Thursday, October 24, 2013

மாஸ்டரின் சிஸ்டர் - ஹமீதுஜாஃபரின் 'ஷோக்கு'

'தி இந்து'வில் வந்த 'சிரித்து வாழ வேண்டும்!' கட்டுரையை சிரிக்காமல் படித்துக்கொண்டிருந்தபோது ஜாஃபர்நானாவின் 'விஷயம்' வெளியில் வந்தது . உலகத்திற்கு உடனே காட்டவேண்டும் என்ற அக்கறையில் பதிவிடுகிறேன். நேத்து பார்த்த 'காமெடி எக்ஸ்பிரஸ்'-ன் விளைவினால் பிறந்ததாம். நாளைக்கு துபாய் ductacக்கு  வரும் ஷிவ்குமார் ஷர்மாவைப் பார்க்க இயலாத கடுப்பில் நான் இருப்பதால் (டிக்கெட் 200 திர்ஹம். எளியோருக்கு கிட்டாத இசை என்ன எழவு இசை?) என்னால் சிரிக்க இயலவில்லை. ஆனால் நீங்கள் சிரிக்கலாம். என் நிலைமைக்காகவே சிரிக்கலாம். தப்பில்லை. முன்னாலேயே சொல்லிவிடுகிறேன். இது சைவ ஜோக். 'நயாகராவுக்கும் வயாகராவுக்கும் என்னங்கய்யா வித்தியாசம்? நயாகரா விழும். ' போன்ற அப்பாவி ஆசிப்மீரான் ஜோக்கல்ல! அப்படியும் சிரிப்பு வரவில்லையென்றால் எனக்குப் பிடித்த இன்னஸண்ட்-ஐ   இங்கே பாருங்கள். உத்தரவாதம். நன்றி. - ஆபிதீன்
**

மாஸ்டரின் சிஸ்டர்

ஹமீதுஜாஃபர்

நேற்று ஏசியா நெட் மிடிலீஸ்ட் சேனலில் 'காமெடி எக்ஸ்பிரஸ்' நிகழ்சி. அதுலெ ஒரு அறுபது வயசு ரிட்டையர்டு கர்னல் தம்பதி வாடகை வீட்டுக்கு குடி வருகிறார்கள். தம்பதி முதலில் குடி வந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு ஒரு மகள். அவள் ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருப்பதால் ஒரு மாதம் கழித்து வருவதாக கர்னல் சொல்கிறார். இதை கேட்டுக்கொண்டிருந்த எதிர் வீட்டு மூன்று வேலையில்லா வாலிபர்களின் கற்பனை குதிரை வேகத்தில் ஓடுகிறது. நாவில் எச்சில் சொட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியாக அப்பெண்ணை கற்பனை செய்துகொண்டு வரும் தேதியை எதிர்பார்க்கிறார்கள். அந்த நாளும் வந்தது, வந்ததோ ஆறு வயசு சிறுமி, பல வருடங்களுக்குப் பின் வேளங்கண்ணிவேண்டுதலினால் பிறந்த குழந்தை. அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் கர்னல். எப்படி இருந்திருக்கும் அந்த மூவருக்கும்?  இதை பார்த்துக்கொண்டிருந்தபோது பழைய சம்பவம் 1965ல் நடந்தது நினைவுக்கு வந்தது.

எப்போதும் போல தஞ்சாவூரிலிருந்து வரும் 9.30 ரயிலில் ஸ்கூலுக்குப் போகும்போது ஒரு நாள் நாகப்பட்டினம் பெரிய ஸ்டேஷனில் (நாகப்பட்டினத்தில் இரண்டு ஸ்டேஷன் இருந்தது. ஒன்னு பெரிய ஸ்டேஷன். இது ஜங்க்ஷன் அளவுக்கு பெரிசா இருந்துச்சு, இங்கே பதினைஞ்சு இருபது நிமிஷம் வரை ட்ரைன் நிற்கும் அதனாலெ பெரிய ஷ்டேஷன்னு எல்லாரும் சொல்லுவாங்க. இன்னொன்னு நாகப்பட்டினம் பீச் ஸ்டேஷன். இது ஹார்பரை ஒட்டி இருந்துச்சு (இப்போது இல்லை) வெள்ளைக்காரன் காலத்துலேந்து சரக்கு கப்பலும் பாஸஞ்சர் கப்பலும் நெறைய வந்துப் போய்கிட்டிருந்துச்சு. எப்படியும் இரண்டு பாஸஞ்சர் கப்பல் நாலு தரம் மலாயா சிங்கப்பூரிலிருந்து வந்து போகும். ரயில்வே லைன் இரண்டு ஃபர்லாங்கு தூரம் வரை சாலையை ஒட்டி இருந்ததினாலெ ரயில் போகும்போது ஒரு காங்கிமேன் (Gangman) பச்சைக் கொடியெ வீசிக்கிட்டு மணி அடிச்சிக்கிட்டே அந்த ரெண்டு பர்லாங் வரை முன்னாலெ போவார், அவர் பின்னாலெதான் ரயிலும் போவும். இது ப்ராட்கேஜாக மாற்றும் வரை இருந்தது.) சரியான கூட்டம். நாகூர் போற பாஸஞ்சரைவிட பசங்க கூட்டம் ஜாஸ்தியா இருந்துச்சு. எல்லோரும் CSI ஸ்கூல் 11th std பசங்க.

நாங்க ஒரு பத்து பதினஞ்சு பேர் அந்த ட்ரைன்லெதான் தினம் ஸ்கூலுக்கு போவதும் சாயந்திரம் 4.30 ட்ரைன்லெ திரும்புவதும் வழக்கம். என்னைக்குமில்லாமெ அன்னைக்கு நம்ம பசங்க கூட்டமா அலைமோதுவதைப் பார்த்தப்ப எங்களுக்கே ஒரு ஆச்சர்யம். ட்ரைனை விட்டு எறங்கியதுமே எங்களைப் பார்த்துட்டு எங்கேடா First Class இருக்குன்னு கேட்டானுங்க. அதோ அங்கெ செண்டர்லெ இருக்கும்னு சொல்லிட்டு என்ன விஷயம்னு கேட்டப்ப, "வா., வா., வா.... மாஸ்டர்ட சிஸ்டர் வருது ரிஸீவ் பண்ணனும்" அப்டீன்னாங்க. அப்பதான் எங்களுக்கே தெரிஞ்சுச்சு.

