிடுமே.

ஸி.பி.ஐ. :
நிலக்கரிச் சுரங்கங்களை விதி முறைப்படிதானே ஒதுக்கணும்?

நிரா :
கண்டிப்பா, நாம யாருக்கு ஒதுக்கீடு பண்றோமோ, அதுக்குத் தகுந்த மாதிரி நிலக்கரித் துறை அதிகாரிகள் விதிமுறைகளைத் திருத்திடுவாங்க.

ஸி.பி.ஐ. :
தீவிரவாதி ஜெயில்லேர்ந்தும், கோர்ட்லேர்ந்தும் தப்பிக்கப் போற விஷயத்தைக் கூட ஒரு ஜர்னலிஸ்ட்கிட்டே பேசியிருக்கீங்க.

நிரா :
இந்திய முஜாஹ்தீன் தீவிரவாதி தப்பிச்சதைப் பத்தி கேக்கறீங்களான்னு புரியலை. பொதுவா தப்பிக்கிற தேதி, டைம் மட்டும்தான் எங்க லெவல்லே முடிவு பண்ணுவோம். மத்த விஷயங்களை நீங்க ஆஃப்கானிஸ்தானுக்கு ஃபோன் பண்ணிதான் கேக்கணும். லைன் போட்டுத் தரட்டுமா

ஸி.பி.ஐ. :
ஐயையோ வேண்டாம்.

நிரா :
ஒரு தடவை என்ன ஆச்சு தெரியுமா? காஷ்மீரைத் தாக்கறதா, கல்கத்தாவைத் தாக்கறதான்னு தீவிரவாதிகளுக்குள்ளே சண்டை. நான்தான் தலையிட்டு, இந்த மாசம் காஷ்மீர், அடுத்த மாசம் கல்கத்தான்னு சமரசம் பண்ணிவெச்சேன். இதுக்காக பிரதமர் கூட எனக்கு தேங்ஸ் சொன்னாரு.

ஸி.பி.ஐ. :
என்னது? பிரதமர் தேங்ஸ் சொன்னாரா?

நிரா :
ஆமா. விஷயம் தெரிஞ்சுட்டு, அதுக்கேத்த மாதிரி பிரதமர் வெளிநாடு போயிட முடியுது இல்லே? அதை விடுங்க. சட்டீஸ்கர்லே கூட கலெக்டரைக் கடத்தறதா, கமிஷனரைக் கடத்தறதான்ற மாதிரி சமயங்களிலே தீவிரவாதிகளுக்கு நான்தான் கன்ஸல்டண்டா இருக்கேன். கோரிக்கை நிறைவேறினதும், அவங்களை விடுவிக்கறதுக்கும் ஏற்பாடு பண்றேன். அதனாலே ரெண்டு பக்கமும் என் பேர்லே மரியாதை உண்டு.

ஸி.பி.ஐ. :
சரி. பயமாயிருக்குது. தீவிரவாத விஷயத்தை விடுங்க. நிர்வாக ரீதியான நல்ல பயங்கரங்களைப் பத்திப் பேசலாம். 'எக்கச்சக்கமா சொத்து சேர்ந்து போச்சு, பணத்தை எப்படிக் காப்பாத்தறதுன்னே புரியலை, சொத்து கணக்கு வேறே கேக்கிறாங்க'ன்னு ஒரு மத்திய மந்திரி ஃபோன்லே அழுது புலம்பியிருக்காரு. நான் எப்படியாவது ஹெல்ப் பண்றேன்னு நீங்க அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கீங்க.

நிரா :
எல்லா மந்திரிகளுக்கும் இந்த மாதிரி பிரச்னை ஏற்படறது சகஜம்தான். வருமான வரிச் சட்டத்திலேர்ந்து அமைச்சர்களுக்கு விலக்கு வழங்கற அவசர சட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு பண்றேன்னு உறுதி அளிச்சேன். சுப்ரீம் கோர்ட் கவனிக்கிறதாலே கொஞ்சம் டிலே ஆகுது. மத்திய அமைச்சர்கள் ரகசியக் கூட்டத்திலேயும் இந்த சப்ஜெக்ட் வருது.

ஸி.பி.ஐ. :
அமைச்சர்கள் கூட்டத்திலே கூட நீங்க கலந்துக்குவீங்களா?

நிரா :
ஊஹும். அங்கே எதைப் பத்தி விவாதிக்கணும்னு அஜெண்டா தயார் பண்ணிக் குடுக்கறதோட என் வேலை முடிஞ்சுடும்.

ஸி.பி.ஐ. :
மந்திரி சபை கூட்ட அஜெண்டாவை நீங்க தயார் பண்றீங்களா?

நிரா :
எல்லா கூட்டத்துக்கும் நான் தயார் பண்ண மாட்டேன். முக்கியமான கூட்டத்துக்கு மட்டும்தான் 'மத்திய அரசு - தொழிலதிபர்கள் ஒப்பந்த’ப்படி அரசு நடக்கலைனா, அதை சரி செய்ய வேண்டியது என் வேலையாச்சே!

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே ஒரு தடவை ஸி.பி.ஐ. அதிகாரிகள் கிட்டே நீங்க கோபமா பேசினது கூட பதிவாயிருக்குது. இதோ... பேச்சைக் கேளுங்க....

நிரா :
ஓ...... இதைச் சொல்றீங்களா? மத்திய அமைச்சர்களும் அவங்களுக்கு வேண்டிய அதிகாரிகளும் வழக்குலே மாட்டும் போது, ஸி.பி.ஐ. சார்பா அவங்க மேலே எஃப்.ஐ.ஆர். போடறது சட்ட அமைச்சரோட வேலை. ஒரு தடவை சட்ட அமைச்சர் வெளிநாடு போயிருந்தப்போ, ஸி.பி.ஐ.யே எஃப்.ஐ.ஆர். போட்டுடுச்சு. அதான் 'சட்ட மந்திரி இல்லைன்னா என்ன? என் கிட்டே கேட்டிருந்தா நானே எஃப்.ஐ.ஆர். போட்டிருப்பேன் இல்லே? உங்களுக்கு என்ன அதிகாரம்?'ன்னு நல்லா கேட்டேன். அதான் இது.

