Thursday, November 22, 2012

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா


துக்ளக் சத்யாவின் ஹாஸ்ய எழுத்து குறித்து, நான் இங்கே பல முறை ரசித்து எழுதி இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் அவரது அந்தத் திறம் 'நுட்பத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிறது' என்பதை மட்டும் சுட்டிக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. வாசகர்கள் ஒவ்வொரு பாராவிலும் நின்று வாசித்து யோசிப்பதென்பது அவசியத்திலும் அவசியமாகவே இருக்கும். அப்படி நீங்கள் வாசிப்பதில், வாய்விட்டு சிரிப்பதென்பது இரட்டிப்பாக வாய்ப்புண்டு. நன்றி. - தாஜ் 

***


தி.மு.க.வும்  ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா

[டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி(!) குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.] 

துரைமுருகன்
ஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்ணப்பவே நான் நினைச்சேன் - இப்படி மனு கொடுத்துட்டு வெற்றியோட திரும்புவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்பவே இலங்கைத் தமிழர்களின் பாதி பிரச்னை தீர்திருக்கும். அம்மையாருக்கு ஒரே பொறாமையா இருந்திருக்கும்.

அன்பழகன்:
அம்மையாரை விடுங்க. ராஜபக்சேவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! கழகம் ஆட்சியிலே இருந்தப்போ அடங்கி ஒடுங்கி இருந்த மாதிரி இப்பவும் இருந்திடுவோம்னு நினைச்சு ஏமார்ந்திருப்பாரு. இனிமே தமிழர்கள் விசயத்திலே வாலாட்ட மாட்டார். ஐ.நா. சபையிலே மனு கொடுக்கிறதுன்றது சாதாரண விஷயமா?

வீரமணி:
எதிர்க் கட்சி ஆன பிறகும் சூடு சொரணையில்லாம இருக்க முடியுமா? இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது? இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மத்திய அரசே கூட பயந்து போயிருக்கும். இதைத்தான் தமிழ் சமுதாயம் கலைஞர் கிட்டே எதிர்பார்க்குது.

ஆற்காடு வீராசாமி:
சரி, ஐ.நா. துணை பொதுச் செயலாளர் என்ன சொன்னார்? ஆரம்பத்திலேர்ந்து சொல்லுங்க.

ஸ்டாலின்:
வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். பாலு வணக்கம் சொன்னதும், அவருக்கும் வணக்கம் சொன்னார்.

துரைமுருகன்:
அப்பாடா! அவ்வளவு செலவு பண்ணிட்டு ஐ.நா. போனது வீணாகலை.

ஆற்காடு வீராசாமி:
பின்னே, வணக்கம் சொல்லாம இருப்பாரா? கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும்? ம்.. அப்புறம்?

ஸ்டாலின்:
டேக் யுவர் ஸீட்ன்னாரு.

பாலு:
சரின்னு உட்கார்ந்தோம். இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஐ.நா. அதிகாரி முன் அமர்ந்த முதல் தமிழர்கள்ற பெருமை எங்களுக்குத்தான் கிடைச்சது.

அன்பழகன்:
அப்புறம்? கையிலே என்ன மனுன்னு கேட்டிருப்பாரே?

ஸ்டாலின்:
ஆமா. அவர் கேட்டதும் நான் கொடுத்தேன். நான் கொடுத்ததும் அவர் வாங்கிக்கிட்டாரு.

துரைமுருகன்:
ஐ.நா. அதிகாரிகள் எப்பவுமே அப்படித்தான். விரைந்து நடவடிக்கை எடுக்கிறவங்க.

கருணாநிதி:
மனுவிலே என் கையெழுத்தைப் பார்த்திட்டு, யார் கையெழுத்துன்னு கேட்டாரா?

பாலு:
நாங்களே சொன்னோம். இதே கையெழுத்திலேதான் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்காருன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தேங்யூன்னாரு.

கருணாநிதி:
நான் யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து எதையும் செய்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. இருந்தாலும் 'கலைஞருக்கு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் நன்றி'ன்னு முரசொலியிலே இந்தச் செய்தியைப் போட்டுருவோம். மனுவைப் படிச்சுட்டு என்ன கேட்டார்?

