Showing posts with label ஸபீர் ஹாபிஸ். Show all posts
Showing posts with label ஸபீர் ஹாபிஸ். Show all posts

Friday, May 17, 2013

மனசு - ஸபீர் ஹாபிஸ்

அதிபர் அஸ்ரப் குவார்ட்டசுக்கு வந்து சேரும் போது மாலை ஆறு மணி ஆகி விட்டிருந்தது. உடைகளை மாற்றிக் கொண்டு இரவுணவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். அன்றைய நாள் அவரைப் பொறுத்த வரை மறக்க முடியாத ஒரு நாள். காலையில் கண் விழிக்கும் போதே ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்கப் போவதாக மனதுக்குள் அசரீரி ஒலித்துக் கொண்டிருப்பதை கலவரத்துடன் உணர்ந்திருந்தார். மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகள் எனும் பெயரில் அந்தச் சங்கடம் தன் முன்னிலையில் வந்தமர்ந்த போது அவரது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

பெரும் சக்தி மிக்க அரச நிறுவனமொன்றின் பிரதிநிதிகளை எவ்விதத் தயக்கமோ அச்சமோ இன்றி மிகச் சாதாரணமாகவும் சாமர்த்தியமாகவும் கையாண்ட முகைதீனின் அணுகுமுறையில் அஸ்ரப் வாயடைத்துப் போனார். முகைதீன் ஆசிரியரையெண்ணிப் பெருமிதப்பட்டுக் கொண்ட சந்தர்ப்பங்களில் இதுவே உச்சமானது எனவும் அவர் நினைத்தார்.

இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், சக ஆசிரியர் ஒருவரின் சபலத்தினால் கொந்தளித்து வந்த பெற்றோரை அமைதிப்படுத்தி அடக்கியதிலும், இளம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சீனியர் ஆசிரியர்களுக்குமிடையே உண்டான பெருங் கைகலப்பை எவருக்கும் பாதிப்பின்றிச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததிலும் நாற்பதே வயது நிரம்பிய முகைதீனின் ஆளுமையை அறிந்து வியந்து போயிருந்தார் அஸ்ரப். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தான் சுகவீன விடுமுறையில் நின்றது இப்பிரச்சினைகளில் மாட்டி விடாது தப்பித்துக் கொள்ளவே என்பது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது. சக ஆசிரியர்கள் தன்னை விடக் கூடுதலாக முகைதீனை மதிப்பதில் நியாயம் இருக்கவே செய்கிறது என்ற ஆறுதலுடன் பல சங்கடங்களையும் நெருடல்களையும் அவர் தவிர்த்திருக்கிறார்.

இத்தனைக்கும் முகைதீன் நன்கு படித்தவரோ, பணக்காரக் குடும்பப் பின்புலத்தைக் கொண்டவரோ, அரசியல் செல்வாக்கு மிக்கவரோ அல்ல என்பதுதான் அஸ்ரபுக்கு மிகவும் ஆச்சரியமான விடயம். அவரது தந்தை கலந்தர் தோட்டங்களிலும் வயல்களிலும் கூலி வேலை செய்பவர். நேர்மைக்குப் பெயர் பெற்ற நல்ல உழைப்பாளி. தாய் பாயிழைத்து, பெட்டி தட்டுகள் பின்னி, அகப்பை செய்து வீடு வீடாக விற்கும் மற்றோர் உழைப்பாளி. கலந்தரை தமது வயலிலோ தோட்டத்திலோ வேலைக்கமர்த்திக் கொள்வதில் முதலாளிமாருக்கும் போடிமாருக்குமிடையே போட்டியே நிலவுவது போலிருக்கும். முதலாளி ஊதாரி எனத் தெரிந்தால், கிடைக்கின்ற பெருமளவு வருமானங்களை இரகசியமாகச் சேர்த்து வைத்திருந்து முதலாளி சிரமப்படும் சந்தர்ப்பம் பார்த்து அவற்றைப் புதையலாகத் தோண்டியெடுத்துக் கொடுக்கும் அவரது நேர்மை அவர் பற்றிய முக்கிய அடையாளமாக எல்லோர் பேச்சிலும் அடிபடும். அதிகரித்த சம்பளத்திற்காகவோ, முகஸ்துதிக்காகவோ அவர் ஒருபோதும் கொடுத்த வாக்கை மீறியதில்லை. பேசிய சம்பளத்தை விடக் கூடுதலாகக் கிடைக்கும் அன்பளிப்புகளையும் ஒருபோதும் ஏற்றதுமில்லை.

அவரது இரண்டாவது திருமணத்தில்தான் முகைதீன் பிறந்தார். முதல் மனைவி ராஹிலா ஆறு மாதங்களே அவரோடிருந்தாள். சொந்தமாக நிலபுலங்களுடன் இருந்த அவரது சொத்துகளையெல்லாம் அழித்து விட்டு, பணக்கார இளைஞனொருவனுடன் ஓடிப்போன அவள் மீது அவருக்கு இன்னமும் அனுதாபமுண்டு. கூலி வாழ்க்கையில் கிடைக்கின்ற சுகத்தையும் ஆறுதலையும் எண்ணிப் புளகாங்கிதமடையும் போதெல்லாம் ராஹிலாவை நினைக்க அவர் தவறுவதில்லை. அவள் ஓடிப்போன செய்தியறிந்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், தமது வார்த்தைகளில் அவளை வறுத்தெடுத்தார்கள். கொலை செய்தாலும் குற்றமில்லையெனக் கறுவினார்கள். இத்திருமணம் செல்லுபடியாகாது எனச் சில மௌலவிமார்களும் ஆறுதல் கூறினார்கள். இவ்வாறெல்லாம் கூறியவர்கள், இரண்டு மாதங்களில் புதிய கணவனுடன் அவள் திரும்பி வந்து தடபுடலாக வலீமா விருந்துக்கு அழைத்த போது, அதைப் பெரும் கௌரவமாக நினைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டு வந்தார்கள். அந்த விருந்தின் சுவை பற்றியும் ஆடம்பரம் பற்றியுமான பேச்சுகள் அடங்க அவர்களுக்கு ஒரு மாதமாயிற்று. மௌலவிமார்கள், அத்திருமணத்திலுள்ள குறைபாடுகளைச் சரி செய்து விட்டதாக அறிவித்தார்கள். அவர்களது உதடுகளிலும் கைகளிலும் ராஹிலா தம்பதியர் வைத்த விசேட விருந்துபசாரத்தின் எச்சில்களும் என்வெலப்புகளும் இருந்தன.

ராஹிலா தன் புதிய கணவன் நசீருடன் இரண்டு மாடி வீடொன்றில் வசித்து வந்தாள். அவள் விரும்பிக் கேட்ட எல்லாவற்றையும் ஹலால் ஹராம் பாராது வாங்கிக் கொடுத்தான் நசீர். அதற்கேற்ற பொருள் வளமும் ஆர்வமும் அவனிடமிருந்தன. செலவு செய்வதில் அவனுக்கிருந்த விரிந்த கைகள், அவனது பரம்பரைச் சொத்து. சிறுவயதிலிருந்தே ஆடம்பரமாகவும் அநாவசியமாகவும் செலவழித்துப் பழகிய அவனது கைகளுக்கு, ராஹிலாவின் விருப்பங்களெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. தவிரவும் பெண்களுக்காகச் செலவழிப்பதில் அவனுக்கு எப்போதுமே அலாதியானதொரு சந்தோஷமும் திருப்தியும் இருந்தன. முதலாம் தரத்தில் சக மாணவியொருத்திக்கு ஐஸ்பழம் வாங்கிக் கொடுத்ததிலிருந்து தொடங்கியது இப்பழக்கம். அதன் பிறகு சொக்லெட்டுகள், பிஸ்கெட்டுகள், கைக்கடிகாரங்கள், ஸ்கூல் பேக்குகள், உடுப்புகள், மோதிரங்கள் என அவனது வயதுக்கேற்ப வாங்கிக் கொடுக்கும் அன்பளிப்புகளும் வளர்ச்சி கண்டன. அழகான டீச்சர்மார் கூட அவனிடமிருந்து ஹேண்ட் பேக்குகளையோ குடைகளையோ சாரிகளையோ அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சிலபோது வயதில் பெரிய மாணவிகள் கூட அவனது அன்பளிப்புக்குப் பிரதியீடாக, உடைகளைத் தளரவிட்டு அவனுடன் தனிமையில் ஒதுங்கியதுண்டு. கண்களால் பார்த்து ரசித்து, கைகளால் தடவிச் சிலிர்த்து, அவன் போக அனுமதிக்கும் வரை, அவர்கள் தம் கைகளுக்குள் முகம் புதைத்து நாணிச் சிவந்திருப்பர். அதைத் தவிர வேறென்ன செய்வதென அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. தண்ணீராகச் செலவு செய்யும் அவனது விரிந்த கைகளுக்குள் அடைக்கலம் தேடிக் கொள்ள நண்பர்கள் முண்டியடிப்பதில் அவனுக்கு விறைப்பான பெருமையிருக்கும். பன்னிரண்டு வயதிலேயே பள்ளிப்படிப்பை இடைநிறுத்தி விட்டாலும், பெண்கள் மீதான ஈடுபாடு மட்டும் கட்டுப்பாடின்றி வளர்ந்ததன் விளைவாக, அயலில் வசித்த பெரும்பாலான இளம் பெண்கள் பலரும் அவனிடம் அன்பளிப்புகளைப் பெற்று விட்டிருந்தனர். அழகாக இருந்து விட்டால் போதும், திருமணம் முடித்தவர்களா இல்லையா என்பதெல்லாம் நசீருக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.

முதலில் வாப்பாவின் ஷேர்ட் பக்கெட்டிலும் உம்மாவின் அரிசிப் பானையிலும் தனது ஆடம்பரச் செலவுக்கான பணத்தைக் கண்டெடுத்தான் நசீர். அது போதாமலான போது, வாப்பாவின் வீட்டு பேங்க் பெட்டியிலும் கை வைத்தான். அந்த பேங்க்கைத் திறப்பது அவனது வாப்பா லெப்பைக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். பணக்கட்டுகள், நகைகள், வளவு உறுதிப்பத்திரங்கள் போன்றவற்றை ஓர் ஒழுங்கில் அடுக்கி வைத்து மிகப் பாதுகாப்பாக அதைப் பேணி வந்தார் லெப்பை. பேங்க் வைக்கப்பட்டிருந்த அறைச் சாவி எப்போதும் அவரது இடுப்பு வாரில் பத்திரமாக இருக்கும். ஊர் முழுக்கப் பரந்திருக்கும் கடைகளின் வாடகைப் பணம், அடகுக்காகக் கிடைக்கின்ற நகைகள், காணி உறுதிகள் என்பவற்றுக்கெனத் தனியான இடமொன்றை அதனுள் ஒதுக்கியிருந்தார். தனது சொந்த உழைப்புகளைப் பத்திரப்படுத்துவதற்கு பிறிதோர் இடத்தையும் ஒதுக்கியிருந்தார்.

