Saturday, December 22, 2012

இதோ வருகிறார் இன்னொரு சூஃபி!

’மஞ்சக்கொல்லை சூப்பி’யான மாண்புமிகு ஜாஃபர்நானாவுக்குத்தான் அவருடைய மகத்துவமெல்லாம் புரியும். அருட்கொடையாளர்களின் தொடர்ச்சியாக எழுதுகிறார், ஆபிதீன் பக்கங்களை ‘அலங்காரம்’ செய்ய. நன்றி நானா!

***

அருட்கொடையாளர் - 12  :  அப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி 

ஹமீது ஜாஃபர்

கோடை விடுமுறைகளில் பெரும்பாலும் இரவு நேரங்களில் பள்ளிவாசல் மகிழ மரத்தடி இல்லையெனில் வீட்டு மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்குவதுண்டு. காரணம் இயற்கையான நல்ல காற்று, அப்போதல்லாம் மழை காலம் தவிர மற்ற காலங்களில் கொசுக்களின் தாலாட்டு கிடையாது. தூக்கம் வராத இரவுகளில் வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். நிலா வெளிச்சம் இல்லாதபோது நட்சத்திரக் கூட்டங்களையே பார்த்து ரசிப்பது வழக்கம். ஆகா எத்தனை நட்சத்திரங்கள்? கோடிக்கணக்கில் இறைந்து கிடப்பதைப் பார்க்கும்போது அதில் ஒரு சுகம் கிடைப்பதை உணர்ந்தேன். ஆம் எத்தனை எத்தனை நட்சத்திரங்கள். அவைகளில் சில அருகில், சில தூரத்தில், சில வெகு தூரத்தில், இன்னும் சில ஒரு சிறிய புள்ளிபோல் வெகு வெகு தூரத்தில் எத்தனை அழகு? சில பல வர்ணங்களில் மின்னுகின்றன, சில மின்னாமல் ஒரே மாதிரியான வர்ணத்தில் ஒளிர்கின்றன; அவற்றுள்தான் சில மங்கலான வெளிச்சம், சில பிரகாசமான வெளிச்சம், சில வெள்ளை ஒளி, வேறு சில சிகப்பு நிறம், சில மஞ்சள் நிறம். கருப்பு நிற சேலையில் வைரக் கற்கள் பதித்தது போல் வர்ணஜாலம் காட்டும் வானத்தை ரசித்துக்கொண்டே அதனை ஊடுருவிப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அவைகளின் தூரம், பரப்பளவு எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது-அல்லா எங்கே இருக்கிறான் என்ற கேள்வி மட்டும் குறியாக(?) தெரிந்தது. ஒன்று இரண்டு என்று ஏழு வானம் சொல்கிறார்களே! இந்த வானமெல்லாம் எங்கே இருக்கிறது? அல்லா எங்கே இருக்கிறான்? கேள்விதான் தோன்றியதே தவிர யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. ஒரு வேளை யாரிடமாவது கேட்டிருந்தால்...? வா காட்டுகிறேன் என்று.... நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஒரு நோன்பு மாதம் வால் நட்சத்திரம் தோன்றியது. சரியாக அதிகாலை நான்கு மணிக்கு சுபுஹுக்கு பாங்கு சொல்லும்போது தோன்றும், கீழ் வானம் வெளுக்கும்போது இருக்காது மறைந்துவிடும். பத்திரிக்கைகளில் பெரிதாக பீற்றி எழுதியிருந்தார்கள். விஞ்ஞான ஆசிரியர் ஸ்பெஷல் கிளாஸில் அதனை விளக்கினார். வால் நட்சத்திரம் வால் பகுதி எப்போதும் சூரியனுக்கு எதிராக இருக்கும் அது பல நூறு வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும். இது ஒன்று மட்டுமல்ல இதுபோல் பல நட்சத்திரங்கள் இருக்கின்றன, அதன் வால் பகுதி வாயு நிறைந்திருப்பதால் நமக்கு வால் போன்று தெரிகிறது என்றார். அதை தொடர்ந்து ‘பிரபஞ்சமும் ஐன்ஸ்டீனும்’ என்ற புத்தகத்தைப்  படித்தபோதுதான் ஒவ்வொரு நட்சத்திரமும் பல கோடி மைல் தூரத்தில் இருக்கிறது, அவை பூமியைவிட பெரிதானவை, சில சுய ஒளி உள்ளவை, சில சந்திரனைப் போல் சூரியனிடமிருந்து ஒளியை கடன்வாங்கி தருகிறது, தூரத்தை மைல் கணக்கில் சொல்வதில்லை அப்படி சொல்லப்போனால் ஒன்றுக்குப் பக்கத்தில் பல சைபர்கள் போடவேண்டியிருக்கும் எனவே ஒளிவருடம் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு ஒளிவருடம் என்பது ஒளி தொடர்ந்து ஒருவருடம் பயணம் செய்யும் தூரம். மிக அருகில் இருக்கும் நட்சத்திரத்தின் தூரம் பத்து ஒளிவருட தூரம் என்றெல்லாம் எழுதியிருந்ததைப் பார்த்தபின்தான் எனக்கு இதனைப் பற்றிய அறிவு சிறிதளவு கிடைத்தது. அப்படியானால் அல்லா ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்தில் இருக்கிறான் என்ற முடிவுக்கு வந்தேன்.

பெற்ற அறிவு போதவில்லை, கூடவே ஆர்வக்கோளாறு, இருக்கவே இருக்கிறார் நம்ம குரு, ஷ்டேஷன் மாஸ்டர் ஜீவராஜ் சார். அவருக்குப் பிடித்தது எலக்ட்ரிக் அண்டு எலக்ட்ரானிக் என்றாலும்கூட இதையும் கொஞ்சம் விளக்கினார். அதன்பிறகுதான் தெரிந்தது பிரகாசிக்கும் சில நட்சத்திரங்களை இணைக்கும்போது சில உருவங்கள் கிடைக்கின்றன என்று. கயித்துக் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு நானும் இணைத்துப் பார்த்தேன் டபிள்யு என்ற ஆங்கில எழுத்து கிடைத்தது. வேறு உருவம் கிடைக்கவில்லை. என் அறிவு அவ்வளவுதான். இப்படி இணைத்து முற்காலத்தில் இரவு நேரக் கடல் பயணம் செய்திருக்கின்றனர். ஏன் இப்போதும் போர்பந்தர், மும்பை, கோழிக்கோடுவிலிருந்து மரத் தோணிகளில் அராபிய வளைகுடா வரும் இந்திய மாலுமிகள், ஈராக்கிலிருந்து இந்தியா மட்டும் திரும்பாமல் ஆப்ரிக்க நாடான ஜான்ஜிபார், செக்கத்திரா தீவுகளுக்கும் சென்று திரும்புகின்றனர். அவர்களிடம் என்ன ஜிபிஎஸ் (Global Positioning System) இருக்கிறதா? இல்லை ஆட்டோ பைலட்டிங் இருக்கிறதா? பேருக்கு ஒரு ராடார். இல்லாவிட்டால் லைசன்ஸ் கிடைக்காது. ஆயிரமாண்டுகளுக்கு முன்னுள்ள அந்த காலத்து அறிவுதானே இப்போதும் கைகொடுக்கிறது. அந்த அறிவை கைவல்யப் படுத்தினார் ஒரு சூஃபி.

'சூஃபி' இந்த வார்த்தையைக் கேட்டாலே என்னைப் பொருத்தவரை  நினைவுக்கு வருவது ஆன்மீகம். சூஃபி என்ற வார்த்தைக்கு மொழியியல் வித்தகர்கள் நீண்ட விளக்கமளிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் சூஃபி என்று சொன்னாலே இறை வழியில் தன் சிந்தனைகளை செலுத்தி எண்ணம், சொல், செயல் அனைத்தையுமே இறைவனிடம் சமர்ப்பித்துவிடும் ஞானிகள் என்ற எண்ணம்தான் தோன்றும். இவர்களை இருசாரார்களாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் இறைக் காதலில் தன்னைப் பறிகொடுத்து அந்த இன்பத்திலேயே மதிமயங்கி இருப்பவர்கள். மறு சாரார் 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என தான் பெற்றதை அள்ளிக் கொடுத்து மக்களை நேர்வழி படுத்துபவர்கள். இதல்லாமல் வேறொரு வகையினர் இருக்கின்றனர், சூஃபி என்ற சொல்லை தன் பெயராக வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக்கொண்டு திரிபவர்கள். இவர்களுக்கும் சூஃபிஸத்துக்கும் எந்த பொருத்தமும் இருக்காது, இருந்ததாகவும் தெரியவில்லை.

