Saturday, December 22, 2012

இதோ வருகிறார் இன்னொரு சூஃபி!

’மஞ்சக்கொல்லை சூப்பி’யான மாண்புமிகு ஜாஃபர்நானாவுக்குத்தான் அவருடைய மகத்துவமெல்லாம் புரியும். அருட்கொடையாளர்களின் தொடர்ச்சியாக எழுதுகிறார், ஆபிதீன் பக்கங்களை ‘அலங்காரம்’ செய்ய. நன்றி நானா!

***

அருட்கொடையாளர் - 12  :  அப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி 

ஹமீது ஜாஃபர்

கோடை விடுமுறைகளில் பெரும்பாலும் இரவு நேரங்களில் பள்ளிவாசல் மகிழ மரத்தடி இல்லையெனில் வீட்டு மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்குவதுண்டு. காரணம் இயற்கையான நல்ல காற்று, அப்போதல்லாம் மழை காலம் தவிர மற்ற காலங்களில் கொசுக்களின் தாலாட்டு கிடையாது. தூக்கம் வராத இரவுகளில் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். நிலா வெளிச்சம் இல்லாதபோது நட்சத்திரக் கூட்டங்களையே பார்த்து ரசிப்பது வழக்கம். ஆகா எத்தனை நட்சத்திரங்கள்? கோடிக்கணக்கில் இறைந்து கிடப்பதைப் பார்க்கும்போது அதில் ஒரு சுகம் கிடைப்பதை உணர்ந்தேன். ஆம் எத்தனை எத்தனை நட்சத்திரங்கள். அவைகளில் சில அருகில், சில தூரத்தில், சில வெகு தூரத்தில், இன்னும் சில ஒரு சிறிய புள்ளிபோல் வெகு வெகு தூரத்தில் எத்தனை அழகு? சில பல வர்ணங்களில் மின்னுகின்றன, சில மின்னாமல் ஒரே மாதிரியான வர்ணத்தில் ஒளிர்கின்றன; அவற்றுள்தான் சில மங்கலான வெளிச்சம், சில பிரகாசமான வெளிச்சம், சில வெள்ளை ஒளி, வேறு சில சிகப்பு நிறம், சில மஞ்சள் நிறம். கருப்பு நிற சேலையில் வைரக் கற்கள் பதித்தது போல் வர்ணஜாலம் காட்டும் வானத்தை ரசித்துக்கொண்டே அதனை ஊடுருவிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அவைகளின் தூரம், பரப்பளவு எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது-அல்லா எங்கே இருக்கிறான் என்ற கேள்வி மட்டும் குறியாக(?) தெரிந்தது. ஒன்று இரண்டு என்று ஏழு வானம் சொல்கிறார்களே! இந்த வானமெல்லாம் எங்கே இருக்கிறது? அல்லா எங்கே இருக்கிறான்? கேள்விதான் தோன்றியதே தவிர யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. ஒரு வேளை யாரிடமாவது கேட்டிருந்தால்...? வா காட்டுகிறேன் என்று.... நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஒரு நோன்பு மாதம் வால் நட்சத்திரம் தோன்றியது. சரியாக அதிகாலை நான்கு மணிக்கு சுபுஹுக்கு பாங்கு சொல்லும்போது தோன்றும், கீழ் வானம் வெளுக்கும்போது இருக்காது மறைந்துவிடும். பத்திரிக்கைகளில் பெரிதாக பீற்றி எழுதியிருந்தார்கள். விஞ்ஞான ஆசிரியர் ஸ்பெஷல் கிளாஸில் அதனை விளக்கினார். வால் நட்சத்திரம் வால் பகுதி எப்போதும் சூரியனுக்கு எதிராக இருக்கும் அது பல நூறு வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும். இது ஒன்று மட்டுமல்ல இதுபோல் பல நட்சத்திரங்கள் இருக்கின்றன, அதன் வால் பகுதி வாயு நிறைந்திருப்பதால் நமக்கு வால் போன்று தெரிகிறது என்றார். அதை தொடர்ந்து ‘பிரபஞ்சமும் ஐன்ஸ்டீனும்’ என்ற புத்தகத்தைப்  படித்தபோதுதான் ஒவ்வொரு நட்சத்திரமும் பல கோடி மைல் தூரத்தில் இருக்கிறது, அவை பூமியைவிட பெரிதானவை, சில சுய ஒளி உள்ளவை, சில சந்திரனைப் போல் சூரியனிடமிருந்து ஒளியை கடன்வாங்கி தருகிறது, தூரத்தை மைல் கணக்கில் சொல்வதில்லை அப்படி சொல்லப்போனால் ஒன்றுக்குப் பக்கத்தில் பல சைபர்கள் போடவேண்டியிருக்கும் எனவே ஒளிவருடம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு ஒளிவருடம் என்பது ஒளி தொடர்ந்து ஒருவருடம் பயணம் செய்யும் தூரம். மிக அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரம் பத்து ஒளிவருட தூரம் என்றெல்லாம் எழுதியிருந்ததைப் பார்த்தபின்தான் எனக்கு இதனைப் பற்றிய அறிவு சிறிதளவு கிடைத்தது. அப்படியானால் அல்லா ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்தில் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தேன்.

பெற்ற அறிவு போதவில்லை, கூடவே ஆர்வக்கோளாறு, இருக்கவே இருக்கிறார் நம்ம குரு, ஷ்டேஷன் மாஸ்டர் ஜீவராஜ் சார். அவருக்குப் பிடித்தது எலக்ட்ரிக் அண்டு எலக்ட்ரானிக் என்றாலும்கூட இதையும் கொஞ்சம் விளக்கினார். அதன்பிறகுதான் தெரிந்தது பிரகாசிக்கும் சில நட்சத்திரங்களை இணைக்கும்போது சில உருவங்கள் கிடைக்கின்றன என்று. கயித்துக் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு நானும் இணைத்துப் பார்த்தேன் டபிள்யு என்ற ஆங்கில எழுத்து கிடைத்தது. வேறு உருவம் கிடைக்கவில்லை. என் அறிவு அவ்வளவுதான். இப்படி இணைத்து முற்காலத்தில் இரவு நேரக் கடல் பயணம் செய்திருக்கின்றனர். ஏன் இப்போதும் போர்பந்தர், மும்பை, கோழிக்கோடுவிலிருந்து மரத் தோணிகளில் அராபிய வளைகுடா வரும் இந்திய மாலுமிகள், ஈராக்கிலிருந்து இந்தியா மட்டும் திரும்பாமல் ஆப்ரிக்க நாடான ஜான்ஜிபார், செக்கத்திரா தீவுகளுக்கும் சென்று திரும்புகின்றனர். அவர்களிடம் என்ன ஜிபிஎஸ் (Global Positioning System) இருக்கிறதா? இல்லை ஆட்டோ பைலட்டிங் இருக்கிறதா? பேருக்கு ஒரு ராடார். இல்லாவிட்டால் லைசன்ஸ் கிடைக்காது. ஆயிரமாண்டுகளுக்கு முன்னுள்ள அந்த காலத்து அறிவுதானே இப்போதும் கைகொடுக்கிறது. அந்த அறிவை கைவல்யப் படுத்தினார் ஒரு சூஃபி.

'சூஃபி' இந்த வார்த்தையைக் கேட்டாலே என்னைப் பொருத்தவரை  நினைவுக்கு வருவது ஆன்மீகம். சூஃபி என்ற வார்த்தைக்கு மொழியியல் வித்தகர்கள் நீண்ட விளக்கமளிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் சூஃபி என்று சொன்னாலே இறை வழியில் தன் சிந்தனைகளை செலுத்தி எண்ணம், சொல், செயல் அனைத்தையுமே இறைவனிடம் சமர்ப்பித்துவிடும் ஞானிகள் என்ற எண்ணம்தான் தோன்றும். இவர்களை இருசாரார்களாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் இறைக் காதலில் தன்னைப் பறிகொடுத்து அந்த இன்பத்திலேயே மதிமயங்கி இருப்பவர்கள். மறு சாரார் 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என தான் பெற்றதை அள்ளிக் கொடுத்து மக்களை நேர்வழி படுத்துபவர்கள். இதல்லாமல் வேறொரு வகையினர் இருக்கின்றனர், சூஃபி என்ற சொல்லை தன் பெயராக வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொண்டு திரிபவர்கள். இவர்களுக்கும் சூஃபிஸத்துக்கும் எந்த பொருத்தமும் இருக்காது, இருந்ததாகவும் தெரியவில்லை.

இதற்கெல்லாம் மாறுபட்டு முன்னொரு காலத்தில் ஒரு சூஃபி இருந்தார். தான் மேற்கொண்ட காரியத்தில் வெற்றி கண்ட வித்தகர். விஞ்ஞான உலகத்துக்கு விளக்கேற்றியவர். ஆம் வான் வெளியில் மின் மினிப் பூச்சிகளாய் ஜாலம் காட்டி கோலம் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். தந்தை சூஃபி என்றாலும் அரபிய வழக்கப்படி தன் பெயருடன் தந்தையிலிருந்து மூன்று நான்கு தலைமுறைப் பெயர்களை இணைத்துக்கொள்வதால் அவரும் சூஃபி என்றே உலகில் அறியப்படுகிறார்.  என்றாலும் சூஃபி என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர் என்றால் அது மிகையாகாது.

The Great Arabian Astronomer

அப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி (AZOPHY 903 - 986)

அப்துல் ரஹ்மான் அபுல் ஹுசைன் இபுன் உமர் இபுன் முஹம்மத் அல் ராஜி அல் சூஃபி என்ற நீண்டபெயருடைய இவரை மேற்குலகில், லத்தீன் மொழியில் அறியப்படுவது AZOPHY என்று.  பாரசீகத்தில் பிறந்த இவரைப் பற்றி , பிறப்பு 7 டிசம்பர் 903 லும் இறப்பு 25 மே 986 லும் என்று குறிப்பு ஓர் தளத்தில் கிடைத்தபோது வேறொரு தளத்தில் இவர், இன்றைய ஈரானின் தலைநகராக இருக்கும் டெஹ்ரானின் புறநகர் பகுதியில் (பாரசீக மொழியில் புறநகர் பகுதிக்கு ரேய் என்றழைக்கப்படுகிறது) பிறந்தார் என்ற தகவல் கிடைக்கிறது (இங்குதான் ஜெக்கரியா ராஜி 864ல் பிறந்தார்). அமீர் அப்துல் தவ்லாவின் ஆட்சியில் இஸ்ஃபஹான்ல் வாழ்ந்தார். பின்னர் ஷிராஜில் சில காலமும் பின்னர் பாக்தாதிலும் வாழ்ந்திருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கிறது. என்றாலும் தனது வாழ்நாளில் பெரும்பகுதி இஸ்ஃபஹானுக்கும் ஃபார்ஸுக்கும் இடையே கழிந்ததாக தனது நூலின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

வான சாஸ்திரம்

எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே பாக்தாதில் அறிவு மறுமலர்ச்சி களைகட்டத் தொடங்கியது. கிரேக்க மொழியிலிருந்த அனேக நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. குறிப்பாக தாலமி, ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்களின் தத்துவம், அரசியல், அறிவியல்  கோட்பாடுகள் அரபிக்கு வந்தன. தலமியின் Almagest  ஐ அடிப்படையாக வைத்து வான் வெளி ஆய்வுகளை இதற்குமுன் பலர் நடத்தியிருந்தாலும் அல் சூஃபியுடைய ஆய்வு மிகத் துல்லியமாக இருந்தது.

முதல் வான் இயல் ஆய்வாளர்


வான் இயல் ஆய்வில் ஆர்வம் கொண்ட அல் சூஃபி , தாலமியின் அல்மாகெஸ்டில் அனேக தவறுகள் இருப்பதைக் கண்டறிந்து அவைகளைத் திருத்தம் செய்தார். நெபுலா என்று சொல்லக்கூடிய மேகமூட்டம் போல தோற்றமளிக்கும் விண்மீன்கூட்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை வெளிப்படுத்தினார். அக்கூட்டத்தின் தெற்குப் பகுதிக்கு 'அல் பக்கரல் அபியத் - White Bull எனப் பெயரிட்டார். இது மலாய் தீவுக்கூட்டப் பகுதிகளில் செல்லும் அராபிய மாலுமிகளுக்கு 'அல் பக்கரல் அபியத் - White Bull பெரிதும் உதவியது. இப்போது அவற்றை Nubecula Major (the greater Magellanic Cloud) என்று அழைக்கப்படுகிறது.  (He identified the Large Magellanic Cloud, which is visible from Yemen, though not from Isfahan; it was not seen by Europeans until Magellan's voyage in the 16th century - Wikipedia)

சாதாரண கண்களால் காணக்கூடிய பால்வழி விண்மீன்களை (milkyway galaxy) கிபி 905 க்கு முன்பே இஸ்ஃபஹான் வானவியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டாலும் அல் சூஃபி, தான் கண்டறிந்த விண்மீன் கூட்டங்களை மிக கவனமாக அட்டவணைப் படுத்தி அவைகளின் பரிமாணங்களை (magnitudes) நிர்ணயித்தார்.  தான் ஆய்வு செய்தவற்றை 'சுவாரல் கவாகிப் அல்தமானிய்ய வ அல் அரபயீன்' என்ற நூலாக வெளியிட்டார். The Forty Eight  Constellations என்பது மருவி 'கித்தாப் அல் கவாகிப் அல் தாபித்' (The Book of the constellation of the Fixed Star ) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. This is a masterpiece on stellar astronomy.          

இன்று பெயரிடப்பட்டுள்ள Andromeda Nebula  M31 (describing as a "small cloud") விண்மீன்களை துல்லியமாக வரைபடத்துடன் இதில் விளக்கியுள்ளார். இவரது விளக்கமோ அல்லது இவ்விண்மீன்கள் கூட்டத்தைப் பற்றியோ டெலஸ்கோப் கண்டுபிடிக்கும் வரை ஐரோப்பிய நாடுகளுக்குதெரியாமலிருந்தது, 1612ல் சைமன் மாரியஸ் டெலஸ்கோப்பின் உதவியால் கண்டறியப்பட்டப்  பின்பே உலகுக்கு தெரியவந்தது.

தவிர , தாலமியினால் கூறப்பட்ட 48 நட்சத்திரக் கூட்டத்தைப் (constellation) பற்றிய தவறான விளக்கத்தைத் திருத்தி , அவற்றுக்கு அரபு பெயர்கள் இட்டு , அவற்றின் நிலை, பரிமாணம், அட்டவணை (Location, Magnitude and Tables of Stars) உட்பட அனைத்தையும் வரைபடத்துடன் விளக்கியுள்ளார். ஏறக்குறைய 1018 நட்சத்திரத்தின் ஒளி, நிறம், நிலை (Brightness, Colour, Position) களை விளக்கியுள்ளார். இது 17ம் நூற்றாண்டு வரை பின்னால் வந்த அரபு வானவெளி ஆய்வாளர்களுக்கும் ஐரோப்பிய ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாயிற்று.

Al Sufi's Cluster

இந்த நட்சத்திரக்கூட்டத்தில் சுமார் 40 நட்சத்திரங்களை அல் சூஃபி கண்டறிந்தார். பின்பு ஹொடிர்னா (1597-1660) என்பவர் மீண்டும் கண்டறிந்தார். இதனை 1920 ல் அமெரிக்காவைச் சேர்ந்த  D.F. Brocchi, என்பவர் (amateur astronomer) வரைபடம் தயாரித்தார் எனவே இதனை Brocchi cluster or Al Sufi Cluster என்று அழைக்கப்படுகிறது.

   
தன்னுடைய நூலில் 55 அட்டவணையும் 48 constellations யும் குறிப்பிட்டிருப்பதோடல்லாமல் ஒவ்வொன்றின் விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார். அல்மாகெஸ்டில் இருக்கும் அட்டவணை முறையையே அல் சூஃபியும் பின்பற்றி மூன்று வகையாக பிரித்திருக்கிறார். முதல் வகையில் 21 northern constellations, இரண்டாம் வகையில் 12 ராசி நட்சத்திரங்களையும் (Zodiac) மூன்றாம் வகையில் 15 Southern Constellation விவரித்துள்ளார்.