கூலிக்காரர்கள், விவசாயிகள் தமது தொழில் மூலதனமாகச் சிறிய தொகையொன்றை லெப்பையிடம் பெற்று அடமானமாகத் தாம் வாழும் நிலத்தின் அல்லது தொழில் செய்யும் வயலின் உறுதிப்பத்திரங்களைக் கொடுத்துச் செல்வர். கடனைச் செலுத்த முடியாது மேலும் கஷ்டத்தில் அவர்கள் திணறும் போது, மற்றொரு சிறுதொகைப் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து, நிலத்தை அல்லது வயலை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வார் லெப்பை. எதிர்த்துப் பேசும் திராணியற்று மனது பரிதவிக்க நெஞ்சடைத்துச் செல்லும் அவர்கள் மீது சிறிதளவேனும் அவருக்குக் கருணை எழாது. சோர்வற்று உழைக்கும் அம்மக்களின் அறியாமை, லெப்பையின் வீட்டு பேங்க்கில் பெரும் செல்வமாக நிரம்பியது.

நாளாந்தம் பேங்கைத் திறந்து தனது சேமிப்புகளை ஆசை தீரத் தடவிப் பார்க்கும் குரூரப் புத்தியிருந்தாலும், தனது மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அவற்றிலிருந்து எடுத்துச் செலவிடுவதில் அவர் அவ்வளவு தயக்கம் காண்பித்ததில்லை. எல்லோரையும் விடத் தனது மூத்த மகளான ஜெசீமா மீது அவருக்கு அளவற்ற அன்பிருந்தது. அவள் பிறந்த பின்னர்தான், தனது தொழில் முயற்சிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் உறுதியாக நம்பியிருந்தார். அதை விடவும் வாய்பேசாத அவளது இயலாமை ஏற்படுத்திய அனுதாபந்தான் அவள் மீதான அவரது கூடுதலான பாசத்திற்குக் காரணம் என எல்லோரும் நினைத்தனர். மற்றொரு காரணம் அவளது சுறுசுறுப்பான வேலைகளும் மலர்ந்த முகமும். அதிகாலையில் எல்லோருக்கும் முதலில் கண் விழித்து விடும் ஜெசீமா, அகன்று விரிந்த முற்றத்தை, கொட்டிக் கிடக்கும் அடர்ந்த மரங்களின் சருகுகளை அகற்றிச் சுத்தம் செய்வாள். கிணற்றில் அள்ளி சுற்றி நிற்கும் பயிர்களுக்கும் செடிகொடிகளுக்கும் நீரூற்றுவாள். சட்டியில் நீர் நிரப்பித் தீனும் வைத்து கோழிக்கூட்டைத் திறந்து விடுவாள். மாட்டுக் கொட்டகைக்குள் சென்று சாணங்களை அள்ளிக் கூடைக்குள் நிரப்பிச் சுத்தம் செய்த பின் தொட்டியில் நீர் நிரப்புவாள். இவ்வளவையும் முடித்து விட்டு, பால் கறப்பதற்காகக் கோப்பையுடன் கொட்டகைக்குள் நுழையும் போதுதான், காலைக் கதிரவனுடன் இணைந்து அவளது வீட்டாரும் கண் விழிப்பார்கள்.

தொடர்ச்சியான வேலைகளினால் மிகச் செழுமையான தேகக்கட்டுடனும் வசீகரிக்கும் வாளிப்புடனும் இருந்த ஜெசீமா பதினைந்து வயதுப் பிள்ளை என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். கள்ளங்கபடமற்ற அவள் அந்த வீட்டில் எல்லோருடனும் சகஜமாகப் பழகினாள். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது முதற்கொண்டு அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். வாப்பாவின் வயலில் காவலுக்கு நிற்கும் முல்லைக்காரன், மில்லில் வேலை செய்யும் கணக்குப் பிள்ளை, மிசினில் நிற்கும் ரைவர் எல்லோரும் வாரத்தில் இரண்டு மூன்று தடவைகளாவது அவளது கையால் தேநீர் குடித்து விடுவார்கள். மற்றவர்களை விட மிகுந்த பவ்யத்துடன் அவளிடமிருந்து தேநீரை வாங்கி அருந்துவான் ரைவர் கந்தசாமி. தன் கண்ணெதிரே பிறந்து வளர்ந்த பிள்ளையான அவள் மீது கந்தசாமி மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தான். காலையில் மிசினை எடுக்கும் போதும், அன்றோ மறுநாளோ மாலையில் கரேஜில் போடும் போதுமாக நாள் தோறும் அந்த வீட்டுக்கு அவன் வந்து செல்ல வேண்டியிருந்தது.

காளி கோவிலக்கருகில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளுமாக வசிக்கும் கந்தசாமி, வாகனங்கள் ஓட்டுவதில் கைதேர்ந்தவன். எல்லா வாகனங்களும் அவனுக்கு அத்துப்படி என்பது போலவே, எல்லா வேலைகளும் கூட அவனுக்கு அத்துப்படிதான். அந்த வீட்டில் நல்ல சம்பளத்துடன் அரிசி மூடைகளும் தேங்காய்களும் மாதாந்தம் போதுமான அளவு அவனுக்குக் கிடைத்து வந்தன. அங்கு எவ்விதக் குறையும் அவனுக்கிருக்கவில்லை. கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்து வட்டிக்கு விட்டிருந்தான். அதில் கிடைத்த இலாபத்தில் தங்க நகைகளை வாங்கி, பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கெனச் சேமித்து வைத்தான். மனைவியும் அவனும் சேர்ந்து மிகச் சிக்கனமாக இருந்து சேகரித்து அலுமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பதினைந்து பவுண் நகைகளும் ஓர் இரவு காணாமல் போன போது, அந்த அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்து இறந்து போனான் கந்தசாமி. கணவனின் சடலத்தின் மீது விழுந்து வெறி கொண்டவள் போல் கதறி அழுதாள் கமலா. அவள் வாழ்க்கையில் சந்திக்கும் முதலாவது இழப்பு இது. அவளது அப்பா, அம்மா, அவர்களது அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் எல்லோரும் உயிரோடுதான் இருக்கிறார்கள். குடும்பத்தாரின் கடுமையான எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து, பெரும் சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அவள் கரம் பற்றிய கணவன் மட்டும் அவளை நட்டாற்றில் விட்டு விட்டுக் கோழை போலச் செத்து விட்டான்.

இனி, “கீழ்சாதிகளைக் கட்டிக்கிட்டா இதுதான் கதி” என்று கூறிக் கொண்டு குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள வருவார்கள் என அவள் எதிர்பார்த்தாள். அவர்களுக்குக் கூறுவதற்கு அவளிடம் எந்த பதிலுமில்லை. பழைய திடகாத்திரம் உடலிலும் உள்ளத்திலுமிருந்து தொலைது}ரம் ஓடி விட்டது போல அவளுக்குத் தோன்றியது.

பொலிசில் முறைப்பாடு செய்து திருடனைப் பிடிக்கும் படியாக, சடங்குக்கு வந்த பலரும் கமலாவை வற்புறுத்தினர். அயலில் வசித்தவர்கள் அதற்கான முழு ஒத்துழைப்பையும் தருவதாக அவளுக்குத் தெம்புமூட்டினர். கமலாவுக்கோ அதிலெல்லாம் ஆர்வம் எழவில்லை. இழப்பின் வலி அவளில் ஏற்படுத்திய அவநம்பிக்கையே இதுவெனச் சிலர் எண்ணிய போதும், உண்மையில் இந்தத் திருட்டின் பின்னணியில் நாதனும் அவனது சகாக்களுமே இருப்பர் என்பது கமலாவுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

தூரத்து உறவினனான நாதன் அவளுக்குத் தம்பி முறை. தொழில் இல்லாத சந்தர்ப்பங்களில், மதிப்பற்ற விருந்தாளி போல், அவளது வீட்டில் கிடந்து வேலைகளைச் செய்து கொடுத்து மூன்று வேளையும் வயிற்றை நிரப்பிக் கொள்வது அவனது வழக்கம். தாய் தகப்பனை இழந்த பதினாறு வயதிலிருந்து நிலையான இருப்பிடமோ தொழிலோ இல்லாது ஏதாவது வேலை செய்து எதையாவது உண்டு எங்காவது உறங்கி காலம் கடத்தி வந்தவன், எப்படியோ கமலாவை உறவு கண்டு பிடித்து அவளிடம் வந்து சேர்ந்த போது இருபது வயதிலிருந்தான். வீட்டில் ஆண் இல்லாத நேரம் பார்த்து வந்து உண்டு தங்கிச் செல்வான். புதிய பழக்கமாக, நண்பர்கள் என இரண்டு பேரை உடன் அழைத்து வந்த போது, அவனது உள்ளத்தில் திட்டமொன்று இருந்தது.

இதற்கு முன்னர் தங்கிய வேளையில், தற்செயலாகக் கண்களில் பட்ட நகைகள், அலுமாரிக்குள் இருந்து கொண்டு அவனைக் கிண்டல் செய்து கொண்டிருந்தன. இரவில் எல்லோரும் து}ங்கிய பிறகு கள்ளச் சாவி கொண்டு அலுமாரியைத் திறந்து நகைகளை அள்ளுவதெனவும், இடையில் வீட்டில் யாரும் கண்விழித்துச் சத்தம் போட்டால் அவர்களது குரல் வளையை அறுப்பது மற்ற இருவரதும் பொறுப்பெனவும் திட்டமிட்டிருந்தான் நாதன். அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதங்களுமில்லாது நகை முழுவதையும் களவாடிக் கொண்டு காலையில் வழமை போன்று வீட்டிலிருந்து வெளியாகி வந்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது அவனால்.

