Thursday, September 30, 2021

காலம் கலைத்துப்போட்ட கலையும் (முஸ்லீம்களின்) வாழ்வியலும் - சு.மு.அகமது

கட்டுரை : சு.மு.அகமது

"இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்" எனும் தகவல் களஞ்சியத்தை தனது அயராத ஆய்வுகளால் தேடிக்கண்டடைந்து அவற்றை தொய்வின்றி திரட்டாக இலக்கியவெளிக்கு அளித்திருக்கும் எழுத்தாளர் அப்சல் பல சிறுகதைகளுக்கு சொந்தக்காரர்.

இதற்கு முன் இந்தி நடிகர் தர்மேந்திரா குறித்து ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார்.பெருநாள் படைப்புகள் எனும் ஒரு தொகுப்பும் அவரது இலக்கியப்பணியில் சேர்த்தி.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது வசிப்பது சென்னையில்.

இந்திய சினிமாவில் முஸ்லீம்கள் எனும் இப்புத்தகத்தில் காலவெள்ளத்தின் கட்டுக்கடங்காத பெருக்கால் எவ்வாறு முஸ்லீம் சமூகமும் அதன் வாழ்வியல் நெறிமுறைகளும் கலைக்கப்பட்டு பிறழ் பதிவாய் மாற்றியமைக்கட்டது என்பதை தரவுகளின் துணைக்கொண்டு ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.துவக்கத்தில் செம்மைப்படுத்தின வாழ்வியலாக எதோ ஒரு வகையினத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு இந்திய சினிமாவில் பிரதிபலித்துக் கொண்டிருந்ததையும்,காலப்போக்கில் எவ்வாறு அவர்களது அழகிய வாழ்வியலும் பங்களிப்பும் மழுங்கடிக்கப்பட்டன என்பதையும் பல திரைப்படங்களை உதாரணமாக முன்னிறுத்தி பதிந்துள்ளது அவரது ஆய்வுப்பணியின் செழுமையை வெளிக்காட்டுகிறது.

கலையின் வடிவமைப்பில் ஒளியொலித்திரைக்கலையும் ஒரு அங்கம்.கலைக்கு மதம் இனம் போன்ற எந்த பாகுபாடும் கிடையாது.பெரும் சாகரமான கலை வடிவமைப்பில் மூழ்கி தமக்கானதை கண்டடைபவர் திறமைசாலி.திரைக்கலை என்பது ஒரு கூட்டு முயற்சி.பல துறைகளையும் தன்னகத்தே கொண்டு பலருக்கும் வாய்ப்பளித்துக்கொண்டிருக்கும் ஒரு பொக்கிஷம் இது.இந்தியத் துணைக்கண்டம் பல மத இனக்கலாச்சாரங்களை கலவையாக கொண்ட ஒரு தீபகற்பம்.இதன் கலை வடிவங்களும் அதனதன் தன்மைக்கேற்ப மாறுபட்டிருக்கும்.

வேற்றுமையில் ஒற்றுமையை காணத்துடிக்கும் ஒரு கலைஞன் தனது படைப்பை இவற்றையெல்லாம் மனதுள் இருத்தித்தான் படைக்க வேண்டியுள்ளது.பெரும்பாலானவை வரலாற்று ஆவணங்களாய் மாறிப்போகின்றன.இப்படி தனது அனுபவங்களை தோழர் அப்சலால் முன்னிறுத்தப்பட்டு அவற்றை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மைகளையும் நிலைநிறுத்தி படைக்கப்பட்ட படைப்பு தான் இந்த அரிய புத்தகம்.

இந்தியத்திரைப்படங்களின் ஆரம்பக்காலந்தொட்டே முஸ்லீம்கள் இத்துறையில் பெரும் பங்காற்றியிருப்பது ஆச்சர்யமான உண்மை.ஆண் பெண்ணெனும் பாகுபாடின்றி அனைவரது பங்களிப்பும் சரிசமமாய் இருந்தது கண்டு வியப்பே மேலோங்குகிறது.

தமிழ்த்திரைப்படங்கள் தொடங்கி மலையாளம் கன்னடம் தெலுங்கு மராத்தி ஹிந்தி ஒரியா மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளிலும் பல இஸ்லாமியர்கள் பங்காற்றியுள்ளனர்.

இப்படி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்த இக்கலை ஊடகம்90-களுக்கு பிறகு எப்படி மாற்றம் கண்டது என்பதையும் விரிவாக ஒரு ஆய்வுப்பார்வையாக நம் முன் நிறுத்துகிறார் படைப்பாளி.

உதாரணத்துக்கு...

"கள்ளழகர்" படத்தில் விஜயகாந்த் நடித்திருந்த கதாபாத்திரமும் "விஸ்வரூபம்" படத்தில் கமல் ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்குமான வித்தியாசத்தையும் நுணுகி ஆராய்ந்தாலே உண்மை விளங்கும்.

அதோடு இன்றைய காலகட்டத்தில் வியாபார நோக்கோடு எடுக்கப்படும் படைப்புகள் தனது கலைத்தன்மையை இழப்பதோடல்லாமல் மத இன துவேஷத்தையும் பரப்பும் விதமாகவும் அமைந்துவிடுவது காலத்தின் சாபக்கேடு என்பதாயும் பதிவு செய்கிறார்.

பொதுவில்...

இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை அதன் சமூக நல்லிணக்க போதனைகளை அதன் சாரம் குறையாமல் மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு கலைவடிவமாக திரைத்துறையையும் உபயோகப்படுத்த வேண்டுமென்பதே படைப்பாளியின் பேரவாவாக இருப்பதை உணர முடிகிறது.

எல்லாவற்றையும் ஒற்றை சொல்லாக சொல்ல முடியாது தான்.ஆனாலும் வார்த்தைகளின் கோர்வை வரிகளாக வரிகளின் கோர்வை படைப்பாக மாறுவது போல்...முஸ்லீம்கள் இந்திய சினிமாவுக்கு ஆற்றியுள்ள பெரும் செயல்களை இப்புத்தகம் வெளிச்சமிட்டுள்ளது.இதுவொரு நல்ல தகவல் களஞ்சியம்.

இதன் தொடர்ச்சியாய் இன்னும் பல அரிய தகவல்களடங்கிய படைப்புகள் தமிழில் வர வேண்டும்.

வாழ்த்துகள்.


