Monday, August 28, 2023

மன்னிப்பு (சிறுகதை ) - நாகூர் ரூமி



மன்னிப்பு - நாகூர் ரூமி


சாயங்காலம் ஆரம்பித்த வேதனை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான். கால்வலிக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. என்றாலும் எங்கோ நெருடுவதை அவனால் உணர முடிந்தது.


வலது பாதத்தைப் பார்த்தான். பெரு விரலிலிருந்து கணுக்கால் வரை வெட்டி எடுத்து விடலாம் போலத் தோன்றியது. ஆயிரம் கோடாரிகளை வைத்து யாரோ உள்ளே கொத்துகிறார்கள். நின்றால், நடந்தால் ம்ஹூம் சாயங்காலத்திலிருந்து விரலைக்கூட அசைக்க முடியவில்லை. யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. எப்படிச் சொல்வது? பாட்டிக்கு மட்டும்தான் தெரியும். அவள் 'அப்பவே சொன்னேனே' என்று அரற்ற ஆரம்பித்து விட்டாள். பாட்டியின் புலம்பலை ஒரு முறைப்பு அடக்கிவிடும். ஆனால் மனசாட்சியின் புலம்பலை? சாயங்காலத்திலிருந்தே அவனது அறிவு சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்து கிடக்கிறது. மீசையில் மண் ஒட்டிவிடுமே என்று சமாளித்து வந்தான். இனிமேல் முடியாது.


பாட்டியின் நாற்பது வருஷ மூடநம்பிக்கைகள் பச்சிலை உருவில் பாதத்தில் தேய்க்கப்பட்டனவே தவிர, வலி குறையவில்லை. பாட்டியின் நம்பிக்கை பச்சிலையாகக் காய்ந்து, உதிர்ந்து விட்டிருந்தது. ராமநாதன் சில தைலங்களின்மீது நம்பிக்கை வைத்திருந்தான். அதில் சிங்கப்பூர் 'கோடாலி' தைலமும் ஒன்று. அவனைப் பொறுத்தவரை அதுவும் சர்வரோக நிவாரணி மாதிரி. அதையும் காலில் கொட்டியாயிற்று. விறுவிறுவென்று ஏறியதே தவிர, பாதத்தினுள்ளே நரம்புகளுக்குப் பதில் அக்கினிக் கட்டிகள் தான்.


ஈஸிசேரில் சாய்ந்தபடி காலைத் தூக்கி எதிரிலிருந்த கட்டிலில், மெத்தைமீது போட்டுக் கொண்டான். கொஞ்சம் வசதியாக இருந் தாலும் கோடாரிகள் தங்கள் வேலையைத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.


ராமநாதன் தன் நண்பன் ரவியின் உபாயத்தைக் கையாண்டு பார்த்தான். உடலில் எங்காவது அரித்தால் ரவி சொறிய மாட்டான். மனதின் திடத்தன்மைக்கு உடனே ஒரு போட்டி. 'அரிக்கிறாயா...ம்... அரி... எவ்வளவு நேரம் அரிப்பாய்... பார்க்கிறேன்... நான் சொறியவே மாட்டேன்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்து கொள்வான். தோலின் தினவையும் நகங்களின் பரபரப்பையும் அவன் மனம் வெற்றி கொள்வதை ராமநாதன் எத்தனையோ தரம் பார்த்திருக்கிறான். அதை நினைத்துக்கொண்டான். 'வலிக்கிறாயா... பார்ப்போம்... எவ்வளவு நேரம் வலிப்பாய்...' என்று வாய்விட்டுச் சங்கல்பம் செய்துகொண்ட கனமே அது சுக்கு நூறாய் உடைந்து போனது. ஆயிரம் ரவிகள் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத வலி.


நத்தைபோல் வந்தது இரவு. ராமநாதன் முனங்க ஆரம்பித்தான். பாட்டி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள். ஒருமுறை முறைத்து, “உடனே டாக்டர் சீனிவாசனை வரச்சொல்லி ஃபோன் பண்ணு," என்றான்.


'அப்பவே சொன்னனே... மாரியாத்தாட்ட விளையாடாதடான்னு'' - போகும்போதும் புலம்பிக் கொண்டே சென்றாள் பாட்டி.