அவன் இதுவரைக்கும் களவாடியவற்றுள் மிகப் பெறுமதியான களவு இதுதான். வழமை போன்று செட்டிக்கடை சாந்தனிடம் கொண்டு சென்று கொடுத்தான். இவ்வளவு அதிகமான களவு நகைகளைப் பார்ப்பது சாந்தனுக்கும் இதுவே முதற்தடவை. அடகு வைப்பதற்கு அல்லது விற்பதற்கு வருகின்ற நகைகளுக்கு, அப்போதைய பவுணின் விலை, கொண்டு வருபவரின் முகபாவனை, மேசை டிராயரிலுள்ள இருப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு விலையைத் தீர்மானிப்பான் சாந்தன். அவன் விலையொன்றைத் தீர்மானித்து விட்டானென்றால், அதன் பிறகு அதிலே எந்த மாற்றமுமில்லை. களவு நகைகளையும் சொந்த நகைகளையும் துல்லியமாகக் கணித்து விடுவது அவனது மிகப்பெரிய அனுபவத் திறமை.
அநாமதேயமாக பஸ்ஸில் கண்டெடுத்த சில லட்சம் ரூபாய்களை மூலதனமாகக் கொண்டு நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இத்தொழில் அவன் எதிர்பாராதளவுக்கு மிகப் பெரிய வருமானத்தை ஈட்டிக் கொடுத்தது. சொந்த வீடு கட்டி ஊரில் ஆங்காங்கே வளவுத் துண்டுகளையும் வயல் நிலங்களையும் வாங்கிப் போட்டு, முக்கிய ஊர்ப்பிரமுகனாக குறுகிய காலத்திற்குள் மாறிவிட்டிருந்தான் சாந்தன். நகை வடிவமைப்பு நுட்பங்களையும் விரைவில் கற்றுக் கொண்டான். அடகுக்காக வைக்கப்படும் 22 கரட் நகைகள், மீட்கப்படும் போது 18 கரட்டாக மாறியிருந்தாலும் ஒத்த வடிவம் என்பதனால் யாரும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நகை வியாபாரிகளின் பற்றாக்குறையினால் சாந்தனின் வருமானத்திற்கு எவ்வித முட்டுக்கட்டையும் ஏற்படவில்லை. நிரம்பி வழிந்த பணத்தில் வீடுகளை வாங்கிப் போட்டு வாடகைக்கு விட்டான். எஞ்சிய வீடொன்றில் மணமுடிப்பதாகக் கூறி வசந்தகுமாரியைக் குடியமர்த்தினான்.

பதினெட்டு வயதிலிருந்த வசந்த குமாரி, மாநிறத்தில் கொழுத்த மார்பகங்களுடன் நகையொன்றை விற்க வந்த போதுதான் சாந்தனைச் சந்தித்தாள். மணமுடித்த இரண்டே நாட்களில் யானையொன்றினால் நசுக்கப்பட்டு இரு கால்களையுமிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் கணவனையும் அவனது ஐந்து ஏக்கர் வயல் நிலத்தையும் பராமரித்து வர வேண்டிய பொறுப்பும் சிரமமும் அவளுக்கிருந்தன. முழுமையாக அனுபவித்தறிந்திராத தாம்பத்திய சுகம், சாந்தனின் அணைப்பில் திருப்தியாகக் கிடைத்த போது, தனக்காக எதுவும் செய்திராத ஒருவனைப் பராமரிக்க எதற்காகத் தன் இளமையையும் வாழ்க்கையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற நியாயமான தர்க்கமொன்று அவளுள் எழுந்தது. அதிலிருந்து இரண்டு தினங்களில் தனது உடைகளைப் பொதியாகக் கட்டிக் கொண்டு சாந்தனின் வெறுமையான வீட்டிற்கு இடம்பெயர்ந்தாள் வசந்தகுமாரி. நாளாந்தம் மூன்று வேளைச் சாப்பாடும் வாரத்தில் மூன்று நாட்கள் தாம்பத்திய சுகமும் எவ்விதச் சிரமங்களுமின்றி அவளுக்குக் கிடைத்து வந்தன. ஏனைய நான்கு இரவுகளில் தனிமை அவளை வாட்டும். ரிவி பார்ப்பதும் அலுத்துப் போயிற்று. கேலிப் பார்வையையும் நகைப்பையும் தவிர்ப்பதற்காக அயலாருடனான உறவையும் துண்டித்திருந்தாள். இருட்டறைக்குள் தனித்து விடப்பட்ட வெறுமையை உணரும் நாட்களில் பழைய கணவன் சுந்தரத்தின் நினைவுகள் அவளுள் மலரும்.

அத்தான் முறை என்ற போதிலும் திருமணத்தன்றுதான் அவனை முதன் முதலில் கண்டாள். ஆறடி உயரத்திலும் அகன்ற தோள்களிலும் தெரிந்த அவனது கறுப்பு முகம் அவளை வசீகரிக்கவே செய்தது. சித்தி வீட்டிலிருந்தவளை விடுவித்து அழைத்துக் கொண்டு, தொலைவிலிருந்த தனது கிராமத்திற்கு வந்தான் சுந்தரம். பச்சைப் பசேலென்ற அந்தக் கிராமத்தில் சோலைகளின் நடுவே அமைக்கப்பட்ட சொர்க்கம் போல் அவனது வீடு இருந்தது. சுற்றிவர இருந்த காடுகளிலிருந்து அவ்வப்போது ஓங்கி ஒலிக்கும் யானைகளின் பிளிறல்களும் நரிகளின் ஊளைகளும் அவனைத் து}ங்க வைக்கும் தாலாட்டுகள். அப்பாவிடமிருந்து பரம்பரைச் சொத்தாகக் கிடைத்த ஐந்து ஏக்கர் பொன்கொழிக்கும் பூமியைத் தன் வாழ்வாதாரமாகப் பராமரித்து வந்தான். ஒரு படுக்கையறையும் சமையலறையும் விறாந்தையுமாகக் களிமண்ணால் வேயப்பட்டு தென்னோலைகளினால் கூரையிடப்பட்டிருந்த வீடு அவனது இரண்டு வருட உழைப்பு மீதியின் பெறுபேறாக அவனை எப்போதும் பெருமை கொள்ளச் செய்யும். பதினான்கு வயதிலேயே அவனைத் தனியாக விட்டு விட்டு, அவனது அம்மாவைத் தேடி அப்பா ராமலிங்கமும் செத்துப் போயிருந்தார். அவர் செத்த அன்று சுந்தரம் கண்ணீர் வடித்தழுதான். அதற்கு முன்னரோ பின்னரோ ஒருபோதும் எதற்காகவும் அவன் கவலைப்பட்டதுமில்லை, கண்ணீர் வடித்ததுமில்லை. தந்தை மீது அவனுக்கு அளவற்ற பாசமிருந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்த விட்டமையால் எல்லாமுமாக இருந்து அவர் அவனை வளர்த்தார்.

மெலிந்த கறுத்த உருவம் கொண்ட ராமலிங்கம் வயல் வேலைகளில் கைதேர்ந்தவர். இரவில் மிகச் சொற்ப நேரமே து}ங்குவார். சாமத்தில் துயிலெழுந்து பரபரப்பாகச் செய்வதற்கு எப்போதும் அவருக்கு வேலைகள் இருக்கும். வயல் காவல் பணிகளில் அவரை விஞ்ச யாருமில்லை. மலத்தைத் தின்று விட்டு மூர்க்கமான போதையுடன் வரும் பன்றிகளிடமிருந்தும் ஆக்ரோஷமாகப் பிளிறிக் கொண்டு வரும் யானைகளிடமிருந்தும் வேளாண்மையைப் பாதுகாப்பதில் அவர் சிறந்த அனுபவசாலியாக அறியப்பட்டிருந்தார். ஐந்து ஏக்கர் வயலைத் தவிர்த்து, அவருக்குச் சொந்தமாக இருந்த மற்றொரு சொத்து பசு மாடு. தெய்வத்தின் அவதாரமாகத் தெரியும் அந்த வெள்ளைப் பசு மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் ராமலிங்கம். வாய் பேசாத உயிர்த்தோழன் போல் பெரும்பாலான நேரங்களில் அது அவருடனேயே நின்றிருக்கும். பசுக்களுக்கும் முகர்திறன் உண்டு என்பதை, எங்கிருந்தாலும் தன்னைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடும் அதன் இயல்பிலிருந்து அறிந்திருந்தார்.

கடந்த வருடம் பால் குடி மறந்த குட்டியாய் இருந்த போது, அவரது உழைப்புக்கான வெகுமதியாக முதலாளி தேவசகாயத்திடமிருந்து அன்பளிப்பாகக் கிடைத்ததுதான் அந்தப் பசு. அதை ராமலிங்கத்திடம் ஒப்படைக்கும் போது, தேவசகாயத்தின் கண்களில் நிறைவான பெருமிதமொன்று இருந்தது. தனது பண்ணையில் ஒரு பசு போடும் முதலாவது குட்டியை தனது வேலையாட்களுக்கு வெகுமதியாகக் கொடுத்துவிடுவது அவரது வழக்கம். இதேபோன்றதொரு வழக்கத்தினு}டாகத் தனக்குக் கிடைத்த பசுவொன்றுதான் தனது தற்போதைய செழிப்புக்கெல்லாம் ஆரம்ப வித்து என அவர் அடிக்கடி கூறிக் கொள்வார். பொருளாதார வளமும் மனங்கோணாது வழங்கும் கொடைத்திறனும் சமூகத்தில் ஆரோக்கியமான செல்வாக்கொன்றை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருந்தன. அச்செல்வாக்கை மூலதனமாகக் கொண்டு அரசியலில் குதிக்குமாறு நண்பர்கள் கூறி வந்த ஆலோசனையை நீண்ட காலத்திற்குப் பின்பே அவர் ஏற்றார். பொதுத் தேர்தலில் கணிசமான வாக்குகள் கட்சிக்கும் அவரது இலக்கத்திற்கும் விழ, தமிழைத் தவிர வேறு மொழி தெரியாத தேவசகாயம் பாராளுமன்றத்திற்குத் தைரியமாகப் புறப்பட்டுச் சென்றார்.

