Tuesday, March 29, 2016

'பறவை மனிதர்' - ஹமீது ஜாஃபர்

ஈராண்டுகளுக்கு முன் ஷார்ஜா பழைய ஏர்போர்ட் அருங்காட்சியகம் சென்றிருந்தபோது அங்கே ஒரு மனிதன் இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறப்பதுபோல் ஓர் வடிவம் தொங்கவிடப்பட்டிருந்தது. அதன்கூட முழுஅளவிலான பழைய விமானங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றை பார்த்தேனே ஒழிய குறிப்பு எடுக்கவில்லை, இருந்தாலல்லவா எடுக்க?

நாட்கள் நகர்ந்து வருடங்களாயின. அருட்கொடையாளர்களை எழுதி முடித்துவிட்டு இது போதும் என்றவனாக கவனம் கொள்ளவில்லை. அதன் பிறகு முகநூல்.. அதில் குப்பையைக் கொட்டிக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருந்தது. (சில நல்ல நட்புகள் கிடைத்தன என்பது வேறு விஷயம்.)

திடீரென்று ஒரு நாள் ‘நானா கையெ அரிக்கிது’ என்றார் ஆபிதீன். ‘பணம் வரப்போவுது’ என்றேன். வந்துகிந்துடப்போவுது...! என்று சொல்லிவிட்டு அது இல்லை நானா ரொம்ப நாளாச்சு உங்க எழுத்து வந்து. எழுதுங்க என்றார். ஆசை இருக்கு ஆனா அலுப்பு தட்டுது, ஆகட்டும் பார்க்கலாம் என்றேன்.

ஒரு வாரம் ஓடியது என் கண்முன்னே இருந்த காலண்டரில் ஆயிரமாண்டுகளுக்கு முன் முதலில் பறந்த மனிதரைப் பற்றிய சிறு குறிப்பைத் தவிர வேறொன்றுமில்லை. சரி, ஆபிதீன் சொல்லிட்டாரே இவரை பற்றி எழுதுவோம் என அவரை தேடுகின்ற முயற்சியில் கிடைத்த தகவல்கள் சில இங்கே....

மனிதன் நடக்க ஓடத் தெரிந்தபிறகு பறக்கவேண்டும் என்ற ஆசை வாட்டி எடுத்திருக்கவேண்டும். முயற்சிகள் பல்லாண்டுகள் நடந்தன. என்றாலும் கி.மு 5 ம் நூற்றாண்டில்தான் சீனர்கள் பறக்க முயன்று முடிவில் பட்டத்தைக் கண்டுபிடித்தனர். பட்டத்தின் நூலை ஒருவர் பிடித்துக்கொள்ள புத்த பிக்குகள் அதில் பறந்ததாக சில தகவல்கள் சொல்கின்றன ஆனால் உறுதி இல்லை. ஆனால் நம் தமிழன் பறந்திருக்கிறான். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில்..

 “கல்லார் மணிப் பூண் அவள் காமம் அனைத்து கன்றிச்
 சொல்லாது கேளான் நனி சூழ்ச்சியில் தோற்ற வாறும்
 புல்லார் புகலப் பொறி மஞ்ஞையில் தேவி போகிச்
 செல் ஆறு இழுக்கிச் சுடுகாடு அவள் சேர்ந்த வாறும்”    

அரசியல் சூழ்ச்சியால் ஏமாங்கத நாட்டு மன்னன் சச்சந்தன் தன் மனைவி விசையை காப்பற்றவேண்டி மயிற்பொறி இயந்திரத்தில் வைத்து பறக்க செய்து தப்பிக்க வைத்தான். அப்பொறி ஒரு சுடுகாட்டில் இறங்கியது, அங்கேதான் சீவகன் பிறந்தான் என்று 9 ம் நூற்றாண்டின் நூலான சீவக சிந்தாமணியில் சொல்கிறார் திருத்தக்கத்தேவர். ஆக ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழன் பறந்திருக்கிறான். அதே காலக்கட்டத்தில்தான் அரபியும் இறக்கையைக் கட்டிக்கொண்டு பறந்திருக்கிறார். (ஒருவேலை அந்த மயில் விமான டெக்னாலஜியை ரகசியமாக சுட்டிருப்பாரோ?)

முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் பெயரை சொல்லும் அறிவியல் முதலில் யார் பறந்தார் என்பதை சொல்ல மறந்துவிட்டது. சொல்ல மறந்துவிட்டதா? இல்லை சொல்லத் தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் மனமில்லையா?

வரலாற்றின் பின்னோக்கிச் சென்றால் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் 15ம் நூற்றாண்டின் லியனார்டோ டாவின்சி   புகழ்பெற்ற ஓவியமான மோனொலிசாவை வரைந்த இவர், சிறந்த ஓவியர் மட்டுமல்ல விஞ்ஞானியும் வடிவமைப்பாளருமாவார்.  பாராசூட், ஹெலிகாப்டர் ஆகியவற்றை உருவாக முன்னோடியானவர், வடிவமைத்தவர். ஆனால் பறக்கவில்லை.

அதற்கும் முன்பாக 11 ம் நூற்றாண்டில் மல்மேஸ்பரி மடத்தில் வாழ்ந்த ஈல்மெர்  என்ற இளம் பாதிரியார் 200 மீட்டர் பறந்தார். அதன்பின் டாவின்ஸியின் கண்டுபிடிப்பால் ஆர்வம்கொண்ட அஹமத் செலபி சில மாற்றங்கள் செய்து 1638 ல் 183 அடி உயரமுள்ள கோபுரத்திலிருந்து கழுகு பறப்பது போல் பறந்ததாக நேரில் பார்த்த வரலாற்றாசிரியர் இவிலியா செலபி குறிப்பிடுகிறார்.

இப்படி ஒன்றிரண்டுபேர் பறந்தாலும் இவர்களுக்கு முன்னோடியாக இருந்தவர் , முதன்முதலில் பறந்தவர் இப்னு ஃபிர்நாஸ்.


அப்பாஸ் இப்னு அல் ஃபிர்நாஸ் (கி.பி 810 – 887)

இவரின் முழுப் பெயர் அப்பாஸ் அபு அல்காஸிம் இப்னு ஃபிர்நாஸ் இப்னு விர்தாஸ் அல் தக்குரினி. அராபியர்கள் தங்கள் குலம், தங்கள் குடும்பப்பிரிவு அனைத்தையும் பெயருடன் இனைத்திருப்பார்கள். அதை வைத்து அவர் யார், தகப்பனார் யார், பாட்டனார் யார் என்பதை கண்டுபிடித்துவிடலாம். அல்தக்குரினி குலத்தை சார்ந்த விர்தாஸின் மகன் பிர்நாஸின் மகன் அப்பாஸ் என்பது இவர் பெயர். இவருக்கு காஸிம் என்ற மகன் இருந்ததும் இப்பெயரில் தெரியவருகிறது.

இன்றைய ஸ்பெயினாகிய அந்துலூசியாவில் உமையா கலிஃபா ஆட்சி நடந்துக்கொண்டிருந்த காலத்தில் பெர்பர் பழங்குடி இனத்தில் ரோண்டா அருகிலுள்ள கோரா தக்ர்னா என்ற சிற்றூரில் பிறந்தார். கல்வி கற்றது, வாழ்ந்தது, மறைந்தது எல்லாம் கொர்தோபாவில், அந்துலூசியாதான். பிலிப் ஹிட்டியின் கூற்றுபடி இவர் வேதியல், மருந்தியல், இயற்பியல், பொறியியல், வான்இயல், இசை என பல்வேறு துறைகளின் கல்விகளைப் பயின்றுள்ளார்.

சாதனைகள்

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த இவர் அல் மக்காதிதா என்ற பெயரிடப்பட்ட நீர் கடிகாரத்தைப் படைத்து தொழுகைக்கான நேரத்தை அறியும்படி செய்தார். கிரேக்க, ரோமேனியர்களின் காலத்திலிருந்து செய்யப்படும் கண்ணாடிப் பொருட்கள் எதோ ஒரு நிறம் கொண்டதாகவே இருந்துவந்தது. முதன் முதலில் நிறமற்ற crystal clear
கண்ணாடியை உருவாக்கினார். படிப்பதற்காக கண்ணாடி சில்லை (Reading Stone) உருவாக்கினார். தவிர காண்டாக்ட் லென்ஸ்போன்றுதெளிவாகவும் நுணுக்கமான வகையில் மூக்குக் கண்ணாடியையும் உருவாக்கினார்.

அந்துலூசியாவிலிருந்து எகிப்துக்கு பளிங்கு கற்களை அனுப்பி அவற்றை அறுத்து மெருகேற்றி கொண்டுவந்தார்கள். இது காலவிரயத்தையும், செலவையும் ஏற்படுத்தியது. எனவே அதற்கான கருவியைக் கண்டுபிடித்து உள்நாட்டிலேயே அத்தொழிலை செய்யவைத்தார்.

மருந்தியல் படித்திருந்தாலும் மருத்துவம் செய்யவில்லை. மாறாக மருத்துவர்களையும், மருந்து விற்பவர்களையும் சந்தித்து, தான் வகைப்படுத்திய மூலிகை மற்றும் செடிகளின் தன்மைகளையும் அதன் மருத்துவ குணங்களையும் அவற்றிலிருந்து உண்டாக்கிய மருந்துகளையும் விளக்கி வருவது இவரது பணிகளில் ஒன்றாக இருந்தது. இவருடைய திறனையும் துடிப்பையும் கண்ட அரசு, உமையா இளவரசர்களின் உணவுப் பரிசோதகராக இவரை நியமித்தது.

அந்துலூசியக் கவிதை புணைவதிலும், அணி இலக்கணத்திலும் திறன் பெற்றிருந்த இவர்,  கொர்தோபாவில் ஜிரியாப் இசைக் கல்லூரியில் முதன்மை ஆசிரியராக பணியில் அமர்த்தப்பட்டார். எல்லா துறைகளிலும் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் லேசர் ஒளிக்கற்றை மூலம் ஒரு புது உலகின் தோற்றத்தை கண்முன் நிறுத்தமுடியும். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் மின்னணு போன்ற தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் தன் வீட்டின் ஓர் அறையில் பிரபஞ்சத்தின் மாதிரி வடிவை அமைத்து அதில் கோளங்கள், தாரகைகள், மேகங்கள் இருப்பதுபோன்று அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தார். நிலவறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஓர் இயந்திரத்தின் மூலம் பார்வையாளர்கள் வியக்கும்வண்ணம் கோளங்கள் எப்படி சுழல்கின்றன இடி மின்னல் எப்படி உருவாகின்றன என்பதை தத்ரூபமாக விளக்கினார். இது பொறியியல் துறையில் இவரது அறிவுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

முதலில் பறந்தவர்?