மாரியாத்தா, நகங்களும் மீசையும் கொண்ட மாரியாத்தா! சே... என்ன அறிவு கெட்டவர்கள் என்று நினைத்தான். வலி அதிகமாகியதுபோல் இருந்தது. கண்ணை மூடிக் கொண்டான். பல்லைக் கடித்துக் கொண்டான்.


சீனிவாசன் வந்தார். பாதத்தைத் தட்டிப் பார்த்தார். திருப்பினார் அப்படியும் இப்படியும் சுண்டினார். கடைசியில் ராமநாதனிடம், 'வாட் ஹாப்பண்ட் ஆக்ச்சுவலி?" என்றார். இப்போது என்ன சொல்வது? ஒரு கணம்தான். தயக்கம் உணரப்படுவதற்குமுன் பதில் சொல்லிவிட வேண்டும்.


"காலை உதறினேன். சுவரில் இடித்துவிட்டது''. பாட்டியைத் திருட்டுத்தனமாய்ப் பார்த்துக் கொண்டான். அவள்தானே ஒரே சாட்சி. சாட்சியும் மௌனித்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே.


"இடிச்சுதுன்னா சொல்றே?" வீக்கமே இல்லையே?" ஆச்சரியப்பட்டார் சீனிவாசன். 'ஓகே... ஒரு ஆயின்ட்மென்ட் தாரேன், தடவிக்கோ" என்றார்.


''சார்... இரவு நான் எப்படியாவது தூங்கணூம்."


'ஏன், அவ்வளவு வலிக்கிறதா?” என்று கேட்டு ஒரு இன்ஜெக்சன் போட்டார்.


ஊசி போட்ட வலியை உணர முடியவில்லை. இமைகள் லேசாக கனத்தன. டாக்டர் காலையில் வருவாராம்.


மனத்தில் அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடந்தது.


வீட்டுக்குள் வந்தபோது பாட்டியைத் தவிர யாருமில்லை. அம்மாவும் அப்பாவும் சிதம்பரம் கோயிலுக்கு. பாட்டி அடுப்பங்கரையில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்தான் ராமநாதன். ஓசைப்படாமல் வழக்கம்போல. அப்போது தான் அது நடந்தது.


பாட்டியின் பக்கவாட்டில் எவர்சில்வர் ப்ளேட்டில் மல்லிகைப் பூவாய்ச் சாதம். பாட்டி திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தாள். அவள் பார்க்காதபோது, சோற்றில் வாயை வைத்து நக்கிக் கொண்டிருந்தது மாரியாத்தா. மாரியாத்தா, வீட்டுப் பூனை. பாட்டியின் செல்லப் பூனை. பாட்டி வைத்தபெயர். பாட்டியின் இஷ்ட தெய்வம் மாரியாத்தா. இஷ்டத்துக்குச் சாதத்தை எச்சில் பண்ணிக் கொண்டிருந்தது.


ராமநாதனுக்குப் பூனைகள் என்றாலே கால்கள் பரபரக்கும். நக்கும் சுவாரஸ்யத்தில் மாரியாத்தா இவனைக் கவனிக்கவில்லை. மெல்ல மெல்லப் பூனைபோல் ஓசைப்படாமல் நடந்து அதனருகில் சென்றான்.


அதன் வயிற்றுக்குக் கீழ் தன் வலது பாதத்தை நுழைத்தான். பாட்டி திரும்பிக் கொண்டிருந்தாள். அதற்குள் காரியத்தை முடித்து விடவேண்டும். இல்லையேல் சத்தம் போட்டுக் கிழவி காரியத்தைக் கெடுத்துவிடுவாள். இந்தச் சனியன் பிடித்த பூனை இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது.


கால் பந்தை 'கோல்' நோக்கி உதைப்பதுபோல ஒரே எத்து. பூனை எதிரே இருந்த சுவரில் 'டக்' என்ற ஒலியுடன் பயங்கரமாக மோதிக் கீழே விழுந்தது. விழுந்தபோது 'மோவ்' என்று பரிதாபகரமான ஒரு ஒலியை எழுப்பியது. அந்த ஒலி ராமநாதனைச் சற்றுப் பயமுறுத்தியது. பின்பு பூனை ஓடிவிட்டது.


பாட்டி பார்த்துவிட்டு, "அடப்பாவி! மாரியாத்தா சூலிடா, அடப் படுபாவி” என்று பதறினாள்.