தனது வெற்றிக்காகப் பாடுபட்ட எல்லோருக்கும் தனது சேவை வாய்ப்புகளின் போது முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுப்பதில் அவருக்குச் சிரமமிருக்கவில்லை. இன ரீதியான அடையாளமின்றி பொது மனிதனாகப் பணியாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கிருந்தது. எனினும் அப்பொறுப்பை விமர்சனங்களெவையுமின்றிச் செய்ய முடியாமற் போனது அவரால். “எங்கட ஆக்களுக்கு வந்தத்த மாத்தியெடுத்து உங்கட ஆக்களுக்குக் குடுத்திட்டீங்க என?” என்று, அவரது எல்லா வெற்றிகளிலும் ஏணியாக நின்ற இஸ்மாயில் கொந்தளித்த போது, அவனை அழைத்துச் செல்லுமாறு காவலர்களுக்குக் கட்டளையிடுவதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அரசினால் அமைக்கப்படவிருந்த புதிய பல்கலைக்கழகத்தை, தனது மக்களுக்குப் பயன்படும் வகையில், தனது இனத்தார் வாழும் பிரதேசத்திற்குக் கொண்டு செல்ல, அரசியல் அதிகாரம் அவருக்குப் பெரிதும் உதவிற்று. இதனைக் குறித்து இஸ்மாயில் இவ்வளவு காட்டமாகச் சத்தமிட்டுச் செல்வது அவரைக் கஷ்டப்படுத்தவே செய்தது.

நீண்ட காலமாக தேவசகாயத்திடம் பணியாற்றி வந்த இஸ்மாயில், போதிய கல்வித் தராதரம் இல்லாத நிலையிலும், அரசியல் செல்வாக்கினு}டாக நிரந்தரமான அரச உத்தியோகமொன்றில் இணைந்து கொண்டான். உத்தியோகம் பெற்றதிலிருந்து அவனது நடவடிக்கைகளில் பெரிய மாறுதல்கள் தென்பட்டன. பதினைந்து வயது வரை பலமுறை முயன்றும் ஐந்தாம் தரத்திற்கு மேலே செல்ல அவனால் முடியவில்லை. பத்து வருடப் படிப்பில், எழுத்துப் பிழைகளுடனாயினும் தமிழில் சொல்வதெழுதப் பழகியிருந்தான். மாட்டுப் பண்ணையில் உதவியாளாக இணைத்து விடப்பட்ட போது இதுதான் அவனது கல்வித்தகைமை. அரசியல் என வந்த போது, போஸ்டர் ஒட்டுவது, கூட்டங்களை ஒழுங்கு செய்வது, துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது, முதலாளியைச் சந்திக்க வருவோருக்குத் தேநீர் பரிமாறுவது போன்ற எடுபிடி வேலைகளை ஓய்வு ஒழிச்சலின்றிச் செய்தான். பத்து வருட அயராத உழைப்புக்கான கைம்மாறாகக் கிடைத்த அரச உத்தியோகம் ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்த போதும், பின்னர் சுதாகரித்துக் கொண்டான் இஸ்மாயில். மற்றொரு பத்து வருடங்களை அவ் அரசப் பணியில் அர்ப்பணிப்புடன் செலுத்தியதன் விளைவாக து}ரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலும் எத்தகைய பிரச்சினைகளையும் சிறப்பாகக் கையாளும் ஆளுமையும் அவனுக்கு வாய்க்கப் பெற்றன. பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பலரும் அவனது முகாமைத்துவத்தின் கீழ் பணியாற்றுமளவு முக்கிய அரச நிருவாகியாகவும் சமூகக் கல்விமானாகவும் மாறினான். அதன் பிறகுதான் அரசியலில் குதிக்கும் எண்ணம் அவனுக்கேற்பட்டது. பரீட்சார்த்தமாக உள்@ராட்சித் தேர்தலில் நின்ற போது, எதிர்க்கட்சி வேட்பாளரான பாறுக்கிடம் மிகக் கடுமையாகத் தோற்றுப் போனான். தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கத்திய அவனது கூச்சல்களை அலட்சியம் செய்து, தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் வெகு விமரிசையாகக் கலந்து கொண்டான் பாறுக்.

பாறுக்கிற்கு அது இரண்டாவது தேர்தல் வெற்றி. ஏற்கனவே பதவி வகித்த ஐந்தாண்டுகளில் பெரிதாக எதையும் அவன் சாதித்து விடவில்லை. தனது கட்டளைகளுக்கு அடிபணியக் கூடியவராக செயலாளர் ஒருவரை நியமித்துக் கொண்டமையால், சேகரிக்கப்படும் பொது நிதியிலிருந்தும் அரச கொந்தராத்துகளிலிருந்தும் லட்சம் லட்சமாக உழைப்பதும் கமிஷன் பெறுவதும் அவனுக்கு மிகச் சாதாரணமாயிற்று. இவையே ஆடம்பரமான வீடையும் படகு போன்ற காரையும் அவனுக்குச் சாத்தியமாக்கின. சபைக்குப் போதிய வருமான மூலங்களில்லை என்ற தன் வழமையான ஒப்பாரியினு}டாக, பெருமளவு வருமானத்தைப் பதுக்கவும் அவனால் முடிந்தது. மக்களின் அதிருப்தி அதிகரிக்கத் தொடங்குகையில், திடீரென அரசியல் காரணங்களுக்காக சபையும் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்தலின் போது அரிசி மூடைகளாகவும் உலர் உணவுப் பொதிகளாகவும் உடைகளாகவும் கற்றல் உபகரணங்களாகவும் மதுபோத்தல்களாகவும் பிரியாணிப் பார்சல்களாகவும் பதுக்கி வைத்திருந்த பணத்திலிருந்து ஒரு பகுதியைத் தண்ணீராகச் செலவிட்டதன் விளைவாக தேர்தலில் மீண்டும் பெரும் வெற்றி பெற்றான் பாறுக். தேர்தல் செலவில் மிகக் கணிசமான தொகையை பிரசாரத்திற்கென ஒதுக்கியமை அவனது வெற்றிக்கான மற்றோர் உபாயமாகும்.

முக்கியமாக பிரசார மேடைகளை அலங்கரித்த சகாப்தீன் ஆசிரியரின் நகைச்சுவையான பேச்சுகள் அவனது கூட்டங்களுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வரப் பிரதான காரணமாக இருந்தது. கணீரென்ற குரலும், ஆற்றொழுக்கான தமிழ் நடையுடன் கூடிய செம்மையான உச்சரிப்பும், நகைச்சுவை ததும்பும் பாணியும் சகாப்தீன் ஆசிரியரின் முக்கிய சிறப்பம்சங்கள். குறுகிய காலத்திற்குள் தனது பேச்சாற்றல் மூலமாகப் பெரும் பிரபலம் பெற்றிருந்தார். அவ்வாற்றலை மூலதனமாக்கிய போது, தேர்தல் காலங்களில் பெரும் பணம் அவரது கைகளை நிறைத்தது. மேடைகளில் சகாப்தீன் ஏறி விட்டால், பார்வையாளர்களின் ஆரவாரக் கரகோஷம் விண்ணை முட்டும். அவர் கையமர்த்திப் பேச ஆரம்பிக்கும் போது மாபெரும் அமைதியொன்று பார்வையாளர்களின் மீது காரிருளாகக் கவியும். நகைச்சுவைக் கதைகளின் போது வாய்விட்டுச் சிரிப்பதையும், தத்துவக் கருத்துகளின் போது மேலும் கீழும் தலையாட்டுவதையும் தவிர்த்து ஏனைய சந்தர்ப்பங்களில் அவர்களது ஐம்புலன்களும் சகாப்தீன் மீது முற்றிலும் லயித்திருக்கும்.

கடந்த பத்து வருடங்களாக எண்ணற்ற தேர்தல் மேடைகளை அவர் பார்த்து விட்டார். கட்சியென்றோ கொள்கையென்றோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னை வரையறுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. பணம் ஒன்றே அவரது குறிக்கோள். யார் காசு கொடுத்தாலும் அவருக்காக மேடையேறி கருத்துகளையும் சிந்தனைகளையும் உரத்து முழங்குவார். ஆனாலும், ஒரே தேர்தலில் பலருக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்வதில்லை எனும் கொள்கையொன்று எழுதப்படாத விதியாக அவரிடமிருந்தது. ஆரம்பித்து விட்டால், அந்தத் தேர்தல் முடியும் வரை, அவருடனேயே இருப்பார். முடியுமானவரைக்கும் பணத்தைக் கறப்பார். சிலபோதுகளில் பதவியுயர்வுகளும் சலுகைகளும் பெறுவார். எதிர்க் குழுவிலுள்ளோரின் எத்தகைய தாக்குதலும் அவரது உறுதியைத் தளர்த்தி விடாது. வீட்டுக்குக் குண்டெறிவது, சைக்கிள்களை எரிப்பது, இருட்டடி அடிப்பது என்பவற்றைத் தவிர அவர்களால் வேறெதைச் செய்து விட முடியும். எல்லா எதிர்ப்புகளும் அவருக்குப் பழக்கமாகிப் போயின. அவரது கொள்கை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்ததால், தேர்தல் ஒன்று வரப்போகிறது என்று தெரிந்தாலே வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரை மொய்க்கத் தொடங்கி விடுவர். வெற்றி பெற்றோர் தேர்தலின் பின்பும் நன்றிக்கடனாக அவரது தேவைகளுக்குக் கொடுத்தனுப்புவதனால், அவருக்குப் பணத்தட்டுப்பாடே ஏற்பட்டதில்லை. அவர் ஆதரவாகப் பிரசாரம் செய்தவர்களில் மூவர் நகர சபைத் தவிசாளர்களாகவும் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவாகியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவர்களுள் ஒருவர் இரண்டு வருடங்கள் பிரதிக் கல்வியமைச்சராகவும் பதவி வகித்தார். உயர்தரத்தில் ஃபெய்லாகி வேலையின்றிச் சுற்றித் திரிந்த தனது 25 வயது மகனுக்கு, பாடசாலையொன்றில் நிரந்தர ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொடுக்க, அவ்வமைச்சருடனான நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார் சகாப்தீன்.