ஸ்டாலின்:
எதுக்கு ரெண்டு தடவை டெசோ ஆரம்பிச்சீங்கன்னு கேட்டார். 'இனி டெசோவைத் தொடர்வதால் பயனில்லைன்னு சொல்லி முதல் டெசோவை முடிச்சோம். முடிச்ச பிறகும் பயனில்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் இன்னொரு டெசோவை ஆரம்பிச்சோம். இதனாலேயும் பயனில்லைன்னு புரிஞ்சுக்கற வரைக்கும் இந்த டெசோ தொடரும்'னு அவருக்கு உறுதியளிச்சேன்.

பாலு:
இலங்கைப் பிரச்சனைக்காக கலைஞர் 1956லேர்ந்து குரல் கொடுத்துட்டு வரார்னு நாங்க சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். '56 வருஷமா நிறுத்தாம குரல் கொடுக்கிறது கின்னஸ்லே இடம் பெற வேண்டிய சாதனை. இந்த சாதனை தொடரணும்'னு வாழ்த்தினார். 

கருணாநிதி:
இலங்கைப் பிரச்னைக்காக 1976-லும் 1991-லும் இருமுறை ஆட்சியை இழந்தவன்தான் இந்த கருணாநிதின்னு சொன்னதுக்கு என்ன சொன்னார்?

வீரமணி:
சொல்றதுக்கு என்ன இருக்கிது? இலங்கைப் பிரச்னை தீவிரமடைய ஆரம்பிச்சதே 1980-களிலேதான். அதை முன்னாலேயே உணர்ந்து 1976-லேயே அதுக்காக ஆட்சியை தூக்கி எறிஞ்சிருக்காரேன்னு அதிர்ச்சி அடைஞ்சிருப்பார்.... அப்புறம்? ஐ.நா. மேற்பார்வையிலே பொது வாக்கெடுப்பு நடத்தணும்னு சொன்னீங்களா?

பாலு:
சொன்னோம். உரிய நடவடிக்கை எடுப்போம்னு சொன்னார். தேங்க்யூன்னு நான் சொன்னேன். ஸ்டாலினும் தேங்ஸ் சொன்னார். துணை பொதுச் செயலாளர் 'வெல்கம்'ன்னாரு.

ஆற்காடு வீராசாமி:
ஓ! பொது வாக்கெடுப்பை வரவேற்கிறதாவே சொல்லிட்டாரா? கழகம் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய விஷயம் ராஜபக்சேவுக்குத் தெரிஞ்சா அநேகமா தனி ஈழம் கொடுக்கிற முடிவுக்கே வந்துடுவாரு. இலங்கைப் பிரச்னையிலே கழகத்தின் நிலைப்பாடுகளையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும், அவருக்கு விளக்கிச் சொன்னீங்களா?

பாலு:
ஊஹும். பாவமாயிருந்தது. பாத்தா நல்ல மனுஷனாயிருக்காரு, அவருக்கு எதுக்கு அதெல்லாம்னு விட்டுட்டோம். அவர் மட்டும் நம்ம கோரிக்கைகளை அலட்சியப்படுத்தட்டும், மவனே அப்ப எல்லாத்தையும் பட்டியல் போட்டு அடுத்த தடவை நானே படிச்சுக் காட்டிடறேன்.

ஸ்டாலின்:
ஆனா, முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல்லணும். எங்களைப் பார்த்ததும், எப்படி அன்பா வரவேற்றாரோ, அதே மாதிரி அன்போடுதான் வழியனுப்பினார். அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்னையிலே அக்கறை காட்டினார்.

அன்பழகன்:
ஆச்சரியமாயிருக்குதே. இலங்கைப் பிரச்னையிலே நம்மைவிட அதிக அக்கறையோட இருக்காங்க போல இருக்குதே.

துரைமுருகன்:
சிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் பத்தி சொன்னீங்களா?

பாலு:
இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடும்படி இந்திய அரசு, இன்னும் ஐ.நா. சபையை வலியுறுத்தலை. அதனாலே, தன்னை வலியுறுத்தும்படி ஐ.நா.வே இந்திய அரசை வலியுறுத்தணும்னு கேட்டுக்கிட்டோம்.

துரைமுருகன்:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

பாலு:
தலையாட்டினார்.

ஆற்காடு வீராசாமி:
ஐ.நா. அதிகாரிகள் நம்மை மாதிரி இல்லை. எதையும் புரிஞ்சுகிட்டுத்தான் தலையாட்டுவாங்க.

