Friday, May 3, 2013

'உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது' - ஆத்மாநாம்

காலச்சுவடு வெளியீடான 'ஆத்மாநாம் படைப்புகள்' புத்தகத்திலிருந்து...

பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் குறிப்பு :  * இந்தச் சுய அறிமுகக் கட்டுரையை ஆத்மாநாம் தனது 25வது வயதில் எழுதியிருக்கிறார். அமைப்பியல் கவனப்படுத்திய Reader Reception Theoryயை அன்றே (1976) முன்னோக்கி இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. 1981ஆம் ஆண்டு திரு யேசுராஜா, திரு சுந்தர ராமசாமி இவர்களுடனான சந்திப்பில் Crea-Aவில் இதே விஷயத்தை உறுதிபடுத்திப் பேசியதாக என்னிடம் பேசியிருக்கிறார். அதாவது கவிதை எழுதப்பட்ட பின்பு கவிஞனுக்கே புரியாமல்கூடப் போகலாம். ஆனால் கூர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் கவிதையை அணுகிவிட முடியும்.

***

ஆத்மாநாமைப் பற்றியும்  கவிதையைப் பற்றியும் ஆத்மாநாம் ஐ

சமீபகாலமாகக் கவிதை எழுதிவரும் 25 வயது இளைஞர். தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உலகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி, தனிமனிதனின் அவலங்கள் , வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றிக் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தும் முயற்சியில் சுதந்திரம் முதலியன தற்காலக் கவிதைக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கியமான வசதி. இதன் மூலம் விரிவான ஆன்மீக, தத்துவ, அரசியல், சமூக ஆராய்ச்சிகளுக்கான வழிகள் பல உண்டு. இலக்கண அறிவு இல்லாதவர் தற்காலப் பேச்சு வழக்கே கவிதை வெளியீட்டிற்கு ஏற்றதாகக் கருதுபவர். இதன் எளிமை கவிதையைச் சமகாலத்தினர் எல்லோரும் புரிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது. பேச்சு வழக்கு பிற்கால மொழியிலாளருக்கு உதவி செய்யும். கலாச்சார மதிப்பீட்டிற்கும் உரிய பார்வைக்கும் சொற்செட்டுக்கும் மேற்பட்ட ஒன்றுதான் கவிதை. மக்களிடமிருந்து வரும் கவிதை மீண்டும் மக்களிடம் செல்லும்போது ஒவ்வொரு கவிஞனுக்கும் உள்ள ஒரு 'தொனி'யுடன் செல்கிறது. அது எவ்வளவு தூரம் ஆழமானதாகவும் வலுவுள்ளதாகவும் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது மக்களைத் தாக்கும். பிரசுர சாதனங்களும் சமூகத்தில் உள்ள பொருளாதார வேறுபாடுகளும்தான் கவிதை சிலரிடையே மட்டும் புழங்குவதற்கு காரணமாயிருக்கின்றன. கொள்கைகளைப் பற்றிய அதிகப்படிப்பு இவருக்கு இல்லாததால் வாழ்வில் சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே கவிதை எழுதுகிறார். ஒவ்வொரு கவிதையும் புதிதாகப் பிறக்கும் பச்சைக் குழந்தையைப் போல. அதனால் கவிதைகளைக் குத்திக் கிளறிப் பார்க்காமல் ஆர்வத்தோடு நாசூக்காக ஏன் எப்படி எவ்வாறு என்று கேள்விகளுடன் அணுகி வந்தால் அதன் முழு வர்ணங்களும் தெரிய வரும். படிப்பவனின் அறிவுநிலைக்கேற்ப கவிஞனுக்கே தெரியாத சில அர்த்தங்கள் பிடிபடும்*. கவிதையில் உள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று. இலக்கிய தொடர்பின் காரணமாகவே வாழ்க்கை வாழத்தகுதியுள்ளதாக நினைக்கும் இவர் இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்றும் அஞ்சுகிறார்.