தனது மகன் அஸ்ரபிடம் நியமனக் கடிதத்தைக் கொடுத்த போது, வெற்றிப் புளகாங்கிதமொன்று அவரது முகத்தில் செழித்துக் குலுங்கியது. அஸ்ரப் 20 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றி, பின் அதிபராகப் பதவியுயர்வு பெற்று, தற்போது ஓய்வுக்காகக் காத்திருக்கிறார். இருக்கின்ற கொஞ்ச காலத்திற்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லாது காலத்தைக் கடத்த வேண்டுமே என்பதுதான் அவரது இப்போதைய ஒரே பயமாக இருந்தது.
இரவுணவை முடித்துக் கொண்டு படுக்கையில் சரிந்த அஸ்ரப் அதிபருக்கு மீண்டும் முகைதீன் ஆசிரியரின் நினைவு வந்தது.
***
நன்றி :  ஸபீர் ஹாபிஸ் , அம்ருதா , ஹனீபாக்கா

Wednesday, May 15, 2013

பொய் முகங்கள் - ஸபீர் ஹாபிஸ்

'அம்ருதா' இதழுக்கு இரண்டு சிறுகதைகள் அனுப்பியிருக்கிறார் ஸபீர் . ’பொய்முகங்கள்’, ’மனசு’ என்று. இரண்டையும் ஒன்றாக்கி ஒரே தலைப்பில் (பொய்மனசு?) வெளியிட்டு உலக சாதனை செய்திருக்கிறார்களாம். ‘என்னடா இது, பென்னம்பெரிய பின்நவீனத்துவமாக அல்லவா இருக்கு? படித்துப் பார்த்தார்களா இல்லையா? இலக்கிய உலகம், அரசியல் உலகம், வியாபார உலகம் இதில் எல்லாம் எப்படியும் நிகழும். போயும் போயும் ஸபீரின் கதைதானா இப்படியொரு சங்கதியில் மாட்ட வேண்டும்!' என்று புலம்பித்தள்ளிவிட்டார் குரு.  ‘ஆமா காக்கா, ஏன் ரெண்டு அனுப்புனீங்க’ என்று கேட்டால், ‘ரெண்டுல ஒண்ணு போடுவாங்கன்னு நெனச்சோம் தம்பி’ என்கிறார். பேராசைதானே இது?! சரி, குழாயடிச் சண்டைகள் போடவேண்டாம். ‘கொட்டாவி விட்ட தெல்லாம் கூறு தமிழ் பாட்டாச்சே முட்டாளே இன்னமுமா பாட்டு’ என்று புதுமைப்பித்தன் கவிதை எழுதினாராமே... (நன்றி : SegaSiva). ஸபீர் எழுதியது என்று இருக்கிறதல்லவா, அது போதுமென்று சந்தோஷப்படுவோம். 

’மனசு’ அடுத்து வரும், இன்ஷா அல்லாஹ். - ஆபிதீன்

***

பொய் முகங்கள்
- ஸபீர் ஹாபிஸ்

ட்ரைவரின் வருகை தாமதமானதால், அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு குளித்து அவசர அவசரமாகத் தயாரானதில் அர்த்தமில்லாது போய்விட்டது சுமதிக்கு. அவளது கொழுத்த உடலில் கோபம் தளதளத்துக் கொண்டிருந்தது. டயறியைத் திறந்து இரவு கண் விழித்து எழுதி வைத்த இன்றைய ஷெட்யூலைப் பார்த்தாள். 6 மணி தொடக்கம் 7.30 வரை நகரின் மூன்று இடங்களில் தனது கம்பனி நிர்மாணித்து வரும் ஐந்தடுக்கு தொடர் மாடி வீட்டுத் திட்டத்தைப் பார்வையிடுதல், 7.30க்கு புதிய கொன்ட்ரக்ட் தொடர்பாக என்ஜினியர் வசந்தனுடன் டிஸ்கஷன், 8 மணிக்கு தொழிலதிபர் ராஜாராமின் புதிய நகைக் கடைத் திறப்பு விழாவில் பங்கேற்பு, 8.30க்கு தனது கம்பனிக்கான ரிவி விளம்பரத் தயாரிப்புக்காக ஸ்டைலிஷ் அட்வெர்டைசிங் கம்பனியுடன் ஒரு எம்ஓயூ கைச்சாத்து, 9 மணிக்கு கம்பனிக்கான கடன் திட்டம் தொடர்பாக கொமர்ஷல் வங்கியுடன் ஓர் உடன்படிக்கை, 9.30 தொடக்கம் 4.00 மணி வரை அரச அலுவலகப் பணிகள், 4.30க்கு முகுந்தனின் பேர்த் டே பார்ட்டி, 5.30 க்கு பியூட்டி பார்லர், 6.00 மணிக்கு எம்.சியில் ஷொப்பிங், 7 மணிக்கு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் அமைச்சர் ஹெட்டிகொடவின் டின்னர் பார்ட்டி... என ஷெட்யூல் நீண்டு சென்றது.

6.30 ஆகியும் பணிக்கு வராதிருக்கும் ட்ரைவரின் அலட்சியம், தனது எல்லாப் பணிகளையும் குழப்பி விடப் போதாக நினைக்கையில் சுமதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன. தாமதத்திற்காக அவன் கூறக்கூடிய எந்தக் காரணத்தையும் ஏற்பதில்லையென அவள் இறுக்கமாகத் தீர்மானித்துக் கொண்டாள். பணியில் அமர்ந்த இந்தப் பத்து மாதங்களில் அவன் ஒரு நாள் கூட லீவு எடுத்ததோ, தாமதித்து வந்ததோ, ஓவர் டைமுக்காக சம்பளம் கேட்டதோ இல்லை என்ற போதிலும், தற்போதைய தனது அவசர நிலையில் அவன் இவ்வாறு தாமதிப்பதை அவளால் பொறுக்கவே முடியவில்லை. ‘ஒரு செல்போன் வாங்கக் கூட வக்கில்லாதவனையெல்லாம் ரைவரா வெச்சது என்ட பிழதான்’ என முணுமுணுத்தாள். பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரை ஒரு முறை பார்த்து விட்டு வராந்தாவில் கிடந்த சோபாவில் உடல் புதைய அமர்ந்த போதுதான் வாயிற் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ரைவர்தான் வந்து கொண்டிருந்தான். அவனது மெலிந்து தளர்ந்த உடலும் நரை எட்டிப் பார்க்கும் தலையும் முகத்தில் பற்றிப் படர்ந்திருக்கும் சாந்தமும் அவன் மேல் மரியாதை கொள்ளத் து}ண்டுபவை.  எனினும் எவ்விதப் பதட்டமுமின்றி மிக இயல்பாக நடந்து வந்து கொண்டிருக்கும் அவனைப் பார்க்கப் பார்க்க சுமதிக்குப் பற்றிக் கொண்டு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு உயரமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவள், “மேடம், சாவி...” என அவன் தன் முன்னால் வந்து நின்றதும், அடக்கி வைத்திருந்தவற்றையெல்லாம் மொத்தமாகக் கொட்டி விடுவது போல், வலது கையை ஓங்கி அவனது கன்னத்தில் பளாரென ஓர் அறை விட்டாள். “ஃபூல், ஏன் இவ்ளோ லேட்?” அவளது கேள்வியில் கோபம் உறுமியது.

ட்ரைவரின் முகத்தில் திடீரெனப் பற்றிய அதிர்ச்சி, அவனது மலர்ந்த முகத்தில் இருண்மையைக் கொட்டிற்று. கன்னத்தைத் தடவிக் கொண்டே, “கரெக்ட் டைம்தானே மேடம்!” என்றான் தயங்கித் தயங்கி. “என்ன...?” என மீண்டும் முறைத்தாள் சுமதி. நெற்றியைச் சுருக்கியவாறு, “ஏழு மணிக்குத்தானே மேடம் வரச் சொன்னீங்க” என்றவன், 6.45ஐக் காட்டிய தனது கைக்கடிகாரத்தை அவள் முன் நீட்டினான்.

சுமதிக்கு அப்போதுதான் சட்டென உறைத்தது. இரவு எட்டரை மணிக்கெல்லாம் ட்ரைவரை அனுப்பி விட்டு, பத்து மணிக்குப் பிறகு சாவகாசமாக இருந்து போட்டதுதான் இன்றைய அவளது ஷெட்யூல். ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தின் படியே ஏழு மணிக்கு அவனை வரச்சொல்லியிருந்தாள். ஸ்டைலிஷ் அட்வெர்டைசிங் கம்பனியுடனான எம்ஓயூவும் கொமர்ஷல் வங்கியுடனான உடன்படிக்கையும் பின்னரே ஷெட்யூலில் இணைத்துக் கொள்ளப்பட்டமையால், புறப்படும் நேரத்தில் திருத்தம் செய்ய வேண்டியதாயிற்று அவளுக்கு. அதனை அவனுக்குத் தெரிவிக்க மறந்து போனாள். இருந்தாலும் அதைத் தன் தவறென அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. “ஒரு செல்போன் வெச்சுக் கொள்ள மாட்டியா?” என எரிச்சல் பட்டுக் கொண்டே கார் சாவியை அவனிடம் து}க்கிப் போட்டாள். கார் வாங்கி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ட்ரைவிங் பழகாதிருக்கும் தன் பிசியான வாழ்க்கையை சலித்துக் கொண்டே பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். கார் புறப்பட்டது. ஏசியின் கதகதப்புடனும் மேற்கத்தேய மெலடியின் வருடலுடனும் ஐந்து நிமிடங்களில் தனது முதலாவது சைட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள் சுமதி.

அப்போதுதான் வந்திருந்த வேலையாட்கள் சிரிப்பும் கதையுமாக உடை மாற்றித் தயாராகிக் கொண்டிருந்தார்கள். தன்னைக் கண்டதும் அவர்களது செயற்பாடுகளில் புதவித வேகமொன்று தொற்றிக் கொண்டதை சுமதி உணர்ந்தாள். ஏற்கனவே அங்கு பிரசன்னமாகியிருந்த என்ஜினியர் வசந்தன் அவளை மரியாதையுடன் வரவேற்றான். கட்டடத்தில் இரண்டு மாடிகள் பூர்த்தியாகியிருந்தன. இன்னும் மூன்று மாதங்களில் முழு வேலையும் பூர்த்தியாகி விடும் என்று அவன் கூறுவதைக் கேட்க சுமதிக்கு சந்தோஷமாக இருந்தது. கொங்க்ரீட் கற்களும் சீமெந்தும் முறுக்குக் கம்பிகளும் மண்குவியல்களும் கட்டுமான உபகரணங்களும் சிதறிக் கிடந்த கட்டடச் சு10ழலை, தன் சாரியை சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டே ஒரு தரம் சுற்றி வந்தாள் சுமதி. தேவையான ஆலோசனைகளையும் திருத்தங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் அவள் சொல்லச் சொல்ல, தலைமைப் பொறுப்பாளர் அவற்றைக் குறித்துக் கொண்டார்.