இவர் பறந்ததைப் பற்றி சொல்வதற்குமுன் இருவேறு தகவல்களை இங்கு கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ARMEN FIRMAN என்பவர் கி.பி.852ம் ஆண்டில் பறந்ததாகவும் அது தோல்வியில் முடிந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. அர்மென் ஃபிர்மன் ஓர் விஞ்ஞானியோ அல்லது அறிவாளியோ அல்ல. அவர் ஓர் சாதாரண மனிதர், ஆனால் எதையும் உற்றுநோக்கும் திறனுள்ளவர். இயற்கை நிகழ்வுகளையும் சூழலையும் உன்னிப்பாகக் கவனிக்கும் பழக்கமுள்ளவர். பறவைகள் பறப்பதை கவனித்த இவர்,  தான் அதுபோல் பறக்க முடியுமா என்ற ஆவலில் உறுதிவாய்ந்த மூங்கில் மரக்குச்சிகளையும் பட்டுத்துணியையும் கொண்டு இறக்கைபோல் வடிவமைத்து கொர்தோபாவின் பெரிய பள்ளிவாசல் மினாரா உச்சியிலிருந்து குதித்து பறக்க முயற்சித்ததாகவும் மாறாக நினைத்தபடி பறக்க முடியாமல் சரிந்தவாறு தரையில் விழுந்தாகவும், தளர்ச்சியான ஆடை போல் வடிவமைக்கப்பட்ட இறக்கையின் விரிவாலும் காற்றின் அழுத்தத்தாலும் வீழ்ச்சி வேகமாக இல்லாமல் மெதுவாக இருந்ததால் லேசான காயங்களுடன் தப்பித்தார் என்றும், அப்போது வேடிக்கைப் பார்த்த கூட்டத்தில் அப்பாஸ் பின் ஃபிர்நாஸும் இருந்ததாகவும் இதுவே பிற்காலத்தில் ஃபிர்நாஸ் பறப்பதற்கு தூண்டுகோலாக இருந்ததாகவும் சில தகவல் தளங்கள் கூறுகின்றன. ஆனால் இவரைப் பற்றிய வேறு தகவல்களோ, பிறப்பு இறப்பு பற்றிய குறிப்போ அல்லது பின்புலமோ அல்லது மீண்டும் பறந்தாரா என்பதற்கான ஆதாரம் எதுவும் காணக் கிடைக்கவில்லை. மேலும் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதற்கான சரித்திரப்பூர்வமான ஆதாரமும் வலுவானதாக இல்லை.

ஃபிர்நாஸ்

அப்பாஸ் இப்னு ஃபிர்நாஸின் லத்தினிய பெயர் அர்மன் ஃபிர்மன் என்கிறது சில தளங்கள். இவரின் பிறப்பு, கல்வி, கண்டுபிடிப்புகள், சாதனைகள் இவற்றை வைத்து பார்க்கும்போது இருவரும் ஒருவர்தான் என்பது நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. எனவே 852ல் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது இவருடையதாகவே இருந்திருக்கவேண்டும். இதன் பிறகு இவர் மீண்டும் முயற்சித்திருக்கவேண்டும் ஆனால் அதற்கான செய்திகள் இல்லை.

அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து கி.பி. 875 ல் தனது 65ம் வயதில் ருஸாஃபா பகுதியிலுள்ள ஜபல் அல் அருஸ் என்ற மலையிலிருந்து பறந்து சாதனைப் படைத்தார். பறப்பதற்குமுன் மக்கள் அனைவரையும் அங்கு வரவழைத்து நான் வடிவமைத்துள்ள இவ்விரு இறக்கைகளும் மேலும் கீழும் அசையக்கூடியது, பறவைப்போல் உயரவும் தாழவும் செய்வேன், உங்களைவிட்டு பிறிந்து சென்று பின் பாதுகாப்பாக தரை இறங்குவேன் என்றார். அதற்காக பறவைகளின் இறகுகளைக்கொண்டு தயாரித்த பிரத்தியேக உடையை அணிந்துக்கொண்டார், நீண்ட பெரிய இறக்கைகளை தன் உடம்பில் பொருத்திக்கொண்டு அவற்றை அசைத்தவாறு நீண்ட தூரம் பறந்தார். ஆனால் தரை இறங்கியது மிக மோசமாகிவிட்டது. நினைத்தபடி நடக்காமல் வேகமாக தரையில் விழுந்து முதுகில் பலமான அடிபட்டது. ஏன் நினைத்தபடி பாதுகாப்பாக தரை இறங்க முடியவில்லை? ஏன் விழுந்தோம்? என தீர யோசித்தபோது தெரியவந்தது பறவை உயரம் போவதற்கும் தாழ்வதற்கும் தரைக்கு வருவதற்கும் அதன் வால் முக்கிய பங்கு வகுக்கிறது, அதை அமைக்கத் தவறிவிட்டோம் என்பதை உணர்ந்தார்,

இவர் பறப்பதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் சிலர் வியந்தனர், சிலர் இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, இவர் வீழ்ந்ததைப் பார்த்து அவருடைய வாழ்வு என்னவாகுமோ என நாங்கள் கவலைகொண்டோம் என்றனர் வேறுசிலர். ஃபோனிக்ஸ் பறவையைவிட வேகமாகப் பறந்தார் என்றார் புலவர் முஃமின் பின் சஅது என்பவர்.

வீழ்ச்சியின் ஏற்பட்ட அடியினாலும் வயதின் முதற்சியாலும் மீண்டும் அவர் முயற்சிக்கவில்லை. அதன்பின் பண்ணிரண்டு வருடம் கழித்து 887ல் தன்னுடைய 77ம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இவரின் ஆய்வுகள், சாதனைகள் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். ஆனால் ஸ்பெயினில் ஏற்பட்ட புரட்சியில் அவை அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன - பறத்தல் பற்றிய செய்முறை விளக்க நூலைத் தவிர.

முதன்முதலில் பறந்து சாதனைப் படைத்த இப்னு ஃபிர்நாஸை உலகம் மறக்கவில்லை. அரபுலகம் இவரைப் பெருமைப் படுத்தும் வகையில் பாக்தாதில் ஏர்போர்ட் சாலையில் இவருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது, 2011ல் கொர்தோபாவில் திறக்கப்பட்ட பாலம் ஒன்றுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. சந்திரனிலுள்ள பள்ளம் ஒன்றுக்கு FIRNAS CRATER என நாஸா பெயர் சூட்டியுள்ளது.

இஸ்லாமிய அருட்கொடையாளர்களில் இவரும் ஒரு மைல்கல்.
*

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com
Sources :

Tuesday, March 22, 2016

குற்றவாளி - எம்.டி. வாசுதேவநாயர்

'ரக்த்தம் புரண்ட மண் தரிகள்' (ரத்தம் புரண்ட மண் துகள்கள்) தொகுப்பிலிருந்து . தமிழில் : யாழினி

*

மதிப்பிற்குரிய நண்பனுக்கு....

இக்கடிதம் கிடைக்கும்போது ஆச்சரியமாகத்தானிருக்கும் உங்களுக்கு எத்தனையோ வருடங்களுக்கு பிறகு எழுதுகிறேன். கடிதம் வாயிலாக நாம் அடிக்கடிப் பேசிக் கொள்வதில்லையென்றாலும்   இருவருக்கும் இருக்கும் நட்பு அகலுவதில்லை என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மனதில் தேங்கிக்கிடக்கும் ரகசியங்களை யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டுமென்றால் அது உங்களிடம் மட்டும்தான்.ஆத்மார்த்தமான சிநேகிதர்களென்று சொல்லிக் கொள்பவர்களிடத்தில் ரகசியங்களின் உலகமே நிலைத்து கிடக்கின்றது. நாம் அதற்குப் புறம்பானவர்கள். மிக்க மரியாதையுடன் நம் நட்பை  நினைவு படுத்திகொள்கிறேன்.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேனென்று நீங்கள் நினைக்கலாம். கூறுகிறேன்.

எனது சிந்தனையெல்லாம் தீப்பற்றி எரிவதைப்போல உணருகிறேன். இதயத்தின் மூலை முடுக்கிலெல்லாம் அத்தீ பற்றிப் படருகிறது..  மரித்து விறைத்த ஒரு உடலை கட்டியணைக்க கை நீளுகின்ற ஒருவனது கடிதம் இது.. மரணம் மனமுவந்து எனை ஆசிர்வதிக்கப் போவதில்லை என்றாலும் நான் அதை நாடிப்போவதில் தவறில்லையே..  அதுதான் எனக்கிப்போது அவசியப்படுகிறது.. முடிவு செய்த பிறகுதான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.. தற்கொலையோடு முன்பெல்லாம் வெறுப்பாக இருந்தது.. விதியை முட்டாளாக்க கோழைகளான பெண்கள்  கண்டுவைத்த வித்தைதானிது என்பது என் எண்ணம்.. ஒரு ஆண் தற்கொலை செய்து கொண்டானெனில் அவன் அவ்வினத்திற்கே அவமானம் என்று நான் சொல்லியதுண்டு..

காதல் தோல்வியால் தூக்கு மாட்டி செத்துப்போன ரமணனின் ஆத்மாவைக்கூட  சாகும்வரை தூக்கிலிட வேண்டுமென நினைத்தவன்தான் இன்று தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டேன்..

வீட்டின் இரண்டாவது மாடியில் தனித்திருக்கிறேன்.. இருட்டை பிரகாசப்படுத்தி மேஜையின் மீது மெழுகுவர்த்தி தன்னை மாய்த்து கொண்டிருந்தது.. இந்த கட்டிடத்தின் சுற்று வட்டாரமே சூன்னியமாகிவிட்டது. இருள் கவ்விய குளிர் என்னை பயமுறுத்துகிறது..  இதே பதினோரு மணிக்குதான் அந்த நிகழ்ச்சியும் நடந்தது..
அதன் பின்னர் மணிக்கணக்கில் தவித்துக் கொண்டிருக்கின்றேன்..

முடிவாக நான் சாவதுதான் சரி. மரணத்தின் அமைதியில் நான் மூழ்குவதற்கு முன் உலகத்திற்கு எனது அருவறுக்கத்தக்க ஏடுகளை புரட்டிக்காட்டவேண்டுமென்று தீர்மானித்துவிட்டேன். இதோ ஒவ்வொரு ஏடாக புரட்ட்டத் தொடங்குகிறேன்.

மாதம் ஐநூறு ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்ற ஒரு உத்யோகஸ்தனின் மகனாகப்  பிறந்தேன். ஊருக்குள் முக்கிய பிரமுகர் அப்பா . அவர் பெயரை நிலை நிறுத்த வேண்டியதும் நான்தான். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்தது என்றாலும் எழுதுகிறேன்.

தாராளங்களின் மடித்தட்டில் கிடந்துதான் வளர்ந்தேன். வீட்டிலும் சரி வெளியிலும் சரி நல்லவனாகவே கருதப்பட்டேன். ஆனால் என் வாழ்க்கையே விடுகதை போல ஆகிவிட்டது நண்பா..

வெயில் தாழ்ந்த அந்திமாலை வேளையில் மைதானத்தில் ஒரு மூலையில் அமர்ந்து நாம் பேசிக்கொண்டிருப்போம்... காதலைப்பற்றியும் அதனூடான ஒழுங்குமுறைகளைப் பற்றியும்தான் அதிகமாக பேசிக்கொண்டிருப்போம், காதல் பரிசுத்தமும் திவ்யமும் நிறைந்ததுயென கூறுவீர்களே,..    காதலைப்பற்றிய உங்களது அபிப்ராயங்களை வெறுப்போடுதான் கேட்டுக்கொண்டிருப்பேன். "காதல் தரும் வலியிலும் கண்ணீரிலும் ஒரு ஆத்ம திருப்தியுண்டு' என நீங்கள் அடிக்கடி கூறுவீர்களே.  அதை நினைவு கூர்கிறேன்.. அதை கேட்கும்போதேல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். காதலைபற்றின எனது தத்துவ சாஸ்திரமே உங்களுக்கு எதிராகத்தான் இருந்தது. மாமிசம் மாமிசத்தோடு சேர நடத்துகின்ற நாடகம்தான் காதல்.  ஆம் அப்படி மட்டும்தான் நான் காதலை நினைத்திருந்தேன்.

