Sunday, March 25, 2012

காஷ்மீரும் கவனிக்கவேண்டிய புத்தகங்களும்

பயங்கரவாதி தாஜ் (புகைப்படத்தை பார்த்து உறுதிசெய்து கொல்லவும். இன்னொரு நகைச்சுவைக் காட்சி என்று குறிப்பிட்டே அனுப்பியிருந்தார் மனுசன்) எழுதிய புதிய கட்டுரை இது. இலங்கைக்கு 'எதிரான' அமெரிக்காவின் தீர்மானம் இந்தியாவின் 'ஆதரவுடன்' வருவதற்கு முன்பு எழுதி அனுப்பினார்.   பதிவிட தாமதமாகிவிட்டது. மன்னியுங்கள். காஷ்மீரின் துயரத்தையும் , இஸ்லாம் மட்டும் பயங்கரவாத மதமாக சித்தரிக்கப்படும் அவலத்தையும் சொல்லும் இரு புத்தகங்கள் பற்றிய தோழர் மீனாவின் (தீராநதி) கட்டுரை தாஜை மிகவும் உலுக்கி விட்டது. 'முள்ளும் மலரும்' மாதிரி 'கெட்டமுஸ்லிம் நல்ல முஸ்லிமாக' மாறுவது இப்படித்தான். இறைவனே, தாஜின் பிழைகளைப் பொறுத்து , பழையபடி தீவிர இலக்கியவாதியாக மாற்றி, மேலும் பிழைகள் பல செய்ய வைப்பாயாக, ஆமீன். இன்னொன்று.. கட்டுரையாளர் மீனாவின் புகைப்படத்தை இணைக்கச் சொன்னார் தாஜ். கிடைக்கவில்லை. ’ஒற்றை விடுதலையைக் கட்டுடைக்கும்’ பெண்ணியம் தளத்தில் மீனாவின் இன்னொரு  கட்டுரை மட்டும் கிடைத்தது (வாய்மூடி இருக்கும் ஓவியம் அவரல்ல என்று நினைக்கிறேன்).  வாசிக்கலாம்.

காட்டுக் கத்து கத்தினாலும்  கவர்ண்மெண்ட்டுகளுக்கு கேட்காது கவிஞரே, காஷ்மீர் மட்டுமா உதாரணம்  ? - ஆபிதீன்

***



கவனம் செய்யத்தக்க புத்தக அறிமுகம்

இம்மாத குமுதம் தீராநதியில் (March-2012) வாசித்த , இரண்டு புத்தகங்களைக் குறித்த ஓர் அறிமுகக் கட்டுரை என்னை துயரத்தில் ஆழ்த்தியது. வெகு காலமாக தீர்க்கப்படாத காஷ்மீரின் அரசியல் பிரச்சனையை ஒட்டி, ஆண்ட/ ஆளும் மத்திய அரசுகளின் அரசியல் ராஜ தந்திரங்களை தீர்க்கமாய் அவ்விரு புத்தகங்களும் பேசியிருப்பதாக அந்தக் கட்டுரை சொல்கிறது.

இந்தியாவில் முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பின்மை நிலவுவதாக ஓர் புத்தகமும்/  பாராளுமன்ற தாக்குதலையொட்டி அப்சல் குருவையும், அப்துல் ரஹ்மான் கிலானியையும் கைது செய்து நடத்தப்பட்ட வழக்கின் பின்னணியில் நடந்தேறிய திரைமறைவு நாடகங்களை இன்னொரு புத்தகமும் ஆழ்ந்து ஆதார முகாந்தரங்களுடன் பேசியிருப்பதாக மேலும் அந்தக் கட்டுரை சொல்கிறது.

தீராநதியில், அப்புத்தகங்களை ஒட்டி மேல் விளக்கங்களோடு  புத்தக அறிமுகம் அளவில் எழுதியிருப்பவரின் பெயர் மீனா. அரசால் நிகழும் மனித உரிமை நசிவுகள் மீது தாங்கவொண்ணா மனத்துயரத்தோடு அந்தக் கட்டுரையை அவர் எழுதி இருக்கிறார்.

மீனா அவர்கள், அந்த இரண்டு நூலையும் நம் பார்வைக்கு வைத்து, அதன் உண்மைகளை; நம்முடைய மறதியில் தோய்ந்துபோன அல்லது அறியப்படாத நம் குறைபாடுகளின் பள்ளங்களில் இட்டு நிரப்பியிருக்கிறார். இந்திய அதிகார வர்க்கத்தினரால் பெரிதும் வஞ்சிக்கப்படும் காஷ்மீர் மக்களின் அவலத்தை தமிழர்களின் பார்வைக்கு தொடர்ந்து கொண்டுவந்து சேர்க்கும் பணியை பலகாலமாக செய்து கொண்டிருப்பதாக மீனா அவர்களை அறியமுடிகிறது. என் கணிப்பு சரியாகும் பட்சம், மீனா இடதுசாரி சார்ந்த அரசியல் பார்வை கொண்டவராகவோ / வக்கீல் பணி செய்பவராகவோ இருக்கக் கூடும்.

'பயங்கரவாதத்தின் வேர்கள்: காஷ்மீரும் உலக அரசியலும்' என்று தனது தீராநதி கட்டுரைக்கு மீனா தலைப்பிட்டிருக்கிறார். அந்தக் கட்டுரையை, அவசியம் கருதி 'ஆபிதீன் பக்கம்' வாசகர்களுக்காக நான், எழுத முற்பட்ட போது, 'காஷ்மீர் அரசியல்: கேள்விக்குறியாகிப் போன இந்திய முஸ்லீம்களின் வாழ்க்கை!' என்பதாக தலைப்பிட கருதினேன். ஆதங்கப்படுவதில் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று தோன்ற... 'கவனம் செய்யத்தக்க புத்தக அறிமுகம்' என்று உப்புச் சப்பில்லாததோர் தலைப்பை சூட்டியிருக்கிறேன்.  

காஷ்மீர் அரசியல் சிக்கலை முன்வைத்து நடந்தேறி கொண்டிருக்கும் இந்திய அரசின் மறைமுகமான சாணக்கிய சதுரங்கத்தை அறியநேரும் எந்த ஒருசராசரி இந்தியனும் அறிந்த மாத்திரத்திலேயே மூச்சையாகிவிடுவான். அத்தனைக்கு மறைமுக பயங்கரவாதம் கொண்ட அடாவடியாக அந்தச் சதுரங்க ஆட்டம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. 1947 ஆகஸ்ட்-15ல் இருந்து இந்த விளையாட்டால் மரணக்குழியில் தள்ளப்பட்ட காஷ்மீர் முஸ்லீம்களின் எண்ணிக்கை எத்தனை லட்சமிருக்கும் ? நல்லவர்கள் என்பவர்கள் உறைந்து போகிற அளவுக்கு!  

ஸ்ரீலங்கா அரசின் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்தும், அத்துமீறிய போர் குற்றங்கள் குறித்தும் ஐ.நா.சபையில் அமெரிக்கா விரைவில் கண்டன தீர்மானம் கொண்டுவர இருப்பதை வாசகர்கள் அறியலாம். இங்கே, காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்திய அரசு நிகழ்த்துவதாக அறிப்படும் மனிதஉரிமை மீறல்கள், எல்லை துப்பாக்கிச் சூடுகள், அவ்வப்போது நடந்தேறி கொண்டிருக்கும் அத்து மீறிய ராணுவ நடவடிக்கைக் குற்றங்கள் போன்றனவற்றை நாம் தீர அறியவரும்பட்சம், ஸ்ரீலங்கா குறித்து இன்றைக்கு அமளிதுமளிப்படும் அத்தனைக் குற்றங்களும் இதற்கு நிகரில்லையென்றாகிவிடும்.

அமெரிக்கா, ஐ.நா. வில் விரைவில் கொண்டு வரவிருக்கும் அந்தக் கண்டன தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் தமிழகத்தின் எல்லா கட்சிகளின் எம்.பி.க்களும் ஒருசேரக் குரலெழுப்பி கத்துகிறபோதும் கூட... ஆளும் அரசு அதற்கு அசைந்து கொடுப்பதாக இல்லை. அது அசைந்து கொடுக்காததற்கும், முந்தைய ஆளும் கட்சியும் இன்றைய எதிர்கட்சியுமான பாரதிய ஜனதா மௌனம் செய்வதற்கும் பின்னால்... காஷ்மீர் மக்கள் மீது இவர்கள் இருவரும் நிகழ்த்திய மனித உரிமை மீறல்கள்/ அத்துமீறிய ராணுவ நடவடிக்கைகள்/ கொன்று குவித்த படுகொலைகள் என்று ஏகத்திற்கும் இருக்கிறது! மறந்தும் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக நின்றுவிட முடியாது.

ஒரு சமயம் தமிழ் மக்களின் ஓட்டை மனதில் கொண்டு, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்பட்சம், நாளை ஐ.நா.வில் காஷ்மீர் அட்டூழியங்கள் குறித்து, இதே முகாந்திரத்தோடு சீனாவும் இலங்கையும் இந்தியாவை கூண்டிலேற்றும். மனித உரிமை நசிவுகளைப் பற்றி பேசும்! இத்தகைய  யோசிப்பால்தான் இன்றைக்கு இந்தியா நழுவுகிறது.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். ஐ.நா.வில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டுவரவிருப்பது வேடிக்கை என்றால் அதனை வெள்ளையாய் நம்பி, தமிழக 2கம்யூனிஸ்ட் முதலாக பிற ஏனைய கட்சிகளும் குரல் எழுப்புவதென்பது அதனினும் வேடிக்கை. யோசிக்க யோசிக்க சிரிப்பு பிய்த்துக் கொண்டு கிளம்புகிறது. அமெரிக்கா ஏன் இந்தத் தீர்மானத்தை கொண்டு வருகிறதென்று அந்நாட்டின் 'சி.ஐ.ஏ.' தவிர வெள்ளை மாளிகைக்குக் கூட இன்னும் தெரிந்திருக்காது. இந்நிலையில், நம் அரசியல் கட்சிகளுக்கு அது நம்பகமாய் தெரிந்து போனதுதான் ஆச்சரியம்!