விஷயம் என்னான்னா....

மாஸ்டர்னு ஒரு அம்பது வயசு கல்யாணம் ஆகாத வாலிபர் எங்களுக்கு சோசியல் ஸ்டடீஸ் பாடம் நடத்துற வாத்தியார். பேரு ஜோசஃப் டானியல், டபுள் எம் ஏ,. பார்க்க லேசா கருப்பா சித்தானைக்குட்டி மாதிரி இருப்பார். ஏற்கனவே இருந்த தியேடர் சார் மெண்டல் ஆயிட்டதுனாலெ புதுசா ஜாயின் பண்ணியிருந்தார். அவரை "சார்"னு கூப்பிட்டா புடிக்காது. "மாஸ்டர்" னுதான் கூப்பிடனும். அவர் பாடம் நடத்துனார்னா ஃபஸ்ட் ரோவிலெ பசங்க யாரும் உட்கார மாட்டாங்க. ஏன்னு கேட்டாரு "சாரல் அடிக்கிது மாஸ்டர்"னு பதில் சொன்னோம். விஷயம் ஒன்னுமில்லே அவர் பேச ஆரம்பிச்சா எச்சில் தெரிக்கும். அதைதான் நாசூக்கா சாரல்னு சொன்னோம்.

"நாளைக்கு ஹாஃப் டே ஸ்கூலுக்கு வரமாட்டேன், அரட்டையடிக்காமெ ஒளுங்கா படிங்க, காலையிலெ ஒம்பதரை ட்ரைன்லெ என் சிஸ்டர் வாராங்க" அப்டீன்னு மொத நாள் சொல்லிருந்தார். அதன் விளைவு பசங்க எல்லாம் இங்கே கூடி இருந்தாங்க. பத்து மணிக்குத்தானே ஸ்கூல், அதுவும் அஞ்சு நிமிஷ வாக்கிங் டிஸ்டன்ஸ்.

பசங்க எல்லோருக்கும் ஒரே கற்பனை, சிஸ்டர்னு சொன்னதும், ஒரு இருபது இருபத்தஞ்சு வயசு இருக்கும்; கிளி மாதிரி இருக்கும்; கொக்கு, குயில் மாதிரி இருக்கும், அப்படி இருக்கும், இப்படி இருக்கும்; சாரு கருப்பா இருந்தாலும் அது நல்ல நெறமா வகையா இருக்கும், செவப்பா இருக்கும் வெள்ளையா மஞ்சளா அப்படி இப்படீன்ற மயக்கத்திலேயே ஃபஸ்ட்கிளாஸ் காரேஜை நோக்கி ஓடினோம்.

"மாஸ்டர், லக்கேஜை தூக்க போர்டரை கூப்பிடாதிங்க நாங்க தூக்குறோம், ஸ்கூலுக்கு லேட்டானுலும் பரவாயில்லை, மொத பிரீடு உங்கப் பிரீடுதானேன்னு முண்டியடிச்சிக்கிட்டுப் கம்பார்ட்மெண்ட் உள்ளேபோய் லக்கேஜை எடுத்து தலையிலெ சுமந்துக்கிட்டு வந்தான் சுரேஷும் சுல்தானும். பாக்கி பசங்க வாயில் எச்சி ஒழுவுறதுகூட தெரியாம வாசலையே பார்த்துக்கிட்டிருந்தப்பொ...

ஒரு அம்பத்தஞ்சு அறுபது வயசு மதிக்கத்தக்க ஒரு அம்மா மெதுவா எறங்கிச்சு, அவங்களுக்குப் பின்னால் யாருமில்லை.

"மை பாய்ஸ்,  திஸ் ஈஸ் மை சிஸ்டர், மேடம் ரோஸிலின்" அப்டீன்னு அறிமுகப்படுத்தினார்.

அவ்வளவுதான் ஒரு பயலையும் காணோம். எப்படி எஸ்கேப் ஆனானுங்கன்னு தெரியலெ, ஆய் ஊய்னு பெரிசா ரீல் விட்ட  ஹமீதொலி எங்கே போனான்னு தெரியலெ. மறு நாள் கிளாஸ்லெ "ஆல் ஆஃப் மை பாய்ஸ், தேங்க் யு வெரி மச் டு ரிஸீவ் மை சிஸ்டர் அட் ரயில்வே ஸ்டேஷன்" அப்டீன்னு சொல்லிட்டு எங்க எல்லோருக்கும் (திருநெல்வேலி) அல்வா ஒவ்வொரு துண்டு கொடுத்தார்.

****

நன்றி : அன்றும் ஏமாந்த ஹமீதுஜாஃபர்நானாவுக்கு!

Sunday, October 20, 2013

துப்பாக்கி பற்றிய கவிதைகள் - எம். ஏ. நுஃமான்




துப்பாக்கி பற்றிய கவிதைகள்

எம். ஏ. நுஃமான்

***
துப்பாக்கிக்கு மூளை இல்லை

துப்பாக்கிக்கு மூளை இல்லை
இதயமும் இல்லை
விரல் அதன் விசை அழுத்த வெடிக்கும்
உயிர் குடிக்கும்
கருவில் இருக்கும் குழந்தையின் எனினும்

விரலே என் விரலே
மூளையும் இதயமும் உள்ள என் விரலே
ஒரு கணம் யோசி
மீண்டும் ஒருகணம்
குறிசரியா என திரும்பவும் யோசி

இன்னும் நூறு ஆண்டுகள் போயினும்
உன்குறி சரி என
மக்கள் கூறும் திசையினில் மட்டுமே
விசையினை அழுத்து

அன்றேல்
‘நீயும் ஓர் கொலைகாரன்’ என
வரலாறு என் நெற்றியில் எழுதும்

1988

***

உனது போர்

தோழனே
யாருடன் பொருதினாய் நீ
யாரிடம் தோற்றாய் இறுதியில்

உன் துப்பாக்கி
உன் கண் ஒன்றைக் குறிபார்த்துச் சுட்டது
நீ அரைக் குருடானாய்

உன் துப்பாக்கி
உன் காது ஒன்றைக் குறிபார்த்துச் சுட்டது
நீ அரைச் செவிடானாய்

உன் கை ஒன்றையும் துளைத்துச் சென்றது
உன் துப்பாக்கிக் குண்டு
நீ ஒரு சொத்தியன் ஆனாய்

உன் கால் ஒன்றும் பலியாயிற்று
உன் துப்பாக்கிக் குண்டுக்கு
நீ முடவனும் ஆனாய்

தோழனே
நீ உன்னுடனே பொருதினாய்
உன்னிடமே தோல்வியுற்றாய்
உனது உடலும் ஊனமுற்றது
உனது போரும் தோல்வியுற்றது.