எத்தனையோ பெண்களிடத்தில் பழகியாயிற்று ஒருத்தியைக்கூட காதலித்திருக்கவில்லை.. ஒழுக்கமான எவனையாவது பார்த்தால் ஓங்கி குத்தவேண்டும் போலிருக்கும்.

நண்பா...  

உலகத்தின் எந்த ஒழுங்குமுறைகளுக்கும் நான் கீழடங்கப் போவதில்லை என்ற  திமிர் என்னிடமிருந்தது..எனது அனுபவங்களையெல்லாம் உங்களிடத்தில் ஏற்கனவே விவரித்திருக்கின்றேன்.

எப்படி இவ்வளவு ஒழுக்கம் தவறினேன்.இப்போதுதான் நினைக்கிறேன்.. 

பத்தோ பனிரெண்டோ பருவத்திலிருக்கும் போதே காம விகாரங்களின் மர்மங்களை எனக்கு உணர்த்தியவள் விதவையான எங்கள் வீட்டு வேலைக்காரிதான்..இதை ஏற்கனவே உங்களிடத்தில் சொல்லியிருக்க வேண்டும்.. 

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே நான் காதல் பைத்தியமாக இருந்தேன்..மாமிசம் நிறைந்த என்னுடலின் ஆராதகனாக இருந்தேன்..

குழந்தைத்தனம் நிரம்பித் தளும்புகின்ற ஒரு புஷ்பத்தை வருடியணைக்க யாருக்குதான் தோன்றாது.. ஆனால் பெண் அவ்விதத்தில் எனை ஆக்கிரமித்து இருக்கவுமில்லை.. மதுரம் நிரம்பி  நுரை  வழிகின்ற பானையில் இருக்கும் கள்ளை கண்ட *ஆர்த்திதான்  எனக்கு. உயர்ந்த.. *சாம்பத்தீகமான , பார்த்தால் பிடித்து போகின்ற அழகும் எனக்கிருந்ததால் பெரிதாக யாரிடமும் யாசித்துப் பெறவேண்டிய அவசியமில்லாதிருந்தது எனக்கு.

அப்படித்தான் நான்  நாச வழிக்கு  பயணிக்கத் தொடங்கினேன். அந்த மதுரக்கள்ளை அள்ளி அள்ளி பருகினேன்.. 

காமம் தந்த மயக்கத்தில் இந்த பிரபஞ்சத்தையும் சுற்றத்தையும் மறந்தேன் .
ஆத்மார்த்தமாக நேசிப்பது...! அதற்கு என் வாழ்வில் இடமிருக்கவே இல்லை. எந்த ஏடுகளிலும் அது குறிப்பிடவே இல்லை..

உங்களிடத்தில்  மறைத்த ஒரு விஷயம் நியாபகம் வருகிறது.. சுமார் மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது.. 

காலேஜ் லீவுக்கு வரும்போது என் உறவினர் வீட்டில்தான் தங்கியிருந்தேன்.. 

பக்கத்துவீட்டில் வறுமையான குடும்பம் ஒன்று இருந்தது. அதில் பதினாறு பதினேழு வயதுடன்  களங்கமற்ற இளம்பெண். அவளுடன் பழக வாய்ப்பு கிடைத்தது..காதலை ஒரு ஹாபியாக வைத்திருக்கும் எனக்கு அவளை வசப்படுத்த வெகு சீக்கிரத்தில் முடிந்தது..

அதிகமான வாக்குறுதிகளையும்.. வெள்ளித்துட்டுகளையும் உபயோகித்து அவளை தற்காலிக காதலியாக்கிக்கொண்டேன். கண்களிலும் இதழ்களிலும் வழிந்தோடிய காதலைக்கொண்டு பல இரவுகளை எனக்கு அவள்  பரிசாக்கினாள்...   லீவ் முடிந்ததும் நான் திரும்பி விட்டேன்.

நாடகங்களிலும் சினிமாக்களிலும் இந்த காட்சியை பார்த்திருப்போம்.. பிறகு ஒரு வருடம் கழித்து அங்கு சென்றிருந்தேன் அவளைக் காணவில்லை விசாரித்ததில் நான்கைந்து மாதத்திற்கு முன்னம் தற்கொலை செய்து கொண்டாளாம்.. கற்பமாக இருந்திருக்கிறாள். அவளது வாழ்க்கையை களவாடியவனை யாரும் அறிந்திருக்கவில்லை. 

அவளது முரட்டு மாமன் எவ்வளவு அடித்தும் அவள்  கூறவே இல்லை..   இப்பொழுது இதை  எழுதும்போது   அவள் முகம் மிகத் துல்லியமாக கண் முன் தோன்றுகிறது.. எனது கனவுகளில் இருள் முதிர்ந்து உதிரும் இரவுகளில் பயங்கரமானதொரு பிசாசாய் அணுகுவாள். நான் பயந்து அலறும்போது சிரிப்பாள்.. உடம்பெல்லாம் வியர்க்கின்றது. பேனா நகர மறுக்கிறது...    கைகள் கனக்கிறது..

எனது வாழ்க்கையையே முடித்துக்கொள்ள தூண்டிய சம்பவத்தை கூறுகிறேன்..

இடைப்பட்ட நாட்களில் எங்கள் வீட்டுக்கு புதிதாக ஒரு வேலைக்காரி வந்திருந்தாள். காலையில்தான் அவளைப் பார்த்தேன்.. கதவைத்  தட்டிவிட்டு எனக்கான காப்பியோடு வந்தாள். கட்டிலின் அருகிலிருக்கும் ஸ்டூலில் டம்ளர் வைக்கும் சத்தம் கேட்டு கண் விழித்தேன். அவள் நின்றிருந்தாள். புதிதாக வேலைக்காரி வந்து இருக்கிறாளென  
சமையல்கார கிருஷ்ணன் நேற்று கூறி இருந்தான். அவளை நேரில்  பார்த்ததும் பரவசமாகிவிட்டேன். மாமிசம் நிறைந்த சரீரம்....!  நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணைத்தான் எதிர்பார்த்தேன் .ஆனால் இளம் பெண். 

எத்தனை கொழுத்த பாகங்கள்..  முகத்திலிருக்கும் பிரகாசம் என்னை அவள் வசம் இழுத்து போடுகிறது..திரும்பி நடக்கும் போது அழுக்கு படிந்த அவள்  ஆடையில் தெளிகின்ற பின்தசை அசைவுகளை ரசித்தேன்.. காலை பதினொரு மணிக்கு காப்பியும் பலகாரமும் எடுத்து வந்தாள்.. அவளை வெகு உன்னிப்பாக கவனித்தேன்.. 

உயர்ந்து நின்ற மார்பகங்களுக்கிடையில்  எனது கண்கள் மாட்டிக் கொண்டதை கவனித்தவள் சற்று கூனிப்போனாள்.

காப்பியை ஆற்றியபடியே..கேட்டேன்.

உம் பேரென்ன...

லட்சுமி..

எப்ப வந்த,,,

நேத்துதான்..

முகமுயர்த்தாது பவ்யமாக பதிலளித்தாள். அடுத்து என்ன கேட்டபது..

எந்த ஊரு...
..................................

அவள் ஊரைச் சொன்னாள். தொடர்ந்து என்னுடனான பேச்சை வளர்க்காது அறையை விட்டுக் கடந்தாள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவளிடம் பேச ஆர்வப்பட்டேன்..எனது அந்தரங்கத்திற்கு புதிதாக ஒரு
உருவம் கிடைத்ததை எண்ணி அவளைத் தொடர்ந்தேன்.. பொதுவாக மாலை நேரத்தில் வெளியில் நடப்பது என் பழக்கம். லட்சுமி வந்ததிலிருந்து எனது தினசரிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டது.. அவளது ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்தபடியே அன்றைய பகலை கழித்தேன். காமம் உறுத்திய பசியோடு படுக்கையில் வீழ்ந்து  விடுவேன்.. ஒவ்வொரு நாளும் இன்றாவது..  இன்றாவது...

ஒரு மாலை நேரம் எனதறைக்குள் வந்தாள். சிகரெட் புகைச்சுருளில் எனது கனவுகளுக்கு வண்ணம் சேர்த்து கொண்டிருந்தேன். மேலே மூன்று அறைகளிருந்தது.. படியேறி வந்ததால்  முதலிலிருப்பது எனது அறைதான். 

இரண்டாவது என் தங்கையுடையது.. மூன்றாவது அறை பூட்டியே கிடக்கும்..  அம்மா இறந்த பிறகு அந்த அறையை உபயோகிப்பதேயில்லை. அப்பா இருப்பதெல்லாம் கீழேதான். மாடிக்கு வருவதே இல்லை. அறையை சுத்தம் செய்ய சீமாருடன்  நின்றிருந்தாள் லட்சுமி.  முன்னமே தீர்மானித்ததைபோல சாய்நாற்காலியில் சாய்ந்திருந்தேன் அறியாததைப்போல..

வீடு பெருக்கனுமே.... 

யாரிடமோ சொல்வதை போல கூறினாள்.

ம்ம்ம் பெருக்கலாமே...

என அவள் சாயலாகவே கூறியதும் வெட்கினாள்..

நான் என்ன புலியா மனுஷந்தானே....

என நாற்காலியிலிருந்து  எழுந்தேன். அவள் காலை மட்டும் உள்ளுக்குள் வைத்து கதவைப்பற்றி நின்று கொண்டிருந்தாள்

"என்னை பாத்தா பயமா இருக்க லட்சுமி....."

அவள் ஏதும் பேசவில்லை. நான் தைரியத்தை வரவழைத்துகொண்டு அவளது இடது கையை பற்றி இழுத்தேன்.. 

வலி தாளது கலவரமாய் என்னைப் பார்த்தாள்.. அந்த ஒற்றை  நிமிடம் அவள் உடல் மொத்தம் எனது அணைப்பில் துவண்டது. மாமிச பாகங்களை அழுத்தியபடி. மின்னுகின்ற அவளது கன்னத்தில் எனது முகம் அழுத்தினேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு  சாதகமாக்கி கொண்டாலென்ன....  அதற்கு தைரியம்  வரவில்லை. 

சாந்தா வந்து விடுவாள்..

."...............   லட்சுமி ராத்திரி நீ இங்க வருவியா..."

எந்த பதிலுமில்லை.

மாடிப்படிகளில் யாரோ  நடக்கும் சத்தம் கேட்டு அவள் என் பிடியிலிருந்து விலகி கொண்டாள். சாந்தா 

ஸ்கூலிலிருந்து  வந்தாள்.  எத்தனை ஆனந்தமான நிமிடம் அதை அபகரித்த அவளது வருகை எனக்கு எரிச்சலாக இருந்தது. புத்தகப்பையை மேஜை மீது வீசிவிட்டு எனது அருகே வந்தாள்.

'அண்ணா வர வியாழக்கிழமை எங்க ஸ்கூல் அனிவர்சரி. "

எனக்கு அவள் ஸ்கூல் அனிவர்சரி விவரம் கேட்க பிடிக்கவில்லை...