அல் சூஃபி கண்டறிந்த 100 மேற்பட்ட புதிய நட்சத்திரங்களில் ஒன்றுகூட அல்மாகஸ்டில் தாலமியோ அல்லது அதற்கு முன்வந்த அறிஞர்களோ குறிப்பிடவில்லை. அல்சூஃபியுடைய பங்கு வானவியல் சரித்திரத்தில் இன்றுவரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

வான்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த ஆட்சியாளர் அப்துல் தவ்லாவுக்கு தான் எழுதிய ஆராய்ச்சி நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். தவிர 880ல் அல் பத்தானியின் அட்டவணையையும் இணைத்துள்ளார். இதல்லாமல் வானவியல் பற்றிய குறிப்பேடு ஒன்றையும் தயாரித்ததாக வரலாற்றில் காணப்பட்டாலும் இப்போது காணப்படவில்லை காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் ஷிராஜில் ஆய்வுகூடம் (observatory) ஒன்றை நிறுவியதாகவும் வரலாறு கூறுகின்றது.

அல் சூஃபியின் ஆய்வை அடிப்படையாக வைத்து பின்னால் வந்த பைரூனி , புகழ்பெற்ற வான் ஆய்வாளர் samarkand இளவரசர் Ulugh Beg (1437), இடுலர்(1809), அர்ஜிலாண்டர்(1843),ஃபுஜிவாரா மற்றும் யமஓஹா(2005) இன்னும் பல ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வுகளை நடத்தியிருக்கின்றனர்.

மேலும் alpha majoris என்ற விண்மீன் கூட்டத்திலுள்ள நட்சத்திரத்தின் நிறம் மாறுவதில்லை என்று அல் சூஃபி சொன்னதை பின்னால் வந்த ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். ரோம் நகரில் அது சிகப்பாகத் தெரிவதாக Seneca என்பவரும், அலக்ஸாந்திரியாவில் சிவந்த(reddish) நிலையில் தெரிவதாக தாலமியும், சில நாட்கள் மஞ்சள் நிறத்திலும் பின் வெள்ளை நிறத்திலும் ஏதென்ஸில் தெரிவதாக Schmidt(1841) என்ற ஜெர்மனிய விஞ்ஞானி கூறுகிறார்.

அல் சூஃபியின் கணக்கியல் தாலமியின் கணிதத்தைவிட மிகத் துல்லியமாக இருந்தது. The stellar longitudes 1 deg in 66 years rather than the correct value of 1 deg n 71.2 years என பின்னால் வந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.  தூரத்திலுள்ள விண்மீன்களைப் பற்றி மட்டும் ஆராயவில்லை அருகிலிருக்கும் நிலவையும் ஆய்வு செய்து இன்றைய விஞ்ஞானிகளால் வரையப்பட்ட சந்திரப் படத்தின்(Lunar Map) 9ம் பிரிவில்(22°.1'S, 12°.7'E) காணப்படக்கூடிய மலைப்பள்ளம்(mount crater) 47கிமி விட்டமுடையது என்றும் கண்டறிந்தார். அதற்கு அவரின் நினைவாக Moon Crater Azophi என்ற பெயரை இட்டுள்ளனர்.

தன் பணியை வான சாஸ்திரத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை.  astrolabe ஐ பற்றியும் அதனை பல்வேறு வகையில் பயன்படுத்தும் முறை பற்றியும், ஜாதகம், சோதிடம், நேவிகேஷன், சர்வே, கிப்ளா, தொழுகை நேரம் முதலியன பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.

அரபு நாடு மறந்தாலும் - இல்லை , முஸ்லிம் உலகம் மறந்தாலும் - வான்இயல் ஆய்வு உலகம் மறக்கவில்லை என்பது திண்ணம்.  2006ம் ஆண்டிலிருந்து ஈரானில் Astronomy Society of Iran – Amateur Committee (ASIAC) என்ற அமைப்பு சூஃபியின் நினைவாக வான்வெளி ஆய்வு போட்டி நடத்துகிறது. அதில் ஈரான் ஈராக்கை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.



1985ல் , சூஃபியின் நினைவாக வெவ்வேறு மதிப்புகளில் தபால் தலை வெளியிட்டது சோமாலியா.
***
Sources:
http://en.wikipedia.org/wiki/Abd_al-Rahman_al-Sufi
http://messier.seds.org/xtra/ngc/brocchi.html
http://messier.seds.org/m/m031.html
http://books.google.co.uk/books?id=vOUWfhBheDIC&lpg=PA121&ots=Jd8FN9U4tc&dq=Ihsan%20Hafez&pg=PA121#v=onepage&q=Ihsan%20Hafez
http://www.ianridpath.com/startales/alsufi.htm
http://messier.seds.org/xtra/Bios/alsufi.html
http://www.wdl.org/en/item/2484/
http://www.eso.org/gen-fac/pubs/astclim/espas/iran/sufi.html

***


 


நன்றி : ஹமீது ஜாஃபர் | http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com

Thursday, December 20, 2012

பெண் என்பவள் உடல் மட்டுமல்ல - ப்ரியா தம்பி




டெல்லியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் முழுக் கதையையும் இன்றுதான் வாசித்தேன்.. இந்த நொடிவரை பதட்டமாகவே இருக்கிறது...

வண்டியின் டிரைவர் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார்..வன்புணர்வு செய்தவர்களில் டிரைவரோடு அவர் தம்பியும் அடக்கம்... அனைவரும் புணர்ந்து முடித்த பின்பும் இரும்பு ராடு எடுத்து அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்... முப்பது கிலோமீட்டருக்கு அந்த வண்டி அந்த
பெண்ணின் கதறலை சுமந்து கொண்டி ஓடியிருக்கிறது... ஆடையின்றி சாலையில் வீசப்பட்ட அந்தப் பெண் போலீஸ் வரும்வரை அங்கேயே சீந்துவாரின்றி கிடந்திருக்கிறாள்...

இவ்வளவு வன்மத்தோடு உயிர்வாழ முடியுமா? ஒரு பெண்ணாக, பெண் குழந்தையின் அம்மாவாக மிகுந்த பதட்டமாக உணர்கிறேன்....

எதோ ஒரு பெண், யாரோ ஒருவனிடம் பேசினாலே தாங்க முடியாமல் சித்திரவதை செய்யும் இவர்கள் தன் வீட்டுப் பெண்களை என்னவெல்லாம் செய்வார்கள்? பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்பதில் தொடங்கி, பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை எல்லாமும் செய்வார்கள்..

காலங்காலமாக பெண் குழந்தைகளை ஆணுக்கு பயந்து அடக்கமாக இருக்கச் சொல்லித் தானே வளர்க்கிறோம்.. பதிலாக பெண்களை மதிப்பது எப்படி என்று சொல்லி ஆண் குழந்தைகளை வளர்க்கலாமே? நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்கேனும் பெண் என்பவள் உடல் மட்டுமல்ல என்று சொல்லி வளர்ப்போம்... பெண்ணை சக மனுஷியாக, நேசத்தோடு, நட்போடு பார்க்க கற்றுத் தருவோம்.. மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்...
***
நன்றி : ப்ரியா தம்பி

Monday, December 17, 2012

சுரண்டல்: DTH/ விஸ்வரூபம்/ கமல்... - தாஜ் கட்டுரை


கமல்,
தனது 'விஸ்வரூபம்' படத்தை
DTH -வழியே
T.V.யில் காண்பிக்க இருக்கிறார்!

அதாவது...
டிஸ்-ஆண்டனா - பிளஸ் -
செட்டப் பாக்ஸ் வசதியுடன்
T.V. பார்ப்போர்களில்...
எவரெவர் விரும்புகிறார்களோ
அவர்களெல்லாம்
அப்படத்தை கண்டு களிக்க முடியும்.

அந்த துடிப்பானவர்கள்
விஸ்வரூபம் காண
மூன்று மணிநேர பேக்கேஜிற்கு
பணம் செலுத்தும் பட்சம்
பார்க்க முடியும்.

தியேட்டர்களில் திரையிடப்படுவதற்கு
சுமார் எட்டு மணி நேரம் முன்னரே
T.V.யில் அப்படத்தை
அந்த வகையினில் காண
ஆர்வம் கொள்ளும் ரசிகர்களுக்காக
வசதி செய்துதர முனைந்திருக்கிறார்...
அப்படத்தின் நாயகரும், இயக்குனரும்,
தயாரிப்பாளருமான கமல்!

அதாவது...
உலகக் கிரிக்கெட் நிகழ்ச்சிகள்
நடைபெறும் போது
அந்த கிரிக்கெட் போர்ட்
இப்படித்தான்
T.V. மூலம் உலகம் தழுவி
அந்நிகழ்ச்சியினை ஒளிபரப்பி
வசூல் வேட்டை நடத்தும்!
இப்போ...
இந்த 'வசூல் ராஜா'
திட்டமிட்டு
முனைந்திருப்பதும் அதே ரீதிதான்!

தனது வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய
தியேட்டர்கார்களின்
வேண்டுகோளையும் ஏற்காது
அதனால் கிளர்ந்தெழும்
அவர்களின் எதிர்ப்பையும் மீறி
காரியத்தில் கண்ணாக இருக்கிறார்.

(குறிப்பு:...
கிரிக்கெட்போர்ட்காரர்களுக்கு
கிரிக்கெட் விளையாட்டைக் காட்ட
சினிமாவுக்கு உள்ளது போல்
தியேட்டர் வசதி இல்லை என்பதையும்
அதன் மூலமான சம்பாத்தியமும்
இல்லை என்பதையும்
வாசகர்கள் இங்கே மறந்துவிடக் கூடாது.)

கிரிக்கெட்டுக்கு
காசு கொடுத்து T.V. பார்க்க
உலகம் தழுவி ரசிகர்கள் இருப்பது மாதிரி
'உலக நாயகன்' சினிமாவுக்கும்
உலகம் தழுவி
அப்படியோர் ஆர்வம் கொண்டவர்கள்
தாராளமாகவே இருக்கிறார்கள்!

குறையொன்றுமில்லா...
திரை மூர்த்தி கண்ணா அவர்!

அப்படியானதோர் முத்திரையை
மக்களிடம் கஷ்டப்பட்டு பெற்று
அதை காபந்தும் செய்து...
வளர்த்தும் வைத்திருக்கிறார்!

திராவிடத்துக்கு பெரியாரியம்...
கம்யூனிஸ்ட்டுக்கு கம்யூனிஸம்...
உலகப் பொருளாதாரத்திற்கு
திரை எதிர்ப்பு!
சினிமா தொழிலுக்காக
அதையே வரவேற்கும் வலது!
இப்படி..
இன்னுமான பல முகங்களை
ஒருசேர காபந்து செய்யும்
'பஞ்சதந்திர'க்காரர் அவர்!

'DTH/ விஸ்வரூபம்/ கமல்' என்பன பற்றி
கடந்த பத்து நாட்களாக
ஃபேஸ்புக்கில்
ஆள் மாற்றி ஆள்
சின்னச் சின்ன
விமர்சனங்களும் கருத்துகளுமாக
'விஸ்வரூபம்' எடுத்திருக்கும் கமலை
தூக்கிப் பிடிக்கவே செய்கிறார்கள்!

எல்லோராலும் கவனம் பெறும்
விமர்சகரான ஞாநியும் கூட
இந்த 'நாயக’னுக்குதான் ஜே! 

ஒரு டிஷ் -ஆண்டனாவில்
இப்படத்தை பார்க்க
இந்திய ரூபாய்க்கு 1000/-
கட்டணம் செலுத்தப்பட வேண்டும்!
மதுரையில் வைத்து, 
'ஆடியோ' வெளியிட்டின் போது
'நாயகன்' கமல்
சொன்ன தகவல் இது!

'தசாவதார' ஹீரோ,
இந்த முறைவழியே
2 1/4 (இரண்டேகால்)மணிநேரத்திற்கு
அப்படத்தின்
தமிழ்ப் பதிப்பை காட்ட முனைவதில் மட்டும்
சுமார் 50 கோடிகள் சம்பாத்திய சாத்தியமென
மீடியாக்களில் கிசுகிசுப்பு கேட்கிறது

உலக அளவில்
பரந்து விரிந்திருக்கும்
புலம்பெயர்ந்த தமிழர்கள்,
மற்றும், இந்திய வம்சாவளிகளினால்
இந்த வியாபாரம்
டாலர்களில் களைகட்ட
தாராள வாய்ப்பிருப்பதால்...
என் கணக்கில்
தமிழ்ப் பதிப்பின் வழியே மட்டும்
குறைந்தது குறைந்தது
500 கோடிகளை...
வேண்டாம்...
இன்னும் குறைத்து
300 கோடிகளையேனும்
கமல் நிச்சயம் சம்பாத்தியம் கொள்வார்!

தமிழ் தவிர்த்து
தெலுங்கு/ கன்னடம்/ மலையாளம்/ இந்தி
முதலிய மொழிகளில் இப்படம்
அடுத்தடுத்து
D.T.H. திரையிட வாய்ப்பிருக்கிறது.
அம்மொழிகளிலும்
இந்தப் 'பேசும் பட' நாயகன்
100 சதவீதம் செல்லுபடி ஆகக் கூடியவர்!
தடுமாற்றமின்றி
அந் நிலப்பரப்பு மக்களிடமும்
இன்னொரு 500 கோடியை
எளிதாக அவரால் கறந்துவிட முடியும்.
நிச்சயம் செய்யவும் செய்வார்.
சம்பாத்தியமாச்சே!
அதுதானே புருஷ லெட்சணம்!

ஆக,
இந்த நவீன முறையில்
இப்படத்தின் வழியே...
(அது சராசரி தமிழ் சினிமா மாதிரியோ
அல்லது...
இன்னும் குப்பையாக இருந்தாலும்)
ரசிகர்களிடம் நட்சத்திர 'கிரேஜியை'
-தமிழில் சொன்னால்
அவர்களின் கிறுக்குத்தனமான-
கொதிநிலையை சாதகமாக்கிக் கொண்டு
சுமார் 1000 கோடிகளையோ
குறைத்து மதிப்பிடும் பட்சம் 
சுமார் எண்ணூறு கோடிகளையேனும்
எளிதில் சுருட்டிவிட முடியும்!
அதாவது
சுரண்டிவிட முடியும்.

எப்படிப்பட்ட பூர்ஷ்வாவாக இருந்தாலும்
இப்படிப்பட்ட சுரண்டலுக்கு
அஞ்சவே செய்வான்!
இங்கே அது
அமர்க்களமாக...
கோலாகல வரவேற்புடன்
அரச மரியாதைகளோடு நடக்க இருக்கிறது.

சுரண்டல் இத்தோடு
முடிந்ததாவென்றால்... இல்லை.
வழக்கமான
1500 பிரிண்ட் வெளியீட்டு
கணக்கு பாக்கி இருக்கிறதே!

டிக்கட் ஒன்றின் நிர்ணயிக்கப்பட்ட
விலை ரூபாய் 20/ 30/ 50 ஆக இருக்க.
அரசை இவர்கள்,
அனுமதியோடு பாக்கெட்டில் போட்டு கொண்டு
எல்லா டிக்கட்டுகளும்
ஏகத்துக்கும்
முதல் வாரம் 500 ரூபாய்
அடுத்த வாரம் 400 ரூபாய்
அதன் அடுத்த வாரம் 300 ரூபாய்
இப்படி வழக்கமாகி போன
பகல் கொள்ளை!

இதன்படிக்கு
அப்படம் வெற்றி நடைபோட்டு
50 நாட்களுக்கும் குறையாமல்
உலகம் முழுவதும்
இன்னொரு வசூலை நடத்தும்.
இதன் லாபத்தை கூட்டி பெருக்கிப் பார்க்க
13டிஜிடல் எண் கொண்ட
ஜப்பான் கால்குலேட்டரும் பத்தாது.
இந்தக் கணக்கில்
எப்படி குறைத்து பார்த்தாலும்
அதுவோர்
500 கோடியை கொண்டு வந்து கொட்டும்.