ஸி.பி.ஐ. :
எஃப்.ஐ.ஆர். நீங்க எப்படிப் போடலாம்?

நிரா :
ஏன்? நான் என்ன புதுசாவா எஃப்.ஐ.ஆர். போடுறேன்? நம்ம ஆளுங்க, வழக்குலேர்ந்து நல்லபடியா தப்பிச்சு வர வேண்டாமா? ஏதாவது பிரச்சனை ஏற்பட்டா, எங்க பாஸ் என்னைத்தானே கேப்பார்?

ஸி.பி.ஐ:
கிரிமினல் எம்.பி.க்கள் பிரதமரை கேரோ பண்ண திட்டம் போட்டிருக்கிறதாக நீங்களும் ஒரு பெண் நிருபரும் பேசியிருக்கீங்க....

நிரா :
ஐயோ... அது பயங்கர ஜோக்! சீனியர் கிரிமினல் எம்.பி.க்கள் மேலே பல வழக்குகள் இன்னும் வாபஸ் ஆகாம இருக்குது. அதை எல்லாம் வாபஸ் வாங்க உடனே நடவடிக்கை எடுக்கணும்னு பிரதமரை ஹவுஸ் அரெஸ்ட் செய்ய திட்டம் போட்ட தகவல் எனக்கு கிடைச்சது. பிரதமரை எப்படியாவது காப்பாத்திட்டா, நமக்கு பெரிய அஸைன்மெண்ட் கிடைக்கும்னு எங்க பாஸ் என்கிட்டே சொன்னார். உடனே நான் கிரிமினல் எம்.பி.க்களோட ஃபோன்லே பேசி, வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா ஃபைல்ஸும் கூடிய சீக்கிரம் காணாமப் போகும்னு உறுதி அளிச்சேன். அப்புறம்தான் பிரச்னை முடிஞ்சது.

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே நீங்க நல்ல விஷயமே பேசினது இல்லையா?

நிரா :
எப்பவாவது அப்படி பேச்சு வரும். உடனே 'ராங் நம்பர்'னு வெச்சுடுவேன்.

***

நன்றி: துக்ளக் (30.10.2013) , சத்யா, 
தட்டச்சு உதவி : தாஜ்

Thursday, November 22, 2012

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா


துக்ளக் சத்யாவின் ஹாஸ்ய எழுத்து குறித்து, நான் இங்கே பல முறை ரசித்து எழுதி இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் அவரது அந்தத் திறம் 'நுட்பத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிறது' என்பதை மட்டும் சுட்டிக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. வாசகர்கள் ஒவ்வொரு பாராவிலும் நின்று வாசித்து யோசிப்பதென்பது அவசியத்திலும் அவசியமாகவே இருக்கும். அப்படி நீங்கள் வாசிப்பதில், வாய்விட்டு சிரிப்பதென்பது இரட்டிப்பாக வாய்ப்புண்டு. நன்றி. - தாஜ் 

***


தி.மு.க.வும்  ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா

[டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி(!) குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.] 

துரைமுருகன்
ஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்ணப்பவே நான் நினைச்சேன் - இப்படி மனு கொடுத்துட்டு வெற்றியோட திரும்புவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்பவே இலங்கைத் தமிழர்களின் பாதி பிரச்னை தீர்திருக்கும். அம்மையாருக்கு ஒரே பொறாமையா இருந்திருக்கும்.

அன்பழகன்:
அம்மையாரை விடுங்க. ராஜபக்சேவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! கழகம் ஆட்சியிலே இருந்தப்போ அடங்கி ஒடுங்கி இருந்த மாதிரி இப்பவும் இருந்திடுவோம்னு நினைச்சு ஏமார்ந்திருப்பாரு. இனிமே தமிழர்கள் விசயத்திலே வாலாட்ட மாட்டார். ஐ.நா. சபையிலே மனு கொடுக்கிறதுன்றது சாதாரண விஷயமா?

வீரமணி:
எதிர்க் கட்சி ஆன பிறகும் சூடு சொரணையில்லாம இருக்க முடியுமா? இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது? இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மத்திய அரசே கூட பயந்து போயிருக்கும். இதைத்தான் தமிழ் சமுதாயம் கலைஞர் கிட்டே எதிர்பார்க்குது.

ஆற்காடு வீராசாமி:
சரி, ஐ.நா. துணை பொதுச் செயலாளர் என்ன சொன்னார்? ஆரம்பத்திலேர்ந்து சொல்லுங்க.

ஸ்டாலின்:
வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். பாலு வணக்கம் சொன்னதும், அவருக்கும் வணக்கம் சொன்னார்.

துரைமுருகன்:
அப்பாடா! அவ்வளவு செலவு பண்ணிட்டு ஐ.நா. போனது வீணாகலை.

ஆற்காடு வீராசாமி:
பின்னே, வணக்கம் சொல்லாம இருப்பாரா? கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும்? ம்.. அப்புறம்?

ஸ்டாலின்:
டேக் யுவர் ஸீட்ன்னாரு.

பாலு:
சரின்னு உட்கார்ந்தோம். இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஐ.நா. அதிகாரி முன் அமர்ந்த முதல் தமிழர்கள்ற பெருமை எங்களுக்குத்தான் கிடைச்சது.

அன்பழகன்:
அப்புறம்? கையிலே என்ன மனுன்னு கேட்டிருப்பாரே?