அதன் பின், வசந்தனை அழைத்துக் கொண்டு ஏனைய இரு சைட்டுகளையும் பார்வையிட்டு, அவனுடனான டிஸ்கஷனையும் முடித்துக் கொண்டு நகைக் கடைத் திறப்பு விழாவுக்கு வந்த போது நேரம் 8.30 ஆகியிருந்தது. திறந்து வைக்கப்பட்டு விட்ட கடை, தகதகவென ஜொலிப்பதை வெளியிலிருந்தே பார்த்தாள். ஓடி வந்து காரின் கதவைத் திறந்து விட்டவாறு, “வெல்கம் மேடம்” என வரவேற்றான் மனேஜர். சுமதி இறங்கவில்லை. தனக்காகக் காத்திராது திறப்பு விழாவை ஆரம்பித்து விட்ட ராஜாராம் மீது அவளுக்குக் கோபம் வந்தது. அடுத்த புரோகிராமுக்குரிய நேரம் ஆகிவிட்டிருந்ததையும் உணர்ந்தாள். கதவைச் சாத்தி விட்டு, “போ” என்றாள் ரைவரிடம். உள்ளேயிருந்து “மேடம்... மேடம்...” எனக் கூவிக் கொண்டு வரும் ராஜாராமை அவள் சற்றும் பொருட்படுத்தவில்லை.

சிக்னலில் கார் நிறுத்தப்பட்ட போது, நடை பாதையில் படுக்கையில் கிடந்த கிழவியின் மீது சுமதியின் பார்வை மொய்த்தது. கிழவியின் கசங்கிக் கிழிந்த ஆடைகள் துர்நாற்றம் வீசக்கூடியவை என்பதைப் பார்வையாலே கண்டுபிடித்து விட முடியும் போலிருந்தன. கலைந்து கிடந்த தலை பற்றியோ, உடல் முழுக்கப் பரவியுள்ள கொப்புளங்களிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் அழுக்குக் கழிவுகள் பற்றியோ, முற்றுகையிடத் துடித்துக் கொண்டிருக்கும் ஈப் பட்டாளங்கள் பற்றியோ அவள் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வாய்க்குள் எதையோ போட்டு மென்று கொண்டிருந்தாள் கிழவி. அவ்வழியில் செல்வோர் அவளது துர்நாற்றத்திற்குப் பயப்படுகிறார்கள் என்பதை, அவர்கள் அவளிலிருந்து நன்கு ஒதுங்கித் தள்ளிச் செல்வதிலிருந்து உணர முடிந்தது.

அரண்மனை போன்ற தனது பெரிய வீட்டில், கணவனைத் துரத்திவிட்டுத் தனியாக வசிக்கும் சுமதி, அலுவலகத்திற்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் ஒவ்வொரு நாளும் இதே இடத்தில் அந்தக் கிழவியைப் பார்க்கிறாள். ஒருபோதும் காரிலிருந்து இறங்கிச் சென்று கிழவிக்கு உதவ வேண்டுமென அவள் நினைத்ததில்லை. ஆனாலும் கிழவியைப் பார்க்குந் தோறும் இனம் புரியாத நன்றிப் பெருக்கொன்று அவளது உடலெங்கும் உஷ்ணமாகப் பரவியோடும். அவள் பார்ப்பதற்கு தன்னைப் போன்ற முகவாக்குடன் இருக்கின்றாள் என்பதா அல்லது அவள் தன்னைப் பெற்றெடுத்த தாய் என்பதா இதற்குக் காரணம் என்பது மட்டும் சுமதிக்குப் புரிவதேயில்லை.

-------------------

காரில் ஏறும் போதுதான் ஃபைலை எடுக்க மறந்தது சலீமுக்கு நினைவு வந்தது. அலுவலக ஃபைல்களை அவன் பெரும்பாலும் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. அது தவறு என்பதற்காக அன்றி, வீட்டில் அடிக்கடி ஏற்படும் மனைவியுடனான சர்ச்சைகளில் அலுவலக ஃபைல்கள் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.

கார்க் கதவைச் சாத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, சோபா மூலைக்குள் ஒடுங்கியமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த மனைவியை மீண்டுமொரு முறை கோபம் முகிழ்க்கப் பார்த்து விட்டு, அறைக்குள் நுழைந்து ஃபைலை எடுத்துக் கொண்டு விறுவிறுவென நடந்து வெளியே வந்தான். காரினுள் ஏறி கதவைச் சாத்தி, ஸ்டார்ட் செய்து அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டான். காரின் வேகத்திற்கேற்ப தொல்லையும் எரிச்சலும் து}ரமாகிக் கொண்டிருப்பதாக உணர்ந்த போது, அமானுஷ்யமான ஆறுதலொன்று அவனை அரவணைத்தது.
வழியில் காத்து நிற்கும் தேவாவின் நினைவுகள் வந்தன. இரண்டு திருமணங்கள் புரிந்து இரண்டையும் உதறித் தள்ளி விட்டு சுதந்திரப் பறவையாகச் சுற்றித் திரியும் அவன் மீது சலீமுக்கு எப்போதுமே உள்@ரப் பொறாமையொன்றுண்டு. அதை அவன் வெளிப்படையாகவே பேசியுமிருக்கிறான்.

பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் பகிடிவதையிலிருந்துதான் அவர்களது நட்பு தொடங்கியது. கலைப்பீடத்தில் இணைந்து கொண்ட மூன்றாம் நாள், பாடங்களை முடித்துக் கொண்டு தரிப்பிடத்தில் பஸ்சுக்காகக் காத்து நின்ற போது சீனியர்களிடம் மாட்டிக் கொண்டான். அவர்கள் நீட்டிய வாழைப்பழத்தில் ஒரு துண்டைக் கடித்து விழுங்கி விட்டு மீதியை பக்கத்திலிருக்கும் மற்றொரு ஜூனியரிடம் கொடுக்க வேண்டும். பழத்தைப் பரிமாற கைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் நிபந்தனை. சலீம் கடித்துக் கொடுத்த மீதிப் பழத்தை தன் உதடுகளால் கவ்விப் பிடித்த போதுதான் தேவாவை முதன்முதலில் அவன் கண்டான். அதன் பிறகு நடந்த பெரும்பாலான எல்லா பகிடிவதைகளையும் அவர்களிருவரும் சேர்ந்து நின்றே அனுபவித்தனர். அடுத்த வருடம் ஜூனியர்களுக்கு அவற்றை சேர்ந்து நின்றே வழங்கினர். நட்பைத் தொடர்வதைச் சாத்தியமாக்குவதாக, அவர்கள் கற்ற பொருளியல் கற்கைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத வகையில் உயர் அலுவலகமொன்றில் அவர்களுக்கு வேலையும் கிடைத்தது.

தேவாவின் இரண்டாவது திருமண வரவேற்பின் போதுதான், அவன் மீது முதன் முறையாக பொறாமை கொண்டான் சலீம். ஷீலா அவ்வளவு அழகாக இருந்தாள். வானிலிருந்து இறங்கி வந்த தேவதைகளின் ராணி என்று, தனது பழைய கவிதையொன்றை அவனது உதடுகள் முணுமுணுத்தன. சிரத்தையெடுத்து ஒப்பனை செய்யப்பட்ட சினிமா நடிகைகள் அவளது கால் து}சுக்கு ஈடாக மாட்டார்கள் என நினைத்தான். தள்ளி நின்று அவளை அள்ளி அள்ளிப் பருகிக் களைத்துப் போனான். தேவாவுடன் காரில் ஏறி புன்னகை வீசி அவள் அவனை விட்டும் பிரிந்து போனாள்.

அன்றிரவு அவனுக்குத் தூக்கம் தவறிற்று. பக்கவாட்டில் திரும்பிப் படுத்திருந்த மனைவியின் முகம் பார்த்துக் காறித் துப்ப வேண்டும் போலிருந்தது. தேவா இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? உள்ளுக்குள் உஷ்ணம் பரவக் குப்புறக் கிடந்து கால்களைப் பரத்திய போது உணர்வுகள் முட்டின. வேறு வழியில்லாமல் கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று அவனுக்கு. ஷீலாவை நினைத்துக் கொண்டே இயங்கி முடித்த போது, அவள் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையில் தேவாவின் வீட்டிலிருந்தான் சலீம். குளித்துத் தலை கட்டி, வெண் நீல நிறத்தில் சல்வார் உடுத்து கால் மேல் கால் போட்டு தன் முன்னால் அமர்ந்திருக்கும் ஷீலாவை அடங்காத உஷ்ணத்துடன் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். சதைப் பிடிப்பான அவளது தொடைகளின் இடையே அவனது பார்வை குத்தி நின்றது. அவளது ஆடம்பரச் சிரிப்பில் மலரும் தெத்துப் பல்லும் கன்னக்குழியும் அவனைச் சுண்டியிழுத்தன. “ரெண்டு பேரும் ஒரே மாதிரித்தான் பேசுவீங்களா?” என்றாள் அவள், அழகாக இருப்பதாக அவன் கூறிய போது. அவளது குரல், அவளது தோற்றத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாதவாறு துருப்பிடித்த இரும்புத் துண்டுகளை உராய்வது போல் அவனது காதுகளை அறைந்தது. அவனது கண்களை அவள் ஆழமாக ஊடுருவினாள். அவளது பார்வையிலும் தன் மீதான ஈர்ப்பொன்று தெரிவதாக அவனது உள்ளுணர்வுகள் அவனை உற்சாகப்படுத்தின.

சலீமுக்கு கன்னிராசி என்றொரு பட்டப் பெயரும் பல்கலைக்கழகத்தில் இருந்தது. ஷீலா விடயத்தில் அது உறுதியாயிற்று. நண்பனுக்குத் துரோகம் செய்வதாக சலீம் ஒரு போதும் எண்ணியதில்லை. தேவாவுடனான நட்பும் ஷீலாவுடனான உறவும் தனித்தனியான இரு வேறு விவகாரங்கள் என அவன் கருதினான். எனினும், தேவாவுக்குத் தெரியாதவாறு ஷீலாவுடனான உறவைப் பேணிக் கொள்வதிலும் அவன் தோல்வியடைந்து விடவில்லை. தன் காரிலேயே இருவரும் அலுவலகத்திற்குச் செல்வதென்ற அவனது திட்டத்தை, அதன் பின்னணி தெரியாமலேயே ஏற்றுக் கொண்டிருந்த தேவாவின் மீது இன்னும் ஆழமான நட்பு கொண்டான்.