1995

***

பதிலீடு

இரண்டு துப்பாக்கிகள்
மாடிப்படி ஏறி
என் வாயிலைத் தட்டின

சன்னல் இடுக்கால் எட்டிப் பார்த்தேன்
இரண்டு துப்பாக்கிகள்
மரணப் பசியுடன்
வாயிலைத் தட்டின

உயிராசை துரத்த
ஓடினேன் பின்கதவால்
உயிர் என் கைப்பிடியில்

மனைவி தாழ்திறக்க
தள்ளித் திறந்தன துப்பாக்கிகள்
‘அப்பா இல்லை’ என்றான் மகன்
‘நீ இருக்கிறாய்தானே வாடா வெளியே’
துப்பாக்கிகள் அவனைக் கவ்விச் சென்றன

என் இளம்தளிர்
என் விந்தில் விளைந்த குருத்து
இளங்காலையில்
தெருவோரம்
இரத்தம் உறைந்த தரையில் கிடந்தது
கருகி

1988

***

பிணமலைப் பிரசங்கம்

பின்னர்
அவர் பிணமலையை நோக்கிச் சென்றார்
பிணங்கள் விழுந்து கிடந்த தெருக்களில்
இடறி விழுந்தவாறு
அகதிகள் அவரைத் தொடர்ந்தனர்

புதைப்பதற்கு இடமின்றியும்
எரிப்பதற்கு விறகு இன்றியும்
குவிந்து கிடந்த பிணமலையில்
அவர் ஏறினார்

அகதிகளைப் பார்த்து
அவர் பின்னர் பேசினார்

பொறுமை இழந்தவர்கள் என்னுடன் வாருங்கள்
அடிபணிய மறுத்தவர்கள் என்னுடன் வாருங்கள்
துப்பாக்கியின் எதிரிகள் என்னுடன் வாருங்கள்
வாழ்க்கையின் ரசத்தை உங்களுக்குப் பருகத் தருகிறேன்
பூலோக சுவர்க்கத்தை உங்களுக்குக் காட்டுகிறேன்

உங்கள் கழுத்தில் மிதித்துக்கொண்டு
உங்கள் விடுதலைக்காகப் போரிடுவோரை
நம்பாதீர்கள்

பிறரின் உரிமையைப் பறித்தவனுக்கு ஏது உரிமை
பிறரின் சுதந்திரத்தை மதியாதவனுக்கு ஏது சுதந்திரம்
பிறரின் சமத்தவத்தை மறுத்தவனுக்கு ஏது சமத்துவம்

துப்பாக்கிக் குழாயிலிருந்துதான்
அரசியல் அதிகாரம் பிறக்கிறது
என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
அதே குழாயிலிருந்துதான்
அடிமைத்தனமும் பிறக்கிறது
வன்முறைதான் விடுதலையின் மருத்துவச்சி
என்று சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்
நான் உங்களுக்குச் சொல்கிறேன்
விடுதலையின் கருச்சிதைவும் அதுதான்

துப்பாக்கியை நேசிப்போரை நேசியாதேயுங்கள்
துப்பாக்கியின் பாசையைப் பேசாதேயுங்கள்

அவர் பிரசங்கம் முடியுமுன்
அவரது பிடரியைக் குறிபார்த்து நின்ற
துப்பாக்கி வெடித்தது
பிணமலை இன்னும் ஓர் அடி உயர்ந்தது

1991

***

வெண்புறாவின் வருகைக்காகக்
காத்திருந்தபோது

வெண்புறாவின் வருகையை
எதிர்பார்த்துக் காத்திருந்தேன்
என் வாசல் முற்றத்தில்

பருந்துதான் வந்தது முதலில்
என் கோழிக் குஞ்சுகளைத் தூக்கிச் சென்றது

பின்னர்
வல்லூறு வந்து குந்தியது
என் முற்றத்துத் தென்னையில்

அது எறிகணை பீய்ச்சியதில்
என் வீடும் வாயிலும்
பிய்ந்து சிதறின
என் உயிர் அழிந்தது
நான் மீண்டும் அகதியானேன்

-1997

**

பயங்கரக் கனவு

பயங்கரக் கனவுகண்டு
அலறி விழித்தேன்
நாக்கு உலர்ந்து
அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
பின்னிரவுக் குளிரிலும்
வியர்த்துக் கொட்டியது
பயங்கரக் கனவுதான்

இரண்டு அரக்கர்கள்
இருவரின் தலைகளும் வானத்துக்கப்பால்
இருவரின் கால்களும் பாதாளத்துக்குக் கீழ்
குரூரம் முகத்தில் தெறிக்க
என் இளம் காதலியை
இழுத்துக்கொண்டிருந்தனர்

இவள் எனக்கு என்றான் ஒருவன்
இல்லை எனக்கு என்றான் மற்றவன்
அவள் விழிகள் பிதுங்கி
கண்ணீர் சிந்தின
கைகள் பிய்ந்துவிடும்போல்
குருதி சிந்திற்று

இல்லை அவளை விடுங்கள்
விட்டுவிடுங்கள்
அவள் எனக்குரியவள் என்று கத்தினேன்

கண் விழித்தாலும்
நாக்கு உலர்ந்து அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது
இன்னும் இதயம் பதறியது
இரவுக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது
கனவுதான்
பயங்கரக் கனவு