"அதுக்கு..."

'ட்ராமா., டான்ஸ் எல்லாமிருக்கு நான் டான்ஸ்ல சேந்திருக்கேன்...'

ம்ம்ம்ம் .... 

ஒரு குளிர்கால நடுக்கத்தை போல நான் முனகியது அவளுக்கு பிடிக்கவில்லை.

'பி. ஏ. பெயிலான உனக்கு ஸ்கூல் அனிவர்சரி துச்சமாத்தான் தெரியும்...' - கிண்டலடித்தபடியே அவளது அறைக்குள் சென்றாள். சிறு வயது முதலே குறுமபுக்காரியாக எப்போதும் துறுதுறுவென இருப்பாள்.இப்பொழுதும் 
அப்படித்தான். சேலை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள் அதிகாரமாக

லட்சுமீஈஈஈஈஈ ............

மாடிப்படிகளை பெருக்கி கொண்டிருந்தவள் திரும்பினாள்.

"காப்பி வேணும் இங்க எடுத்திட்டு வா...."

சாந்தாவிடம் வம்பிழுத்தேன்.

"நீ என்ன பெரிய மகராணியா... காப்பி கீழ போய் குடிக்க முடியாதோ... "என்றேன்..
  
"நீங்க என்ன பெரிய மகராஜவோ.... "  என தடதடவென படியிறங்கி ஓடினாள்.

சண்டையிட்டு கொண்டாலும் சிநேகம் நிறைந்தவள் என் தங்கை. எனக்கு எல்லா உறவும் அவள்தான். அவளுக்கு 

மூன்று வயதிருக்கும்போதே அம்மா இறந்து விட்டாள். செல்லமாகவே வளர்ந்தாள்.

நண்பா அதிகமாக இன்னும் விவரிக்க விரும்பவில்லை.

நான்கைந்து தினங்களின்  நிரந்தர வற்புறுத்தலுக்கு பிறகு லட்சுமி எனக்கு  கீழடங்கினாள்.  இரவில் அனைவரும் உறங்கியபின் ஒரு பூனையைப் போல பதுங்கி பதுங்கி எனதறைக்குள் வந்திருந்தாள்.

மறுநாள்  அவளை பார்க்கும் போது சோகம் நிரம்பியது முகத்தில். தலைகுனிந்தபடியே எனை கடந்து சென்றாள்.
.
                         ............... ......................       ..........


இன்று..

சாந்தாவுடைய பிறந்தநாள். அதனால் லட்சுமிக்கு அடுப்படியில் அதிக வேலை இருந்தது. மதியம் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம், அப்பாவின் நண்பர்களும் சுற்றமும் வந்திருந்தனர்.

எனது அறையிலிருந்து வெளியில் வராமலே இருந்தேன்.இப்போதெல்லாம் வெளியில் போவதே இல்லை. சினி மசாலா புத்தகங்கள். பிரஞ்சு ஆல்பங்கள் இதையெல்லாம் ரசித்தபடியே எனது நேரம் தீர்ந்திருக்கும். மாலைநேரத்தில் என் அறையை சுத்தம் செய்ய லட்சுமி வந்திருந்தாள். தனியாகத்தானிருந்தேன். ஒரே ஒரு இரவினூடான  அனுபவம் தான் எனக்கு அவளோடிருந்தது.. அழகு  நிறைந்த அவளது மாமிசத்திலிருந்து ஆனந்தத்தின் இன்பத்தை இனியும் இனியும் கவர்ந்தேடுக்கவேண்டும்.

"லட்சுமி..."

முகம் உயர்த்தினாள்

"இன்னைக்கு ராத்ரியும் வருவியா..."

பதிலொன்றுமில்லை.

அவள் எதுவும் கூறாது மௌனமாக சென்றது சம்மதத்தின் அறிகுறியாக வேண்டும்.  

பெண் ஒருமுறை ஒரு ஆணுக்கு கீழடங்கிவிட்டால் அவனுக்கு அடிமைதான்.. என்று ஏதோ புத்தகத்தில் படித்தது 

நினைவுக்கு வந்தது.

குளித்து முடித்து நல்ல வேட்டி சட்டை மாற்றிக்கொண்டு வெளியில் நடக்கத் தொடங்கினேன் இப்படி நடந்து வெகு நாட்களாகிவிட்டது விட்டது.வழியில் பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது ஏதாவது நாலு வார்த்தை பேசிவிட்டு தட்டிக் கழிக்கலாமென்றால். அவன் அப்படி விடுகிறவனில்லை.ஏதேதோ பேசியபடியே டவுனை  சுற்றினோம்.

சென்னையிலிருக்கும்போது அவன் நர்ஸ் காதலியைப்பற்றி.. ஆங்கிலோ இந்தியன் தோழியைப்பற்றி... 

ஊரிலிருக்கும் நிரந்தர காதலியைப் பற்றி.. இப்படியே பல பேச்சுக்கள்..   இடையே டீக்கடைக்கும் சென்றிருந்தோம். தியேட்டருக்கு  அருகே செல்லும்போதுதான் ஆங்கில படம் இட்டிருப்பதை கண்டோம். எஸ்தர் விலாஸ் நடித்த 'ஜலதேவதை' என்ற படம். கோபி அந்தப் படத்தை பார்த்தே ஆகவேண்டுமென  நிர்பந்தித்தான்.முதல் காட்சி தொடங்கும் நேரம்தான். வீட்டில் சொல்லாமலே வந்து விட்டேன். நேரமாகிச் சென்றால் அப்பா என்ன சொல்வார். 

கோபியின் காரணமாய் தியேட்டருக்குள் சென்றேன்.

உள்ளாடைகளை இட்டுக்கொண்டு வாளிப்பான தேகத்தைக் காட்டிய படுக்கையறை காட்சிகள். காமத்தின் வாசல் திறக்கின்ற மாமிசங்களின் சலனங்கள்.. எனக்கு லட்சுமியை நினைவுக்கு வந்தது. பதினொரு மணிக்கு நிச்சயம் வருவாள்.இளமை தளும்புகிற லட்சுமி.. பதினெட்டு வயது நிரம்பியவள். திரையில் கண் பதித்து நடக்கபோகும் காட்சிகளை நினைத்துகொண்டேன்..

படம் விட இரவு ஒன்பதரை ஆனது. வெளியில் வந்ததும் மீண்டும் கோபிக்கு வேறொரு திட்டமும் இருந்தது. மது அருந்தலாமென. இருவரும் பாருக்கு சென்றோம். நுரை தள்ளிய அழகான  மதுபான பாட்டில்கள். மணி பத்தரை. கோபியிடம் விடைபெற்றேன்.

கால்கள் இடறுகிறது.. மதுவின் மயக்கமும்  சூடான காட்சிகளும் ஆகாயத்தில் பறப்பது போலிருந்தது.. இந்த நிலையில் அப்பா என்னைப் பார்த்தால்.. இவ்வளவு நேரம் எங்கிருந்தாய்  என்றால் ..  என்ன சொல்வது எனக்கது பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை..

நல்ல வேளை அப்பா முற்றத்திலில்லை. தூங்கியிருப்பார். சமையல்காரன் மட்டும் சாப்பாட்டை வைத்துக்கொண்டு  எனக்காய் காத்திருந்தான். லட்சுமியை அடுப்படியில் காணவில்லை. கீழேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் அவள் படுத்திருப்பாள். கதவு சாத்தி இருந்தது. தூங்கி இருப்பாளோ..அல்லது மேலே எனக்காக காத்து.........  நானில்லை என்றதும் திரும்பியிருப்பாளோ...  சாப்பிடவில்லை. படிகளில் காலூன்ற முடியவில்லை. 

தலைக்குள் குருவிகள் பறப்பது போலிருந்தது.. வராண்டாவில் வரும்போது சாந்தாவின் அறையைக் கவனித்தேன். வெளிச்சமில்லாதிருந்தது   நல்லவேளை அவளும் உறங்கிவிட்டாள்  

என் அறைக்கதவு திறந்திருந்தது..ஒரே இருட்டாக இருந்தது யாரும் விளக்கு பொருத்தவில்லையா.. ஒருவேளை லட்சுமி அணைதிருக்கலாம்..

நீச்சலுடையில் எஸ்தர் விளசின் நினைவு வந்தது.. பாரில் நுரை தளும்பிய பாட்டில்களும்...சுகமான மயக்கங்களின் நினைவுகள் ரத்தத்தைச் சூடாக்கியது.  சத்தமில்லாது எனதறைக்குள் நுழைந்தேன்.  இருட்டு சன்னல் வழியாக மங்கிய வெளிச்சத்தில் அவள் எனது கட்டிலில் படுத்திருப்பது தெரிந்தது.. எனது கைகள் துடித்தது அவளை  அடைய துடிக்கும் பிரகாசம்  எனது கண்களில் தெரித்தது.. கிறுகிறுப்பாகவிருந்தது.. சத்தமில்லாது கதவை அடைத்தேன். எனக்கு தேவைப்பட்ட இருட்டின் திண்ணம் கூடி  இருந்தது. தீப்பற்றுகின்ற  காமத்தின் தேவையோடு கட்டிலருகில் சென்றேன். வெகுநேரம் எனக்காக காத்திருந்து தூங்கியிருக்கவேண்டும்..   

பாவம்..    நான் அவளுடைய வாயைப் பொத்தியபடி 

'சத்தம் போடாத நாந்தான்......' என்றேன்..

அவள் எனது பிடியிலிருந்த விலக முயற்ச்சித்தாள். இவ்வளவு நேரம் எனக்காக காத்திருந்து விட்டு இப்பொழுது  சம்மதிக்காமலிருப்பது எனக்கு ஆத்திரத்தை தூண்டியது. இதே படுக்கையில் சில தினங்களுக்குமுன் என் ஆசைகளுக்கு இணங்கியவள்தானே.. அவள் என் பிடியிலிருந்து  தப்பிக்க முயற்சித்தாள் நான் முறுக்கிக் கொண்டேன்.பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருக்கும் சாந்தா இதெல்லாம் கேட்டுவிடுவாளோ என்ற 
பயமுமிருந்தது. அவளது வாயை இறுக்கமாகப் பொத்தினேன். வெகுநேர போராட்டத்திற்கு பிறகு தான் அது நிகழ்ந்தது. அவள் கழுத்தில் ஏதோ தட்டுப்பட்டது என் கைகளில் .. 

நகையணிந்திருக்கிறாள்.. லட்சுமி நகையேதும் அணிந்திருக்கவில்லையே..!

திடிரென நெட்டிஎழுந்த பதட்டம்..  உடம்பு முழுவதும் மறத்து விட்டது.. மதுவின் மயக்கமோ... படமோ... எல்லாம் விலகியது..

நடுங்கிய  கைகளோடு மேஜை விளக்கை பற்றவைத்தேன்...

எனது கண்களில் கோடாலியை  வைத்து வெட்டியது போலிருந்தது..  மெத்தையில் வெயிலில் வாடிய வாழை இலைபோல கிடந்தாள்.. முக்கால்வாசி நிர்வாணமாக லட்சுமி இல்லை சாந்தா.....!

அந்த நிமிடத்தில் எனது இதயத்தில் தோன்றியவகளை  சொல்லவே முடியவில்லை....