 -சு.மு.அகமது

**

"இந்திய சினிமாவில் முஸ்லீம்கள்" - - அப்சல்

பக்கங்கள் : 232

விலை : ₹ 250/-

**

வெளியீடு :

இருவாட்சி(இலக்கிய துறைமுகம்)

41,கல்யாண சுந்தரம் தெரு,

பெரம்பூர்,சென்னை - 600 011

அலைபேசி : 94446 40986

மின்னஞ்சல் : bookudaya@gmail.com

***

தொடர்புடைய பதிவு :
இந்திய சினிமாவில் முஸ்லிம்களின் சித்தரிப்பு - சு.தியடோர் பாஸ்கரன்

 


Saturday, September 4, 2021

கோடை வெயில் (சிறுகதை) – ஜே. பி. சாணக்யா

நன்றி : ஜே. பி. சாணக்யா, சென்ஷி

*


 கோடை வெயில் - ஜே.பி. சாணக்யா

அது ஒரு கடுமையான கோடைக்காலம். வெயில் எல்லோரையும் வீட்டுக்குள் போட்டு மூடிவிட்டிருந்தது அதிகாலை வெயிலே உச்சிவெயில் கனத்திற்கு இறங்கத் தொடங்கிவிடும் நாட்களாக இருந்த அப்பருவத்தில் ஊர் முழுதும் பசியும் வேலையின்மையும் தான் நிரம்பிக் கிடந்தன. வசந்தா முன்பக்கம் கட்டப்பட்டிருந்த சாக்கை விலக்கி ரோட்டைப் பார்த்தாள். தார் ரோடு கண்ணைக் கூசியது. தார் ரோட்டுக்கும் மறுபக்கம் கிளைத்துச் செல்லும் மண்சாலை, பொடி மண் வெயிலில் தகதகத்துக் கிடந்தது. செருப்பில்லாமல் ஒரு அடிகூட நடக்க முடியாது என நினைத்தாள். வீடு முழுவதும் கருகல் வாசனை நிரம்பிக் கிடக்கிறது. சேகரை இன்னும் காணவில்லை. அவள் பார்வையில் முகத்தைத் தொங்கப்போட்டபடி நிற்கும் தூங்குமூஞ்சி மரமும் வளைந்து குறுகும் செம்மண் சாலையும் கானலில் அலைந்துகொண்டிருந்தன. சாக்கை விட்டு விட்டு உள்ளே வந்து சுவரில் சாய்ந்து அமர்ந்தாள். சுவரில் ஏறியிருந்த வெப்பம் முதுகைத் தள்ளியது. சில வினாடிகள் வெயில் எட்டிப் பார்த்தது. வீடே இருட்டாக இருந்தது. கண்களை மூடித் திறந்தாள். நெளிநெளியான கம்பிகள் அந்தரத்தில் வளைந்து நகர்ந்து சென்றுகொண்டிருப்பதுபோலத் தெரிந்தது. மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். ஒரே புழுக்கமாக இருந்தது. சிறிது நேரம் ஊறும் வியர்வையை அங்குமிங்குமாய்ப் புடவைத் தலைப்பால் துவட்டினாள். அவன் களைத்து வருவதுபோலக் கற்பனை வந்தது. முட்டிக்கால் போட்டு நடந்து சென்று மீண்டும் சாக்கு விலக்கிப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது தான். கண்ணை இருட்டும் பளீரென்ற வெயில். அவன் இன்னும் வரவில்லை. மண்டி போட்டபடியே பின்னகர்ந்து சென்று சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். மேலே கீற்று எரவாணத்தில் செருகியிருக்கும் பனைவிசிறியை எடுக்கச் சோம்பேறித்தனமாக இருந்தது. முந்தானையால் மீண்டும் கழுத்தையும் வயிற்றுப் பகுதியையும் அழுத்தித் துடைத்துக் கொண்டாள். விசிறி தரும் காற்று கற்பனையில் மீண்டும் கட்டுப்பட்டவுடன் சடக்கென முழுதாய் எழாமல் எழுந்து விசிறியை உருவினாள். அவள் நினைத்தது போல் ஒரு இழுப்பில் வரவில்லை. இரண்டு முறை எக்கி இழுத்தாள். மிகவும் அலுப்புடன் விசிறிக்கொள்ளத் தொடங்கினாள்.

அவள் அமர்ந்திருக்கும் அவ்வீடு பழங்காலத்தில் கட்டித் தரப்பட்ட அரசுத் தொகுப்பு வீடு. அவள் வீடுதான் உள்ளே செல்லும் தெருவையும் வலப்பக்கம் நீண்டு செல்லும் தொகுப்பு வீடுகளையும் தொடக்கிவைக்கும் முதல் வீடு. அது அவ்வூரை வடக்கும் தெற்குமாகப் பிரித்துச் செல்லும் தார்ச்சாலையின் ஓரத்திலுமாக இருந்தது. முன்பக்கம் அவள் அமர்ந்திருக்கும் 'டாப்பு' இவளுடைய கல்யாணத்தின் போது சேகர் போட்டது. பின்பு அங்கேயே காற்றுக்காக உட்காரத் தொடங்கி அதுவே புழங்குமிடமாகிவிட்டது. பிறகு சேகர் மூலையில் இரண்டடுப்பு ஒன்றை வாங்கிப் போட்டான். பாத்திரம் வைக்க மேடைகள் செய்தான். அதன் பின் அவ்விடம் ஒரு முழுமையான சமையல்கட்டாக மாறிவிட்டது. மழைக்காலத்தில் முகப்பில் உட்கார முடியவில்லையெனக் கீற்றுக் கட்டி சன்னல் வைத்துச் சாக்கு கட்டிவிட்டான். அதுவும் ஒரு அறையாகிப் போனது. பழையபடி வீட்டினுள் சுழலும் புழுக்கம் அங்கேயும் புழங்கத் தொடங்கிவிட்டிருந்தது. இவ்வெயில் காலத்தில் இந்த 'டாப்பும் இல்லையென்றால் கல்வீட்டுக்குள் உட்கார்ந்திருப்பதை அவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. உள்ளிருக் கும் ஒரு சிறிய அறையில் துணிமணிகள், அடுக்குப் பானைகள், டிரங்குப் பெட்டிகள் இருளில் முழித்துக்கொண்டு கிடந்தன. தோட்டத்திலிருந்த பின் டாப்பு சமையலறை எருமை கட்டுவதற்குத் தோதாகிவிட்டது.

ரோட்டோர வீடாதலால் பேருந்துகள் மற்றும் டிராக்டர்கள் இதர வாகனங்களின் உறுமல் அவளுக்கு எப்போதும் கேட்டபடியே இருக்கும். சில சமயம் அதுவே அவளுக்கு வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் இருந்துவிடுகிறது. அமைதியாக ஏதாவதொரு நினைவுக்குள் அமிழ்ந்து கிடக்கும் போது ஒரு சைக்கிள் மணிச் சப்தமோ இதர வாகனங்களின் சப்தமோ அவளை இன்பமாகக் கலைத்துவிட்டுப் போகும்.  ஊருக்குள் நுழைபவர்கள், பயணத்திற்குக் காத்திருப்பவர்கள் என எல்லோருக்கும் பேருந்துகளின் மணிக்கணக்கும் போக்குவரத்தும் சொல்லியே அலுத்துவிடும். இவ்வெயில் காலத்தில் விவசாய வேலைகள் எதுவுமில்லை. வீட்டுக்குள் சோர்ந்து படுப்பதும் அசட்டுத் தூக்கம் தூங்குவதுமெனப் பொழுதுகள் சாய்ந்துகொண்டிருந்தன.

