Thursday, March 28, 2019

புதிய விடியல் - குளச்சல் மு. யூசுஃப் நேர்காணல்

புதிய விடியல் : 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது தங்களுக்கு கிடைத்திருப்பதில் புதிய விடியல் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. உங்களது எழுத்துப்பணி மேலும் வளர இறைவன் அருள் புரிவானாக!


மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட திருடன் மணியன்பிள்ளை நூலுக்காக உங்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட் டுள்ளது. 2010 லேயே பஷீரின் எழுத்துக்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்து தமிழ் இலக்கிய உலகில் வெகுவாக பேசப்பட்டு விட்டது. ஆகவே, இவ்விருது தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாக வருத்தம் ஏதும் உள்ளதா?

குளச்சல் யூசுஃப்: கிடைக்குமென்ற நம்பிக்கையே இல்லாதபோது வருத்தம் ஏற்படுவதற்கான இடமே இல்லை. முதல் காரணம், இப்படியான ஒரு விருதை வாங்குவதற்கான பொருளாதார நிலையோ, அனுசரணை சீலமோ, அவர்களே இனம் கண்டு கொள்வதற்கான செல்வாக்கோ இல்லாதவன் நான். பரிந்துரைக்கச் சொல்வதை அவமானமாகக் கருதுபவன். பரிந்துரை செய்யட்டுமா என்று கேட்டவர்களைக்கூட பேசாமலாக்கிய திறன் பெற்றது எனது நாவின் தடித்தனம்.

ஆறேழு வருடங்களுக்கு முந்தைய ஒரு நிகழ்வு இது. சாகித்ய அகாதமி விருதின் தேர்வுக் குழுத்தலைவராக இருந்த ஒருவர் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, ‘மொழி பெயர்ப்புக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருதை உங்களுக்கு வழங்குவதாக முடிவு செய்தோம். இப்போது, வேறு ஒருவரைத் தேர்வு செய்ததாக பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. ஆகவே, உங்களுடைய மொழி பெயர்ப்புகளை முன்வைத்து கோவையில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். பெயர் மாற்றத்துக்கான காரணம் என்னவென்று எனக்கு மட்டுமல்ல, அவருக்கும் தெரியவில்லை.


புதிய விடியல் : நாஞ்சில் மண்ணுக்கே உள்ள தனித்துவத்தின் வெளிப்பாடுதான் குளச்சல் யூசுஃபின் உருவாக்கமா? இலக்கியத்துக்குள் நுழைந்த தருணம் எப்போது? உங்கள் உள்ளே இருந்த எழுத்தாளரை எப்படி, எப்போது அடையாளம் கண்டுகொண்டீர்கள்?


குளச்சல் யூசுஃப் : தனித்துவ மண் என்ற புளகாங்கிதம் நாஞ்சில் மண்ணுக்கு மட்டுமே உரித்தானதல்ல. நெல்லை, மதுரை, கோவை, தஞ்சையென தமிழ்நாட்டில் வேறு பல புளகாங்கிதங்களும் உண்டு. குமரி மாவட்டம், குளச்சலிலுள்ள ஒரு பள்ளியில் வெறும் ஐந்தாம் வகுப்புடன் எனது கல்வி முற்றுப்பெற்றது. ஏழு வயதில் துவங்கிய வாசிப்புக்கும், 12 ஆவது வயது முதல் வாழ்க்கையை நகர்த்துவதற்காகப் பட்ட துயரங்களுக்குமிடையே 1983,84 காலகட்டங்களில் சில சிறுகதைகளும் கட்டுரைகளும் நாகர்கோயில் வானொலி நிலையத்துக்காக சில கவிதைகளும் எழுதியதுதான் எனது எழுத்து வாழ்க்கையின் தொடக்கம். உண்மையைச் சொல்வதானால், எழுத்தாளனாக என்னை அடையாளம் கண்டவர்கள், நான் எழுதிய சிறு கதையை தனது பெயரில் பிரசுரித்து பத்திரிகை நிருபராகச் சேர்ந்த, இப்போது சன் தொலைகாட்சியில் பணியாற்றும் நண்பரும், நான் எழுதிய கட்டுரையை வலுக்கட்டாய மாகப் பிடுங்கிச் சென்று பத்திரிகைக்கு அனுப்பியவரும், மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியில் சேர்த்து என்னைப் படிக்க வைக்க முயற்சி செய்தவரும், எனது மளிகைக்கடையின் கட்டட உரிமையாளருமான தலைமையாசிரியர் சுப்ரமணியம் அவர்களும்தான்.