டி.வி.க்கு விற்பது
மொழிமாற்றம் செய்து
அதை இந்தியா பூராவும் ஓடவிட்டுப் பார்ப்பது
என்கிற வகையில்
இன்னொரு 200 கோடி வலிய வரும்!

இந்திய பிற மாநிலங்களிலும்
வெளிநாடுகளிலும்
ரஜினி படம் ஏமாற்றினாலும்
ஏமாற்றுமே தவிர
இந்த 'கல்யாணராம’னின் படம் ஏமாற்றாது.

அதிக அதிகமாக பார்த்தாலும்
சுமார் 50 கோடி பட்ஜெட்டிற்குள்தான்
இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கும்.
இங்கே கணித்தபடிக்கு
இது கொண்டுவந்து சேர்க்கும்
வருமானமோ சுமார் 1500 கோடி!

(மயக்கம் கொள்பவர்கள்
அருகிலுள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டு
வாசிப்பது நலம்.)

*
DTH/ விஸ்வரூபம்/ கமல்... பற்றிய
என் அபிப்ராயங்கள் என்பது
இப்படித்தான் இருக்கிறது.

சினிமா உலகத்தவர்கள் தரும்
நெருக்கடிகளினால்
கமல்
இன்று...
இந்த யுக்தியை கைவிட்டாலும்
நாளை இன்னொரு சினிமாக்காரர்
நிச்சயம் இதனை அரங்கேற்றுவார்.

கமலின் ’விஸ்பரூப’
அரங்கேற்றத்தைத் தொடர்ந்து
வியாபார சினிமாவின்
வியாபாரிகளது
சம்பாத்திய மூளை
இந்த நவீன யுக்தியை
கெட்டியாக பிடித்துக் கொள்ளும்.
விடவே விடாது.
'திருட்டு விசிடியை ஒழிக்கவே
நாங்கள் இதனை செய்கிறோம்' என்று
கமல் மாதிரியே
எல்லோரும் சத்தியம் செய்வார்கள்.

அதாவது
கமலின் விஸ்வரூபத்தோடு
முடிந்து போகிற சங்கதியில்லை இது!
நாளை புற்றீசல் போல்
ஒருபாடு படங்கள்
இப்படி வலம் வந்து
சம்பாத்தியம் என்கிற பெயரில்
பூர்ஷ்வாதனமான சுரண்டலை நிகழ்த்தும்.
அரசு இதற்கு வழிமுறை தேடும்வரை
நம்மால் ஆகுமானது எதுவுமில்லை.
சுரண்டப்படுபவர்களின்
சாதுர்ய வலையில் சிக்கி
பொருளை இழப்பதென்ற ஒன்றைத் தவிர.

***
பின்குறிப்பு:
விஸ்வரூபம்....
விஜயின் துப்பாக்கி மாதிரியே
இருக்கிறதாம்... என்று
இப்பவே களம் இறங்கவும்/
மவுண்ட்ரோட்டை அடைத்து
தொழுகை நடத்தவும்/
தியேட்டர் வாசலில் கூக்குரலிட்டு
படத்தை வெளியிட
அனுமதிக்க மாட்டோமென....
போராட்டம் நடத்தவும்
துடிப்பாக இருக்கும்
வழக்கமான
அந்த இஸ்லாமிய அமைப்புகளுக்கு
ஒரு வார்த்தை.

திட்டமிட்டப்படி
D.T.H.-ல்
கமல்
தனது விஸ்வரூபத்தை வெளியீடும் பட்சம்..
நீங்கள் பாவம்.
உங்களது போராட்டம்
ஒரு வீணான சங்கதியாகிப் போகும்.
அப்படத்தின் வெளியீட்டு தேதியில்
நீங்கள் போராடும் நேரம்
தியேட்டர் வெளியீட்டில் கிட்டும்
லாபத்திற்கு நிகரான
D.T.H.வழங்கியிருக்கும் லாபத்தை
அலுவலகத்தில் அமர்ந்து
சாவகாசமாக கணக்கிட்டு கொண்டிருப்பார்!

அப்படம்
உங்களால் தியேட்டரில் முடக்கப் பட்டாலும்
அது அவருக்கு கவலையை தராது.
உங்களின் போராட்ட முனையும்
மழுங்கிவிடும்.
சட்டம் ஒழுங்கின் கரங்கள் வேறு
உங்களை 'உண்டு இல்லை' யென
அவஸ்தைகளுக்கு உள்ளாக்கும்.
D.T.H.-ன் அருமையையே
அப்போதுதான்
நீங்கள் உணர்வீர்கள்.
***


 

கவிதை நடையில் சுரண்டிய தாஜுக்கு நன்றி ! இதே நடையில் தாஜை சுரண்ட  கூரிய நகங்களுடன் தொடர்பு கொள்க : satajdeen@gmail.com

Wednesday, December 12, 2012

Thursday, December 6, 2012

வாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூலின் கவிதை

’கனவில் வந்த அப்பா’ என்ற தலைப்பில் நண்பர் தாஜ் முன்பு ஒன்று எழுதியிருந்தார். பிடித்த கவிதை அது. வாப்பாவைப் பற்றி யார் எழுதினாலும் எனக்குப் பிடிக்கும். இந்தக் கவிதை நண்பர் ஹெச்.ஜி. ரசூல் அவருடைய ஃபேஸ்புக்கில் இட்டிருந்தது. இன்றுதான் பார்த்தேன். ஒரு மாதிரியாகிவிட்டது மனசு... பகிர்கிறேன், நன்றியோடு... - ஆபிதீன்

****


வாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூல்

எனக்குத் தொப்புள் கொடியறுத்த
அம்மச்சியை இன்றுவரை பார்த்த்தில்லை.
கர்ப்ப பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு
பூமியின் முதல்காற்றை சுவாசித்தபோது
என் காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன
எலப்பையின்குரல் ஓர்மையில் இல்லை.
சுட்டுவிரலால்
சேனைத்தண்ணி தொட்டுவைத்தபோது
அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்..
நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில்
பாதுகாத்து வைத்திருந்த மயிலிறகு
இன்னமும் குட்டி போடவில்லை.
நாலெழுத்து படிக்கவும்
நாலணா சம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா
ஒரு துறவி போல
உறவுகடந்து கடல்கடந்து
கண்ணுக்கெட்டாத தொலைதூரத்தில்
என்றேனும் ஒரு நாள்
வாப்பாவின் மடியில் தலைவைத்து
ஒரு இரவு முழுதும் தூங்க வேண்டும்.

***

போனஸ் : இன்னொரு கவிதை...

தனது அறைக்கு தனது வந்திருந்த வாப்பா - ஹெச்.ஜி.ரசூல்

எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த
நள்ளிரவில்அது நடந்தது.
சுவரில் மாட்டப்பட்டிருந்த
சட்டகத்தின் கண்ணாடி வழியாக
புகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி
தனது அறைக்கு வந்திருந்தார்.

அறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில்
மூத்தமகன் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன்மீதுகாலைத்தூக்கிப் போட்டு
பேத்தியும் படுத்திருந்தாள்.
பேத்தி நிரம்ப பாசம் வைத்திருந்தவள்
பிறரின் அந்தரங்கமான அறையில்
அத்துமீறி நுழைவது என்னவோ
வாப்பாவின் மனசுக்கு பிடிக்கவில்லை.
தனது மனைவியை அந்த அறையில்
தேடிவந்தவர் என்பதால் அதிகமொன்றும்
குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை

பீரோ பூட்டப்படாமல் திறந்திருந்தது.
கதவைத் திறந்துபார்த்தபோது
தான்முன்பு போட்டிருந்த வேட்டியும் சட்டையும்
கீழடுக்கு மூலையில்
அடுக்கு குலைய வைக்கப்பட்டிருந்தது.
துவைத்து வெளுத்திருந்தாலும் அதில்
தன்வியர்வையின்மணம் தங்கியிருந்ததை
அவரால் உணர முடிந்தது.
அறையின் ஒவ்வொரு பொருட்களும்
இடம் மாறிப் போயிருந்தன.

தானிருந்த வீடுபோல்தெரியவில்லை
தன் அனக்கம் கேட்டும்
உறக்கத்திலிருந்து விழித்து தன்னை யாரும்
ஏறிட்டு பார்க்காத வருத்தத்தில்
விரக்திமேலிட நின்ற வாப்பா
புகைப்படத்திற்குள்
திரும்பிச் செல்லமுயற்சித்தபோது
உள்ளே நுழையமுடியவில்லை.
மின்சார முள்வேலி போடப்பட்டிருந்தது.
வெளியேறிய வாப்பா
இப்போது வெளியேற்றப்பட்டுவிட்டார்.


***

Saturday, December 1, 2012

அராபிய தத்துவமேதை அல் கிந்தி - ஹமீது ஜாஃபர் கட்டுரை

பாகம் - 2

அருட்கொடையாளர் - 11
 
முதல் பாகத்தின் அருட்கொடையாளர் வரிசையில்  இறுதியாக இப்னு பதூதாவின் பயண நிகழ்வுகளின் கடைசி இரண்டு பகுதிகளும் மிகவும் நெருக்கடியான சூழலில் எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆம், தாயாருக்கு  விபத்து ஏற்பட்டு தஞ்சை ரோகிணி மருத்துவமனையில் ஒருமாத சிகிச்சை, எனக்கு எதுவுமே தோன்றவில்லை. ஒரு பக்கம் தாயாரின் உடல்நிலைக் குறித்து கவலை, மறுபக்கம் தொடர் கட்டுரையை நிறைவு செய்யமுடியுமா என்ற சந்தேகம்.
 
மனக்கவலைக்கு மருந்தாக அறிவுபூர்வமான ஆலோசனை சொல்பவர் எங்கள் ஜஃபருல்லா நானா. அச்சமயத்தில் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தார்கள். இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளமுடியாமல் என் தாயாரின் அருகில் இருக்கவேண்டிய நிலை. இப்படி ஒருசேர பரிதவிப்புக்கிடையில்  அருகில் இல்லாவிட்டாலும் மூவாயிரம் மைல்களுக்கப்பால் துபையிலிருந்துக்கொண்டு ஆபிதீன் கொடுத்த ஆறுதல் எனக்கு தெம்பூட்டியது. வீட்டிற்கு வந்தபிறகு பாதியிலேயே நிற்கின்ற கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து நிறைவு செய்தேன். அதன்பிறகு எழுதவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. தமிழுலத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களை வெளிப்படுத்திவிட்டோம், இது போதும் என்றே தோன்றியது.
 
நண்பர் தாஜுடன் பேசும்போதெல்லாம் "நானா எழுதுங்கள், இன்னும் எழுதுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள், சமுதாயத்தைப் பற்றி எழுதுங்கள் ஆன்மீகத்தைத் தொடுங்கள்" என்று சொல்லிக்கொண்டே வந்தார். "நானா,  வெறும் இஸ்லாமிய அறிஞர்களை மட்டும் எழுதாமல் மற்ற அறிஞர்களையும் எழுதுங்கள்" - இது ஆபிதீன். "இது உங்களுக்கல்ல பின்னால் வரும் சமுதாயத்துக்கு" - இது ஜஃபருல்லாஹ் நானா. இப்படி ஒவ்வொருவரும் ஊக்கமூட்டினார்கள்.
 
அரசியல் மீது கொண்ட காதல் முறிந்து நாற்பது வருடங்களாகிவிட்டன; இருபத்திரண்டு குண்டு போட்டபிறகு "அங்கே என்ன பொகையுது" என்று கேட்டானாம் ஒரு செவிடன், அதுதான் சமுதாயம். நான் சொல்லும் ஆன்மீகம் 'ஹக்கீகத்துல் ஹக்கியா (உண்மையின் உண்மை)' நிச்சயமாக அது செரிக்காது; மலையாளத்தில் சொல்வது மாதிரி ’வடி(கம்பு) கொடுத்து அடி வேடிக்க(வாங்க) வேண்டிவரும்’. ஆகவேதான் இது. மற்ற அறிஞர்களைப் பற்றி எழுதும் முன் இவ்வுலகிற்கு பல்வேறு அறிவுகளை வெளிப்படுத்திய இஸ்லாமிய அறிஞர்கள் மறைக்கப்பட்டு அவர்களின் ஆய்வுகளில் தங்கள் பெயரை இணைத்துக்கொண்ட மேலை நாட்டவர்தான் இன்று ஒளிர்ந்துக்கொண்டிருக்கின்றர் என்பது திண்ணம். எனவே மறைக்கப்பட்ட / மறக்கப்பட்ட இன்னும் பலரை வெளிக்கொணர வேண்டும் என்ற உறுத்தல் நீண்டகாலமாக இருந்துகொண்டிருந்தது, அதன் வெளிப்பாடாக இதனைத் தொடர்கிறேன். ஆங்காங்கே சில தவறுகள் இருக்கலாம், கண்ணுறுபவர்கள் சுட்டிக்காண்பிக்க வேண்டுகிறேன்.
 
 
**
 
 
 
ஆல்கஹால் இன்று உலகத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற பொருள்களில் ஒன்று. ஆல்கஹால் என்ற ஆங்கில வார்த்தை அரபு மொழியிலிருந்து எடுக்கப்பட்டது, எனவே ஆல்கஹால் அரபுலகத்திடம் நெருங்கிய தொடர்புள்ளது என கொள்ளலாம். இன்று நெருங்கிய அல்லது நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுகமான தொடர்பு இன்றும் உள்ளது. போதை தரும் பொருளாக இல்லாவிட்டாலும் மருந்தாக, வாசனைப் பொருளாக, ஆராய்ச்சிப் பொருளாக இப்படி பல பரிமாணங்களில் அனைவரிடமும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டது. ஆக அரபுலகம், அரபல்லாத உலகம், முஸ்லிம் உலகம், முஸ்லிமல்லாத உலகம் என்ற பாகுபாடில்லாமல் வலம் வந்துக்கொண்டிருக்கும் இதனை, இதன் தன்மையை சற்றேறக்குறைய பத்து நூற்றாண்டுகளுக்கு முன் அரபுலகத்தைச் சார்ந்த ஒருவர் ஆராய்ந்தார். அதன் பயன் இன்று ஆலமரமாக விரிந்து பரந்து கிடக்கின்றது என்றால் மிகையாகாது.
 
இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களின் மாணக்கராகிய ஜாபிர் பின் ஹைய்யான்  அவர்களின் வேதியல் ஆய்வுகளால் உந்தப்பட்டு அதனை ஆராய்ந்த  இவரின் முழுப் பெயர் அபு யூசுப் யாக்கூப் இப்னு இஸ்ஹாக் அல் கிந்தி. இவரது பிறந்த வருடம் தெளிவாக இல்லை என்றாலும் கலிஃபா ஹாரூன் ரஷீத்  அவர்களின் ஆட்சி காலத்தில் இவரது தந்தை கூஃபாவின் கவர்னராக இருந்த காலத்தை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கி.பி 800ல் பிறந்திருக்கலாம் என்று யூகிக்கின்றனர். 
 
வழித்தோன்றல்
 
இவரது தந்தையைப் போலவே இவரது பாட்டனாரும் கூஃபாவின் கவர்னராக இருந்திருக்கிறார். இவரது வழிமுறை சவுதி அரேபியாவைச் சார்ந்த 'கிந்தா' (Royal Kindah tribe) என்ற உயர்குலப் பிரிவாகும். பல பிரிவுகளை ஒருங்கிணைத்த இப் பிரிவினர் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் வலிமை இழந்தாலும் அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்புக்களில் இருந்தனர். அவ்வகையில் இவரது பரம்பரையினர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில் வியப்பில்லை. 
 