சூல்கொண்ட மாரியாத்தா. ராமநாதனுக்கும் சற்றுப் பாவமாக இருந்தது. அவசரத்தில் வயிற்றின் உப்பலைக் கவனிக்கவில்லை. 


''சரி ...சரி ...இந்தச் சோத்தை வெளியிலே கொட்டு... மாரியாத்தாவாம் மாரியாத்தா...” என்று திட்டிவிட்டு வந்ததுதான். அரைமணியில் ஆரம்பித்தது வலி.


திடீரென்று விழிப்பு வந்தது. மணி பார்த்தான். இரவு ஒரு மணி. வீடு பாட்டியோடு சேர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அவனோடு சேர்ந்து வலது பாதம் விழித்துக் கொண்டிருந்தது. மறுபடியும் கோடரிகள்.


ஒரு யோசனை தோன்றியது. அப்படிச் செய்துவிட வேண்டியது தான் என்ற முடிவோடு எழுந்தான். ஹாலின் கிழக்கு மூலையில் உள்ள அலமாரிக்குப் பின்புறம்தான் மாரியாத்தாவின் குடித்தனம். இந்நேரம் அங்கிருக்கிறதோ என்னவோ.


ஹால் விளக்கைப் போட்டான். அலமாரிக்குச் சென்றான். பின்னால் பார்க்கப் பயம். மாரியாத்தா மேலே பாய்ந்து விடுமோ?


மெதுவாக எட்டிப் பார்த்தான். மாரியாத்தா குட்டிகள் ஈன்றிருந்தது. இரண்டு குட்டிகள். வெள்ளையும் சாம்பலுமாய். குட்டிகளை நக்கிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை நுழைத்தான். இவனைப் பார்த்தவுடன் பளபளக்கும் கண்களுடன் போருக்குத் தயாராவதுபோல் எழுந்து நின்றது.


ராமநாதன் என்ன ஆனாலும் சரியென்று மண்டியிட்டு அமர்ந்தான். மிகுந்த சிரமத்துடன் இரு கைகளையும் குவித்து வணங்கினான். வார்த்தைகள் பயனற்றுப் போயின. கரகரவென்று கன்னங்களில் சூடாகக் கண்ணீர் வழிந்தோடியது. எவ்வளவு நேரம் அப்படி இருந்தானென்று தெரியாது. 'சரி போ' என்று மாரியாத்தா உத்தரவு கொடுத்ததுபோல் இருந்தது. எழுந்து வந்து, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.


காலையில் காப்பியுடன் பாட்டி எழுப்பினாள். விசாரித்தாள். ராமநாதன் பாதத்தைப் பார்த்தான். கோடரிகள் புதைக்கப்பட்டிருந்தன. வலி இறந்து விட்டிருந்தது. உற்சாகமாகப் பாதத்தை ஆட்டிக் காட்டினான். பாட்டி வாஞ்சையாகத் தலையைக் கோதினாள். அறைக்குள் பார்வையை ஓட்டினான் ராமநாதன். அறை வாசலில் நின்று மாரியாத்தா பார்த்துக் கொண்டிருந்தது.

*

(குமுதம் 27.8.1987)

*

நன்றி : மாரியாத்தா &  நாகூர் ருமி

Friday, August 11, 2023

Soul Searcher - L Shankar

பேஸ்புக்கில் வாசு பாலாஜி :

முதல் முதல்ல இசையமுதம்ல 74 வாக்குல ஓட்டை ட்ரான்ஸிஸ்டர்ல குப்புறப் படுத்து ரெண்டு கையும் குழிவா வச்சு காதைப் பொத்திக்கிட்டு (ஸ்டீரியோ எஃபக்ட் வரும்) வயலின் ட்ரையோ எல்.வைத்தியநாதன், எல். சுப்ரமணியம், எல். ஷங்கர் பஞ்சநடை வர்ணம் கேட்டதும் வேலைக்குப் போனதும், கேசட் ப்ளேயர் வாங்குனதும்னு பக்கெட் லிஸ்ட்ல போட்டது. அப்புறம் கேசட் பைத்தியம் புடிச்சதும் ரெகார்ட் ஸ்டூடியோவா அலைஞ்சும் கிடைக்கலை. 

அப்புறம் சக்தி க்ரூப்ல சிலதெல்லாம் கிடைச்சாலும் என்னமோ நிறைவில்லை. 