இதற்கெல்லாம் மாறுபட்டு முன்னொரு காலத்தில் ஒரு சூஃபி இருந்தார். தான் மேற்கொண்ட காரியத்தில் வெற்றி கண்ட வித்தகர். விஞ்ஞான உலகத்துக்கு விளக்கேற்றியவர். ஆம் வான் வெளியில் மின் மினிப் பூச்சிகளாய் ஜாலம் காட்டி கோலம் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர். தந்தை சூஃபி என்றாலும் அரபிய வழக்கப்படி தன் பெயருடன் தந்தையிலிருந்து மூன்று நான்கு தலைமுறைப் பெயர்களை இணைத்துக்கொள்வதால் அவரும் சூஃபி என்றே உலகில் அறியப்படுகிறார்.  என்றாலும் சூஃபி என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமானவர் என்றால் அது மிகையாகாது.

The Great Arabian Astronomer

அப்துல் ரஹ்மான் இப்னு அல் சூஃபி (AZOPHY 903 - 986)

அப்துல் ரஹ்மான் அபுல் ஹுசைன் இபுன் உமர் இபுன் முஹம்மத் அல் ராஜி அல் சூஃபி என்ற நீண்டபெயருடைய இவரை மேற்குலகில், லத்தீன் மொழியில் அறியப்படுவது AZOPHY என்று.  பாரசீகத்தில் பிறந்த இவரைப் பற்றி , பிறப்பு 7 டிசம்பர் 903 லும் இறப்பு 25 மே 986 லும் என்று குறிப்பு ஓர் தளத்தில் கிடைத்தபோது வேறொரு தளத்தில் இவர், இன்றைய ஈரானின் தலைநகராக இருக்கும் டெஹ்ரானின் புறநகர் பகுதியில் (பாரசீக மொழியில் புறநகர் பகுதிக்கு ரேய் என்றழைக்கப்படுகிறது) பிறந்தார் என்ற தகவல் கிடைக்கிறது (இங்குதான் ஜெக்கரியா ராஜி 864ல் பிறந்தார்). அமீர் அப்துல் தவ்லாவின் ஆட்சியில் இஸ்ஃபஹான்ல் வாழ்ந்தார். பின்னர் ஷிராஜில் சில காலமும் பின்னர் பாக்தாதிலும் வாழ்ந்திருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கிறது. என்றாலும் தனது வாழ்நாளில் பெரும்பகுதி இஸ்ஃபஹானுக்கும் ஃபார்ஸுக்கும் இடையே கழிந்ததாக தனது நூலின் முகப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

வான சாஸ்திரம்

எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே பாக்தாதில் அறிவு மறுமலர்ச்சி களைகட்டத் தொடங்கியது. கிரேக்க மொழியிலிருந்த அனேக நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. குறிப்பாக தாலமி, ப்ளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்களின் தத்துவம், அரசியல், அறிவியல்  கோட்பாடுகள் அரபிக்கு வந்தன. தலமியின் Almagest  ஐ அடிப்படையாக வைத்து வான் வெளி ஆய்வுகளை இதற்குமுன் பலர் நடத்தியிருந்தாலும் அல் சூஃபியுடைய ஆய்வு மிகத் துல்லியமாக இருந்தது.

முதல் வான் இயல் ஆய்வாளர்


வான் இயல் ஆய்வில் ஆர்வம் கொண்ட அல் சூஃபி , தாலமியின் அல்மாகெஸ்டில் அனேக தவறுகள் இருப்பதைக் கண்டறிந்து அவைகளைத் திருத்தம் செய்தார். நெபுலா என்று சொல்லக்கூடிய மேகமூட்டம் போல தோற்றமளிக்கும் விண்மீன்கூட்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை வெளிப்படுத்தினார். அக்கூட்டத்தின் தெற்குப் பகுதிக்கு 'அல் பக்கரல் அபியத் - White Bull எனப் பெயரிட்டார். இது மலாய் தீவுக்கூட்டப் பகுதிகளில் செல்லும் அராபிய மாலுமிகளுக்கு 'அல் பக்கரல் அபியத் - White Bull பெரிதும் உதவியது. இப்போது அவற்றை Nubecula Major (the greater Magellanic Cloud) என்று அழைக்கப்படுகிறது.  (He identified the Large Magellanic Cloud, which is visible from Yemen, though not from Isfahan; it was not seen by Europeans until Magellan's voyage in the 16th century - Wikipedia)

சாதாரண கண்களால் காணக்கூடிய பால்வழி விண்மீன்களை (milkyway galaxy) கிபி 905 க்கு முன்பே இஸ்ஃபஹான் வானவியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டாலும் அல் சூஃபி, தான் கண்டறிந்த விண்மீன் கூட்டங்களை மிக கவனமாக அட்டவணைப் படுத்தி அவைகளின் பரிமாணங்களை (magnitudes) நிர்ணயித்தார்.  தான் ஆய்வு செய்தவற்றை 'சுவாரல் கவாகிப் அல்தமானிய்ய வ அல் அரபயீன்' என்ற நூலாக வெளியிட்டார். The Forty Eight  Constellations என்பது மருவி 'கித்தாப் அல் கவாகிப் அல் தாபித்' (The Book of the constellation of the Fixed Star ) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. This is a masterpiece on stellar astronomy.          

இன்று பெயரிடப்பட்டுள்ள Andromeda Nebula  M31 (describing as a "small cloud") விண்மீன்களை துல்லியமாக வரைபடத்துடன் இதில் விளக்கியுள்ளார். இவரது விளக்கமோ அல்லது இவ்விண்மீன்கள் கூட்டத்தைப் பற்றியோ டெலஸ்கோப் கண்டுபிடிக்கும் வரை ஐரோப்பிய நாடுகளுக்குதெரியாமலிருந்தது, 1612ல் சைமன் மாரியஸ் டெலஸ்கோப்பின் உதவியால் கண்டறியப்பட்டப்  பின்பே உலகுக்கு தெரியவந்தது.

தவிர , தாலமியினால் கூறப்பட்ட 48 நட்சத்திரக் கூட்டத்தைப் (constellation) பற்றிய தவறான விளக்கத்தைத் திருத்தி , அவற்றுக்கு அரபு பெயர்கள் இட்டு , அவற்றின் நிலை, பரிமாணம், அட்டவணை (Location, Magnitude and Tables of Stars) உட்பட அனைத்தையும் வரைபடத்துடன் விளக்கியுள்ளார். ஏறக்குறைய 1018 நட்சத்திரத்தின் ஒளி, நிறம், நிலை (Brightness, Colour, Position) களை விளக்கியுள்ளார். இது 17ம் நூற்றாண்டு வரை பின்னால் வந்த அரபு வானவெளி ஆய்வாளர்களுக்கும் ஐரோப்பிய ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாயிற்று.

Al Sufi's Cluster

இந்த நட்சத்திரக்கூட்டத்தில் சுமார் 40 நட்சத்திரங்களை அல் சூஃபி கண்டறிந்தார். பின்பு ஹொடிர்னா (1597-1660) என்பவர் மீண்டும் கண்டறிந்தார். இதனை 1920 ல் அமெரிக்காவைச் சேர்ந்த  D.F. Brocchi, என்பவர் (amateur astronomer) வரைபடம் தயாரித்தார் எனவே இதனை Brocchi cluster or Al Sufi Cluster என்று அழைக்கப்படுகிறது.

   
தன்னுடைய நூலில் 55 அட்டவணையும் 48 constellations யும் குறிப்பிட்டிருப்பதோடல்லாமல் ஒவ்வொன்றின் விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார். அல்மாகெஸ்டில் இருக்கும் அட்டவணை முறையையே அல் சூஃபியும் பின்பற்றி மூன்று வகையாக பிரித்திருக்கிறார். முதல் வகையில் 21 northern constellations, இரண்டாம் வகையில் 12 ராசி நட்சத்திரங்களையும் (Zodiac) மூன்றாம் வகையில் 15 Southern Constellation விவரித்துள்ளார்.



அல் சூஃபி கண்டறிந்த 100 மேற்பட்ட புதிய நட்சத்திரங்களில் ஒன்றுகூட அல்மாகஸ்டில் தாலமியோ அல்லது அதற்கு முன்வந்த அறிஞர்களோ குறிப்பிடவில்லை. அல்சூஃபியுடைய பங்கு வானவியல் சரித்திரத்தில் இன்றுவரை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

வான்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த ஆட்சியாளர் அப்துல் தவ்லாவுக்கு தான் எழுதிய ஆராய்ச்சி நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். தவிர 880ல் அல் பத்தானியின் அட்டவணையையும் இணைத்துள்ளார். இதல்லாமல் வானவியல் பற்றிய குறிப்பேடு ஒன்றையும் தயாரித்ததாக வரலாற்றில் காணப்பட்டாலும் இப்போது காணப்படவில்லை காலப்போக்கில் அழிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் ஷிராஜில் ஆய்வுகூடம் (observatory) ஒன்றை நிறுவியதாகவும் வரலாறு கூறுகின்றது.