ஸ்டாலின்:
லண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டுலேயும் இலங்கைத் தமிழர் நிலையை விளக்கிப் பேசினேன். நான் பேசி முடிச்சதும் அவுங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.

துரைமுருகன்:
பேசி முடிச்சதுக்கா?

ஸ்டாலின்:
ஊஹூம். எங்களுக்குத் தெரிஞ்ச விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 'இலங்கையில் படுகொலைகள் நடந்தப்போ கழக ஆட்சியிலே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எத்தனை படுகொலைகள் நடக்குதுங்கற கணக்கு கலைஞருக்கு வந்துட்டுத்தான் இருந்தது; அதை நினைச்சு மத்திய அரசுக்குத் தெரியாம கலைஞர் ரகசியமா கண்ணீர் விட்டுக் கதறிட்டுத்தான் இருந்தார்'னு விளக்கமா சொன்ன பிறகுதான் இலங்கைத்தமிழர் நலனுக்காக கழகம் இவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்குதுங்கற விஷயமே அவங்களுக்குப் புரிஞ்சுது.

பாலு:
எங்களைச் சந்தித்த இலங்கை தமிழர்கள் பலர், தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கலைஞர் வாங்கி, யாருக்கும் கொடுக்காம தானே பத்திரமா வெச்சுகிட்டதுக்காக நன்றி சொன்னாங்க. அவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த காமெடிதான் ஆறுதலா இருந்ததுன்னாங்க.

வீரமணி:
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவல நிலைமையைப் பத்தி சொன்னீங்களா? 

ஸ்டாலின்:
சொன்னேனே. ஏரோப்ளேன்லே வரும் போது நான் பாலுகிட்டே சொன்னேன். ஆமான்னு பாலுவும் என் கிட்ட சொன்னாரு.

கருணாநிதி:
ரெண்டு பேரும் சேர்ந்து வேறே யார் கிட்டேயாவது சொன்னீங்களா?

ஸ்டாலின்:
அதான் உங்க கிட்டே சொல்றோமே.

கருணாநிதி:
சரி, விடுங்க. மனித உரிமை ஆணையத் தலைவர் கிட்டே ஏதாவது சொன்னீங்களா?

பாலு:
சொல்லாம இருப்போமா? அதுக்குத்தானே போனோம்? அவங்களுக்கும் வணக்கம் சொல்லி கை குலுக்கினோம். பதிலுக்கு அவங்களும் கை குலுக்கிப் புன்னகைச்சாங்க.

அன்பழகன்:
அதாவது இலங்கைத் தமிழர் நிலையை அவங்க கவனத்துக்கும் கொண்டு போயிட்டீங்கன்னு சொல்லுங்க. கடைசியா என்ன நடந்தது?

பாலு:
கடைசியா 'அப்ப நாங்க புறப்படறோம்'னு எழுந்து நின்னு சொன்னோம். அவங்களும் எழுந்து நின்னு 'சரி'ன்னாங்க.

கருணாநிதி:
வேறே ஒண்ணும் கேக்கலையா?

ஸ்டாலின்:
உங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டாங்க. இந்த மனுவை வாங்கிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். உடனே மனுவை வாங்கிக்கிட்டு அந்தக் கோரிக்கையை நிறைவேத்திட்டாங்க.

அன்பழகன்:
எனக்கென்னவோ இந்த நடவடிக்கைகளாலே இலங்கைப் பிரச்னை தீருமான்னு சந்தேகமாத்தான் இருக்குது.

கருணாநிதி:
தீரலைன்னாலும் நல்லதுதான். ஸ்டாலினும் பாலுவும் ஐ.நா. சபையில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு இன்னொரு மனு எழுதி, அடுத்த தடவை அழகிரியையும் கனிமொழியையும் ஐ.நா. சபைக்கு அனுப்பலாம். குடும்பப் பிரச்னையாவது கொஞ்சம் தீரும்.