ஒரு நாள் டாரண்ட்ல தேடுவோம்னு தேடுனா எல். ஷங்கர் மட்டும் கிடைச்சது. ஆபேரி, கீரவாணி, சங்கராபரணம்னு எல்லாம் ராகம் தானம் பல்லவி. டபுள் வயலின்ல ஆபேரி, கீரவாணி, முக்கியமா சங்கராபரணத்துல கூடவே பாடி வாசிக்கறது கேட்டதும் கூஸ் பம்ப்ஸ். அய்யோ இந்த மனுஷன் முழுசா பாடிண்டே வாசிச்சா எப்படி இருக்கும்னு ஏக்கமாவே இருந்தது. 

நடுவுல தேடறப்போ எல். ஷங்கெர்னு போட்டு சிலது கிடைச்சது. அதுலயும் ஒரு 55 நிமிஷ கான்ஸர்ட். விக்கு, ஜாஹீர் ஹுசேன் முந்தா நேத்து கிடைச்சது. வழக்கம் போல இங்க ஷேர் பண்ணேன். நோ டேக்கர்ஸ். அப்படியே கிடைக்கிறதெல்லாம் பார்த்துட்டிருந்தேன். எல்லாம் வெள்ளக்காரப் பயலுவ கலக்ஷன். 

இப்ப சாப்பிட்டு வந்து உட்கார்ந்தேன். எவனோ ஒரு வெள்ளக்காரப் பாவி சைட்ல ஸோல் செர்ச்சர் எல் ஷங்கர்னு போட்டிருந்தான். ரெண்டு விஷயம் கிடைச்சது.

1. எல் ஷங்கர், ஷங்கெர்னு மட்டும் தேடுனா போறாது. லக்ஷ்மி நாராயணன் ஷங்கர்னும் தேடணும்.

2. என்னப்பா கேட்ட. முழுசா பாடியும் கேட்கணுமா. இந்தான்னு 50 நிமிஷம் காபி ராகம் தானம் பல்லவி. 

3. இன்னைக்கு ஆடிக் கிருத்திகையா. முருகன் பாட்டு

புடிச்சி 320க்கு கன்வர்ட் பண்ணி இறக்கியாச்சு. 😄

*

Thanks to : Aljosha Thomas / Nicodemus  & Vasu Balaji


Friday, July 7, 2023

ஃபோன் நகரம்‼️ (சிறுகதை) - எஸ்.எல்.எம். ஹனீபா


ஃபோன் நகரம்

எஸ்.எல்.எம். ஹனீபா

அவன் அமரனான் : அவன் பொன்னகரம் படைத்தான் - நான் ஒரு போன் நகரம் எழுதினேன்..

வீட்டின் முற்றம் முழுவதும் விதவிதமான பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கும். அதிகாலையில் பனிகுளித்து, முகங்களில் அழகும் மணமும் துளிர்த்து புத்தம்புதிய மணமகள் போல நிற்கும் அந்தப் பூஞ்செடிகளைத் தினந்தினம் தரிசித்துத் திழைத்து நிற்கிறேன்..

அன்றும் வழக்கம்போல நிற்கிறேன், எனது பத்துவயதுச் செல்லக்குட்டி பாடசாலைக்குப் போக  ! அவளை தரிசிக்க.... 

அதோ வருகிறாள் எனது சசிக்குட்டி. அவளுக்குப் புன்னகையே முகமாக வாய்த்துள்ளது, அத்தனை அப்பாவித்தனமும் குறும்பும் நிறைந்த, நிலவில் வடித்த பேரழகு முகம் அவளுக்கு..

"ஹாய் அங்கிள் ! குட் மோர்னிங்"

"குட் மோனிங், குட் மோனிங்.. வாடா செல்லம்.. எப்டி இருக்காய் ?" - கேட்டுக்கொண்டே அந்தக் கணத்தில் பிறந்த ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பூஞ்செடிகளைப் பார்த்தேன்.. மிகவும் அழகானவை அந்தப் பூக்களா அல்லது எனது சசிக்குட்டியா ? சந்தேகம் கலைந்தது, சசிக்குட்டிதான் பேழகு ! 

அவள் பாடாசாலைக்குப் போகும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு வகையான பூக்களில் ஒன்றைப் பறித்துக் கொடுப்பேன். அன்றும் அவளுக்கு ஒரு ரோசா மலரைப் பறித்துக் கொடுத்தேன்..