அல் சூஃபியின் ஆய்வை அடிப்படையாக வைத்து பின்னால் வந்த பைரூனி , புகழ்பெற்ற வான் ஆய்வாளர் samarkand இளவரசர் Ulugh Beg (1437), இடுலர்(1809), அர்ஜிலாண்டர்(1843),ஃபுஜிவாரா மற்றும் யமஓஹா(2005) இன்னும் பல ஆய்வாளர்களும் தங்கள் ஆய்வுகளை நடத்தியிருக்கின்றனர்.

மேலும் alpha majoris என்ற விண்மீன் கூட்டத்திலுள்ள நட்சத்திரத்தின் நிறம் மாறுவதில்லை என்று அல் சூஃபி சொன்னதை பின்னால் வந்த ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். ரோம் நகரில் அது சிகப்பாகத் தெரிவதாக Seneca என்பவரும், அலக்ஸாந்திரியாவில் சிவந்த(reddish) நிலையில் தெரிவதாக தாலமியும், சில நாட்கள் மஞ்சள் நிறத்திலும் பின் வெள்ளை நிறத்திலும் ஏதென்ஸில் தெரிவதாக Schmidt(1841) என்ற ஜெர்மனிய விஞ்ஞானி கூறுகிறார்.

அல் சூஃபியின் கணக்கியல் தாலமியின் கணிதத்தைவிட மிகத் துல்லியமாக இருந்தது. The stellar longitudes 1 deg in 66 years rather than the correct value of 1 deg n 71.2 years என பின்னால் வந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.  தூரத்திலுள்ள விண்மீன்களைப் பற்றி மட்டும் ஆராயவில்லை அருகிலிருக்கும் நிலவையும் ஆய்வு செய்து இன்றைய விஞ்ஞானிகளால் வரையப்பட்ட சந்திரப் படத்தின்(Lunar Map) 9ம் பிரிவில்(22°.1'S, 12°.7'E) காணப்படக்கூடிய மலைப்பள்ளம்(mount crater) 47கிமி விட்டமுடையது என்றும் கண்டறிந்தார். அதற்கு அவரின் நினைவாக Moon Crater Azophi என்ற பெயரை இட்டுள்ளனர்.

தன் பணியை வான சாஸ்திரத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை.  astrolabe ஐ பற்றியும் அதனை பல்வேறு வகையில் பயன்படுத்தும் முறை பற்றியும், ஜாதகம், சோதிடம், நேவிகேஷன், சர்வே, கிப்ளா, தொழுகை நேரம் முதலியன பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார்.

அரபு நாடு மறந்தாலும் - இல்லை , முஸ்லிம் உலகம் மறந்தாலும் - வான்இயல் ஆய்வு உலகம் மறக்கவில்லை என்பது திண்ணம்.  2006ம் ஆண்டிலிருந்து ஈரானில் Astronomy Society of Iran – Amateur Committee (ASIAC) என்ற அமைப்பு சூஃபியின் நினைவாக வான்வெளி ஆய்வு போட்டி நடத்துகிறது. அதில் ஈரான் ஈராக்கை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.



1985ல் , சூஃபியின் நினைவாக வெவ்வேறு மதிப்புகளில் தபால் தலை வெளியிட்டது சோமாலியா.
***
Sources:
http://en.wikipedia.org/wiki/Abd_al-Rahman_al-Sufi
http://messier.seds.org/xtra/ngc/brocchi.html
http://messier.seds.org/m/m031.html
http://books.google.co.uk/books?id=vOUWfhBheDIC&lpg=PA121&ots=Jd8FN9U4tc&dq=Ihsan%20Hafez&pg=PA121#v=onepage&q=Ihsan%20Hafez
http://www.ianridpath.com/startales/alsufi.htm
http://messier.seds.org/xtra/Bios/alsufi.html
http://www.wdl.org/en/item/2484/
http://www.eso.org/gen-fac/pubs/astclim/espas/iran/sufi.html

***


 


நன்றி : ஹமீது ஜாஃபர் | http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com

Thursday, December 20, 2012

பெண் என்பவள் உடல் மட்டுமல்ல - ப்ரியா தம்பி




டெல்லியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் முழுக் கதையையும் இன்றுதான் வாசித்தேன்.. இந்த நொடிவரை பதட்டமாகவே இருக்கிறது...

வண்டியின் டிரைவர் அந்தப் பெண் ஒரு ஆணுடன் இரவு நடந்து சென்றதால் பாடம் கற்பிக்கவே அப்படி செய்ததாக சொல்லியிருக்கிறார்..வன்புணர்வு செய்தவர்களில் டிரைவரோடு அவர் தம்பியும் அடக்கம்... அனைவரும் புணர்ந்து முடித்த பின்பும் இரும்பு ராடு எடுத்து அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்... முப்பது கிலோமீட்டருக்கு அந்த வண்டி அந்த
பெண்ணின் கதறலை சுமந்து கொண்டி ஓடியிருக்கிறது... ஆடையின்றி சாலையில் வீசப்பட்ட அந்தப் பெண் போலீஸ் வரும்வரை அங்கேயே சீந்துவாரின்றி கிடந்திருக்கிறாள்...

இவ்வளவு வன்மத்தோடு உயிர்வாழ முடியுமா? ஒரு பெண்ணாக, பெண் குழந்தையின் அம்மாவாக மிகுந்த பதட்டமாக உணர்கிறேன்....

எதோ ஒரு பெண், யாரோ ஒருவனிடம் பேசினாலே தாங்க முடியாமல் சித்திரவதை செய்யும் இவர்கள் தன் வீட்டுப் பெண்களை என்னவெல்லாம் செய்வார்கள்? பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என்பதில் தொடங்கி, பிறப்புறுப்பில் பூட்டு போடுவது வரை எல்லாமும் செய்வார்கள்..

காலங்காலமாக பெண் குழந்தைகளை ஆணுக்கு பயந்து அடக்கமாக இருக்கச் சொல்லித் தானே வளர்க்கிறோம்.. பதிலாக பெண்களை மதிப்பது எப்படி என்று சொல்லி ஆண் குழந்தைகளை வளர்க்கலாமே? நம் வீட்டு ஆண் குழந்தைகளுக்கேனும் பெண் என்பவள் உடல் மட்டுமல்ல என்று சொல்லி வளர்ப்போம்... பெண்ணை சக மனுஷியாக, நேசத்தோடு, நட்போடு பார்க்க கற்றுத் தருவோம்.. மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்...
***
நன்றி : ப்ரியா தம்பி

Monday, December 17, 2012

சுரண்டல்: DTH/ விஸ்வரூபம்/ கமல்... - தாஜ் கட்டுரை


கமல்,
தனது 'விஸ்வரூபம்' படத்தை
DTH -வழியே
T.V.யில் காண்பிக்க இருக்கிறார்!

அதாவது...
டிஸ்-ஆண்டனா - பிளஸ் -
செட்டப் பாக்ஸ் வசதியுடன்
T.V. பார்ப்போர்களில்...
எவரெவர் விரும்புகிறார்களோ
அவர்களெல்லாம்
அப்படத்தை கண்டு களிக்க முடியும்.

அந்த துடிப்பானவர்கள்
விஸ்வரூபம் காண
மூன்று மணிநேர பேக்கேஜிற்கு
பணம் செலுத்தும் பட்சம்
பார்க்க முடியும்.

தியேட்டர்களில் திரையிடப்படுவதற்கு
சுமார் எட்டு மணி நேரம் முன்னரே
T.V.யில் அப்படத்தை
அந்த வகையினில் காண
ஆர்வம் கொள்ளும் ரசிகர்களுக்காக
வசதி செய்துதர முனைந்திருக்கிறார்...
அப்படத்தின் நாயகரும், இயக்குனரும்,
தயாரிப்பாளருமான கமல்!

அதாவது...
உலகக் கிரிக்கெட் நிகழ்ச்சிகள்
நடைபெறும் போது
அந்த கிரிக்கெட் போர்ட்
இப்படித்தான்
T.V. மூலம் உலகம் தழுவி
அந்நிகழ்ச்சியினை ஒளிபரப்பி
வசூல் வேட்டை நடத்தும்!
இப்போ...
இந்த 'வசூல் ராஜா'
திட்டமிட்டு
முனைந்திருப்பதும் அதே ரீதிதான்!

தனது வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய
தியேட்டர்கார்களின்
வேண்டுகோளையும் ஏற்காது
அதனால் கிளர்ந்தெழும்
அவர்களின் எதிர்ப்பையும் மீறி
காரியத்தில் கண்ணாக இருக்கிறார்.