படுக்கையில் இங்கிலீஷ் ரீடர் பாடப்புத்தகம் ஒடுங்கி கிடக்கிறது.. சாந்தா என்னைப் பார்த்தாள்.. நீர் நனைந்த விழி... முகம் வெளிறிப் போயிருந்தது.

எரித்துபோடுகின்ற நிமிடங்கள்

விளக்கு மங்க தொடங்கியது.. அதில் எண்ணை  இல்லைபோலும்.. அதிர்ச்சியிலிருந்து  மீளமுடியாத நான் கண் சிமிட்டுகையில் ஆடைகளை அள்ளிக்கொண்டு வெளியேறுகின்ற சாந்தாவைத்தான் பார்த்தேன்..

இருண்டு.. சூன்யம் நீளுகிறது...

என்னென்னமோ நடந்துவிட்டது... எப்படியென்று எதுவும் நினைவிலில்லை..ஆனால் நடந்தவையெல்லாம் நினைவிலுண்டு.. அப்படியே பற்றி எரிகின்ற எண்ணங்களோடு  எத்தனை நேரம் நின்றிருந்தேனோ... தெரியவில்லை..

பயங்கரமான இந்த இரவு விடிந்து உறக்கத்தை எழுப்பும்...பகல் வெளிச்சத்தில் அண்ணன் தங்கையை காண நேரும்...கிழக்கு  விடிந்து விடுமென்று நினைக்கும்போது பயமாக இருகின்றது..

அன்புத் தங்கையே... இனி அப்படி அழைக்க எனக்கு அருகதையில்லை.. இந்த பயங்கரம் எல்லா காலத்திலும் பேய்க்கனவாக ஒரு சம்பவமாக்கி உன்னைக் கொல்லுமே... யாரிடம் மன்னிப்பு கேட்பது..

எங்கிருந்தோ  தேடிப்பிடித்த மெழுகுவர்த்தியொன்றை பற்ற வைத்துத்தான் இக்குறிப்பை எழுதுகிறேன்..

என் மரணத்திற்குப்பின் எனை நினைத்து எந்த இதயமும் அழப்போவதில்லை..  எனக்காக ஒரு துளி கண்ணீர்கூட விழக் கூடாதென பிரார்த்திக்கிறேன்..

தூரத்தில் தண்டவாளத்தை பற்றிக்கொண்டு வருகின்ற ரயிலின் அலறல் கேட்கின்றது...

நண்பா நான் புறப்பட தயாராகிவிட்டேன்..

இத்துடன் இந்த கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்..

*
1. ஆர்த்தி : உடனடியாக அனுபவிக்க வேண்டுமென்கிற எண்ணம். 2. சாம்பத்தீகம் : செல்வந்தன்.
நன்றி : யாழினி

Thursday, March 17, 2016

முட்டாள்களின் பட்டியல் :))

'மனிதனுக்குச் சிறப்பாக இருப்பது அறிவுதான் என்றாலும் மக்கட் பிறவி எடுத்த அனைவருக்குமே அறிவு இருக்க வேண்டும் என்று சட்டம் கிடையாது. சிலருக்கு அறிவு இருக்கும். பலருக்கு இருக்காது. அறிவு இல்லாதவர்கள் வருத்தப்படக் கூடாது. நமக்கு எத்தனையோ இல்லை - அதுபோல் இதுவும் இல்லை என்று ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டும்!' என்று ஐயா திருக்குறள் வீ. முனிசாமி தன் சிந்தனைக் களஞ்சியத்தில் சொல்லியிருந்தார். சிரித்துக்கொண்டே அதை தாண்டியபோது இந்தப் பட்டியல் கதை வந்தது (பக். 119 - 120) . 'கண்டிப்பா அதுல ஒங்க பேரு இரிக்கும். பாருங்க' என்று அஸ்மா சொல்லியதால் பார்த்தேன். கொட்டை எழுத்தில் இருந்தது! பகிர்கிறேன் :)
*
பழைய காலத்திலே ராஜா ஒருத்தர் இருந்தார். அவர் தன் மந்திரியிடம், 'இன்றைய தினம் எல்லா அலுவலகங்களையும் சுற்றிப் பார்க்கணும்..' என்று சொன்னாராம். உடனே மந்திரி சரி என்று சொல்லி ராஜாவை அழைத்துக்கொண்டு போனார். கணக்குப் புத்தகங்களையெல்லாம் ராஜா பார்த்தார். அப்போது ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தவுடனே ராஜாவுக்குத் திகைப்பும் கோபமும் ஆச்சரியமும் ஏற்பட்டன. அந்தப் புத்தகத்திலே 'முட்டாள்களின் பட்டியல்'னு போட்டிருந்தது. 'என்னய்யா நம்ம ராஜ்யத்திலே இப்படி எழுதி வச்சிருக்கியே?'ன்னு ராஜா கேட்க, மந்திரி, 'பின்னே என்னங்க ராஜா?' இதுபோல் ஒரு பட்டியல் இருக்க வேண்டாமா? எல்லோருமா அறிவாளியா இருக்காக? முட்டாள்களும் இருப்பாங்களே'ன்னு சொன்னார். ராஜா அந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தபோது முதல் முதல்லே ராஜா பெயர்தான் எழுதப்பட்டிருந்தது! ராஜாவுக்குக் கோபம். 'முட்டாள்கள் பட்டியல்'னு வைத்திருக்கிறதே ரொம்ப தப்பு.. அதுலே என் பேரை முதலில் எழுதியிருக்கியே.. இது என்ன அநியாயம்?' என்று கடிந்துகொண்டார். 'இல்லே மகாராஜா! காரணமாத்தான் எழுதியிருக்கேன்' என்றார் மந்திரி.

'என்ன காரணம்?'

'இல்லே.. போனமாதம் வெளிநாட்டிலேயிருந்து ஒருத்தன் வந்தான். உங்களுக்குக் குதிரைமேல் ரொம்ப ஆசை. 'ஒரு குதிரை வாங்கிட்டு வா'ன்னு அவன்கிட்ட சொன்னீங்க.. உங்க ஆசையை அவன் புரிஞ்சிக்கிட்டு 'பத்தாயிரம் பொன் கொடுங்க. நான் வாங்கிட்டு வரேன்'னான். உடனே உங்களுக்கிருந்த உணர்ச்சி வேகத்திலே பத்தாயிரம் பொன்னை எடுத்து அவன் கையில் கொடுத்துட்டீங்க.. அவன் எந்த ஊர்க்காரன்னு தெரியாது. வாங்கிட்டு வர்ற சக்தி அவனுக்கு இருக்கான்னும் உங்களுக்குத் தெரியாது. உங்க ஆசையிலே எதையும் விசாரிக்காமல் இப்படிச் செய்துட்டீங்க. இப்படிச் செய்யலாமா? ராஜா செய்தால் நாமெல்லாம் என்ன செய்யறதுன்னு பேசாம இருந்துட்டோம். அதனால்தான் உங்க பேரை முட்டாள் பட்டியல்லே முதல்லே சேர்த்துட்டோம்..' என்றார்.

ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 'அப்படியா நீ நினைக்கிறே? அவன் குதிரையை வாங்கி வந்து தந்துவிட்டான் என்றால்.. நீ என்ன பண்ணுவே?' என்று கேட்டார்..

உடனே மந்திரி சொன்னார், 'முட்டாள் பட்டியலில் உங்க பேரை அடிச்சிட்டு அவன் பேரை எழுதிக் கொள்வேன்! அந்த இடம் காலியாக இருக்காது...!'

*
நன்றி : வானதி பதிப்பகம்

Sunday, March 13, 2016

எம் டி வாசுதேவநாயர் சிறுகதை (தமிழில் : யாழினி)

காதலும் பார்க்கர்பேனாவும் மற்றும் சகோதரியின் திருமணமும் - எம் டி வாசுதேவநாயர்.

தமிழில் : யாழினி

'ரக்த்தம் புரண்ட மண் தரிகள்' (ரத்தம் புரண்ட மண் துகள்கள்) நூலிலிருந்து...
*
மனதில் பெரும்தூரங்களில் மறைத்து கிடந்த  நினைவுகளை  கிளைத்துப்  போடத்தான்  வந்திருப்பான் இந்த பேனா வியாபாரி. என் நிம்மதியை கெடுக்கவே வந்திருக்கிறான்.

இன்றைய பகல் முழுவதையும் அறைக்குள்ளேயேதான் கழித்தாக வேண்டும்.மண் பானை நிறையத் தண்ணீரும், ஆறாம் நம்பர் பீடியையும்  பரமேஸ்வரன் கொண்டு வந்திருந்தான். ஜீவனுள் குளிரை பரப்புகின்ற நீர் பானை நிறைய. நாலு மிடறு தண்ணீர் ஒரு பீடி. மீண்டும் தண்ணீர். மீண்டும் பீடி. இப்படியே இந்தப் பொழுதைக் கழித்தாக வேண்டுமென்பதுதான் இன்றைய நிலை.

ஜன்னல்களையும் கதவுகளையும் இறுக்க அடைத்து அறைக்குள்ளேயே முடங்க வேண்டும். இல்லையெனில் என் தனிமைக்கு உபத்திரவம் நேரும் வகையில் யாரேனும் வரக்கூடும். நான் மனிதர்களை அதீதமாக நேசிப்பவன் என்று பலரால் கருதப்படுகிறேன். அதில் எனக்கு சந்தேகந்தான். என்னை நெருங்கி வருகிறவர்கள் வெகுசிலர்தான். பெட்டிக்கடைக்காரன். பக்கத்து டீக்கடைக்காரன். இந்த வீட்டு சொந்தக்காரன் மற்றும் சில நண்பர்கள். இவர்களையும் வெறுக்கவும் பயப்படவும் செய்கிறேன். அதற்காகத்தான் கதவுகளில் மறைந்தே கிடக்கின்றேன். யாராவது அழைத்தால் கதவில் விடுபட்ட சிறிய துவாரம் வழியாக கண்டுகொள்ள முடியும். கீறலைப்போன்ற சிறிய துவாரம். இவர்களைத்தவிர வேறு யாருக்காகவும் கதவு திறக்கப்படுவதேயில்லை. வெகு நேர அழைப்புகளில் நா குழறி நான் உறங்கியிருப்பேன் என்றோ அல்லது செத்திருப்பேன் என்றோ போய்விடுவார்கள். செத்தவனிடத்தில் கடனை மீட்ட முடியாதே.

அணைந்த பீடியின் முனையை தீமூட்டி நாற்காலியில் குறுகி வழிந்தேன். மனத்தினூடே ஏதேதோ  நினைவுகள். பணக்காரனாவதைப்போலவும்  காதலியின் தந்தை என்னிடம் மன்னிப்பு கேட்பதை போலவும். இப்படியே பலதுமாக....

நடந்தேறவியலாத நினைவுகளை கலைத்ததது யாரோ கதவை தட்டும் சத்தம்தான். பயமும் வெறுப்பும் தோன்றுகிறது. ஒருவேளை தபால்காரனாவிருக்குமோ...? அவனது வரவைத்தான் மனப்பூர்வமாக எதிர்பார்க்கிறேன். கதவு துவாரத்தின் வழியாக பதுங்கி பார்த்தேன். அறிமுகமில்லாத ஒருவன் நின்று கொண்டிருக்கின்றான்.