போகட்டும், இன்னும் கொஞ்சம் காஷ்மீர் சங்கதிகளை பேசித் தீர்ப்போம்.
காஷ்மீர் பிரச்சனைகளை எத்தனை சிக்கலாக இருப்பிணும் மத்திய அரசால் பேசி தீர்க்க முடியாதா என்ன? அத்தனைக்கு முடியாதவர்களா நம் ஆட்சித் தலைவர்கள்? கஷ்மீர் மக்கள் இந்திய வரைப்படத்திலிருந்து தனியே பிரிந்து போக எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்றால்... கொஞ்சம் கஷ்டம்தான். என்றாலும் பேச்சின் வலிமை மீது எனக்கு நம்பிக்கையுண்டு. மீண்டும் மீண்டும் அம்மண்ணின் மக்கள் தலைவர்களை அழைத்து திரும்பத் திரும்ப பேசினால் போச்சு! எத்தனைப் பெரிய போரையும் கடைசியில் முடித்துவைப்பதென்பது பேச்சு வார்த்தைகள்தானே! ஜனநாயகத்தின் அடிப்படை அஸ்திவாரமே சுதந்திரமான பேச்சுதானே! நிச்சயமாய் பேசி தீர்வுகாண முடியும்.

இந்தியாவின் நடமாடும் அணுகுண்டாக அறியப்படும் மதம் சார்ந்த - அதன் அரசியல் சார்ந்த தலைவர்கள் இடம் தருவதில்லை. தவிர, அவர்களின் நிழல் படிந்த அரசின் கொள்கை வகுப்பாளர்களும் இடம் தருவதில்லை!
அது முடியாது போகிற பட்சம் இப்படியும் கொஞ்சம் யோசிக்கலாம்.

காஷ்மீர் பிரச்சனைகளுக்குப் பின்னால் பாகிஸ்தான் கை இருக்கிறது. நமக்கு மட்டுமல்ல எல்லா உலக நாடுகளுக்கும் அது தெரியவும் தெரிந்திருக்கிறது. இந்த நிஜத்தின் அடிப்படையில் அந்த நாட்டின் மீது படையெடுக்க நாம் ஏன் தயங்க வேண்டும்? நேர்மை என்பதே கூட அந்நாட்டின் மீது படையெடுப்பாகத்தான் இருக்க முடியும்?

இடைக்காலத்தில், இந்தியா வல்லரசாக கீர்த்தி பெற்றிருப்பதை நம் தலைவர்கள் பலர் பறைச்சாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானை இல்லையென்று ஆக்குவதற்கு அதிகம் நேரமும்கூட பிடிக்காது. அதைவிட்டு, 'காஷ்மீர் பிரிவினை' என்கிற பழைய குழப்பச் சங்கதியையே மீண்டும் மீண்டும்   முன்வைத்து, அவ்வப்போது நேரடியாகவும், மறைமுகமாகமாகவும் இஸ்லாமியர்களை காஷ்மீருக்குள்ளும், காஷ்மீருக்கு வெளியேயும் கொன்று அழித்துக் கொண்டிருப்பதினாலான அரசின் கணக்கும்தான் என்ன?

காஷ்மீர் அரசியல் சிக்கலை மேலும் மேலும் தீரவொட்டாத இமாலயச் சிக்கலாக மாற்றி, மத்திய அரசு இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கைகை கொத்துக் கொத்தாக குறைக்க நினைக்கிறதென அரசியல் நோக்கர்கள் சொல்வதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. இந்த அறமற்ற ஆசை உண்மையா?

அந்த அரசியல் நோக்கர்களின் கணக்கை கூட்டிக் கழித்துப் போட்டு யோசிக்கிற போது, அடுத்த நூற்றாண்டில், இந்திய முஸ்லீம்களின் ஜனத்தொகை சரி பாதிக்குமேல் குறைந்துப் போகும் என்கிற நிஜம் பிடிப்பட மனசு சுடுகிறது. இந்த மனச்சூடு, இன்றைக்கு காஷ்மீரில் காஷ்மீருக்கு வெளியே அழிபடும் இஸ்லாமியர்களை மனதில்வைத்து எழுந்த சூடு என்று மட்டும் கருதவேண்டாம். எந்தவோர் நாட்டிலும் பெரும்பான்மையினர் சிறுபான்மை மக்களை இப்படி சாணக்கியம் புரிந்து, சக்கர வீயூகத்தில் சிக்கவைத்து திட்டமிட்டு அழிக்க முனையும்தோரும் எழும் நெருடலைவொத்த நேருடல்தான் இது.

இப்படியெல்லாம் மனதைத் திருகித் திருகி யோசிக்கவைத்து, அதைப் பிசைந்தெடுத்த அந்தப் புத்தக அறிமுகம், தவிர்க்க முடியாத - கவனம் கொள்ளத்தக்க அறிமுகமே! மீனா குறிப்பிட்டு இருக்கும் அவ்விரு புத்தங்களையும் வாசிக்க வேண்டும். மீனாவுக்கு மிகுந்த நன்றி! -தாஜ்

*

மீனாவின் கட்டுரை எழுத்திலிருந்து சில குறிப்புகள்:

இந்த ஆண்டு புத்தகச் சந்தையில் வாங்கிய நூல்களுள் இரண்டு முக்கியமான நூல்களை வாசித்தேன். ஒன்று, நந்திதா ஹக்சரின் 'தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத்துயரமும்' (விடியல் பதிப்பகம்). மற்றொன்று, மஹ்மூத் மம்தானியின் 'நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்' (முரண் பதிப்பகம்). இரண்டுமே மொழிபெயப்பு நூல்கள். முதல் நூலை அருள்குமரனும் இரண்டாவது நூலை அ.குமரேசனும் மொழியாக்கி இருக்கிறார்கள்.
*
நந்திதா ஹக்சர்: ஜவகர்லால் நேருவின் அந்தரங்கச் செயலாளராகவும் வெளியுறவுத்துறையில் முக்கிய பொறுப்புகள் வகித்தவராகவும் இருந்த பி.என்.ஹக்சரின் மகள். பிறப்பால் காஷ்மீர் பண்டிட் (பிராமணர் ) என்பதை நமது சனாதனத் தமிழ்ச்சூழலில் அழுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது.

*
மஹ்மூத் மம்தானி: கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிற மஹ்மூத் மம்தானி, ஆப்ரிக்கா மற்றும் சர்வதேச அரசியல், காலனிய, பின் காலனிய ஆய்வுகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். 'சலாம் பாம்பே' முதலிய புகழ்பெற்ற படங்களை எடுத்தவரும் இந்த ஆண்டு பத்மபூஷண் விருதுபெற்றவருமான மீரா நாயரின் கணவர். எட்வர்ட் சேதிக்குப் பிறகு இத்துறையில் முக்கியமாகப் பேசப்படக்கூடிய இவர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உருது, இந்தி, மலையாளம் முதலான மொழிகளில் இந்நூல் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
*
நந்திதா ஹக்சரின் 'தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத்துயரமும்':

பிரதமர் மன்மோகன்சிங், சட்ட அறிஞர் உபந்திர பக்ஷி, வரலாற்றறிஞர் பிபன் சந்திரா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எழுதப்பட்ட திறந்த மடல்களையும் ஒரு நீதிக்கதையையும் உள்ளடக்கி இருக்கிறது நந்திதா ஹக்சரின் தொகுப்பு. டிசம்பர்13,-2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் இந்தியக் காவல்துறையும் நீதித்துறையும் இணைந்து நடத்திய கட்டப்பஞ்சாயத்தின் வன்முறைகளை இத்தொகுப்பில் அம்பலப்படுத்துவதன்வழியே இந்திய தேசியத்தின் முகத்திரையைக் கிழித்துக்காட்டுகிறார் நந்திதா!
*
டிசம்பர்-13/2001 ஆம் நாள் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தாக்குதலில் 8 பாதுகாப்புப் படையினரும் ஒரு தோட்டப்பணியாளரும் தாக்குதலில் ஈடுப்பட்ட 5பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளெனக் 'கண்டுப்பிடிக்கப்பட்டு' தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவர் : டில்லிப் பல்கலைக்கழக பேராசிரியர் அப்துல் ரகுமான் கிலானி மற்றும் அப்சல் குரு. நந்திதா, கிலானியின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கர்களுள் ஒருவர்.
*
குற்றமற்றவர் என்பது நிறுவப்பட்டு  உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றத்தாலும் கிலானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் கிலானியின் கைது, விசாரணை என்கிற பெயரில் காவல்துறை செய்த சித்திரவதைகள், மனித உரிமை மீறல்கள், மதவாத வன்முறைகள், நீதிமன்றங்களின் பக்கச்சார்புகள், ஊடகங்களின் கள்ள மெளனம், அப்சல் குருவிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் என அத்தனையும் தொகுத்தளிப்பதின் மூலம் இந்திய தேசியத்தின் பெயரால் மேலெழுந்துள்ள பாசிச மதவாதப்போக்கை இத்தொகுப்பு ஆவணப்படுத்தியிருக்கிறது.
*
இந்த ஆவணங்களைத் தொகுத்தளிப்பதன்வழியாக நந்திதா நம்முன் இந்தக் கேள்விகளை எழுப்புகிறார்: இந்திய அரசு, காவல்துறை, நீதிமன்றம் மட்டுமின்றி இந்தியாவின் பெரும்பான்மை மக்களும்கூட கிலானிக்கும், அப்சல் குருவுக்கும் எதிராக நின்றது எப்படி? விசாரணைக்கு முன்பே கைது செய்யப்பட்ட மறுகணமே கிலானியையும் அப்சல் குருவையும் குற்றவாளிகளாக்கி ஊடகங்கள் மக்கள் முன் நிறுத்தியது எவ்வாறு? சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாத போதும் கிலானியும் அப்சல் குருவும் இன்றளவும் தீவிரவாதிகளாகப் பார்க்கப்படுவது எதனால்? குற்றம் சுமட்டப்பட்டவருக்கு தனது தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கு வாய்ப்பே அளிக்காமல் உச்சபட்சமான மரணதண்டனையை அளித்திருக்கும் அநீதிக்கு எதிராக குரலுயர்த்த பலருக்கும் மனமும் துணிவும் வராமற் போனது ஏன்?
*
இந்த எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதிலில் விடை அளிக்கவேண்டுமானால் கிலானியின் கைது குறித்து நந்திதா சொல்லியதைத்தான் கூறவேண்டும்: "கிலானி குற்றவாளி என அனைவரும் நம்பினர். ஏனெனில், அவர் ஒரு காஷ்மீர் இஸ்லாமியர். தாடி வளர்த்துள்ளார். அரபுமொழி கற்பித்தார். அவரைக் குற்றவாளியாக்க இவை போதாதா? பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை அளித்தது என்பது வியப்புக்குரியது அல்ல.