வறுமையான வாழ்க்கைதான் அவளுக்கு. சேகர் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த காலத்தில் அவள் ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு அம்மாவுடன் வயல் வேலைகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டிருந்தாள். பரதூருக்குச் சேகர் வசந்தாவைப் பார்க்கப் பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு எண்ணெய் தடவி வகிடெடுத்துச் சீவிக்கொண்டு நோட்டுப் புத்தகங்களுடன் செல்லும் போதெல்லாம் ஊரே வசந்தாவைக் கிண்டல் செய்து சந்தோஷப்பட்டது. பைப்படிகளிலும் வயல் வெளிகளிலும் படித்துறையிலும் சேகரைச் சொல்லி அவளை வம்புக்கிழுத்தார்கள். அவள் சிரித்துக்கொண்டே சண்டை போட்டாள். சிறுவர்கள் வசந்தாவைச் சேகரின் பெயரைக் கூறிக் கூப்பிட்டுச் சிரித்துக்கொண்டு ஓடினார்கள். சேகரின் பெயரைச் சொல்லும்போது அவளால் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை . அத்தை மகன். அவன் வருவதற்கு யாரைக் கேட்க வேண்டும் என்றாள் வசந்தாவின் அம்மா. அவளுக்குச் சேகரை ரொம்பப் பிடித்திருந்தது. நெடுநெடுவென வளர்ந்த உருவம். அவனுடைய அப்பாவைப் போலவே மீசை தாடி விளையாத சாந்தமான முகம்.

அவன் படிப்புக்கு வேலை கிடைத்துவிட்ட பிறகு வசந்தா வெயிலில் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே ஜாலியாக இருக்கலாம் என எல்லோரும் கிர்ரேத்தி விட்டார்கள்.

அவனும் அருகிலுள்ள சிறுநகரங்களில் வேலை கேட்டுப் போகும்போதெல்லாம் அவன் உருவத்தைப் பார்த்ததும் எல்லோரும் சொல்லி வைத்ததுபோல் 'போலீஸ் வேலைக்குப் போ. உடனே எடுத்துக்கொள்வார்கள்' என்றார்கள். அவனுக்கு அவ்வேலை மீது எதுவும் எதிர்ப்பு இல்லை. தன்னை அவனால் ஒரு போலீஸாகக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவ்வளவுதான். அப்படியான கற்பனை முளைக்கும்போதே காக்கி உடுப்பில் நிற்கும் அவனைப் பார்த்து அனைவரும்
மரியாதை செய்வதற்குப் பதில் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

சைக்கிள் கடகடக்கும் சப்தம் கேட்டது. அவளுக்குள் சிறு சந்தோஷம் துளிர்த்தது. சைக்கிளைச் சுவரில் சாய்த்து விட்டுச் சாக்கு விலக்கி உள்ளே வந்தான் சேகர்.  வெயிலுக்கு மூடப்பட்ட இருட்டில் அவள் அமர்ந்திருப்பது அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. அலுப்புடன் வாயால் பெருமூச்சு விட்டுச் சட்டையைக் கழற்றினான். மேலுக்குக் குளித்ததுபோல் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. லுங்கியின் மடிப்பை லேசாகக் குனிந்து அவிழ்த்துவிட்டான். மரவள்ளிக் கிழங்குகள் ஈர மண்ணுடன் அவனைச் சுற்றிலும் விழுந்தன. அவள் எழுந்து வந்து எடுத்தாள். அப்போதுதான் அவளைக் கவனித்தான். கிழங்கு நான்கைந்து கிலோ தேறும் என நினைத்தாள். இடுப்பிலிருந்து அவிழ்த்து உதறிக் கட்டினான். வசந்தா கிழங்குளை வாரிக்கொண்டு உள்ளே சென்றாள். சரசரவெனக் காரியத்தில் இறங்கத் தொடங்கினாள். காலை நேரத்தைக்கூட ஆகாரமில்லாமல் அவளால் தள்ளிவிட முடிகிறது. மதியம்தான் அவளைப் பிசைந்து விடுகிறது.

இரவு ஒரே உலை. ஒரு குழம்பு. அதிகமும் புளியும் மிளகாய்த்தூளும் கடுகு வெடிக்குமளவு சிறிது எண்ணெயும்தான் சமையல். அபூர்வமாய்க் காய்கறிகள். இக்குழம்பும் ரசமும் மாறிமாறி வரும்.

விறகுக் குச்சிகளை அடுப்போரம் அள்ளிப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். கிழங்குகளை நன்கு கழுவி நான்கு விரல்கடை அளவு நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சாய்த்து ஏற்றிக் கிழங்குகளைக் கொட்டி உப்புப் போட்டு மூடினால் முடிந்தது வேலை. சிறிது நேரத்தில் வெந்த கிழங்குகள் உப்புச் சுவையுடனும் மாவுச் சுவையுடனும் பாளம் பாளமாக வெடித்துப் பிளந்து நிற்கும். மேல்தோலைக்கூட அவன் விடுவதில்லை. அழுக்குத் தோலை அகற்றிவிட்டுச் சதைத் தோலையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடுவான். இரண்டு நாள் அவனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவளும் அவ்வாறே சாப்பிடத் தொடங்கிவிட்டாள். அவன் மரவள்ளிக் கிழங்கு திருடிக்கொண்டு வருவதில் அவளுக்கு வருத்தமிருந்தது. பின் அது தணிக்கும் பசி அவளை எதுவும் பேசாமல் செய்துவிட்டது.

அவனுக்கு அந்தக் கிழங்குகளைச் சிறுசிறு சதுரங்களாக நறுக்கி மஞ்சளும் மிளகாய்த்தூளும் தெளித்துப் புரட்டித் தாளித்துச் சாப்பிட வேண்டும் போலிருந்தது. அவளிடம் கேட்பதற்குத் தயக்கமாக இருந்தது. எண்ணெய் இருக்கிறதாவென அடுப்புச் சந்தில் எண்ணெய் பாட்டிலைத் தூக்கிப் பார்த்தான். பாட்டிலின் அடிவரம்பில் சிறிது எண்ணெய் கசடுடன் படிந்து கிடந்தது. வெயிலைப் பொருட்படுத்தாது மேல்சட்டையற்று, கிட்டத்தட்ட பாய்ந்தபடி வெளியே பாட்டிலுடன் சென்றவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது அவன் எண்ணம்.  அரிவாள்மணையை எடுத்துக் கிழங்குகளை சிறுசிறு சதுரங்களாக நறுக்கத் தொடங்கினாள். மாமனாரை நினைத்துக்கொண்டாள். வீரநத்தம் வரை போயிருக்கிறார்.  அங்கு இதைவிடப் பிழைப்பு நன்றாக இருக்கிறது போலும். வர வேண்டியவர் ஒரு வாரமாகியும் வரவில்லை. தினமும் அய்யனார் தோப்புக்கு எருமையை மேய்க்க ஓட்டிச் செல்லும் அவர், நிழல் படியத்தான் வீட்டுக்கு வருவார். தினமும் வந்தவுடன் அவருடைய பங்குக் கிழங்கைத் தரும்போது தங்கத்தைத் தருவதுபோல வாங்கிக்கொள்வார். அந்த மாடு கறந்த பாலில்தான் குடும்பம் சாப்பிட்டுவந்தது. அவர் அக்கிழங்குகளை, பின்புறம் மாட்டுத் தடுப்புக்கு அருகில் மாடுகளுக்குப் புறமுதுகிட்டு அமர்ந்து வெளியே தெரியும் அடுத்த வீட்டின் பின்புறத்தைப் பார்த்தபடி சுவைத்துச் சாப்பிடுவதை அவள் மறைந்திருந்து பார்த்திருக்கிறாள். அப்போது அவளுக்கு அவர்மேல் சொல்ல முடியாத பரிதாபமும் அன்பும் பெருகும். அத்தனை வயது மனிதர் சிறுகுழந்தைபோலவே தெரிவார். இன்று தாளிக்கும் கிழங்குகளைத் தந்தால் அவர் கண்கள் விரியும் காட்சியை நினைத்துப் பார்த்தாள். வீரநத்தத்தில் அவருக்கு என்ன சாப்பிடக் கிடைக்கிறதோ என எண்ணிப் பார்த்தாள்.