***


நன்றி: சத்யா / துக்ளக்
தட்டச்சு செய்து அனுப்பி சிரிக்கவைத்த தாஜ்பாய்க்கும் நன்றி

***

மேலும் :
துக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்

Monday, November 19, 2012

ஓவியர் ஜான் மீரோ - கவிஞர் சுகுமாரன்


“The painting rises from the brushstrokes as a poem rises from the words. The meaning comes later.” - John Miro

***
மதிப்பிற்குரிய பிரம்மராஜனின்  'மீட்சி' சிற்றிதழில் (மார்ச்-ஏப்ரல், 1984) நண்பர் சுகுமாரன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பதிவிடுகிறேன். 'திசைகளும் தடங்களும்' தொகுப்பில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட தொகுப்பு இது. வாசிப்பின் புதிய எல்லைகளை அறியத் தூண்டுதலாக இருந்திருக்கிறார் எஸ்.வி.ஆர் - நமக்கு சுகுமார் மாதிரி. ''இலக்கியமும் கலையும் இருத்தலியல் அனுபவங்கள். இருப்பிலிருந்து வாழ்வு நோக்கி உயர மனித மனம் கொள்ளும் வேட்கையின் வினையும் எதிர்வினைகளும்தான் அவற்றின் அடிப்படை' என்பார் சுகுமார் , தன் முன்னுரையில். இந்தத் தொகுப்பு பற்றி நண்பர் பி.கே.எஸ் எழுதிய விமர்சனம் காண இங்கே க்ளிக் செய்யுங்கள். ஏற்கனவே இந்தத் தொகுப்பிலிருந்து எடுத்த வான்காவின் கடிதங்களை நண்பர்கள் படித்திருக்கலாம்.  'முயற்சிகளின் முடிவில் மீரோ , மீரோவைக் கண்டடைந்தார்' என்று ஆன்மீகமாகச் சொல்லும் சுகுமாரனை இதிலும் காணலாம். கண்டடையுங்கள் - நேற்று கூகில்+-ல் மீரோவின் புகைப்படத்தை - பெயரைக் குறிப்பிடாமல் - போட்டு,  நாளை இவர் பற்றிய கட்டுரை வெளியாகும் என்று தமாஷ் செய்த சில நொடிகளில் ஐஃபோன் உதவியுடன் சித்தார்த்தும் ( 'ஐஃபோன்ல இருக்கற கூகுள் நிரல்ல கூகுள் காகில்ஸ்னு ஒரு விஷயம் இருக்கு. அத போட்டதும், எத தேடனும்? படம் பிடின்னு காமராவ ஆன் செஞ்சிது. இந்த புகைப்படத்த குறிப்பா அந்த முகத்த படம் பிடிச்சேன். சரியா 2 நொடிகள். பேர கொண்டு வந்து வந்துருச்சு!') images.google.com-ல் தேடி சென்ஷியும் கண்டடைந்தார்களே... அந்த மாதிரி..! - ஆபிதீன்

**
ஜான் மீரோ

சுகுமாரன்

யெஹான் மீரோ (John Miro 1893-1984) சென்ற ஜனவரியில் காலமானார். ஓவியக் கலையில் நவீன யுகத்தை நிறுவி வளர்ந்த முன்னோடிகளில் கடைசி நபரும் காட்சியரங்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

1893இல் ஸ்பானிய பிரதேசமொன்றில் பிறந்தார். கிராமிய வாழ்வின் உயிர்த்துடிப்புள்ள மனப்படிமங்களுடன் 1919இல் பாரிசில் குடியேறினார். மனிதனின் இளமை, மரபு ரீதியான பழக்கங்கள், புராணிகங்கள் மீரோவின் மூலமாக ஓவியங்களில் இடம்பெற்றன.

மீரோவின் படைப்புகள் அசாதாரண எளிமையும், அதேசமயம் நினைவுகளைத் தொந்தரவு செய்யக்கூடிய தீவிரத் தன்மையும் கொண்டவை. மீரோவின் இந்தத் திறன் ·ப்ராய்ட், யுங் ஆகிய உளவியலாளர்களின் சித்தாந்தங்களால் தூண்டப் பெற்று செயல்பட்டு வந்த அமெரிக்க ஓவியர்களான ஜாக்ஸன் பொல்லாக், ஆர்ஷெல் கார்க்கி, ராபர்ட்மதர்வெல் போன்றவர்களின் இயக்கத்தைத் திசை திருப்பியது. கட்டற்ற வர்ணப் பரப்புகளின் மீது புராணிக விஷயங்களை இணைத்து நவீனத்துவமான மதிப்பீடுகளை உருவாக்கும் முறையை இந்த ஓவியர்கள் மீரோவிடமிருந்து கற்றுக்கொண்டு பரவலாக்கினார்கள்.