" டப்.. டப்... "

"கொஞ்சம் கதவைத் திறக்கறிங்களா..? "

மறுபடியும் பார்த்தேன். இதுவரை பார்த்திராதவன். கடன் மீட்டிச்செல்ல வந்தவன் போலில்லை. இவனை முதல் முறையாகத்தான் பார்க்கிறேனென்பதை ஊர்ஜிதப்படுத்திய பிறகு சற்று கவுரவத்துடன் சத்தமாக கேட்டேன்.

" யார்ரா அது.."
  
"எக்ஸ்க்யூமி .."

"எவன்டான்னு கேக்கறேன்ல."

"உங்களப் பாக்கணும் சார்..."

"எவன்டானு கேட்டேனே..."

அவன் பெயரைக்கூறினான். நிச்சயமானது. நிச்சயமாக நான் பார்த்திராதவன். உள்ளே வந்தது எங்காவது கடன் வசூலிக்க வந்த ஏஜண்டாக இருந்தால் கொன்றுவிடவேண்டும். கதவைத்திறந்தேன். உள்ளே வந்தான். கருப்பான அதிக உயரமில்லாத மனிதன். வியர்வையில் நனைந்து இருக்கின்றான்.

"என்ன...?"

விவரம் இதுதான். வேலைதேடி பட்டணம் வந்திருக்கின்றான். எனது கதைகளை படித்தும் அதற்கு ஆராதகனாகவும் இருக்கின்றான். நல்ல கலைஞனாகும் எண்ணமுள்ளவன். ஆனால் பட்டணம் வந்ததது கலைஞனாகவல்ல.

ஊருக்குத் திரும்பிச் செல்லவேண்டும். கையிலுள்ள பணமெல்லாம் செலவாகிவிட்டது. அவனிடத்தில் ஒரு நல்ல பேனா பார்க்கர் பேனா இருப்பதாகவும், அதை வாங்கிக்கொண்டு கொஞ்சம் பணம் கேட்கிறான்.

"இதயம் நிறைந்த எனது ரசிகனே, நீ தவறு செய்துவிட்டாய்.. எனது பர்சில் கரன்சி நோட்டிருக்குமெனக் கருதிய நீ யாரப்பா..?" என கேட்கத் தோன்றியது. கேட்கவில்லை.

‘’இந்தப் பேனாவ பாக்கெட்ல குத்திட்டு  நடக்கிறளவுக்கு  நானில்ல. இதுவரைக்கும் உபயோகப்படுத்தினதுமில்ல.’’

அவனிடத்தில் அனுதாபம் தோன்றியது. எந்தக் கஷ்டங்களையும் அறியாது வளர்ந்திருக்கின்றான். உலகத்தை இப்பொழுதுதான் அறியத்தொடங்குகிறான். பணமிருந்தால் கொடுத்திருக்கலாம். பேனாவை வாங்காமலே. பேனா  எனக்கு அவசியப்படுகிறதென்றாலும்..எழுதுகோலில்லாத எழுத்தாளன் நான்.

" நீங்க வேற எங்காவது போய் கேளுங்க" என அமைதியாக கூறினேன்.

அவன் மீண்டும் வேதனையுடன் கேட்டான்.

"ஏன் அப்படி சொல்றீங்க..?"

"கையில் பணமிருக்கறவங்க இங்க ஏராளமா இருக்காங்க. அவங்களத்தான் நீங்க கேட்டிருக்கணும் "

”ஒரு பத்து ரூபாய் போதும் சார். பெரிய உதவியா இருக்கும்."

பத்துரூபாய். கேட்கவே நடுக்கமாக இருக்கின்றது, அதைப் பார்த்து வெகு காலமாகிவிட்டது.

"ஒரு விஷயத்த தெரிஞ்சிக்குங்க.."

"என்ன..?'

"எங்கிட்ட ஒரு பைசாக்கூட இல்ல. ரெண்டு நாளாச்சு நான் சாப்பிட்டு. இன்னைக்கு ஒரு டீக்கூட குடிக்கல. வெளில போகணும்னா ஒரு அழுக்கில்லாத துணிகூட இல்ல."

"சார் நீங்க.... நீங்க நினைச்சா" என்றவன் பேனாவை வெளியில் எடுத்தான். இளம்  நீல நிறமுள்ள தங்கம் மின்னுகிற பார்க்கர் பேனா .

"நீங்க ஒண்ணு செய்யுங்க. அதோ அங்க தெரியற பங்களா வீட்ல கேட்டுப்பாருங்க'

ஏதோ முனகியபடி வெளியேறினான். ஜன்னலையும் கதவையும் இறுக்க அடைத்து, பழைய நிலைக்கே மீளுகிறேன். பேனாக்காரனையும், அவனின் கஷ்டங்களையும் மறக்க முடிந்தது. ஆனால் பேனா மனதில் இருந்து மறையவில்லை. இளம் நீல நீறமுள்ள தங்க நிற மூடியுடன் பார்க்கர் பேனா.

என்னிடத்திலும் அப்படி ஒரூ பேனா இருந்தது. அதை இழந்திருந்தேன். இதைச்சுற்றி வேதனைகள் மட்டும்தான். ஓமனா தந்தது. தூரங்களுக்கு அப்பால், ஒரு சிறிய வீட்டில் என்னுடனான கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் ஒதுங்கி வாழ்கிறாள்.

சிறு வயதில் இருந்தே அவளைத்தெரியும் என்றாலும், அவளுடைய உருவம் சரியாக அவ்வயதுகளில் நினைவில்லை. ஆறுவருடங்களுக்கு முன்பிருந்த முகம் தான் மனதில் தேங்கி நகர்கிறது.

ஒரு வாழை இளம் கன்றை போல வெளிறி மெலிந்த பன்னிரெண்டு வயதிற்குச் சொந்தக்காரி. இறக்கம் கூடிய பாவாடையுடன் அமைதியாக இருப்பவள், இன்று போல் இல்லை.

களங்கம் அற்ற கண்களில் உலகம் முழுவதையும், நிரப்பியபடி என்முன் நிற்பாள். கதவில் சாய்ந்து, விரல் நுனியில் நீண்டு படர்ந்த நகங்களால் கீறீய படியே, நான் எழுதுவதையோ, படிப்பதையோ பார்த்துக்கொண்டிருப்பாள். என்ன எழுதுகிறனென கேட்டதே இல்லை. ஆனால் அவள் கண்களுள் ஒராயிரம் கேள்விகள் இருக்கும்.

" என்ன ஓமனா?"

பேசமாட்டாள், முகத்தினின்று வழியத்தொடங்கும் வெட்கத்தோடே, கதவில் மறைந்து கொண்டு மறுபடியும் என்னைப்பார்க்கத் தொடங்குவாள். அவள் வளர்ந்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன்.

ஊரைவிட்டு வந்த பிறகுதான் அவளை அதிகமாக நினைக்கத் தொடங்கினேன். என் கனவுகளின் பெரும்பாகமாய் இருந்தாள். நூற்றுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் சிறிய அறைக்குள் தனித்திருக்கும் போதும், கிராமத்தைப் பற்றியும், அங்குள்ள சொந்தங்களையும் சிநேகிதர்களையும் நினைக்கின்றேன். தென்னந்தோப்புகளும், மணற்பரறப்பும் கவிதை வழிகின்ற கண்களோடு, நினைவுகளில் தெரிகின்ற அவள் முகமும்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறேன். வீட்டில் உள்ளவர்க்கெல்லாம், பிரியப்பட்டவனாக இருந்தேன் அன்று. இன்று இல்லை. கல்லூரியில் படிக்கும் போது ராஜாவாக சுற்றித்திரிந்தேன். தற்போது வேலைக்காக காத்திருக்கும் ஒரு இளைஞனாக நிற்கின்றேன். ஓமனா வளர்ந்திருக்கிறாள். ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறாள். அவளது கண்களில் நட்சந்திரங்கள் உதிக்கத்தொடங்கியிருக்கிறது. கண்ணங்களில் ரோஜா இதழ் விரிகிறது. நான் சென்றதும் அவள் என்னை காண ஓடி வந்திருக்கவில்லை. அவளுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தான் பலமுறை தெளிவதும், மறைவதுமாக இருந்தது அந்த வானவில்.

சுவர்களுக்கு பின்னால் அவளின் சுவாசம் என் காதுகளுக்கு எட்டியது. மெள்ள கண்ணாடி வலையல்கள் இடைவெளி விட்டுவிட்டு சிரிக்கின்றது. சன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு சிகரெட் புகைத்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். வளையோசை கேட்டுத் திரும்பினேன். ஓமனா நிற்கின்றாள்.

" என்ன கேக்கறதுன்னு தெரியலையா?"

”இங்கதானிருந்தியா"

பதில் இல்லை. முகம் தாழ்த்தி, நாற்காலியை விரல்களால் சுரண்டிக்கொண்டிருந்தாள்.

”ஓமனா என்னை மறந்திட்டியா?”

”நீங்க தான் மறந்திட்டீங்க”

………. மெளனம்.

எதுவும் பேசாதிருந்தாள்.

படபடக்கின்ற இதயத்தை நீவிக்கொண்டு கூறினாள்

”மறந்து வாழ முடியாது”

எல்லாம் மறந்த நிசப்தங்களில் பேசவற்ற நிலைக்கு சஞ்சரிக்க விட்டிருந்தாள். சினேகமுள்ள ஒரு புறாவைப்போல என் நெஞ்சோடு பற்றிக்கிடக்கிறாள். என் முத்தங்களுக்காய் காத்திருக்கிற அவள் உதடுகளிலும் கன்னங்களிலும் முத்தமிட்டேன்.

”ஓமனா நான் உன்னவன்.. உனக்கு மட்டுமானவன்” வெட்கம் கொண்டு சிவந்து கண் மூடி நிற்கின்றாள் முத்தம் வேண்டி.

”ஓமனா”

”ம்”

”உன்னைப் பார்க்கத்தானே வந்தேன். எனக்கு எதுவும் தரமாட்டியா?”

”என்ன வேணும்?”

”முத்தம்”

என் கையை கிள்ளிவிட்டு சொன்னாள்

”தேவையில்லாதது பேசாதிங்க”

”தேவையானதைத்தானே கேட்டேன்”

”ம்ஹூம்”

”தரலைன்னா இனிமேல் உன்னைப்பார்க்க வரவே மாட்டேன்”

சரியென்று வெட்கத்துடன் மெதுவாக என் உதடுகளில் உதட்டை ஒற்றி எடுத்தாள். காலடி ஓசை கேட்கவே சட்டென விலகி நின்றோம். குறத்திப்பூனை. எனக்கு சிரிப்பு வந்தது. அவளும் சிரித்தாள்.

”இந்தப் பூனையைக் கொல்லணும்”

”கஷ்டப்படுவேன், அது நான் வளர்க்கிற பூனை”

”அது தான் இவ்ளோ கொழுப்பு, பொறாமை.. பார்க்கிறது பாரு”

பூனை புரிந்து கொண்டாற்போல் வேறு அறைக்கு ஓடியது.

”பட்டணத்தில் இருந்து வரும்போது எனக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா’

எனது பையை பரிசோதித்தாள். ஒன்றும் இல்லை.

”இதென்ன புக்”

”பாரு”

புத்தகத்தை வெளியில் எடுத்துப் படித்தாள்.

”புத்தகத்தை வெளியிட்டிருக்கீங்க. எனக்கு ஒரு காப்பி அனுப்பலை’ என்றாள் கோபமாக

”உனக்காகத்தான் கொண்டுவந்தேன்”

”பொய், இப்பத்தானே சொல்றீங்க”

”நிஜமா, உனக்கு கதை படிக்கப்பிடிக்குமா?”