புதிய விடியல் : சுய எழுத்துக்களைக் காட்டிலும் மொழிபெயர்ப்பின் மீது தீவிர காதல் ஏன்? குறிப்பாக மலையாள மொழியின்மீதான அலாதி பிரியம்?


குளச்சல் யூசுஃப் : பிரசுர நோக்கம் சிறிதளவுமில்லாத எனது எழுத்தும் வாசிப்பும் தன்னார்வத்தின் அடிப்படையிலானவை. நான் புரிந்துகொண்டவற்றை, என்னை பிரமிக்க வைத்தவற்றை மற்றவர்களும் அறியச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவன். ஆனால், ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிய’ இயலாத நிலையில் மொழிபெயர்ப்பின் மூலம் உரையாடினேன். இது பிழைப்புக்கான மார்க்கமாக மாறிய நிகழ்வுகள் எனக்கு வாய்த்தப் பதிப்பகத்தை அடிப்படையாகக் கொண்டவை.

மலையாள மொழிமீதான அலாதி பிரியத்துக்குக் காரணம், நான் நடத்தி வந்த மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுவதற்காக வந்த பழைய புத்தகங்களில் வைக்கம் முஹம்மத் பஷீரின் பாத்துமாவின் ஆடு, பால்யகால சகி, எங்க உப்பப்பாக்கொரு ஆனையிருந்தது என்னும் மூன்று மலையாள குறு நாவல்களும் இருந்தன. எனது வாசிப்புப் பழக்கத்தை அறிந்திருந்த, மலையாளம் தெரிந்த ஒரு வாடிக்கையாளர், பஷீரைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் நிறைய சொன்னார். அவரால் தூண்டப்பட்ட நான், என்றாவதொரு நாள் மலையாள மொழியைக் கற்று இதை வாசிப்பேன் என்ற திட நம்பிக்கையுடன் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். திரைப்பட சுவரொட்டிகள், பத்திரிகை தலைப்புகள் என எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கினேன். மலையாளம் வசப்பட்டது. பிறகு, புத்தகங்களையும் எழுத்தையும் வாசிப்பையும் கலாச்சாரமாகக் கொண்ட மலையாள மொழிக்குள், காய்ந்த மாட்டுக்குக் கம்பங்கொல்லை கிடைத்தது போல் புகுந்து மேய்ந்தேன்.

புதிய விடியல் : இந்தியாவில், முஸ்லிம் என்பது எந்தத் துறையிலும் சிக்கலை எதிர் கொள்ளும் அடையாளமாகவே உள்ளது. இதற்கு எழுத்துத் துறையும் விதிவிலக்கல்ல. அப்படியான சிக்கல் எதையும் எழுத்தாளர் யூசுஃப் எதிர்கொண்டிருக்கிறாரா?

குளச்சல் யூசுஃப் : பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். எல்லா முனைகளிலிருந்தும். இது தந்திரமான முறையில் நிகழ்ந்தவை என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. கிறிஸ்தவர்களுக்குப் பெரும்பாலும் பொதுவான பெயர் இருக்கும். மதம், நம்பிக்கை கள், சமூகங்கள் சார்ந்து நியாயமான சில கருத்துக் களை இவர்களால் தமது சொந்தப் பெயர் களில் எழுத இயலும். இதற்குரிய வகையில் பிரசுர வாய்ப்புக்களும் எதிர்வினைகளும் இருக்கும். ஆனால், நியாயமான கருத்தாக இருந்தாலும் எனது பெயரில் எழுதிவிட இயலாது. மதக்கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள். எதிர்வினைகளும் அப்படித்தான் இருக்கும். இதில் நடுநிலைப் பத்திரிகைகளும் தனிநபர்களும்கூட விதிவிலக்கு அல்ல.