*

மஹ்மூத் மம்தானியின் 'நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்':

மாலேகான் குண்டுவெடிப்பு, குஜராத் இனப்படுகொலை, நார்வே தாக்குதல் என எந்த ஒரு வன்முறைத் தாக்குதலும் இந்துத்துவ, கிறிஸ்துவ பயங்கரவாதங்களாகப் பார்க்கப்படாதபோது 9/11 ஐ ஒட்டி இஸ்லாம் மட்டும் பயங்கரவாத மதமாக சித்தரிக்கப்படுவது எப்படி? ஒட்டுமொத்த இஸ்லாம் சமூகத்திற்கும் பயங்கரவாதத்திற்குமான முடிச்சு இறுக்கிக் கட்டப்பட்டது எப்போது? பயங்கரவாத வன்முறை உலக அளவில் மலிந்துபோயிருக்கும் சூழலில் நாம் விடை தேடவேண்டிய இந்தக் கேள்விகளுக்கு பனிப்போர், அமெரிக்கா கூலிப்படை, பயங்கரவாதம் இஸ்லாம் என்பதான விரிந்த தளங்களில் வைத்து பதிலளிக்கிறது, மஹ்மூத் மம்தானியின் 'நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்.'
*
உலகம் முழுவதும் மொசாம்பிக் நாட்டின் ரெனாமோ முதல் அங்கோலாவின் யூனிட்டா வரையில், நிகரகுவாவின் காண்ட்ராஸ் முதல் ஆப்கானிஸ்தானின் முஜாஹிதீன் வரையில் பயங்கரவாத சார்பு இயக்கங்களுக்கும் அமெரிக்கா தோள்கொடுத்தது. சுருக்கமாகச் சொல்வதானால் பல்வேறு நாடுகளில் ஆட்சிக்கு வந்திருந்த கொரில்லா போராட்டக் குழுவினரையும் சோவியத் ஆதரவாளர்கள் என்று கருதிய அரசுகளையும் ஒழித்துக்கட்டுவதில் பயங்கரவாதிகளைப் பயன்படுத்திக்கொள்ள அமெரிக்கா முடிவெடுத்தது; இதற்கெனவே பயங்கரவாதிகளைத் தட்டிக்கொடுத்து வளர்த்தது.
*
நிகரகுவாவின் மிகப்பெரும் பயங்கரவாத வன்முறை அமைப்பாக உருவாகியிருந்த 'கான்ட்ராவினருக்கு' அதிபர் ரீகன், 'விடுதலைப் போராளிகள்' என்று பட்டமளித்தார். இவர்கள் நம் நாட்டை நிறுவிய முன்னோர்களுக்கு இணையானவர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
*
பிற்காலத்தில், வெள்ளை மாளிகையின் புல்வெளித்திடலில் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன் தலைவர்களை ஊடகச் செய்தியாளர்களுக்கு தடபுடலாக அறிமுகப்படுத்திய ரீகன், 'இந்த மேன்மையானவர்கள் நெறிமுறைகளைப் பொறுத்தவரை அமெரிக்காவை உருவாக்கிய முன்னோர்களுக்குச் சமமானவர்கள்' என்று உச்சிமுகர்ந்தார்.
*
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக ஆயுதம்தாங்கிய போராட்டம் எதையும் காணாதிருந்த உலகளாவிய இஸ்லாமியக் குழுக்களை ஒரு பயங்கரவாத யுத்தத்திற்கு தயார்படுத்திய அமெரிக்கா வெறும் பயிற்சியை மட்டும் அளிக்கவில்லை. பயங்கரவாதத்தை தனியார்மயமாக்கி ஒரு பயங்கரவாதப் போர்ப்படையையே உருவாக்கி இருந்தது. உலக அளவில் சிதறி இருந்த இஸ்லாமிய தீவிரக்குழுக்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்ததும் இந்தப் பயிற்சி முகாமில்தான்.
*
அமெரிக்கா, சோவியத்தை மட்டுமல்ல தன்னெழுச்சியாகப் போராடிய அத்தனை தேசியவாத அரசுகளையும் அழித்தொழித்தது. அமெரிக்க நாட்டாமையின் கட்டளையை மீறுகிற எந்த ஒரு ஆட்சியும் எத்தகைய விலையைக் கொடுக்கவேண்டி இருக்கும் என்பதற்கு சதாம் உசேன் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார் மஹ்மூத். ஒசாமா பின்லேடனை உருவாக்கிக் களமிறக்கிய வல்லரசு, அவரை உயிருடன் பிடித்துக் கொன்று உடலைக் கடலில் வீசியெறிந்ததிலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

***
நன்றி: நந்திதா ஹக்சரின் 'தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத்துயரமும்':
நன்றி: மஹ்மூத் மம்தானியின் 'நல்ல முஸ்லிம் கெட்ட முஸ்லிம்':
நன்றி: விடியல் பதிப்பகம்/ முரண் பதிப்பகம்
நன்றி: மீனா
நன்றி: குமுதம் தீராநதி, மார்ச்-2012
எழுத்து, வடிவம், தட்டச்சு: தாஜ் (satajdeen@gmail.com )
5:45 PM 20/03/2012

***
பின் குறிப்பு:
குமுதம் தீராநதியில், மீனா அவர்கள் எழுதிய கட்டுரையின்
முழுவடிவம் காணுங்கள்.
நன்றி.
-தாஜ்

***









***
நன்றி : மீனா, தீராநதி, தாஜ்


Tuesday, March 20, 2012

தலமுறை நிழல்கள் - இளைய அப்துல்லா

ஜஸ்கிரீமை ’குளிர்க்கழி’ என்று அழைத்தால் குளிர்ந்துபோகும் எழுத்தாளர் இளைய அப்துல்லா,  புலம்பெயர்  வாழ்வு பற்றி என்னைப்போலவே புலம்புவார்; பெயர மாட்டார். ஆனந்த விகடனில் வெளியான அவருடைய புதிய சிறுகதையைப் பதிவிடுகிறேன் - முதிய வாசகர்களுக்காக. லண்டன் போகாமலும் லாகின் செய்யாமலும் பார்க்கலாம். அதற்கு முன்பு , நண்பர் டி.சே. தமிழனின் ’புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்…’  பதிவைப் படித்துவிடுங்கள். நன்றி.

***


தலமுறை நிழல்கள் - இளைய அப்துல்லா


லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது.  ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப் பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. 'மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்கக் கூடாதோ’ என்று நினைத்துக்கொண்டார். லண்டனின் தட்பவெப்பம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. காற்று அதிகமாக அடித்தால் தொண்டைக் கரகரப் பும்; மழை பெய்தால் தும்மலும்; குளிர் வந்தால் இழுப்பும்; வெயில் வந்தால் தலைவலியும் வந்துவிடு கிறது. மார்கழி மாதம்தான் ராமநாதன் லண்டனுக்கு வந்து இறங்கினார். வந்த கையோடு அவருக்கு வந்த முதல் பிரச்னை... இரண்டு கைகளிலும் தோல் உரிய ஆரம்பித்தது. பின்னர், உடம்பு எங்கும் பொரி பொரியாகத் தோல் உதிர்ந்தது. அவர் பயந்துவிட்டார். 'அது இங்கை வாற எல்லாருக்கும் வருகிற நோய்தான்’ என்று மகன் அலட்சியப்படுத்தினான். இலங்கைத் தமிழர்களுக்கு லண்டன் இரண்டாவது தேசம்போல் ஆகிவிட்டது. ஆனால், எல்லாமே அந்நியமாகவே அவர் உணர்ந்தார். மகன் லண்டனுக்கு அவரைக் கூப்பிடப்போறன்...














***
மேலும்... :


Saturday, March 10, 2012

என்டெ ரப்பே! (நான் புலி நினைவுகள் - 03 ) - எஸ்.எல்.எம்.ஹனிபா

நான் , புலி , நினைவுகள் 1

நான் , புலி , நினைவுகள் 2

***

நான் புலி நினைவுகள் - 03

எஸ்.எல்.எம்.ஹனிபா

என்டெ ரப்பே!