(குறிப்பு:...
கிரிக்கெட்போர்ட்காரர்களுக்கு
கிரிக்கெட் விளையாட்டைக் காட்ட
சினிமாவுக்கு உள்ளது போல்
தியேட்டர் வசதி இல்லை என்பதையும்
அதன் மூலமான சம்பாத்தியமும்
இல்லை என்பதையும்
வாசகர்கள் இங்கே மறந்துவிடக் கூடாது.)

கிரிக்கெட்டுக்கு
காசு கொடுத்து T.V. பார்க்க
உலகம் தழுவி ரசிகர்கள் இருப்பது மாதிரி
'உலக நாயகன்' சினிமாவுக்கும்
உலகம் தழுவி
அப்படியோர் ஆர்வம் கொண்டவர்கள்
தாராளமாகவே இருக்கிறார்கள்!

குறையொன்றுமில்லா...
திரை மூர்த்தி கண்ணா அவர்!

அப்படியானதோர் முத்திரையை
மக்களிடம் கஷ்டப்பட்டு பெற்று
அதை காபந்தும் செய்து...
வளர்த்தும் வைத்திருக்கிறார்!

திராவிடத்துக்கு பெரியாரியம்...
கம்யூனிஸ்ட்டுக்கு கம்யூனிஸம்...
உலகப் பொருளாதாரத்திற்கு
திரை எதிர்ப்பு!
சினிமா தொழிலுக்காக
அதையே வரவேற்கும் வலது!
இப்படி..
இன்னுமான பல முகங்களை
ஒருசேர காபந்து செய்யும்
'பஞ்சதந்திர'க்காரர் அவர்!

'DTH/ விஸ்வரூபம்/ கமல்' என்பன பற்றி
கடந்த பத்து நாட்களாக
ஃபேஸ்புக்கில்
ஆள் மாற்றி ஆள்
சின்னச் சின்ன
விமர்சனங்களும் கருத்துகளுமாக
'விஸ்வரூபம்' எடுத்திருக்கும் கமலை
தூக்கிப் பிடிக்கவே செய்கிறார்கள்!

எல்லோராலும் கவனம் பெறும்
விமர்சகரான ஞாநியும் கூட
இந்த 'நாயக’னுக்குதான் ஜே! 

ஒரு டிஷ் -ஆண்டனாவில்
இப்படத்தை பார்க்க
இந்திய ரூபாய்க்கு 1000/-
கட்டணம் செலுத்தப்பட வேண்டும்!
மதுரையில் வைத்து, 
'ஆடியோ' வெளியிட்டின் போது
'நாயகன்' கமல்
சொன்ன தகவல் இது!

'தசாவதார' ஹீரோ,
இந்த முறைவழியே
2 1/4 (இரண்டேகால்)மணிநேரத்திற்கு
அப்படத்தின்
தமிழ்ப் பதிப்பை காட்ட முனைவதில் மட்டும்
சுமார் 50 கோடிகள் சம்பாத்திய சாத்தியமென
மீடியாக்களில் கிசுகிசுப்பு கேட்கிறது

உலக அளவில்
பரந்து விரிந்திருக்கும்
புலம்பெயர்ந்த தமிழர்கள்,
மற்றும், இந்திய வம்சாவளிகளினால்
இந்த வியாபாரம்
டாலர்களில் களைகட்ட
தாராள வாய்ப்பிருப்பதால்...
என் கணக்கில்
தமிழ்ப் பதிப்பின் வழியே மட்டும்
குறைந்தது குறைந்தது
500 கோடிகளை...
வேண்டாம்...
இன்னும் குறைத்து
300 கோடிகளையேனும்
கமல் நிச்சயம் சம்பாத்தியம் கொள்வார்!

தமிழ் தவிர்த்து
தெலுங்கு/ கன்னடம்/ மலையாளம்/ இந்தி
முதலிய மொழிகளில் இப்படம்
அடுத்தடுத்து
D.T.H. திரையிட வாய்ப்பிருக்கிறது.
அம்மொழிகளிலும்
இந்தப் 'பேசும் பட' நாயகன்
100 சதவீதம் செல்லுபடி ஆகக் கூடியவர்!
தடுமாற்றமின்றி
அந் நிலப்பரப்பு மக்களிடமும்
இன்னொரு 500 கோடியை
எளிதாக அவரால் கறந்துவிட முடியும்.
நிச்சயம் செய்யவும் செய்வார்.
சம்பாத்தியமாச்சே!
அதுதானே புருஷ லெட்சணம்!

ஆக,
இந்த நவீன முறையில்
இப்படத்தின் வழியே...
(அது சராசரி தமிழ் சினிமா மாதிரியோ
அல்லது...
இன்னும் குப்பையாக இருந்தாலும்)
ரசிகர்களிடம் நட்சத்திர 'கிரேஜியை'
-தமிழில் சொன்னால்
அவர்களின் கிறுக்குத்தனமான-
கொதிநிலையை சாதகமாக்கிக் கொண்டு
சுமார் 1000 கோடிகளையோ
குறைத்து மதிப்பிடும் பட்சம் 
சுமார் எண்ணூறு கோடிகளையேனும்
எளிதில் சுருட்டிவிட முடியும்!
அதாவது
சுரண்டிவிட முடியும்.

எப்படிப்பட்ட பூர்ஷ்வாவாக இருந்தாலும்
இப்படிப்பட்ட சுரண்டலுக்கு
அஞ்சவே செய்வான்!
இங்கே அது
அமர்க்களமாக...
கோலாகல வரவேற்புடன்
அரச மரியாதைகளோடு நடக்க இருக்கிறது.

சுரண்டல் இத்தோடு
முடிந்ததாவென்றால்... இல்லை.
வழக்கமான
1500 பிரிண்ட் வெளியீட்டு
கணக்கு பாக்கி இருக்கிறதே!

டிக்கட் ஒன்றின் நிர்ணயிக்கப்பட்ட
விலை ரூபாய் 20/ 30/ 50 ஆக இருக்க.
அரசை இவர்கள்,
அனுமதியோடு பாக்கெட்டில் போட்டு கொண்டு
எல்லா டிக்கட்டுகளும்
ஏகத்துக்கும்
முதல் வாரம் 500 ரூபாய்
அடுத்த வாரம் 400 ரூபாய்
அதன் அடுத்த வாரம் 300 ரூபாய்
இப்படி வழக்கமாகி போன
பகல் கொள்ளை!

இதன்படிக்கு
அப்படம் வெற்றி நடைபோட்டு
50 நாட்களுக்கும் குறையாமல்
உலகம் முழுவதும்
இன்னொரு வசூலை நடத்தும்.
இதன் லாபத்தை கூட்டி பெருக்கிப் பார்க்க
13டிஜிடல் எண் கொண்ட
ஜப்பான் கால்குலேட்டரும் பத்தாது.
இந்தக் கணக்கில்
எப்படி குறைத்து பார்த்தாலும்
அதுவோர்
500 கோடியை கொண்டு வந்து கொட்டும்.

டி.வி.க்கு விற்பது
மொழிமாற்றம் செய்து
அதை இந்தியா பூராவும் ஓடவிட்டுப் பார்ப்பது
என்கிற வகையில்
இன்னொரு 200 கோடி வலிய வரும்!

இந்திய பிற மாநிலங்களிலும்
வெளிநாடுகளிலும்
ரஜினி படம் ஏமாற்றினாலும்
ஏமாற்றுமே தவிர
இந்த 'கல்யாணராம’னின் படம் ஏமாற்றாது.

அதிக அதிகமாக பார்த்தாலும்
சுமார் 50 கோடி பட்ஜெட்டிற்குள்தான்
இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கும்.
இங்கே கணித்தபடிக்கு
இது கொண்டுவந்து சேர்க்கும்
வருமானமோ சுமார் 1500 கோடி!

(மயக்கம் கொள்பவர்கள்
அருகிலுள்ள சுவற்றில் சாய்ந்து கொண்டு
வாசிப்பது நலம்.)

*
DTH/ விஸ்வரூபம்/ கமல்... பற்றிய
என் அபிப்ராயங்கள் என்பது
இப்படித்தான் இருக்கிறது.

சினிமா உலகத்தவர்கள் தரும்
நெருக்கடிகளினால்
கமல்
இன்று...
இந்த யுக்தியை கைவிட்டாலும்
நாளை இன்னொரு சினிமாக்காரர்
நிச்சயம் இதனை அரங்கேற்றுவார்.