ஸ்டாலின்:
ஆமா. அவர் கேட்டதும் நான் கொடுத்தேன். நான் கொடுத்ததும் அவர் வாங்கிக்கிட்டாரு.

துரைமுருகன்:
ஐ.நா. அதிகாரிகள் எப்பவுமே அப்படித்தான். விரைந்து நடவடிக்கை எடுக்கிறவங்க.

கருணாநிதி:
மனுவிலே என் கையெழுத்தைப் பார்த்திட்டு, யார் கையெழுத்துன்னு கேட்டாரா?

பாலு:
நாங்களே சொன்னோம். இதே கையெழுத்திலேதான் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்காருன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தேங்யூன்னாரு.

கருணாநிதி:
நான் யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து எதையும் செய்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. இருந்தாலும் 'கலைஞருக்கு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் நன்றி'ன்னு முரசொலியிலே இந்தச் செய்தியைப் போட்டுருவோம். மனுவைப் படிச்சுட்டு என்ன கேட்டார்?

ஸ்டாலின்:
எதுக்கு ரெண்டு தடவை டெசோ ஆரம்பிச்சீங்கன்னு கேட்டார். 'இனி டெசோவைத் தொடர்வதால் பயனில்லைன்னு சொல்லி முதல் டெசோவை முடிச்சோம். முடிச்ச பிறகும் பயனில்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் இன்னொரு டெசோவை ஆரம்பிச்சோம். இதனாலேயும் பயனில்லைன்னு புரிஞ்சுக்கற வரைக்கும் இந்த டெசோ தொடரும்'னு அவருக்கு உறுதியளிச்சேன்.

பாலு:
இலங்கைப் பிரச்சனைக்காக கலைஞர் 1956லேர்ந்து குரல் கொடுத்துட்டு வரார்னு நாங்க சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். '56 வருஷமா நிறுத்தாம குரல் கொடுக்கிறது கின்னஸ்லே இடம் பெற வேண்டிய சாதனை. இந்த சாதனை தொடரணும்'னு வாழ்த்தினார். 

கருணாநிதி:
இலங்கைப் பிரச்னைக்காக 1976-லும் 1991-லும் இருமுறை ஆட்சியை இழந்தவன்தான் இந்த கருணாநிதின்னு சொன்னதுக்கு என்ன சொன்னார்?

வீரமணி:
சொல்றதுக்கு என்ன இருக்கிது? இலங்கைப் பிரச்னை தீவிரமடைய ஆரம்பிச்சதே 1980-களிலேதான். அதை முன்னாலேயே உணர்ந்து 1976-லேயே அதுக்காக ஆட்சியை தூக்கி எறிஞ்சிருக்காரேன்னு அதிர்ச்சி அடைஞ்சிருப்பார்.... அப்புறம்? ஐ.நா. மேற்பார்வையிலே பொது வாக்கெடுப்பு நடத்தணும்னு சொன்னீங்களா?

பாலு:
சொன்னோம். உரிய நடவடிக்கை எடுப்போம்னு சொன்னார். தேங்க்யூன்னு நான் சொன்னேன். ஸ்டாலினும் தேங்ஸ் சொன்னார். துணை பொதுச் செயலாளர் 'வெல்கம்'ன்னாரு.

ஆற்காடு வீராசாமி:
ஓ! பொது வாக்கெடுப்பை வரவேற்கிறதாவே சொல்லிட்டாரா? கழகம் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய விஷயம் ராஜபக்சேவுக்குத் தெரிஞ்சா அநேகமா தனி ஈழம் கொடுக்கிற முடிவுக்கே வந்துடுவாரு. இலங்கைப் பிரச்னையிலே கழகத்தின் நிலைப்பாடுகளையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும், அவருக்கு விளக்கிச் சொன்னீங்களா?

பாலு:
ஊஹும். பாவமாயிருந்தது. பாத்தா நல்ல மனுஷனாயிருக்காரு, அவருக்கு எதுக்கு அதெல்லாம்னு விட்டுட்டோம். அவர் மட்டும் நம்ம கோரிக்கைகளை அலட்சியப்படுத்தட்டும், மவனே அப்ப எல்லாத்தையும் பட்டியல் போட்டு அடுத்த தடவை நானே படிச்சுக் காட்டிடறேன்.

ஸ்டாலின்:
ஆனா, முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல்லணும். எங்களைப் பார்த்ததும், எப்படி அன்பா வரவேற்றாரோ, அதே மாதிரி அன்போடுதான் வழியனுப்பினார். அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்னையிலே அக்கறை காட்டினார்.

அன்பழகன்:
ஆச்சரியமாயிருக்குதே. இலங்கைப் பிரச்னையிலே நம்மைவிட அதிக அக்கறையோட இருக்காங்க போல இருக்குதே.

துரைமுருகன்:
சிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் பத்தி சொன்னீங்களா?

பாலு:
இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடும்படி இந்திய அரசு, இன்னும் ஐ.நா. சபையை வலியுறுத்தலை. அதனாலே, தன்னை வலியுறுத்தும்படி ஐ.நா.வே இந்திய அரசை வலியுறுத்தணும்னு கேட்டுக்கிட்டோம்.

துரைமுருகன்:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

பாலு:
தலையாட்டினார்.

ஆற்காடு வீராசாமி:
ஐ.நா. அதிகாரிகள் நம்மை மாதிரி இல்லை. எதையும் புரிஞ்சுகிட்டுத்தான் தலையாட்டுவாங்க.

ஸ்டாலின்:
லண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டுலேயும் இலங்கைத் தமிழர் நிலையை விளக்கிப் பேசினேன். நான் பேசி முடிச்சதும் அவுங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.

துரைமுருகன்:
பேசி முடிச்சதுக்கா?