சைக்கிள் கடகடத்துச் சுவரில் ஓடிச் சரியும் ஓசை முடியுமுன் அரை பாட்டில் எண்ணெயுடன் உள்ளே வந்தான் சேகர். பரவாயில்லை. ஒரு வாரத்தை ஓட்டிவிடலாம் என நினைத்தாள். அவன் எண்ணத்தை வெளியிடாமலேயே கிழங்குகளை அவள் அரிந்து கொண்டிருக்கும் பாங்கைப் பார்த்தவுடன் அவன் அவளைப் பார்த்துப் பல் தெரியச் சிரித்தான். அவளும் பதிலுக்குச் சிரித்தாள். நினைவில் அவனுக்குக் கிழங்கின் ருசி தட்டுப்பட்டது. அடுப்பை ஏற்றிப் பாத்திரத்தில் கிழங்குகளை நீரூற்றிக் கொட்டி மூடிவிட்டு அடுப்பின் முகப்பிலேயே தரை பார்த்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். அவன் பாயை எடுத்துவந்து போட்டு மல்லாந்து படுத்துக் கொண்டான்.

2

உலோகங்கள் மோதிக் கடகடத்து உதற உறுமிக்கொண்டு வந்து நின்ற டவுன் பஸ்ஸை எழுந்துபோய்ச் சாக்கு விலக்கிப்பார்த்தான். டிரைவர் முன் கண்ணாடி வழிப் பளீரென உள்ளே பாயும் வெயிலிலும் இஞ்சின் வெப்பத்திலும் கசப்பாய் முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். மறுபக்கமாய் வாசற்படியை நோக்கி நகர்ந்துவிட்ட உருவத்தைப்
பார்த்தான். பேருந்து நகர்ந்தவுடன் அவரைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவர் எதற்கு மறுபடியும் இவ்வூருக்கு வந்திருக்கிறார் என்று அவனால் சட்டென்று யூகிக்க முடியவில்லை. யாரையோ பார்க்க வந்திருப்பார் என்று நினைத்தான். நிச்சயமாய் நம்மைப் பார்ப்பதற்கு இல்லை என்று ஊர்ஜிதமாக நம்பினான். அவர் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு இவன் வீட்டுப் பக்கம் வரவே, மெல்ல நடந்து வாசல் பக்கம் வந்து சாக்கை விலக்காமல் நின்றான். வசந்தா எதுவும் புரியாமல் அவனைப் பார்த்தாள். அவர், அவன் வீட்டின் முன் வந்து நின்று குட்டை டவலால் வழுக்கையையும் பின்கழுத்தையும் மார்பையும் அழுந்த துடைத்தபடி அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார். வெயிலைக் கரகரப்பாகக் கிழித்தது அக்குரல். இவன் சாக்கை விலக்கி எட்டிப் பார்த்து, "வாங்க மாமா” என்றான். அவள் அவர் உருவத்தைப் பார்த்தவுடன் சடக்கென வாரிச்சுருட்டி எழுந்தாள். “வாங்கண்ணா " எனக் கூப்பிட்டபடி உள்ளே நடந்து ஓடினாள். இவன் பாயை மடித்துப் போட்டான். வெயிலைத் திட்டியபடியே சிரித்துக்கொண்டும் கனைத்துக்கொண்டும் உட்கார்ந்தார்.

இவ்வெயிலில் அவர் வந்தது அசௌகரியமாக இருந்தது இருவருக்கும். வசந்தா செம்பில் தண்ணீர் கொண்டுவந்து உள்ளங்கையில் ஏந்தி நீட்டினாள். சம்பிரதாயத்திற்கு மீண்டும் திருத்தமாக "வாங்கண்ணா " என்றாள். நீட்டிய கரத்தில் தாழ்ந்து தொங்கிய பிளாஸ்டிக் வளையல்களை மேலேற்றிக் கொண்டாள். அவரும் "வரேம்மா" என்றபடி அவளைப் பார்த்துச் சிரித்துத் தண்ணீரை வாங்கிக் குடித்தார். கெண்டி வியர்வை மினுமினுப்புடன் மேலேறிக் கீழிறங்கித் துடித்துக் கொண்டிருந்தது. தொண்டையில் காற்றடைக்கக் குடிப்பதை நிறுத்தி இரண்டு முறை இருமினார். இருவரும் அவர் இருமியதற்காகப் புன்னகைத்தபடியும் பார்த்துக் குடியுங்கள் என்ற உணர்ச்சியைப் பிதுக்கிக் காட்டியபடியும் நின்றுகொண்டிருந்தார்கள். பிறகு அவள் உள்ளே சென்று நின்று கொண்டாள். இவன் சுவரோரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அவர் அவர்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார் என்று அவன் இன்னமும் நம்பவில்லை. யாரையோ பார்க்கவோ விசாரிக்கவோ வந்திருக்கிறார். இடையில் நம்மிடம் அது பற்றிக் கேட்டுப்போக வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவர் அவனை உட்காரச் சொன்னார். உட்கார்ந்தான். "ஒரு வாரம் லீவு. சும்மா ஒரு ரவுண்ட் அடிச்சிட்டுப் போலாம்னு வந்தேன்” என்றார் நேரிடையாக. அவனால்  அதை நம்ப முடிந்தது. ஆனால் அவர் எங்கு தங்குவார் என்று அவனால் யூகிக்க முடியவில்லை. போலீஸ்காரர்களை நம்ப முடியாது என்று நினைத்துக்கொண்டான். ஏதோ ஒரு கொலைக் கேசைத் துப்பறிய வந்திருப்பார் என்று நம்பத் தொடங்கினான்.
பிறகு ஊரில் சில நபர்களை விசாரித்தார். அவன் பதில் சொல்லிக்கொண்டுவந்தான். கடைசியில் கள்ளுக்கடை போட்டிருக்கிறார்களா என்று கேட்டார் அவன் புரிந்து கொண்டபடியே அவளும் புரிந்துகொண்டிருப்பாள். கள்ளுக்கடை, சாராயக்கடையைப் பிடிக்க வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டான். அவர் கேட்ட ரகசியத்தொனியிலும் அவர்மேல் வைத்திருந்த மரியாதையிலும் உண்மையைக் கூறிவிட்டான். பிறகுதான் பயந்தான். ஊர்க்காரர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டோமெனச் சஞ்சலமடையத் தொடங்கியது மனம். இவர் அவர்களைப் பிடித்து விட்டால் பிறகு ஒரு நாளும் ஒரு நேரத்திலும் ஊர்க்காரர்கள் தன்னை நம்பமாட்டார்கள் என நினைத்து வருத்தப்பட் டான். கள்ளின் நம்பகத்தன்மை பற்றிக் கேட்டுக்கொண்டுவந்ததற்கு அவன் பதில் கூறிக்கொண்டேவந்தபோதிலும் உள்ளுக்குள் தேவையற்று ஒரு காரியத்தில் சிக்கிக்கொண்டோமெனத் தோன்றியது. பிறகு மெதுவாக அதைக் கேட்டான். அவர் உரக்கச் சிரித்தார். “உண்மையிலேயே கள்ளுக் குடிப்பதற்குத் தான் விசாரித்தேன்” என்றார். கட்டுப்படுத்த முடியாமல் வெடிச்சிரிப்பாய்ச் சிரித்துக்கொண்டிருந்தார். வெயிலே உடைந்தது போலிருந்தது. அவளும் மௌனமாகச் சிரித்து இவர்களுடன் கலந்துகொண்டாள். நடந்துவந்து அடுப்பைத் தள்ளிவிட்டுக் கலகலவென எரியவிட்டு மீண்டும் கதவில் ஒருக்களித்து நின்றுகொண்டாள். "தங்கச்சி கேட்டியா ஒம்புருசம் பேச்ச, நீ பேசாம போலீசா போயிடலாம்டா” என்றார். அவனுக்குப் பொறிதட்டிவிட்டது. திடீரென உற்சாகமாகிவிட்டது அவன் மனம். இவர் நினைத்தால் தனக்கு வேலை நிச்சயம் என்று நினைத்தவுடன் பரபரப்பானது அவனது முக நடவடிக்கைகள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் வெயிலைப் பொருட்படுத்தாது கிளம்பி விட்டார்கள் கள்ளுக்கடைக்கு. கிழங்கை அவளைச் சாப்பிடுமாறு சைகை செய்துவிட்டுச் சென்றான். "கள்ளு உளள போனா வெயில் குளிரும். வா மாப்ளே” என்றார். அவர் அவனை அப்படி நெருக்கமாகக் கூப்பிடுவது அவர்களுக்குப் பிடித்திருந்தது.