கமலின் ’விஸ்பரூப’
அரங்கேற்றத்தைத் தொடர்ந்து
வியாபார சினிமாவின்
வியாபாரிகளது
சம்பாத்திய மூளை
இந்த நவீன யுக்தியை
கெட்டியாக பிடித்துக் கொள்ளும்.
விடவே விடாது.
'திருட்டு விசிடியை ஒழிக்கவே
நாங்கள் இதனை செய்கிறோம்' என்று
கமல் மாதிரியே
எல்லோரும் சத்தியம் செய்வார்கள்.

அதாவது
கமலின் விஸ்வரூபத்தோடு
முடிந்து போகிற சங்கதியில்லை இது!
நாளை புற்றீசல் போல்
ஒருபாடு படங்கள்
இப்படி வலம் வந்து
சம்பாத்தியம் என்கிற பெயரில்
பூர்ஷ்வாதனமான சுரண்டலை நிகழ்த்தும்.
அரசு இதற்கு வழிமுறை தேடும்வரை
நம்மால் ஆகுமானது எதுவுமில்லை.
சுரண்டப்படுபவர்களின்
சாதுர்ய வலையில் சிக்கி
பொருளை இழப்பதென்ற ஒன்றைத் தவிர.

***
பின்குறிப்பு:
விஸ்வரூபம்....
விஜயின் துப்பாக்கி மாதிரியே
இருக்கிறதாம்... என்று
இப்பவே களம் இறங்கவும்/
மவுண்ட்ரோட்டை அடைத்து
தொழுகை நடத்தவும்/
தியேட்டர் வாசலில் கூக்குரலிட்டு
படத்தை வெளியிட
அனுமதிக்க மாட்டோமென....
போராட்டம் நடத்தவும்
துடிப்பாக இருக்கும்
வழக்கமான
அந்த இஸ்லாமிய அமைப்புகளுக்கு
ஒரு வார்த்தை.

திட்டமிட்டப்படி
D.T.H.-ல்
கமல்
தனது விஸ்வரூபத்தை வெளியீடும் பட்சம்..
நீங்கள் பாவம்.
உங்களது போராட்டம்
ஒரு வீணான சங்கதியாகிப் போகும்.
அப்படத்தின் வெளியீட்டு தேதியில்
நீங்கள் போராடும் நேரம்
தியேட்டர் வெளியீட்டில் கிட்டும்
லாபத்திற்கு நிகரான
D.T.H.வழங்கியிருக்கும் லாபத்தை
அலுவலகத்தில் அமர்ந்து
சாவகாசமாக கணக்கிட்டு கொண்டிருப்பார்!

அப்படம்
உங்களால் தியேட்டரில் முடக்கப் பட்டாலும்
அது அவருக்கு கவலையை தராது.
உங்களின் போராட்ட முனையும்
மழுங்கிவிடும்.
சட்டம் ஒழுங்கின் கரங்கள் வேறு
உங்களை 'உண்டு இல்லை' யென
அவஸ்தைகளுக்கு உள்ளாக்கும்.
D.T.H.-ன் அருமையையே
அப்போதுதான்
நீங்கள் உணர்வீர்கள்.
***


 

கவிதை நடையில் சுரண்டிய தாஜுக்கு நன்றி ! இதே நடையில் தாஜை சுரண்ட  கூரிய நகங்களுடன் தொடர்பு கொள்க : satajdeen@gmail.com

Wednesday, December 12, 2012

Thursday, December 6, 2012

வாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூலின் கவிதை

’கனவில் வந்த அப்பா’ என்ற தலைப்பில் நண்பர் தாஜ் முன்பு ஒன்று எழுதியிருந்தார். பிடித்த கவிதை அது. வாப்பாவைப் பற்றி யார் எழுதினாலும் எனக்குப் பிடிக்கும். இந்தக் கவிதை நண்பர் ஹெச்.ஜி. ரசூல் அவருடைய ஃபேஸ்புக்கில் இட்டிருந்தது. இன்றுதான் பார்த்தேன். ஒரு மாதிரியாகிவிட்டது மனசு... பகிர்கிறேன், நன்றியோடு... - ஆபிதீன்

****


வாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூல்

எனக்குத் தொப்புள் கொடியறுத்த
அம்மச்சியை இன்றுவரை பார்த்த்தில்லை.
கர்ப்ப பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு
பூமியின் முதல்காற்றை சுவாசித்தபோது
என் காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன
எலப்பையின்குரல் ஓர்மையில் இல்லை.
சுட்டுவிரலால்
சேனைத்தண்ணி தொட்டுவைத்தபோது
அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்..
நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில்
பாதுகாத்து வைத்திருந்த மயிலிறகு
இன்னமும் குட்டி போடவில்லை.
நாலெழுத்து படிக்கவும்
நாலணா சம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா
ஒரு துறவி போல
உறவுகடந்து கடல்கடந்து
கண்ணுக்கெட்டாத தொலைதூரத்தில்
என்றேனும் ஒரு நாள்
வாப்பாவின் மடியில் தலைவைத்து
ஒரு இரவு முழுதும் தூங்க வேண்டும்.

***

போனஸ் : இன்னொரு கவிதை...

தனது அறைக்கு தனது வந்திருந்த வாப்பா - ஹெச்.ஜி.ரசூல்

எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த
நள்ளிரவில்அது நடந்தது.
சுவரில் மாட்டப்பட்டிருந்த
சட்டகத்தின் கண்ணாடி வழியாக
புகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி
தனது அறைக்கு வந்திருந்தார்.

அறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில்
மூத்தமகன் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன்மீதுகாலைத்தூக்கிப் போட்டு
பேத்தியும் படுத்திருந்தாள்.
பேத்தி நிரம்ப பாசம் வைத்திருந்தவள்
பிறரின் அந்தரங்கமான அறையில்
அத்துமீறி நுழைவது என்னவோ
வாப்பாவின் மனசுக்கு பிடிக்கவில்லை.
தனது மனைவியை அந்த அறையில்
தேடிவந்தவர் என்பதால் அதிகமொன்றும்
குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை

பீரோ பூட்டப்படாமல் திறந்திருந்தது.
கதவைத் திறந்துபார்த்தபோது
தான்முன்பு போட்டிருந்த வேட்டியும் சட்டையும்
கீழடுக்கு மூலையில்
அடுக்கு குலைய வைக்கப்பட்டிருந்தது.
துவைத்து வெளுத்திருந்தாலும் அதில்
தன்வியர்வையின்மணம் தங்கியிருந்ததை
அவரால் உணர முடிந்தது.
அறையின் ஒவ்வொரு பொருட்களும்
இடம் மாறிப் போயிருந்தன.

தானிருந்த வீடுபோல்தெரியவில்லை
தன் அனக்கம் கேட்டும்
உறக்கத்திலிருந்து விழித்து தன்னை யாரும்
ஏறிட்டு பார்க்காத வருத்தத்தில்
விரக்திமேலிட நின்ற வாப்பா
புகைப்படத்திற்குள்
திரும்பிச் செல்லமுயற்சித்தபோது
உள்ளே நுழையமுடியவில்லை.
மின்சார முள்வேலி போடப்பட்டிருந்தது.
வெளியேறிய வாப்பா
இப்போது வெளியேற்றப்பட்டுவிட்டார்.


***

Saturday, December 1, 2012

அராபிய தத்துவமேதை அல் கிந்தி - ஹமீது ஜாஃபர் கட்டுரை

பாகம் - 2

அருட்கொடையாளர் - 11
 
முதல் பாகத்தின் அருட்கொடையாளர் வரிசையில்  இறுதியாக இப்னு பதூதாவின் பயண நிகழ்வுகளின் கடைசி இரண்டு பகுதிகளும் மிகவும் நெருக்கடியான சூழலில் எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். ஆம், தாயாருக்கு  விபத்து ஏற்பட்டு தஞ்சை ரோகிணி மருத்துவமனையில் ஒருமாத சிகிச்சை, எனக்கு எதுவுமே தோன்றவில்லை. ஒரு பக்கம் தாயாரின் உடல்நிலைக் குறித்து கவலை, மறுபக்கம் தொடர் கட்டுரையை நிறைவு செய்யமுடியுமா என்ற சந்தேகம்.
 
மனக்கவலைக்கு மருந்தாக அறிவுபூர்வமான ஆலோசனை சொல்பவர் எங்கள் ஜஃபருல்லா நானா. அச்சமயத்தில் அவரது தாயாரும் இறைவனடி சேர்ந்தார்கள். இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்ளமுடியாமல் என் தாயாரின் அருகில் இருக்கவேண்டிய நிலை. இப்படி ஒருசேர பரிதவிப்புக்கிடையில்  அருகில் இல்லாவிட்டாலும் மூவாயிரம் மைல்களுக்கப்பால் துபையிலிருந்துக்கொண்டு ஆபிதீன் கொடுத்த ஆறுதல் எனக்கு தெம்பூட்டியது. வீட்டிற்கு வந்தபிறகு பாதியிலேயே நிற்கின்ற கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்து நிறைவு செய்தேன். அதன்பிறகு எழுதவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. தமிழுலத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களை வெளிப்படுத்திவிட்டோம், இது போதும் என்றே தோன்றியது.
 