ஆச்சரியம் நிறைந்த குழந்தையின் பார்வை வாயிலாகத் தெரியும் மனநிலை தொடர்ந்து இருக்க விருப்பபடுகிறார். ஒரு கணத்தில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள வெவ்வேறு மனிதர்களின் செயல்களை நினைக்கும்போது உண்டாகும் பிரமிப்பு, கரையில் நின்றபடி நீலக்கடலை வானம் தொடும் இடம்வரை பார்ப்பதில் உள்ள இன்பம் தன்னைமறக்கச் செய்யும். ஒவ்வொரு மலையையும் அதன் உச்சியை அடைய நினைக்கும் மனம் ஆகியவற்றில் மனம் இழக்கிறார். உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர். கோவிலுக்கு அதிகம் வழிபடப் போகாதவர். மனித சக்திக்கு மீறிய ஒன்று மனிதனிடம்தான் உள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். கவிதைகளின் வெற்றி தோல்வி பற்றிய விவாதம் அபத்தம் என்று நினைக்கிறார். தன்னிலிருந்து தானே விடுபடும்போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான். இவை கவிதைகள் என்றால் கவிதைகள்தான். கவிதைகள் இல்லை என்றால் என்ன செய்வது? ஆத்மாநாமைப் பொறுத்தவரை இந்த வரையறையில்தான் ஆத்மாநாமுக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு தெரிகிறது. இருவருக்கு இடையே உள்ள மெல்லிய கண்ணாடித் திரையை உடைக்கப் பார்க்கும்போது அவை தடித்த இரும்புச் சுவர்களாகி விடுகின்றன. இது அறிவு என்றால் இது கவிதை.

***
நன்றி : பிரம்மராஜன் , காலச்சுவடு பதிப்பகம்

ஆத்மாநாமின் அலம்பல் கவிதைகள்


உங்கள் காலைத்தொழுகை முடிந்ததா
அவ்வளவுதான் உம் உணவு
ஊர் சுற்றாமல்
ஒழுங்காய்ப் போய்த் தூங்குங்கள்

***

ஐயோ - ஆத்மாநாம்

சொன்னால் மறக்கிறார்கள்
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள்
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம்
அற்புத மாக்கள்

***

பிரம்மராஜன் தொகுத்த 'ஆத்மாநாம் படைப்புகள்' நூலிலிருந்து (வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்) , நன்றியுடன் பதிவிடுகிறேன். ஆத்மாநாம் பற்றி ஆத்மாநாம் எழுதியது அடுத்து வரும், இன்ஷா அல்லாஹ்.

Thursday, May 2, 2013

யோசிக்கத் தெரிந்தவனும் யோசிக்கவே தெரியாதவனும் - தாஜ்

''ஃபேஸ்புக்குல நேத்து சின்னதா ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்யா... அத உன் பக்கத்துல - நாம ரெண்டுபேரும் சேர்ந்து இருக்கிற ஃபோட்டோவோட - போடு" என்று நம்ம கவிஞர்திலகம் உத்தரவிட்டார். நாங்கள் ஒருமுறை வடலூர் சென்றபோது எடுத்த ஃபோட்டோ சிக்கியது. ஏன், எதற்கு? என்றெல்லாம் யோசிக்காமல் உடனே பதிவிடுகிறேன். - ஆபிதீன்

யோசிக்கத் தெரிந்தவனும்
யோசிக்கவே தெரியாதவனும்

-தாஜ்

யோசி. தெரிந்தவன்:
மேலப்பட்டு டவுனுக்கு
இப்ப எப்படி போகலாம்?

யோசி. தெரியாதவன்:
... ஏன் தம்பி, வெளிநாடு போயிட்டு வந்தா...
பக்கத்து டவுனு வழியும் கூடவா
மறந்து போயிடும்?

யோசி. தெரிந்தவன்:
அப்படி இல்ல. கீழப்பட்டு
ஆத்துப் பாலம் கட்டி திறந்தாச்சுல?
அந்த வழியா போகலாம்ல?

யோசி. தெரியாதவன்:
மேலப்பட்டு டவுனுக்கு இங்க பஸ் ஏறி
அந்த டவுன்ல போய் இறங்கத்தான்
எனக்குத் தெரிஞ்சு சுழுவான வழி.

யோசி. தெரிந்தவன்:
என்னங்க இப்படி சொல்றீங்க?

யோசி. தெரியாதவன்:
பின்னே எப்படி சொல்றது!?
அப்படித்தானே...
இங்கே எல்லோரும்
பஸ்செ புடிச்சு போறாங்க வராங்க!