மிக அண்மைக்கால சிறு நிகழ்வொன்றைக் குறிப்பிடுகிறேன். நாகர்கோயிலில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி நல்ல நிழற்பாங்காகவும் விசாலமாகவும் காற்றோட்டமுள்ள பகுதியாகவும் அமைந்திருக்கிறது. ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நான், வாகனத்தை ஓட்டி வந்த முத்துசாமி என்ற நண்பரிடம், “பாலத்தின்கீழ் இலக்கியக் கூட்டம் நடத்தலாம் போலிருக்கிறதே?” என்றேன். நண்பரும் இதை தனது முகநூல் பக்கத்தில் இலக்கியக் கூட்டம் நடத்தும் அளவுக்கு மேம்பாலம் தரமானதாக இருக்கிறதென்று நான் சொன்னதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டு விட்டார். உடனே, என்னை விமர்சிப்பதுபோன்ற சில பின்னூட்டங்கள் வந்தன. நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. “உங்களுக்கெல்லாம் பெயர்தான் பிரச்சினை போலிருக்கிறது” என்று வெகுண்டெழுந்தார்.

புதிய விடியல் : பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு முன், இடிப்புக்குப் பின், பாஜக அதிகாரத்திற்கு வந்தபோது என ஏறக்குறைய மூன்று தலைமுறை முஸ்லிம் சமூகத்தை பார்த்திருக்கிறீர் கள். இந்தக் காலத்தினூடாக முஸ்லிம் சமூகத்தின், அரசியல், பொருளாதார எழுச்சி – வீழ்ச்சிகளை எப்படி எடை போடுகிறீர்கள்?

குளச்சல் யூசுஃப் : மத உணர்வுகளின் அடிப்படையில் ஜனநாயகக் கட்டமைப்பைக் குலைத்துப்போட்ட பாபரி மஸ்ஜிதின் தகர்வு, அப்போது சமூக நல்லிணக்கத் தகர்வாகவே கருதப்பட்டது. பிந்தைய நிகழ்வுகளும் இதை உறுதிப்படுத்தின. இரு சமூகங்களிடையே மதச்சுவர் எழும்பியது. முஸ்லிம் சமூகம் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள துவங்கியது. கலந்து வாழ்ந்த பகுதிகளிலிருந்துப் பாதுகாப்பு என்று கருதிய பகுதிகளை நோக்கிக் குடி பெயர்ந்தார்கள். பரஸ்பர நம்பிக்கைகள் சீர்குலையும் நிலை உருவானது. ஏற்கனவே, பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கியிருந்த முஸ்லிம் இளைஞர்களின் உணர்வு கள் மடைமாற்றமாகி விடாமல், அரசியல் விழிப்புணர்ச்சி பெறுவதற்கு தமிழகத்தில் புதிதாக உருவான இஸ்லாமிய அமைப்புகள் உதவியாக அமைந்தன.

ஏழு சதவிகித மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், அமைப்புகளாகப் பிரிந்து செயல்பட்டதால் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இக்கட்டான சூழ்நிலையிலும் நல்லிணக்கச் சூழலைத் தக்க வைத்துக்கொள்ள இயன்றது என்பதை நான் நல்ல விஷயமாகப் பார்க்கிறேன். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமின்மை, இழப்புதான் என்றாலும் அவர்களை அரசியல் குடையின் அணிதிரட்ட இயன்றது என்பது நல்ல அறிகுறி.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரைக்கும் பெருநிறுவனங்களின் ஆதிக்கம், அரசுப்பணி களை எதிர்பார்க்காமல் குறுந்தொழில் செய்யும் பெருமளவு முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அரசியல் இலாபத்துக்காக உருவாக்கப்படும் தீயில் வணிக நோக்கத்துடன் எண்ணெய் வார்ப்பதும் சேர்ந்தபோது முஸ்லிம்களின் மிச்சமிருந்த வணிகப்பாதுகாப்பும் கேள்விக்குள்ளானது. மொத்த வீழ்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப் பாக வங்கி, காப்பீடு போன்ற துறைகளை இறைநம்பிக்கையுடன் இணைப்பதைக் குறிப்பிடலாம்.

கேரளத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் செல்வந்தர்கள் சிலர் கொடுக்கும் வட்டியில்லா கடன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வையுங்கள். அவர்கள் பத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை படகு வடிவத்தில் மடித்து உங்களிடம் கொடுப்பார்கள். அதை நீங்கள் திருப்பிக் கொடுப்பதுவரைக்கும் படகுக்கு வாடகைச் செலுத்த வேண்டும். இதுதான் அந்த வட்டியில்லா கடன். இறையியல் சார்ந்து எவ்வளவு போலித்தனமாக வாழ்கிறோம் பாருங்கள்? அண்மையில், ‘அழகிய கடன்’ கொடுக்கும் ஒரு அமைப்பை அணுகி, கல்விக்கடன் பற்றி பேசினேன். “நாங்கள் கை வண்டி வாங்கவும் காய்கறி விற்கவும் கடன் கொடுக்கிறோம்” என்றார்கள். ஏற்கனவே நாம் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம் என்றால், பதிலுக்கு அவர்கள் நான்கு குர்ஆன் வசனங்களையோ மூன்று ஹதீஸ்களையோ மேற்கோள் காட்டக்கூடும்.


புதிய விடியல் : இலக்கிய ஆர்வமும் வாசிப்பு பழக்கமும் தற்போது முஸ்லிம் சமூகத்தில் எப்படி இருக்கிறது?

குளச்சல் யூசுஃப் : கலை இலக்கியத் துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கு முன் எப்போதையும் விட பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. புதிய இயக்கங்களின் வருகையால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதகமாக நான் உணர்வது இதுதான். வாசிப்புப் பழக்கத்தைப் பொறுத்தவரைக்கும் முஸ்லிம்களின் பங்களிப்பு அதல பாதாளத் தில் உள்ளது. கலை - இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்கள்தான் அறிவுத்துறை யிலும் சிறந்து விளங்குகிறார்கள், சாதனையாளர்களாக பரிணமிக்கிறார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளத் தவறி விட்டது.

புதிய விடியல் : பெருமளவில் கேரள முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உள் வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடு உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது. கேரள முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது தமிழக முஸ்லிம்கள் எந்தத் துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்...?

குளச்சல் யூசுஃப் : ஏற்கனவே சொன்னதுதான். வாசிப்பைக் கலாச்சாரமாகக்கொண்ட கேரள சமூகத்தில் முஸ்லிம்களின் கலை - இலக்கியப் பங்களிப்பு என்பது சராசரிக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக நூல்கள் விற்பனையாவதாகவும் புதிதாக கட்டப்படும் வீடுகளில் புத்தகங்கள் வைப்பதற்கென்று தனி இடம் ஒதுக்கப்படுவதாகவும் வாசித்தேன். புத்தக வாசிப்பும் கலை - இலக்கியப் பங்களிப்பும் அவர்களை அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் மாற்றியிருக்கிறது. இதன்மூலம், பெரும்பான்மை மதஅரசியலுக்கும் சிறுபான்மை மதஅரசியலுக்குமான வேறுபாடுகளை கேரள பொதுசமூகம் புரிந்து கொண்டிருக்கிறது.

கலைகளைக்கூட காரண காரியங்களுடனும், இறையியல் சார்ந்தும், அறிவியல் நோக்குடனும் அணுகும்போக்கு தமிழக முஸ்லிம்களிடையே அதிகரித்துள்ளது. இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பும் புதிதாக வந்த இயக்கங்களுக்கு இருக்கிறது. வீதி நாடகம் போன்ற குறியீட்டுக் கலைகளில்கூட மேற்சொன்ன காரண காரியங்களைத் தேடும் பார்வை, கலை இலக்கியத்துறைகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஊறு செய்யக் கூடியது.

கல்வித் துறை யில் முஸ்லிம்களின் பங்களிப்பு பெரும்பாலும் மொழியியல் சார்ந்ததாகவே இருக்கிறது. நாட்டார் வழக்கு, கலைகள் குறித்த ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. கல்வியைப் பொருளாதார அபிவிருத்திக்காக மட்டுமே பார்க்கும் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். முஸ்லிம்கள் கவனம் செலுத்தாத துறைகள் வேறுவகையில் இட்டு நிரப்பப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

புதிய விடியல் : வைக்கம் பஷீர் மீதான ஆர்வத்திற்கு காரணங்கள் ஏதும் இருக்கிறதா?

குளச்சல் யூசுஃப் : மலையாளம் தெரிந்த யாருமே வைக்கம் முஹம்மத் பஷீரின் படைப்பு கள்மீது ஆர்வம் காட்டாமல் இருக்க மாட்டார்கள் என்பது முதல் காரணம். அடுத்து, குமரி மாவட்டத்தின் குளச்சல்போன்ற கடலோரப் பகுதி முஸ்லிம்களுக்கும் இதன் மிக அருகிலுள்ள முஸ்லிம்களுக்குமிடை யிலான கலாச்சார ஒற்றுமைகளை விடவும், பல நூறு மைல் தொலைவிலுள்ள கேரளக் கடலோரப் பகுதி முஸ்லிம்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமைகள் மிகவும் நெருக்கமானவை.

எங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் கைலிக்குப் பதிலாக, கேரள முஸ்லிம் கள்போல் வேட்டி உடுத்துவார்கள். முந்தைய தலைமுறை யிலுள்ள பெண்கள், கேரள முஸ்லிம் பெண்கள்போல் கச்சமுறி, குப்பாயம் போன்ற ஆடை களை அணிவார்கள். இதுபோன்ற பல்வேறு ஒற்றுமைகளை ஆபரணங்களிலும் பார்க்க முடியும். உணவுப் பழக்கங்களை எடுத்துக்கொண்டால் கேரள பாணியிலான புட்டும், ஒறட்டியும் இங்கே முன்னிலை வகிக்கும். அதாவது, மொழியும் கலாச்சாரப் பின் புலமும் வைக்கம் முஹம்மத் பஷீர்மீது நான்கொண்ட ஆர்வத்துக்கு மேலதிக காரணங்களாகச் சொல்ல முடியும். ஆனால், இதையெல்லாம்விட அழுத்தமான காரணம், பாத்தும்மாவின் ஆட்டுக்கு வைக்க வேண்டிய கஞ்சித்தண்ணியை ஆனும்மா குடிப்பதால் உருவாகும் அக்கா – தங்கைக்கு இடையிலான பிரச்சினையை உலகளாவிய அனுபவமாக மாற்றத் தெரிந்த பஷீரின் கதைச்சொல் முறைதான்.

புதிய விடியல் : முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை மொழிபெயர்த்த அனுபவம்?

குளச்சல் யூசுஃப் : இஸ்லாம் குறித்து நான் எழுதிய முஹம்மத் நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு, பாரசீக மகாகவிகள் ஆகிய நூல்களுக்காக முதலில் சென்னை ரஹ்மத் பதிப்பகம் முஸ்தஃபா அண்ணனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர்தான் முதன் முதலில் இஸ்லாமிய ஆய்வுகளின் பக்கம் என்னை வரவழைத்து, எல்லா அர்த்தங்களிலும் உதவி யாக இருந்தார். தனது இஸ்லாமிய வரலாறு மூன்று பாகங்களையும் செப்பனிடும் பணி யையும் ஒப்படைத்தார். என்னுடைய கல்வித்தகுதியையும் இஸ்லாமிய அறிவையும் குறித்து அறிந்திருந்தும் இந்த மாபெரும் பணியை எப்படி என்னிடம் ஒப்படைக்கத் துணிந்தார் என்று தெரியவில்லை. அதில், உள்ளதை உள்ளபடி செப்பனிட நான் விரும்ப வில்லை. செய்கிற பணியில் ஆழ்ந்தப் புரிதலும் செய்நேர்த்தியும் இருந்தால்தான் மனத் திருப்திக் கிடைக்கும். ஆகவே, அதை மூலநூலாகக்கொண்டு, இஸ்லாமிய வரலாற்றின் மீது மேலும் ஆழமாக கவனம் செலுத்தினேன்.

ஏறத்தாழ மூன்றாண்டுகள் நீண்ட இந்தப் பணியின்போதுதான் இஸ்லாத்தைக் குறித்தும் அறிந்துகொள்கிறேன். இது சார்ந்த புரிதல்களின் அடிப்படையில்தான், ஹுஸைன் ஹைகலின் ஹயாத் முஹம்மத் நூலை, முஹம்மத் நபி (ஸல்) என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தேன். ஓராண்டு கால முழு உழைப்பையும் செலுத்த நேர்ந்த இந்த மொழியாக்கம் தொடர்பாக முதலில் ஒரு சில ஆலிம்களைச் சந்தித்து பேசினேன். இதை, மதரஸா சான்றிதழ் இல்லாத நான் மொழியாக்கம் செய்வதில் அவர்களுக்கு உடன் பாடில்லை என்பதையும் அதே சமயம், அதை அவர்கள் பெயரில் வெளியிடுவதில் முரண் பாடில்லை என்பதையும் புரிந்துகொண்டேன்.

ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன், இதே நூலை ஒருவர் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் காலஅவகாசம் குறித்தும் அதற்கான மதிப்பூதியம் குறித்தும் பேசினேன். “இது இறைப்பணி அல்லவா? இலவசமாக செய்யலாமே?” என்றார். நமக்குதான் தடித்த நாவு ஆயிற்றே? “நேற்றுவரை சைக்கிள் மிதித்த நீங்கள் இன்று காரில் உலா வருவதற்குக் காரணமும் இறைப்பணிதானே?” என்று கேட்டதுடன் அந்த உறவும் முறிந்து போயிற்று.

புதிய விடியல் : உங்களது மொழிபெயர்ப்பின் நுட்பம் என்ன? ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் கலையிலிருந்து மலையாளம் வேறுபடுகிறதா?

குளச்சல் யூசுஃப் : மூலமொழி ஆங்கிலமாகவோ மலையாளமாகவோ இருக்கலாம். ஆனால், அதன் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் மனிதர்களைச் சார்ந்தவை. எந்த மொழி சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களது தேவைகளும், ஏக்கங்களும், ஏமாற்றங்களும், இன்பதுன்பங்கள் தரும் அகவய உணர்வுகளும், வலியும் ஒன்றுதான். நான் உணர்ந்துகொண்டவரைக்கும் இதுதான் நுட்பம். இதைக் கற்பனையிலும் வாழ்வியல் சார்ந்தும் அனுபவித்து உணர்ந்து எழுதுகிறேன். இதனுள் படைப்பு சார்ந்து எஞ்சியிருப்பவை, காலமும் சூழலும். அதிகப்படியான தேடுதலையும் உழைப்பையும் இதில்தான் செலவிட வேண்டியதிருக்கும்.

புதிய விடியல் : ‘மணியன் பிள்ளையுடெ ஆத்ம கதா’ என்னும் மலையாள சுயசரிதையை தமிழில் மொழிபெயர்த்ததற்குக் குறிப்பிட்ட காரணங்கள் ஏதாவது உள்ளனவா?

குளச்சல் யூசுஃப் : ஆமாம். விளிம்பு நிலை மக்கள் குறித்தும் சமூகப் போராளிகள் குறித்தும் நான் மொழியாக்கம் செய்த நூல்களின் வரிசையில்தான் திருடன் மணியன் பிள்ளையும் வருகிறது. சமூக உன்னதர்களின் வாழ்வியல் பதிவுகளை விடவும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பதிவுகள்தான் சமூக அமைப்பைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழியென்று நான் கருதுகிறேன்.

புதிய விடியல் : தற்போதைய முற்போக்கு முஸ்லிம் எழுத்தாளர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் சிலர் முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் அடையாள பாதுகாப்பிற்கான உணர்வுகள், போராட்டங்களை வஹாபியத்துடன் இணைத்துச் சித்தரிக்கின்றனர். இத்தகைய எழுத்துக்களுக்கு சில தமிழ் நாளிதழ்களும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. இது சரியான நிலைபாடா? உங்களது கருத்து என்ன?

குளச்சல் யூசுஃப் : ஏற்கனவே குறிப்பிட்ட கலை – இலக்கியம் சார்ந்து செயல்படுபவர்கள் தங்களது துறையில் பின்னடைவு ஏற்படுவதற்கான காரணிகளை வஹாபியம் என்றும் தீவிர வாதம் என்றும் கருதுகிறார்கள். இதன் நீட்சியாக மூட நம்பிக்கை, வரதட்சணை, ஆர்ப்பாட்டமான விழாக்கள், பெண் வீட்டார் செலவில் திருமணங்கள், பெண் கல்வியை மறுப்பது, பள்ளிவாசலுக்குள் பெண்களை அனுமதிக்காமை, ஜகாத் என்னும் பெயரில் உழைக்க மறுக்கும் கூட்டத்தை உருவாக்குவது, ஊர் விலக்கம் செய்வதுபோன்ற சமூகச் சீர்கேடுகளுக்குத் தங்களை அறியாமல் முட்டுக் கொடுக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைபாட்டைத் தான் இதற்குக் காரணமாகச் சொல்ல இயலும். இதில், தமிழ் நாளிதழ்களின் பங்கைக் குறிப்பிடுவதானால், ஒரு பிரிவினர் தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள். அதை நாங்கள் பிரசுரிக்கிறோம் என்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அதன் நியாயங்கள் குறித்த எந்தப் பரிசீலனைக்கும் தங்களை உட்படுத்திக் கொள்வதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் மேற்சொன்ன சமூகச் சீர்கேடுகளுக்கு எதிரான மனப்பாங்கை முஸ்லிம் இளைஞர்களில் அதிகமானோரும் கொண்டிருக்கிறார் கள். இதற்காக, அவர்கள் மீது பயங்கரவாதிகளென அடையாளப் படுத்த உருவாக்கிய வஹாபி என்ற சொல்லைப் பயன் படுத்துவது குறித்து நான் ஒரு தமிழ் நாளிதழுக்கு மறுப்புக் கட்டுரை எழுதினேன். வழக்கமாக, முஸ்லிம்கள் எழுதும் கட்டுரைகளில் குர்ஆன் வசனங்களும் வழவழத் தன்மை யும் இருப்பதால் பிரசுரிக்கப்படுவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய மறுப்புக் கட்டுரை என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், ‘வாசல்படிவரை வந்து விட்டது வஹாபிஸ தீவிரவாதம்’ என்று மூன்றாவது நாள் தலையங்கம் வருகிறது. வஹாபி என்னும் சொல் தவறானப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் சமூகத்திலுள்ள பெரும்பான்மை இளைஞர்கள்மீது இதைப் பயன்படுத்துவது சரியா என்று முஸ்லிம் எழுத்தாளர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பது தான் என்னுடைய நிலைபாடு.

புதிய விடியல் : விருதுபெற்ற நிலையில் இந்தக் கேள்வியை கேட்காமல் பேட்டியை முடிக்க இயலாது. விருது தருபவர்களின் அறிவு நாணயம் கேள்விக்குட்படுத்த முடியாத ஒன்று அல்ல. மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பைக் காட்ட விருதை மறுப்பதை ஒரு ஆயுதமாக இலக்கியவாதிகள் பயன்படுத்தும் சூழலில் உங்களது கருத்து என்ன?

குளச்சல் யூசுஃப் : அரசு விருதை மறுப்பது என்பது ஒரு குறியீடு, இது மனஆதங்கத்தின் வெளிப்பாட்டு உத்தி. அரசால் கௌரவிக்கப்பட்ட ஒரு குடிமகன் அரசுக்கெதிரான தனது எதிர்ப்பை அல்லது வெறுப்பை அஹிம்சை வழியில் வெளிப்படுத்து கிறான். வாரமொரு விருது கிடைக்குமெனில் மக்களுக்கெ திரான ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொன்றைத் திரும்ப ஒப்படைத்து விடலாம் தான். தற்போது செய்யும் தவறை விட அதிகமான தவறை அரசுகள் செய்யாது என்ற உத்தரவாதம் இருந்தாலாவது இருப்பதைத் துறந்து விடலாம். இப்படியான சூழலில் விருது பெறும்போது பெற்ற அதே புகழை, துறக்கும் போதும் பெறுவதைத் தவிர வேறு எதையும் அடைய இயலாது. என்னைப் பொறுத்தவரைக்கும் விருதைத் துறப்பது என்பது நிகழ்வின் தீவிரத்தைப் பொறுத்தது. தீவிரத்துக்கான அளவுகோல் எதுவென்பதை முடிவு செய்யும்போது ஏற்கனவே சொன்ன உத்தரவாதப் பிரச்சினை மேலெழும்.

*
நன்றி : குளச்சல் யூசுஃப், புதிய விடியல் / Wafiq Sha

No comments:

Post a Comment