ஸ்டாலின்:
ஊஹூம். எங்களுக்குத் தெரிஞ்ச விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 'இலங்கையில் படுகொலைகள் நடந்தப்போ கழக ஆட்சியிலே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எத்தனை படுகொலைகள் நடக்குதுங்கற கணக்கு கலைஞருக்கு வந்துட்டுத்தான் இருந்தது; அதை நினைச்சு மத்திய அரசுக்குத் தெரியாம கலைஞர் ரகசியமா கண்ணீர் விட்டுக் கதறிட்டுத்தான் இருந்தார்'னு விளக்கமா சொன்ன பிறகுதான் இலங்கைத்தமிழர் நலனுக்காக கழகம் இவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்குதுங்கற விஷயமே அவங்களுக்குப் புரிஞ்சுது.

பாலு:
எங்களைச் சந்தித்த இலங்கை தமிழர்கள் பலர், தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கலைஞர் வாங்கி, யாருக்கும் கொடுக்காம தானே பத்திரமா வெச்சுகிட்டதுக்காக நன்றி சொன்னாங்க. அவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த காமெடிதான் ஆறுதலா இருந்ததுன்னாங்க.

வீரமணி:
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவல நிலைமையைப் பத்தி சொன்னீங்களா? 

ஸ்டாலின்:
சொன்னேனே. ஏரோப்ளேன்லே வரும் போது நான் பாலுகிட்டே சொன்னேன். ஆமான்னு பாலுவும் என் கிட்ட சொன்னாரு.

கருணாநிதி:
ரெண்டு பேரும் சேர்ந்து வேறே யார் கிட்டேயாவது சொன்னீங்களா?

ஸ்டாலின்:
அதான் உங்க கிட்டே சொல்றோமே.

கருணாநிதி:
சரி, விடுங்க. மனித உரிமை ஆணையத் தலைவர் கிட்டே ஏதாவது சொன்னீங்களா?

பாலு:
சொல்லாம இருப்போமா? அதுக்குத்தானே போனோம்? அவங்களுக்கும் வணக்கம் சொல்லி கை குலுக்கினோம். பதிலுக்கு அவங்களும் கை குலுக்கிப் புன்னகைச்சாங்க.

அன்பழகன்:
அதாவது இலங்கைத் தமிழர் நிலையை அவங்க கவனத்துக்கும் கொண்டு போயிட்டீங்கன்னு சொல்லுங்க. கடைசியா என்ன நடந்தது?

பாலு:
கடைசியா 'அப்ப நாங்க புறப்படறோம்'னு எழுந்து நின்னு சொன்னோம். அவங்களும் எழுந்து நின்னு 'சரி'ன்னாங்க.

கருணாநிதி:
வேறே ஒண்ணும் கேக்கலையா?

ஸ்டாலின்:
உங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டாங்க. இந்த மனுவை வாங்கிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். உடனே மனுவை வாங்கிக்கிட்டு அந்தக் கோரிக்கையை நிறைவேத்திட்டாங்க.

அன்பழகன்:
எனக்கென்னவோ இந்த நடவடிக்கைகளாலே இலங்கைப் பிரச்னை தீருமான்னு சந்தேகமாத்தான் இருக்குது.

கருணாநிதி:
தீரலைன்னாலும் நல்லதுதான். ஸ்டாலினும் பாலுவும் ஐ.நா. சபையில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு இன்னொரு மனு எழுதி, அடுத்த தடவை அழகிரியையும் கனிமொழியையும் ஐ.நா. சபைக்கு அனுப்பலாம். குடும்பப் பிரச்னையாவது கொஞ்சம் தீரும்.


***


நன்றி: சத்யா / துக்ளக்
தட்டச்சு செய்து அனுப்பி சிரிக்கவைத்த தாஜ்பாய்க்கும் நன்றி

***

மேலும் :
துக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்

Tuesday, October 16, 2012

மனைவிகளுக்கு சம்பளம் கொடு! - துக்ளக் சத்யாவின் கெடு

இப்போதெல்லாம் அஸ்மாவை நான் வம்பிழுப்பதில்லையாம். நண்பர் தாஜ் ரொம்பவுமே கவலைப்படுகிறார். நெருங்கிய நண்பர்கள் என்றாலே அப்படித்தான்.  குடும்பம் குலைந்தால்தான் நிம்மதி! காரணம் எல்லாம் ஒன்றுமில்லை, 'என்னயப் பத்தி இன்னமே பேசுனீங்க.. பல்லைப் பேத்துப்புடுவேன்'  என்று பண்புடன் சொன்னாள் , மன்னிக்கவும் , சொன்னார் அஸ்மா. அவருடைய ’பாட்டுக்கு’ பிள்ளைகள் அனீகாவும் நதீமும் சேர்ந்து கோரஸ் வேறு கொடுக்கிறார்கள். அதனால்தான் தைரியமாக  வம்பிழுப்பதில்லை. போதுமா ? இந்த நிலைமையில் , மனைவிகளுக்கு சம்பளம் கொடுப்பது பற்றிய (யா அல்லாஹ்!)  ’துக்ளக் சத்யா’வின் தமாஷ் கட்டுரையை வேறு அனுப்பியிருக்கிறார் நண்பர். யோவ், முதல்ல எனக்கு மூணுமாசம் சம்பளம் கொடுக்கச் சொல்லுய்யா அரபிகிட்டே. அப்புறம் யோசிக்கலாம்.

சத்யாவின் கட்டுரைக்கு முன்னர்  சத்தியமாக தாஜ் பேசியதைப் படிக்கலாமா வேண்டாமா என்று வாசகர்கள்  ’கொஞ்சக்கோனு’ யோசியுங்கள். தங்கள் தங்கள் பேய்களிடம் - சே, ’சடார்’னு உண்மை தெறிச்சிடுது - பெண்டாட்டிகளிடம் அனுமதியும் வாங்கிக்கொள்ளுங்கள்.- 

ஆமா..., இந்த ஆண் ஏன் அடிமையானான்? (என்னமோ, முன்னாலெ சொதந்திரமா சூத்தகாட்டிக்கிட்டு இர்ந்த மாதிரி!)


