சுவாரஸ்யமான ‘கடையநல்லூர் புராணம்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து, பகிர்கிறேன். இந்த நூல் பற்றி, ’எளிய மனிதர்களிடத்தில் நிறைந்த வாழ்வும் ஒப்பனையற்று ததும்பும் கதைகளுமிருக்கின்றன. கதையின் மனிதர்களும் இதன் வட்டார சொற்களும் புதிய அனுபவமாகிறது. கதைகள் வெட்டவெளியில் தடுப்பாரின்றி வீசும் காற்றுபோல பரவுவதை எனது வாசிப்பில் உணர்ந்தேன்’ என்கிறார் நண்பர் மீரான் மைதீன்.
நன்றி.
**
மழையும், ரயிலும் - ஷம்ஸ் இப்ராஹிம்
விடுமுறை நாட்களில் வெள்ளனே எழ நேர்ந்தால் விளக்கிய கையோடு சாயாவைக் குடித்து விட்டுத்தான் வாசலுக்கு வருவேன். எல்லோர் வீட்டிலும் முதலாவதாக எழுந்து விடும் ம்மாக்களை போன்று ஐஸாம்மாவும் வெள்ளனே எழுந்து விடும். அது எப்படி ம்மாக்களுக்கு மட்டும் 'அலாரமே' இல்லாமல் எழும்ப முடிகிறது என நான் பலமுறை யோசித்ததுண்டு. ம்மா சொன்னாள், “பஜர் பாங்கு சொல்லும் பொழுதே எனக்கு முழிப்புத் தட்டி விடும், வாப்பா தொழுதுவிட்டு வரும் வரை சும்மா படுத்துக் கிடப்பேன்”.
காலை எழுந்ததும் வாப்பாவிற்குச் சாயா போடுவதில் ஆரம்பமாகிறது ம்மாவின் விடியல். நாஷ்டா என்ன செய்யலாம் என யோசித்தவாறு வாசலில் துப்புரவுப் பணியாளர் விசில் சத்தம் கேட்கும் முன்பே, ஒருபக்க கதவின் மேல் தாழ்ப்பாளைத் திறந்து கதவில் தொங்கும் திரைச் சீலையால் கதவை இறுக்கி மூடச் செய்து, குப்பைத் தொட்டியுடன் வாசலில் போய் உட்காரும் ஐஸாம்மா. என் நல்லம்மா அடிக்கடி என்னைப்பற்றிச் சொல்வாள், 'உறங்கினால் நீ ஜகடி முண்டம்'. (ஜகடி முண்டம் என்றால் முண்டமான பேய். உடல் முழுதும் தீப்பற்றி எரிய, தெருவில் கிழக்கும் மேற்கும் உருளுமாம்) அதனால் எந்தப் பக்கம் படுத்தாலும் அநேக நேரங்களில் வாசல் நேராகவே என் காலை புலரும். சில சமயம் ஒழுங்காக அடைபடாத கதவு பாதியளவு திறந்து விடுவதால் காலையிலேயே எனக்கும், ம்மாவிற்கும் வாக்குவாதம் நடக்கும்.
அன்றும் அப்படித் திறந்து போட்டுப் போனதும் இரண்டு முறை ம்மாவை அழைத்தேன். ம்மா வாசலில் இல்லையென்று தெரிந்தது. மெல்ல எழுந்தேன். கதவடைக்க வரும் பொழுது தெருவைப் பார்த்தேன். வெளியே தூவானம்! மழை காரணமாக மூன்று நாட்களுக்குப் பள்ளிக்கூடமும், மதரஸாவும் 'லீவு' விட்டிருந்தார்கள். மேற்கு வானெல்லாம் பீடிப் புகை மண்டியது போலாக ஆங்காங்கே கருப்பாய் குழுமியிருந்தது. சூட்டைத் தணிப்பதல்ல, அதிகாலை பெய்யும் மழைக்கு மண்ணை சந்தித்தல் மட்டுமே பணி. வழியிலேயே சூரியனைச் சிறை பிடித்து விடும் மேகங்கள் மழையையும், நிலத்தையும் தனியாகச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து உபகாரம் செய்கின்றன.