24.7.97

***


அவர்களும் நீயும்

ஜீப்வண்டியில் வந்தனர்
உன் வீட்டுக் கதவைத் தட்டினர்
விசாரணைக்காக
உன்னை இழுத்துச் சென்றனர்

உன் தாய் அழுதாள்
கதறினாள்
மன்றாடினாள்

அவர்களின் முகாமுக்குச் சென்று
விசாரித்தபோது
இல்லை
நாங்கள் கூட்டிவரவில்லை
என்று மறுத்தார்கள்

உன் தசை பிய்ந்து
எலும்புகள் நொறுங்கி
உன் இரத்தம் மண்ணில் கலந்தது

இப்போது உன்முறை

நீ காட்டுக்குள் இருந்து
கால்நடையாக வந்தாய்
என் வீட்டுக் கதவைத் தட்டி
விசாரணைக்காக என்னை இழுத்துச் சென்றாய்

என்தாய் அழுதாள்
கதறினாள்
மன்றாடினாள்

உன் முகாமுக்கு வந்து
விசாரித்தபோது
இல்லை
நாங்கள் கூட்டிவரவில்லை
என்று மறுத்தாய்

என் தசை பிய்ந்து
எலும்புகள் நொறுங்கி
என் இரத்தமும் மண்ணில் கலந்தது.

-1997

***

மரித்தோரின் ஆன்மா

சிங்கமும் புலியும்
கடித்துக் குதறிய
மனிதத் தசையும்
குருதியும்
எலும்புக் குவியலும்
சிதறிக் கிடக்கின்றன நிலமெங்கும்

தப்பிச் சென்றோரின் உடல் ஊனமுற்றது
இதயம் கிழிந்துபோயிற்று
உணர்வு மரத்துவிட்டது

நீ கேட்கிறாய்
யார் போர்க் குற்றவாளி என்று

கடவுளே
இந்த விலங்குகளிடமிருந்து
எங்களை ஏன் உன்னால்
காப்பாற்ற முடியவில்லை
என்று புலம்புகிகிறது
மரித்தோரின் ஆன்மா

2009

***

நீ தூக்கிய துப்பாக்கி

நீ துப்பாக்கியைத் தூக்கிய பிறகு
மரணத்துடன் விளையாடத் தொடங்குகிறாய்
நீ யுத்தத்தில் இறங்கிய பிறகு
படுகொலையின் நெடுஞ்சாலையில்
நடக்கத் தொடங்குகிறாய்

நீ உன் எதிரியைக் கொல்ல முனைகையில்
எதிரி உன்னைக் கொல்ல முனைகிறான்
நீ உன் எதிரியின் குடிகளை அழிக்கும்போது
எதிரி உன் குடிகளை அழிக்கிறான்

நீ அவன் கொலைகளைக் கண்டிக்கும்போது
அவன் உன் கொலைகளைக் கண்டிக்கிறான்
உன் நண்பர்கள் உனக்காகக் கொடி பிடிக்கின்றனர்
அவன் நண்பர்கள் அவனுக்காகக் கொடி பிடிக்கின்றனர்

நான் உங்கள் இருவருக்கும் எதிராகக் குரல் உயர்த்துகிறேன்
நான் கூறுவது இதுதான்
நீங்கள் துப்பாக்கியைக் கீNழுவைக்கும் வரை
அது உங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கும்

இனி எப்போது?

இனி
வேறு விசயங்களைப் பற்றி எழுதலாம்
ஆனாலும்
கொலைக் களத்திலிருந்து
மரணத்தின் வாடை இன்னும் வீசுகிறது
குரூரத்தின் நிழல்
என்னைப் பின்தொடர்கிறது
வன்மமும் வெறுப்பும்
என்னை வழிமறித்து நிற்கின்றன
துவேசத்தின் குரல் காற்றில் ஒலிக்கிறது
மேலாதிக்கத்தின் கரங்கள்
என் கழுத்தைச் சுற்றிவளைக்கின்றன

ஜன்னல்களையும் கதவுகளையும்
இறுகச் சாத்தித்
தனி அறைக்குள் இருந்தாலும்
சுவாசிக்கும் காற்றில்
கசப்புக் கரைந்திருக்கிறது

இனி எப்படி வேறு விசயங்களைப்பற்றி எழுதுவது?
அன்பையும் காதலையும் பற்றி
இனி எப்போது எழுதுவது?


சிறுவனின் தோளில் துப்பாக்கி

சிறுவனின் தோளில்
அமர்ந்திருந்தது துப்பாக்கி
அதைக் கண்ட நான்
ஒதுங்கிச் சொன்றேன்

நில், என்றது துப்பாக்கி
யார் நீ, பெயர் என்ன
எங்கிருந்து வருகிறாய்
எங்கு போகிறாய்
காட்டு உன் அடையாள அட்டையை
திற உன் பையை
சரி நீ போ என்றது துப்பாக்கி

சிறுவனின் தோளில்
மீண்டும் அமர்ந்தது துப்பாக்கி
அதன் முகத்தில் விறைப்பு
சிரிப்பே இல்லை


துப்பாக்கி பற்றிய கனவு

துப்பாக்கியைக் கனவுகண்ட
காலம் ஒன்றிருந்தது
அது புரட்சியைக் கொண்டுவரும்
விடுதலைக் கம்பளத்தை
என் வாசல் முற்றத்தில் விரிக்கும்

துப்பாக்கிதான் எத்தனை அழகு
என் காதலியின் தொடைபோல்
அதன் வளவளப்பு
விறைத்த குறிபோல்
அதன் கிளர்ச்சி

துப்பாக்கியைக் கைகளில் ஏந்தி
முகர்ந்து முத்தமிட்டேன்
அது வெடித்தபோது
அந்தோ
என் மூக்கும் முகமும்
பிய்ந்து சிதறின

என் கனவு கலைந்தது


இனி புதிதாக

எல்லாவற்றையும் மறந்துவிட்டு
இனி நாம் புதிதாக வாழத் தொடங்கலாம்

கழுவிவிடு என் இரத்தக்கறைகளை
கழுவுகிறேன் நான் உனதை

உன் பாவங்களுக்காக
நான் பிரார்த்தனை செய்கிறேன்
என் பாவங்களுக்காக
நீ பிரார்த்தனை செய்