நண்பர் தாஜுடன் பேசும்போதெல்லாம் "நானா எழுதுங்கள், இன்னும் எழுதுங்கள், அரசியலைப் பற்றி எழுதுங்கள், சமுதாயத்தைப் பற்றி எழுதுங்கள் ஆன்மீகத்தைத் தொடுங்கள்" என்று சொல்லிக்கொண்டே வந்தார். "நானா,  வெறும் இஸ்லாமிய அறிஞர்களை மட்டும் எழுதாமல் மற்ற அறிஞர்களையும் எழுதுங்கள்" - இது ஆபிதீன். "இது உங்களுக்கல்ல பின்னால் வரும் சமுதாயத்துக்கு" - இது ஜஃபருல்லாஹ் நானா. இப்படி ஒவ்வொருவரும் ஊக்கமூட்டினார்கள்.
 
அரசியல் மீது கொண்ட காதல் முறிந்து நாற்பது வருடங்களாகிவிட்டன; இருபத்திரண்டு குண்டு போட்டபிறகு "அங்கே என்ன பொகையுது" என்று கேட்டானாம் ஒரு செவிடன், அதுதான் சமுதாயம். நான் சொல்லும் ஆன்மீகம் 'ஹக்கீகத்துல் ஹக்கியா (உண்மையின் உண்மை)' நிச்சயமாக அது செரிக்காது; மலையாளத்தில் சொல்வது மாதிரி ’வடி(கம்பு) கொடுத்து அடி வேடிக்க(வாங்க) வேண்டிவரும்’. ஆகவேதான் இது. மற்ற அறிஞர்களைப் பற்றி எழுதும் முன் இவ்வுலகிற்கு பல்வேறு அறிவுகளை வெளிப்படுத்திய இஸ்லாமிய அறிஞர்கள் மறைக்கப்பட்டு அவர்களின் ஆய்வுகளில் தங்கள் பெயரை இணைத்துக்கொண்ட மேலை நாட்டவர்தான் இன்று ஒளிர்ந்துக்கொண்டிருக்கின்றர் என்பது திண்ணம். எனவே மறைக்கப்பட்ட / மறக்கப்பட்ட இன்னும் பலரை வெளிக்கொணர வேண்டும் என்ற உறுத்தல் நீண்டகாலமாக இருந்துகொண்டிருந்தது, அதன் வெளிப்பாடாக இதனைத் தொடர்கிறேன். ஆங்காங்கே சில தவறுகள் இருக்கலாம், கண்ணுறுபவர்கள் சுட்டிக்காண்பிக்க வேண்டுகிறேன்.
 
 
**
 
 
 
ஆல்கஹால் இன்று உலகத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகின்ற பொருள்களில் ஒன்று. ஆல்கஹால் என்ற ஆங்கில வார்த்தை அரபு மொழியிலிருந்து எடுக்கப்பட்டது, எனவே ஆல்கஹால் அரபுலகத்திடம் நெருங்கிய தொடர்புள்ளது என கொள்ளலாம். இன்று நெருங்கிய அல்லது நேரடியான தொடர்பு இல்லாவிட்டாலும் மறைமுகமான தொடர்பு இன்றும் உள்ளது. போதை தரும் பொருளாக இல்லாவிட்டாலும் மருந்தாக, வாசனைப் பொருளாக, ஆராய்ச்சிப் பொருளாக இப்படி பல பரிமாணங்களில் அனைவரிடமும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டது. ஆக அரபுலகம், அரபல்லாத உலகம், முஸ்லிம் உலகம், முஸ்லிமல்லாத உலகம் என்ற பாகுபாடில்லாமல் வலம் வந்துக்கொண்டிருக்கும் இதனை, இதன் தன்மையை சற்றேறக்குறைய பத்து நூற்றாண்டுகளுக்கு முன் அரபுலகத்தைச் சார்ந்த ஒருவர் ஆராய்ந்தார். அதன் பயன் இன்று ஆலமரமாக விரிந்து பரந்து கிடக்கின்றது என்றால் மிகையாகாது.
 
இமாம் ஜாஃபர் சாதிக் அவர்களின் மாணக்கராகிய ஜாபிர் பின் ஹைய்யான்  அவர்களின் வேதியல் ஆய்வுகளால் உந்தப்பட்டு அதனை ஆராய்ந்த  இவரின் முழுப் பெயர் அபு யூசுப் யாக்கூப் இப்னு இஸ்ஹாக் அல் கிந்தி. இவரது பிறந்த வருடம் தெளிவாக இல்லை என்றாலும் கலிஃபா ஹாரூன் ரஷீத்  அவர்களின் ஆட்சி காலத்தில் இவரது தந்தை கூஃபாவின் கவர்னராக இருந்த காலத்தை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கி.பி 800ல் பிறந்திருக்கலாம் என்று யூகிக்கின்றனர். 
 
வழித்தோன்றல்
 
இவரது தந்தையைப் போலவே இவரது பாட்டனாரும் கூஃபாவின் கவர்னராக இருந்திருக்கிறார். இவரது வழிமுறை சவுதி அரேபியாவைச் சார்ந்த 'கிந்தா' (Royal Kindah tribe) என்ற உயர்குலப் பிரிவாகும். பல பிரிவுகளை ஒருங்கிணைத்த இப் பிரிவினர் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் வலிமை இழந்தாலும் அரசாங்கத்தில் மிக முக்கிய பொறுப்புக்களில் இருந்தனர். அவ்வகையில் இவரது பரம்பரையினர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததில் வியப்பில்லை. 
 
கல்வியும் வாழ்க்கையும்
 
ஆரம்பக் கல்வியை கூஃபாவில் முடித்தபின் உயர் கல்வியை பக்தாதில் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் மாணவப் பருவத்திலேயே தனது திறமையை வெளிப்படுத்தினார். கி பி 813ல் பாக்தாதில் ஏற்பட்ட அரசியல் புரட்சியின் விளைவாக தனது சகோதர் அல் அமீனை வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்த கலிஃபா மாமூன்  பல மாறுதல்களைச் செய்யத் தொடங்கினார். அறிவுத் தாகம் கொண்ட கலிஃபா பக்தாதில் தந்தை ஹாரூன் அல் ரஷீது நிறுவிய அறிவாலயத்தில் (House of Wisdom)  பல்வேறு அறிஞர்களை வரவழைத்து பல முன்னேற்றங்கள் செய்யத் தொடங்கினார்.  அல் கிந்தியின் அசாத்தியத் திறமையைக் கேள்வியுற்ற கலிஃபா, குவாரிஜ்மி, அபு மூசா சகோதரர்கள் போன்ற அறிஞர்களுடன் பணியில் அமர்த்தினார். அங்கு முக்கியப் பணிகளில் ஒன்று பைசாந்திய கிரேக்க தத்துவ நூற்களை அரபியில் மொழிபெயர்க்கச் செய்வது. மொழிபெயர்ப்பு இரண்டு பிரிவாக நடைபெற்றது. ஒன்று குவாரிஜ்மி தலைமையிலும் மற்றொன்று ஹுனைன் பின் இஸ்ஹாக் தலைமையிலும். மொழிபெயர்ப்பாளர்கள் பெரும்பாலும் சிரிய கிருஸ்துவர்களாக இருந்ததால் தவறு நிகழ்ந்துவிடாமல் இருக்க அராபிய அறிஞர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடையே பாலமாக இருந்தார் என்று சில ஆய்வாளர்களும், கிரேக்க மொழி அறிந்திருந்தாலும் இவரால் படிக்கத்தெரியாது என்பதால் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு மேற்பார்வையாளராக இருந்தார் என வேறு சில ஆய்வாளர்களும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பேரறிஞர்களான அல்குவாரிஜ்மி, இப்னு மூசா சகோதரர்கள், ஹுனைன் பின் இஸ்ஹாக், தாபித் பின் குர்றா போன்றோருடன் பணியாற்றிருக்கிறார் என்பது தெளிவு.
 
833-ல் மாமுன் இறந்தபின் அவரது சகோதரர் அல் முஃதாசிம் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவருடைய ஆட்சி காலத்தில் முஃதாசிமின் மகன் அஹமதுக்கு கல்வி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 842-ல் முஃதசிம் இறந்தபின் அல் வத்திக்கும் 847-ல் அல் முத்தவக்கிலும் ஆட்சிப் பொறுப்பேற்றனர்.
 