அவர் அருகில் உள்ள சிறு நகரத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். அவருக்குப் பூர்வீகம் இவ்வூர்தான். சிறுவயதில் அவருடைய அப்பா குடிபெயர்ந்து வெளியூருக்குச் சென்று தங்கிவிட்ட பிறகு அவருக்கும் இவ்வூருக்குமான பிணைப்பு நின்றுபோனது. சில வயல்கள் வைத்திருந்தார்கள். அது பெரியவர் இறக்கும்வரை இவ்வூரின் ஞாபகங்களாய்க் கிடந்தன. பருவங்கள் தப்பிய விவசாயம் செய்தும் போட்ட முதலுக்கு நட்டங்களை மட்டுமே அறுவடை செய்தும் நகர்ந்து சென்ற நாட்கள். பெரியவரின் இறப்புக்குப் பின் விற்கப்பட்டுவிட்ட வயல்களோடு கடைசித் தொடர்பும் நின்றுபோனது. இவன் வெளியூருக்கு மேல்நிலைப் படிப்புக்குச் சென்றபோது ஒரு நாளில் நம்முடைய மாமாதானே என்று முகவரி விசாரித்துக்கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றான். பெரிய முகப்பிட்ட கல்வீடும் கட்டடத்தை மறைக்கும் கேட்டும் நாயுமாய்ப் போலீஸ் உடுப்போடு வாசலில் வந்து நின்றுகொண்டிருந்தார். அவனை அடையாளம் தெரியாமல் யார் எனனவென்று மிரட்டலோடு விசாரித்துவிட்டு நம்மூர் என்றவுடன் சிறிது கருணையுடன் விசாரிக்கத் தொடங்கினார். தான் அப்போது அலுவலகம் செல்லவிருப்பதாகவும் பிறகு வரும்படியும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். அவ்வழைப்பு மிகவும் சம்பிரதாயமாக இருந்தது. அவனுக்கு அவர் மேல் கோபமாக வந்தது. உள்ளே ஒரு கனமான பெண்ணுருவம் பின்கட்டுக்கு அசைந்து சொல்வதைப் பார்த்தான். அவர் மனைவி. அவள் இருமிக்கொண்டு செல்வது மிக மோசமாகக் கேட்டது. குறைந்தபட்சம் தன்னை உள்ளே கூப்பிட்டாவது பேசுவார் என்று நினைத்திருந்தான். அவனும் அவரைப் பார்க்க வந்ததாகக் கூறாமல் இந்தப் பக்கம் வேறு ஒரு வேலையாக வந்ததாகவும் அப்படியே தங்களைப் பார்த்து விட்டுச் செல்லலாமென்று வந்ததாகவும் கூறினான். அப்படிப் பேசியதன் மூலம் பதிலுக்கு அடித்துவிட்டது போல உணர்ந்தான். நிம்மதியாக இருந்தது.

அதன்பின் அவர் மனைவி உடல்நிலை சரியில்லாமல் கிடந்து இறந்த பிறகு காரியத்திற்காக நான்கைந்து நாள் தன்னுடைய அப்பாவின் அழைப்பின் பேரில் சென்று தங்க நேரிட்டிருந்தது. அப்போது அவரது தோரணையனைத்தும் துவண்டு போயிருந்தது. அவனிடம் அன்பாகப் பேசினார். வசந்தா அத்தனை பெரிய வீட்டை ஒற்றை மனுஷியாக நின்று பெருக்கிக் கழுவித் துடைத்து, அவரது துணிமணிகள், போர்வை, படுக்கை விரிப்புகள் என அனைத்தையும் வாரிப்போட்டுத் துவைத்து ஒழுங்குசெய்து நன்றாகச் சமைத்துப்போட்டாள். ஒரு தனியாளாக அரக்கிபோல் அக்காரியங்களைப் பார்த்தது அனைவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அவர் சேகருடைய அப்பாவிடம் கடைசி நாள் கேட்டுப் பார்த்தார். சேகரும் வசந்தாவும் இங்கேயே இருந்துகொள்ளட்டும்; அவனுக்கு ஏதாவதொரு வேலை ஏற்பாடு  செய்து தந்துவிடுகிறேன்; குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்றபடி. எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள். சேகர் ஏதோ ஒரு பிடிவாதத்தில் மறுத்துவிட்டான். அதன்பின் தற்போதுதான் அவரை மீண்டும் சந்திக்கும்படி நேர்ந்திருக்கிறது

"நீ அவர் வீட்டிலே தங்கியிருக்கலாம். வேலையும் சாப்பாடும் கிடைத்திருக்கும்" என்போரிடமெல்லாம் பள்ளிக் காலத்தில் ஒருநாள் சந்தித்த அந்த நிகழ்வை விடாமல் கூறிக்கொண்டிருந்தான். அவர் அன்று சரியாகப் பேசாதது பற்றியும் பேசிய தோரணை எதுவும் அவனுக்குப் பிடிக்காமல் போனது பற்றியும் சொல்லிவிட்டு, தற்போது மட்டும் என்ன உறவு வாழ்கிறது என்பான்.

3

கள்ளுக்கடை குறிஞ்சிக்குடியில் இருந்தது. பேரூருக்குச் செல்லும் வளைவில் மழைக்காலத்தில் பிதுங்கி எழுந்த வண்டிக் தடங்களோடு செம்மண் பாட்டையாக உள்ளிழுத்துக்கொண்டு சென்றது.