புலிகளின் மாக்குப்பை முகாமில் இறக்கியெடுத்த முக்கியஸ்தர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா டேனியல் ஜெயரட்ண ராஜா அவர்களும் இருந்தார்கள். நடராஜா சைவத் தமிழர். காதலுக்காக கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி, மட்டக்களப்பு கிரான் கிராமத்தில் வந்தேறு குடியாக வாழ்ந்து வந்தார். கிரான் விடுதலைப் புலிகளின் தானைத்தளபதி கருணா அம்மானின் ஜென்ம பூமி.

டேனியல் எமது பகுதியில் Forest Officer (வட்டவன அதிகாரி) பெரும்பாலும் முஸ்லிம் கிராமங்களிலேயே இவரின் நடமாட்டம் அதிகம் காணப்படும். காரணம், எமது கிராமங்களின் தீனோர்கள் மரங்கடத்தும் பாரிய புண்ணிய கைங்கரியத்தில் பெயர்பெற்றவர்கள்.

என்னை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்த புலிகள், அவரை வேறிடத்திற்குக் கொண்டு செல்ல ஆயத்தமானார்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள், எனது நண்பர் யூனுஸ் போடியார் அவர்கள், திருகோணமடு கிராமத்திலிருந்து என்னைக் காண வந்தார்கள். {திருகோணமடு விடுதலைப் புலிகளை முடிவுக்குக் கொண்டு வந்த மாவிலாறு கிராமத்தின் மறுகரையில் அமைந்த அழகிய முஸ்லிம் கிராமம்}

அன்றிரவு நாங்களிருவரும் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு படுக்கைக்குப் போகும் நேரம், யூனுஸ் போடியார் "மச்சான் அனிபா! உங்களோட கடத்தப்பட்ட டேனியல் ஐயாவ எங்கட ஊர்லாண்டா மச்சான் புலிகள் போட்டுத் தள்ளினாங்க. நம்மட பாடசால மைதானத்தில அவர் கையாலயே குழிய வெட்டி, மைதானத்தச் சுற்றி வர நம்மட சனங்களையெல்லாம் பார்வையாளர்களா நிறுத்தி, குழிக்கருகில் அவரக் கொண்டு வந்து, ஒரு பதினைஞ்சு வயசுப் பொடியன் அவர்ர புடரில பலங்கொண்ட மட்டும் மண் வெட்டிப் புடியால ஒரே அடிடா மச்சான். குற உசிரா குழியில உழுந்தவர அப்படியே மண்ணப் போட்டு மூடி... சனங்களெல்லாம் கத்திக் கதறி வீடு வாசலுக்கு ஓடிட்டுதுகள். அன்றிரவு ஏராளம் சிறுவர்களும் படுக்கைய நனெச்சிப் போட்டுதுகள்....

"மச்சான்! மெய்தான், அவர் செஞ்ச குத்தம் என்ன உங்களுக்குத் தெரியாதா?"
"அது, அவர்ர புள்ளெகள்ள ஒண்டு இந்திய இராணுவத்தோட கொஞ்சம் உறவாம்" நான் கதையை முடிவுக்கு கொண்டு வர, யூனுஸ் போடியார்,

"என்டெ ரப்பே! அதென்ன அநியாயம்டா மச்சான்"

(தொடரும்)

***

நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com )

Thursday, March 8, 2012

அல்லாஹ்வே... இது உன் பாட்டு!

அல்லாஹ்வின் (அந்த ‘ஹ்’ ரொம்ப முக்கியம்) பாடல் அல்ல; அல்லாஹ்வைப் பற்றிய பாரதியின் பாடல் -   நித்யஸ்ரீயின் இனிய குரலில். ’ஏகம்’ என்று இசை ஆல்பம் வந்திருக்கிறதாம். அதிலிருந்த ஒரு பாடலை அசனாமீர் (மரைக்காரை ’மீர்’ என்று சுருக்கி எழுதுவது மரபு)அனுப்பியிருக்கிறார். ஏதோ அவரால் முடிந்த இஸ்லாமிய ‘தாவா’. நன்றி. கேட்க நல்லாத்தான் இருக்கு அசனா, ஆனா மிருதங்கத்திற்கு பதிலாக கார்த்திக் ’தப்ஸ்’ அடித்திருந்தால் அல்லாஹூத்தஆலா இன்னும் சந்தோஷமடைந்திருப்பான்.

குறிப்பு: அல்லாஹ்வின் பாட்டாக இருப்பதால்  ’ஹராம்’ அல்ல இசை என்று அன்பர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ்...! :


Monday, March 5, 2012

உமா மகேஸ்வரி: கவிதைப் பெண் - க.நா.சு.தாஜ்

'பனிப்புல் பாதை வழியே நடக்கும் இதம்' என்கிறார், உமா மகேஸ்வரியின் கவிதைகளை. இலங்கை எழுத்தாளர் ஹனீபாக்காவின் செல்லம் அனார் போல சீர்காழி கவிஞரின் செல்லம் இந்த உமா மகேஸ்வரி. எழுத எழுத அலுக்க மாட்டேன் என்கிறது தாஜுக்கு. ‘"எழுத்தின் மூலம் உலகைத் திருத்தும் உத்தேசமோ, நீதி புகட்டும் லட்சியமோ எனக்கில்லை’ என்று சொல்லும் உமாவை எனக்கும் ரொம்பவே பிடிக்கும். இந்த கட்டுரைக்காக அனுப்பிய தாஜின் புகைப்படம்தான் பிடிக்கவில்லை. என்னய்யா இப்படி என்று கேட்டால் அதைவிட பயங்கரமான ஃபோட்டோலாம் நம்மள்ட்ட இருக்குய்யா என்கிறார்! - ஆபிதீன்