“எல்லோரும் எழுதறதைப் படிக்க மாட்டேன் கொஞ்ச பேரோடது மட்டும் தான்’

”யாரோடது?”

”ஒருத்தர் இருக்கார்”

”யாரது?”

”ம்ம்ம்….தெரியாது’

நான் அவளிடமிருந்து புத்தகத்தை வாங்கி, ஏடுகளை புரட்டிக்கொண்டு

”பேனா குடு”

”ஏன் உங்க கிட்ட இல்லையா?”

”இல்ல”

”எழுத்தாளர் நடக்கிறதெல்லாம் எழுதணுமே”

”என்கிட்ட பேனா இல்ல. என்னோடது எல்லாமே ஒரு குறும்புக்கார பொண்ணு பறிச்சுட்டா’

”நிஜமாத்தான் சொல்றீங்களா, பேனா இல்லையா?”

”இல்ல”

அவள் பேனா எடுத்து வந்தாள். இளம் நீல நிறமுள்ள தங்கம் போல் மின்னுகிற பார்க்கர் பேனா. அவளுடைய அப்பா கொடுத்தது. அவர் உத்தியோகமுள்ளவர். புத்தகத்தின் உள் தாளில், ‘என் ஓமனாவிற்கு’ என்று எழுதி நீட்டிய கையெழுத்து ஒன்றையும் இட்டுக்கொடுத்தேன்.

அன்று இரவே திரும்பினேன். ஏனோ இதயம் கனத்திருந்தது. வயல்வெளியில் இருந்து மண் மேடேறி திரும்பிப்பார்த்தேன். மூங்கில் காடுகளும், குளமும், சுண்ணாம்பு பூசிய வீடுகளும் தெரிந்தது. நினைவுகளில் இனிக்கின்ற கனவுகளோடு அந்த நீல நிற பாவாடையும் மெல்ல மறையத் தொடங்கியது.

பட்டணத்திற்கு திரும்ப அதிகாலை ஆகிவிட்டது. அறைக்கதவை திறக்க சாவியை எடுக்கும் போது தான் பார்த்தேன். இளம் நீல நிறமுள்ள தங்கம் போல் மின்னுகிற பார்க்கர் பேனா. அதைச்சுற்றி ஒரு துண்டுக் காகிதம். பிரித்துப் பார்தேன். இடப்பக்கத்தில் சாய்த்தபடி எழுதியிருக்கிறாள்.

“Forget me not”

பேனாவையும் துண்டு காகித்தையும் நெஞ்சில் பதித்தபடி, நாற்காலியில் சாய்ந்தேன். அவளது சிநேகம் அவசியப்படுகிறது எனக்கு.

அவள் செய்தது முட்டாள்தனம்தான். விலை கூடிய பார்க்கர் பேனா அது. பேனா எங்கே என அம்மா கேட்டால் என்ன சொல்வாள். என்னிடத்தில் கொடுத்ததையா? எங்காவது தொலைந்ததென்றோ யாராவது திருடி விட்டார்களென்றோ கூறியிருப்பாள். எதைச் சொல்லி இருந்தாலும் அதற்குத்தக்க கிடைத்திருக்கும்.

அந்தப்பேனா எனக்கு ஜீவனாக இருந்தது. யாருக்கும் கொடுக்கவில்லை. நண்பர்களுக்கு அதில் எதிர்ப்புதான். பெண்களுக்காக வக்காளத்து செய்பவன் என்று நினைத்தார்கள். அதில் எனக்கொன்றும் வருத்தம் இல்லை.

பேனா இன்னும் என்னிடத்தில் தான் இருக்குமென்று நினைத்திருப்பாள். ஆனால் பேனா என்னிடத்தில் இல்லை. போன வருடம் தான் அதை இழந்தேன்.

படிப்பு முடிந்ததும் தான் எதார்த்த வாழ்க்கைக்கும் கனவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறியத்தொடங்கினேன். வேலைக்கென்ற எனது எல்லா முயற்சிகளும் பயனில்லாமல் போனது. இறுதியில் ஒரு வேலை கிடைக்காது இவ்வீட்டிற்கு வருவதில்லை என்ற லட்சியத்தோடு வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கெல்லாமோ சுற்றிக்களைத்து கடைசியில் இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தேன். இங்கு ஏற்கனவே பழக்கப்பட்ட பத்திரிகைகளும் நண்பர்களும் இருந்தனர். துன்பங்களால் நிறைந்த கசப்பான அனுபவங்கள், மீண்டும் மீண்டும் தன்னை வரிசைப்படுத்திக் கொண்டே இருந்தது. பட்டினிகளை அறிந்தேன். நல்ல நட்பையும் அதன் ஆழத்தையும் தெரிந்து கொண்டேன்.

ஊரைப்பற்றியும் உறவுகளைப்பற்றியும் நினைக்கவேயில்லை. சகோதரர்கள் தாய் தகப்பன் எதையும் சிந்திக்கவேயில்லை. கையில் சல்லிக்காசில்லாது பட்டினிகள் தேகத்தை தளர்த்து போட்டிருந்தாலும், உதவிகேட்டு வீட்டிற்கு எழுதவில்லை. சகோதரர்கள் குடும்பமாக இருக்கிறார்கள். பிறகு அப்பாவிற்கு என் நிலை எழுதலாமென்றால் தன்மானம் இழக்கவும் விரும்பவில்லை. அப்பா ஏற்கனெவே என் விதியை நிர்ணயித்தவர். ‘உனக்கும் எனக்கும் எந்த உறவுமே இல்ல’. அப்பாவை எந்த குறையும் சொல்ல நான் தயார் இல்லை கௌரவமும் அபிமானமும் நிறைந்த குடும்பத்தலைவர். மருமக்கள் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள். ஊரில் அப்பாவிற்கென்று நல்ல பேர் உண்டு, அப்படி ஒருவரின் மகன் சமூகத்தின் அவலங்களையும் கழிவுகளையும் எழுதி நிரப்புவதை எந்த தகப்பன் விரும்புவார். அது இயல்புதானே. அது தீவிரமானது தன் மகனுக்கொரு காதல் இருப்பது. அதுவும் அப்பாவிற்கு தெரியாமல் இருப்பதுதான்.

”ஏன்டா மீதி இருக்கிற நாலு பசங்க எனக்கு ஏதாவது கெட்ட பேர் வாங்கி தந்திருக்காங்களா?”

அது சரி தான். வாழ்க்கைத்துணையை தீர்மானித்ததன் பேரில்தான் அவர்களின் காதலும் அமைந்திருந்தது. அப்படியென்றால் லைசன்ஸ் உள்ள காதல். கடைசியாக அப்பாவின் கட்டளையும் இதுதான்.

’இனிமேல் அவளுக்கு கடிதம் எழுதக்கூடாது, அவள் வீட்டிற்கு போகக் கூடாது, அவளை விட்டுடு’

நான் அமைதியாக இருந்தேன்.

”என்னடா பதில் பேசமாட்டேங்கறே?”

”அவளை விடமுடியாது, அதுக்காக நீங்க காத்திருக்க வேண்டியதில்லை” என்றேன். அப்படி முகத்தில் அடித்தாற் போல் அப்பாவை பேசியது வருத்தமேதுமில்லை. இது போல காட்சிகளை சினிமாவிலும் நாடகங்களிலும், கதைகளிலும், இப்போது என் வாழ்க்கையில் நிஜமாகவும் பார்க்கிறேன்.

பணத்திற்காக யாரையும் அணுகவில்லை. பத்திரிக்கையில் இருந்து அவ்வப்போது ஏதாவது பணம் கிடைக்கும். சில நேரங்களில் நண்பர்களின் தயவில் காப்பியோ உணவோ கிடைத்துவிடும். உலகத்தில் எல்லாவற்றிலும் இருந்து அகன்று கரி படிந்த நான்கு சுவர்களை கொண்ட அறையில் சுருண்டு கிடக்கிறேன். இதற்கிடையில் தான் வீட்டில் இருந்து கடிதம். முகவரி ஒரு பத்திரிகை அலுவலகத்தில் இருந்து. எனக்கென்று சொந்தமாக முகவரி இல்லை. பெரியண்ணா தான் எழுதி இருக்கிறார்.

’….. வீட்டை விட்டுப் போனதிலிருந்து உன்னைப்பற்றி எந்த விவரமும் இல்லை. ராதாவிற்கு திருமணம் நிச்சயத்திருப்பது உனக்கு தெரியாது. …..’

ராதா என் தங்கை, அம்மாவின் அக்கா மகள்.

’…. கிழக்கு கோபாலகிருஷ்ண நாயர் தான் வரன்…..’

கோபாலகிருஷ்ணனைப் பார்த்திருக்கிறேன் அவ்வளவு நெருக்கம் இல்லை. நாற்பது வயதிருக்கும்.

’….ஏதோ உத்தியோகத்தில் இருக்கிறார்…இருநூறு ரூபாய் சம்பளம். நம்ம பாக்கியம்..இந்தக் கல்யாணம் முடிஞ்சா நமக்கு எந்த கஷ்டமும் இல்லை…நீயும் முடிந்தவரை ஏதாவது உதவணும்…’

நல்ல காரியம். ராதா குழந்தையாக இருந்தபோதே அப்பா இறந்துவிட்டார். அவளுக்கு ஒன்பது வயதாகும்போது அம்மாவும். என் அம்மா தான் அவளை வளர்த்தாள். அம்மா அவளிடம் பிரியமாக இருந்தாள் பெண் பிள்ளை இல்லாத காரணத்தால். எனக்கும் ஒரு தங்கை இருக்க வேண்டும் என ஆசை இருந்தது, ராதாவை சொந்தத்தங்கையாக நினைக்க அதுவும் காரணம். பெரியம்மா எப்போதும் கூறுவாள்

“ நீ தாண்டா அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கறது”

பெரியம்மா இறந்திலிருந்து எந்த விதத்திலும் துன்பம் நேராது பார்த்துக்கொண்டோம். அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் அம்மாவின் கனவு. அது நிறைவேறும் முன் அம்மாவும் இறந்துவிட்டாள்.

இதோ திருமணம் ஆகப்போகிறது. ஒரு மனைவியாகவும் தாயாகவும் எனது தங்கை சந்தோஷமாக வாழப்போகிறாள். நன்றாக வாழவேண்டும். திருமணத்தை கம்பீரமாக நடத்த வேண்டும். எங்கள் வீட்டில் இனியொரு விசேசம் இல்லை. நானும் ஏதாவது உதவியாக வேண்டும். ஆனால்……..

அண்ணன் நினைத்திருப்பார். நான் நல்ல உத்தியோகத்தில் பணப்புழக்கத்தில் இருப்பதாக. திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கிறது. போகவேண்டும்.

என் செல்லத்தங்கைக்கு திருமணம். அதைக் கண் கூட காண வேண்டும். ஆனால் நாலு பேர் மத்தியில் கம்பீரமாக நிற்கப் பணம் வேண்டுமே. ஒரு நல்ல சட்டை வேட்டி கூட இல்லை. போக முடியுமா. நான் அங்கு இல்லை என்றாலும் என் வாழ்த்துக்கள் அவளுக்கு எப்போதும் இருக்கும்.