தேவா-ஷீலா விவாகரத்திலும் சலீமின் பங்கு முக்கியமானது. ஒரு வருடத்திற்கு மேல் ஒரே பெண்ணில் ஈர்ப்புப் பெற்றிருப்பது இருவருக்கும் சிரமமாக இருந்தது என்பதை விட, அவ்விருவர் மீதும் ஷீலாவுக்கு ஈடுபாடு குறைந்து போனதே உண்மையான காரணம். இப்போது ஷீலாவை விட அழகான பெண்ணை மணக்குமாறு தேவாவை வற்புறுத்தத் தொடங்கியிருந்தான் சலீம்.

காரை நிறுத்திக் கதவைத் திறந்து விட்டதும் வீட்டு கேட்டைப் பூட்டி விட்டு ஏறி அமர்ந்த தேவாவின் முகத்தில் கலவரம் தெரிந்தது. எக்சிலேட்டரை மிதமாக அழுத்திக் கொண்டே அவனை நோட்டமிட்டான் சலீம். “என்னடா மச்சான்?” என்று புருவங்களை நெறித்தான். பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டே மௌனமாக இருந்த தேவா, “எவ்ரிதிங் இஸ் பேட் ஃபோர் மீ” எனக் கவலையுடன் ஆரம்பித்து, வீட்டு வேலைக்கெனப் புதிதாக வந்து சேர்ந்த வறிய இளம் பெண்ணின் மீதான தனது முயற்சியையும், அவளது எதிர்ப்பையும், அயல்வீட்டாரின் ஆரவாரக் கூச்சலையும் அதனால் அடைந்த அவமானத்தையும் விரிவாகக் கூறி முடித்தான். அந்த சம்பவத்தை விட அந்த ஆரவாரத்தில் வீசியெறியப்பட்ட சில வார்த்தைகள்தான் தன்னை கலவரத்திற்குள்ளாக்கியதாகவும் குறிப்பிட்டான். “பொஞ்சாதி செஞ்ச வேலெய அவ போனதுக்குப் பொறவு புருஷன்காரனும் செய்யப் பார்க்கிறான்” என்பதுதான் அந்த வார்த்தைகள் என்றும் ஒளிவு மறைவின்றி சலீமிடம் கூறினான். இடையிடையே தனது அற்ப சபலத்தையெண்ணிக் கைசேதப்படவும் செய்தான்.

சலீம் எதுவும் பேசவில்லை. தேவா, தன்னுடன் எந்த இரகசியமும் பேணாதவன் என்பது சலீமுக்குத் தெரியும். ரேவதியினதும் ஷீலாவினதும் பாலுறுப்புகளின் பண்புகள் பற்றியும் கூட சலீமிடம் அவன் மனந்திறந்திருக்கிறான். ஷீலா தொடர்பான தனது மிகையற்ற வர்ணனைகள்தான் அவள் மீதான சலீமின் இயல்பான ஈர்ப்பை வெறியாக மாற்றின என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத அப்பாவி அவன். ஷீலாவை வசீகரித்த அந்தக் கயவன் பற்றித் தெரிந்து கொள்ளாதிருந்து விட்ட தனது அறியாமை குறித்தே அவன் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதை சலீம் உணர்ந்தான். எக்சிலேட்டரை மேலும் அழுத்திக் கொண்டே சிகரட் ஒன்றையெடுத்துப் பற்ற வைத்து அவன் முன் நீட்டினான். “முதல்ல இத அடி, முடிஞ்சி போன விஷயத்தக் கதெக்கிறத்த விடு. இண்டைக்கி ஹாஃப் டே லீவு போட்டுட்டு எங்காவது போய் என்ஜாய் பண்ணுவம். எவ்வளவு குய்க்கா ஏலுமோ அவ்வளவுக்கு குய்க்கா அழகான குட்டியொண்டப் பாத்து மெரேஜ் பண்ணி வைக்க வேண்டியது என்ட பொறுப்பு, சரியா?” என அவனது கவனத்தை வேறுபக்கம் திருப்பவும் முயன்றான்.

அலுத்துக் கொண்டே சிகரட்டை வாங்கிய தேவா, திடீரெனக் கண்களை அகல விரித்து, “ஓ... பிரேக்கப் போர்ரா சலீம்” எனச் சத்தமிட்டுக் கத்தினான். சலீம் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டன. பழைய சைக்கிளில் வழிய வழிய விறகுக் கட்டைகளைக் கட்டிக் கொண்டு மஞ்சள் கோட்டின் வழியாக வீதியைக் குறுக்கறுத்த தொழிலாளியொருவன், காரின் டயர்களுக்குள் சிக்கி விறகுக் கட்டைகளுடன் நசிபட்டு நடுத்தெருவில் உடல் துடித்துக் கொண்டிருந்தான். பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே அதிர்ச்சியுடன் கண்ணாடிகள் சிதறிப் போயிருந்த காரை நிறுத்த முயன்றான் சலீம். மறுபடியும் தேவா கத்தினான். “சலீம், என்ன செய்றே? இப்ப காரை ஸ்டொப் பண்ணினா அவ்ளோதான். ரோட்ல நிக்கிறவன் அடிச்சி நொறுக்கிப் போட்டுருவான். எடு எடு குய்க்கா காரெ எடு”.

ஜனநடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்த அந்தத் தெருவின் மத்தியில், கசிந்து பரவிய தன் சிவப்பு இரத்தத்தில் தலை வைத்துச் சோர்ந்து, தன்னைத் துவம்சம் செய்து விட்டுச் செல்லும் அந்த ஆடம்பரக் காரை வெறித்துப் பார்த்தவாறே உடல் குளிர்ந்து போய்க் கொண்டிருந்தான் அந்த கறுப்புத் தொழிலாளி.

--------------------

ஜெகனின் முப்பத்தைந்தாவது பிறந்த தின வைபவம் அடக்கமாகவும் எளிமையாகவும் இருப்பதாகப் பலரும் கூறிச் சென்ற போது, அதை பாராட்டா கிண்டலா எனக் கிரகித்துக் கொள்ள முடியாமல் அவன் தடுமாறிப் போனான். வழமைக்கு முரணாக வித்தியாசமாக முயற்சிக்கலாம் என வைபவத்தை தனது வீட்டில் ஒழுங்கு செய்தது தவறான தீர்மானமாகி விட்டதோ என அவனது உள்ளம் தவிக்கத் தொடங்கியிருந்தது. அந்தத் தவிப்பு சற்றைக்கெல்லாம் எரிச்சலாகவும் கோபமாகவும் பரிணாமம் பெற்றுக் கொண்டிருப்பதை தொலைவில் நின்றே மேரி கவனித்து விட்டாள்.

விசாலமான அந்த வீட்டுக்குப் பெயின்ற் பூசுவதற்கும், வைபவச் சோடனைகளுக்கும் மது போத்தல்களுக்குமென மிகப் பெருந்தொகைப் பணத்தை மேரி தனது சேமிப்பிலிருந்து அவனுக்கு வழங்கியிருந்தாள். பிறந்த தின வைபவத்தை வீட்டில் ஒழுங்கு செய்ய ஜெகன் கூறிய போதே, ஹோட்டல்களை விட இரு மடங்கு செலவாகும் என்பதை மேரி கணித்திருந்த போதிலும், அவனுடன் விவாதித்து முரண்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பேசாமலிருந்து விட்டாள். தவிரவும் தனது தீர்மானத்தை பிறரது எத்தகைய ஆலோசனைகளுக்காகவும் ஜெகன் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரிந்ததுதான்.

வேலைக்காரச் சிறுவனுக்கும் சமையல்காரிக்கும் போனஸ், அநாதை இல்லத்திற்கு நன்கொடை, ஏழைக் குடும்பங்களுக்கு பகற்போசனம் போன்ற மேரியின் ஆலோசனைகள் எல்லாவற்றையும் நிராகரித்த அவன், எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி ஐநு}று பேருக்கு டின்னர் எனும் தனது தீர்மானத்தை தனது பிறந்த தின வைபவமாக அறிவித்தான். மேரிக்கு அது பிடிக்கவில்லை என்பதை அவன் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ஜோன், தனது வயதையும் மீறி எல்லா வேலைகளையும் பம்பரமாகச் சுழன்று செய்து கொண்டிருந்தான். பதினைந்தே வயதான அவன் மீது அவ்வளவு வேலைகளையும் சுமத்துவது மேரியைக் கடுமையாக வதைத்தது. அநாதை, வீட்டு வேலைக்காரன் என்பதற்காக இப்படி வேலை வாங்குவது சரியில்லை என்று மேரி ஆரம்பிக்கும் போதெல்லாம், முரட்டுப் பார்வையொன்றால் அப்பேச்சை நிறுத்தி விட்டுச் சென்று விடுவான் ஜெகன். சம்பளமாக மூன்று வேளைச் சாப்பாடும் சிற்றுண்டியும் பெறும் ஒருவன் சிறுவனாக இருந்தாலும் முழு வேலையையும் செய்துதான் ஆக வேண்டும் என்பது அவனது நியாயம். ஜோன் வீட்டுக்கு வந்த இரண்டே மாதங்களில் ஜெகனின் எரிச்சல்களைக் கொட்டித் தீர்ப்பதற்கான மைதானமாக மாறி விட்டான். அதிகாலையில் ஜோன் பொலிஷ் பண்ணி வைக்கும் அதே ஷ_ மாலையில் அவனது முதுகிலும் முகத்திலும் மிதிப்பது நாளாந்த நடவடிக்கையாக மாறிவிட்டிருந்தது. விபத்தொன்றில் அகாலமாகிப் போன தனது பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகளும், மனைவி என்ற அடையாளமுந்தான் ஜோனின் நிலையிலிருந்து தன்னை வேறுபடுத்தித் தள்ளி வைத்துள்ளது என்பதையும் மேரி நன்கறிவாள்.

வைபவ ஏற்பாடுகளில் ஜெகனுக்குத் திருப்தியிருக்கவில்லை. தான் கூறிய எதையும் ஜோன் சரியாகச் செய்யவில்லை என்பது அவனுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்களும் சமூகப் பிரபலங்களும் செல்வந்தர்களும் மட்டும் அழைக்கப்பட்டுள்ள இவ்வைபவத்தை அவர்களெல்லோரும் வியக்கும் வகையில் ஆடம்பரமாகச் செய்து முடித்து விட வேண்டுமே என்ற தனது பதட்டத்தில் சிறுதுளியேனும் ஜோனிடம் இல்லையென்பது அவனுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்திற்று. வீட்டில் வேலைக்கு ஆளிருக்கும் போது வெளியிலிருந்து வேறு வேலைக்காரர்களைக் கொண்டு வருவது அநாவசியமானது என்று அவன் எண்ணினான். மேரியும் போதிய ஒத்துழைப்புத் தராமலிருப்பதற்கு, அவளது நிதி அனுசரணை பற்றிய கர்வமே காரணமாக இருக்கும் என்றும் நினைத்துப் பார்த்தான். சாப்பிட்டிலும் ருசி தெரியவில்லை. எல்லார் மீதுமிருந்த எரிச்சலையும் கோபத்தையும் ஜோன் மீதே கொட்டிக் கொட்டி அவனிடமிருந்து பலாத்காரமாக தனக்குத் திருப்தியான வேலைகளைப் பெற்றதில் நள்ளிரவுக்கு முன்னரே சோர்வுற்று அயர்ந்து தூங்கி விட்டான் ஜெகன்.