***


உமா மகேஸ்வரி: கவிதைப் பெண்
- க.நா.சு.தாஜ்


கவிஞர் உமா மஹேஸ்வரியையும் சேர்த்து
தமிழில்
பெண் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்!
நம் புருவங்களை நெளியவைக்குமான அதிகம்!
நம் பெண்களிடம்
இந்த அளப்பரிய
புலமைப் பெருக்கத்திற்கு
என்ன காரணமாக இருக்க முடியும்?
தெரியவில்லை.
அறிவுசார்ந்த செழிப்பில்
நம் பெண்கள்
இன்றைக்கு கல்வித்துறை தொட்டு
அநேக துறைகளில் வெற்றி கொள்வதென்பது
சாதாரணமாகிவிட்டது.
இதைச் சுட்டி
காரணம் அதுவாகவே இருக்கும்
என்கிறார்கள் நண்பர்கள்.
அப்படி இருக்குமோ?
இருக்கலாம்.
தெரியவில்லை.
ஓர் ஆய்வில்
நம் பெண்கவிஞர்கள்
அத்தனை பேர்களுமே மஹா கெட்டி!
சோடை என்பதும் கிடையாது.
இருக்குமென்றால்...
அது ரொம்பக் கம்மி.
இல்லை,
இன்னும் கூடுதலாக இருக்குமென்றால்...
அந்தக் கூடுதல்
நேற்று பெய்த மழையில்
இன்றைக்கு கவிஞர்களானவர்கள்!
வசனங்களையும்
சாதாரண உணர்ச்சி வெளிப்பாடுகளையும்
கவிதையென்று நம்பி
முதல் தளமேறி,
அங்கே குதித்துக் கொண்டிருப்பார்கள்.
அவர்களது பெருக்கத்தை
கணக்கில் எடுத்தும்தான் என்ன செய்ய?
ஆய்வினூடே...
கண்களை இன்னும் இடுக்கி
வேறு கோணத்தில் அலச,
நம் பெண்கவிஞர்கள் பலரிடம்
தங்களுக்கென்று சொல்லத் தகுந்த
தனித்துவமிக்க செய்திகளும்
புரட்சிகரக் கருத்துக்களும்
உலகலாவிய கோட்பாட்டு நெறிகளும்
அவரவர்களின் ஈர்ப்புகளுக்கேற்ப
அவைகளில் ஏதேனும் ஒன்று 
அவர்களின் நிழலாகத் தொடர்கிறது.
அதுவின்றி அவர்களால்...
அவர்கள் கருதும்
'சிறந்த' கவிதைகளை எழுத இயலாது.
இங்கே குறிப்பிடத் தகுந்த சோகமே அதுதான்.
அவர்களது பார்வையில்
பெரும்பாலும்
சிறந்த கவிதையென்பது
'புரட்சி' சார்ந்ததாக இருக்கும்.
அந்தப் புரட்சி சார்ந்த கவிதைகள்
பல நேரம் மிகைத் தொனியோடு
அறுதியிட்டு உரக்க முழங்கும்.
அதிர்வலைகளை
கட்டாயம் அது எழுப்பும்.
அதனால் கிட்டும் புகழ்
சம்பந்தப்பட்ட கவிஞர்களின் தேவை.
தங்களது கவிதை வெற்றியை
வாசிப்பனின் ஆழ்ந்த ரசனையில்
கொண்டுசேர்ப்பதை விட்டும்
துணுக்குறும் அவனது வியப்பில்
நிறைவுகொண்டு விடுவார்கள்.
இந்த அதிர்வலைகளால்...
அவர்களது கவிதைகளின்
அலகுகள் தேய்மானம் கொண்டு
விசேஷ மென்மைகளும் சிதைய
கருவிலேயே அது ஊனமாக உருக்கொள்கிறது.
அப்படியே..., பிறக்கவும் பிறக்கிறது.
ஊனத்தை வாசிக்கும் வாசகன்
இடிந்து போகிறான்.
கவிதைகளை நேசித்து 
கொள்ளும் சந்தோஷத்திற்குப் பதிலாக
மிரட்சியும் கழிவிரக்கமும் கொள்கிறான்.
கவிதை என்பது பெண்ணையொத்த
நளினங்கள் கொண்டது.
அதன் இடைவளைவுகள்
இதமான மென்மைகள்
பெண்ணைக் காட்டிலும் அதிகம்!
பெண்ணின் மனதை
புரிந்து கொள்ள இயலாதது மாதிரியே
ஒரு கவிதையின்
அடி ஆழத்தையும் அத்தனைச் சீக்கிரம்
தேர்ந்த வாசகனாலும்
கண்டடைந்துவிட முடியாது.
அத்தகையதோர் நளினத்திற்கு...
மீசையெல்லாம் வரைவதென்றால் எப்படி....?
கஷ்டம்.
கவிதைகளால்...
உலகை மாற்றிவிட முடியுமென்று
யாரோ இவர்களுக்கு
தவறுதலாக உபதேசம் செய்திருக்கிறார்கள்.
அதைப் பிடித்துக்கொண்டு,
ஆதி தொட்டு
ஆளுமை கொண்ட ஆண் வர்க்கத்தை
உருட்டிப் புரட்டிவிடும் நெம்புகோலாக
கவிதையை
இவர்கள் நம்பத் தொடங்கிவிட்டதும்தான்
எத்தனை பேதமை!
'யுட்டோபியன்' உலகை நம்பும்
பக்தர்களைக் காட்டிலும்
பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.
ஆண் ஆதிக்கத்தை
அந்த க்ஷணமே
ஒழித்துக்கட்டவென்று
கவிதையெழுதக் கிளம்பிய
பெண் கவிஞர்கள் நம்மில் அதிகம்.
இவர்களது கவிதைகள்
அதிகம் பேசும்
புரட்சியின் மையமும் அதுதான்.
ஆண் ஆதிக்க எதிர்ப்புதான்
இவர்களின் கவிதைகளது தலையாயத் தலை.
இதனாலேயோ என்னவோ
இவர்களது கவிதைகள்
எப்பவுமே எக்குத் தப்பாக திருகிக் கொள்கிறது.
அவர்கள் கைக்கொள்ளும் கவிதை யுக்திகளும்
தேர்வு செய்து புழங்கும்
விஷேச கவிதை மொழிகளும்
வாசிப்பவனிடம்
ஒரு நிமிஷ உணர்வலைகளை எழுப்புவதைத் தாண்டி
ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறது.
விடியலுக்கு முன்னே
உதிர்ந்துவிடும் மலர்கள் மாதிரி.
இன்னொரு பக்கம்...
வாழ்ந்துப் பெற்ற அனுபவங்களை
கவிதையெனும் அச்சில்
வாசனை மாறாமல் வார்த்தெடுக்கும்
அசல் கவிதைத் திறனை
அவர்கள் கைநழுவ விடுவதாகவும் முடிகிறது.
கடைசியில்
அவர்கள் தேட முனையும்
நிலையான கவிதை வெற்றி...
மின்னலாகிவிடுகிறது.
காட்டில் நிலா...
கடலில் மழை...
அவர்களது கவிதை உழைப்பு
இப்படி, அர்த்தமிழப்பதும்தான் எத்தனைச் சோகம்.
*
நம் பெண் கவிஞர்கள்
தங்களது கவிதைகளால்...
உலகை மாற்றுவது கிடக்கட்டும்,
ஆண் ஆதிக்கத்தின் சுண்டு விரலையும்
அதனால் அசைக்க முடியுமாயென்ன?
யோசித்தார்களா?
சின்னதான இந்த யதார்த்தத்தை
சம்மந்தப்பட்ட நம் பெண் கவிஞர்கள்
இன்னமும்கூட
புரிந்துணர்ந்ததாக தெரியவில்லை.
புரட்சியைச் சுமக்கும்
அவர்களது கவிதைகள்
நேற்று மாதிரியே இன்றைக்கும்
அர்த்தமற்று
எட்டுத் திக்கும் வேகமெடுத்து விரைகிறது!
ஆனால்,
நம் பெண்கவிஞர்கள் தங்களது கவிதைகளில்
தலையாய் முன்வைக்கும்
அவர்களது மனத்துயரம் சரியானது.
எதிரிகளை எதிர்கொள்ள
அவர்கள் கைக்கொள்ளும் ஆயுதம்தான்...
இங்கே கேள்விக்குறி.
மலரெல்லாமா...ஓர் ஆயுதம்?
ஆயுதத்திற்கென்று
ஓர் கனம் வேணாமா?
நம் பெண்கவிஞர்கள்
எதிர் நிறுத்தும் ஆண்ணாதிக்க வர்க்கம்
வக்கிரத்திற்கு பேர் போனது.
சரியாக சொன்னால்..
புராணம் பேசும் அரக்கக் கூட்டத்தின்
ஒன்றுவிட்ட சகோதரர்கள்.
பெண்களை இவர்கள்
வஞ்சித்துக் கொண்டு இருப்பது மாதிரி
உலகில் தலையெடுத்த
எந்தவொரு சர்வாதிகாரியும்
இப்படி அரக்கம் புரிந்திருக்க மாட்டான்.

ஆண் ஆதிக்கத்தை காலம் காலமாக நிறுவும்
அவர்களது சாணக்கியம் கீர்த்திகள் கொண்டது.
வெற்றிகளை அவர்களது காலடியில்
கொண்டுவந்து குவிக்கவல்லது.
ஆண்டாண்டு காலமாய்
பெண்களை கீழே போட்டு மிதித்து
சுகம் கண்டுகொண்டிருக்கும்
இத் துஷ்டர்களை
வெறும் கவிதைகளால்...
என்ன செய்துவிட முடியும்?
பெண்ணினத்தை அடிமைப்படுத்த
அந்த அரக்கர்கள் கைகொள்ளும்
விசேச தந்திரங்களுக்கு அளவே இல்லை.
அவர்கள் முன்வந்து பெண்களிடம் காட்டும்
அன்பும்/ காதலும் கூட
இன்னொரு இறுக்கும் கயிறுதான்.
கொஞ்சம் அசந்தால்...
விந்தாலேயேயும் கூட
கட்டிப் போட்டுவிவார்கள்.
தொடர்ந்து..
நீங்கள் தலைசாய்த்து
மௌனித்துவிட்டால் போதும்
உங்களுக்கு குலவிளக்கெனும் பட்டமும்
பத்தினி என்கிற பவிசும் நிச்சயம்.
பின்னென்ன...?
போகம் தீர்க்கும் தோல் கருவியாகி
காலத்திற்கும் சாசனப்பட்டு விடுவீர்கள்.

பெண்ணினத்தின்
முதலும் முடிவுமான அச் சத்ருக்களை
இனியேணும்
கவிதையால் மாற்றிவிடலாமென
நினைப்பதைவிட்டும்
பெண் கவிஞர்கள்
தீர யோசிக்க வேண்டும்.
மாற்று வழி காண வேண்டும்.
காண்பவர்கள் மலைத்து மிரளும்படிக்கு
மக்கள் இயக்கத்தை
பெரிய அளவில் திரட்டிப் போராட வேண்டும்.
பெண்களை அடிமைப்படுத்த
அழிந்தொழியாது
காலத்திற்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும்
அந்தப் பழைய பஞ்சாங்கங்களையும்
உயர்ந்த நெறிகள் என்கிற போர்வையில்
பெண்களைக் கட்டிப்போடும்
ஆதி கிரந்தங்களையும்
ஒன்றை விடாது
முச்சந்தி தோறும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.
துணிவில்லாவிட்டால்...
பாவம், ஆகாது என்றால்...
சரியான தருணத்தில் நீங்கள்
திரும்பியேனும் படுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் கேட்க மாட்டீர்கள்.
நிஜத்தில் அது முடியாது உங்களால்.
மாறாய்...,
என் முகம் பார்த்து அர்த்தமாய் கோபிப்பீர்கள்.
உங்களுக்குத் தெரியுமா..?
நீங்கள் திரும்பத் திரும்ப விழும் இடமே அதுதான்.
*
ஆணாதிக்கத்தை
ரொம்பவும் நோண்டாத
சில பெண் கவிஞர்கள்
நாற்காலி அரசியல்/
முற்போக்கு அரசியல்/
இடதுசாரி அரசியல்/
தலித் முன்னேற்ற அரசியலென
விதவிதமான கோணத்தில்
தாங்கள் கொண்டிருக்கும் சித்தாந்தங்கள்
எதிரொலிக்கக் கவிதைகள் புனைகிறார்கள்.
பல பெண்கவிஞர்களுக்கு
காதல் கிளுகிளுப்புகள்
அவர்களின் சித்தாந்தங்களில் ஒன்றாக இருக்கிறது.
வாழ்ந்துபெற்ற அனுபவத்தை
அழகு மாறாமல்
கவிதையாகக் காண்பதை விட்டும்
உணர்வுகளின் உந்தலுக்கே
இப்படி முக்கியத்துவம் தந்துகொண்டு இருக்கிறார்கள்!
இங்கே...
இதனை வாசிக்கும் வாசகர்களும்
கவிதை வழியே புரட்சியைப் பரப்பும்
சம்மந்தப்பட்ட பெண் கவிஞர்களும்
என்னிடம் கேள்வி ஏதேனும் எழுப்பக் கூடும்.
அப்படி எழுப்புவார்களேயானால்...
இவ்விரண்டு கேள்விகளை கட்டாயம் எழுப்புவார்கள்.
1. புரட்சி ரகக் கவிதைகள் எழுதுவது தப்பா? 
2. கவிஞர்குலத் திலகமாம் பாரதி
   இப்படி புரட்சிக் கவிதைகளையும்
   உணர்ச்சிக் கவிதைகளையும் எழுதவில்லையா?
சரியான கேள்வி.
பதில் சொல்லலாம்.
புரட்சி ரகக் கவிதைகளை எழுதுவது தப்பல்ல.
கவிதையில் புரட்சி துருத்திக் கொண்டும்,
கூச்சலிடாமலும் இருந்தால்....
அது வரவேற்கத் தக்கதே.
ஆனால்..
கவிதை முகம் சிதையாமல்
புரட்சி பாடும் செய்திகளோடு
கவிதைக் காண்பதென்பது பொதுவில் கடினம்.