நான் கல்லூரியில் சேர பணம் குறைவாக இருந்தபோது ராதாவின் செயினை அடகுவைத்துத்தான் சேருவேன். அவள் அதற்கு வருத்தப்படவில்லை. அண்ணன் படித்து பெரியாளாக வேனும். அதுதான் அவள் எண்ணம். செயினை திருப்பவே இல்லை. அவதி காலம் முடிந்து ஏலத்திற்கும் போனது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு தர்மசங்கடமாக இருக்கும். அதை கவனித்தவள்,

”எனக்கு செயினோ வளையலோ ஒன்னும் வேணா, அதை ஏலத்தில போனதால எனக்கு எந்த வருத்தமும் இல்ல”

அவள் கல்லூரியில் படிக்கும்போது எப்போதாவது கடிதம் போடுவாள். நான் சோம்பேறி என்பதால், பதில் எழுவதில்லை. .. ஓமனக்காவை பார்த்தேன். நீங்க லெட்டர் போட்டிருக்கிறதா சொன்னாங்க… எனக்குத்தான் பதிலே போடறதில்லை… என்ற குறையோடுதான் இருக்கும் அக்கடிதம்….. ஓமனாவிற்கு ஃபோட்டோ புக்கெல்லாம் அனுப்பறீங்க…எனக்கு ஏன் அனுப்பலை….

லீவில் ஊருக்கு வந்தால் என் பெட்டியை ஆராய்ந்துவிடுவாள். ஓமனாவின் ஃபோட்டோவைப்பார்த்து பெரும்பாடு படுத்திவிட்டாள். கடைசியில் ஒரு பட்டுப்பாவாடை வாங்கிக் கொடுத்தால் சொல்ல மாட்டேன் என்ற பேரத்தில் தான் அடங்கினாள். அவளின் தேவைகளையும் குறைகளையும் என்னிடம் தான் கூறுவாள். சண்டையிடுவாள். கோபப்பட்டு சட்டென சகஜ நிலைக்கும் வந்துவிடுவாள். ஒரு திருவிழாத் தும்பியைப்போல துள்ளிப்பறந்தவள் இனி குடும்பஸ்திரியாகப் போகிறாள்.

திருமணத்திற்குப் போக முடியாது, வாழ்த்தும் ஏதாவது பரிசும் அனுப்ப வேண்டும். நான் போகவில்லை என்றால் வருத்தப்படுவாள். வாழ்வில் கழிவுத்தடாகங்களில் நான் தத்தளிப்பதை அறிந்திருக்கமாட்டாள்.

கல்யாணப்பரிசாக என்ன அனுப்புவது.. செயின்.. அதற்கு நிறையப் பணம் வேனுமே. ஒரு வாட்சாவது… அதற்கும் பணம் வேண்டும். ஒரு சேலையாவது கொடுக்க வேண்டும். நாற்பதோ ஐம்பதோ ரூபாய் வேண்டுமே.

நேரம் இருட்டி விட்டது. விளக்கைப் பற்றவைத்து மீண்டும் யோசிக்கத் தொடங்கினேன். பிரசாத் நினைவிற்கு வந்தான். புகைபடிந்த லாந்தர் வெளிச்சத்தில் பிரசாத்திற்கு கடிதம் எழுதினேன். ஐம்பது ரூபாய் உடனே அனுப்பவும். அச்சிடுவதற்காய் வைத்திருக்கும் புத்தகக்கணக்கில் சேர்த்துக்கொள்ளவும். பணம் உடனே அனுப்பவும்.

14-ஆம் தேதி திருமணம். 12ஆம் தேதியாவது பார்சல் அனுப்பவேண்டும். நாட்களை எண்ணிக் காத்திருந்தேன். ஒன்பது….பத்து..பதினொன்று…பனிரெண்டு..

தபால்காரரை எதிர்பார்த்திருந்தேன், பணம் இல்லை. என்ன செய்வேன். எதுவும் செய்யவில்லை என்றாலும் கஷ்டமாகிவிடும். பணம் வேணுமே ஐம்பது ரூபாய். நாற்பது ரூபாயாக இருந்தாலும் போதும். பணம் கிடைக்க என்ன செய்வது. திருடலாமா? எவனுடையவாவது இரும்புப்பெட்டியில் பூட்டி இருக்கும் பணத்தை எடுப்பது தார்மீகமாக எந்தத்தவறும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. அதற்குண்டான திறமையும் எனக்கில்லை. திருட்டென்றாலும் திறமை வேண்டுமே. நன்மைகளுக்கான சாஸ்திரங்களை மட்டும் கற்றிருந்தேன். அது தேவையற்றதென்று தோன்றியது. யோசித்திருக்கையில் மேசை மேலிருந்த பார்க்கர் பேனா தட்டுப்பட்டது.

பட்டணத்தில் பிக் பஜாரில் பக்கத்து வீட்டில் இருக்கும் கடையில் செகண்ட் ஹேண்ட் பொருட்கள் வாங்கிறார்கள். ஆனால் பார்க்கர் பேனாவை எப்படி விற்க முடியும். ஓமனா நேசத்தோடு தந்ததாயிற்றே. அதில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். மாதம் இருபதோ முப்பதோ தேடித்தருவதும் அதுதான். இப்பேனாவை முன் வைத்துதான் அவளை சொப்பனங்களில் காணுகிறேன். அதை விற்பது கடினமான வலியாகுமே. வேறு எந்த வழியும் இல்லை. தான் ஆசையாகக் கொடுத்த பேனா விற்கப்பட்டுவிட்டதென்றால் என்ன நினைப்பாள்? அவள் என்னுடையதானவள். இக்கட்டான இந்த நிலைமையைக் கூறி மன்னிப்பு கேட்டால் மன்னிக்காதிருப்பாளா...? ராதாவின் திருமணம் இன்னொரு தடவை நடக்கப்போவதில்லையே. பேனா இன்னொன்று வாங்கலாம்.

கொளுத்துகிற வெயிலில் நடக்கத்தொடங்கினேன். செருப்பும் இல்லை…குடையும் இல்லை. ஒரு பொருளை விற்பதால் குறைவாகத்தான் கருதுகிறார்கள், கௌரவம் இடிந்து விழுவதாயும். ஆனால் அதெல்லாம் பழங்காலம் ஆகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை இனி தகர்ந்து விழும்படியாய் கௌரவக்கோட்டை எதுவும் இல்லை.

முன்பொருநாள் இது போன்றதொரு விற்பனை நிலை படிக்கும்போது நிகழ்ந்தது. பரிட்சைக்குப் பணம் கட்ட எனது மோதிரத்தை விற்க வேண்டியிருந்தது. யாரிடமும் சொல்லாமல் பதுங்கி வெட்கித்தான் அந்தக் கடைக்கும் சென்றிருந்தேன். இன்று யாராவது கேட்டால் என் காதலி தந்த பேனாவை விற்கப்போகிறேன் என்று உரக்கக்கூறுவேன்.

சுட்டெரிக்கும் வெயில். கடைக்குள் செல்ல சங்கடமாக இருக்க காரணம் அழுக்கு நிறைந்த என் உடை. சவரம் செய்து மூன்று மாதங்களாகிவிட்டதால் தாடி அதிகமாக வளர்ந்திருந்தது. பார்ப்பவர்கள் என்னைப் பிச்சைக்காரன் என்றோ, திருடன் என்றோ கருதுவார்கள். போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவார்களோ.

எந்தக் குழப்பமும் இல்லாமல் பேனாவை விற்றேன். அதிக நேரம் அவனிடம் கெஞ்சித்தான் முப்பத்தைந்து ரூபாய் வாங்கினேன், பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியில் வந்தேன். பசியும் தாகமும் வாட்டியது. சேலை வாங்கி முடித்ததும் தான் ஒரு காப்பி குடிக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.

-சில்க் பேலஸ்- முன்னூறு நானூறு என்று விலைப்பிடித்த சேலைகள். என் பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல் வெகுநேரம் தேடி ரோஸ் கலரில் ஒரு புடவை எடுத்தேன். முப்பத்தி இரண்டு ரூபாய்.  ராதாவிற்கு ரோஸ் கலர் பிடிக்கும். புக்கிங் டிப்போவில் இருக்கும் இளைஞன் எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவன்தான். அழகாக பேக் செய்து தபாலில் அனுப்பியதும்தான் எனக்கு சுவாசம் சீரானது.

இரண்டு பேப்பர் ஒரு பென்சில் வாங்கியது. மீதி பதினாலனா இருந்தது. ஹோட்டல் மதினாவிற்கு சென்றேன்.

மாலையில் இரண்டு கடிதம். ஓமனாவிற்கும் ராதாவிற்கும் எழுதினேன். மைதீர்ந்து விட்டதால் பெண்சிலில் எழுதுகிறேன் என்று ஓமனாவிற்கு ஒரு பொய்யையும் எழுதினேன்.

ஒரு வாரத்திற்குப்பிறகு ஓமனாவின் கடிதம் வந்தது,

’…..ராதாவுடைய திருமணம் நல்ல படியாக முடிந்தது. நீங்க வருவீங்கன்னு நினைச்சுத்தான் கல்யாணத்திற்குப் போனேன்.. நமக்கு காத்திருக்க மட்டும் தான் விதி… ராதா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வசதியானவங்க…அவளுக்குக் கொண்டு வந்த பொருளெல்லாம் விலைமதிப்பற்றது. சேலையெல்லாம் முதல் தரமானது. கல்யாணப்பரிசுகள் நிறைய கிடைச்சிருக்கு. இவ்வளவு விலை குறைவான சேலையை நீங்க அனுப்பினது ராதாவிற்கு வருத்தம் தான்….கல்யாணத்திற்கு மறுநாளே ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க…வேலைக்கு குட்டிமாலுவை கூட்டிட்டு போயிருக்கா..அந்த சேலையை அவளுக்குத்தான் கொடுத்தா…. கேட்டதற்கு அந்த சேலை வேலைக்காரிக்குத்தான் சரியாயிருக்குன்னு சொன்னா.. எனக்குப் பிடிக்கல..கஷ்டமா இருந்துச்சு….இனி எப்ப உங்களைப்பார்ப்பேன்….’

இப்படியே கடிதம் நீளுகிறது.... கடிதம் படித்ததும் நீங்கள் நினைத்ததைப்போல நான் வருத்தப்படவில்லை.ஒரு உத்தியோகஸ்தனின் மனைவியானதும் என் தங்கைக்கு தன்னம்பிக்கை அதிகமாயிருக்கிறது. சேலையின் தரம் தெரியுமளவிற்கு முன்னேறி இருக்கிறாள். அவளுக்கு வாழ்க்கை உன்னதமாக கிடைத்திருக்கிறது.

ராதா நலமாக இருக்கிறாள். ஒரு பெரிய பங்களா வீட்டில் எந்த கஷ்டமும் இல்லாது இருக்கிறாள். நலம் விசாரித்து மூன்று மாதத்திற்கு முன்பு கடிதம் எழுதி இருந்தேன்…பதில் அனுப்ப அவளுக்கு நேரம் இல்லாமல் போயிருக்கலாம்..

என் பிரியமான தங்கை... அவளின் உறவுக்கு சுபமிடுகிறேன். இதயத்தில் ஒற்றைத்துளி வெளிச்சம் ஓமனா. அவளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

*

நன்றி : யாழினி