நான் கொஞ்சம் பேசிவிடுகிறேன் - தாஜ்

 
'பெண்விடுதலை' வேண்டும் என்பதில் மனப்பூர்வமாக சம்மதம் கொள்பவன் நான். குறிப்பிட்டு சொல்லும் அளவில் இது பெரிய விசயமில்லை. 'பெண்ணியத்தை' வரவேற்கும் எத்தனையோ கோடிகளில் நானும் இருக்கிறேன் என்பதுதான் சரி. என்றாலும் இந்த மண்ணில் இந்த ஒப்புதல் விசயம் பெரிதான சங்கதியாகத்தான் பார்க்கப்படுகிறது. காலம் காலமாக நம் பெண்கள் இந்த மண்ணில் எதிர்கொள்ளும் சங்கடங்கள் கொஞ்சமல்ல. அதனை நம்மவர்கள் சற்று பின்நோக்கிப் போய், நடப்பு நிகழ்வுகளை ஆய்ந்தறிய முற்படுவதில்லை. பாரதியையும் பெரியாரையும் படித்ததினாலோ என்னவோ பெண்ணியம் குறித்து அப்படியோர் சிந்தையும், அப்படியோர் ஈடுபாடும் எனக்குள் துளிர்த்து தழைத்ததாகக் கருதுகிறேன்.

அந்தக் காலத்தில் பாரதி பேசிய பெண் விடுதலை சாதாரணமானது அல்ல. அவன் எவ்வளவோ பேசி இருக்கிறான். குறிப்பாய் அவனது பாஞ்சாலி சபதத்தை சொல்லலாம். பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' வாசிப்பவனின் முன் முடிவை மாற்றி கிளர்ச்சி கொள்ள வைக்கக் கூடியது. அதில் பேசப்படும் பெண்ணுரிமை வானளவியது! பாரதியின் பாஞ்சாலி சபதம் 'நவீன பாஞ்சாலி சபதமாகவே' பார்க்கப்படுகிறது கணிக்கவும் படுகிறது. இன்றைக்கு பாரதியின் 'நவீன பாஞ்சாலி சபதம்' மறைக்கப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் உணரக் கூடுமெனில்.., புராணகாலம் தொட்டு அது பேசும் பெண்ணுரிமையின் கீர்த்தியை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

பாஞ்சாலி சபதத்தில் கைவைத்து, மறுவுருவாக்கம் செய்ய, ஏக இந்தியாவில் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி; இன்னொருவர் இல்லை! அப்படி துணியவும் முடியாது. மதம் சார்ந்த, அதன் ஐதீகம் சார்ந்த அசடுகளை அசட்டை செய்தவனாக, பாரதி துணிந்து தன் கருத்துக்களை பதிவேற்றினான். அது போலவே, நம் மண்ணில் இருந்தபடி பெரியார் அளவில் 'பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்த இன்னொரு சமுகத் தலைவரை இந்தியா பூராவும் தேடி அலசினாலும் எவரொருவரும் கிடைக்கமாட்டார்! அவரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகத்தை வாசிப்பவர்களில் பலர், முதல் வாசிப்பில் உறைந்து போவார்கள் என்றால் நான் ஆச்சரியப் படமாட்டேன். பழைய மரபுசார்ந்த நம் சிந்தனைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி நொறுக்கிவிடும் அவரது அதிரடி கருத்துக்கள். இந்த இருவரின் மாபெரும் புரட்சி, தமிழ் மண்ணுக்கே சொந்தமானது.

பெண்ணியத்திற்கு எதிரானவர்கள் நம்மில் தாராளம். பழமைவாதிகள், மதவாதிகள், ஆதிக்கச் சக்திகள் என்று பலரும் இப்பட்டியலில் முதன்மை கொண்டவர்கள். பொதுவாக ஆண்கள் பலரிடம் பெண்ணிய எதிர்ப்புணர்வு அவர்கள் அறியாமலேயே வாழும். ஆனால், பத்திரிகைத் துறையில் பெண்ணியத்திற்கு எதிரான கருத்துக்கள் வருவதென்பது பரவலாக மிகக்குறைவு. பெண்களையும் பெண்ணியத்தையும் தாங்கிப் பிடிக்கும் தூண்களாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள்.  குறைந்தபட்சம் வியாபார நோக்கை மனதில் கொண்டேனும் அவர்கள் பெரும் போக்காகவே நடந்து கொள்வார்கள். ஆனால், பத்திரிகையாளர்களுள் பெண்ணியத்தை எதிர்ப்பதில் நான் அறிந்து 'துக்ளக் சோ' மாதிரியான இன்னொரு பத்திரிகையாளரை கண்டதில்லை. அவரது பெண்ணிய எதிர்ப்பை விசாலமாக என்னால் காட்ட முடியும். குறிப்பாக சொல்லணும் என்றால்..., பாராளுமன்றத்தில் பெண்களுக்கு '33 சதவீதப் பங்கு' என்கிற குரல் பலமாக பாராளுமன்றத்தில் எழுந்த போது, அந்த பில் அங்கே பாஸாகிவிடக் கூடாது என்பதில் 'துக்ளக் சோ' காட்டிய வேகமும், தவிப்பும் அசாதரணமானது. அந்த அளவில் மாய்ந்து மாய்ந்து எழுதினார்.   

பெண்ணியத்திற்காக தமிழகத்தில் இருந்து பாரதியும் பெரியாரையும் கொடுத்த குரல், இந்திய அளவில் முக்கியம் வாய்ந்தமாதிரியே பெண்ணியத்திற்கு எதிராக தமிழகத்தில் இருந்து, பத்திரிகையாளர் சோ எழுப்பிய - எழுப்பிக் கொண்டிருக்கும் எழுத்தின் தாக்கம், இந்திய அளவில் எந்தவொரு பத்திரிகையாளரும் நிகழ்த்தாத ஒன்று. நம்பலாம்.