இன்று நாம்
சபதம் செய்துகொள்வோம்
நீ என் எல்லைகளையும்
நான் உன் எல்லைகளையும்
தாண்டுவதில்லை என

எல்லாவற்றையும் மறந்துவிட்டு
இனி நாம் புதிதாக வாழத் தொடங்கலாம்

வா
என் கட்டில் உனக்காகக் காத்திருக்கிறது
உன் கட்டிலில்
எனக்காக ஒரு தலையணை
போட்டுவை

21. 12. 2010

***

நன்றி : எம். ஏ. நுஃமான் , எஸ்.எல்.எம். ஹனீபா

Friday, October 18, 2013

"Shine Your Way"

from the film THE CROODS . Lyrics by Alan Silvestri, Glen Ballard, Kird DeMicco, Chris Sanders. Perfomred by Owl City and Yuna.Thanks to : DreamworksAnimation
***

***
Just before the dawn,
When the light's still gone,
Shine, shine your way,
And you may not know, where to go,
Shine, shine your way

Open road but it's still dark,
Build a fire from a spark,
And shine, shine your way,
Feed the feeling in your heart,
Don't conceal it then you'll start,
To find, find your way

No one can stop, what has begun,
You must believe when I say

All of your tears will dry faster in the sun,
Starting today,
Shine, shine, shine,
Shine your way

There's an open sky,
And a reason why,
You shine, shine your way,
There's so much to learn,
And now it's your turn,
To shine, shine your way

There's a feeling deep inside,
You can let it be your guide,
To find, find your way,
And there's no time for us to waste,
Got to take a leap of faith,
And fly, fly away

Don't have to walk,
Now you can run,
Nothing can get in your way

All of your tears will dry faster in the sun,
Starting today,
Shine, shine, shine,
Shine your way

Morning is breaking,
Darkness is fading,
We found a way to the light,
It's such a beautiful sight

Any time, anywhere,
Turn around and I'll be there,
To shine, shine your way

Like a star burning bright,
Lighting up the darkest night,
I'll shine, shine your way

Now I can see,
You are the one,
Sent here to show me the way

All of our tears will dry faster in the sun,
Starting today,
Shine, shine, shine,
We're on our way,
Shine, shine, shine,
That's what we say,
Shine, shine, shine,
Shine your way

There's a reason why
You shine, shine your way

All of our tears will dry faster in the sun
Shine your way

**
Thanks : http://www.metrolyrics.com/

Wednesday, October 16, 2013

நரைத்த 'முடி’ சூடிய நாகூர் ரூமி!

நண்பரின் புதிய கோலம் நன்றாகவே இருக்கிறது. ஃபேஸ்புக்கில் ஆளாளுக்கு அவர் தாடியை வாழ்த்த , மனுசன் குஷியாகி ‘ஆஹா, ஒரு தாடிக்கு இவ்வளவு மகத்துவமா? இன்ஷா அல்லாஹ் இது வளரட்டும்!’ என்று சொல்லியிருக்கிறார். கொஞ்சம் ‘லைட்டர் வெய்ன்’இல் தாடிபற்றி சின்ன 'கவிதை'யும் எழுதியிருக்கிறார். அது தாடிக்கு கீழே இருக்கிறது! அவசியம் பார்க்கவும். தம்பி ஜாஃபர் சாதிக் Nana, You have decided to assume look of real intellectual? என்ற கேள்வியை வீச, Thambi, there are many bearded fools too in this world, Hope I am not one of them!என்று ரூமி பதில் சொல்லியிருப்பதையும் ரசித்தேன். - ஆபிதீன் 
***

***
ரொம்ப காலமாக நாடி
வைத்துவிட்டேன் தாடி!
தலைக்கு மேலே கறுப்பு, கீழே வெள்ளை
’டை’ அடிக்கும் தொல்லையே இனி இல்லை!
என் முகம் இப்போது கொஞ்சம் தடித்திருக்கிறது
என் முகநூல் நண்பர்களுக்கு இது பிடித்திருக்கிறது!
அறிவுஜீவியாட்டம் இருக்கிறதென்றார் என் தம்பி
என் அறிவு இல்லை எப்போதும் முடியை நம்பி!
கன்னத்தில் முடி வளர்ந்தால் தாடி
எண்ணத்தில் அது வளர்ந்தால், அம்மாடி!
என் தம்பிகளுக்கு நான் அண்ணன்
எனினும் இனி நான் ’முடி’சூடிய மன்னன்!
***


மௌஸம் ஆகயா! - நுஸ்ரத்

இசையுடன் ஈத் முபாரக்!
Thanks to : Balraj Jittla
***

***
Mast Aankhun Ki Kasam Khane Ka Musam Aa Gaya
Jam Ko Shishay Sey Takran Ne Ka Musam Aa Gaya

Asmat-e-tauba Ko Thukraney Ka Musam Aa Gaya
Aa Gaya Pi Kar Baihak Janey Ka Musam Aa Gaya

Aaj Tauba Ko Ghataun Kay Hawaley Kardo
Aa Gaya Pi Kar Baihak Janey Ka Musam Aa Gaya

Tauba To Kar Chukka Tha Magar Phir Bhi Ae Jaleel Kali Ghata Ko Daikh Kay Niyat Badal Gaee
Aa Gaya Pi Kar Baihak Janey Ka Musam Aa Gaya

Lutf-e-mai Tujhse Kya Kahun Zahid Haye Kambakht Tune Pihi Nahin
Aa Gaya Pi Kar Baihak Janey Ka Musam Aa Gaya

Aye Weza Tu Sharab Pi Lay Na Kar Tu Kuch Ijtanab Pi Lay
Mein Teri Manun Namaz Parh Lun Tu Meri Maan Ab Sharab Pi Lay
Aa Gaya Pi Kar Baihak Janey Ka Musam Aa Gaya

Cham Cham Kar Ke Sawan Aya Mein Ke Dar Se Bhagi Tauba
Aa Gaya Pi Kar Baihak Janey Ka Musam Aa Gaya