முத்துப் பற்கள் பளிச்சிட "தேங்க் யூ அங்கிள், Bye.." 

எனக்கும் அவளுக்கும் இடையே இந்தச் சந்திப்புத் தினமும் நடக்கும்.. 

மாலை நேரங்களில் அவள் ஓதல் பள்ளிக்குப் போவாள். அப்போது சற்று வெயில் நேரமாக இருப்பதால் நான் கொஞ்சம் வீட்டுக்குள் சாய்ந்து கிடப்பேன். சொந்த வீட்டுக்குள் வருவதுபோல எனது அறைக்குள் வருவாள். படுத்துக் கிடக்கும் எனது கைகளைப் பற்றி, கைகுலுக்கிவிட்டுச் செல்வாள். சிலபோது எமது கைகளில், நெற்றியில், தலையில் முத்தமிட்டுச் செல்வாள். அந்த வயதில் எனக்கொரு மகள் இருந்து அவள் இதையெல்லாம் செய்தால் எத்தகைய உணர்வுகள் ஏற்படுமோ அதே உணர்வுகளைத்தான் சசியின் செய்கைகளும் எனக்குள் ஏற்படுத்தின. 

அவளுக்குச் சிறுசிறு பொருளாதாரத் தேவைகள் ஏற்படும். படிப்புச் செலவுகள், பாடசாலை உபகரணங்கள் வாங்க என்று என்னிடம் எப்போதாவது காசு கேட்பாள், அதையும் உரிமையோடு கேட்பாள். கொடுத்து உதவுவேன்.

வருடங்கள் அவளை முன்னோக்கி நகர்த்தி வந்தன. வேகமாக, அழகாக வளர்ந்து வந்தாள்.

ஒருநாள் மாலை நான் அறையில் சாய்ந்து கிடந்தேன். சசி திடீரென ரெண்டு பையன்களோடு எனது அறைக்குள் வந்தாள். ஓதல் பள்ளி போகிற வழியில் வந்திருக்கிறாள். அந்தப் பையன்களில் கொஞ்சம் வாட்ட சாட்டமான ஒருவனைச் சுட்டிக்காட்டி "அங்கிள், இவனைத்தான் நான் லவ் பண்றேன்" என்றாள். எனக்கு அதிர்ச்சியாகப் போயிற்று. இந்தச் சசிக்குட்டி அவ்வளவு வளர்ந்து விட்டாளா இப்போது ? எனக்குள் ஒருவிதமான பிரிவுத் துயரமும் அவளது வாழ்க்கை குறித்த அச்சமும் தோன்றிற்று... 

மாலை நேரங்களிலும் அவள் எங்காவது போகும்போது என்னையும் கூப்பிடுவாள். இருவரும் இரண்டு சைக்கிள்களில் சவாரி போவோம் கண்டதையும் பேசிச் சிரித்தபடி... பாடசாலையில் நடக்கும் சுவாரஷ்யமான விஷயங்களை எல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பாள்.. அவளுக்குள் அப்போது பால்யபருவக் காதல் உணர்வுகள் முனைப்புற்றிருந்தன.. அவளது 'லவ்வர்' பையன் தூரத்தில் தென்பட்டதும் எனக்குச் சைகை காட்டி, என்னைக் 'கழற்றி விட்டுவிட்டு' அவனை நோக்கிச் சைக்கிளில் பறந்துவிடுவாள்.. 

அப்போது அவள் முன்னைய பையனை விட்டுவிட்டு இன்னொரு பையனுடன் நட்பாகி இருந்தாள். அது குறித்தும் அவளிடம் கேட்டேன். "என்னடி சசி, ஆளை மாத்திட்டியா ? 

"அவன் சரில்லை அங்கிள், என்னை விட்டுட்டு இன்னொருத்தியப் புடிச்சிட்டான், எனக்கென்ன ஆளா பஞ்சம், நானும் ஆள மாத்திட்டன்" என்றாள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.! 

இவள் தொடர்ந்து நன்றாகப் படிப்பாளா ? பொறுப்புடன் நடந்து கொள்வாளா ? வாழ்க்கையில் சறுக்கி விடுவாளா ? என்ற கேள்விகள் என்னை அடிக்கடி துளைத்தெடுத்தன.