எதிர் வீட்டு ஹாஜா வாப்பாவும், என் சேக்காளி மம்மதும் வாசலில் நின்று கிழக்கே பார்த்து என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் போல மம்மதும் பனியனுடன் வெளியே நின்றிருந்தான். சூர்யோதயமே காணாத இவன் வந்து நிற்பதில் ஏதோ சம்பவம்தான் என்று யோசித்துக் கொண்டே நானும் வாசலில் வந்து கிழக்கே பார்த்தேன். கீழக் கடைசி வீட்டு செய்யதலி பாத்திமா ம்மா வீட்டின் முன், பெண்கள் கூட்டம் கூடி நின்றது. ஐஸாம்மாவும் அங்கேதான் நின்றாள். எங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டியைக் காக்கா ஒன்றிரண்டு முறை கிளறிவிட்டு மீன் கழிவு சுற்றி வைத்த 'பாலித்தீன்' உறையைத் தூக்கிக் கொண்டு சற்று தூரமாகப் போய் பிரித்துக் கொண்டிருந்தது. அது கிளறிவிட்டுப் போனதால் தெரு முழுக்க இலேசாக மீன் நாற்றம் வீசியது. மழையில் நனைந்த சில காக்கைகள், கரண்ட் கம்பிக்கு மேல் நின்று கூர் அலகினால் தத்தமது உடலை சிக் எடுத்துக் கொண்டிருந்தன.
ஐஸாம்மாவை பார்த்துவிட்டுத் திரும்பும் போது மம்மதிடம், “என்ன?” என்று கேட்டேன்.
"தெரியல! சத்தமா கிடக்குன்னு வந்தேன். வாப்பா! என்னப்பா?” என்றான்.
"தண்டவாளத்துல யாரோ ஆக்சிடெண்ட் ஆகிட்டாங்களாம்” என்று ஹாஜா வாப்பா சொன்னார்.
"மச்சான்! வரியா? போய் பாத்துட்டு வரலாமா?” என்று அவன் என்னிடம் கேட்டான்.
மம்மதைப் பார்த்து "என்னத்துக்குல அங்க? இப்போ போலீஸ் வருவான். பேசாம போய் படு” என்று அதட்டி விட்டார் ஹாஜா வாப்பா.
நான் வேகமாக சட்டையைப் போட்டுவிட்டு கிழக்கே தண்டவாளம் நோக்கிச் சென்றேன். மேற்கு நோக்கி வந்த ஐஸாம்மா 'மழைத்துளி விழுது வீட்டுக்குப் போ!' என்று என்னை விரட்டி விட்டாள். நான் போவதைப் பார்த்து மம்மதும் செருப்பைப் போட்டுவிட்டு சட்டையைப் பூட்டியவாறு, எனக்குப் பின்னால் தொங்கோட்டமாய் ஓடி வந்தான். அவன் வாப்பா சத்தம் கொடுத்ததை இரண்டு பேருமே காதில் வாங்கவில்லை. ஐஸாம்மா என்னோடு சேர்த்து, அவனையும் வீட்டுக்குப் போகச் சொல்லி விரட்டியதும் "மேல ஏற மாட்டோம் ஐஸாம்மா, இங்கே நின்னு பாத்துட்டு வந்துடறோம்” என்று எனக்கும் சேர்த்து சிபாரிசு செய்தான். ஐஸாம்மா வாசலுக்குப் போனதால் இனி நாங்கள் கண் பார்வைக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ஏனெனில், கடையநல்லூர் தெருக்களின் கட்டிட அமைப்பே வித்தியாசமானது. ரயில் பெட்டியைச் செங்குத்து வரிசையில் அடுக்கி வைத்தார் போல், ஒன்றுக்கொன்று பொதுச்சுவர் கொண்டு அமையப் பெற்றிருக்கும். தெருவின் முனை மேற்கே மெயின் ரோட்டில் தொடங்கி, கிழக்கே தண்டவாளத்தருகே முற்றுப்பெறும். முன்பெல்லாம் மேற்குத் தெருவில் நின்று கொண்டு கிழக்கே பார்த்தால் ரயிலைக் காண முடியும். ஆனால் இப்பொழுது எல்லா வீட்டின் வாசலையும் இஷ்டம் போலத் தெருவுக்குள் கொண்டு வந்து பாதையை ஆக்கிரமிப்பு செய்தபடியால் கிழக்கு நோக்கி வர வர வீட்டின் வாசற்படிகள் வரிசையில் இருக்காது. அதனால் ரயில் பார்க்கும் கொடுப்பினையெல்லாம் மேற்குத் தெரு அப்பா புள்ளைகளுக்கு (குழந்தைகள்) வாய்த்து விடவில்லை.