Phir Ghata Chae Baihak Jane Ka Musam Aa Gaya
Jam Ka Shishe Ka Paimane Ka Musam Aa Gaya

Yeh Fiza Yeh Chandni Ratain, Yeh Daur-e-jam-o-mai
Mastiun Mein Gark Hu Janey Ka Musam Aa Gaya

Hu Rahin Hain Jama Ek Markaz Pe Dil Ki Wehshatein
Hamnashin Shayed Bahar Ane Ka Musam Aa Gaya

Muskarata Hai Koi Chup Chup Ke Dil Ki Aar Mein
Hasratun Kay Raks Farmaney Ka Musam Aa Gaya

Rafta Rafta Wakiat-e-dard Yaad Ane Lage
Chupke Chupke Ashk Barsane Ka Musam Aa Gaya

Mast Aankhun Ki Kasam Khane Ka Musam Aa Gaya...

Monday, October 14, 2013

வெற்றி என்பது... - கே. பி. கேசவ மேனனின் 'கடந்த காலம்'

நம்மில் பலரும் பொரித்துத் தின்றுவிட்ட மனச்சாட்சி பற்றி  - ‘மாத்ருபூமி’ நாளிதழை ஸ்தாபித்த மாமனிதர் கே. பி. கேசவ மேனன் சொல்லும் அட்வைஸை பகிர்கிறேன். அதை வாசிப்பதற்கு முன்பு , ரிலாக்ஸூக்கு ஒரு ஜோக், இதுவும் அவருடைய சுயசரிதையில் (‘கழிஞ்ச காலம்’ . தமிழாக்கம் : ராஜம் கிருஷ்ணன்) உள்ளதுதான்.

'பிராக்டிஸ்’ தொடங்கிச் சில நாட்கள் சென்ற பின்னரும் வழக்கு ஏதும் வராமல் சோர்ந்திருந்த ஒரு பாரிஸ்டரின் கதை அது (இந்தக் கதையைச் சொல்வது இன்னொரு பாரிஸ்டர்!). அவர் நாள்தோறும் அலுவலகம் செல்வார். சிறிது நேரம் சென்ற பின்னர், நேரம் தவறாமல் நீதிமன்றத்துக்கும் செல்வார். . எவரேனும் கட்சிக்காரர் வந்தால் உடனே எழுத்தன் (வக்கீல் குமாஸ்தா) நீதிமன்றத்துக்குச் சென்று அவருக்கு அறிவிக்க வேண்டுமென்பது கட்டளை. ஒருநாள் அந்தப் பாரிஸ்டர் நீதிமன்றத்திலிருக்கையில் எழுத்தன் மூச்சுமுட்ட ஓடிவந்து ஒரு கட்சிக்காரன் வந்திருப்பதாக அறிவித்தான். 'அப்படியா? சீக்கிரமாகப் போய் அவனை ஆபீஸில் இருக்கச்சொல்; நான் இதோ வருகிறேன்’ என்றார் பாரிஸ்டர். ’அவன் போய்விடமாட்டான் ஸார், வாசலைப் பூட்டிவிட்டு வந்திருக்கிறேன்; அவன் உள்ளே இருக்கிறான்’ என்று அந்த எழுத்தன் மறுமொழி புகன்றானாம். தன்னுடைய எழுத்தனின் சாமர்த்தியத்தை எண்ணி மகிழ்ந்துகொண்டு வந்த பாரிஸ்டர் அலுவலகக் கதவைத் திறந்து பார்க்கையில், அங்கு யாரையும் காணவில்லை! பின்புறமிருந்து கதவைத் தாழிட எழுத்தன் மறந்து போயிருந்தான்!

அவ்வளவுதான் ஜோக். இனி மனச்சாட்சி (இன்னொரு ஜோக் என்கிறாயா?! - ஹனீபாக்கா) :
...

'என் வாழ்க்கை பாழாகிவிட்டதே! நான் நினைத்தாற்போன்று எதுவும் நடக்கவில்லையே’ என்று புலம்பும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன். உண்மையில் அவ்வாறெல்லாம் தவிப்பதற்கு ஒரு காரணமும் அவர்களுக்கு இருந்ததில்லை. ‘ஒன்றாகப் படித்து வேலையில் அமர்ந்தோம்- எனினும் என்னால் அவனைப்போல் உயர முடியவில்லை. என்னைவிடத் தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் நிறையப் பொருள் தேடிப் பிரமுகர்களாகிவிட்டனர். எங்களுக்கு அப்பேறு கிடைக்கவில்லை’ என்று குறைபடுகின்றனர். வாழ்க்கைப் போரில் தோல்வியடைந்துவிட்டோம் என்ற கருத்தே அவர்களுக்குத் தோன்றுகிறது. இது உடைமைகளை ஆதாரங்களாகக் கொண்ட தவறான கருத்துகளினால் விளையும் குறைபாடுதான். பணம், பதவி, புகழ், ஆகியவற்றின் நிலையாமையை நன்கறிந்தவர்கள் அவற்றுக்காக ஏங்குவதில்லை. ...சில உலக நிகழ்ச்சிகளைப்பற்றி ஆராய்வோம்.

எகிப்தில் சர்வாதிகாரம் நடத்திவந்த ஃபரூக் அரசன் ஒருநாள் காலையில் தன் நாடு, பதவி எல்லாம் விலகிச் செல்ல, வேறு நாடுகளில் அலைந்து புகலிடம் தேடவேண்டியிருந்தது. ஃபரூக்கை வெளியேற்றி அதிகாரம் கைக்கொண்ட நஜீப், விரைவிலேயே அதை நாஸருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. பாரசீகப் பிரதம மந்திரியாக இருந்த மொஸாதீக் பின்னாளில் ஒரு கைதியாகவே வாழ்நாளைத் தள்ளினார். ஸ்டாலின் அதிகாரத்துக்கு வந்ததும் ‘ட்ராட்ஸ்கி’யின் பெயரையும் பணிகளையும் நினைவூட்டும் சின்னங்களை அழித்தார். ஸ்டாலின் இறுதியை எய்திய பின்னர், அவருடைய நினைவை அவருக்குப்பின் வந்ததோர் அகற்ற முயன்றனர். டாக்டர் சுகர்ணோவுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பாருங்கள்! அவரை அதிகாரத்திலிருந்து அகற்றினார்கள்,.அந்தப் பெருந்தலைவனை அலங்கரித்த பதவிகள், பொறுப்புகள் எல்லாவற்றையும் உருவிக்கொண்டனர். விதி மனிதர்களை அம்மானை ஆடுவதில் ஒரு தனித்தன்மையைக் கையாண்டாற்போலிருந்தது.