யோசி. தெரிந்தவன்:
நான் பைக்குலலெ போறேன்...
யோசி. தெரியாதவன்:
ஏன் தம்பி... பஸ்ஸு போறப் பாதையில
பைக்கு போகலாமே?
யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்கப்பா!

யோசி. தெரிந்தவன்:
இல்ல பெரிசு... நான் பைக்குல
கீழப்பட்டு வழியா
மேலப்பட்டு டவுனுக்கு போனா
மூணு கிலோ மீட்டர்
கம்மியாகுமுன்னு யோசிக்கிறேன்!

யோசி. தெரியாதவன்:
அது என்னமோ சரிதான்.
பாலம் கட்டியதுல
அந்தப் பக்கத்து
ரோடெல்லாம் பாழாயி...
குண்டும் குழியுமா கெடக்கு!

யோசி.தெரிந்தவன்:
பைக்குல ஓரம் பார்த்து போனா போச்சு?
அந்த ரோட்லதான்... இரண்டுப் பக்கமும்
எத்தனையெத்தனை மரங்கள்!!!
வலது பக்கத்துல ஆறு வேறு!
அதுல தண்ணீ ஓடுற
அழகல்லாம் பார்த்தா
மனசுப் பூத்துடாதா?

யோசி. தெரியாதவன்:
எல்லாம் சரிதான் தம்பி...
அந்த ஆற்றுல இப்ப தண்ணீ ஏது?

யோசி. தெரிந்தவன்:
போன தடவ
அந்தப் பக்கமா போனபோ...
தண்ணீ இருந்ததே?

யோசி. தெரியாதவன்:
அது மழைத்தண்ணீ.. தம்பி!
அத்து மணலக் கூட விட்டுவைக்காம
அள்ளிட்டு போயிட்டானுவலா....
இப்ப அது காஞ்சி கருவாடா கிடக்கு.

யோசி. தெரிந்தவன்:
ஓ... அப்படியா?

யோசி. தெரியாதவன்:
என்ன ஓ.. அப்படியா?
ஆத்துலயெல்லாம் நிறைக்க
தண்ணீ ஓடினதெல்லாம் அந்தக் காலம்!
நீ பொறக்காததுக்கு முன்னால!
கிட்டத்தட்ட
நாற்பது வருஷ சங்கதியது!

யோசி. தெரிந்தவன்:
சரி... பெரிசு..
மரங்களாவது இருக்குமுல்ல
அதுங்க அழகெ...
அந்த கம்பீரத்தெ பார்த்தப்படிக்காவது
டவுனுக்கு போறேனே.
மூணு கிலோ மீட்டர் வேறு மிச்சம்!
வரட்டான்....!

யோசி. தெரியாதவன்:
தம்பி...
இன்னொரு செய்தி...
கீழப்பட்டுலென்னு மேலப்பட்டுக்கு
போற வழியில
ஆளு இல்லாத ரயில்வே கேட்
இருக்குத் தெரியுமுல்ல?

யோசி. தெரிந்தவன்:
ஆமாம் இருக்கு.
அதுக்கென்ன?
யோசி. தெரியாதவன்:
அதுல பைக் போறது கஷ்டம்.
இடைவெளியில பைக் சிக்கிக்கிச்சுன்னா...
தூக்கிவிட ஆளு வேற தேவையாபூடும்!
ஜாக்கிரதை.

யோசி. தெரிந்தவன்:
அதெல்லாம் நம்ம வண்டிக்கிட்ட நடக்காது.
பஸ்ட் கீரெ போட்டா
சல்லுன்னு கிளம்பிடும்.
வரேன் பெரிசு.

*
போற வழியில்
பெரிச யோசிக்கவே தெரியாதவர்கள் என்றும்
பயம் காட்டுவதே இவர்களது வேலைன்னும்
சபீத்துக் கொண்டே போனான்
யோசிக்கத் தெரிந்த அந்த இளைஞன்.
*

மறுநாளைக்கு...
பெரிசு
அந்த இளைஞனைப்
பார்க்க நேர்ந்தபோது...
மேலப்பட்டு டவுனுக்கு
பஸ்ஏற நின்றான்.
காலில்
பெரிய அளவில்
மாவுக்கட்டு போடப்பட்டு இருந்தது

***
நன்றி : நண்பர் தாஜ்| satajdeen@gmail.com