நானும், மம்மதும் தண்டவாளம் மேலேறினோம். பருத்த மழைத் துளி ஒன்று என் உச்சந்தலையில் பட்டு விரிகையில் நாங்கள் நடக்கத் தொடங்கி இருந்தோம். குளிரும், மண் சுகந்தமும் சேர்ந்து தண்டவாளமெங்கும் ஈரப்பசை. திடீரென எங்கிருந்தோ வந்த 'உஹ்ப்' என்ற வாடைக் காற்று என் உடம்பிற்குள் ஊடுருவி மறுபக்கம் வெளியேறிப் போனது. தண்டவாள ஜல்லிகளுக்கிடையே இரண்டு மூக்குத்திச் செடிகள் காற்றுக்கு இசைந்தாடிய வண்ணம் ஆடிக் கொண்டிருந்தன. தெருக்களையெல்லாம் தாண்டி 'ஐஸ் வாட்டர்' கிணற்றுக்குப் பக்கத்தில் இருக்கும் தென்னந்தோப்பருகே அந்தச் சம்பவம் நடந்துள்ளதைக் கண்டு கொண்டோம். செல்ல வேண்டிய இடம் தூரம்தான். தண்டவாளத்தின் மேலும் கீழும் மக்கள் கூட்டம் கணிசமாய் தென்பட்டது. பக்கத்துத் தெருக்காரர்கள் சிலர் விபத்துக்குள்ளான உடலைப் பார்த்து விட்டு தண்டவாளத்திலிருந்து கீழிறங்கிப் போனது தெரிந்தது. எங்கள் தெருக்காரர்கள் சிலர் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். 'மழை கூடும் முன் பார்த்து விட்டு வரலாம்' என்று மம்மது ஓட்டம் எடுத்தான்.
சகதி கலந்த எங்களின் செருப்புக்கால் மிதிப்பட்டு தண்டவாளக் கற்கள் புரள ‘சலுப்! சலுப்!' என்று இருவரும் ஓடினோம். ஐஸ் வாட்டர் கிணற்றை நெருங்கும் பொழுது “நீ என்னல இங்க வந்த?” என்று என் சாச்சா முறைப்புடன் கேட்டார். சர்க்கார் கேட்டுக் கொண்டதால் அவரும், அவர் சேக்காளி ஆட்டோ பஷீரும் விபத்து விஷயமாகக் குறுக்கு விசாரணை நடத்த வந்திருந்தார்கள்.
"சும்மா பாத்துட்டு போலாம்னு..” என அவரை விட்டு விலகினேன்.
என்னை நெருங்கி லாவகமாய் வந்தவர் நாக்கைத் துருத்தியவாறு, "வேணாம் வா! QUIT!.. அது ரொம்ப அசிங்கமா கிடக்கு” என்று சொல்லிக் கொண்டே என் கையை இழுத்துக் கொண்டு நடக்கலானார். அவரின் பிடியை விட்டு நழுவி விடுவேன் என்பதால், பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கும் குழந்தையை இழுப்பது போல் என் தோள் புஜங்களையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டார். மழை பெய்யத் தொடங்கியதால் கூட்டம் கொஞ்சம் விலகியது. சாச்சாவோடு நடந்து கொண்டே நான் திரும்பிப் பார்க்கும் பொழுது யாரோ ஒருவன் தண்டவாளத்தின் நடுவே கேட்பாரற்றுக் கிடந்தான். ஓர் உருவம் அதை நோக்கி ஆவேசமாய் ஓடியது.
ஆமாம்!... மம்மது அவனை நெருங்கிப் போய்விட்டான்.
"போலீஸ் வருவான். மேல போகக் கூடாது. இங்க நின்னு பார்” என்று என்னைக் கடைசி வீட்டு செய்யதலி பாத்திமாம்மா வாசலில் நிற்கச் சொல்லிவிட்டு சாச்சா கடந்து போனார். மாவடிக்கால் சாலை வழியே 'ஆம்புலன்ஸ்' வந்து நின்றது. உள்ளிருந்து இறங்கிய இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தண்டவாளம் வழியாக மட்டுமே அங்குப் போக முடியும் என்பதால் உடலை எப்படித் தூக்கிக் கொண்டு போகப் போகிறார்கள் என்று பார்க்கக் கூட்டம் கூடி நின்றது.
தூரலில் நனைந்தவாக்கில் மம்மது அங்கிருந்து ஓடி வந்தான்.
“என்னல?.. பாத்துட்டியா?” என்றேன்.
நான் அப்படிக் கேட்கும் பொழுது ரயில்வே கேட்டுக்கு அருகே இருந்து இரண்டு போலீஸ்காரர்கள்' சிரித்துப் பேசிக் கொண்டே வந்தார்கள். இன்னும் இருவர் அவர்களுக்குப்
பின்னால் ‘ஸ்ட்ரச்சரை' தூக்கிக் கொண்டு தண்டவாளம் மேல் ஓடி வந்தார்கள்.