கல்வியும் வாழ்க்கையும்
 
ஆரம்பக் கல்வியை கூஃபாவில் முடித்தபின் உயர் கல்வியை பக்தாதில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் மாணவப் பருவத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார். கி பி 813ல் பாக்தாதில் ஏற்பட்ட அரசியல் புரட்சியின் விளைவாக தனது சகோதர் அல் அமீனை வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்த கலிஃபா மாமூன்  பல மாறுதல்களைச் செய்யத் தொடங்கினார். அறிவுத் தாகம் கொண்ட கலிஃபா பக்தாதில் தந்தை ஹாரூன் அல் ரஷீது நிறுவிய அறிவாலயத்தில் (House of Wisdom)  பல்வேறு அறிஞர்களை வரவழைத்து பல முன்னேற்றங்கள் செய்யத் தொடங்கினார்.  அல் கிந்தியின் அசாத்தியத் திறமையைக் கேள்வியுற்ற கலிஃபா, குவாரிஜ்மி, அபு மூசா சகோதரர்கள் போன்ற அறிஞர்களுடன் பணியில் அமர்த்தினார். அங்கு முக்கியப் பணிகளில் ஒன்று பைசாந்திய கிரேக்க தத்துவ நூற்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்வது. மொழிபெயர்ப்பு இரண்டு பிரிவாக நடைபெற்றது. ஒன்று குவாரிஜ்மி தலைமையிலும் மற்றொன்று ஹுனைன் பின் இஸ்ஹாக் தலைமையிலும். மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் சிரிய கிருஸ்துவர்களாக இருந்ததால் தவறு நிகழ்ந்துவிடாமல் இருக்க அராபிய அறிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடையே பாலமாக இருந்தார் என்று சில ஆய்வாளர்களும், கிரேக்க மொழி அறிந்திருந்தாலும் இவரால் படிக்கத்தெரியாது என்பதால் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு மேற்பார்வையாளராக இருந்தார் என வேறு சில ஆய்வாளர்களும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பேரறிஞர்களான அல்குவாரிஜ்மி, இப்னு மூசா சகோதரர்கள், ஹுனைன் பின் இஸ்ஹாக், தாபித் பின் குர்றா போன்றோருடன் பணியாற்றிருக்கிறார் என்பது தெளிவு.
 
833-ல் மாமுன் இறந்தபின் அவரது சகோதரர் அல் முஃதாசிம் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவருடைய ஆட்சி காலத்தில் முஃதாசிமின் மகன் அஹமதுக்கு கல்வி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 842-ல் முஃதசிம் இறந்தபின் அல் வத்திக்கும் 847-ல் அல் முத்தவக்கிலும் ஆட்சிப் பொறுப்பேற்றனர்.
 
இப்போது போலவே அப்போதும் ஆட்சியாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டேதான் இருந்தது, ஒரு சில மன்னர்களைத் தவிர. அந்த வகையில் கடைசி இரண்டு கலிஃபாக்கள் காலத்தில் அல் கிந்தி சரியாக நடத்தப்படவில்லை. மார்க்க ரீதியான முரண்பட்ட கண்ணோட்டம் அல்லது அறிவாலயத்தின்(house of wisdom) அறிஞர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவைகள் காரணமாக இருக்கலாம் ஆனால் தெளிவான ஆதரமில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கலிஃபா முத்தவக்கிலுகும் அல்கிந்திக்குமிடையே மனக்கசப்பு அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அரபி சித்திர எழுத்து (Calligraphy) பணிகளை இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அல்கிந்தி தண்டிக்கப்பட்டு அவருடைய நூல்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு பின் அவை அனைத்தும் திருப்பி அளிக்கப்பட்டதாக வறலாறு இயம்புகின்றது என்றாலும் இதன் பின்னனியாக இவருடைய தத்துவ நூற்களால் பனுமூஸா மற்றும் அபு மஃஷருக்கும் இவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கலிஃபாவிடமிருந்த உறவு பாதிக்கப்பட காரணமாயிருந்தது என்கின்றனர்  ஜெ. ஜெ. ஒகானெர் மற்றும் இ. எப். ராபர்சன். ஹென்றி கோர்பின் கூற்றுபடி கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்த அல்கிந்தி அல் முஃதமித் (ஆட்சி-870-892) ஆட்சிகாலத்தில் கி பி 873 -ல் பாக்தாதில் இறைவனடி சேர்ந்தார்.
 
 
 
ஆக்கங்கள்
 
பல்கலை வித்தகரான இவர், பிரசித்திப் பெற்ற  இஸ்லாமிய தத்துவ அறிஞர்களில் ஒருவராகவும் மத்தியகால பண்ணிரண்டு அறிஞர் பெருமக்களில் ஒருவராக இருந்தார் எனவும் இத்தாலிய ஆய்வாளரான ஜெரலொமோ கர்டனொ(1501-1575) கூறுகிறார். மற்றொரு அறிஞர் இப்னு அல் நதீம்  கூற்றுபடி அல்கிந்தி 260 நூற்கள் எழுதியிருப்பதாகவும் அவைகளில் ஜியோமிதி 32 நூற்கள், எண்கணிதம்(Arthmetic) 11,  வானவியல் 16, மருத்துவ இயல்(medicine) 22, தத்துவம் 22, தர்க்கம் 9, இயற்பியல் 12, உளவியல் 5, கலை மற்றும் இசை 7 இதல்லாமல் tides, astronomical instruments, rocks, precious stones etc.  இவர் எழுதிய நூற்கள் பல, காலத்தால் அல்லது மங்கோலியர்களின் ஊடுறுவலினால் அழிந்தன. சிலவற்றை இத்தாலிய அறிஞர் ஜெரார்டு (Gerard of Cremona) லத்தீனில் மொழிபெயர்த்தார். இருபத்தி நான்கு வகையான நூற்கள் துருக்கி நூலகத்தில் காணப்படுகின்றன.
 
கணிதம்
 
கணிதவியலைப் பொருத்தவரை இன்று அரபிய எண்கள் என்று சொல்லப்படும் இந்திய எண்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியதிலும் வானவியல் கணிதத்திலும் அல் குவாரிஜ்மியின் பங்கு மகத்தானது என்றாலும் அல்கிந்தியின் பங்களிப்பும் அதில் பொருந்தியிருக்கிறது. எண்களின் இணக்கம், பெருக்கல் வழிமுறை, கால அளவீட்டில் எண்களின் பயன்பாடு, எண்களை ஒழுங்கு படுத்தலும் நீக்கலும் முதலானவற்றை தெளிவுப் படுத்தியவர் அல்கிந்தியாகும். இவர் எழுதிய நான்கு பாகங்கள் கொண்ட 'கித்தாப் ஃபி இஸ்திமால் அல் அதத் அல்-ஹிந்தி (On the Use of the Indian Numerals ) என்ற நூல் மத்திய கிழக்கிலும் மேற்கிலும் இந்திய எண்களின் பயன்பாட்டை பரப்பியதில் பெரும் பங்கு வகுத்தது. ஜியோமிதியில் இணைகோடுகளின் கோட்பாட்டையும் ஒளி இயலில்(optic) ஜியோமிதியின் பங்கையும்  விவரித்துள்ளார்.
 
வானவியல்
 
அல்கிந்தியின் வானவியல் கொள்கை தாலமியைப் பின்பற்றியதாகவே இருந்தது. பூமியை மையமாகக் கொண்டு சூரியன் முதல் அனைத்து கோளங்களும் சுற்றி வருகின்றன என்பது தாலமியின்  கொள்கை. இக்கோளங்களின் சுழற்சி இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது இவரது அறிவார்ந்த கொள்கைகளில் ஒன்று. கோளங்கள் குறிப்பாக சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் இடப்பெயற்சியால் பூமியில் காலமாற்றம் ஏற்படுகிறது, இடத்துக்கு இடம் மாறுபடும் பருவநிலை வித்தியாசம் அவ்விடங்களுக்கும் கோளங்களின் நிலைக்குமுள்ள வித்தியாசத்தால் ஆகும். இத்தன்மையினால் பூமியில் அனைத்துப் பொருட்களை உண்டாக்குகின்ற நான்கு மூலகங்களான நீர், நெருப்பு, காற்று, மண் இவைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 
வேதியியல்
 
ரசவாதம் முடியாத ஒன்று, ஒரு மூலகத்திலிருந்து வேறொரு மூலகத்தை உருவாக்க முடியாது  எனவே தாழ்வான உலோகத்தை தங்கமாக மாற்ற முடியாது, ஒரு பொருள் அதன் மூலப்பொருளிலிருந்தே (base metal) உருவாக்கமுடியும் என்கிறார். வேதியலைப் பொருத்தவரை  ஜாபர் பின் ஹைய்யானின் அல்கமி கொள்கைகளின் பலவற்றில் மாறுபட்டு நின்றாலும் ஆர்வம் நிறைந்தவராகவே இருந்தார். ஒயினில் எந்த வேதிப் பொருள் போதைத் தருகிறது என்பதைக் கண்டறிய பலமுறை காய்ச்சி வடித்தலின் (Distillation) மூலம் ஆல்கஹாலை (pure alchohol) தூய்மைப் படுத்தும் முறையை முதலில் கண்டறிந்தார். மேலும் மலரிலிருந்து பல்வேறு முறைகளில் அத்தர் தயாரிப்பு முறையும் கண்டுபிடித்தார். மருத்துவத்தைப் பொருத்தவரை இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நோய்க்கான மருந்தின் அளவீடு எப்படி இருக்கவேண்டும், நோயாளிக்கு எவ்வளவு மருந்து எப்போதெல்லாம் கொடுக்கவேண்டும் என்பதை வரையறுத்தார். இதனால் மற்ற மருத்துவர்களுக்கும் இவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
 
தத்துவம்
 
அன்றைய காலக்கட்டத்தில் அரபுலக தத்துவார்த்த சிந்தனைகளை மேம்படுத்தும் அகராதியாக விளங்கினார். அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை சார்ந்து இவரது தத்துவக் கோட்பாடும் இருந்தது. அதே சமயம் ப்ளாட்டோ, ப்ரோக்ளஸ்  போன்ற தத்துவ ஞானிகளும் அங்காங்கே வந்துப்போனார்கள். எனவே முன் சொன்ன  அறிஞர்களிடமிருந்து எல்லாம் பெறப்பட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் தாக்கம் இருந்தது. என்றாலும் அவரது சொந்தக் கோட்பாடே  என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 
இவரது கோட்பாடு அக்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.  ஒரு சாரார் இஸ்லாத்துக்கு எதிரானது என்றனர். இக்கோட்பாடு எந்த வகையிலும் இஸ்லாத்தின் பழமை மரபுக்கு (orthodox islam) முற்றிலும் எதிரானதல்ல என்றார் அல்கிந்தி.  இந்த தத்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் முற்றிலும் இசைவான தொடர்பு பல வகைகளில் வெளிப்படையானது என்று வாதிட்டார். விளைவு , அபுமூஸா சகோதரர்கள் மற்றும் வானவியலார் அபுமஃஷருடைய பகைமையை சம்பாதித்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் வாத விவாதங்களும் ஏற்பட்டன. இது இமாம் கஜ்ஜாலி (1058-1111) அவர்களின் காலம்வரை நீடித்தது. இமாம் அவர்களே முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். 
 
மூலதத்துவம் (Metaphysics)
 
இவரது சிறந்த நூலான 'ஃபி அல்-ஃபல்சஃபா அல்-உலா'வில் (on first philosophy) அரிஸ்டாட்டிலின் கோட்பாடு ஒரு சில காணப்பட்டாலும் மற்றவை மாறுபடுகிறது. உதாரணமாக உலகத் தோற்றத்தை பற்றிய கோட்பாடு இருவருக்கும் மாறுபடுகிறது. உலகம் முடிவற்றது என அரிஸ்டாட்டிலும் அவரைப் பின் தொடர்ந்து மற்ற கிரேக்க தத்துவஞானிகளும் போதிக்கின்றனர். அல் கிந்தி, இன்மையிலிருந்து (ex nihilo) உலகம் தோன்றியது என முன்வைக்கிறார். மேலும் அந்நூல் மூலம் அவர் வெளிப்படுத்துவது முதல் தத்துவம்; அதாவது முதல் உண்மை. அது தன்னுள் எதனையும் கொள்ளவில்லை; தன்மையோ, பன்மையோ, குணமோ, பண்போ எதிலும் கட்டுப்பாடற்றது; எதனுடனும் அதனை ஒப்பிடவோ, குறிப்பாகவோ, குறிப்பற்றோ விளக்கமுடியாது; அதிலிருந்தே மற்ற உண்மைகள் வெளிப்பட்டன. முதல் உண்மைக்கு மறு பெயர் இறைவன் என்கிறார். அதன் சக்தி, இல்லாமையிலிருந்து உள்ளமையாக்குவது (மூலமே இல்லாமல் படைப்பது;. அது முடிவற்றது; முன் பின் என  எல்லையற்றது; மாறமுடியாதது; மாற்றமுடியாத்து; அழிவற்றது). மனிதன் என்பது வாழ்க்கை முழுவதும் ஆன்மாவைக் கொண்டு பயணிப்பது. ஆன்மா உடம்பைவிட்டு பிரிவதே மரணம். ஆன்மாவின் இருப்பிடம் அறிவு. அறிவை மனிதன்  சடஉலகிலிருந்து பெறவேண்டும்.
 
காலமும் இயக்கமும் எல்லையற்றது ஒன்றோடொன்று பிணைந்தது என்பது கிரேக்கக் கொள்கை. அல் கிந்தி இதிலிருந்து மாறுபடுகிறார். சடம், காலம், இயக்கம் அனைத்துக்கும் எல்லையும் முடிவும் உண்டு என்கிறார். 'அல் வஹ்தானியா அல்லாஹ் வ துனாஹியா ஜிர்முல் ஆலம் (On the Unity of God and the Limitation of the Body of the World) மற்றும் 'ஃபி கம்மியா குத்துப் அரிஸ்தாதலிஸ் வ மாயஹ்தஜ் இலாஹி ஃபி தஹ்ஸில் அல் ஃபல்சஃபா (The Quantity of the Books of Aristotle and What is Required for the Acquisition of Philosophy)' என்ற இரு நூற்களிலும் விரிவாக விளக்கியிருக்கிறார்.
 
அல் கிந்தி, தனது தத்துவ கோட்பாட்டை இஸ்லாத்துடன் நேர் விவாதம் செய்யாமல் பொதுவாகவே தவிர்த்துக் கொள்கிறார். அதல்லாமல் மதக்கோட்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்காமல் இணக்கமாகவே கொண்டு செல்கிறார்.
 
ஒழுக்க நெறிமுறை (Ethics)
 
'ஃபி அல்ஹிலா லிதஅஃப் அல் அஹ்ளன் (On the Art of Averting Sorrows) என்ற நூலில் ஒழுக்க நெறிகளையும் நடைமுறை தத்துவத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார். அல் கிந்தி, Stoic ஐதிகத்தால் வெகுவாகக் கவரப்பட்டிருக்கிறார் குறிப்பாக அன்றைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் சிரிய நாட்டு கிறுஸ்துவ அறிஞர்களுடன் தொடர்பு இருந்ததினால் எபிக்டிட்டஸ்-ன்  சிந்தனை காணப்படுகிறது என்கிறார் ஃபஹ்மி ஜடான் என்ற தத்துவப் பேராசிரியர்.  மற்றவர்களுடைய சுதந்திரத்தை பாதிக்காமலிருப்பதே ஒரு மனிதனுடைய மகிழ்ச்சி என்கிறார் எபிக்டிட்டஸ். அவரது கொள்கையில் முடிவாக, ஒரு மனிதன் இனிமேல் இவ்வுலகில் வாழவேண்டிய அவசியமில்லை என்ற நிலை வரும்போது அவன் தற்கொலை செய்துக்கொள்ள அனுமதிக்கிறார். இந்த முடிவை அல் கிந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதனுடைய உண்மை நிலை அவனது உடம்பில் இல்லை ஆன்மாவில் இருக்கிறது என்கிறார் அல் கிந்தி. பயனில்லா ஒன்றை இவ்வுலகில் நோக்குவதும் கிடைக்காத ஒன்றின் மீது ஆசை கொள்வதும் துன்பத்தை விளைவிப்பதே. எனவே மனம், சமநிலை பாதிக்கப்படும்போது சுயமும் பாதிக்கிறது. ஆகவே உலகியலோடு ஒரு மனிதன் தன்னைப் பொருத்திக்கொள்வதை அல் கிந்தி கடுமையாக எச்சரிக்கிறார்.
 
அறிவுநெறியியல் (Epistemology)
 
இவ்வுலக வாழ்வில்கூட ஆன்மா அல்லது உயிரையும் உடம்பையும் இருவேறாகப் பிரித்துப் பார்க்கிறார் அல் கிந்தி. அவர் இங்கே ஆன்மா என்று குறிப்பிடுவது intellective or rational soul. அது இணையானதென்றாலும் புலனறிவுபோல் புலநுணர்வு தனித்தே செயல்படுகிறது. உணர்ச்சி திரள்வது போல் அறிவாளி தன்னுள் இயல்திறனைத் திரட்டிக்கொள்கிறான். இத்தகையவர் அறிவுசார்ந்த அனைத்தையும் தன்னுள் உள்வாங்கிக்கொள்கிறார். உள்வாங்கியவற்றை வைத்து சிந்திக்கும்போது உண்மையான சிந்தனை வெளிப்படுகிறது, எனவே இது 'உண்மையான அறிவு' என்கிறார் அல் கிந்தி. ஆனால் பின் வந்த தத்துவ வாதியான அல் ஃபராபி அதனை  'முயன்றுபெற்ற அறிவு' என்கிறார்.
 
இசை
 
இசையை அறிவியல் ரீதியாக அணுகியிருக்கிறார். சப்தங்களின் பிரத்தியேக அமைப்பை தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறார். குறிப்பிட்ட ஸ்வரத்தை (notes) இசைப்பதினால் எப்படி இசைப் பொருத்தம் (harmony) ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். ஒவ்வொரு ஸ்வரத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்து எவை மிகத் தாழ்ந்த அல்லது மிக உச்ச சுருதியில் (very low pitch or very high pitch) இருக்கிறதோ அவற்றில் இசை இணக்கம்(harmony) ஏற்படாது என்பதை கண்டறிந்து ஒவ்வொரு சுருதியையும் எப்படி அமைப்பது என்பதை எழுத்தில் வடித்தார்.
 
 


பல்கலை வித்தகரான அல் கிந்தியின் சிந்தனை பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை ஸ்பெயின், மேற்கத்திய நாடுகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமின் கில்ஸ் என்பவர் அல் கிந்தியின் சிந்தனைகளை குறை கூறினார்.  எப்படி இருந்தாலும் மேற்கத்திய இஸ்லாமிய பண்பாட்டில் அல் கிந்தியின் சிந்தனைகள்  நீடித்தன. சுருக்கமாகச் சொன்னால் பின்னால் வந்த இமாம் கஜ்ஜாலி, இப்னு சினா, அல் ஃபராபி ஆகியோர்களுடய தத்துவக்கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் இவரே என சொல்லலாம்.

Sources:
http://en.wikipedia.org/wiki/Al-Kindi
http://www.muslimphilosophy.com/ip/rep/H029.htm
http://plato.stanford.edu/entries/al-kindi/
http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Al-Kindi.html
http://www.alshindagah.com/septoct2005/kindi.html

மேலும் பார்க்க : அருட்கொடையாளர்கள்

***

 
நன்றி : ஹமீது ஜாஃபர் | http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com

Thursday, November 22, 2012

தி.மு.க.வும் ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா


துக்ளக் சத்யாவின் ஹாஸ்ய எழுத்து குறித்து, நான் இங்கே பல முறை ரசித்து எழுதி இருக்கிறேன். இந்தக் கட்டுரையில் அவரது அந்தத் திறம் 'நுட்பத்தில் ஓங்கி வளர்ந்திருக்கிறது' என்பதை மட்டும் சுட்டிக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. வாசகர்கள் ஒவ்வொரு பாராவிலும் நின்று வாசித்து யோசிப்பதென்பது அவசியத்திலும் அவசியமாகவே இருக்கும். அப்படி நீங்கள் வாசிப்பதில், வாய்விட்டு சிரிப்பதென்பது இரட்டிப்பாக வாய்ப்புண்டு. நன்றி. - தாஜ் 

***


தி.மு.க.வும்  ஐ.நா. சபையும்... - 'துக்ளக்' சத்யா

[டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி(!) குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.] 

துரைமுருகன்
ஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்ணப்பவே நான் நினைச்சேன் - இப்படி மனு கொடுத்துட்டு வெற்றியோட திரும்புவாங்கன்னு. அதே மாதிரி ஆயிடுச்சு. இப்பவே இலங்கைத் தமிழர்களின் பாதி பிரச்னை தீர்திருக்கும். அம்மையாருக்கு ஒரே பொறாமையா இருந்திருக்கும்.

அன்பழகன்:
அம்மையாரை விடுங்க. ராஜபக்சேவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டாரே! கழகம் ஆட்சியிலே இருந்தப்போ அடங்கி ஒடுங்கி இருந்த மாதிரி இப்பவும் இருந்திடுவோம்னு நினைச்சு ஏமார்ந்திருப்பாரு. இனிமே தமிழர்கள் விசயத்திலே வாலாட்ட மாட்டார். ஐ.நா. சபையிலே மனு கொடுக்கிறதுன்றது சாதாரண விஷயமா?

வீரமணி:
எதிர்க் கட்சி ஆன பிறகும் சூடு சொரணையில்லாம இருக்க முடியுமா? இந்த சமயத்தையும் விட்டுட்டா தமிழினத்தை கலைஞர் எப்பதான் காப்பாத்தறது? இந்த அதிரடி நடவடிக்கையைப் பார்த்து மத்திய அரசே கூட பயந்து போயிருக்கும். இதைத்தான் தமிழ் சமுதாயம் கலைஞர் கிட்டே எதிர்பார்க்குது.

ஆற்காடு வீராசாமி:
சரி, ஐ.நா. துணை பொதுச் செயலாளர் என்ன சொன்னார்? ஆரம்பத்திலேர்ந்து சொல்லுங்க.

ஸ்டாலின்:
வணக்கம் சொன்னோம். அவரும் வணக்கம் சொன்னார். பாலு வணக்கம் சொன்னதும், அவருக்கும் வணக்கம் சொன்னார்.

துரைமுருகன்:
அப்பாடா! அவ்வளவு செலவு பண்ணிட்டு ஐ.நா. போனது வீணாகலை.

ஆற்காடு வீராசாமி:
பின்னே, வணக்கம் சொல்லாம இருப்பாரா? கலைஞர் அனுப்பின ஆளுங்கன்னா ஒரு தனி மரியாதை கொடுத்துத்தானே ஆகணும்? ம்.. அப்புறம்?

ஸ்டாலின்:
டேக் யுவர் ஸீட்ன்னாரு.

பாலு:
சரின்னு உட்கார்ந்தோம். இலங்கைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஐ.நா. அதிகாரி முன் அமர்ந்த முதல் தமிழர்கள்ற பெருமை எங்களுக்குத்தான் கிடைச்சது.

அன்பழகன்:
அப்புறம்? கையிலே என்ன மனுன்னு கேட்டிருப்பாரே?

ஸ்டாலின்:
ஆமா. அவர் கேட்டதும் நான் கொடுத்தேன். நான் கொடுத்ததும் அவர் வாங்கிக்கிட்டாரு.

துரைமுருகன்:
ஐ.நா. அதிகாரிகள் எப்பவுமே அப்படித்தான். விரைந்து நடவடிக்கை எடுக்கிறவங்க.

கருணாநிதி:
மனுவிலே என் கையெழுத்தைப் பார்த்திட்டு, யார் கையெழுத்துன்னு கேட்டாரா?

பாலு:
நாங்களே சொன்னோம். இதே கையெழுத்திலேதான் பல படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதியிருக்காருன்னு சொன்னதும் அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, தேங்யூன்னாரு.

கருணாநிதி:
நான் யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து எதையும் செய்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. இருந்தாலும் 'கலைஞருக்கு ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் நன்றி'ன்னு முரசொலியிலே இந்தச் செய்தியைப் போட்டுருவோம். மனுவைப் படிச்சுட்டு என்ன கேட்டார்?

ஸ்டாலின்:
எதுக்கு ரெண்டு தடவை டெசோ ஆரம்பிச்சீங்கன்னு கேட்டார். 'இனி டெசோவைத் தொடர்வதால் பயனில்லைன்னு சொல்லி முதல் டெசோவை முடிச்சோம். முடிச்ச பிறகும் பயனில்லைன்னு தெரிஞ்சதும், மறுபடியும் இன்னொரு டெசோவை ஆரம்பிச்சோம். இதனாலேயும் பயனில்லைன்னு புரிஞ்சுக்கற வரைக்கும் இந்த டெசோ தொடரும்'னு அவருக்கு உறுதியளிச்சேன்.

பாலு:
இலங்கைப் பிரச்சனைக்காக கலைஞர் 1956லேர்ந்து குரல் கொடுத்துட்டு வரார்னு நாங்க சொன்னதும் அவருக்கு ஒரே ஆச்சரியம். '56 வருஷமா நிறுத்தாம குரல் கொடுக்கிறது கின்னஸ்லே இடம் பெற வேண்டிய சாதனை. இந்த சாதனை தொடரணும்'னு வாழ்த்தினார். 

கருணாநிதி:
இலங்கைப் பிரச்னைக்காக 1976-லும் 1991-லும் இருமுறை ஆட்சியை இழந்தவன்தான் இந்த கருணாநிதின்னு சொன்னதுக்கு என்ன சொன்னார்?

வீரமணி:
சொல்றதுக்கு என்ன இருக்கிது? இலங்கைப் பிரச்னை தீவிரமடைய ஆரம்பிச்சதே 1980-களிலேதான். அதை முன்னாலேயே உணர்ந்து 1976-லேயே அதுக்காக ஆட்சியை தூக்கி எறிஞ்சிருக்காரேன்னு அதிர்ச்சி அடைஞ்சிருப்பார்.... அப்புறம்? ஐ.நா. மேற்பார்வையிலே பொது வாக்கெடுப்பு நடத்தணும்னு சொன்னீங்களா?

பாலு:
சொன்னோம். உரிய நடவடிக்கை எடுப்போம்னு சொன்னார். தேங்க்யூன்னு நான் சொன்னேன். ஸ்டாலினும் தேங்ஸ் சொன்னார். துணை பொதுச் செயலாளர் 'வெல்கம்'ன்னாரு.

ஆற்காடு வீராசாமி:
ஓ! பொது வாக்கெடுப்பை வரவேற்கிறதாவே சொல்லிட்டாரா? கழகம் இவ்வளவு பெரிய வெற்றியை ஈட்டிய விஷயம் ராஜபக்சேவுக்குத் தெரிஞ்சா அநேகமா தனி ஈழம் கொடுக்கிற முடிவுக்கே வந்துடுவாரு. இலங்கைப் பிரச்னையிலே கழகத்தின் நிலைப்பாடுகளையும், இதுவரை எடுத்த நடவடிக்கைகளையும், அவருக்கு விளக்கிச் சொன்னீங்களா?

பாலு:
ஊஹும். பாவமாயிருந்தது. பாத்தா நல்ல மனுஷனாயிருக்காரு, அவருக்கு எதுக்கு அதெல்லாம்னு விட்டுட்டோம். அவர் மட்டும் நம்ம கோரிக்கைகளை அலட்சியப்படுத்தட்டும், மவனே அப்ப எல்லாத்தையும் பட்டியல் போட்டு அடுத்த தடவை நானே படிச்சுக் காட்டிடறேன்.

ஸ்டாலின்:
ஆனா, முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல்லணும். எங்களைப் பார்த்ததும், எப்படி அன்பா வரவேற்றாரோ, அதே மாதிரி அன்போடுதான் வழியனுப்பினார். அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்னையிலே அக்கறை காட்டினார்.

அன்பழகன்:
ஆச்சரியமாயிருக்குதே. இலங்கைப் பிரச்னையிலே நம்மைவிட அதிக அக்கறையோட இருக்காங்க போல இருக்குதே.

துரைமுருகன்:
சிங்கள ராணுவத்தின் போர்க் குற்றம் பத்தி சொன்னீங்களா?

பாலு:
இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிடும்படி இந்திய அரசு, இன்னும் ஐ.நா. சபையை வலியுறுத்தலை. அதனாலே, தன்னை வலியுறுத்தும்படி ஐ.நா.வே இந்திய அரசை வலியுறுத்தணும்னு கேட்டுக்கிட்டோம்.

துரைமுருகன்:
ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் என்ன சொன்னார்?

பாலு:
தலையாட்டினார்.

ஆற்காடு வீராசாமி:
ஐ.நா. அதிகாரிகள் நம்மை மாதிரி இல்லை. எதையும் புரிஞ்சுகிட்டுத்தான் தலையாட்டுவாங்க.

ஸ்டாலின்:
லண்டன் பன்னாட்டுத் தமிழ் மாநாட்டுலேயும் இலங்கைத் தமிழர் நிலையை விளக்கிப் பேசினேன். நான் பேசி முடிச்சதும் அவுங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம்.

துரைமுருகன்:
பேசி முடிச்சதுக்கா?

ஸ்டாலின்:
ஊஹூம். எங்களுக்குத் தெரிஞ்ச விஷயமெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கேன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. 'இலங்கையில் படுகொலைகள் நடந்தப்போ கழக ஆட்சியிலே இருந்தாலும், ஒவ்வொரு நாளும் எத்தனை படுகொலைகள் நடக்குதுங்கற கணக்கு கலைஞருக்கு வந்துட்டுத்தான் இருந்தது; அதை நினைச்சு மத்திய அரசுக்குத் தெரியாம கலைஞர் ரகசியமா கண்ணீர் விட்டுக் கதறிட்டுத்தான் இருந்தார்'னு விளக்கமா சொன்ன பிறகுதான் இலங்கைத்தமிழர் நலனுக்காக கழகம் இவ்வளவு நடவடிக்கை எடுத்திருக்குதுங்கற விஷயமே அவங்களுக்குப் புரிஞ்சுது.

பாலு:
எங்களைச் சந்தித்த இலங்கை தமிழர்கள் பலர், தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதங்களை கலைஞர் வாங்கி, யாருக்கும் கொடுக்காம தானே பத்திரமா வெச்சுகிட்டதுக்காக நன்றி சொன்னாங்க. அவ்வளவு கஷ்டத்திலேயும் அந்த காமெடிதான் ஆறுதலா இருந்ததுன்னாங்க.

வீரமணி:
இலங்கை முகாம்களில் தமிழர்களின் அவல நிலைமையைப் பத்தி சொன்னீங்களா? 

ஸ்டாலின்:
சொன்னேனே. ஏரோப்ளேன்லே வரும் போது நான் பாலுகிட்டே சொன்னேன். ஆமான்னு பாலுவும் என் கிட்ட சொன்னாரு.

கருணாநிதி:
ரெண்டு பேரும் சேர்ந்து வேறே யார் கிட்டேயாவது சொன்னீங்களா?

ஸ்டாலின்:
அதான் உங்க கிட்டே சொல்றோமே.

கருணாநிதி:
சரி, விடுங்க. மனித உரிமை ஆணையத் தலைவர் கிட்டே ஏதாவது சொன்னீங்களா?

பாலு:
சொல்லாம இருப்போமா? அதுக்குத்தானே போனோம்? அவங்களுக்கும் வணக்கம் சொல்லி கை குலுக்கினோம். பதிலுக்கு அவங்களும் கை குலுக்கிப் புன்னகைச்சாங்க.

அன்பழகன்:
அதாவது இலங்கைத் தமிழர் நிலையை அவங்க கவனத்துக்கும் கொண்டு போயிட்டீங்கன்னு சொல்லுங்க. கடைசியா என்ன நடந்தது?

பாலு:
கடைசியா 'அப்ப நாங்க புறப்படறோம்'னு எழுந்து நின்னு சொன்னோம். அவங்களும் எழுந்து நின்னு 'சரி'ன்னாங்க.

கருணாநிதி:
வேறே ஒண்ணும் கேக்கலையா?

ஸ்டாலின்:
உங்களுக்கு என்னதான் வேணும்னு கேட்டாங்க. இந்த மனுவை வாங்கிக்கணும்னு கோரிக்கை வைச்சோம். உடனே மனுவை வாங்கிக்கிட்டு அந்தக் கோரிக்கையை நிறைவேத்திட்டாங்க.

அன்பழகன்:
எனக்கென்னவோ இந்த நடவடிக்கைகளாலே இலங்கைப் பிரச்னை தீருமான்னு சந்தேகமாத்தான் இருக்குது.

கருணாநிதி:
தீரலைன்னாலும் நல்லதுதான். ஸ்டாலினும் பாலுவும் ஐ.நா. சபையில் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்னு இன்னொரு மனு எழுதி, அடுத்த தடவை அழகிரியையும் கனிமொழியையும் ஐ.நா. சபைக்கு அனுப்பலாம். குடும்பப் பிரச்னையாவது கொஞ்சம் தீரும்.


***


நன்றி: சத்யா / துக்ளக்
தட்டச்சு செய்து அனுப்பி சிரிக்கவைத்த தாஜ்பாய்க்கும் நன்றி

***

மேலும் :
துக்ளக்கும் சத்யாவும் – சில குறிப்புகள் : தாஜ்

Monday, November 19, 2012

ஓவியர் ஜான் மீரோ - கவிஞர் சுகுமாரன்


“The painting rises from the brushstrokes as a poem rises from the words. The meaning comes later.” - John Miro

***
மதிப்பிற்குரிய பிரம்மராஜனின்  'மீட்சி' சிற்றிதழில் (மார்ச்-ஏப்ரல், 1984) நண்பர் சுகுமாரன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பதிவிடுகிறேன். 'திசைகளும் தடங்களும்' தொகுப்பில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட தொகுப்பு இது. வாசிப்பின் புதிய எல்லைகளை அறியத் தூண்டுதலாக இருந்திருக்கிறார் எஸ்.வி.ஆர் - நமக்கு சுகுமார் மாதிரி. ''இலக்கியமும் கலையும் இருத்தலியல் அனுபவங்கள். இருப்பிலிருந்து வாழ்வு நோக்கி உயர மனித மனம் கொள்ளும் வேட்கையின் வினையும் எதிர்வினைகளும்தான் அவற்றின் அடிப்படை' என்பார் சுகுமார் , தன் முன்னுரையில். இந்தத் தொகுப்பு பற்றி நண்பர் பி.கே.எஸ் எழுதிய விமர்சனம் காண இங்கே க்ளிக் செய்யுங்கள். ஏற்கனவே இந்தத் தொகுப்பிலிருந்து எடுத்த வான்காவின் கடிதங்களை நண்பர்கள் படித்திருக்கலாம்.  'முயற்சிகளின் முடிவில் மீரோ , மீரோவைக் கண்டடைந்தார்' என்று ஆன்மீகமாகச் சொல்லும் சுகுமாரனை இதிலும் காணலாம். கண்டடையுங்கள் - நேற்று கூகில்+-ல் மீரோவின் புகைப்படத்தை - பெயரைக் குறிப்பிடாமல் - போட்டு,  நாளை இவர் பற்றிய கட்டுரை வெளியாகும் என்று தமாஷ் செய்த சில நொடிகளில் ஐஃபோன் உதவியுடன் சித்தார்த்தும் ( 'ஐஃபோன்ல இருக்கற கூகுள் நிரல்ல கூகுள் காகில்ஸ்னு ஒரு விஷயம் இருக்கு. அத போட்டதும், எத தேடனும்? படம் பிடின்னு காமராவ ஆன் செஞ்சிது. இந்த புகைப்படத்த குறிப்பா அந்த முகத்த படம் பிடிச்சேன். சரியா 2 நொடிகள். பேர கொண்டு வந்து வந்துருச்சு!') images.google.com-ல் தேடி சென்ஷியும் கண்டடைந்தார்களே... அந்த மாதிரி..! - ஆபிதீன்

**
ஜான் மீரோ

சுகுமாரன்

யெஹான் மீரோ (John Miro 1893-1984) சென்ற ஜனவரியில் காலமானார். ஓவியக் கலையில் நவீன யுகத்தை நிறுவி வளர்ந்த முன்னோடிகளில் கடைசி நபரும் காட்சியரங்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

1893இல் ஸ்பானிய பிரதேசமொன்றில் பிறந்தார். கிராமிய வாழ்வின் உயிர்த்துடிப்புள்ள மனப்படிமங்களுடன் 1919இல் பாரிசில் குடியேறினார். மனிதனின் இளமை, மரபு ரீதியான பழக்கங்கள், புராணிகங்கள் மீரோவின் மூலமாக ஓவியங்களில் இடம்பெற்றன.

மீரோவின் படைப்புகள் அசாதாரண எளிமையும், அதேசமயம் நினைவுகளைத் தொந்தரவு செய்யக்கூடிய தீவிரத் தன்மையும் கொண்டவை. மீரோவின் இந்தத் திறன் ·ப்ராய்ட், யுங் ஆகிய உளவியலாளர்களின் சித்தாந்தங்களால் தூண்டப் பெற்று செயல்பட்டு வந்த அமெரிக்க ஓவியர்களான ஜாக்ஸன் பொல்லாக், ஆர்ஷெல் கார்க்கி, ராபர்ட்மதர்வெல் போன்றவர்களின் இயக்கத்தைத் திசை திருப்பியது. கட்டற்ற வர்ணப் பரப்புகளின் மீது புராணிக விஷயங்களை இணைத்து நவீனத்துவமான மதிப்பீடுகளை உருவாக்கும் முறையை இந்த ஓவியர்கள் மீரோவிடமிருந்து கற்றுக்கொண்டு பரவலாக்கினார்கள்.

பாரிஸை அடைந்த மீரோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் பிந்திய இம்ப்ரஷனிஸ ஓவியங்களின் செல்வாக்கு இருந்தது. தொடர்ச்சியான சோதனை முயற்சிகளின் முடிவில் மீரோ மீரோவைக் கண்டடைந்தார். மீரோ எந்தக் குழுவிலும் சாராமல் தணித்து நின்றார். எனினும் சர்ரியலிஸம் என்னும் இயக்கத்திற்கு மீரோ தேவைப்பட்டார். பெரும்பாலும் கவிஞர்களே நிறைந்திருந்த சர்ரியலிஸ இயக்கத்திற்கு மீரோவின் கான்வாசுகள் புதிய பரிமாணத்தை அளித்தன. 1926இல் முதலாவது சர்ரியலிஸ ஓவியக் கண்காட்சியில் மீரோ பங்கேற்றார். 'சர்ரியலிஸ்டுகளில் மிகப் பெரிய சர்ரியலிஸ்ட்' என்று சிறப்பிக்கவும்பட்டார்.

1930களில் இடைப்பகுதியில் மீரோவின் ஓவிய உலகம் மாறுதலடைந்தது. அடர்ந்த நிறங்களும் ராட்சச வடிவங்களும் அவரது திரைகளில் இடம்பெற்றன. தனது தாய்நாடாகிய ஸ்பெயின் மீது பாசிஸம் செலுத்திய ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதாக அவை அமைந்தன.

நிறங்களில் வெற்றுப் பரப்பில் நிறைய சிறிய உருவங்களைப் பரவவிட்ட பாணியை மீரோவின் படைப்புகளில் காணலாம். வயது ஆக ஆக மீரோவின் பாணி மாற்றமடைந்து வந்தது. பிற்கால ஓவியங்கள், வெறும் நிறப்பரப்பில் ஒற்றை உருவங்கள் கொண்டவையாக இருந்து, கடைசிக்கட்ட ஓவியங்கள் விரிந்த நிறப்பரப்பில் தீர்க்கமான தூரிகை வீச்சுக்களை மட்டுமே கொண்டிருந்தன.

யெஹான் மீரோவை, பாப்லோ பிக்காஸோவுடன் ஒப்பிடலாம். பிக்காஸோவைப் போலவே மீரோவும் ஸ்பானிய மரபிலிருந்து தோன்றியவர். எந்தக் குழுவிலும் அடைபடாமல் சுதந்திரமாகச் செயல்பட்டவர். தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டவர். சமகாலக் கலைஞர்களிடம் வலுவான செல்வாக்குச் செலுத்தியவர். கிராபிக்ஸ், எட்சிங், சுவர் ஓவியங்கள், சிற்பம் என்று பல சாதனைங்களையும் வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர். பிக்காஸோவைப் போலவே தொண்ணூறுகளின் தொடக்க வயதில் இறந்தும் போனார்.

பிக்காஸோவுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமும், புகழும் மீரோ என்ற சர்ரியலிஸ்டை அணுகவில்லை. எனினும், நவீன ஓவியக் கலைக்கு உயிர் கொடுத்ததில் யெஹொன் மீரோ வகித்த இடம் பிக்காஸோவுக்குச் சமமானது.

***
நன்றி : சுகுமாரன், மீட்சி, அன்னம் பதிப்பகம்
***

Wednesday, November 14, 2012

மஜா ஆகயா! - நுஸ்ரத் ஃபதே அலிகான்

நெருங்கிய நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு டென்சன். இசையைப்பற்றி மருந்துக்குகூட எனக்கு தெரியாதென்றாலும் அதுதான் மருந்தாக இதுவரை எனக்கு இருக்கிறது. அதை இங்கே இணைக்கலாம் என்றால் ’வடிவேலு தலையிலேர்ந்தும் வாக்னர் இசை வரும்’ என்று ஒரு சுட்டி அனுப்பி குட்டினார் ஒருவர். நங்! சிரித்து முடித்ததும் துக்கம் அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. வழக்கம்போல உஸ்தாத் நுஸ்ரத் ஃபதேஅலிகான்தான் இப்போதும் என்னைக் காப்பாற்றினார். மஜா ஆகயா! கேளுங்கள். - ஆபிதீன்
***


Thanks : SAFFY7411

Tuesday, November 13, 2012

டால்ஸ்டாய் இருக்காரா ? - சென்ஷி


காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ’என் பெயர் சிவப்பு’ நாவலின் [ஓரான் பாமுக்-ன் My Name Is Red (Benim Adım Kırmızı)] மொழிபெயர்ப்பை வாங்கி அனுப்புகிறேன் என்று சொன்ன நண்பர் தாஜ் , பயங்கரமான ஃபேஸ்புக் போராளியாக இப்போது மாறிவிட்டதால் நாமாவது ஷார்ஜா புத்தகக்கண்காட்சிக்கு போகலாம் என்று தோன்றியது. அஸ்மாவுக்கும் உம்மாவுக்கும் மாதச் செலவுக்கு அனுப்பியது போக பாக்கெட்டில் இருந்த 13 திர்ஹத்தின் உறுத்தல் வேறு தாங்க இயலவில்லையே... ஆனால் , அங்கே போனால்.....

கூகிள்+-ல் தம்பி சென்ஷி நேற்று பதிவிட்டதை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அவர் எழுதியிருப்பதில்,  ‘அசல் இலக்கியவாதிகளாக’ என்னையும் மஜீதையும் குறிப்பிட்டதைத் தவிர மற்றதெல்லாம் உண்மை. இனி, சென்ஷியைப் படியுங்கள். - ஆபிதீன்

***


ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சிக்கு போன கதை

சென்ஷி

புத்தகத் திருவிழா வருடா வருடம் ஷார்ஜாவுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னை கொண்டு போகத்தான் ஆளில்லை என்ற குறை போன வருடம் வரை எனக்கு இருந்திருக்கும் போல.  அடுத்த வருடம் இந்த குறையிருந்திடக்கூடாதென அசல்/அமீரக/இலக்கியவாதிகளான ”ஹாரிபிள் ஹஜரத் புகழ்” மஜீத் மற்றும் சாதிக்குடன் எழுத்தாளர் ஆபிதின் அண்ணனும் என்னைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார்.

காலச்சுவடு பதிப்பகம் இம்முறை ஷார்ஜா புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போடுகிறார்களாமே! உனக்குத் தெரியுமா? என்று அவர் தொலைபேசியில் கேட்டதில் இருந்துதான் இந்த நிகழ்வை ஆரம்பித்திருக்க வேண்டும்.   உங்களின் நல்ல நேரம் இது இரண்டாம் பத்தியாகிவிட்டது.

வருடா வருடம் ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்பதை செய்தித்தாளில் தெரிந்து கொள்கிற அளவு மாத்திரமே இலக்கிய அறிவு கொண்டவனிடம் காலச்சுவடு பதிப்பகத்தினர் இம்முறை ஷார்ஜா புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்களாமே!? உனக்குத் தெரியுமா என்று கேட்டவரிடம் என்ன பதில் தந்துவிட முடியும்..!  தவிர  நான்கைந்து சிறந்த சிறுகதைகளை தட்டச்சிவிட்ட தைரியத்தில், இணைய இலக்கியவாதியெனும் சித்திரத்தில் பங்கும்/பரிமளித்தும் கொண்டிருக்கும் என்னிடம் புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் என்றால் முதன்முறையாகவா? வருடா வருடம் தமிழ்ப்பதிப்பகத்தினர் புத்தகங்களை விற்கக் கொண்டுவருகிறார்களா? இம்முறை காலச்சுவடு அடியெடுத்தலில் அடுத்தடுத்து எல்லாப் பதிப்பகங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற தீவிரத்துவமான கேள்விகள் அரித்துக் கொண்டிருந்தாலும் மனதை அமைதியாக்கி, ”வெள்ளிக்கிழமைதானே... ஆமாண்ணே.. ஒண்ணும் வேலை இல்லைண்ணே.. போயிடலாமுண்ணே.. மதியம் சாப்பிட்டப்புறம் கெளம்பிடலாமா.. சரிண்ணே” என்று வியாழன் மதியம் தொலைபேசியில் ஹா.ஹ. புகழ் மஜீத் அண்ணனிடம் சொல்லியாகிவிட்டது.

வெள்ளி...

கிளம்பிய பிறகு சரியாய்ப் பூட்டினோமா என்ற சந்தேகமெழுவதைப் போல, காலச்சுவடு நெசம்மாவே இங்க ஸ்டால் போடுறாங்களா? என்று ஆபிதீன் சந்தேகப் பிரகடணத்தைக் கொண்டு வர, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு உலகந்தெரிந்த உத்தமரான ஆசிப் அண்ணாச்சியிடம் கேட்டால் ஆச்சு என்ற யோசனை பரிசீலனைக்குட்படுத்தப்படாமலேயே மற்ற மூவரும் ஆமோதித்த தருணத்தில் அண்ணாச்சிக்கு தொலைபேசி உறுதி செய்து கொள்ளவியன்ற முயற்சி தோல்வியுற்றது. காரணம் அவருக்கு அதைப் பற்றி யாரும் ஒன்றும் கூறவில்லையாம். அண்ணாச்சிக்கே அழைப்பில்லாத இடத்தில நாம என்ன செய்ய என்று சிகரெட் புகையோடு வெடைத்தவனை காரில் தூக்கிப் போட்டு ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு சென்றாயிற்று.

சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதில் சாண் அளவாவது ஏறிய சந்தோசம் கிடைக்கட்டுமே என்ற மகானின் வாக்குக் கிணங்க காலச்சுவடு இல்லாவிட்டால் ஷார்ஜா கூட்டத்தையாவது கண்டு வரலாமென்று உள்ளே நடைபோட்டோம்.  ஐந்து அரங்குகள். முதல் நான்கில் அரபி புத்தகங்களை மொய்த்தபடி சுமாரான கூட்டமிருக்க, ஐந்தாம் அரங்கான இந்திய வாயிலில் சூப்பர் கூட்டம். முன்னால் இரண்டடி கூட நகர விடாது, முன்னேயுள்ளோர் வழிவிடாது புத்தக அரங்கினை மொய்த்திருந்தனர். அரங்கின் முதல் கடை அமர்சித்ர கதா கதைப்புத்தகங்கள்.. பெரும்பாலும் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலமென்று இருந்த கூட்டத்தில் தஸ்தோவாஸ்கி இருக்காரா? காஃப்கா இருக்காரா என்றெல்லாம் குரல்கள் எழுந்து வந்தது. என் பங்கிற்கு டால்ஸ்டாய் இருக்காரா என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன். புத்தகம் வாங்குபவர்களுக்குத்தானெ பதிலின் அவசியம் முக்கியம்.. ஐந்தாம் அரங்கின் மத்தியில் இருந்த கும்பல் இல்லாத நேஷனல் புக் டிரஸ்டின் உள்ளே நுழைய, காண்டெம்ப்ரரி ஆஃப் ஆர்ட் இன் இந்தியா புத்தகத்தை விருப்பமாய் ஆபிதின் அண்ணன் எடுத்து விலை விசாரிக்க, அங்கிருந்த மேற்பார்வையாளர் இவையெல்லாம் விற்பனைக்கில்லை.. பார்வைக்கு மாத்திரமே வைத்துள்ளோம். பார்த்துவிட்டு வைத்துவிடுங்கள் என்று கொஞ்சமும் அனுதாபமின்றி கூறினார். புத்தக விற்பனைக்கான கண்காட்சியில் விற்பனை செய்யப்படாது, புத்தகத்தையே கண்காட்சியாக வைத்திருக்கும் அவர்களின் பாங்கு வியப்பில் திக்குமுக்காட வைத்தது. ஒரு பெரும் நன்றியை உதிர்த்துவிட்டு தென்னிந்திய தேசியக்கடலை நோக்கி நகர்ந்தோம்.

காலச்சுவடு அரங்கு பார்வைக்குக் கிடைக்கவில்லையென்பது ஒரு புறம் இருக்கட்டும். அங்கு காணக் கிடைத்த தமிழ் பொக்கிஷங்கள் அனைத்தும் இரண்டு எழுத்தாளர்களின் எழுத்தாக மாத்திரமே இருந்தது. அதிலும் ஒருவர் ஐந்து புத்தகங்கள் எழுதியவராயும் இன்னொருவரின் ஒரு புத்தகமும் கிடைத்தது. சாவு வீட்டில் சொல்லிட்டுப் போகக்கூடாதென்ற சாங்கியமிருப்பது போல புத்தக கண்காட்சிக்கு வந்து எதையும் வாங்காமல் செல்லக்கூடாதென்ற சாங்கியமும் சேர்ந்து கொண்டது போல. மஜீத், இப்பி ஃபக்கீர் மற்றும் வேர்கள் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டார். வேர்கள் மொழிபெயர்ப்பின் மூலமான ரூட்ஸ் தொலைக்காட்சித் தொடர் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்து ஆபிதின் அண்ணனிடம் சொல்லி வைத்தேன். இன்றுவரை அந்தத் தொடரைப் பார்க்காமல் இருப்பதை மறைத்துவிட்டேன். எங்களின் வருகை நினைவுக்காக எடுக்கப்பட்ட நான்கைந்து புகைப்பட முன்நிற்றலுக்குப் பின் தமிழ் அரங்கை விட்டு நகர்ந்தோம்.

அன்றைய இரவு எட்டு முப்பது மணிக்கு நிகழவிருந்த அருந்ததி ராயின் உரையாடலைக் கேட்கவும் காணவும் அங்கிருந்த நாற்காலிகள் இந்தியப்பெண்களால் கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டே அருந்ததிராயின் உரையாடலைக் கேட்கும் ஆர்வமில்லாததால் புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேறினோம். இரவு உணவிற்காக சென்ற அப்பா ஹோட்டலும், அதன்பின்னான டீக்கடைக்கு முன்னால் நின்று ஆபிதின் அவர்களுடனான உரையாடலும் என்னுடைய அந்த நாளை முழுமையாக்கின.

***

நன்றி : சென்ஷி | E-Mail : me.senshe@gmail.com

தலைப்பு உதவி : ரா.கிரிதரன் 

***




Thursday, November 8, 2012

ஹெச்.ஜி.ரசூலுடன் ஓர் உரையாடல் : தாஜ்

தாஜ் : நான் முக்கியமெனக் கருதும் தமிழ்ப் படைப்பாளிகளில் தோழர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களும் ஒருவர். தன் சிந்தையில் உராயும் மதக் கூறுகளுடன் அவர் நிகழ்த்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதன்பொருட்டு அவர் எதிர் கொள்ளும் இழப்புகள் சாதாரணமானதல்ல. சொந்த மதத்துக்காரர்களால் அவர் நேர்கொண்ட இன்னல்களில், நான் அதிகமாக அலைக்கழிக்கப்பட்டேன். 'சைத்தான்' என்ற சிறுகதையினை நான் எழுத அந்த அலைக்கழிப்புதான் பெரிய காரணம்.

இம்மாதம் (நவம்பர்) 2, 3, தேதிகளில் பேஸ்புக் வழியாக அவரோடு ஓர் உரையாடல் நிகழ்த்த வழி கிட்டியது. 'ஆயிரம் மசலாவின் அற்புதவாசல்' என்கிற ஆய்வு சார்ந்த பதிவொன்றை அத் தேதிகளில் அவர் பதிய, அதையொட்டி சில வினாக்களுக்கு விடைதேடும் முகமாக அவரோடு உரையாடினேன்.

அந்த உரையாடலில், குளைச்சல் மு. யூசூஃப், பிர்தவ்ஸ் ராஜகுமாரன், பென்னேஸ்வரன், கிரிதரன், ஃபைசல்கான் போன்ற நண்பர்களும் பங்கேற்றனர். அதன் முழு வடிவத்தையும் இப்போது உங்களின் பார்வையில் வைக்கிறேன். நன்றி.


***


ஆயிரம் மசலாவின் அற்புதவாசல்
ஹெச்.ஜி.ரசூல்

மஸ் அலா அரபு மூலச் சொல்லில் இருந்தே மசலா என்ற வழக்குச் சொல் உருவாகி உள்ளது. மஸ்-அலாத் என்பதற்கு வினா என்பது பொருளாகும். இஸ்லாம் தொடர்பான வினாக்களுக்கு விடை அளிக்கும் உரையாடல் இலக்கியமே மசலா இலக்கிய வகைமையாகும்.
நூறுமசலாவினைப் போன்றதொரு மசலாஇலக்கியத்தின் பெயர் ஆயிரம் மசலா என்பதாகும். இதன் காலம் கி.பி.1572. இந்நூலை எழுதியவர் மதுரையைச் சேர்ந்த வண்ணப் பரிமளப்புலவர். இதற்கு அதிசயப் புராணம் என்றொரு சிறப்புப் பெயரும் உண்டு.

நபிகள் நாயகம் அவர்களின் மக்காவிலிருந்து மதினாவிற்கு இடம் பெயர்ந்த ஹிஜ்ரத் ,ஹதீஸ்கள் அடிப்படையிலான வாழ்வியல்நெறிகள் தீனியத்தான அறங்கள், வானவர்கள்.சொர்க்கம் .நரகம். என விரியும் பண்பாட்டுலகம் தொடர்பான வினாக்களாகவும் விளக்கங்களாகவும் இந்நூல் உருமாறுகிறது.. செய்யுள்வடிவிலான நடை அமைப்பு ஆயிரம் மசலாவை புரிந்து கொள்வதற்கு சிரமத்தைக் கொடுக்கிறதோ என எண்ணவும் தோன்றுகிறது.

நூறுமசலாவைப் போன்ற எளிய நாட்டுபுற மொழிநடை ஆயிரம் மசலாவில் முகுதியாகத் தென்படவில்லை.. இது அப்துல் இப்னு சலாம் நபிகள் நாயகத்திடம் விளக்கம் பெற கேட்கும் வினாக்களில் ஒன்று.
தீன் என்பது என்ன?-இதன் செய்யுள் வடிவம் இவ்வாறாக அமைகிறது..

மானாக மேவந்த மக்காவில் வாழ்
தேனாவிலே வந்த செப்போசையாய்
மீனாகமே கொண்ட மெய்த்தூதரே
தீனாவதே தென்று செப்பீர்மனே
நபிகள் நாயகம் அவர்கள் இதற்கான விடையைப் பகர்கிறார்கள்.
வீறான சூதர்க்கு மேலானவா
தேறாகு பாகொத்த தீனாவதே
சாறான கலிமா ஷஹாத்துட
னீறாத சீபத்தி லீமானுமாம்……

எது தீன் என்பதற்கு பதிலாக தேனொத்த பாகொத்த தீன் என்பது சாறான கலிமா சஹாதத் என விளக்கம் கிடைக்கிறது..ஈமான் கொள்வதையே தீன் எனவும் அறிவிக்கிறது.

இத்தகையதான ஆயிரம் வினாக்களும் அதற்கான விளக்கங்களும் தமிழ் இலக்கியத்தினல் புது அனுபவத்தின் அற்புத வாசல்களைத் திறக்கிறது.

***
தாஜ்:
என்ன இப்படி..., இதில் போய் மயங்கிக் கிடக்கின்றீர்கள்? இலக்கிய வகையே என்றாலும்... தினத்தந்தி கன்னித் தீவைவிட பாமரத்தனமானது அல்லவா அது! இதனை ஏன் போற்றனும் என்று விளக்குங்கள் பிளீஸ்.

ஹெச்.ஜி.ரசூல்:
தாஜின் பதிவுக்கு நன்றிஉன்னதமானவற்றின் மீது நீங்கள் கவனம் கொள்கிறீர்கள்..வாழ்த்துக்கள்….பாமரத்தனமானவை எனக்குப் பிடிக்கிறது..இது முஸ்லிம்களின் சபால்டன் (subaltern)அரசியலோடு சம்பந்தப்பட்டது.ஒவ்வொரு பதிவிலும் வெவ்வேறு கன்னித்தீவுகளும் சிந்துபாத்துகளும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்மையத்திற்கு மாற்றான விளிம்புகளின் குரலை இன்னும் நாம் உற்றுநோக்கவேண்டியிருக்கிறது.

தாஜ்:
அன்புடன்...
ஹெச்.ஜி.ரசூல்.
உங்களது ஹைனஸ் மீது
நான் ஏகத்துக்கும்
பெருமை கொண்டவன்.
உங்களது தீர்கமான
சில இலக்கியச் சங்கதிகளை
சிலாகித்து வாசித்தவன்.
உங்கள் மீது அபாண்டம் வந்த போதும்/
நீங்கள் நீதியின் படிகளில்,
ஏறி இறங்கி
வென்று மீண்ட போதும்
நெகிழ்ந்தும், சந்தோஷம் கொண்ட
என் இருப்பை
நீங்கள் அறிய மாட்டீர்கள்.

இணையத்தில் வெளியான
கட்டுரை ஒன்றிலும்
சிறுகதை ஒன்றிலும் கூட
அந்த என் நிலைப்பாட்டை நான்
பதிவு செய்துள்ளேன்..

உங்களை அறியாமல்
இதனை எழுதுவதாக மட்டும்
நினைத்து விடாதீர்கள்.

இப்போது
நீங்கள் சிலாகிக்கத் தொடங்கியிருக்கும்
மூத்தோர்களின்
மதப்பற்று மேவிய
மத ரீதியான சரித்திர வரிகள்
ஏனோதானோவென்று
எழுதப்பட்ட ஒன்றாகவே கருதுகிறேன்.

சிலர் அவர்களின் தேவை பொருட்டும்
மதப்பற்று பொருட்டும்
அந்த வரிகளை
ராகத்திற்குள்ளும்/ இசைக்குள்ளும்
ரசனையான கவன ஈர்ப்புக் கொண்ட
சொல்லாடல்களுக்குள்ளும்
கலந்து தந்தபோது
அது...
இலக்கியமே அறியாத
நம் பெண்களின் மத்தியில்
அவர்களின் கவனத்தை கவர்ந்தது.
மற்றபடிக்கு
அந்த சிலாகிப்பு வரிகள்
மொழி ரீதியாக
தனித்த வேறெந்த சிறப்புகளையும்
கொண்டு விளங்குவதாக நான் கருதவில்லை.

உங்களின்
இந்த ஈடுபாடு
உங்களது
அரசியல் சார்ந்த தேவைக் கொண்டதாக
இருக்கும் என்பதுதான்
என் வலுவான எண்ணம்.

இத்தனை கருணைகொண்ட நீங்கள்...
’திண்ணை’யின் உச்சத்தில்
உட்கார்ந்து கொண்டு
சின்ஸியராக எதிர்க் கவிதைகள்
எழுதிக்கொண்டிருந்த போதுதான்
இஸ்லாத்தைக் குறித்து
அதில் மிகப் பெரிய அளவில்
அபாண்ட பிரச்சாரம் நடந்தது.
உங்களுக்கே நினைவிருக்கும்
நீங்கள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாது
அடுத்த எதிர்க் கவிதையினை
எழுதிக் கொண்டிருந்தீர்கள்.

அதனை நேர் நிறுத்திப் பார்க்கிறபோது
இந்த உங்களது அதீத அக்கரை
உங்களின் அரசியல் தேவை பொருட்டு
நடப்பதாக நான் கருதும்
என் எண்ணத்தை ஊர்ஜிதமாகிறது.

தவறு இருக்கும் பட்சம்
தவறாமல் குறிப்பிடுங்கள்.
திருத்திக் கொள்கிறேன்.

அன்புடனேயே
-தாஜ்

குளச்சல் யூசுப்:
தாஜுதீனுக்கு தலை சுற்றுகிறதா? கவிஞரின் அணுக்கத் தோழனான எனக்கும் முன்பெல்லாம் இப்படி தலை சுற்றியதுண்டு.

தாஜ்:
தலைவரே.. (Kulachal Mu Yoosuf சொல்வது) புரியலை!!

ஹெச்.ஜி.ரசூல்:
பழங்குடிகளின் காலம் தவிர்த்து நவீனத்துவத்திற்கு முற்பட்ட காலம் வரை சமயமும் அரசியலும் ஒன்றாகத்தானே இருந்தன... மரபுவழி இஸ்லாம் தீவிரமாக இறுகிய வடிவெடுத்தபோது சூபிமரபு ஒருவகையில் ஜனநாயகத்தன்மையை முன்வைத்தது. இங்கு நீங்கள் விரும்பாவிடினும் கூட ஒரு சார்புநிலை எடுக்கத்தான் வேண்டியிருக்கிறது..

தாஜ்:
தலைவரே..., தெரியும். அதான் அரசியலா என்றேன். என்மட்டில் இஸ்லாத்தில் எந்த நிலையோடும் சமரசம் கொள்ளாதவன். மதமா.. ஓகே. அவ்வளவுதான். இங்கே எனக்கு உங்கள் மீதான கரிசனையும், உங்களை அலைக்ழிப்புக்கு உள்ளாக்கும் நபர்களும்தான் பிரச்சனை. இனி ஓகே. எதையும் எழுதலாம் நீங்கள். வாழ்த்துக்கள்.

ஹெச்.ஜி.ரசூல்:
இரண்டாவது தமிழ்- அரபு பண்பாட்டின் இணவு குறித்த எழுத்துமரபு,வாய்மொழிமரபை நாம் எவ்வாறு அணுகுவது என்பது குறித்த பிரச்சினை, படைப்பாக்கங் களின் அழகியல் என்பது கூட சார்புநிலைப்பட்டது...எதிர் அழகியல், கலக அழகியல் என நாம் பேசிக்கொண்டிருக்கும் இச்சூழலில் முஸ்லிம்களின் கிஸ்ஸா, நாமா, முனாஜாத்து போன்ற படைப்புகளின் வடிவமும் உள்ளடக்கமும் ,மொழிக் கட்டமைப்பும் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டுமென கருதுகிறேன்.. இவற்றையெல்லாம் ஒழித்துக் கட்ட ஒரு கூட்டம் கிளம்பியிருக்கும் போது நமது மரபின் வேர்களை தேடவேண்டியிருக்கிறது, பாதுகாக்கவேண்டியிருக்கிறது, மீண்டும் மீண்டும் பரப்புரை செய்யவெண்டியிருக்கிறது..இது வெறும் அரசியல் சார்ந்த பிரச்சினையல்ல..பண்பாட்டுஅரசியல் சார்ந்த பிரச்சினை..இலக்கிய அரசியல் போல..மேலும் இன்று நம்மிடையே புழக்கத்திலிருக்கும் பண்பாட்டு ஆய்வுகள்..மானுடவியல்சார்ந்தும் இனவரைவியல் சார்ந்தும் நுண் அரசியல் சார்ந்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது வெறும் நவீனத்துவ நோக்கில்  விளிம்புநிலைப் பண்பாடுகளை புறந்தள்ள முடியுமா என்கிற கேள்வி எழுகிறது...

நண்பர் தாஜ் , நமக்கிடையே இருந்த இடைவெளிதான் நம்மைப்பற்ரிய புரிதல்களை நெருங்கவிடாமல் தடுத்துள்ளன.உங்களது எழுத்துக்களை மிக நீண்டகாலமாகவே வாசித்திருக்கிறேன்..ஷஆ,சாகிப்கிரான்.நீங்கள்..என பலரும் வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் அறிவேன். மட்டுமல்ல அண்மையில் கூட மைலாஞ்சி குறித்தும் அதன் அழகியல் குறித்தும் ஒரு காரசாரமான கட்டுரையை எழுதியிருந்தீர்கள்..இஸ்லாமிய தொன்மங்களை மறுபடைப்பாக்கம் செய்தல் குறித்தும் தொன்மக் கவிதைக் குறித்தும் உங்களது அபிப்பிராயங்களை முழுமையாக அறியமுடியவில்லை...அதே சமயத்தில் ஊர்விலக்கத்திற்கு எதிராக திண்ணையில் நீங்கள் எழுதிய் பதிவு முக்கியமானது என்றே நினைக்கிறேன்..நீதிமன்றம் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்.. இன்ன்மும் அப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை..ஐந்து வருடங்களாக தொடர்கிறது..உரிமையியல்நீதிமன்றத்தில ஊர்விலக்கு சட்டவிரோதமானது என தீர்ப்புவந்தது. அபீமுஅஜமாத்தினர் இதற்கு எதிராக சார்புநீதிமன்றத்திற்கு போனார்கள். அங்கும் அவர்களது அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது..இதன்பிறகு மதுரை உயர்நீதிமன்றத்திற்கு செகண்ட் அப்பீல் செய்தார்கள் அங்கும் அப்பீல் தற்போது தள்ளுபடி செய்ய்ப்பட்டுள்ளது இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்கு போக முடிவெடுத்துள்ளார்கள்.. இதற்கிடையே சென்ற வாரம் ஊர் சென்ரபோது அங்கு திட்டமிட்டு எனக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள் ..பிரச்சினையை கிரிமினலாக மாற்ற முயன்றுள்ளார்கள்..எல்லாவர்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது..கறுப்புபிரதிகள் வெளியிட்டுள்ள உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்..கவிதைநூல் வாசிக்க கிடைத்ததா...தற்போது உங்கள்து நூல் எதும் வெளிவந்துல்ளதா...

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்:
ரசூல்ஜி ! ஏன் உங்கள் ஜமாஅத் இவ்வளவு கீழ் தரமாக உங்கள் விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கிறது . இது உங்களின் படைப்பு சம்பந்தமான பிரச்சனை இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது . நீதி மன்றங்களின் தீர்ப்பை அவமதிக்கும் அவர்கள் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடருங்கள் .

தாஜ்:
அன்புடன் ரசூல் அவர்களுக்கு..
தாமதம் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

நம் சமூகத்தாரிடையே அரக்கத்தனமான அரிவாள் கலாச்சாரமும், அறிவின்மையின் கலாச்சரமும் மதத்தை முன்வைத்து நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் அத்தனை பேர்களும் அதிகாரத்திற்கு ஆசை கொண்டவர்கள். ஒன்றாக மேய்ந்த ஐந்து பசுவை பிரித்து, வேட்டையாடிய சிங்கத்தின் கதையை ஆரம்பப் பாடசாலையிலேயே படித்தவர்கள் நாம். இங்கே இவர்களே தங்களது சகோதர்களை பிரித்து வைத்து, பிரிந்து நின்று சிங்கத்தின் வேட்டையாடலுக்கு வழிவகுத்து தருகின்றார்கள்!

நிஜத்தில், இந்தக் கலாச்சாரம் பரவிக் கொண்டிருப்பதை காண மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஒற்றுமையின் கயிற்றைப் பற்றி பிடிக்க வேண்டும் என்று நமக்கு புத்தி போதித்துவிட்டு, இப்போது என்னைப் பற்றி பிடியுங்கள் என்கிறார்கள். கஷ்டம்.

சென்ற காலங்களில், இப்படித்தான் சுன்னத் ஜமாத் அறுபதுக்கும் மேலான கூறுகளாக சிதைந்தது என்கிற வரலாற்று உண்மையை அவர்களுக்கு உரைக்கவில்லை. எதுவொன்று முற்றினாலும் உடைவது கட்டாயமாகிப் போகும் என்பதை இவர்களுக்கு யார் புரியவைப்பது!

இந்த நாட்டில், அதுவும் குறிப்பாக தமிழகத்தில், தேர்ந்த ஞானிகளாலும் சூஃபிகளாலும்தான் இஸ்லாம் வளர்ந்து நிலைக்கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்களை முன்வைத்து இஸ்லாத்தைத் தழுவியர்கள் எல்லாம் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. அத்தனை மக்களும் இங்கே உள்ள பிற மதத்துகாரர்கள்தான்!

அவர்கள் தங்களது பூர்வீக மதத்தின் போக்கில், அதன் அதீத செயல்பாடுகளில், அதனை கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களது பிரித்தாண்ட சூழ்ச்சியில், கூடுதலான அடக்கு முறைகளில் மனம் கசந்த தருணம் அவர்களிலேயே நாம் குறிப்பிடும் ஞானிகளும் சூஃபிகளும் தோன்றி, பந்துக்களையும், மற்ற நேசிப்பாளர்களையும் திட்டுத்திட்டாய் கிராமம் கிராமமாய் அரவணைத்து இஸ்லாத்தை தழைக்கவைத்தார்கள். ஒரு நிமிட நேரம், அந்த முயற்சி கொண்டவர்கள் தினம் தினம் தாண்டிவந்த நெருப்பாற்றை இன்றைய புதுக் கலாச்சாரம் பேசுகின்றவர்கள் யோசிக்க வேண்டும். தங்களது அழைப்பை ஏற்று வந்த மக்களின் இரத்தத்தில் ஊறிபோன சிலபல சங்கதிகளுக்கு மதிப்புக் கொடுத்து, ஆனால் இறைவனின் பாதையில் இருந்து நழுவாது அரவணைத்து அழைத்து போன நிகழ்வு யோசிக்கத் தெரிந்த நம்மவர்களை நிச்சயம் மலைக்கவைக்கும்!  

நம்மைச் சார்ந்த ஞானிகளும், சூஃபிகளும் பாதை செப்பனிட்டு போட்டுவைத்துவிட்டு போன தார் ரோட்டில் வாகன சகிதமாக வந்து, நீ இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்று அதிகார அலட்டல் செய்பவர்களை காணும்தோறும் மனசு நோகவே செய்கிறது. இவர்கள், முதலில் அந்த ரோடு போட்டவனின் தன்னலமற்ற தியாகச் செயல்பாடுகளை மதிக்க வேண்டும். மதிக்காவிட்டாலும் அவர்கள் குறித்தும், இந்த மண்ணில் இஸ்லாம் வளர்ந்த சிரமத் திசை குறித்தும் யோசிக்கவாவது வேண்டும்.

இவர்களால் முடிவதெல்லாம்..., அழிவுச் செயல்பாடுகள் மட்டும்தான். மதச் சீர்த்திருத்தம் என்கிற பெயரில் நம்மவர்களை பிரித்து நிற்க வைத்திருப்பது, தர்கா வேண்டாம் என்கிர பெயரில் முஸ்லீம் இந்து ஒற்றுமைக்கு வேட்டு வைத்திருப்பது, திருமண சீர்த்திருத்தம் என்கிற பெயரில் திருமணத்தின் மணத்தையே இல்லாமல் ஆக்கியது, இறந்தவர்களுக்கான நினைவு மரியாதைகளை தத்துப்பித்தென்றாக்கியது, ஜக்காத்தில் புது முறையென்று அதனை கேள்விக் குறியாக்கியது,

மௌலதை வேண்டாம் என்று இஸ்லாமியர்களின் மனதில் காலம் காலமாக வளர்ந்து வந்த இனம்புரியாத இறை ஈர்ப்பை சிதைத்தது. தொழுகையில் சீர்திருத்தம் என்கிற பெயரில் இஸ்லாமியன் கொண்டிருந்த இறையச்சத்தில் கைவைத்தது என்று இப்படியே அவர்களின் தேவையற்ற செயல்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். இஸ்லாமிய வாழ்வு முறையினை ஆதி இஸ்லாமிய அரபித்தனம் மாறாமல் வழிநடக்கும் அந்தத் தம்பிகளில் ஒருவனை அழைத்து, பூமியை பாலைவனமாக்கி, அரபி பேசிபடிக்கு ஓட்டகத்தில் பயணம் செய்ய நாம் வலியுறுத்தும் பட்சம் நம்மை பைத்தியக்காரர்களாகவே பார்ப்பார்கள். ஆனால், வண்டிவண்டியாக புத்தி கூறியபடி நம்மை ஆதி அட்சரம் மாறாமல் நடக்க வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.

விடலைத்தனம் மாறாத இவர்களைப் பற்றி இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களுள் இஸ்லாமிய சீர்திருத்தம் என்கிற அசட்டுத் தனங்களையும்  மீறி மறைந்திருக்கும் அதிகார ஆசை, இப்போது இவர்களை தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது. கோடிகளில் புரளும் தாராள சூழ்நிலை யதார்த்தமாக அவர்களை அண்டியும் இருக்கும். இதுவொன்று போதும் அவர்கள் முழுகிப் போக. அவர்களை மதித்து ரசூல் கவலை கொள்ள வேண்டாம். அவர்களால் எந்தவொரு இஸ்லாமியப் பண்டை இலக்கியத்தையோ, சூஃபிகளின் தர்காகாக்களையோ எதுவும் செய்ய முடியாது. இன்றைக்கு சப்தம் ஓங்கி கேட்பது நிஜம்தான். கொள்ளும் வலிகளில் நாளை தானே அது அடங்கும்.

பண்டைய இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதற்கு வலுவிருக்கும் பட்சம் அது தன்னை தானே காத்துக் கொள்ளும். வலுவற்றவைகள் மண்ணில் விழுந்து மடிவதுதான் முறையாகவும் சரியாகவும் இருக்கும். நான் இலக்கியம் படித்த எந்த மூத்தவர்களும் இந்த மீட்டுருவாக்கம் செய்ததில்லை. இந்த மீட்டுருவாக்கம் என்கிற வார்த்தையே உலக எழுத்தார் ஜெயமோகனால் கண்டு பிடிக்கப்பட்டதாகவே அறிகிறேன். பண்டைய இலக்கியங்களோடு ஒப்பிட்டு வித்தை செய்வதென்பதெல்லாம்..., முனைவருக்குப் படிக்கும் மாணவர்களின் வேலை. இலக்கியவாதிகள் எப்பவும் படைப்பை செய்கிறவர்கள். மீட்டுருவாக்கம் அவர்களுக்கு சிறப்பு தருமா என்று விளங்கவில்லை. இஸ்லாத்தின் மீது பற்று இருக்கும் பட்சம், அதை முன்வைத்து நீங்களே ஓர் படைப்பை படைக்கலாமே. உங்களது திறமை மீது உங்களைவிட அதிகமாக கருத்துக் கொண்டிருப்பவன் நான்.

இப்போ உங்களது வழக்கு குறித்து பேசலாம். எனக்கு கோர்ட்டைவிட அமர்வில் உட்கார்ந்து பேசி பேசி தீர்ப்பதில்தான் மிகுந்த நம்பிக்கை. நீங்கள் ஏன் அதனை கைநழுவி விட்டீர்கள் என்பதை நான் அறியேன். மீண்டும் கூட நீங்கள் அப்படி முயல்வதை நான் விரும்புகிறேன். நேர் பேச்சால் ஆகாதது எதுவுமில்லை. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் வருடக்கணக்கில் போர் நடக்கிற போது கூட அதனை நிறுத்துவது நாடுகளுக்கிடையே ஆன அமர்வும், சமாதான உடன்பாடும்தான். யோசியுங்கள்.

உங்களது புதிய கவிதைத் தொகுப்பு வந்திருப்பதை நான் அறியேன். வரும் புத்தகச் சந்தையில் கட்டாயம் வாங்குவேன், கட்டாயம் வாசிப்பேன், கட்டாயம் விமர்சனமும் எழுதுவேன், நன்றி.

பென்னேஸ்வரன்:
நண்பரே, இவர்களின் முகவரி கிடைக்குமா? தொடர்பு எண் ஏதாவது இருந்தால் தயவு செய்து தெரிவியுங்கள். இவர்களுடைய பாடலை டெல்லியில் நடந்த பக்தி உத்சவ் நிகழ்வில் கேட்டு இருக்கிறேன். ஏதாவது அமைப்பு மூலமாக இவர்களை டெல்லிக்கு வரவழைக்க முயற்சிக்கிறேன்.

கிரிதரன்:
இந்தப் பக்கிரிஷாக்களின் இசையும், குரல் வளமும் என்னைக் கவர்ந்திருக்கின்றன. நாகூர் ஹனிபாவுக்குப் பிறகு என்னைக் கவர்ந்தவர்கள் இந்த 'பக்கிரிஷாக்களே'.

ஃபைஸல்கான்:

அருமையானபதிவு. மலையாள மண்ணில் "துகிலுணர்த்தல்" கொண்டு,தேசமெங்கும் பாடித்திரிந்த, ஓலைக்குடை பாணர்களை ஒத்தவர்கள் பகீர் சாகிப்கள். அலியாரின் வீரத்தையும்,பாததிமாவின் இல்லற நெறியையும்,உமரின் தீரசரித்திரத்தோடு ,பெருமானாரின் சரித்திரத்தையும் பாமர இசுலாமியனின் ,நெஞ்சகத்தே பசுமரத்தாணியாய் பதியச்செய்தவர்கள் பகீர்கள் என்றால் அதில் மிகையில்லை.அர்பு தமிழ் கொண்டு ,மறைபயின்ற காலத்திலும்,இவர்களின் தப்ஃஸ் இசையோடு கூடிய இலக்கிய ஜாலங்களை காதோர்த்து நின்ற நாட்கள் இன்றும் இனிக்கிறது.இவர்களையும் ,பண்டை இலக்கியங்களையும் பழமையென்றும்,பாமரமென்றும் ஒதுக்கிவைத்ததால் தான் இன்று, இசுலாமிய அறிவுமிகுந்த(?) மேதாவி இளம் தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.நவீனமென்றும்,நாகரீகமென்றும் நம்மை ஏமாற்றிக்கொள்ளும் தருணத்தில்,நம் நாளைய தலைமுறையில் யாரேனும் திரும்பிநோக்க நேர்ந்தால்,அழிந்துபோன பாதசுவடுகளை மட்டும் விட்டு வைக்கவேண்டாம்.

***
ஃபக்கீர்ஷாக்களுக்கு நன்றி! - ஆபிதீன்
***
தொடர்புடைய ஒரு சுட்டி :மைலாஞ்சி விவாதங்கள்