பை - கவிஞர் ஜெயபாஸ்கரன்
கண்ணிமைக்கும் நேரத்தில் ,
என் கைப்பையைக் களவாடி கொண்டு போனவனைக் குறித்து கவலைப்படுகிறேன் நான்
யூகிக்க முடியாத ஏதோ ஒரு இடத்தில் வைத்து அதை பிரித்த அவன்
எப்படியெல்லாம் குழம்பி இருப்பான்?
அவனையும் அழைக்கின்ற இலக்கியக் கூட்ட அழைப்பிதழ்களை என்ன செய்யப் போகிறான்?
கொடுத்த கடனை கேட்டு என்னை மிரட்டிக் கொண்டிருக்கும் மனோகரனின் கடிதத்திற்கு என்ன பதில் எழுத முடியும் அவனால்?
இப்போதைக்கு தர இயலாது என்பதற்கான எல்லா காரணங்களையும் மனோகரனுக்கு எழுதி அனுப்பி விட்டதை எப்படி அறிவான் அவன்?
அதை விடுங்கள்,
மதிப்புரைக்கு வந்திருந்த அந்த இரு நூல்களை பாராட்டித் தொலைப்பானா ஒரு வேளை?
எக்கேடோ கெடட்டும்
இனி கைப்பையை களவு கொடுத்தது குறித்து எனக்கு ஒரு மகிழ்ச்சியும் அதை களவாடியது குறித்து அவனுக்கு ஒரு துயரமும் என்றைக்கும் எஞ்சி இருக்கும்
இனி அவன் எந்த பையை திருடினாலும் என் பையாக இருக்குமோ என அஞ்சுவான்.
*
Thanks to Yazhini
Visit : https://www.youtube.com/shorts/amXzT8CascI

No comments:
Post a Comment