வெயில் கண்களைக் கூசி நிமிர விடாமல் செய்து கொண்டிருந்தது. எல்லாவற்றின்மீதும் வெப்பம் வேரூன்றி விட்டிருந்தது. அங்கும் விவசாயம் வெயில் காலம் முடிந்தபின் தான். மோட்டார் வைத்திருப்பவர்கள் மட்டும் சிறு சிறு பகுதிகளில் பயிரிட்டிருந்தார்கள். எரிந்த கரும்பு வயல்கள் நடந்து முடிந்த போர்க்களம்போல் விரிந்து சென்றுகொண்டிருந்தன இரு பக்கமும்.

வெடிப்புகள் நிரந்தரமாகிவிட்ட ஓடையை ஒட்டிப் பனை மரங்கள் நீண்டு சென்றுகொண்டிருந்தன வெயிலுக்குத் துணிச்சலாய் முகத்தைக் காட்டியபடி. வெள்ளையான ஆகாயமும் கலயங்கள் தொங்கும் பனைமரங்களும் பார்ப்பதற்கு வெயிலை மறக்கச் செய்வதாகக் கூறிக்கொண்டுவந்தார் அவர். அதை அவர் சொன்னதுமே கள்ளை அவர் எப்படி விரும்புகிறார் என்பதை அவனால் ஓரளவுக்குப் புரிந்து சிரிக்க முடிந்தது.

ஓடைச் சரிவில் இறங்கி, சைக்கிளை நெட்டிக்கொண்டு ஓடையின் மையத்தில் நீளும் ஒற்றையடிப் பாதை வழம் நடந்து சென்றார்கள். லேசாகத் திரும்பிய வளைவில் பனைவோலைக் குடிசை காற்றில் சிலும்பிக்கொண்டு நிற்பதை பார்க்க முடிந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு மேடேறிச் சென்றபடி "யம்மோவ்" என்றான். பதில் எதுவும் வராது போக அவர் பக்கம் திரும்பிச் சிரித்தபடி, "அவளுக்குக் காது கொஞ்சம் செவிடு" என்றான். அவரும் சிரித்தார்.

குடிசையை நோக்கிப் போனான். அவர் ஓடைச் சரிவிலேயே நின்றுகொண்டிருந்தார். வாசல் பக்கம் வந்தபோது அவள் துணிகளைக் காற்றுக்குத் திறந்து போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். நின்று அவள் மார்பகங்களைப் பார்த்தான். தளர்ந்த மார்பகங்கள் இரு பக்கமும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தன. சற்று பின்னகர்ந்து மீண்டும் குரல் கொடுத்தான். தூங்காதவள் போல் "யாரது?" என்றாள். உண்மையில் அவள் தூங்கிக்கொண்டிருந்தாளா என்று அவனுக்குச் சந்தேகம் வந்தது. "கள்ளு இருக்கா ?” என்றான் முன்னே வந்தபடி. “சாயங்காலந்தான்” என்றபடி துணி போர்த்திய மேலுடலுடன் வெயில் உணர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். அவன் மெல்லக் குனிந்து, கிசுகிசுப்பாகப் பேசும் தோரணையுடன் "போலீஸ்காரர்" என்றான். அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது முகத்தில் தெரிந்தது. அதை அவன் ரசித்தான். சடக்கென எழுந்து தட்டியில் செருகியிருந்த ரவிக்கையை எடுத்து அவனுக்கு முதுகு காட்டிப் பூட்டத் தொடங்கினாள். இவன் திரும்பிச் சென்று அவரை மேலேறி வரும்படி "வாங்க” என்றான். அவனைத் தடுத்து, "அங்கேயே நெழல்ல குந்த வையி” என்றாள். "போ எடுத்தாரேன்" என்றாள் சத்தமான கிசுகிசுப்பாய்.

இடத்தைச் சரிசெய்து பனைமர நிழலில் அமர்ந்தபோதுதான் அவ்விடத்தின் அழகு அவருக்குப் புலப்பட்டதாகச் சொன்னார். அவள் வரவழைக்கப்பட்ட வெட்கத்துடன் வந்தாள், சிறிய பானை நிறையக் கள்ளுடன். வெட்கத்தை மீறிப் பயம்தான் அவளிடம் தெரிந்தது. கொண்டு வந்து வைத்துவிட்டு, "வணக்கங்க” என்றாள். அவர் அதைப் பொருட்படுத்தாது, “என்ன? நல்ல கள்ளுதானே?" என்றார். அவள் ஒரு விருப்பமான புதிய மனைவிபோல் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு, "சுண்டல் கொண்டாரவா?" என்றாள். "வேறென்ன இருக்கு?” என்றதற்கு “ஒன்னுமில்ல” என்றாள். "பழங்குழம்பு ஏதாவது இருக்கா?" என்றார். அவரை அவளுக்கு அந்தக் கணமே பிடித்துவிட்டது. பயம் போய், "கருவாடு தரவா?” என்றாள். “குடு” என்றார். சிறுபிள்ளைபோல் மேலேறி ஓடினாள். பேண்ட் பெல்ட்டைத் தளர்த்தி ஊக்குகளை விடுவித்துத் தளர்ச்சியுடன் உட்கார்ந்து சரிசெய்த அவரை உள்மனச் சிரிப்புடன் ரசித்துக்கொண்டிருந்தான்.

இரண்டு மொந்தை உள்ளே சென்றதும் அவருக்குப் பழைய கருவாட்டுக் குழம்பை ஒடுக்கு விழுந்த ஒரு எவர்சில்வர் கிண்ணத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டுக் கருவாடு சுட்டுக் கொண்டுவந்திருந்தாள். அவருக்குச் சிரிப்பில் மிதப்பு விழத் தொடங்கியதும் மெதுவாகத் தனது வேலையின்மை பற்றி ஆரம்பித்தான். அவர் நிதானத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவன் அவ்விஷயத்தைப் பேசிமுடிக்கும்வரை கள்ளைப் பருகாமல் அப்படியே கலயத்தைத் தடவித் தடவிப் பிடித்துக்கொண்டிருந்தார். அவர் அப்படிக் கேட்டது அவனுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது. அவர் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் புதிர் எதுவும் போடாமல், "போலீஸ்ல சேரணும் அவ்ளோதானே? விடு” என்றார். "வர்ற மாச செலக்ஷன்ல நீ போலீஸ். போதுமா?" என்றார். அவனுக்கு உண்மையில் அவர் காலில் விழுந்து கும்பிட வேண்டும் போலிருந்தது. அவனது கஷ்டமெல்லாம் தீர்ந்து விட்டது போலுணர்ந்தான். "பி.ஏ. பாஸ்தானே? அப்படியே ஒரு எம்.ஏ.வ போட்டுவிடு. என்ன மாதிரிச் சடசடன்னு மேல வந்திர்லாம்" என்றார். "காரியத்துக்கு வந்தப்பவே சொன் னேன். நீதான் கேக்கல" என்றார். அதை வருத்தமாகவே கூறினார்.