"ச்ச்ச! உவ்வேக்! தலையே இல்லல. அடிச்ச அடியில தூக்கி வீசி ரயில் அவன் மேல ஏறிப் போயிருக்கு. கால்ல உள்ள சதை இவ்ளோக்கும் தண்டவாளத்துல பிஞ்சி கிடக்குது. மூளையும், கண்ணும் தனியா கிடக்கு. உவ்வேக்! வாந்தி வந்துட்டுன்னு ஓடி வந்துட்டேன்... நல்ல வேளைக்கு நீ பாக்கல...”
இதை அவன் சொல்லும் பொழுது சில பெண்கள் கூட்டமும் அதைக் கேட்டு, ‘ஷூ!' 'இப்படியா சாவு வரணும்?'
'அய்யோ! எவனாவது வெளியூர்காரனா இருக்குமோ?'
'காது கேக்காத கிழவன் இருப்பானே மாமி.. அவனா இருக்கலாமா?' என ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள்.
மழை இன்னும் வேகம் காட்டியது. உடலை எடுக்கப் போன இருவரும், அதனைச் சுமந்து குலுங்கிக் குலுங்கி ஓடி வந்தார்கள். வெள்ளைத் துணி கொண்டு மூடிய உடலை ரயில்வே கேட்டருகே நின்ற ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். உடல் எங்களைத் தாண்டிப் போகும் பொழுது அது எங்களை அமைதி பேணும்படி கேட்டுக் கொண்டது. அதனால் சடுதியில் எல்லாருமே அமைதியாகினோம். அக்கணம் ஓடும் இருவரால் கற்களின் சலசலப்பு மட்டுமே கேட்டது. பின்னும் சற்று நேரம் வரைக்குமே அதே நிசப்தம். மழையோடு நாங்கள் எல்லோரும் கலைந்து போனோம்.
இரண்டாம் நாள் காலையில்தான் அவன் யாரென்றே அடையாளம் கண்டுபிடித்தார்கள். 'முட்டை வியாபாரியின் மகன் பரிதாபச் சாவு' என்று சார்வாள் வீட்டுக்கு வந்த பேப்பரில் செய்தி இருந்ததாக மம்மதின் வாப்பா சொன்னார். நானும், மம்மதும் போய் பேப்பரைப் பார்த்தோம். அவன் இருபத்தெட்டு வயதைச் சார்ந்தவன் என்றும் அவனின் புகைப்படமும், அதற்குக் கீழே பெரிதாகத் தண்டவாளத்தில் துணியால் மூடிய நிலையில் அவன் உடலும் ஒட்டப்பட்டிருந்தன. காதல் தோல்வியில் தற்கொலை என்று யூகிப்பதாகவும், காவல்துறை விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்தி முடிவு பெற்றிருந்தது.
ஒரு வாரமும் அவன் ரயிலில் விழுந்து செத்துப் போன கதைதான் எல்லாத் தெருவிலும் ஓடியது. வட்டாரத்துப் பெண்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் மச்சான்களோடு பேச இதுவும் பேசு பொருளானது. செய்யதலி பாத்திமா ம்மா அவனை ஒருநாள் முன்பே தண்டவாளத்தில் வைத்துப் பார்த்ததாகவும், தன் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்ததாகவும் சொன்னாள்.
‘ஏம்லா நிறுத்திட்ட? இரண்டு நாள் தங்கிட்டு கறி சாப்பிட்டுப் போனாம்னும் சொல்லு... உன்ன எவன் கேப்பான்?’ என நல்லம்மா எல்லோரின் பேச்சுக்கும் கேலி செய்தாள்.
அந்த இடத்தைத் தாண்டிப் போனால் மட்டுமே எங்கள் கிரிக்கெட் கிரவுண்டை அடைய முடியும். அப்படி அதனைக் கடந்து போகும் போதெல்லாம் மம்மது சிறிய மரக்குச்சியை எடுத்து வைத்து, 'இங்குதான் உடம்பு கிடந்தது.... இங்குதான் மூளை. இங்குதான் கால்' என்று அடி அங்குலம் மாறாமல் ஆக்சிடண்ட்டைப் பார்க்காத சேக்காளிமார்களுக்கு விளக்கிக் காண்பிப்பான். ஓரிரு நாட்களுக்குப் பின் நடந்ததையெல்லாம் மறந்து விட்டு வழக்கமான இடம் போலாக அங்கே வந்து போய்க் கொள்வோம். எப்போதும் போல் மழையும், ரயிலும் வந்து போய்க் கொண்டிருந்தது.
*
Thanks to IQRA Publication & Asif Meeran
நூல் அறிமுகம் - ஆசிப் மீரான்
ReplyDeletehttps://youtu.be/97F21yHuFvU?feature=shared
*
ஷம்ஸ் இப்ராஹிம் ஏற்புரை
https://youtu.be/2LGG-eivEZE?feature=shared