காலை பத்து மணிக்குக் கண் விழித்து எழுந்து வந்து பார்த்த போது வைபவ ஹோலில் மது போத்தல்களை வரிசையாக அடுக்கிக் கொண்டிருக்கும் ஜோனைக் கண்டான். எப்படியும் இன்று மாலை ஆறு மணிக்கு விருந்தினர் வரத் தொடங்கு முன்னர் வேலைகளையெல்லாம் ஜோன் முடித்து விடுவான் என்ற எளியதொரு நம்பிக்கை அப்போதுதான் அவனுக்கு ஏற்பட்டது. விலையுயர்ந்த அந்த மது போத்தல்களை உடைத்து விடாது சரியாக அவன் அடுக்கி வைத்து விடுவானா என்ற சிறிய சந்தேகமொன்று ஜெகனின் மூளைக்குள் தட்டுப்பட்ட அடுத்த கணமே ஜோனின் கையிலிருந்த போத்தல்களில் ஒன்று மிக இலாவகமாக அவனது ஏந்திய வலது கைக்கும் வயிற்றுக்கும் இடையே நழுவிக் கீழே விழுந்து களீரென உடைந்து சிதறிற்று. ஜெகனுக்கு கோபம் உச்சிக்கேறியது. இரண்டிரண்டு படிகளாகப் பாய்ந்து கீழிறங்கி ஓடி வந்தவன், தனது முழுப் பலத்தையும் வலது காலுக்குச் செலுத்தி, ஜோனின் நெஞ்சின் மையத்தில் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே உதைத்துத் தள்ளினான். கையிலிருந்த எல்லா போத்தல்களும் கீழே விழுந்து உடைந்து சிதற அவற்றின் மத்தியில் பஞ்சுக் குவியலாய் பரந்து விழுந்தான் ஜோன். தனது முற்றிய கோபத்தை வார்த்தைகளாக்கி வாயிலிருந்து உதிர்த்த ஜெகன், உடைந்த கண்ணாடித் துண்டுகளிலொன்று காலில் தைக்கும் வரை, கண்களால் கெஞ்சிக் கதறிய ஜோனை, கோபம் கொப்பளித்த முகத்துடன் மிதித்துத் துவைத்தான். மேரியினதும் சமையல்காரியினதும் அனுதாபத்தினால் கண்ணாடித் துண்டுகளிலான அச்சிறையிலிருந்து ஜோன் மீள முடிந்தது.

மாலையில் முன்கூட்டியே அலுவலகத்திலிருந்து திரும்பி விட்ட ஜெகனின் பார்வை வைபவ ஹோலைத் துழாவியது. அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு விரைவாகவும் நேர்த்தியாகவும் ஹோலை எப்படி ஏற்பாடு செய்ய முடிந்தது இவனால்? தன்னுடைய தலையீடுதான் தாமதத்திற்குக் காரணமாயிருக்குமோ என்ற மனதின் குறுகுறுப்பை அவன் ஏற்கவில்லை. ஏற்பாடுகள் திருப்தியளிப்பதையும் அவனால் நம்ப முடியவில்லை. இனம் புரியாத ஏதோவொரு புளகாங்கிதம் மனமெங்கும் பரவியிருப்பதை உணர்வது அவனுக்குப் புதியதொரு அனுபவமாகவும் தெரிந்தது.

எனினும், வைபவத்திற்கு வருகை தந்து மது போத்தல்களை வெறுமையாக்கிச் செல்லும் பெரும்பாலான செல்வந்தர்களின் வெளிப்படையான வார்த்தைகளை பாராட்டா, கிண்டலா எனக் கண்டறிய முடியாமல் பரிதவித்த போது திடீரென அடியிலிருந்து பற்றிப் படர்ந்து உச்சிக்கு வந்து தகித்த எரிச்சலும் கோபமும் ஆக்ரோஷத்துடன் ஜோனைத் தேடிக் கொண்டிருந்தன.
வைபவம் முடிந்த சற்றைக்கெல்லாம் வாய் பேசாத ஜோன், அடிக்குரலில் அலறி ஓலமிட்டுக் கதறும் ஒலி, ஜெகனின் பூட்டப்பட்ட அறையுள்ளிருந்து கசிந்து வருவதை, பரிதாபம் தோய்ந்த முகத்துடன் ஹோலில் மேரி கேட்டுக் கொண்டு நின்றாள்.

-------------------

அதிபர் அஸ்ரப், பாடசாலையைப் பொறுப்பெடுத்து பத்து வருடங்களாகின்றன. நகரில் புதிதாக எழுந்த தனியார் பாடசாலைகளுடன் போட்டியிடுவதில் அவர் எவ்வித சிரமத்தையும் எதிர்கொண்டதில்லை. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், சிறந்த முகாமைத்துவமுமே இந்த அரசாங்கப் பாடசாலையின் வெற்றிக்குப் பிரதான காரணம் என,  தான் அதிதியாக அழைக்கப்படுகின்ற எல்லா மேடைகளிலும் அவர் கூறி வந்தார். கல்வி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சில பிள்ளைகள், பாடசாலையின் தரத்தைப் பின்தள்ள முனைந்த போதெல்லாம் அச்சவாலைப் பெரும் சிரமத்துடன் அதிபர் வெற்றி கொண்டிருந்தார். இன்னும் நான்கைந்து மாதங்களில் ஓய்வு பெற இருக்கின்ற நிலையில், தன் முன்னால் அமர்ந்திருக்கின்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அவர் கலவரத்துடன் பார்த்தார். பாடசாலை விடும் நேரம் பார்த்து அவர்கள் வந்திருப்பது அவரைச் சங்கடப்படுத்தியது.

“நேற்று எங்களுக்கு ஒரு கம்ப்ளெய்ன்ட் வந்தது. அதெப் பற்றி இன்குவாரி பண்றத்துக்காக வந்திருக்கிறம்” என்றார் அக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்தவர் போலிருந்த பெண்ணதிகாரி. சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அவரது பார்வையில் மிகுந்த அழுத்தம் தெரிந்தது. அவரது இடதும் வலதுமாக மற்றும் இரண்டு அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அவர்களது முகங்களும் இறுகிக் கிடந்தன.

“போன வீக், ஸ்கூலுக்கு லேட்டா வந்த கிரேட் சிக்ஸ் படிக்கிற ரஹீம் என்கிற மாணவன உங்கட ஸ்கூல் டீச்சர் அடிச்சி பனிஷ் பண்ணியிருக்கிறார். மாணவன்ட அப்பா குடுத்த கம்ப்ளெய்ன்டுதான் இப்போ எங்க கையில இருக்கிறது” என அப்பெண்ணதிகாரி தனது வலது கையிலிருந்த கடித உறையொன்றைக் காண்பித்தார்.

“டீச்சர்ர பேரு முகைதீன்” என வலது பக்கமாக அமர்ந்திருந்த அதிகாரி முதற்தடவையாகப் பேசினார். அவரது குரலின் கரடு முரடு அதிபரை மேலும் பயமுறுத்தியது.

முகைதீன் ஆசிரியர் பாடசாலையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு தலைமை வகிப்பவர். மாணவர்களின் வரவு, ஒழுக்க விடயங்களில் மிகுந்த பொறுப்புடன் செயற்படுபவர். தன்னைவிட, முகைதீன் ஆசிரியருக்குத்தான் மாணவர்கள் அதிகம் கட்டுப்படுவர் என்பது அதிபருக்கும் தெரியும். சிற்று}ழியனைக் கூப்பிட்டு, முகைதீன் ஆசிரியரை “அழைத்து வா” என்று கூறுவதைத் தவிர அவருக்கு வேறெதுவும் பேச நாவெழவில்லை.

எல்லோரும் முகைதீன் ஆசிரியருக்காகக் காத்திருந்தனர். இந்தப் பிரச்சினையை முகைதீன் எப்படி சமாளிப்பார், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள், தனக்கும் ஏதாவது கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்றெல்லாம் மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தார் அதிபர்.

“ஸ்டூடன்ஸ அடிக்க வேணாம்டு எவ்ளோ தரம் சொல்றது?” அமைதியாக இருந்த மற்ற அதிகாரி சினத்துடன் அதிபரைக் கடிந்து கொண்டார். “ஹியூமன் ரைட்ஸ கடுமையாப் புறக்கணிக்கிற நிலைமை, ஸ்கூல் டீச்சர்ஸ் மத்தியில இப்போ அதிகரிச்சி வருது...” அவர் தொடர்ந்தும் ஏதோ சொல்லத் தொடங்குமுன் அவரது செல்போன் சத்தமிட்டது. அதிகாரி தனது கையிலிருந்த ஆடம்பரமான செல்போனை எடுத்துக் காதில் பொருத்தினார். “எக்ஸ்கியூஸ் மீ” சொல்லிக் கொண்டு, கதிரையிலிருந்து எழுந்து சற்றுத் தள்ளி நின்று கொண்டு அடக்கமான குரலில் கதைக்கத் தொடங்கினார்.

“என்னடா தேவா?”

“ஸ்கூல் இன்குவாரிக்கு வந்திருக்கேன்”

“கூட, சுமதி மேடமும் ஜெகன் சேரும் இருக்கிறாங்க”

“யெஸ் யெஸ், ஈவ்னிங் போலாம்”

“ஓகே”

அந்த அதிகாரி கதிரையில் வந்து அமரவும் முகைதீன் ஆசிரியர் காரியாலயத்திற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

***

நன்றி :  ஸபீர் ஹாபிஸ் , அம்ருதா , ஹனீபாக்கா

***

இதையும் படித்து மகிழுங்கள் :
ஸபீரின்  சிறுகதைகள் : ஆற்றங்கரைநன்றி கெடல்