இப்போது போலவே அப்போதும் ஆட்சியாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துக்கொண்டேதான் இருந்தது, ஒரு சில மன்னர்களைத் தவிர. அந்த வகையில் கடைசி இரண்டு கலிஃபாக்கள் காலத்தில் அல் கிந்தி சரியாக நடத்தப்படவில்லை. மார்க்க ரீதியான முரண்பட்ட கண்ணோட்டம் அல்லது அறிவாலயத்தின்(house of wisdom) அறிஞர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இவைகள் காரணமாக இருக்கலாம் ஆனால் தெளிவான ஆதரமில்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கலிஃபா முத்தவக்கிலுகும் அல்கிந்திக்குமிடையே மனக்கசப்பு அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் அரபி சித்திர எழுத்து (Calligraphy) பணிகளை இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அல்கிந்தி தண்டிக்கப்பட்டு அவருடைய நூல்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு பின் அவை அனைத்தும் திருப்பி அளிக்கப்பட்டதாக வறலாறு இயம்புகின்றது என்றாலும் இதன் பின்னனியாக இவருடைய தத்துவ நூற்களால் பனுமூஸா மற்றும் அபு மஃஷருக்கும் இவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே கலிஃபாவிடமிருந்த உறவு பாதிக்கப்பட காரணமாயிருந்தது என்கின்றனர்  ஜெ. ஜெ. ஒகானெர் மற்றும் இ. எப். ராபர்சன். ஹென்றி கோர்பின் கூற்றுபடி கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்த அல்கிந்தி அல் முஃதமித் (ஆட்சி-870-892) ஆட்சிகாலத்தில் கி பி 873 -ல் பாக்தாதில் இறைவனடி சேர்ந்தார்.
 
 
 
ஆக்கங்கள்
 
பல்கலை வித்தகரான இவர், பிரசித்திப் பெற்ற  இஸ்லாமிய தத்துவ அறிஞர்களில் ஒருவராகவும் மத்தியகால பண்ணிரண்டு அறிஞர் பெருமக்களில் ஒருவராக இருந்தார் எனவும் இத்தாலிய ஆய்வாளரான ஜெரலொமோ கர்டனொ(1501-1575) கூறுகிறார். மற்றொரு அறிஞர் இப்னு அல் நதீம்  கூற்றுபடி அல்கிந்தி 260 நூற்கள் எழுதியிருப்பதாகவும் அவைகளில் ஜியோமிதி 32 நூற்கள், எண்கணிதம்(Arthmetic) 11,  வானவியல் 16, மருத்துவ இயல்(medicine) 22, தத்துவம் 22, தர்க்கம் 9, இயற்பியல் 12, உளவியல் 5, கலை மற்றும் இசை 7 இதல்லாமல் tides, astronomical instruments, rocks, precious stones etc.  இவர் எழுதிய நூற்கள் பல, காலத்தால் அல்லது மங்கோலியர்களின் ஊடுறுவலினால் அழிந்தன. சிலவற்றை இத்தாலிய அறிஞர் ஜெரார்டு (Gerard of Cremona) லத்தீனில் மொழிபெயர்த்தார். இருபத்தி நான்கு வகையான நூற்கள் துருக்கி நூலகத்தில் காணப்படுகின்றன.
 
கணிதம்
 
கணிதவியலைப் பொருத்தவரை இன்று அரபிய எண்கள் என்று சொல்லப்படும் இந்திய எண்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியதிலும் வானவியல் கணிதத்திலும் அல் குவாரிஜ்மியின் பங்கு மகத்தானது என்றாலும் அல்கிந்தியின் பங்களிப்பும் அதில் பொருந்தியிருக்கிறது. எண்களின் இணக்கம், பெருக்கல் வழிமுறை, கால அளவீட்டில் எண்களின் பயன்பாடு, எண்களை ஒழுங்கு படுத்தலும் நீக்கலும் முதலானவற்றை தெளிவுப் படுத்தியவர் அல்கிந்தியாகும். இவர் எழுதிய நான்கு பாகங்கள் கொண்ட 'கித்தாப் ஃபி இஸ்திமால் அல் அதத் அல்-ஹிந்தி (On the Use of the Indian Numerals ) என்ற நூல் மத்திய கிழக்கிலும் மேற்கிலும் இந்திய எண்களின் பயன்பாட்டை பரப்பியதில் பெரும் பங்கு வகுத்தது. ஜியோமிதியில் இணைகோடுகளின் கோட்பாட்டையும் ஒளி இயலில்(optic) ஜியோமிதியின் பங்கையும்  விவரித்துள்ளார்.
 
வானவியல்
 
அல்கிந்தியின் வானவியல் கொள்கை தாலமியைப் பின்பற்றியதாகவே இருந்தது. பூமியை மையமாகக் கொண்டு சூரியன் முதல் அனைத்து கோளங்களும் சுற்றி வருகின்றன என்பது தாலமியின்  கொள்கை. இக்கோளங்களின் சுழற்சி இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது இவரது அறிவார்ந்த கொள்கைகளில் ஒன்று. கோளங்கள் குறிப்பாக சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் இடப்பெயற்சியால் பூமியில் காலமாற்றம் ஏற்படுகிறது, இடத்துக்கு இடம் மாறுபடும் பருவநிலை வித்தியாசம் அவ்விடங்களுக்கும் கோளங்களின் நிலைக்குமுள்ள வித்தியாசத்தால் ஆகும். இத்தன்மையினால் பூமியில் அனைத்துப் பொருட்களை உண்டாக்குகின்ற நான்கு மூலகங்களான நீர், நெருப்பு, காற்று, மண் இவைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 
வேதியியல்
 
ரசவாதம் முடியாத ஒன்று, ஒரு மூலகத்திலிருந்து வேறொரு மூலகத்தை உருவாக்க முடியாது  எனவே தாழ்வான உலோகத்தை தங்கமாக மாற்ற முடியாது, ஒரு பொருள் அதன் மூலப்பொருளிலிருந்தே (base metal) உருவாக்கமுடியும் என்கிறார். வேதியலைப் பொருத்தவரை  ஜாபர் பின் ஹைய்யானின் அல்கமி கொள்கைகளின் பலவற்றில் மாறுபட்டு நின்றாலும் ஆர்வம் நிறைந்தவராகவே இருந்தார். ஒயினில் எந்த வேதிப் பொருள் போதைத் தருகிறது என்பதைக் கண்டறிய பலமுறை காய்ச்சி வடித்தலின் (Distillation) மூலம் ஆல்கஹாலை (pure alchohol) தூய்மைப் படுத்தும் முறையை முதலில் கண்டறிந்தார். மேலும் மலரிலிருந்து பல்வேறு முறைகளில் அத்தர் தயாரிப்பு முறையும் கண்டுபிடித்தார். மருத்துவத்தைப் பொருத்தவரை இவரது பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நோய்க்கான மருந்தின் அளவீடு எப்படி இருக்கவேண்டும், நோயாளிக்கு எவ்வளவு மருந்து எப்போதெல்லாம் கொடுக்கவேண்டும் என்பதை வரையறுத்தார். இதனால் மற்ற மருத்துவர்களுக்கும் இவருக்குமிடையே மனக்கசப்பு ஏற்பட்டது.
 
தத்துவம்
 
அன்றைய காலக்கட்டத்தில் அரபுலக தத்துவார்த்த சிந்தனைகளை மேம்படுத்தும் அகராதியாக விளங்கினார். அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை சார்ந்து இவரது தத்துவக் கோட்பாடும் இருந்தது. அதே சமயம் ப்ளாட்டோ, ப்ரோக்ளஸ்  போன்ற தத்துவ ஞானிகளும் அங்காங்கே வந்துப்போனார்கள். எனவே முன் சொன்ன  அறிஞர்களிடமிருந்து எல்லாம் பெறப்பட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் தாக்கம் இருந்தது. என்றாலும் அவரது சொந்தக் கோட்பாடே  என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 
இவரது கோட்பாடு அக்காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.  ஒரு சாரார் இஸ்லாத்துக்கு எதிரானது என்றனர். இக்கோட்பாடு எந்த வகையிலும் இஸ்லாத்தின் பழமை மரபுக்கு (orthodox islam) முற்றிலும் எதிரானதல்ல என்றார் அல்கிந்தி.  இந்த தத்துவத்துக்கும் இஸ்லாத்துக்கும் முற்றிலும் இசைவான தொடர்பு பல வகைகளில் வெளிப்படையானது என்று வாதிட்டார். விளைவு , அபுமூஸா சகோதரர்கள் மற்றும் வானவியலார் அபுமஃஷருடைய பகைமையை சம்பாதித்துக்கொண்டார். அது மட்டுமல்லாமல் வாத விவாதங்களும் ஏற்பட்டன. இது இமாம் கஜ்ஜாலி (1058-1111) அவர்களின் காலம்வரை நீடித்தது. இமாம் அவர்களே முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். 
 