நான் பெண்:
-----------------
ஒரு காட்டாறு
ஒரு பேரருவி
ஓர் ஆழக் கடல்
ஓர் அடை மழை
நீர் நான்
கரும் பாறை மலை
பசும் வயல் வெளி
ஒரு விதை
ஒரு காடு
நிலம் நான்
உடல் காலம்
உள்ளம் காற்று
கண்கள் நெருப்பு
நானே ஆகாயம்
நானே அண்டம்
எனக்கென்ன எல்லைகள்
நான் இயற்கை
நான் பெண்.
    ---
- கிழக்கிலங்கை/ சாய்ந்தமருது
கவிஞர். அனார் அவர்களின் கவிதை இது!
என் கவிதை வாசிப்பில்
இத்தனை வளமாய்/ அழகாய்
பெண்ணுரிமை பேசுகிற இன்னொருக் கவிதையை
வாசித்தது இல்லை.
கவிதையின் அலகுகள் சிதையாமல்
கவிதைக்குள் புரட்சியை பாடியிருக்கிறார்.
மறுக்க முடியாத...
மறக்க முடியாத கவிதை இது.
என்றாலும்...,
இக்கட்டுரையில் நான்
அழுந்த சுட்டிக்காட்டுவதெல்லாம்
பெண்ணுரிமை பேச
கவிதை ஏற்றத் தளமல்ல என்பதுதான்.
ஊன்றி நோக்குங்கால்...
காது கொடுத்து கேட்கும் சமூகத்தில் மட்டுமே
புரட்சிக் கவிதைகள் செல்லுபடியாகும்.
சரியாகவும் வினை பயக்கும்.
இந்தியச் சுதந்திரத்தை முழங்கிய
பாரதியின் கவிதைகளை
காதில் வாங்கிக் கொள்ள
சுதந்திர தாகமெடுத்த மக்கள்
அன்றைக்கு காத்துக்கிடந்தார்கள்.
அங்கேதான்...
அச் சமூகத்தில்தான்...
பாரதி ஜெயித்தான்.
கவனியுங்கள்
அதே பாரதி...
பெண் விடுதலையையும் பாடினான்.
'மாதர்களை ஏய்க்கும்
மடமைகளை கொளுத்துவோம்' என்றான்.
சமூகம் காது கொடுத்துக் கேட்கவில்லை.
இங்கே, பாரதி தோற்றான்.
இன்றைக்கும் கூட 
பாரதியின் இக்கருத்துக்கு அதே நிலைதான்!
அதன் தோல்வி தொடர்கிறது.
மடமைகள் கொளுத்தப்படவில்லை.
மீண்டும் கவனியுங்கள்...
பாரதியையொட்டிய பின்குறிப்பாக
இங்கே,
ஒரு சின்ன திருத்தம்.
சுதந்திரத் தாகமெடுத்த
பாரதியின் கவிதைகளை
கவிதைகள் என்பதைக் காட்டிலும்
பாடல் வடிவம் அவைகளென்றும்
ராகமிட்டு இசைக்க லகுவான
வடிவம் அதுயென்றும்
புரிந்து நாம் தெளிவுறுதல் நலம்.
அப்போ, பாடலில் புரட்சி பரவாயில்லையா?
பரவாயில்லை.
புரட்சிப் பாட ஏற்ற வடிவமே அதுதான்.
பாரதி மட்டுமல்ல...
பாரதிதாசன்/ கண்ணதாசன்/ பட்டுக்கோட்டை என்று
பலரும் பெயர் கொண்ட வடிவம் கூட
பாடல்கள்தான்.
இன்றைக்கு...
நம் பெண்கவிஞர்கள்
ஆண்களை துணுக்குற வைக்கும்
வார்த்தையாடல்களுடன்
பெண்விடுதலைக் கவிதைகளை
எழுதி கொண்டு இருக்க...
பெண்களுக்கு வழங்கப்படுவதாக உறுதி சொன்ன
33 சதவீத உரிமை
இன்னும் வழங்கப்படாமலேயே
பாராளுமன்றம் ஏமாற்றித் திரிகிறது.

இது குறித்து நினைவுறுத்தல் செய்ய
சமூகத்திற்கோ...
மீடியாக்களுக்கோ...
இந்த நிமிஷம்வரை சுரணையில்லை.
யதார்த்தம் இங்ஙணம் இருக்க
நம் பெண் கவிஞர்கள்
புரட்சிகர கவிதைகளுக்குள் நுழைந்து
விடாப்பிடியாக
என்ன கத்தி.. என்ன செய்ய?
யோசிக்கணும்.
பாராளுமன்றத்தை துரத்துவதென்பது
நம் கவிஞர்களுக்கு
கொஞ்சம் தூரச் சங்கதியாக இருக்கலாம்.
அதை விடுவோம்.
இந்தச் சோ...
அதான் நம்ம துக்ளக் சோ..
பெண்ணுரிமை பேசும் பெண்களையும்
பெண்ணுரிமைக் கருத்துக்களையும்
எத்தனைக் காலமாய்
எத்தனையெத்தனை விதமாய்
கேலியும் நக்கல்களும் செய்துகொண்டிருக்கிறார்.
தீரமாய் பெண்ணுரிமைப் பேசும்
நம் பெண் கவிஞர்களில் யாரேனும் ஒருவர் 
அவரை நிறுத்திவைத்து
கவிதையாலோ/ நேரிலோ
கேள்விகள் எழுப்பியதுண்டா?
சாதாரண சங்கதி இது.
உங்களால் முடிகிறதா என்ன?
முடியவில்லை.
முடியவும் முடியாது.
ஏன் முடியவில்லை என்பதின்
பின் அர்த்தங்கள் அத்தனையும் பலமானது.
இப்பவாவது...
புரட்சி பேசும் உங்களது கவிதைகளின்
வீச்சுக் குறித்தும்...
உங்களது செயல்பாடுகளின் யதார்த்தம் குறித்தும்
உங்களுக்குள் நீங்கள்
ஆக்கப்பூர்வமான கேள்விகளை எழுப்பி
விடைத்தேடிக் கொள்ளணும். 
என்
பதிலை இங்கே முடித்து கொள்கிறேன்.
போதும்.
*
இங்கேதான்...
நான் சொல்ல முன்வரும்
கவிஞர் உமா மஹேஸ்வரி
நம் பெண்கவிஞர்களிடமிருந்து
வித்தியாசப்படுகிறார்.
அவரது கவிதை அனுபவம்
1986-கால, கணையாழி தொட்டுத் தொடர்வது!
மூத்த பெண்கவிஞர்களின் வரிசையில்
இன்றைக்கும்
பெயர் சொல்லும்படி
சிறப்பதும் அவரே!
'கவிதைப் பெண்' எனும்
அடைமொழியோடு
அந்தக் கவிஞரை
நான் காண்கிறேன் என்றால்...
அதற்கான அர்த்தம் செய்யும்
நிறைகளுடன் கவிதைப் பரப்பில்
நின்று நிலைத்து விளங்குகிறவராக
இருக்கிறார் அவர்!
அவரது சில கவிதைகள்
பெண் உரிமைக்காக குரல் தந்திருந்தாலும்
அந்த ரகக் கவிதைகளின் மீது
தொடர்ந்து அவர் நாட்டம் கொண்டதில்லை.
வாழ்ந்து பெற்ற அனுபவத்தையே
இவரது கவிதைகள்
அதிகத்திற்கும் அதிகம் பேசுகின்றன.
கவிதைக்கே உரிய
எளிமையும் அழகும் கெடாமல்
அது படைப்பாக்கம் கொள்கின்றன.
வாசிக்கும் நமக்கோ
நிஜங்களின் நுட்ப தரிசனத்தோடு.
பனிப்புல் பாதை வழியே நடக்கும் இதமும்...!
1990-ல்
இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
பெயர்: 'நட்சத்திரங்களின் நடுவே'
அவரது சொந்த ஊரான
போடிநாயக்கனூர் குமரன் பிரிண்டர்ஸில்
அச்சிடப்பட்ட கையடக்கமான
அக் கவிதைத் தொகுப்பு
சினிமாப் பாட்டுப் புத்தக அளவிலானது.
அத்தொகுப்பில்...
கவிஞர் உமா மஹேஸ்வரி
தனது கவிதைகளை முன்வைத்து
இப்படி சொல்கிறார்:
"எழுத்தின் மூலம்
உலகைத் திருத்தும் உத்தேசமோ,
நீதி புகட்டும் லட்சியமோ எனக்கில்லை.
இவை கவிதைகள்தானா என்ற சந்தேகம்
எனக்கு இன்னும் உண்டு.
விடியல் கழுவி விட்ட பின்னும்
வானில் பிடிவாதமாய் மிச்சமிருக்குமே...
ஒற்றை நட்சத்திரம்,
அதுபோல்
என்னிலிருந்து பிரிந்த எண்ணத்துளியே
எழுத்தில் தெறிக்கிறது. அவ்வளவே."

இவ் வாக்குமூலத்தை ஒத்தே
இன்றளவும்
இவரது கவிதைகள்
வானத்தை
எல்லையென கொண்டு
விரிவதாகவே இருக்கிறது!
ஜூன் - 1989
கணையாழியில்
அமரர்.சுஜாதா அவர்கள்
கவிஞர் உமா மஹேஸ்வரியின்
கவிதை குறித்து
இப்படி சொல்லி இருக்கிறார்:
"என்னைப் பாதிக்கும் கவிதைகள்
பாசாங்கு இல்லாமல் இருக்கின்றன.
கவிதையின் அநுபவத்தோடு எனக்கு
ஒரு இசைவு ஏற்படுகிறது.
அந்த எண்ணம்
எனக்கும் தோன்றி இருக்கும்போதுதான்
எனக்கு கவிதை பிடிக்கிறது.
'கவிதை ரசனை என்பதே கண்ணாடியில்
பார்த்துக்கொள்வது போலத்தான்'
என்று படித்திருக்கிறேன்.
இந்த வகையில்
சென்ற இதழில் வெளியான
'மழையும் நானும்'
என்ற கவிதை(உமா மகேஸ்வரி)யில்
ஒரு வரியைத் தவிர
மற்ற எல்லா வரிகளுடனும்
என்னால் உடன் வாழ முடிந்தது."
சுஜாதா அன்று கணித்தபடியே
இன்றைக்கும்
உமா மஹேஸ்வரியின் கவிதைகள்
அதே சிலாகிப்புக்கு
உரியதாக இருக்கிறதென்பதுதான்
தனிச் சிறப்பு.
உயர்ந்த வானத்தின் தெளிந்த நீலம்
என்றைக்கும்...
மாறுவதுமில்லை உறுத்துவதுமில்லை!
பெரியவர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களை
நீங்கள் அறிவீர்கள்.
நுட்பம் சார்ந்த கலை இலக்கிய ஆய்வில்
அவருக்கு நிகர் அவர்தான்.
இந்தப் பெரியவருக்கு
கவிஞர் உமா மஹேஸ்வரியின் படைப்புகள் மீது
மிகுந்த நம்பிக்கை.
பல நேரங்களில் அதனை தடையற
வெளிப்படுத்தியும் இருக்கிறார்.
இப்போது
இன்னொருமுறையும் நடந்திருக்கிறது.
இரண்டாயிரம் வருடகால நீட்சியில்
பெண் கவிஞர்களின் பங்களிப்பை
'Tamil Women Poets: Sangam to the Present' என்று,
ஆங்கிலத்தில் ஆய்வு செய்துள்ளார்
கே.எஸ் சுப்பிரமணியன்.
அந்நூலுக்கு
பெரியவர் வெ.சா. அவர்கள்
விமர்சனம் செய்ய முனைய...
அக் கட்டுரைக்கு
'தமிழ் பெண் கவிஞர்கள்: ஆங்கிலத்தில் ஆதி மந்தியார் முதல்
உமா மஹேஸ்வரி வரை' யென
பெயரிட்டு இருக்கிறார்!
இது, உமா மஹேஸ்வரிக்கு கிடைத்திருக்கும்
நிகரில்லா பெருமை.
அரிய பரிசு!
 
தனியே தெரியும்
விழிப்பான ஒற்றை நட்சத்திரத்தைக் கண்டவராக
நமக்கு வேறு கோணத்தில்
உணர்த்தியிருக்கிறார் வெ.சா.
அத்தனைப் பெரியவரையும்
தலையுயர்த்தி பார்க்கவைத்திருக்கும் நட்சத்திரமாக
தன் படைப்புகளின் வழியே
ஒளிர்கிறார் கவிஞர். உமா மஹேஸ்வரி!

கவிஞர் உமா மஹேஸ்வரியின்
கவிதைகள் மட்டுமல்லாது
படைப்பாக்கம் கொண்ட
அவரது நாவல்கள் இரண்டின் மீதும்
உயர் மதிப்பீட்டைக் கொண்டவர்
அமரர். திரு.சுந்தர ராமசாமி.
உமா மஹேஸ்வரியின்
படைப்பிலக்கிய ஆளுமையை
சு.ரா. அவர்கள்
தனது பல்வேறு கட்டுரைகளில்
சிறப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாதிரியே திரு.ஜெயமோகனும்.
மதிப்பிற்குரிய நண்பரான
திரு. பி.கே சிவகுமார் அவர்கள்
உமாவின் படைப்புலகை
மனம் திறந்து பாராட்டியவர்களின் பட்டியலில்
இன்னொருவராக இருக்கிறார்.
இப்படி...
உயர்ந்த கலை இலக்கிய ஆளுமைகளான
பலரிடமிருந்தும்
உமா மஹேஸ்வரி கொண்டிருக்கும் பாராட்டுகள்
அனைத்தும் அவருக்குத் தகும்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்
'இந்தியா டுடே' தேர்வு செய்த
'தமிழகத்தின் தலை சிறந்த பெண்கள்' என
தேர்வு செய்த பதினைந்து பேர்களில்
கவிஞர் உமா மஹேஸ்வரியும் ஒருவர்.
இது
நம் பெண்கவிஞர்கள் எவருக்கும் கிட்டாத பேறு!
கவிதையை முன் வைத்து
பல அகாடமிகளில்
அவர் பெற்றிருக்கும் பரிசுகளுக்கும்
குறைவில்லை.
சமீபத்தில்
பெங்களூர்...
'என்.எம்.கே.ஆர்.வி. பெண்கள் கல்லூரி'யின்
'நஞ்சன் கூடு திருமலாம்பாள் சரஸ்வதி' விருதை
இவ்வாண்டு
கவிஞர் உமா மஹேஸ்வரி பெற்றிருக்கிறார்.
ஆக,
'சாகித்திய அகாடமி' விருது ஒன்றுதான் பாக்கி!
வாழ்த்துக்கள்.
இந்தக் கவிதைப் பெண்ணுக்கு
அது கிட்டும்.
கிட்டணும்.
இல்லை இல்லை என்றாலும்
கலை நுட்பத்தை
சிரத்தையாகத் தேடுபவர்கள்
நம்மில்,
நாலாப் பக்கமும் இருக்கத்தானே செய்கிறார்கள்.!!
*
பின் குறிப்பு:
அமரர் சுஜாதா ரசித்த
உமா மஹேஸ்வரியின்
'மழையும் நானும்'
(மே-1988/கணையாழி)
கவிதையையும்,
சமீபத்தில் வாசித்த
அவரது
1.நொறுங்கல்
2.அந்த முலை
(ஜனவரி- 16-31/ 2012/ புதிய பார்வை)
எனும் கவிதைகளையும்
வாசகர்களுக்காக
என் தட்டச்சில்
கீழே.....


'மழையும் நானும்':

ஓசைகளோய்ந்த பிற்பகலில்
உறங்கும் போது
ஜன்னல் வழி நுழைந்த
சாரலின் வெள்ளித் துளிகள்
என்னை எழுப்பின,
அஸ்பெஸ்டாஸ் கூரையில்
குழந்தைக் கூச்சலிட்டது மழை
வானத்தின் பாஷை போல
தயங்கியும், தவித்தும்
இரைந்தும் இளகியும்
பேசிக் கொண்டிருந்தது.
தடைகளற்ற தோழமை
கோபம், உற்சாகம்
அழுகை, ஆனந்தம், இளமை வேகம்
என்றேதேதோ உணர்வுகள்
என்னுள் உரசிக் கொள்ளும்
மழைக்கென.
அதுவோ இதுவறியாது
அன்று பூத்த மலர்களுக்கு
அட்சதை போடும்.
மரங்களின்
பச்சைக் கொடியசைப் பேற்று
தத்தி நடக்கும்
மாடித் தளத்தில்,
குடைகளின் கறுப்பு மறுப்பை
ஒதுக்கி ஓடும்
தரையில் விழும்; உடையும்; மீண்டு
துள்ளும் தங்கக் கனவுகள் போல்.
வெயிலுடன் கண்ணாமூச்சியாடும்
வந்தது போல் மறையும்,
வாசல் தெளித்து விட்டு,
தேங்கிய நீரில்
வண்ணங்கள் வரைந்து விட்டு,
ஒரு
பிள்ளைப் பிராய ஸ்நேகம் மாதிரி.

***

நொறுங்கல்:

கோடானு கோடி மருந்துப்
புட்டிகள்
உருளும் என் பாதையில்
பாதம் இடறும்
அவற்றின்
பற்றற்ற வழுவழுப்பு
மிதிக்கக் கூசி,
நொறுங்கஞ்சி
பிடிமானமின்மையில் தடுமாறும்
என் நடை
வெண் தகர விளிம்பு கீறி
வெடிக்கும் காயங்களோடு
நடந்தாக வேண்டும்.
ஆனால் ஏன்?
அந்தியையும், உதயத்தையும்
என் ஆனந்த மழைகளையும்
அடைத்துப் புரளும்
இந்த சீசாக்கள்
எடுத்தெறிய முடியாமல்
என் தலைக்குள்
அவை
உருள்கின்றன
திரள்கின்றன.
உடைந்து சிதறி
என்னை
உலுக்கிப் போடுகின்றன,
நான் கவனமாய் முடைந்த
என் உறக்கத்திலிருந்து.
***

அந்த முலை:

மென் முலை; வன் முலை
ஈர்க்கு இடைப் புகா இளமுலை,
கவர்ச்சிப் படிமம்,
காலகாலமாக
பத்திரிகைப் பக்கங்களில்,
காதல் விரல்களில்
தொலைக்காட்சிப் பிம்பங்களில்,
இந்த நாட்களில்
வலைப் பின்னலாடைகளுக்குள்
தளும்பும் எத்தனை எத்தனை
கோல கோளங்கள்.
ஒருத்தி
திருகி வீசவும்
தீப்பற்றி ஊரெரிந்த
முலையும் உண்டு.
காமச் சின்னமோ,
மோக ஊக்கியோ அல்ல;
உண்மையில்
சிசுவுக்கு உயிர் சுரக்கும்
தாய் உறுப்புக்கள்
எல்லாம் தாண்டி
மிகவும் கவனமாகச்
சுத்தகரிக்கப்பட்ட
கூர் கத்தியின் பரப்பில்
அறுப்பட்டு அகற்றப்பட்டு
என் நினைவில் கொப்புளிக்கும்
அந்தப் புரையோடிய
அன்னை முலையை என்ன செய்ய?
அகற்றவில்லை; அஞ்சவில்லை
துதிக்கவில்லை;
தூக்கியெறியவுமில்லை
நான்.

