Thursday, March 3, 2022

இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? - கே. சச்சிதானந்தன் கவிதை

கவிதை : கே. சச்சிதானந்தன்

(தமிழில் இரவிக்குமார் எம்.பி)

"அதிர்ஷ்டம் இல்லாதவர்களைக் கொல்வதற்காக தகுதி இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்டு நன்றி இல்லாதவர்களின் நலனுக்காக விருப்பமில்லாமல் இறந்து போனவர்கள் நாங்கள்" - வியட்நாம் யுத்தத்தில் இறந்துபோன அமெரிக்க வீரர் ஒருவரின் கல்லறையில் எழுதப்பட்டிருந்த வாசகம் எனது கைகளில் ரத்தக் கறை படிந்திருக்கிறது எதிரியின் ரத்தம் என்கிறது நாடு அது மனிதனின் ரத்தம் என்கிறேன் நான் அவன் வீழ்ந்தது இப்போதும் எனது பார்வையை விரட்டிக் கொண்டே இருக்கிறது நான் அவனைத் தழுவிக் கொள்ள விரும்பினேன் அவனது குடும்பத்தைப் பற்றி குழந்தைகளைப் பற்றி கேட்க விரும்பினேன் ஆனால் அவனைப் பற்றி எனக்குள் பயம் அதுபோலவே என்னைப்பற்றி அவனுக்குள்ளும் பயம் இந்த அச்சத்தை யார் உருவாக்கியது? எல்லைக்கோடுகளை உருவாக்கியவர்கள். அவர்களே நமது மெய்யான எதிரிகள். நான் அவனது உறவினர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் குழந்தைகளின் முன்னால் மண்டியிடுகிறேன் அவனைச் சுடுவதற்கு முன் அவனது கண்களைப் பார்த்தேன் அதில் குரூரம் தென்பட்டிருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் நான் பார்த்தது தோழமை, துயரம், கருணை அவன் விழுந்து கிடந்த போது மார்பின் மேல் கைகளை வைத்துக் கொண்டு எதை நினைவு கூர்ந்திருப்பான்? பள்ளிக்குச் செல்லும் வழியில் பறித்துத் தின்ற புளியம் பழங்களையா? இளமைப் பருவத்தில் நண்பர்களோடு சேர்ந்து பாடிய பாடலையா? தனது அன்புக்குரியவளுக்கு எழுதிய கடைசி கடிதத்தையா? கிராமத்தின் குறுகிய சந்தில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் தாயின் மங்கிய விழிகளையா? கோதுமை வயலில் வீசிய குளிர்ந்த காற்றையா? வேனிலிருந்து இறக்கப்படும் தனது சவப்பெட்டியைப் பார்த்துக் கதறும் தனது சகோதரியின் அலறலையா? வீரர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது. பாலைவனத்தில் நடக்கும்போது முளைவிடும் போதே கேள்விகளெல்லாம் கருகிப் போய் விடும். அமைதியாக இருக்கும் ஆடுகளின் செவியில் மேய்ப்பவனின் கட்டளைகள் மட்டுமே கேட்கும். கழுத்தை அறுக்கும் போது காளையின் வேதனையும் கவலையும்தான் வெளிப்படும். வீரம் செறிந்த பாடல்களுக்கு விடை கொடுங்கள் எனக்காக எந்த சொர்க்கமும் காத்திருக்கவில்லை. நரகத்தில் ஒரே கோப்பையில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நஞ்சை அருந்துவோம் ஒரே முள் படுக்கையில் படுத்துறங்குவோம் எல்லைகளே இல்லாத உலகம் குறித்து கைவரப் பெறாத கனவைப் பகிர்ந்தபடி ஒன்றாகச் சேர்ந்து அழுவோம்.... போர் வீரன் ஒருவன் தனக்குள் பேசிக்கொண்டது.

*

Thanks to Kanagu Kanagraj & Sadik

*

தொடர்புடைய பதிவு : கே. சச்சிதானந்தன் நேர்காணல்