இந்தக் கட்டுரையில் ஒரு காரணம் தொட்டு, அது பற்றிய பெண்களின் மனநிலை இங்கே கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. 'துக்ளக் சத்யா' அப்படியொரு கிண்டலும் கேலியாகவும் எழுதியிருக்கிறார். அவரது பல கட்டுரைகளை படித்து ரசித்து சிரித்தது மாதிரியே இதனையும் அனுபவித்தேன். பெண்ணியத்தையும், பெண்விடுதலையையும் வரவேற்கும் நான்தான், பெண்களைக் குறித்த இந்தக் கேலியும் கிண்டலுமான இக்கட்டுரையையும் ரசித்து சிரித்தேன் என்பது உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாகத் தோன்றும்.

ஒரு காரணத்தை முன்வைத்து விமர்சன கண்ணோட்டத்தில் எழுதப்படுவது தவிர்க்க முடியாதது. அதில் சொல்லப்படும் காரணம் சரி என்றால் அதை மறுக்கவும் முடியாது. நானே என் எழுத்தில் பல இடங்களில், தக்க காரணம் பொருட்டு பெண்களை விமர்சனத்திற்கு உட்படுத்தி இருக்கிறேன். அந்த விமர்சனத்தில் கிண்டலுக்கும் கேலிக்கும் கூட பஞ்சம் இருந்ததில்லை. என்னைவிட 'நம்ம தலைவர்' ஆபிதீன் இன்னும் கெட்டி! அவரிடம் கிண்டலும் கேலியும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஆனால், அது சற்றைக்கு வித்தியாசப்பட்டது. மனைவியை வம்புக்கு இழுப்பது. அவரது அந்த வம்பு, ஏனையோரின் மனைவிமார்களையும் நேர் நிறுத்திப் பார்ப்பது. கொறைச்ச காலமாக அது அவரிடம் மட்டுப்பட்டு இருப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை.

பெண்களை விமர்சனமே வைக்கக்கூடாது என்று சூளுரைக்கிற ஏகப்பட்ட பெண் எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். பெண்னென்றால் அவர்கள் தப்பே செய்யாதவர்கள் என்பது அவர்களது நிலைப்பாடு. இதற்கு, ஆனானப்பட்ட 'அம்பை'யும் விலக்கில்லை! திரு. ஜானகிராமன், தனது படைப்புகளில் பெண்கள் மீது வைத்த விமர்சனத்தை; அம்பையால் ஜீரணிக்க முடிந்ததில்லை என்பதை அறிவேன். எனக்குப் பிடிபடாத சில இலக்கியப் புதிர்களில் இதுவும் ஒன்று!   இறைவன் மீதே மேடை போட்டு விமர்சனம் வைக்கிற பூமி இது! இங்கே பெண் மட்டும் எப்படி தப்பிக்க முடியும்? பெண்ணியத்தை ஆதரிப்பதும், அவர்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதும் சரி என்பது மாதிரி, அவர்கள் மீதான... நியாயமான விமர்சனம் என்பதும் சரியே. இந்தக் கட்டுரையில் துக்ளக் சத்யா பெண்கள் மீது வைத்திருக்கும் விமர்சனத்தை அப்படியொரு சரியாகத்தான் பார்க்கிறேன்.

அவ்வளவுதான். இனி நீங்கள் சத்யாவை ரசிக்கலாம். முடிந்தால்... சிரிக்கவும் சிரிக்கலாம். தப்பே இல்லை.

-தாஜ்  

*

இது பெண்களின் பக்கம் [ஆண்களும் படிக்கலாம்]
சத்யா

(வீட்டில் வேலைகளைச் செய்யும் மனைவிக்கு, கணவன் கண்டிப்பாக சம்பளம் தர வேண்டும் எனச் சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய மகளிர் குழந்தைகள் நலத் துறை அமைச்சகம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, பல்வேறு மாநில மகளிர் நலத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த ஆலோசனைக் கூட்டம் இப்படி நடக்குமா?)

"மனைவிக்கு, கணவன் சம்பளம் கொடுக்கணும்ன்ற திட்டம், உலகத்திலே எந்த நாட்டுலேயும் இல்லை. நமக்குத்தான் இப்படி ஒரு யோசனை வந்திருக்குது. இதுதான் நம்ம கலாச்சாரத்தோட பெருமை. இச்சட்டத்தின் மூலம் பல லட்சம் பெண்களுக்கு வேலை வாய்ப்பும் சம்பளமும் கிடைக்குது. இதை மேலும் செம்மைப்படுத்த உங்க கருத்துகளைச் சொல்லலாம்."

"இது சட்டப்படி, மனைவியின் சம்பளத்தை மனைவி நிர்ணயிக்கணுமா, கணவர் நிர்ணயிக்கணுமா?"

"இது பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விஷயமாச்சே, மனைவியே நிர்ணயிக்கலாம். இதுலே கணவனுக்கு எந்த உரிமையும் இல்லை. கேக்கற சம்பளத்தைக் கொடுக்கிறது மட்டும்தான் கணவனோட வேலை."

"குடும்பத்திலே பெண்கள் படற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. மெகா சீரியல் பார்த்து, முக்காவாசி நேரம் அழுதுகிட்டே வேலை பார்க்கிறாங்க, அந்தக் கஷ்டத்துக்கு வெறும் சம்பளம் மட்டும் எப்படிப் போதும்?"