வரலாற்று நிகழ்ச்சிகளையே மாற்றியும் திருப்பியும் அமைத்துவிட முயற்சிகள் நடக்கும் உலகில் பெயரிலும் புகழிலும் ஆசை கொள்வது வீணல்லவா?

இரண்டே இரண்டு விஷயங்களில் மட்டும் அசையாத நம்பிக்கை கொள்ள இயலும். அவை - பிறப்பும் இறப்பும். அவற்றுக்கிடையே நிகழ்வன அனைத்தும் நிச்சயமற்றவை. பணம், பதவி, உடல்நலம், அதிகாரம் எல்லாம் மாறிக்கொண்டிருக்கும். நிலையிலா இவ்வாழ்வில் நமக்கும் ஆறுதலளிக்கக்கூடியது ஒன்றுதான். மனம் கனிந்து பிறருக்கு உதவி செய்வதும், உள்ளார்ந்து அன்பு செலுத்துவதும்தான் செய்யக்கூடியது. சிந்தனையாளரும் அறிவியல் புலவருமான ஆல்பர்ட் ஈன்ஸ்டைன் கூறியதுபோல், வாழ்க்கையின் குறிக்கோள் வெற்றி தேடுவதல்ல; தொண்டாற்றுவதேயாம். கொடுத்ததைக் காட்டிலும் அதிகம் பெறுபவரையே சாதாரணமாக நாம் வெற்றிக்குரியவராகக் கருதுகிறோம். அதற்கு நேர்மாறாக நாம் கொள்ள வேண்டும். இங்கே பெறுவதற்கு மேலாக அங்கே வழங்க வேண்டும். அதுவே வாழ்க்கையின் சரியான வெற்றியாகும்.

எனது நம்பிக்கைகளுக்கேற்ப, என்னால் எப்போதும் செயலாற்ற முடிவதில்லை. சில சமயங்களில் நேர் விரோதமாகவே செயல் புரிய வேண்டி வந்திருக்கிறது. பலவீனங்களை நேருக்குநேர் நின்று எதிர்க்கும் ஆற்றல் இல்லாததாலும், போதிய அளவுக்கு இயல்பாகவே நெஞ்சுரம் இல்லாததாலும்தான் அவ்வாறு நேரிடுகிறது போலும்! வாழ்வின் வெற்றியும் இன்பங்களும் பெரும்பாலும் நம் இயல்பைப் பொறுத்தே அமைகின்றன. நாம் காலத்தைப் பயன்படுத்தும் முறையிலும் பிரச்னைகளைச் சமாளிக்கும் தன்மையிலும் மற்றவருடன் பழகும் விதத்திலும் , வாழ்க்கைப் பொறுப்புகளைப் பற்றிய நம் கருத்துகளிலும் நம்முடையை இயல்பின் சாயை படிகிறது. அதிர்ஷ்டம் நம்மைக் கண் திறந்து பார்த்து அருள் புரிந்தாலும் , செல்வம் தேவைப்பட்டபோது நமக்குக் கிடைத்தாலும் , நம்முடைய நல்லியல்புகளை நாம் உருவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தவில்லையெனில், வேறொன்றும் நம்மை அமைதியான இன்பம் நிறைந்து வாழ்வுக்கான வழியைக் காட்டாது. மாசு மறுவற்ற மனச்சாட்சி கொண்டுதான் எதிரிகளின் அச்சத்தினின்றும் தீயகாலத்தின் துன்பங்களிலிருந்தும் நாம் மீட்சிகாண முடியும்,

**

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

Monday, October 7, 2013

விட்டல் ராவின் உன்னதங்கள் - எஸ்.எல்.எம். ஹனீபா

அன்புள்ள ஆபிதீன், 

வெய்யில் நெருப்பாகக் கொதிக்கிறது. இந்த வருட ஆரம்பத்தில் காய்த்த தென்னை மரங்கள் தலைக்காயுடனேயே தலையெழுத்தை முடித்துக் கொள்ளும் போல் தெரிகிறது. மனத்தில் இன்றெல்லாம் பெரும் வலி. கடந்த ஏழு வருடங்களில் இவ்வருடத்து வறட்சி மிகக் கொடுமையானது. விட்டல் ராவின் நூலைப் பார்த்தீர்களோ நானறியேன். நானும் மகன் ஸபீர் ஹாபிஸும் இதை டைப் பண்ணி அனுப்புகிறோம். 

அன்புடன்
ஹனீபாக்கா 
***


வாழ்வின் சில உன்னதங்கள்

1970களில் வீறு  கொண்ட நவீன தமிழ் கலை இலக்கிய முன்னோடிகளில் விட்டல் ராவ் முக்கியமான ஆளுமை. நல்ல சிறுகதையாளராக மட்டுமல்லாமல், போக்கிடம், நதிமூலம், வண்ணமுகங்கள் போன்ற அவரின் நாவல்களால் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். 

நூற்றாண்டைக் கடந்து விட்ட தமிழ் நாவல்களின் வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நாவல்களைப் பட்டியலிட்டால் நிச்சயமாக போக்கிடம் அதிலொன்றாக இருக்கும். அது மட்டுமல்ல, நல்ல புகைப்படக் கலைஞர், ஓவியர், வரலாற்று ஆர்வலர் என்று அவர் செயல்பாடு நீள்கிறது. 