கோடைக்காலங்களில் வெயில் முடிந்த சாயங்காலங்கள் ரம்மியமானவை. கொட்டிய வெயிலுக்காகக் குளிர்காற்றை எங்கிருந்தோ தூக்கிக்கொண்டு வரும் நேரம். இருவரும் நல்ல போதையில் இருந்தார்கள். அவர் சைக்கிள் மிதித்தார். அவன் அமர்ந்துகொண்டு சென்றான். உல்லாசமாக இருந்தது. வீட்டுக்கு வந்தபோது சாக்குகளை விலக்கிச் செருகி வாசல் மற்றும் சன்னல்களை அகலத் திறந்துவிட்டு வாசலில் பொட்டு இடம்விடாமல் தண்ணீர் தெளித்துவைத்திருந்தாள் வசந்தா. இரண்டாவது தண்ணீர்த் தெளிப்பாக இருக்க வேண்டும். தரை சூடு காட்டாமல் ஜில்லென்றிருந்தது. காற்று சகஜமாக வீசிக்கொண்டிருந்தது. பேச்சுக் குரல்களும் பிள்ளைகளின் விளையாட்டு நடமாட்டமும் தொடங்கிவிட்டிருந்தன. இனி வீடுகளுக்குள் புழக்கமிருக்காது.

சைக்கிளை முகப்பில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வசந்தாவைப் பார்த்து மயக்கமாகச் சிரித்தான் சேகர். அவள் யூகித்ததுதான். குடித்துவிட்டுப் போகட்டும். சோற்றுக்குத்தான் இங்கு என்ன வாழ்கிறது? வீட்டுக் காசா? யாரோ வாங்கிக் கொடுக்கிறார்கள். தினமுமா குடிக்கிறான். எப்போதாவதுதான. எப்போதாவது இப்படி அவன் இருப்பதை அவளும் ரசிக்கிறாள். அவனுக்குள் இருக்கும் உள்முகம் சற்றுத் தீவிரமாக வெளிவரும்.
சில சமயங்கள் பயந்தும் இருக்கிறாள். பயந்தது போல் விடிந்து எதுவும் இருக்காது. கதகதப்பு வேண்டி
மடிமுட்டிப் படுத்துக்கொள்ளும் கண் திறவாத நாய்க்குட்டி போல் வயிற்றில் முகம் வைத்துப் படுத்துக்கிடந்திருக்கிறான் எத்தனையோ முறை. ஒரு வகையில் அது அவன் அவளிடம் கோரும் சமாதானம்தான்.

அப்போது அவனது சிரிப்பில் சல்லாபம் மிகுந்திருந்தது. இரவு நிச்சயம் உடலுறவுக்காக வருவான் என்று தோன்றியது. அவர் உள்ளே வந்தவுடன் பாய் விரித்துப் படுத்துக்கொண்டார். அவன் உள்ளே சென்று நின்றுகொண்டு அவளைச் சிரித்தபடி அழைத்தான். அவனது தந்திரங்களனைத்தும் தெரிந்தவள்போல அவர் கண் மறைய ஒயிலாக நடந்து சென்றாள். அவன் அடுக்களைப் பகுதிக்குச் சென்றான். அவளுக்குச் சிரிப்பு வந்தது. சுவரில் சாய்ந்துகொண்டு அவளை இழுத்துப்பிடித்துக் கட்டிக்கொண்டான். முத்தம் கொடுத்தான். கன்னம் கடித்தான். கழுத்தைக் கவ்வினான். அவள் கூசிச் சூழல் விலகிச் சற்றுச் சத்தமாகச் சிரித்தாள்.

"என்ன? கறி வேணுமா?" என்றாள் கிண்டலுடன். அவனும் சிரித்தான். ரகசியச் சத்தத்துடன். அவளிடம் அவர் வேலை வாங்கிக்கொடுக்கப்போவதை விபரமாகக் கூறினான். அவள் உன்னிப்பாக அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்து விட்டு, "நெஜமாவா?” என்றாள். அவன் சட்டென முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு அவள் தலைமேல் கைவைத்துச் சத்தியம் செய்தான். சந்தோஷம் சுரக்க அவனைக் கட்டிக் கொண்டாள். அவர் வெளியிலிருந்து குரல் கொடுத்தார். அரக்கப் பரக்க அவளைப் பிரித்துவிட்டுச் செல்லும் அவனைச் சிரித்தபடி பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் திரும்பி வந்து பெட்டியைத் திறந்து அவனது ஃபைலைத் தூக்கிக் கொண்டு சென்றான்.

பழைய கிளிப் ஃபைல். அவர் எழுந்து அமர்ந்தபடி சான்றிதழ்களைப் புரட்டிப் பார்த்தார். அவன் அவர் அருகே மண்டிபோட்டுப் பிருட்டத்தைக் கணுக்காலில் அமர்த்திக் கொண்டு சிறுகுழந்தைபோல் சான்றிதழ்களையும் அவரையும் புதிதாய்ப் பார்ப்பவன்போல் மாறிமாறிப் பார்த்துக்கொண்டி ருந்தான். அவள் கதவில் ஒருக்களித்து நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். உதட்டில் ஆட்காட்டி விரலால் ஈரம் தொட்டுக் கடைசிக் காகிதத்தைப் புரட்டிக் கோப்பை மூடினார். சிறிது நேரம் கண்களை மூடி விரல்களால் யோசனையாய் நெருடிக் கொண்டிருந்தார். அவனுக்கு ஆர்வமாகவும் பயமான தவிப்பாகவும் இருந்தது. பிறகு அவர் அவனையும் அவளையும் தலை ஒருக்களித்து நிமிர்த்திப் பார்த்துச் சிரித்தார். அவர்களும் புன்னகைத்தார்கள்.

”நாளைக்குக் காலைல எங்கூடவே கௌம்பி வந்திரு. முன்னாடியே ரெண்டு மூணு பேர பார்க்க வேண்டியிருக்கும். மொறைன்னு ஒண்ணு
இருக்கில்ல" என்றார். "பயப்படாத.
ஒனக்கு வேலை கண்டிப்பா உண்டு. அது எம் பொறுப்பு போதுமா?"

அவளுக்கு மேலும் நம்பிக்கை பூக்கத் தொடங்கிவிட்டது. ஃபைலை மூடி அவனிடம் கொடுத்துவிட்டு, "வசந்தா சாம்பார் ரசமெல்லாம் நல்லாத்தான் வைக்கிது. கறி சமைக்குமா?” என்றார். “ஏன்னா செலருக்குச் செலதுதான் நல்லா வரும்.”

"நான் சொன்னா நல்லாருக்காது. நீங்க ஒரு வாட்டி சாப்பிடணும். அப்புறம் தெரிஞ்சிக்குவீங்க” என்றான் அவன்.

அவள் உள்ளே ஓடிவிட்டாள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டபடி. பிறகு அவர்கள் பேச்சு வேறுபக்கம் திரும்பிவிட்டது. அவள் மிளகாய்த்தூள் புரட்டிய கிழங்குகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டுச் சென்றாள். "அடடே” என்றபடி எடுத்துக்கொண்டார் அவர்.

அவளுக்கு நிம்மதியாக இருந்தது. இப்போதுதான் தன் குடும்பத்திற்கு நல்ல நேரம் வந்திருப்பதாக நினைத்தாள். கொல்லைப்புறத்தில் பாத்திரங்களை வாரிப்போட்டுத் தேய்க்க உட்கார்ந்து விட்டாள். முதலில் அம்மாவுக்குச் சொல்ல வேண்டுமென்று நினைத்தாள். அவள் சந்தோஷம் தன்னை மேலும் சந்தோஷமாக்கிவிடும் என்று எண்ணிச் சிரித்தாள். பிறகு நிதானித்தவள் போல் எதுவாயிருந்தாலும் வேலை கிடைக்கட்டும். பிறகு சந்தோஷமே வடிந்தது போலிருந்தது. வேலை கிடைக்கத்தானேபோகிறது என்று யோசித்தவுடன் ஆறுதலும் திடீரெனத் துக்கமும் பெருகிக் கண்களில் நீர் சுரந்தது. எதுவும் செய்யாது தரையில் நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருந்தவள் தன்னை நினைத்துச் சிரித்தபடி புடவை முந்தியால் கண்களைத் தொட்டு ஒற்றிக்கொண்டாள். எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டும்.

தோட்டத்திற்கு வந்தான் சேகர். தான் போய்க் கறி எடுத்து வரப்போவதாகக் கூறினான். அவர்களும் கறிசோறுச் சாப்பிட்டு மாதங்களாகிவிட்டன. அவள் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். ஒயர் கூடையைத் தட்டி ஊதியபடி எடுத்து செல்லும் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மாதக்கணக்கில் இஸ்திரி செய்யப்படாத சட்டை முதுகுப் பக்கம் மடிப்பு மடிப்பாகத் தொங்கிக்கொண்டிருந்தது. முதலில் அவனுடைய எல்லாத் துணிமணிகளையும் துவைத்து இஸ்திரி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். வேலை விஷயமாக இனிமேல் எங்காவது போய்த் தங்க வேண்டி வந்தாலும் வரலாம் என்று நினைத்தாள். பிறகு யோசனை வந்தவளாய் வாசல் பக்கமாய் ஓடிவந்தாள். அவன் போய்விட்டிருந்தான்.

4

அவன் திரும்பி வரும்போது வீடுகளில் விளக்குகள் ஒளிரத் தொடங்கிவிட்டன. வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு லாண்டில் பாரிலிருந்து ஒயர் கூடையை உருவி எடுத்தபடி உள்ளே நுழைந்தான். வராந்தாவில் அவரைக் காணாமல் பழக்க தோஷத்தில் உள்ளே நுழையத் தலைப்பட்ட போதுதான் கதவு சாத்தப்பட்டிருப்பது தெரிந்தது. திடுக்கிட்டது அவனுக்கு. மெல்ல விரல் கொடுத்துத் தள்ளிப் பார்த்தான். உள்ளே தாழிடப்பட்டிருந்தது. முட்டிக்கால் தடதடவென நடுங்க விண்ணென்று தலை வலிப்பது போலிருந்தது. சட்டென மனம் உடைந்து சிதறப் பின்பக்கம் சுற்றிக்கொண்டு வந்தான். சன்னல்களும் உட்புறம் சாத்தப்பட்டிருந்தன. பக்கத்து வீட்டுப் பின்புறத்திலிருந்து கிழவி, "என்ன பூட்டிட்டுப் போய்ட்டாளா?" என்றாள். அவளிடமிருந்து தப்பிக்க வேண்டும் போலிருந்தது. எதுவும் பேசாது முன்பக்கம் வந்து ஓசைப்படாமல் சைக்கிளை நெட்டிக்கொண்டு சென்று ஒரு உந்தலில் மேலேறி மனம் போன திசையில் மிதிக்கத் தொடங்கினான்.

உடையான் குட்டை வந்ததும் கால்கள் தாமாகவே மிதிப்பதை நிறுத்திவிட இறங்கி நின்றான். யோசனைகள் நாலா பக்கமும் பரபரத்தன. விபரீதம் நடந்துவிட்டதாக மனம் உதறிக்கொண்டிருந்தது.

ஒரே முடிவுதான். அவரைக் கொலை செய்து விட வேண்டும். ஒன்றும் பெரிய சிரமமில்லை. சாதாரணமாக ஒன்றும் தெரியாததுபோல் இருந்துவிட்டுக் கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துவிட வேண்டும்.

அவன் கற்பனையில் அவர் கழுத்து அறுபட்டுக் கிடக்க ஊர்மக்கள் கூடி அழுதார்கள். வசந்தா மூலையில் கசங்கிய துணிபோல் சுருண்டு கிடக்க, உறவினர்கள் அவளைப் பற்றிக் கொண்டு ஒப்பாரியிடுகிறார்கள். நாளிதழ்கள் அவன் கொலை செய்த விபரத்தைப் புகைப்படத்துடன் பிரசுரித்துவிட்டன. கோபம் தணிக்க முடியாமல் மேலெழும்பிக் கலைந்தது. இனிமேல் வாழ்க்கையில் என்ன மிச்சமிருக்கிறது என்று நினைத்தான். ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரம் காத்திருக்கத் தலைப்பட்டவன்போல் நின்றிருந்தவன் சைக்கிளைத் திருப்பி மிதித்தான்.

வாசலில் வேண்டுமென்றே தீவிரத்துடன் சைக்கிளைச் சப்தம் அதிர நிறுத்தி ஒயர் கூடையை உருவி எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். அவர் ஒருக்களித்துப் படுத்துக் கிடந்தார். அவர் முதுகைப் பிரதானப்படுத்தும் அக்கோணம் அவர் உடலை ஒரு விலங்குபோல் காட்டியது. அவர் வேண்டுமென்றே நடிப்பது போன்றிருந்தது. உள்ளே சென்றான். தோட்டத்தில் வசந்தா ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவள் முகத்தைத் தேடிப் பற்றியபடி முன்னகர்ந்தபோது அவள் அவனைப் பார்த்துவிட்டு புளிச் சக்கையை வெளியே வீசினாள். கறிக்கூடையை அவள் பக்கம் வைத்துவிட்டுச் சட்டையைக் கழற்றினான். அவள் முகம் அலம்பியிருந்தாள். கன்னத்திலும் காதோர மேற்புறங்களிலும் முடிக்கற்றைகள் ஈரப் பளபளப்புடன் ஒட்டிக்கொண்டிருந்தன. மேலுடம்பில் பளிச்சென மாற்றம் தெரிவதைப் பார்த்தான். ஜாக்கெட் மாற்றியிருந்தாள். வெள்ளை நிறம். அவள் முகத்தை மிக அருகில் பார்த்தான். அது ஆண்டு அனுபவித்த ஒரு பெரிய மனுஷியின் முகம் போலிருந்தது. அவள் கண்கள் ரத்தச் சிவப்பில் சோர்வுற்றிருந்தன. அவனைப் பார்த்துச் சிரித்தாள்; ஒரு குழந்தையைப் போல. “இந்தக் கறிய அரிஞ்சிக் கொடு’ என்றாள். அவன் எங்கோ பார்த்தபடி நகர்ந்தான். பின்பு அவளே தோட்டத்திற்குச் சென்று ‘கவிச்சி அரிவாள்மணை’ எடுத்துவந்து திட்டமான துண்டுகளாக அரியத் தொடங்கினாள்.

அவன் திறந்திருந்த சன்னல் கம்பியைப் பற்றிக்கொண்டு நட்சத்திர வெளியை வெறித்தான். அவனை யாரோ பலமாக அடித்துப்போட்டதுபோல் களைப்பாக உணர்ந்தான். எவற்றையும் எதுவும் செய்துவிட முடியாத இயலாமை அழுத்திப் பிடித்தது. எல்லோரும் பதறிப் பதறிக் கேட்க, ஒன்றும் சொல்லாமல் கத்தி அழுதுத் தீர்க்க வேண்டும் போலிருந்தது.

தலித்
ஆகஸ்டு 2003