"நிச்சயமாகப் போதாது. அதனாலே, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், ஓணம்... என்று பண்டிகைகள் வரும்போதெல்லாம் ரெண்டு மாச போனஸும் கொடுத்துடணும். அவ்வளவு வருமானம் இல்லையேன்னு புருஷன்காரன் நொண்டிச் சாக்கு சொல்லக் கூடாது. லோன் வாங்கியாவது மனைவிக்கு போனஸ் கொடுக்கணும்."

"கணவன் கொடுக்கிற சம்பளம் போதலைன்னா, தொழிற்சங்க விதிகளின்படி அதிகச் சம்பளம் கேட்டு போராட்டம் நடத்தவோ, ஸ்டிரைக் நோட்டீஸ் கொடுக்கவோ மனைவிக்கு உரிமை இருக்கணும் மேடம். அந்த மாதிரி சமயங்களிலே  அரசு தலையிட்டு, மனைவி பக்க நியாயத்தை கணவனுக்கு எடுத்துச் சொல்லணும்."

"வெரிகுட். சம்பளம் கொடுத்தாச்சுன்னு ஹஸ்பெண்ட் பொய்சொல்லி அரசையும் மனைவியையும் ஏமாத்திடலாம். அதனாலே சம்பளப் பட்டியல் தயாரிச்சு, ரெவின்யு ஸ்டாம்ப் ஒட்டி, மனைவியின் கையெழுத்தை வாங்க வேண்டியது கணவனோட கடமை. அரசு வருஷா வருஷம் குடும்ப இன்ஸ்பெக்சன் நடத்தி, ரிஜிஸ்டர்களைச் சரி பார்க்கும்."

"மேடம் எனக்கு ஒரு சந்தேகம். திடீர்னு மனைவிகள் சங்கம் உருவாகி, அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வேணும்னு பெண்கள் போர்க் கொடி உயர்த்தினா என்ன பண்றது?"

"நியாயமான சந்தேகம். கலெக்டர் மனைவிக்குச் கிடைக்கிற சம்பளம் குப்பன் - சுப்பன்களின் மனைவிக்கும் கிடைக்கிறதுதான் சமூக நீதி, அதனாலே அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை அரசே 'மனைவிகள் சம்பள கமிஷன்' அமைத்து குறைந்தபட்ச சம்பளத்தைப் பரிந்துரைக்கும்."

"இன்னொரு முக்கியமான பாயிண்டும் இருக்கிறது மேடம். வீட்டு வேலை செய்ய முடியாத வயசான பெண்களின் உரிமையையும் நாம பாதுகாக்கணும். அப்படிப்பட்ட பெண்களுக்கு பென்ஷன் கொடுக்க வேண்டியதும் கணவனோட கடமை."

"மனைவிக்கு சம்பளம் கொடுக்கறதாலே, கணவன் - மனைவி உறவுக்குப் பதிலாக எம்ப்ளாயர் - எம்ப்ளாயீ உறவு மலர்ந்துட்டதா நினைச்சு கணவன் ஆட்டம் போட முடியாது. இந்த சட்டம் வந்தாலும், கணவன் மனைவி உறவிலே எந்த மாற்றமும் ஏற்படாதுன்னு புரிஞ்சுகிட்டு, கணவன் வழக்கம்போல அடக்கத்தோடுதான் நடந்துக்கணும்."

"கரெக்ட், கணவன் வருமானவரி கட்டும்போது மனைவியின் சம்பளத்தைக் கழிச்சுகிட்டு கணக்கு காட்டக் கூடாது. மனைவியின் சம்பளத்துக்கும் சேர்த்து கணவன்தான் வருமானவரி கட்டணும்."

"ஆண் வர்க்கப் பிரதிநிதி ஒருத்தர் எனக்கு லெட்டர் போட்டிருந்தார் மேடம். மனைவிக்குச் சம்பளம் கொடுக்கிறதாலே, வீட்டுலே மனைவி சாப்பிடற சாப்பாடு டிஃபனுக்கெல்லாம் மார்க்கெட் ரேட்லே பில் போட்டு, சம்பளத்திலேந்து கழிச்சுக்கலாமான்னு எழுதியிருக்கார்."

"நோ... நோ... மனைவிக்கு சாப்பாடு போட்டுக் காப்பாத்த வேண்டியது கணவனோட கடமை. ஆனா, குடும்பத்தைக் காப்பாத்த வேண்டியது மனைவியோட கடமை இல்லை. அதுக்கு உரிய சம்பளத்தை மனைவிக்குக் கொடுத்துடணும். அதான் சட்டம்."

"சில குடும்பங்களிலே பையனையும் பொண்ணையும் கடைகளுக்கு அனுப்பி வேலை வாங்கற வழக்கம் இருக்குது. எதிர்கால வாக்காளர்கள்தானேன்னு அலட்சியமா நினைக்காம, அவங்களுக்கும் தந்தையாகப்பட்டவர் சம்பளம் கொடுக்கணும்னு பரிந்துரைச்சா என்ன?"

"அது சரியா வராது. குழந்தைத் தொழிலாளர் சட்டப்படி, குழந்தைகளைப் பெற்றோர் கடைகளுக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகள் சார்பா புகார் வந்தா, அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்."

"இன்னொரு பாயிண்ட். ஆபீஸ்கள்லே வேலை நேரம் பத்துலேர்ந்து அஞ்சு மணி வரைன்னு இருக்கிற மாதிரி, குடும்ப வேலை செய்யுற பெண்களுக்கும் டூட்டி டைம் நிர்ணயிக்கலாம். எட்டுமணி நேரத்துக்கு மேலே குடும்ப வேலை செய்யற அவல நிலை எந்த மனைவிக்கும் வரக் கூடாது."

"அப்படி வேலை செய்ய வேண்டிய அவசியம் வந்தா, ஓவர் டைம் சம்பளம் கொடுக்கணும். இதுக்காக ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஓவர் டைம் ரிஜிஸ்டர் பராமரிக்க வேண்டியது கணவனோட கடமை."