பாரிஸை அடைந்த மீரோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் பிந்திய இம்ப்ரஷனிஸ ஓவியங்களின் செல்வாக்கு இருந்தது. தொடர்ச்சியான சோதனை முயற்சிகளின் முடிவில் மீரோ மீரோவைக் கண்டடைந்தார். மீரோ எந்தக் குழுவிலும் சாராமல் தணித்து நின்றார். எனினும் சர்ரியலிஸம் என்னும் இயக்கத்திற்கு மீரோ தேவைப்பட்டார். பெரும்பாலும் கவிஞர்களே நிறைந்திருந்த சர்ரியலிஸ இயக்கத்திற்கு மீரோவின் கான்வாசுகள் புதிய பரிமாணத்தை அளித்தன. 1926இல் முதலாவது சர்ரியலிஸ ஓவியக் கண்காட்சியில் மீரோ பங்கேற்றார். 'சர்ரியலிஸ்டுகளில் மிகப் பெரிய சர்ரியலிஸ்ட்' என்று சிறப்பிக்கவும்பட்டார்.

1930களில் இடைப்பகுதியில் மீரோவின் ஓவிய உலகம் மாறுதலடைந்தது. அடர்ந்த நிறங்களும் ராட்சச வடிவங்களும் அவரது திரைகளில் இடம்பெற்றன. தனது தாய்நாடாகிய ஸ்பெயின் மீது பாசிஸம் செலுத்திய ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதாக அவை அமைந்தன.

நிறங்களில் வெற்றுப் பரப்பில் நிறைய சிறிய உருவங்களைப் பரவவிட்ட பாணியை மீரோவின் படைப்புகளில் காணலாம். வயது ஆக ஆக மீரோவின் பாணி மாற்றமடைந்து வந்தது. பிற்கால ஓவியங்கள், வெறும் நிறப்பரப்பில் ஒற்றை உருவங்கள் கொண்டவையாக இருந்து, கடைசிக்கட்ட ஓவியங்கள் விரிந்த நிறப்பரப்பில் தீர்க்கமான தூரிகை வீச்சுக்களை மட்டுமே கொண்டிருந்தன.

யெஹான் மீரோவை, பாப்லோ பிக்காஸோவுடன் ஒப்பிடலாம். பிக்காஸோவைப் போலவே மீரோவும் ஸ்பானிய மரபிலிருந்து தோன்றியவர். எந்தக் குழுவிலும் அடைபடாமல் சுதந்திரமாகச் செயல்பட்டவர். தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டவர். சமகாலக் கலைஞர்களிடம் வலுவான செல்வாக்குச் செலுத்தியவர். கிராபிக்ஸ், எட்சிங், சுவர் ஓவியங்கள், சிற்பம் என்று பல சாதனைங்களையும் வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர். பிக்காஸோவைப் போலவே தொண்ணூறுகளின் தொடக்க வயதில் இறந்தும் போனார்.

பிக்காஸோவுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமும், புகழும் மீரோ என்ற சர்ரியலிஸ்டை அணுகவில்லை. எனினும், நவீன ஓவியக் கலைக்கு உயிர் கொடுத்ததில் யெஹொன் மீரோ வகித்த இடம் பிக்காஸோவுக்குச் சமமானது.

***
நன்றி : சுகுமாரன், மீட்சி, அன்னம் பதிப்பகம்
***

Wednesday, November 14, 2012

மஜா ஆகயா! - நுஸ்ரத் ஃபதே அலிகான்

நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு டென்சன். இசையைப்பற்றி மருந்துக்குகூட எனக்கு தெரியாதென்றாலும் அதுதான் மருந்தாக இதுவரை எனக்கு இருக்கிறது. அதை இங்கே இணைக்கலாம் என்றால் ’வடிவேலு தலையிலேர்ந்தும் வாக்னர் இசை வரும்’ என்று ஒரு சுட்டி அனுப்பி குட்டினார் ஒருவர். நங்! சிரித்து முடித்ததும் துக்கம் அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. வழக்கம்போல உஸ்தாத் நுஸ்ரத் ஃபதேஅலிகான்தான் இப்போதும் என்னைக் காப்பாற்றினார். மஜா ஆகயா! கேளுங்கள். - ஆபிதீன்
***


Thanks : SAFFY7411