Monday, December 30, 2019

நல்லம்மாவின் நெருப்புச் சட்டி - அ. யேசுராசா


'அறியப்படாதவர்கள் நினைவாக...!' கவிதைத் தொகுப்பிலிருந்து, நன்றியுடன்
*


நல்லம்மாவின் நெருப்புச் சட்டி
யேசுராசா


இன்றுமிந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்த நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிட்டுக் கேட்கிறது...!

"எழும்பு பிள்ள...!
மணி அடிச்சுப் போட்டு...து;
நேரம் போகு...து"

தட்டிவிட
எழுந்த மகள்,
பின் தொடரத்
தான் நடந்து
குசினிக்குப் போகின்றாள்.

"சிரட்டை உடை
அடுப்பு மூட்டு;
தேங்காயுடை
பாலைப் பிழி
மணி,
இரண்டடிச்சுப் போட்டு...து.
சந்திக்கடை ராசதுரை
கடைதிறக்க நாலுமணி
ஆகும்; அதுக்கு முன்னம்
அப்பஞ் சுட்டுப் போடோணும்."

பால் பிழிஞ்சு
மாக்கரைச்சு,
அடுப்பூட்டி முடிச்ச மகள்
தூங்கிவிழ, போய்ப்படுக்கச்
சொல்லியவள் --தனியிருந்து
அப்பம்,
சுடுகின்றாள்.

பற்றியொி சிரட்டைத்தணல்
காிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெரு வெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.

ஓம்...!
பின்னிரவின் இரண்டுமணிப்
போதிருந்து முற்பகலின்
எட்டுமணிப் பொழுதுவரை,
அவள் அப்பம் சுடவேண்டும்.

மூத்தமகன் பள்ளியில்
பத்துப் படிக்கிறாள்;
சின்னவனும் இன்னும் இரண்டு
பிள்ளைகளும் கூட,
பள்ளிக்குப் போகின்றார்.

கடலுக்குப் போற அவள்
புருஷன் பின்னேரம்,
கொண்டுவரும் நாலைந்து
ரூபாய்கள்...?

பற்றியொி,
ஆறு வயிறுகளின்
நெருப்பணைக்கக் காணாது;
பள்ளிச் செலவுக்கும்
வழிகாண ஏலாது...

ஆதலினால்,
வாழ்வு திணித்த அந்த
சுமைச்சட்டி நெருப்பேந்தி...
பற்றியொி சிரட்டைத்தணல்
காிபற்றத் தணல் நிறைந்த
நெருப்புச் சட்டிகள்;
வீசுகிற பெருவெக்கை
நெஞ்சினிலும் முகத்தினிலும்;
முன்னெழுந்து தாக்கித்
தன்னுடலைத் தின்கையிலும்,
குந்தியிருந்தபடி
அவள், அப்பம் சுடுகின்றாள்.

நாளைக்கும்
மீண்டு மந்தப் பின்னிரவில்,
அலாம் அலறி ஓய்கையிலே
திகைச்செழுந்து நல்லம்மாள்
பாயிருந்து,
சோம்பல் முறிக்கையிலே,
எங்கிருந்தோ நாயொன்று
ஊளையிடுங்
குரல் கேட்கும்...!
(7.8.69)

*
நன்றி : அ. யேசுராசா , க்ரியா , நூலகம், றஷ்மி

தொடர்புடைய பதிவுகள் :
1. நேர்காணல் யேசுராசா
2. ‘நல்லம்மா’ – அ.யேசுராசா தாய் நினைவாக வெளியான ‘இலக்கிய மலர்’ பற்றி .. Dr.M.K.Muruganandan

No comments:

Post a Comment