"குடும்ப வேலை செய்யற பெண்களுக்கு கண்டிப்பா லீவ் வேணும் மேடம். வருஷத்துக்கு 12 நாள் கேஷுவல் லீவ், பிராவிடண்ட் ஃபண்ட், வருஷா வருஷம் இன்கிரிமெண்ட், டி.ஏ. - எல்லாத்தையும் சட்டத்திலேயே குறிப்பிடலாம்."

"அது மட்டுமில்லை. அரசு விடுமுறை நாட்களிலே பெண்கள் வீட்டு வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த நாட்களிளிலே கணவன்மார்கள் ஹோட்டல்லே சாப்பிட்டுட்டு, மனைவிக்கும் பார்சல் கொண்டு வந்துடணும்."

"சம்பளம் கொடுக்கிறோம்ங்கற ஆணவத்திலே, சமையல்லே இது சரியில்லை, அது சரியில்லைன்னு குற்றம் சொல்ல கணவனுக்கு உரிமை இல்லை. 'நீ கொடுக்கிற சம்பளத்துக்கு இதுக்கு மேலே சமைக்க முடியாது'ன்னு சொல்ற உரிமை மனைவிக்கு உண்டு."

"அரசியல்வாதிகள், தங்கள் மனைவிகளை ஏமாத்திடக் கூடிய அபாயத்தையும் நாம கவனிக்கணும். அவங்க வெறும் சம்பளம் மட்டும் கொடுத்துட்டு வீட்டு வேலையைச் செய்யும்படி மனையிடம் சொல்ல முடியாது. ஊழல் பணத்திலேயும் ஐம்பது சதவிகிதம் மனைவிக்கு கொடுத்தாகணும்."

"மேடம், பல குடும்பங்களிலே பெண்கள் வேலைக்குப் போயிட்டு, ஆண்கள் குடும்ப வேலையைக் கவனிக்கிறாங்களே. அந்தக் கணவன்களுக்கு மனைவி சம்பளம் கொடுக்கணுமா?"

"அது ஆண்கள் நலத் துறை எடுக்க வேண்டிய நடவடிக்கை. கணவன் - மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போற குடும்பங்களிலே, மனைவி தன் சம்பளத்தை தானே வெச்சுக்கலாம். புருஷன் மட்டும்தான் மனைவிக்கு சம்பளம் கொடுக்கணும்."

"இன்னொரு சந்தேகம். மனைவிக்கு கணவன் சம்பளம் கொடுக்கிறது சரி. ஆனா, கல்யாணம் ஆகாத மகள் வீட்டு வேலை செஞ்சா, அவளுக்கு யார் சம்பளம் கொடுக்கிறது?"

"பெண்ணுக்கு கல்யாணம் ஆகறவரைக்கும், அவளோட அப்பாதான் சம்பளம் கொடுக்கணும். முடியாதுன்னா அந்தப் பெண் வீட்டுலே எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் பேசும்போதே, அவளுக்கு புகுந்த வீட்டிலே மாசம் எவ்வளவு சம்பளம் கிடைக்கும்னு இரு வீட்டார் ஒப்பந்தம் போட்டு சப்-ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்லே பதிவு பண்ணிடணும்."

"பெண்ணுக்கு கல்யாணம் பண்ணும்போதோ, பையனை காலேஜ்லே சேர்க்கும்போதோ, மனைவிதான் நம்ம கிட்ட சம்பளம் வாங்கிறாளேன்னு அவளோட உதவியைக் கேட்டு கணவன் கொடுமைப்படுத்த கூடாது. அந்த முழுச் செலவையும் கணவன்தான் ஏத்துக்கணும்."

"சம்பளம் கொடுக்கிறதாலே, தான்தான் பாஸ்னு நினைச்சுக்கிட்டு, மனைவியை எந்தக் கணவனும் அதிகாரம் பண்ண முடியாது. அது ஈவ்டீஸிங் சட்டப்படி குற்றம். மனைவியை சம்பளம் பெறுகிற மேலதிகாரியாகத்தான் நினைக்கணும்னு சட்டம் தெளிவாச் சொல்லுது."  

"வீட்டுக்கு திடீர்னு விருந்தாளிகள் வந்தா, மனைவிக்கு கூடுதல் சம்பளம் தரணும். மனைவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டா, மெடிக்கல் லீவ்லே அவங்களை உட்கார வெச்சுட்டு, கணவனே இலவசமா வீட்டு வேலை செய்யணும்."

"மனை டெலிஃபோன்லே மணிக்கணக்கா பேசினா, அந்தச் செலவை குரூரமா மனைவி சம்பளத்திலேர்ந்து கழிச்சுடக் கூடாது. அதுவும் வேலையின் ஒரு பகுதிதான். அந்தச் செலவை மேனேஜ்மெண்ட்டே அதாவது கணவனே ஏத்துக்கணும்."

"சட்டம் அருமையா வந்திருக்குது மேடம். எப்போதிருந்து இதை அமல்படுத்தறோம்?"

"மத்திய அரசு ஆட்சிக்கு வந்த மே 2009-லேர்ந்து முன் தேதியிட்டு அமல்படுத்தறதாலே, தேர்தலுக்கு முன்னாலே மனைவிக்கு கணவன் அரியர்ஸும் செட்டில் பண்ணிடனும்னு சட்டம் போடப் போறோம்."

"இந்தச் சட்டம் பார்லிமெண்டுலே எப்ப நிறைவேறும்?"

"இது மகளிர் விஷயமாச்சே! மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா மாதிரிதான். அது நிறைவேறினதும், இதுவும் நிறைவேறிடும்."

***
நன்றி: சத்யா / துக்ளக் (26.9.2012)
தட்டச்சும் - வடிவமும்: தாஜ் (satajdeen@gmail.com )

**
மேலும் :
துக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்