**


10:59 PM 3/3/2012
E-Mail : satajdeen@gmail.com

**

மேலும் :

உமா மகேஸ்வரியின் கவிதைகளும் கட்டியங்காரனின் கூற்றும் – தாஜ்

Sunday, March 4, 2012

காலத்தை வென்ற கவிதைகள் (பசீல் காரியப்பர்​)


அலுவலகத்தில் வேலையும் செய்யவேண்டியிருக்கிறது காக்கா என்றால் கேட்கமாட்டேன் என்கிறார் ஹனீபாக்கா. (அனுப்பியிருந்த) பாவலர் பசீல் காரியப்பரின் மூன்று கவிதைகளுக்கு என்ன நடந்தது? என்று ஒரே மிரட்டல்!. அதனால், காலத்தை வென்ற கவிதைகள்' பத்தி இங்கும் தொடர்கிறது.... அப்புறம் ஒரு நல்ல செய்தி. 'நான், புலி , நினைவுகள்' விஸ்வரூபமெடுத்து வருகிறதாம். 'நிறையச் சங்கதிகள் சஞ்சலங்கள் ஞாபகத்திற்கு வருகிறது ; இத்தனை கொடுமைகளையும் தாங்கி வாழ்ந்திருப்பது பெரும் சாதனையாகவும் தெரிகிறது' என்கிறார் ஹனீபாக்கா.  - ஆபிதீன்


*** 


கிழக்கிலங்கை கவிதைப் பாரம்பரியத்தில் நீலாவணனுக்கு அடுத்து வந்தவர், எமது மதிப்புக்குரிய கவிஞர் மர்ஹூம் பசீல் காரியப்பர் அவர்கள். 1958 முதல் ஆசிரியராகி இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியப் பணி செய்தவர். 1978ல் கொழும்பு வளாக தமிழ்ச் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் இவரது "தங்கம்மா" பரிசு பெற்றது. தங்கம்மா பரிசு பெற்றவுடன் சம்மாந்துறையில் நடந்த பாராட்டு விழாவில் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை,

"கவிஞன் தோன்றிவிட்டான்
பசீல் காரியப்பர் கண்டீர்" என்று கூறி பாவலர் என பட்டமும் சூட்டி மகிழ்ந்தார்.

இவரின் ஆத்மாவின் அலைகள் தொகுதியிலிருந்து மூன்று கவிதைகளை ஆபிதீன் பக்க வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

பசீல் காரியப்பரின் கவிதைகளுக்கு முன்னுரை எழுத வந்த கவிஞர் டாக்டர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் உயிரெனும் கவிதை பற்றி குறிப்பிடுகையில், "நான் எத்தனையோ முறை தீக்குச்சியைப் பற்ற வைத்திருக்கிறேன். அது ஒரு கவிதையின் அதிர்வை எனக்குள் எழுப்பியதில்லை. நண்பருக்கு அது கவிதையின் அதிர்வைத் தந்திருக்கிறது. அதை ஒரு படிமமாக்கி, அதற்குள் வாழ்வின் தத்துவத்தை சிறைப்பிடித்திருக்கிறார்" என்கிறார்.

உயிர்

எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ
குச்சி அதன் பெட்டியுடன்
கூடி உரசியதால்
விச்செனவே சுடரொன்று
வீறிட்டெழுந்து இங்கு
நின்று சுழன்று
சில நொடியில் மறைந்தது காண்!
சென்றதுவும் எத்திசையோ?
சேர்ந்ததுவும் எங்கேயோ?
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ?
வீணே நரம்புகளில்
விரல்கள் விளையாடத்
தேனாம் இசையுண்டோம்
சேர்ந்ததுவும் எங்கேயோ?
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ?
சுழன்ற சுடராமோ
சுவைத்த இசையாமோ
தளர்ந்த உயிர் உடலை
தவிர்த்த நிலை எதுவோ?
எங்கு ஒளிந்திருந்து
எப்படியாய்ச் சென்றதுவோ?
1962

-------------------------

அரிய பிறப்பு

தூய நெறியோனைச்
சுமந்து சுமந்து உருவே
தேய்ந்து நான் என்னைத்
தேய்த்தழித்துக் கொள்ளுகிறேன்
எண்ணத்தில் தூய்மையுடன்
இறைவனிடம் நித்தம் நித்தம்
கண்ணீர் பெருக்கிக்
கரைந்துருகி ஆட்கொண்ட
தீய உணர்வுகளை
திசை மாற்றும் இச்சைகளை
சின்னத்தனங்களினைச்
சீரழிவின் வேள்விகளை
எண்ணி உருகி மனம்
இளகித் தெளிவுபெற
பழசுகள் அழிந்து
புதுப்பயிருக்கு உரமாகி
புத்துயிர் பெறவும்
வரும் புது வாழ்வில்
பொருள் பட வாழவும்
எத்தனங்கள் செய்யும்
இதயத்தைத் தாங்கியுள்ள
தூய நெறியோனைச்
சுமந்து சுமந்து உருவே
தேய்ந்த நான் என்னைத்
தேய்த்தழித்துக் கொள்ளுகிறேன்.
தன் குறைநிறைகளினை
தானே அறிந்து கொண்டு
சுண்ணாம்பு பூசாமல்
சுரண்டி அழுக்கு அகற்றிப்
பொன்மனத்தைப் பெறும் வழியில்
போர்க்களங்கள் கண்டு வந்து
தன்னைப் போல் மற்றவரை
தனித்தனி உணர்ந்து கொண்டு
துன்பமுறும் மனிதருக்குத்
தொண்டு செய்து பாவிகளில்
அன்பு பாலித்து அவர்களுக்கு
அருள் மனத்தால் மருந்து செய்து
தெம்பு தரும் வாழ்க்கைக்குத்
தெளிவான வழிகாட்டி
நம்பிக்கை ஊசி பாய்ச்சி
நலிந்த மனிதர்களைத்
துன்புமுறுத்தும் வலியவரைத்
துணிவோடு எதிர்த்து நின்று
காணும் பொருளில் அதன்
கர்த்தாவைக் கண்டு
மன ஏனத்தில்  அமுதுண்ண
எத்தனங்கள் செய்து வரும்
தூய நெறியோனைச்
சுமந்து சுமந்து உருவே
தேய்ந்து நான் என்னைத்
தேய்த்தழித்துக் கொள்ளுகிறேன்.
என் எஜமான் என்னை
இழுத்தரைத்துத் தேய்க்கின்றார்
என்றாலும் நான் எள்ளளவும்
ஹிம்சை எனக் கொண்டதில்லை
புனிதர்கள் வழியில் தூய
பணிகளைச் செய்யும் இந்த
மனிதருக்காய்த் தேய்தல்
மகிழ்ச்சி நான் பெற்ற வரம்
என்றே தொழும் பள்ளி
ஏறு வாயில் தனிலே
அன்று செருப்பொன்று
அடியேன் தனைப் பார்த்து
மெல்ல நகைத்ததடா
மின்னியதோர் ஒளிக்கீற்று
உள்ளே இருக்குமந்த
ஒரு மனிதருக்காகவேனும் அந்தப்
பள்ளி மகிழ்ந்திருக்கும்!
பணி செய்யக் காத்திருக்கும்!
செருப்பு அரிய ஒரு பிறப்பு!
1964
--------------------------------

அழகான ஒரு சோடிக் கண்கள்

அழகான ஒரு சோடிக் கண்கள் - அவை
அம்புகள் பாய்ச்சி உளமெல்லாம் புண்கள்!
புவியியல் கற்றிடும் வேளை - அவை
புகையுள்ளே மின்னிச் சிரித்திடும் காலை
தவித்துத் துடிப்பதென் வேலை - கல்வி
தங்குவதெங்கே மனம் ஒரு பாலை!
ஆட்சியியில் மறுபாடம் - நான்
அங்கிருப்பேன் மனம் எங்கோ ஓடும்!
ஆட்சி செய்யுமுனைச் சாடும் - நான்
ஆளிச் சுழியில் மிதந்திடும் ஓடம்!
தாய் மொழிப் பாடம் நடக்கும் - நறை
தாங்கிய கண்களோ பின்னலடிக்கும்!
"ஏய்!" என்று என்னைப் பிடிக்கும் - மனம்
எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்.?
தத்துவப் பாடம் நடக்கும் - அவை
தத்தித் திமிக்கி இமைகள் மடிக்கும்!
வித்தையில் பித்துப் பிடிக்கும் - நம்
வீட்டார் அறிந்தால் கன்னம் தடிக்கும்!
1966

குறிப்பு: இந்தப் பாடல், இலங்கை வானொலியின் புகழ்பெற்ற மெல்லிசைப் பாடல்களில் ஒன்று. முப்பதாண்டுகளுக்கு முன்னர், நண்பர் பசீல் காரியப்பர் அவர்களும் நானும் சாய்ந்தமருது கடற்கரையில் இரவு வேளையில் அமர்ந்திருந்து இந்தப் பாடலைப் பாடி மகிழ்ந்த தருணம் என் நெஞ்சில் அலைமோதுகிறது. -  ஹனீபாக்கா

***
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா ( E-Mail : slmhanifa22@gmail.com )