மூலதத்துவம் (Metaphysics)
 
இவரது சிறந்த நூலான 'ஃபி அல்-ஃபல்சஃபா அல்-உலா'வில் (on first philosophy) அரிஸ்டாட்டிலின் கோட்பாடு ஒரு சில காணப்பட்டாலும் மற்றவை மாறுபடுகிறது. உதாரணமாக உலகத் தோற்றத்தை பற்றிய கோட்பாடு இருவருக்கும் மாறுபடுகிறது. உலகம் முடிவற்றது என அரிஸ்டாட்டிலும் அவரைப் பின் தொடர்ந்து மற்ற கிரேக்க தத்துவஞானிகளும் போதிக்கின்றனர். அல் கிந்தி, இன்மையிலிருந்து (ex nihilo) உலகம் தோன்றியது என முன்வைக்கிறார். மேலும் அந்நூல் மூலம் அவர் வெளிப்படுத்துவது முதல் தத்துவம்; அதாவது முதல் உண்மை. அது தன்னுள் எதனையும் கொள்ளவில்லை; தன்மையோ, பன்மையோ, குணமோ, பண்போ எதிலும் கட்டுப்பாடற்றது; எதனுடனும் அதனை ஒப்பிடவோ, குறிப்பாகவோ, குறிப்பற்றோ விளக்கமுடியாது; அதிலிருந்தே மற்ற உண்மைகள் வெளிப்பட்டன. முதல் உண்மைக்கு மறு பெயர் இறைவன் என்கிறார். அதன் சக்தி, இல்லாமையிலிருந்து உள்ளமையாக்குவது (மூலமே இல்லாமல் படைப்பது;. அது முடிவற்றது; முன் பின் என  எல்லையற்றது; மாறமுடியாதது; மாற்றமுடியாத்து; அழிவற்றது). மனிதன் என்பது வாழ்க்கை முழுவதும் ஆன்மாவைக் கொண்டு பயணிப்பது. ஆன்மா உடம்பைவிட்டு பிரிவதே மரணம். ஆன்மாவின் இருப்பிடம் அறிவு. அறிவை மனிதன்  சடஉலகிலிருந்து பெறவேண்டும்.
 
காலமும் இயக்கமும் எல்லையற்றது ஒன்றோடொன்று பிணைந்தது என்பது கிரேக்கக் கொள்கை. அல் கிந்தி இதிலிருந்து மாறுபடுகிறார். சடம், காலம், இயக்கம் அனைத்துக்கும் எல்லையும் முடிவும் உண்டு என்கிறார். 'அல் வஹ்தானியா அல்லாஹ் வ துனாஹியா ஜிர்முல் ஆலம் (On the Unity of God and the Limitation of the Body of the World) மற்றும் 'ஃபி கம்மியா குத்துப் அரிஸ்தாதலிஸ் வ மாயஹ்தஜ் இலாஹி ஃபி தஹ்ஸில் அல் ஃபல்சஃபா (The Quantity of the Books of Aristotle and What is Required for the Acquisition of Philosophy)' என்ற இரு நூற்களிலும் விரிவாக விளக்கியிருக்கிறார்.
 
அல் கிந்தி, தனது தத்துவ கோட்பாட்டை இஸ்லாத்துடன் நேர் விவாதம் செய்யாமல் பொதுவாகவே தவிர்த்துக் கொள்கிறார். அதல்லாமல் மதக்கோட்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்காமல் இணக்கமாகவே கொண்டு செல்கிறார்.
 
ஒழுக்க நெறிமுறை (Ethics)
 
'ஃபி அல்ஹிலா லிதஅஃப் அல் அஹ்ளன் (On the Art of Averting Sorrows) என்ற நூலில் ஒழுக்க நெறிகளையும் நடைமுறை தத்துவத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார். அல் கிந்தி, Stoic ஐதிகத்தால் வெகுவாகக் கவரப்பட்டிருக்கிறார் குறிப்பாக அன்றைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் சிரிய நாட்டு கிறுஸ்துவ அறிஞர்களுடன் தொடர்பு இருந்ததினால் எபிக்டிட்டஸ்-ன்  சிந்தனை காணப்படுகிறது என்கிறார் ஃபஹ்மி ஜடான் என்ற தத்துவப் பேராசிரியர்.  மற்றவர்களுடைய சுதந்திரத்தை பாதிக்காமலிருப்பதே ஒரு மனிதனுடைய மகிழ்ச்சி என்கிறார் எபிக்டிட்டஸ். அவரது கொள்கையில் முடிவாக, ஒரு மனிதன் இனிமேல் இவ்வுலகில் வாழவேண்டிய அவசியமில்லை என்ற நிலை வரும்போது அவன் தற்கொலை செய்துக்கொள்ள அனுமதிக்கிறார். இந்த முடிவை அல் கிந்தி ஏற்றுக்கொள்ளவில்லை. மனிதனுடைய உண்மை நிலை அவனது உடம்பில் இல்லை ஆன்மாவில் இருக்கிறது என்கிறார் அல் கிந்தி. பயனில்லா ஒன்றை இவ்வுலகில் நோக்குவதும் கிடைக்காத ஒன்றின் மீது ஆசை கொள்வதும் துன்பத்தை விளைவிப்பதே. எனவே மனம், சமநிலை பாதிக்கப்படும்போது சுயமும் பாதிக்கிறது. ஆகவே உலகியலோடு ஒரு மனிதன் தன்னைப் பொருத்திக்கொள்வதை அல் கிந்தி கடுமையாக எச்சரிக்கிறார்.
 
அறிவுநெறியியல் (Epistemology)
 
இவ்வுலக வாழ்வில்கூட ஆன்மா அல்லது உயிரையும் உடம்பையும் இருவேறாகப் பிரித்துப் பார்க்கிறார் அல் கிந்தி. அவர் இங்கே ஆன்மா என்று குறிப்பிடுவது intellective or rational soul. அது இணையானதென்றாலும் புலனறிவுபோல் புலநுணர்வு தனித்தே செயல்படுகிறது. உணர்ச்சி திரள்வது போல் அறிவாளி தன்னுள் இயல்திறனைத் திரட்டிக்கொள்கிறான். இத்தகையவர் அறிவுசார்ந்த அனைத்தையும் தன்னுள் உள்வாங்கிக்கொள்கிறார். உள்வாங்கியவற்றை வைத்து சிந்திக்கும்போது உண்மையான சிந்தனை வெளிப்படுகிறது, எனவே இது 'உண்மையான அறிவு' என்கிறார் அல் கிந்தி. ஆனால் பின் வந்த தத்துவ வாதியான அல் ஃபராபி அதனை  'முயன்றுபெற்ற அறிவு' என்கிறார்.
 
இசை
 
இசையை அறிவியல் ரீதியாக அணுகியிருக்கிறார். சப்தங்களின் பிரத்தியேக அமைப்பை தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறார். குறிப்பிட்ட ஸ்வரத்தை (notes) இசைப்பதினால் எப்படி இசைப் பொருத்தம் (harmony) ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்தார். ஒவ்வொரு ஸ்வரத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்து எவை மிகத் தாழ்ந்த அல்லது மிக உச்ச சுருதியில் (very low pitch or very high pitch) இருக்கிறதோ அவற்றில் இசை இணக்கம்(harmony) ஏற்படாது என்பதை கண்டறிந்து ஒவ்வொரு சுருதியையும் எப்படி அமைப்பது என்பதை எழுத்தில் வடித்தார்.
 
 


பல்கலை வித்தகரான அல் கிந்தியின் சிந்தனை பண்ணிரெண்டாம் நூற்றாண்டு வரை ஸ்பெயின், மேற்கத்திய நாடுகளில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமின் கில்ஸ் என்பவர் அல் கிந்தியின் சிந்தனைகளை குறை கூறினார்.  எப்படி இருந்தாலும் மேற்கத்திய இஸ்லாமிய பண்பாட்டில் அல் கிந்தியின் சிந்தனைகள்  நீடித்தன. சுருக்கமாகச் சொன்னால் பின்னால் வந்த இமாம் கஜ்ஜாலி, இப்னு சினா, அல் ஃபராபி ஆகியோர்களுடய தத்துவக்கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் இவரே என சொல்லலாம்.

Sources:
http://en.wikipedia.org/wiki/Al-Kindi
http://www.muslimphilosophy.com/ip/rep/H029.htm
http://plato.stanford.edu/entries/al-kindi/
http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Al-Kindi.html
http://www.alshindagah.com/septoct2005/kindi.html

மேலும் பார்க்க : அருட்கொடையாளர்கள்

***

 
நன்றி : ஹமீது ஜாஃபர் | http://hameedjaffer.blogspot.com/ | E-Mail : manjaijaffer@gmail.com