ஒருநாள் மாலை பாதையில் என்னைச் சந்தித்தவள் திடீரென "அங்கிள், எனக்கொரு ஐயாயிரம் ரூபா காசு வேணும்" என்றாள். நானோ திடுக்கிட்டுப் போனேன்.

"என்னத்துக்குச் சசி உனக்கு இப்ப இவ்வளவு காசு ? என்ன அவசரம் ?" என்றேன்.

"நான் நாலைஞ்சி பொடியன்மார லவ் பண்ணிட்டன் அங்கிள்.. எல்லானும் ஏமாத்திப்போட்டு விலகிட்டான்கள். இப்ப இருக்கிறவனும் போய்ருவானோ எண்டு பயமாக் கிடக்குது, அவனும் இல்லாம எனக்கு இரிக்க ஏலாது. வாற கிழம அவன்ட பிறந்த நாள். அவனுக்கொரு ஃபோன் வாங்கிக் குடுக்கணும்,  அவனும் அதத்தான் கேட்கான் அங்கிள்.. எப்டியாவது வாங்கிக் குடுக்கத்தான் வேணும், அதுக்குத்தான் ஐயாயிரம் ரூபா வேணும்" 

நான் சிலையாகிப் போனேன் ! இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் ! இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறது ? சசியைப் பற்றிய ஒரு பேரச்சம் எனக்குள் பொங்கிப் பிரவாகித்து வெடித்தது ! 

"உன்ட நெலெம எனக்கு விளங்குது சசி.. ஆனா இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோன்னுதான் கவலையாக் கிடக்கு. நீ அவனுக்கு போன் வாங்கிக் குடுக்க நினெக்கிறதுல தப்பில்ல.. நான் பென்ஷன்காரன், ஒனக்குத் தெரியும்தானே சசி, இருநூறு முன்னூறுன்னா எடுத்துக்கேலும்..

ஐயாயிரத்திற்கு ஒடனமே எங்க போற நான்.. அதான் கவலையாக் கிடக்குது..." - நான் மிகுந்த சங்கடப் பட்டேன்.

கொஞ்ச நேரம் நெற்றியில் கோடுகள் படர, புருவங்களைச் சொருக விட்டு எதையோ கடுமையாகச் சிந்தித்துத் தலை நிமிர்ந்தவள், "சரி அங்கிள், பரவாயில்லை, நான் சமாளித்துக் கொள்றன்" என்று சொல்லி என் வயிற்றில் செல்லமாகத் தட்டிவிட்டுப் புன்னகையுடன் போய்விட்டாள். 

அவளது பாடசாலைக்கு அருகில் ஒரு ஃபென்சி ஸ்டோர் கடை இருந்தது. கடைக்காரர் தமிழ்ப் படங்களில் வரும் வில்லன்கள் போலிருப்பார். அண்டா வயிறு, பருத்த ஷரீரம், காட்டுத்தனமாக வளர்ந்துகிடக்கும் அரைவாசி நரைத்த தாடி, கழற்றாத தொப்பி, அஞ்சி நேரத் தொழுகையாளி, அஷில் முஸ்லிம், பெயர் நன்றாக நினைவில் உள்ளது, சொல்ல மாட்டேன். 

அந்தக் கடைக்கு சசி அடிக்கடி போவாள். பாடசாலை உபகரணங்கள் வாங்குவாள். அவள் கடைக்கு வந்தால் கடைக்காரர் குளிர்ந்துபோவார். பொருள்களை அவசரமாகக் கொடுத்து அனுப்பாமல் இழுத்தடிப்பார். அவளைச் சீண்டிவிட்டுப் பேச்சுக் கொடுத்துக் கலாய்ப்பார். பொருள்களைக் காட்டும் சாட்டில் கைகளைத் தொடுவார், தேவையில்லாமல் உரசிக்கொண்டு நிற்பார், பட்டும்படாத மாதிரி அவளது மார்பில் பிஷ்டங்களில் உதடுகளில் தட்டி, வருடி விடுவார்.. இவற்றையெல்லாம் அவள் கண்டுகொள்ளாமல் இருப்பாள், போகும்போது அவரிடமிருந்து இலவசமாகக் கிடைக்கும் டொஃபி, சுவிங்கம் மாதிரி அற்பச் சந்தோஷங்களுக்காக ! 

கடைக்காரரின் இந்தக் குஷால் செய்கைகள் பற்றியெல்லாம் சசி என்னிடமும் சொல்லியுள்ளாள். அந்த மனிதன் ஒரு புழுவைப் போல என மனக் கண்களில் தோன்றி மறைவார்...

என்னிடம் ஐயாயிரம் ரூபா கேட்ட அன்றைய தினம் மாலை சசி அந்தக் கடைக்குச் செல்கிறாள்...

வெற்றிலைக் கறைபடிந்த கோரமான பற்களைக் காட்டிச் சிரித்து வழிந்து சசியை வரவேற்கிறார்.

"மாமா, எனக்கொரு ஹெல்ப் பண்ணுவீங்களா..?"

"உனக்கில்லாத ஹெல்ப்பாடி செல்லம்.. சொல்லன் பார்ப்பம், உனக்காக நான் என்னெண்டாலும் செய்வன்.." சொல்லிக்கொண்டே அந்தப் புழு சசியின் கைவிரல்களைப் பிடித்து மெல்ல அழுத்துகிறது... 

"மாமா, வாப்பா வெளிநாட்டுல இரிந்து வாற மாசம் காசி அனுப்புவாங்க, காசி கிடைச்சதும் தந்துர்றன்..  எனக்கொரு ஐயாயிரம் ரூபாய் காசி கடனா தருவீங்களா..?

" என்ன புள்ள, இப்டி சிம்ப்பளா ஐயாயிரம்னு கேட்காய்.. பெரிய தொகையாச்சே.. எப்டி தாற சின்னப் புள்ள உன்னய நம்பி..?"

"என்ன மாமா.. சும்மா கதய வளக்காதீங்க, நான் பெரிய புள்ளயாகி மூணு வரிசம் இப்ப ! வாற டிசம்பருக்கு ஓ.லெவல் எழுதப் போறன், காசி தர ஏலுமா ஏலாதா, அவ்ளோதான் கத !"

"டியே, டியேய். கோவிச்சுக்காதடீ, இப்ப லாச்சிக்குள்ளால அவ்ளோ காசில்ல, அந்திக்கி யாவாரம் நடந்துதான் காசி சேரணும். நீ கவலப் படாத, நாளெக்கி ஸ்கூலுக்கு கொஞ்சம் நேரத்தோட வா, நான் சுபஹ் தொழுதிட்டு வந்து கொஞ்சம் சாஞ்சி கிடப்பன், கட துறக்கிறதுக்கு கொஞ்சம் முந்தி ஒரு 6.45 க்கிப் போல வா, கடக்கிப் பின்னால் வந்து கதவ தட்டு, நான் எழும்பி கதவ தொறந்து நீ கேட்ட காச தாறன்" என்று சொன்ன புழுவின் கண்கள் சசியின் மார்புகளின் மீது பரவுவதை சசி அவதானித்தாள்... அவளுக்கு உள்ளேயும் ஏதோ செய்வதாக உணர்ந்தாள்..

"சரி மாமா, நான் காலைல வாறன் .."  என்று நகர்ந்தவளின் கையைப் பிடித்து இழுத்து ஒரு யோகர்ட்டைத் திணித்தது புழு.

இன்று கையைப் பிடித்து இழுத்த இழுப்பில் நாளை காலை தனக்கு நடக்கப் போவதை நன்றாக உணர்ந்துகொண்டாள்.

மறுநாள் காலை 6.45 மணிக்குக் கடைக்குள் நுழைந்த சசி 7.00 மணிக்கு வெளியே வந்தாள்... 

சீருடையையில் கசங்கி இருந்த இடங்களை, பர்தாவை தடவிவிட்டுச் சரிசெய்தவாறே கைக்குட்டையால் உதடுகளையும் கன்னங்களையும் அழுத்தித் துடைத்தவாறு பாடசாலை 'கேட்'டை நெருங்கினாள்...

'கேட்' அருகில் நின்றுகொண்டிருந்த அவளது 'லவ்வ'ரின் கைக்குள் அந்த ஐயாயிரத்தை வேண்டா வெறுப்பாகத் திணித்துவிட்டு, அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் பாடசாலைக்குள் நுழைகிறாள்...

*

நன்றி : எஸ்.எல்.எம். ஹனீபா

https://www.facebook.com/slm.hanifa