இன்று தான் வாழ்ந்த காலத்தினூடே பார்த்துப் பழகிப் படித்துப் பரவசமடைந்த எழுத்தின் மீதும் மனிதர்கள் மீதும் கொண்ட பற்றுதல் காரணமாக தன் வாழ்வின் உன்னத தருணங்களை அவர் நமக்கு அளித்திருக்கும் அருமையான கட்டுரைகளின் தொகுப்புத்தான் "வாழ்வின் சில உன்னதங்கள்" என்ற நூலாகும். 

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் விஜய் ரி.வி. விருது விழாவில் பங்கேற்கச் சென்ற மதிப்புமிகு கவிஞர் அனார் வசம், பாரத தேசத்தில் எனது பிள்ளையாக நான் கொண்டாடும் என்னருமை ஷாஜி (எழுத்தாளர், இசை விமர்சகர், நடிகர் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்)) எனக்கு அன்புடன் வாங்கியனுப்பிய நூலும் இதுவே. 

இந்த புத்தகம் பற்றி இன்னுமொரு சிறப்பான தகவல். பாரத தேசத்தில் தேசியளவில் கலைஞர்களை கௌரவிக்கும் "குசுமாஞ்சலி விருது" இவ்வாண்டின் தொடக்கத்தில் திரு விட்டல் ராவ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நமது வாழ்த்துக்கள். சிறப்பான அந்த நூலிலிருந்து நம் சமூகத்தின் கண்ணியத்திற்குரிய இளமையில் நமக்கெல்லாம் தன்னம்பிக்கையூட்டிய பன்னூலாசிரியர் அவர்களுக்கும் விட்டல் ராவ் அவர்களுக்குமான உறவின் ஒரு பத்தியை ஆபிதீன் பக்க நேயர்களுக்காக இங்கு பதிவேற்றம் செய்கிறேன். 

-------------------

"இன்னா வோணும்?" கேட்டார் பாய். 

"மத்தியானம் வந்திருந்தப்ப போஸ்ட் பத்திரிகைகள் கொஞ்சமிருந்திச்சி. பார்த்து வச்சிட்டு, இதோ போயிட்டு வர்ரேனு போனேன். இப்ப அதைக் காணோம்"

"அவ்ளோதான், வித்துப் போச்சி."

"சொல்லி வச்சிட்டுப் போனனே?"

"சொல்லிட்டுப் போனா, அதே ஞாபகமா எனுக்கு? வியாளக்கெளம தர்கா நாளுக்கூட்டம். எதனாச்சி அட்வான்சு குடுத்திட்டுப் போயிருந்தா ஞாபகமிருந்திருக்கும். ஒத்தரு எப்பவும் வருவாரு நம்போ கடைக்கு. காலேஜு புரொபசரு. கேட்டாரு, குடுத்திட்டேன்"

என் பழம்புத்தகக் கடையனுபவத்தில் ஏற்பட்ட முதல் அனுபவமாக அதை எடுத்துக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். அறை வாசலில் நின்றிருந்த போது அடுத்த அறை வாசலில் வசிக்கும் நண்பர் - இன்னும் அறிமுகமே ஆகாத நிலையில் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது கையில் வைத்திருந்த பத்திரிகைகளைத் தற்செயலாகப் பார்த்தேன். 

சாட்டர்டே ஈவினிங் போஸ்ட் பத்திரிகைகள்!

"சார், மன்னிக்கணும், ஒரு நிமிஷம்" என்றேன். 

அவர் தன் அறை வாசலில் நின்றவர், திரும்பிப் பார்த்து முறுவலித்தார். என் பெயரைச் சொல்லிக் கொண்டேன். 

"ஓ, டெலிஃபோன்ஸிலயிருக்கீங்களா? நான் அப்துல் ரஹீம். நியூ காலேஜில் புரொபசராயிருக்கேன். உள்ளே வாங்க" என்றார். 

உள்ளே டெல்லி மோடாக்கள் ஒன்றில் உட்கார்ந்தேன். செட்டென்று கைலிக்கு மாறிக் கொண்டவர், வெகு விரைவில் மண்ணெண்ணெய் ஸ்டவ்வை ஏற்றி தேநீர் தயாரித்து விட்டார். இடைச்சி மார்க் பால் மணம் தேயிலை மணத்தையும் மீறியிருந்தது. என் ஒரு கண் மேஜை மீது அவர் வைத்த போஸ்ட் இதழ்கள் மீதே இருந்தது. 

"இதெல்லாம் பாருங்களேன். வேணுமானா எடுத்திட்டுப் போய் படிச்சிட்டுக் கொண்டாங்க"

"எங்கே வாங்கினது?"

"தர்கா பக்கத்தில, ஒரு கடையில..."

"தெரியும், மத்தியானம், அங்கே இதையெல்லாம் பார்த்து வச்சிட்டு ரூமுக்குப் போய்ட்டு வர்ரேனு சொல்லி வந்தேன். காசையெடுத்திட்டுப் போனா, வித்துப் போச்சினு சொல்லிவிட்டார் அந்தப் பெரியவர்"

"அடடா, நீங்க பாத்து வச்சதா இதெல்லாம்? நா மாமூலா அவர்கிட்டே வாங்கறேன். கேட்டதும் குடுத்திட்டாரு. ஒங்களுக்கு வேணும்னா எடுத்துக்குங்க."

***
எழுத்தாளர்களின் அனுபவங்கள் எத்துணை உன்னதமானது. நமது மனக்கண்ணில் அப்துல் ரஹீமும் விட்டல் ராவும் அப்துல் ரஹீம் தயாரித்த பால் தேநீரும் ஆவி பறக்கும் காட்சியாக அலைபாய்கிறது. 

அண்மைக்காலமாக இப்படியொரு கட்டுரைத் தொகுதியை நான் படிக்கவில்லை. எத்துணை விஷயங்கள் .எத்துணை மனிதர்கள். புத்தகத்தை வாங்கியனுப்பிய ஷாஜிக்கும், பத்திரமாக என்னிடம் கைளயளித்த கவிஞர் அனாருக்கும், இந்த நூலை தேடிப் படிக்கப் போகும் நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 

பழம் புத்தகங்களை வழங்கிய கரீம் பாய் பற்றிய கதையை வரும் நாளில் பதிவேற்றம் செய்கிறேன். 


அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா