Thursday, May 30, 2013

அபூர்வ புகைப்படம்

'ஐயாயிரம் ரூவா தர்ரேன்னு கெஞ்சுனாஹா பலபேரு - இந்த ஃபோட்டோ வேணும்டு; கொடுக்கவே இல்லே.  நீம்பரு என்னாண்டா.. ஒரே ஒரு குலாம்அலி கஜலை கொடுத்துட்டு எடுத்துட்டு போறியுமேங்.. ஓய், இது நல்லாயில்லே..' என்று சொல்லியபடியே ஓடோடி வந்தார் நானா. அவருடைய புதிய கவிதைகளையும் சுட்டது அவருக்குத் தெரியாது! -   ஆபிதீன்
***
கண்ணியமிகு ‘காயிதே மில்லத்’ அவர்களுடன் சீர்மிகு சிந்தனையாளர் 'சிராஜுல் மில்லத்' அவர்கள்..


***
நன்றி : இஜட். ஜபருல்லா | Cell : 0091 9842394119

Wednesday, May 22, 2013

ஓவியம் : 'ஆவிக்னான் இள மங்கையர்'

'யுனெஸ்கோ கூரியர்' பிக்காஸோ சிறப்பிதழிலிருந்து... (பிப்ரவரி 1981)

***

'1907இல் தீட்டப்பெற்ற 'ஆவிக்னான் இள மங்கையர்' எனும் ஓவியம் உலகைப் பற்றிய நம் நோக்கையே மாற்றிவிட்டது.' - சாண்டியாகோ ஆமோன்

தமிழில் : இரா. நடராசன்

**

பிக்காஸோ 1907இல் "ஆவிக்னான் மங்கையர்" என்ற ஓவியத்தைத் தீட்டி, கலையுலகில் ஒரு புதிய மரபையே தோற்றுவித்தார். பழைய மரபுகளிலிருந்து விலகிச் சென்று, உறுதியோடும் துணிவோடும் இவர் படைத்த இந்த ஓவியந்தான், தற்காலத்து நவீன பாணிக்கலை உருவாகக் காரணமாயிற்று. பிக்காஸோவுடன் புதிய மெய்யுணர்வு நயமும், உலகினை நோக்கும் புதிய வழியும், மனித வரலாறு பற்றிய புதிய மதிப்பீடும் பிறந்தன.

பிக்காஸோவின் கலைச்சிறப்பினை தகுதியினை மறுப்பவர்கள் இன்றும் உளர். வகுப்பறையில் -உணவு விடுதியில் - சிறப்பு அங்காடியில் - விமான நிலையத்தில் இருந்து கொண்டு "சக மனிதர்களைக் கேலி செய்யும் ஒரே குறிக்கோளுடன்தான் பிக்காஸோ பிறந்தார்" என்று ஏளனம் செய்யும் போது, அவர்கள் தாங்கள் இருக்கும் அந்த இடங்கூட ஏதோவொரு வகையில் பிக்காஸோ காட்டிய நெறிப்படி வடிவமைக்கப்பட்டதுதான் என்பதை உணர்வதில்லை. "பிக்காஸோவின் உயிரில் பொருள் ஓவியங்கள் தான் எனது சிறந்த கட்டடக் கலைப் படைப்புகளுக்கு ஆதாரம்" என்று இக்காலத் தலைசிறந்த கட்டடக் கலைஞராகிய ஸே கார்பூசியர் கூறவில்லையா?

"நவீனபாணிக் கலையால் பொது மக்களுக்கு உண்டாகும் திகைப்புக்கும் சினத்திற்கும்  இலக்காக அமைகிறார் பிக்காஸோ" என்று ·பிரெஞ்சு எழுத்தாளர் ஜூன் கேசு ஒருமுறை கூறினார். ஆனால், உண்மையில் பொது மக்கள் திகைப்பதுமில்லை; சினங்கொள்வதுமில்லை. புரையோடிய பழமைக்குப் புதிய பாணிக் கலையும் - அதன் சின்னமாகிய பிக்காஸோவும் சாவுமணி அடிப்பதையும், முற்போக்குப் பாதையில் வரலாறு முன்னேறுவதை இனியும் தடுக்க இயலாது என்பதைக் கண்ட பத்தாம்பசலிகள்தாம் ஆத்திரங்கொள்கின்றனர்.

இந்த எதிர்ப்பாளர்கள் சிறுபிள்ளைத்தனமாக இவ்விதம் சீற்றம் கொண்டு, நவீனபாணிக் கலையின் தந்தை பிக்காஸோவை ஏன் சபிக்கிறார்கள்? இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். நவீன பாணிக் கலைக்கும் (அதன் சின்னம் பிக்காஸோவுக்கும்) மக்களின் பேராதரவு கிடைத்து விட்டது. பழமைக்குத் திரும்பிவிட இயலாதபடிக்கு வீணாகப் பழம் பெருமை பேசமுடியாதபடிக்கு- நவீன சிந்தனைகளும் , வடிவங்களும் இன்றைய உலகில் பெருஞ்செல்வாக்கு பெற்றுவிட்டன. இதையெல்லாம் பொறாத எதிர்ப்பாளர்கள், இதற்கு மூலகாரணமான பிக்காஸோ மீது தங்கள் ஆத்திரத்தையெல்லாம் கொட்டுகிறார்கள்.

சமகால உலக நடப்புகளை நவீனபாணிக் கலை உள்ளபடியே பிரதிபலிக்கிறது. எனவேதான், சமகால வரலாற்றின் நாடித்துடிப்பினை அறியும் சாதனாமாக இப்புதிய கலை நிகழ்கின்றன. இதற்கு வழிவகுத்தது பிக்காஸோ தீட்டிய "ஆவிக்னான் நங்கையர்" என்ற ஓவியமாகும். அதுமுதல், ஒருசில முன்னோடிகளின் துணிவான முயற்சிகளால், புதுவகை உறவு முறையே உருவாகியது.

பிக்காஸோவும் அவரது ஓவிய நண்பர்கள் சிலரும் பெற்றிருந்த தீர்க்கதரிசனம் அதிசயமானது. பின்னர்த் தோன்றிய ரஷ்யப் புரட்சியால் ஏற்பட்ட புதுவகை வாழ்க்கை முறையினையும், புதுமையான நடப்புகளையும் இவர்கள் முன்கூட்டியே உணர்த்தினர். இப்புரட்சிக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே "ஆவிக்னான் நங்கையர்" ஓவியத்தைப் பிக்காஸோ தீட்டினார். "இருபதாம் நூற்றாண்டின் உண்மை நிலவரத்திற்கும் 19ஆம் நூற்றாண்டு நிலவரத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை என்பதைப் பிக்காஸோ - பிக்காஸோ மட்டுமே - உணர்ந்து அதனைத் தமது ஓவியங்களில் சித்தரித்தார்' என்று ஜெர்ட்ரூடு ஸ்டெயின் அம்மையார் கூறியுள்ளார்.

மறுமலர்ச்சி யுகத்திற்கு காட்சியுருக் கொடுப்பதிலும் மனிதனையும் சமுதாயத்தையும் பற்றிப் புதிய கண்ணோட்டத்தில் சிந்திப்பதிலும் பிக்காஸோ முன்னோடியாகத் திகழ்ந்தார். இச் சிந்தனையை அவர் தம் ஓவியம் மூலம் பிரச்சாரம் செய்தார்.

"நற்சுவை நயப்பு நாசமாய்ப் போக!" என்று பிக்காஸோ ஒருமுறை உணர்ச்சிவேகத்தில் கூறினார். பின் இதனையே அவர் தமது வேதவாக்கியமாகவும் கொண்டார். "ஆவிக்னான் நங்கையர்" ஓவியத்தை அவர் தீட்டியது, கலை வரலாற்றிலேயே ஒரு புரட்சிகரமான செயலாகும். இது உருவாக்கியபோது காலங்காலமாய் மூடிமறைக்கப்பட்டிருந்த - அழகோ, அணி நலமோ, ஆடம்பரமோ, நாகரிகமோ இல்லாத - ஓர் அலங்கோல வாழ்க்கை அம்பலமாவதை அவர் கண்டார்.

"நற்சுவை நயப்பை" முதலில் புறக்கணித்தவர் பிக்காஸோதான். பின் வந்த தற்குறிப்பேற்றவாதிகளும், நுட்பவியலாளர்களும் , இயல்பு நவிற்சியாளர்களும், பிறரும் இவரைப் பின்பற்றினர். இந்தப் புறக்கணிப்பை அவர் பிரகடணம் செய்யவில்லை; கிளர்ச்சியிலும் இறங்கவில்லை. மாறாக அரும்பாடுபட்டு வ்ரைந்த "ஆவிக்னான் நங்கையர்" ஓவியம் வாயிலாக வெளிப்படுத்தினார். இந்நூற்றாண்டில், புரட்சி இயக்கங்களால் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை விட இந்த ஓவியம் மிகுந்த ஆவேசத்தையூட்டியுள்ளது.

"இவ்வுலகை அதிரடிக்கவும் அதனைத் தலைகீழாக மாற்றவும் - அதற்குப் புதிய கண்களைக் கொடுக்கவுமே பிக்காஸோ இங்கு பிறந்தார்" என்று ஸ்பானியக் கவிஞர் ர·பேல் ஆல்பர்டி எழுதினார். நாம் 'ஊன்றிவைக்கப்பட்டுள்ள' ஒரு புதிய உலகுடன் நாம் இணங்கிச்செல்கின்ற வரலாற்றில்தான் பிக்காஸோவின் வாழ்க்கை வரலாறும் அடங்கியிருக்கிறது.

ஸ்டெயின் அம்மையார் உருவப்படத்தை 1906இல் பிக்காஸோ வரைந்தார். அதற்காக அவரை 90 அமர்வுகளுக்கு வரவழைத்தார். ஓவியம் பூர்த்தியாகுந் தறுவாயில் , பிக்காஸோ பாரீஸ் சென்று விட்டார். பல மாதங்களுக்குப் பின் திரும்பியதும் அதனை முடித்தார். முடிவடைந்த ஓவியத்தைப் பார்த்த அம்மையாருக்கு அது தம் உருவந்தானா என்ற ஐயம் எழுந்தது. அவருக்கு, "கவலைப்படாதீர்கள். ஒருநாள் நீங்கள் இப்படித் தோன்றுவீர்கள்" என்று பிக்காஸோ ஆறுதல் கூறினாராம்.

பிக்காஸோ 1906இல் தீட்டிய மனித உருவங்கள் அனைத்திலும் காணப்படும் இவரது ஓயாத தேட்டாண்மையை ஒட்டுமொத்தமாக "ஆவிக்னான் நங்கையர்" ஓவியத்தில் காணலாம். இது பழமையை விலக்கிவிட்டு கூட்டு உருவங்களின் வடிவில் தோன்றிய புதிய சகாப்தத்திற்கு ஒளியேற்றி வைத்தது.

"ஒருநாள் இந்த உருவப்படத்தில் உள்ளதுபோல் நீங்கள் தோன்றுவீர்கள்" என்ரு 1906இல் பிக்காஸோ குறிப்பிட்ட அந்த நாளும் அடுத்த ஆண்டே வந்தது. அப்போது அவர் வரைந்த "நங்கையர்" ஓவியம் முந்திய மரபுகளையெல்லாம் தலைகீழாக மாற்றியது. இதில் அவர் தீட்டியிருந்த சோக உருவங்கள் அனைத்தும் பிக்காஸோவின் முகச்சாயலைக் கொண்டிருந்தன.  அதன்பின் அவர் வரைந்த எல்லா முகங்களிலுமே இந்த உருவங்களின் சாயலே அமைந்திருந்தன.

மனிதனின் முதுமை உருவத்தைத் திரித்துக் காட்ட விரும்பினார் என்றால் அதற்கு அவர் தமது சொந்த உருவத்தையே எடுத்துக் கொண்டார். எல்லா அவமதிப்புகளையும் தம் உருவத்திற்கே செய்தார். இந்த அவமதிப்புத்தான் பின்னர் ஒரு கழுவாயாக அமைந்து மனித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தையே தோற்றுவித்தது. அப்போது, அவர் மேற்கொண்ட பெரும் சோதனைகளுக்கு, தாம் நன்கறிந்த தமக்கு மிகவும் அறிமுகமான, தம் சொந்த முகத்த்தை விடச் சிறாந்த முகத்தை வேறு எங்கு அவர் கண்டிருக்க முடியும்?

இதன்பின்பு, பழமையை வைராக்கியத்துடன் புறக்கணித்ததன் மூலமாகவும்  "ஆவிக்னான் நங்கையார்' ஓவியம் வாயிலாகவும் பழம் மரபுகளை உடைத்தெறிந்து , வருங்காலத்திற்கு தடையாக இருந்த முட்டுச்சுவரின் விரிசலை விரிவாக்கி வழியுண்டாக்கியதின் காரணமாகவும் , பிக்காஸோ தாமே வரலாறாகிவிட்டார். பிக்காஸோ தம் கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் ஈவிரக்கமின்றி நோக்கினார். கரைபுரண்டு வரும் வரலாறு வெள்ளம் கண்டும் அவர் வெருளவில்லை. இறந்த காலக் கண்ணாடியைத் தூள்தூளாக்கிவிட்டு, அந்த உடைந்த கண்ணாடித்துண்டுகளைக் கொண்டே புதியதோர் எழிற்கோலத்தை - புதுமையான முகத்தைப் புனைந்தார். "ஒரு நாள் நீங்கள் இப்படித் தோன்றுவீர்கள்" என்று ஸ்டெயின் அம்மையாரிடம் அவர் சொன்னது , நம் அனைவருக்குங்கூடப் பொருந்தும். "ஆவிக்னான் நங்கையர்" ஓவியத்தில் காணும் கண்கவரும் கோணல் மாணல் கோடுகளுக்கடியில் அவர் படைத்த அம்சங்களில் நாம் ஒவ்வொருவருமே ஒத்திருக்கும் காலம் வரும்.

***

கட்டுரையாசிரியர்  சாண்டியாகோ ஆமோன் ஸ்பானிய கலை வரலாற்றறிஞர், திறனாய்வாளர், கவிஞர் , பிக்காஸோ (மாட்ரிட்) எனும் நூலின் ஆசிரியர். தியோட்டாவின் வாழ்க்கை வரலாறும் ஸ்பானியக் கலைஞர்களைப்பற்றிய பல ஆய்வுகளும் வெளியிட்டுள்ளார்.

***
Image (Les Demoiselles d'Avigno) courtesy :  Wikipedia

நன்றி : யுனெஸ்கோ கூரியர், இரா.நடராசன், மணவை முஸ்தபா

***


"மனிதனின் பழைய தோற்றத்தை அழிப்பதே நோக்கம்... பிக்காஸோ தமது தோற்றத்தை அழிப்பதிலே தொடங்கினார்". "ஆவிக்னான் நங்கையர்" ஓவிய நடு உருவங்களில் பிக்காஸோ தமது கூர் நோக்கையே பிரதிபலித்துள்ளார்.  மேலே : (1) 1955இல் பிக்காஸோவின் 74ஆம் வயதில் எடுத்த அவரது நிழற்படம். (2) ஓவியரின் தன்னோவியம் (1906), (3) "ஆவிக்னான் நங்கையர்" நடு உருவம் 1907.

***
தொடர்புடைய பதிவு : ‘குவர்னிக்கா’ – பிக்காஸோவின் ஒப்பாரிப் பாடல் 

Sunday, May 19, 2013

சுந்தர ராமசாமியின் 'மந்த்ரம்'


மந்த்ரம் 
சுந்தர ராமசாமி


ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம்
குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம்
உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம்
பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்
குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்
சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம்
தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்
அலுமினியப் போணி வமு.சல.பெ.ம.
அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்
ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம்
தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்
சின்னத்தட்டு ஒரு டஜன்
வைரங்குளம் மிட்டாதார் உபயம்

வைரங்குளம் மிட்டாதார்
    அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
    அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
    அவர் அம்மா உபயம்
அவர் அம்மா
    அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா
அவர் அம்மா
அவர் அப்பா

நீ
நான்
அவள்
இவன்
அவன்
பூனை
புண்
பூ
புழு
பூச்சி
குண்டூசி
குத்தூசி
கடப்பாரை
லொட்டு லொடக்கு
எல்லாம்
ஸ்வாமி
உபயம்
ஸ்வாமி
சிற்பி
உபயம்

சிற்பி
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அப்பா உபயம்
அவர் அப்பா
அவர் அம்மா உபயம்

அவர் அப்பா அவர் அம்மா
அவர் அம்மா அவர் அப்பா
எல்லாரும் ஸ்வாமி உபயம்

ஸ்வாமி
நம்ம உபயம்
நாம
ஸ்வாமி உபயம்
நம்ம பேரு சாமிமேலே
சாமி பேரு நம்மமேலே.

**
இலக்கியவட்டம் செப்டம்பர் 1964


***
நன்றி : தாஜ்
***
மேலும் : கதவைத்திற காற்றுவரட்டும்...

Friday, May 17, 2013

மனசு - ஸபீர் ஹாபிஸ்

அதிபர் அஸ்ரப் குவார்ட்டசுக்கு வந்து சேரும் போது மாலை ஆறு மணி ஆகி விட்டிருந்தது. உடைகளை மாற்றிக் கொண்டு இரவுணவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். அன்றைய நாள் அவரைப் பொறுத்த வரை மறக்க முடியாத ஒரு நாள். காலையில் கண் விழிக்கும் போதே ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்கப் போவதாக மனதுக்குள் அசரீரி ஒலித்துக் கொண்டிருப்பதை கலவரத்துடன் உணர்ந்திருந்தார். மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகள் எனும் பெயரில் அந்தச் சங்கடம் தன் முன்னிலையில் வந்தமர்ந்த போது அவரது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

பெரும் சக்தி மிக்க அரச நிறுவனமொன்றின் பிரதிநிதிகளை எவ்விதத் தயக்கமோ அச்சமோ இன்றி மிகச் சாதாரணமாகவும் சாமர்த்தியமாகவும் கையாண்ட முகைதீனின் அணுகுமுறையில் அஸ்ரப் வாயடைத்துப் போனார். முகைதீன் ஆசிரியரையெண்ணிப் பெருமிதப்பட்டுக் கொண்ட சந்தர்ப்பங்களில் இதுவே உச்சமானது எனவும் அவர் நினைத்தார்.

இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், சக ஆசிரியர் ஒருவரின் சபலத்தினால் கொந்தளித்து வந்த பெற்றோரை அமைதிப்படுத்தி அடக்கியதிலும், இளம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சீனியர் ஆசிரியர்களுக்குமிடையே உண்டான பெருங் கைகலப்பை எவருக்கும் பாதிப்பின்றிச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததிலும் நாற்பதே வயது நிரம்பிய முகைதீனின் ஆளுமையை அறிந்து வியந்து போயிருந்தார் அஸ்ரப். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தான் சுகவீன விடுமுறையில் நின்றது இப்பிரச்சினைகளில் மாட்டி விடாது தப்பித்துக் கொள்ளவே என்பது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது. சக ஆசிரியர்கள் தன்னை விடக் கூடுதலாக முகைதீனை மதிப்பதில் நியாயம் இருக்கவே செய்கிறது என்ற ஆறுதலுடன் பல சங்கடங்களையும் நெருடல்களையும் அவர் தவிர்த்திருக்கிறார்.

இத்தனைக்கும் முகைதீன் நன்கு படித்தவரோ, பணக்காரக் குடும்பப் பின்புலத்தைக் கொண்டவரோ, அரசியல் செல்வாக்கு மிக்கவரோ அல்ல என்பதுதான் அஸ்ரபுக்கு மிகவும் ஆச்சரியமான விடயம். அவரது தந்தை கலந்தர் தோட்டங்களிலும் வயல்களிலும் கூலி வேலை செய்பவர். நேர்மைக்குப் பெயர் பெற்ற நல்ல உழைப்பாளி. தாய் பாயிழைத்து, பெட்டி தட்டுகள் பின்னி, அகப்பை செய்து வீடு வீடாக விற்கும் மற்றோர் உழைப்பாளி. கலந்தரை தமது வயலிலோ தோட்டத்திலோ வேலைக்கமர்த்திக் கொள்வதில் முதலாளிமாருக்கும் போடிமாருக்குமிடையே போட்டியே நிலவுவது போலிருக்கும். முதலாளி ஊதாரி எனத் தெரிந்தால், கிடைக்கின்ற பெருமளவு வருமானங்களை இரகசியமாகச் சேர்த்து வைத்திருந்து முதலாளி சிரமப்படும் சந்தர்ப்பம் பார்த்து அவற்றைப் புதையலாகத் தோண்டியெடுத்துக் கொடுக்கும் அவரது நேர்மை அவர் பற்றிய முக்கிய அடையாளமாக எல்லோர் பேச்சிலும் அடிபடும். அதிகரித்த சம்பளத்திற்காகவோ, முகஸ்துதிக்காகவோ அவர் ஒருபோதும் கொடுத்த வாக்கை மீறியதில்லை. பேசிய சம்பளத்தை விடக் கூடுதலாகக் கிடைக்கும் அன்பளிப்புகளையும் ஒருபோதும் ஏற்றதுமில்லை.

அவரது இரண்டாவது திருமணத்தில்தான் முகைதீன் பிறந்தார். முதல் மனைவி ராஹிலா ஆறு மாதங்களே அவரோடிருந்தாள். சொந்தமாக நிலபுலங்களுடன் இருந்த அவரது சொத்துகளையெல்லாம் அழித்து விட்டு, பணக்கார இளைஞனொருவனுடன் ஓடிப்போன அவள் மீது அவருக்கு இன்னமும் அனுதாபமுண்டு. கூலி வாழ்க்கையில் கிடைக்கின்ற சுகத்தையும் ஆறுதலையும் எண்ணிப் புளகாங்கிதமடையும் போதெல்லாம் ராஹிலாவை நினைக்க அவர் தவறுவதில்லை. அவள் ஓடிப்போன செய்தியறிந்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், தமது வார்த்தைகளில் அவளை வறுத்தெடுத்தார்கள். கொலை செய்தாலும் குற்றமில்லையெனக் கறுவினார்கள். இத்திருமணம் செல்லுபடியாகாது எனச் சில மௌலவிமார்களும் ஆறுதல் கூறினார்கள். இவ்வாறெல்லாம் கூறியவர்கள், இரண்டு மாதங்களில் புதிய கணவனுடன் அவள் திரும்பி வந்து தடபுடலாக வலீமா விருந்துக்கு அழைத்த போது, அதைப் பெரும் கௌரவமாக நினைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டு வந்தார்கள். அந்த விருந்தின் சுவை பற்றியும் ஆடம்பரம் பற்றியுமான பேச்சுகள் அடங்க அவர்களுக்கு ஒரு மாதமாயிற்று. மௌலவிமார்கள், அத்திருமணத்திலுள்ள குறைபாடுகளைச் சரி செய்து விட்டதாக அறிவித்தார்கள். அவர்களது உதடுகளிலும் கைகளிலும் ராஹிலா தம்பதியர் வைத்த விசேட விருந்துபசாரத்தின் எச்சில்களும் என்வெலப்புகளும் இருந்தன.

ராஹிலா தன் புதிய கணவன் நசீருடன் இரண்டு மாடி வீடொன்றில் வசித்து வந்தாள். அவள் விரும்பிக் கேட்ட எல்லாவற்றையும் ஹலால் ஹராம் பாராது வாங்கிக் கொடுத்தான் நசீர். அதற்கேற்ற பொருள் வளமும் ஆர்வமும் அவனிடமிருந்தன. செலவு செய்வதில் அவனுக்கிருந்த விரிந்த கைகள், அவனது பரம்பரைச் சொத்து. சிறுவயதிலிருந்தே ஆடம்பரமாகவும் அநாவசியமாகவும் செலவழித்துப் பழகிய அவனது கைகளுக்கு, ராஹிலாவின் விருப்பங்களெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. தவிரவும் பெண்களுக்காகச் செலவழிப்பதில் அவனுக்கு எப்போதுமே அலாதியானதொரு சந்தோஷமும் திருப்தியும் இருந்தன. முதலாம் தரத்தில் சக மாணவியொருத்திக்கு ஐஸ்பழம் வாங்கிக் கொடுத்ததிலிருந்து தொடங்கியது இப்பழக்கம். அதன் பிறகு சொக்லெட்டுகள், பிஸ்கெட்டுகள், கைக்கடிகாரங்கள், ஸ்கூல் பேக்குகள், உடுப்புகள், மோதிரங்கள் என அவனது வயதுக்கேற்ப வாங்கிக் கொடுக்கும் அன்பளிப்புகளும் வளர்ச்சி கண்டன. அழகான டீச்சர்மார் கூட அவனிடமிருந்து ஹேண்ட் பேக்குகளையோ குடைகளையோ சாரிகளையோ அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சிலபோது வயதில் பெரிய மாணவிகள் கூட அவனது அன்பளிப்புக்குப் பிரதியீடாக, உடைகளைத் தளரவிட்டு அவனுடன் தனிமையில் ஒதுங்கியதுண்டு. கண்களால் பார்த்து ரசித்து, கைகளால் தடவிச் சிலிர்த்து, அவன் போக அனுமதிக்கும் வரை, அவர்கள் தம் கைகளுக்குள் முகம் புதைத்து நாணிச் சிவந்திருப்பர். அதைத் தவிர வேறென்ன செய்வதென அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. தண்ணீராகச் செலவு செய்யும் அவனது விரிந்த கைகளுக்குள் அடைக்கலம் தேடிக் கொள்ள நண்பர்கள் முண்டியடிப்பதில் அவனுக்கு விறைப்பான பெருமையிருக்கும். பன்னிரண்டு வயதிலேயே பள்ளிப்படிப்பை இடைநிறுத்தி விட்டாலும், பெண்கள் மீதான ஈடுபாடு மட்டும் கட்டுப்பாடின்றி வளர்ந்ததன் விளைவாக, அயலில் வசித்த பெரும்பாலான இளம் பெண்கள் பலரும் அவனிடம் அன்பளிப்புகளைப் பெற்று விட்டிருந்தனர். அழகாக இருந்து விட்டால் போதும், திருமணம் முடித்தவர்களா இல்லையா என்பதெல்லாம் நசீருக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.

முதலில் வாப்பாவின் ஷேர்ட் பக்கெட்டிலும் உம்மாவின் அரிசிப் பானையிலும் தனது ஆடம்பரச் செலவுக்கான பணத்தைக் கண்டெடுத்தான் நசீர். அது போதாமலான போது, வாப்பாவின் வீட்டு பேங்க் பெட்டியிலும் கை வைத்தான். அந்த பேங்க்கைத் திறப்பது அவனது வாப்பா லெப்பைக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். பணக்கட்டுகள், நகைகள், வளவு உறுதிப்பத்திரங்கள் போன்றவற்றை ஓர் ஒழுங்கில் அடுக்கி வைத்து மிகப் பாதுகாப்பாக அதைப் பேணி வந்தார் லெப்பை. பேங்க் வைக்கப்பட்டிருந்த அறைச் சாவி எப்போதும் அவரது இடுப்பு வாரில் பத்திரமாக இருக்கும். ஊர் முழுக்கப் பரந்திருக்கும் கடைகளின் வாடகைப் பணம், அடகுக்காகக் கிடைக்கின்ற நகைகள், காணி உறுதிகள் என்பவற்றுக்கெனத் தனியான இடமொன்றை அதனுள் ஒதுக்கியிருந்தார். தனது சொந்த உழைப்புகளைப் பத்திரப்படுத்துவதற்கு பிறிதோர் இடத்தையும் ஒதுக்கியிருந்தார்.

கூலிக்காரர்கள், விவசாயிகள் தமது தொழில் மூலதனமாகச் சிறிய தொகையொன்றை லெப்பையிடம் பெற்று அடமானமாகத் தாம் வாழும் நிலத்தின் அல்லது தொழில் செய்யும் வயலின் உறுதிப்பத்திரங்களைக் கொடுத்துச் செல்வர். கடனைச் செலுத்த முடியாது மேலும் கஷ்டத்தில் அவர்கள் திணறும் போது, மற்றொரு சிறுதொகைப் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து, நிலத்தை அல்லது வயலை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வார் லெப்பை. எதிர்த்துப் பேசும் திராணியற்று மனது பரிதவிக்க நெஞ்சடைத்துச் செல்லும் அவர்கள் மீது சிறிதளவேனும் அவருக்குக் கருணை எழாது. சோர்வற்று உழைக்கும் அம்மக்களின் அறியாமை, லெப்பையின் வீட்டு பேங்க்கில் பெரும் செல்வமாக நிரம்பியது.

நாளாந்தம் பேங்கைத் திறந்து தனது சேமிப்புகளை ஆசை தீரத் தடவிப் பார்க்கும் குரூரப் புத்தியிருந்தாலும், தனது மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அவற்றிலிருந்து எடுத்துச் செலவிடுவதில் அவர் அவ்வளவு தயக்கம் காண்பித்ததில்லை. எல்லோரையும் விடத் தனது மூத்த மகளான ஜெசீமா மீது அவருக்கு அளவற்ற அன்பிருந்தது. அவள் பிறந்த பின்னர்தான், தனது தொழில் முயற்சிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் உறுதியாக நம்பியிருந்தார். அதை விடவும் வாய்பேசாத அவளது இயலாமை ஏற்படுத்திய அனுதாபந்தான் அவள் மீதான அவரது கூடுதலான பாசத்திற்குக் காரணம் என எல்லோரும் நினைத்தனர். மற்றொரு காரணம் அவளது சுறுசுறுப்பான வேலைகளும் மலர்ந்த முகமும். அதிகாலையில் எல்லோருக்கும் முதலில் கண் விழித்து விடும் ஜெசீமா, அகன்று விரிந்த முற்றத்தை, கொட்டிக் கிடக்கும் அடர்ந்த மரங்களின் சருகுகளை அகற்றிச் சுத்தம் செய்வாள். கிணற்றில் அள்ளி சுற்றி நிற்கும் பயிர்களுக்கும் செடிகொடிகளுக்கும் நீரூற்றுவாள். சட்டியில் நீர் நிரப்பித் தீனும் வைத்து கோழிக்கூட்டைத் திறந்து விடுவாள். மாட்டுக் கொட்டகைக்குள் சென்று சாணங்களை அள்ளிக் கூடைக்குள் நிரப்பிச் சுத்தம் செய்த பின் தொட்டியில் நீர் நிரப்புவாள். இவ்வளவையும் முடித்து விட்டு, பால் கறப்பதற்காகக் கோப்பையுடன் கொட்டகைக்குள் நுழையும் போதுதான், காலைக் கதிரவனுடன் இணைந்து அவளது வீட்டாரும் கண் விழிப்பார்கள்.

தொடர்ச்சியான வேலைகளினால் மிகச் செழுமையான தேகக்கட்டுடனும் வசீகரிக்கும் வாளிப்புடனும் இருந்த ஜெசீமா பதினைந்து வயதுப் பிள்ளை என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். கள்ளங்கபடமற்ற அவள் அந்த வீட்டில் எல்லோருடனும் சகஜமாகப் பழகினாள். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது முதற்கொண்டு அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். வாப்பாவின் வயலில் காவலுக்கு நிற்கும் முல்லைக்காரன், மில்லில் வேலை செய்யும் கணக்குப் பிள்ளை, மிசினில் நிற்கும் ரைவர் எல்லோரும் வாரத்தில் இரண்டு மூன்று தடவைகளாவது அவளது கையால் தேநீர் குடித்து விடுவார்கள். மற்றவர்களை விட மிகுந்த பவ்யத்துடன் அவளிடமிருந்து தேநீரை வாங்கி அருந்துவான் ரைவர் கந்தசாமி. தன் கண்ணெதிரே பிறந்து வளர்ந்த பிள்ளையான அவள் மீது கந்தசாமி மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தான். காலையில் மிசினை எடுக்கும் போதும், அன்றோ மறுநாளோ மாலையில் கரேஜில் போடும் போதுமாக நாள் தோறும் அந்த வீட்டுக்கு அவன் வந்து செல்ல வேண்டியிருந்தது.

காளி கோவிலக்கருகில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளுமாக வசிக்கும் கந்தசாமி, வாகனங்கள் ஓட்டுவதில் கைதேர்ந்தவன். எல்லா வாகனங்களும் அவனுக்கு அத்துப்படி என்பது போலவே, எல்லா வேலைகளும் கூட அவனுக்கு அத்துப்படிதான். அந்த வீட்டில் நல்ல சம்பளத்துடன் அரிசி மூடைகளும் தேங்காய்களும் மாதாந்தம் போதுமான அளவு அவனுக்குக் கிடைத்து வந்தன. அங்கு எவ்விதக் குறையும் அவனுக்கிருக்கவில்லை. கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்து வட்டிக்கு விட்டிருந்தான். அதில் கிடைத்த இலாபத்தில் தங்க நகைகளை வாங்கி, பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கெனச் சேமித்து வைத்தான். மனைவியும் அவனும் சேர்ந்து மிகச் சிக்கனமாக இருந்து சேகரித்து அலுமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பதினைந்து பவுண் நகைகளும் ஓர் இரவு காணாமல் போன போது, அந்த அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்து இறந்து போனான் கந்தசாமி. கணவனின் சடலத்தின் மீது விழுந்து வெறி கொண்டவள் போல் கதறி அழுதாள் கமலா. அவள் வாழ்க்கையில் சந்திக்கும் முதலாவது இழப்பு இது. அவளது அப்பா, அம்மா, அவர்களது அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் எல்லோரும் உயிரோடுதான் இருக்கிறார்கள். குடும்பத்தாரின் கடுமையான எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து, பெரும் சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அவள் கரம் பற்றிய கணவன் மட்டும் அவளை நட்டாற்றில் விட்டு விட்டுக் கோழை போலச் செத்து விட்டான்.

இனி, “கீழ்சாதிகளைக் கட்டிக்கிட்டா இதுதான் கதி” என்று கூறிக் கொண்டு குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள வருவார்கள் என அவள் எதிர்பார்த்தாள். அவர்களுக்குக் கூறுவதற்கு அவளிடம் எந்த பதிலுமில்லை. பழைய திடகாத்திரம் உடலிலும் உள்ளத்திலுமிருந்து தொலைது}ரம் ஓடி விட்டது போல அவளுக்குத் தோன்றியது.

பொலிசில் முறைப்பாடு செய்து திருடனைப் பிடிக்கும் படியாக, சடங்குக்கு வந்த பலரும் கமலாவை வற்புறுத்தினர். அயலில் வசித்தவர்கள் அதற்கான முழு ஒத்துழைப்பையும் தருவதாக அவளுக்குத் தெம்புமூட்டினர். கமலாவுக்கோ அதிலெல்லாம் ஆர்வம் எழவில்லை. இழப்பின் வலி அவளில் ஏற்படுத்திய அவநம்பிக்கையே இதுவெனச் சிலர் எண்ணிய போதும், உண்மையில் இந்தத் திருட்டின் பின்னணியில் நாதனும் அவனது சகாக்களுமே இருப்பர் என்பது கமலாவுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

தூரத்து உறவினனான நாதன் அவளுக்குத் தம்பி முறை. தொழில் இல்லாத சந்தர்ப்பங்களில், மதிப்பற்ற விருந்தாளி போல், அவளது வீட்டில் கிடந்து வேலைகளைச் செய்து கொடுத்து மூன்று வேளையும் வயிற்றை நிரப்பிக் கொள்வது அவனது வழக்கம். தாய் தகப்பனை இழந்த பதினாறு வயதிலிருந்து நிலையான இருப்பிடமோ தொழிலோ இல்லாது ஏதாவது வேலை செய்து எதையாவது உண்டு எங்காவது உறங்கி காலம் கடத்தி வந்தவன், எப்படியோ கமலாவை உறவு கண்டு பிடித்து அவளிடம் வந்து சேர்ந்த போது இருபது வயதிலிருந்தான். வீட்டில் ஆண் இல்லாத நேரம் பார்த்து வந்து உண்டு தங்கிச் செல்வான். புதிய பழக்கமாக, நண்பர்கள் என இரண்டு பேரை உடன் அழைத்து வந்த போது, அவனது உள்ளத்தில் திட்டமொன்று இருந்தது.

இதற்கு முன்னர் தங்கிய வேளையில், தற்செயலாகக் கண்களில் பட்ட நகைகள், அலுமாரிக்குள் இருந்து கொண்டு அவனைக் கிண்டல் செய்து கொண்டிருந்தன. இரவில் எல்லோரும் து}ங்கிய பிறகு கள்ளச் சாவி கொண்டு அலுமாரியைத் திறந்து நகைகளை அள்ளுவதெனவும், இடையில் வீட்டில் யாரும் கண்விழித்துச் சத்தம் போட்டால் அவர்களது குரல் வளையை அறுப்பது மற்ற இருவரதும் பொறுப்பெனவும் திட்டமிட்டிருந்தான் நாதன். அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதங்களுமில்லாது நகை முழுவதையும் களவாடிக் கொண்டு காலையில் வழமை போன்று வீட்டிலிருந்து வெளியாகி வந்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது அவனால்.

அவன் இதுவரைக்கும் களவாடியவற்றுள் மிகப் பெறுமதியான களவு இதுதான். வழமை போன்று செட்டிக்கடை சாந்தனிடம் கொண்டு சென்று கொடுத்தான். இவ்வளவு அதிகமான களவு நகைகளைப் பார்ப்பது சாந்தனுக்கும் இதுவே முதற்தடவை. அடகு வைப்பதற்கு அல்லது விற்பதற்கு வருகின்ற நகைகளுக்கு, அப்போதைய பவுணின் விலை, கொண்டு வருபவரின் முகபாவனை, மேசை டிராயரிலுள்ள இருப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு விலையைத் தீர்மானிப்பான் சாந்தன். அவன் விலையொன்றைத் தீர்மானித்து விட்டானென்றால், அதன் பிறகு அதிலே எந்த மாற்றமுமில்லை. களவு நகைகளையும் சொந்த நகைகளையும் துல்லியமாகக் கணித்து விடுவது அவனது மிகப்பெரிய அனுபவத் திறமை.
அநாமதேயமாக பஸ்ஸில் கண்டெடுத்த சில லட்சம் ரூபாய்களை மூலதனமாகக் கொண்டு நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இத்தொழில் அவன் எதிர்பாராதளவுக்கு மிகப் பெரிய வருமானத்தை ஈட்டிக் கொடுத்தது. சொந்த வீடு கட்டி ஊரில் ஆங்காங்கே வளவுத் துண்டுகளையும் வயல் நிலங்களையும் வாங்கிப் போட்டு, முக்கிய ஊர்ப்பிரமுகனாக குறுகிய காலத்திற்குள் மாறிவிட்டிருந்தான் சாந்தன். நகை வடிவமைப்பு நுட்பங்களையும் விரைவில் கற்றுக் கொண்டான். அடகுக்காக வைக்கப்படும் 22 கரட் நகைகள், மீட்கப்படும் போது 18 கரட்டாக மாறியிருந்தாலும் ஒத்த வடிவம் என்பதனால் யாரும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நகை வியாபாரிகளின் பற்றாக்குறையினால் சாந்தனின் வருமானத்திற்கு எவ்வித முட்டுக்கட்டையும் ஏற்படவில்லை. நிரம்பி வழிந்த பணத்தில் வீடுகளை வாங்கிப் போட்டு வாடகைக்கு விட்டான். எஞ்சிய வீடொன்றில் மணமுடிப்பதாகக் கூறி வசந்தகுமாரியைக் குடியமர்த்தினான்.

பதினெட்டு வயதிலிருந்த வசந்த குமாரி, மாநிறத்தில் கொழுத்த மார்பகங்களுடன் நகையொன்றை விற்க வந்த போதுதான் சாந்தனைச் சந்தித்தாள். மணமுடித்த இரண்டே நாட்களில் யானையொன்றினால் நசுக்கப்பட்டு இரு கால்களையுமிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் கணவனையும் அவனது ஐந்து ஏக்கர் வயல் நிலத்தையும் பராமரித்து வர வேண்டிய பொறுப்பும் சிரமமும் அவளுக்கிருந்தன. முழுமையாக அனுபவித்தறிந்திராத தாம்பத்திய சுகம், சாந்தனின் அணைப்பில் திருப்தியாகக் கிடைத்த போது, தனக்காக எதுவும் செய்திராத ஒருவனைப் பராமரிக்க எதற்காகத் தன் இளமையையும் வாழ்க்கையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற நியாயமான தர்க்கமொன்று அவளுள் எழுந்தது. அதிலிருந்து இரண்டு தினங்களில் தனது உடைகளைப் பொதியாகக் கட்டிக் கொண்டு சாந்தனின் வெறுமையான வீட்டிற்கு இடம்பெயர்ந்தாள் வசந்தகுமாரி. நாளாந்தம் மூன்று வேளைச் சாப்பாடும் வாரத்தில் மூன்று நாட்கள் தாம்பத்திய சுகமும் எவ்விதச் சிரமங்களுமின்றி அவளுக்குக் கிடைத்து வந்தன. ஏனைய நான்கு இரவுகளில் தனிமை அவளை வாட்டும். ரிவி பார்ப்பதும் அலுத்துப் போயிற்று. கேலிப் பார்வையையும் நகைப்பையும் தவிர்ப்பதற்காக அயலாருடனான உறவையும் துண்டித்திருந்தாள். இருட்டறைக்குள் தனித்து விடப்பட்ட வெறுமையை உணரும் நாட்களில் பழைய கணவன் சுந்தரத்தின் நினைவுகள் அவளுள் மலரும்.

அத்தான் முறை என்ற போதிலும் திருமணத்தன்றுதான் அவனை முதன் முதலில் கண்டாள். ஆறடி உயரத்திலும் அகன்ற தோள்களிலும் தெரிந்த அவனது கறுப்பு முகம் அவளை வசீகரிக்கவே செய்தது. சித்தி வீட்டிலிருந்தவளை விடுவித்து அழைத்துக் கொண்டு, தொலைவிலிருந்த தனது கிராமத்திற்கு வந்தான் சுந்தரம். பச்சைப் பசேலென்ற அந்தக் கிராமத்தில் சோலைகளின் நடுவே அமைக்கப்பட்ட சொர்க்கம் போல் அவனது வீடு இருந்தது. சுற்றிவர இருந்த காடுகளிலிருந்து அவ்வப்போது ஓங்கி ஒலிக்கும் யானைகளின் பிளிறல்களும் நரிகளின் ஊளைகளும் அவனைத் து}ங்க வைக்கும் தாலாட்டுகள். அப்பாவிடமிருந்து பரம்பரைச் சொத்தாகக் கிடைத்த ஐந்து ஏக்கர் பொன்கொழிக்கும் பூமியைத் தன் வாழ்வாதாரமாகப் பராமரித்து வந்தான். ஒரு படுக்கையறையும் சமையலறையும் விறாந்தையுமாகக் களிமண்ணால் வேயப்பட்டு தென்னோலைகளினால் கூரையிடப்பட்டிருந்த வீடு அவனது இரண்டு வருட உழைப்பு மீதியின் பெறுபேறாக அவனை எப்போதும் பெருமை கொள்ளச் செய்யும். பதினான்கு வயதிலேயே அவனைத் தனியாக விட்டு விட்டு, அவனது அம்மாவைத் தேடி அப்பா ராமலிங்கமும் செத்துப் போயிருந்தார். அவர் செத்த அன்று சுந்தரம் கண்ணீர் வடித்தழுதான். அதற்கு முன்னரோ பின்னரோ ஒருபோதும் எதற்காகவும் அவன் கவலைப்பட்டதுமில்லை, கண்ணீர் வடித்ததுமில்லை. தந்தை மீது அவனுக்கு அளவற்ற பாசமிருந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்த விட்டமையால் எல்லாமுமாக இருந்து அவர் அவனை வளர்த்தார்.

மெலிந்த கறுத்த உருவம் கொண்ட ராமலிங்கம் வயல் வேலைகளில் கைதேர்ந்தவர். இரவில் மிகச் சொற்ப நேரமே து}ங்குவார். சாமத்தில் துயிலெழுந்து பரபரப்பாகச் செய்வதற்கு எப்போதும் அவருக்கு வேலைகள் இருக்கும். வயல் காவல் பணிகளில் அவரை விஞ்ச யாருமில்லை. மலத்தைத் தின்று விட்டு மூர்க்கமான போதையுடன் வரும் பன்றிகளிடமிருந்தும் ஆக்ரோஷமாகப் பிளிறிக் கொண்டு வரும் யானைகளிடமிருந்தும் வேளாண்மையைப் பாதுகாப்பதில் அவர் சிறந்த அனுபவசாலியாக அறியப்பட்டிருந்தார். ஐந்து ஏக்கர் வயலைத் தவிர்த்து, அவருக்குச் சொந்தமாக இருந்த மற்றொரு சொத்து பசு மாடு. தெய்வத்தின் அவதாரமாகத் தெரியும் அந்த வெள்ளைப் பசு மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் ராமலிங்கம். வாய் பேசாத உயிர்த்தோழன் போல் பெரும்பாலான நேரங்களில் அது அவருடனேயே நின்றிருக்கும். பசுக்களுக்கும் முகர்திறன் உண்டு என்பதை, எங்கிருந்தாலும் தன்னைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடும் அதன் இயல்பிலிருந்து அறிந்திருந்தார்.

கடந்த வருடம் பால் குடி மறந்த குட்டியாய் இருந்த போது, அவரது உழைப்புக்கான வெகுமதியாக முதலாளி தேவசகாயத்திடமிருந்து அன்பளிப்பாகக் கிடைத்ததுதான் அந்தப் பசு. அதை ராமலிங்கத்திடம் ஒப்படைக்கும் போது, தேவசகாயத்தின் கண்களில் நிறைவான பெருமிதமொன்று இருந்தது. தனது பண்ணையில் ஒரு பசு போடும் முதலாவது குட்டியை தனது வேலையாட்களுக்கு வெகுமதியாகக் கொடுத்துவிடுவது அவரது வழக்கம். இதேபோன்றதொரு வழக்கத்தினு}டாகத் தனக்குக் கிடைத்த பசுவொன்றுதான் தனது தற்போதைய செழிப்புக்கெல்லாம் ஆரம்ப வித்து என அவர் அடிக்கடி கூறிக் கொள்வார். பொருளாதார வளமும் மனங்கோணாது வழங்கும் கொடைத்திறனும் சமூகத்தில் ஆரோக்கியமான செல்வாக்கொன்றை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருந்தன. அச்செல்வாக்கை மூலதனமாகக் கொண்டு அரசியலில் குதிக்குமாறு நண்பர்கள் கூறி வந்த ஆலோசனையை நீண்ட காலத்திற்குப் பின்பே அவர் ஏற்றார். பொதுத் தேர்தலில் கணிசமான வாக்குகள் கட்சிக்கும் அவரது இலக்கத்திற்கும் விழ, தமிழைத் தவிர வேறு மொழி தெரியாத தேவசகாயம் பாராளுமன்றத்திற்குத் தைரியமாகப் புறப்பட்டுச் சென்றார்.

தனது வெற்றிக்காகப் பாடுபட்ட எல்லோருக்கும் தனது சேவை வாய்ப்புகளின் போது முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுப்பதில் அவருக்குச் சிரமமிருக்கவில்லை. இன ரீதியான அடையாளமின்றி பொது மனிதனாகப் பணியாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கிருந்தது. எனினும் அப்பொறுப்பை விமர்சனங்களெவையுமின்றிச் செய்ய முடியாமற் போனது அவரால். “எங்கட ஆக்களுக்கு வந்தத்த மாத்தியெடுத்து உங்கட ஆக்களுக்குக் குடுத்திட்டீங்க என?” என்று, அவரது எல்லா வெற்றிகளிலும் ஏணியாக நின்ற இஸ்மாயில் கொந்தளித்த போது, அவனை அழைத்துச் செல்லுமாறு காவலர்களுக்குக் கட்டளையிடுவதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அரசினால் அமைக்கப்படவிருந்த புதிய பல்கலைக்கழகத்தை, தனது மக்களுக்குப் பயன்படும் வகையில், தனது இனத்தார் வாழும் பிரதேசத்திற்குக் கொண்டு செல்ல, அரசியல் அதிகாரம் அவருக்குப் பெரிதும் உதவிற்று. இதனைக் குறித்து இஸ்மாயில் இவ்வளவு காட்டமாகச் சத்தமிட்டுச் செல்வது அவரைக் கஷ்டப்படுத்தவே செய்தது.

நீண்ட காலமாக தேவசகாயத்திடம் பணியாற்றி வந்த இஸ்மாயில், போதிய கல்வித் தராதரம் இல்லாத நிலையிலும், அரசியல் செல்வாக்கினு}டாக நிரந்தரமான அரச உத்தியோகமொன்றில் இணைந்து கொண்டான். உத்தியோகம் பெற்றதிலிருந்து அவனது நடவடிக்கைகளில் பெரிய மாறுதல்கள் தென்பட்டன. பதினைந்து வயது வரை பலமுறை முயன்றும் ஐந்தாம் தரத்திற்கு மேலே செல்ல அவனால் முடியவில்லை. பத்து வருடப் படிப்பில், எழுத்துப் பிழைகளுடனாயினும் தமிழில் சொல்வதெழுதப் பழகியிருந்தான். மாட்டுப் பண்ணையில் உதவியாளாக இணைத்து விடப்பட்ட போது இதுதான் அவனது கல்வித்தகைமை. அரசியல் என வந்த போது, போஸ்டர் ஒட்டுவது, கூட்டங்களை ஒழுங்கு செய்வது, துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது, முதலாளியைச் சந்திக்க வருவோருக்குத் தேநீர் பரிமாறுவது போன்ற எடுபிடி வேலைகளை ஓய்வு ஒழிச்சலின்றிச் செய்தான். பத்து வருட அயராத உழைப்புக்கான கைம்மாறாகக் கிடைத்த அரச உத்தியோகம் ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்த போதும், பின்னர் சுதாகரித்துக் கொண்டான் இஸ்மாயில். மற்றொரு பத்து வருடங்களை அவ் அரசப் பணியில் அர்ப்பணிப்புடன் செலுத்தியதன் விளைவாக து}ரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலும் எத்தகைய பிரச்சினைகளையும் சிறப்பாகக் கையாளும் ஆளுமையும் அவனுக்கு வாய்க்கப் பெற்றன. பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பலரும் அவனது முகாமைத்துவத்தின் கீழ் பணியாற்றுமளவு முக்கிய அரச நிருவாகியாகவும் சமூகக் கல்விமானாகவும் மாறினான். அதன் பிறகுதான் அரசியலில் குதிக்கும் எண்ணம் அவனுக்கேற்பட்டது. பரீட்சார்த்தமாக உள்@ராட்சித் தேர்தலில் நின்ற போது, எதிர்க்கட்சி வேட்பாளரான பாறுக்கிடம் மிகக் கடுமையாகத் தோற்றுப் போனான். தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கத்திய அவனது கூச்சல்களை அலட்சியம் செய்து, தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் வெகு விமரிசையாகக் கலந்து கொண்டான் பாறுக்.

பாறுக்கிற்கு அது இரண்டாவது தேர்தல் வெற்றி. ஏற்கனவே பதவி வகித்த ஐந்தாண்டுகளில் பெரிதாக எதையும் அவன் சாதித்து விடவில்லை. தனது கட்டளைகளுக்கு அடிபணியக் கூடியவராக செயலாளர் ஒருவரை நியமித்துக் கொண்டமையால், சேகரிக்கப்படும் பொது நிதியிலிருந்தும் அரச கொந்தராத்துகளிலிருந்தும் லட்சம் லட்சமாக உழைப்பதும் கமிஷன் பெறுவதும் அவனுக்கு மிகச் சாதாரணமாயிற்று. இவையே ஆடம்பரமான வீடையும் படகு போன்ற காரையும் அவனுக்குச் சாத்தியமாக்கின. சபைக்குப் போதிய வருமான மூலங்களில்லை என்ற தன் வழமையான ஒப்பாரியினு}டாக, பெருமளவு வருமானத்தைப் பதுக்கவும் அவனால் முடிந்தது. மக்களின் அதிருப்தி அதிகரிக்கத் தொடங்குகையில், திடீரென அரசியல் காரணங்களுக்காக சபையும் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்தலின் போது அரிசி மூடைகளாகவும் உலர் உணவுப் பொதிகளாகவும் உடைகளாகவும் கற்றல் உபகரணங்களாகவும் மதுபோத்தல்களாகவும் பிரியாணிப் பார்சல்களாகவும் பதுக்கி வைத்திருந்த பணத்திலிருந்து ஒரு பகுதியைத் தண்ணீராகச் செலவிட்டதன் விளைவாக தேர்தலில் மீண்டும் பெரும் வெற்றி பெற்றான் பாறுக். தேர்தல் செலவில் மிகக் கணிசமான தொகையை பிரசாரத்திற்கென ஒதுக்கியமை அவனது வெற்றிக்கான மற்றோர் உபாயமாகும்.

முக்கியமாக பிரசார மேடைகளை அலங்கரித்த சகாப்தீன் ஆசிரியரின் நகைச்சுவையான பேச்சுகள் அவனது கூட்டங்களுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வரப் பிரதான காரணமாக இருந்தது. கணீரென்ற குரலும், ஆற்றொழுக்கான தமிழ் நடையுடன் கூடிய செம்மையான உச்சரிப்பும், நகைச்சுவை ததும்பும் பாணியும் சகாப்தீன் ஆசிரியரின் முக்கிய சிறப்பம்சங்கள். குறுகிய காலத்திற்குள் தனது பேச்சாற்றல் மூலமாகப் பெரும் பிரபலம் பெற்றிருந்தார். அவ்வாற்றலை மூலதனமாக்கிய போது, தேர்தல் காலங்களில் பெரும் பணம் அவரது கைகளை நிறைத்தது. மேடைகளில் சகாப்தீன் ஏறி விட்டால், பார்வையாளர்களின் ஆரவாரக் கரகோஷம் விண்ணை முட்டும். அவர் கையமர்த்திப் பேச ஆரம்பிக்கும் போது மாபெரும் அமைதியொன்று பார்வையாளர்களின் மீது காரிருளாகக் கவியும். நகைச்சுவைக் கதைகளின் போது வாய்விட்டுச் சிரிப்பதையும், தத்துவக் கருத்துகளின் போது மேலும் கீழும் தலையாட்டுவதையும் தவிர்த்து ஏனைய சந்தர்ப்பங்களில் அவர்களது ஐம்புலன்களும் சகாப்தீன் மீது முற்றிலும் லயித்திருக்கும்.

கடந்த பத்து வருடங்களாக எண்ணற்ற தேர்தல் மேடைகளை அவர் பார்த்து விட்டார். கட்சியென்றோ கொள்கையென்றோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னை வரையறுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. பணம் ஒன்றே அவரது குறிக்கோள். யார் காசு கொடுத்தாலும் அவருக்காக மேடையேறி கருத்துகளையும் சிந்தனைகளையும் உரத்து முழங்குவார். ஆனாலும், ஒரே தேர்தலில் பலருக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்வதில்லை எனும் கொள்கையொன்று எழுதப்படாத விதியாக அவரிடமிருந்தது. ஆரம்பித்து விட்டால், அந்தத் தேர்தல் முடியும் வரை, அவருடனேயே இருப்பார். முடியுமானவரைக்கும் பணத்தைக் கறப்பார். சிலபோதுகளில் பதவியுயர்வுகளும் சலுகைகளும் பெறுவார். எதிர்க் குழுவிலுள்ளோரின் எத்தகைய தாக்குதலும் அவரது உறுதியைத் தளர்த்தி விடாது. வீட்டுக்குக் குண்டெறிவது, சைக்கிள்களை எரிப்பது, இருட்டடி அடிப்பது என்பவற்றைத் தவிர அவர்களால் வேறெதைச் செய்து விட முடியும். எல்லா எதிர்ப்புகளும் அவருக்குப் பழக்கமாகிப் போயின. அவரது கொள்கை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்ததால், தேர்தல் ஒன்று வரப்போகிறது என்று தெரிந்தாலே வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரை மொய்க்கத் தொடங்கி விடுவர். வெற்றி பெற்றோர் தேர்தலின் பின்பும் நன்றிக்கடனாக அவரது தேவைகளுக்குக் கொடுத்தனுப்புவதனால், அவருக்குப் பணத்தட்டுப்பாடே ஏற்பட்டதில்லை. அவர் ஆதரவாகப் பிரசாரம் செய்தவர்களில் மூவர் நகர சபைத் தவிசாளர்களாகவும் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவாகியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவர்களுள் ஒருவர் இரண்டு வருடங்கள் பிரதிக் கல்வியமைச்சராகவும் பதவி வகித்தார். உயர்தரத்தில் ஃபெய்லாகி வேலையின்றிச் சுற்றித் திரிந்த தனது 25 வயது மகனுக்கு, பாடசாலையொன்றில் நிரந்தர ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொடுக்க, அவ்வமைச்சருடனான நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார் சகாப்தீன்.

தனது மகன் அஸ்ரபிடம் நியமனக் கடிதத்தைக் கொடுத்த போது, வெற்றிப் புளகாங்கிதமொன்று அவரது முகத்தில் செழித்துக் குலுங்கியது. அஸ்ரப் 20 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றி, பின் அதிபராகப் பதவியுயர்வு பெற்று, தற்போது ஓய்வுக்காகக் காத்திருக்கிறார். இருக்கின்ற கொஞ்ச காலத்திற்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லாது காலத்தைக் கடத்த வேண்டுமே என்பதுதான் அவரது இப்போதைய ஒரே பயமாக இருந்தது.
இரவுணவை முடித்துக் கொண்டு படுக்கையில் சரிந்த அஸ்ரப் அதிபருக்கு மீண்டும் முகைதீன் ஆசிரியரின் நினைவு வந்தது.
***
நன்றி :  ஸபீர் ஹாபிஸ் , அம்ருதா , ஹனீபாக்கா

Wednesday, May 15, 2013

பொய் முகங்கள் - ஸபீர் ஹாபிஸ்

'அம்ருதா' இதழுக்கு இரண்டு சிறுகதைகள் அனுப்பியிருக்கிறார் ஸபீர் . ’பொய்முகங்கள்’, ’மனசு’ என்று. இரண்டையும் ஒன்றாக்கி ஒரே தலைப்பில் (பொய்மனசு?) வெளியிட்டு உலக சாதனை செய்திருக்கிறார்களாம். ‘என்னடா இது, பென்னம்பெரிய பின்நவீனத்துவமாக அல்லவா இருக்கு? படித்துப் பார்த்தார்களா இல்லையா? இலக்கிய உலகம், அரசியல் உலகம், வியாபார உலகம் இதில் எல்லாம் எப்படியும் நிகழும். போயும் போயும் ஸபீரின் கதைதானா இப்படியொரு சங்கதியில் மாட்ட வேண்டும்!' என்று புலம்பித்தள்ளிவிட்டார் குரு.  ‘ஆமா காக்கா, ஏன் ரெண்டு அனுப்புனீங்க’ என்று கேட்டால், ‘ரெண்டுல ஒண்ணு போடுவாங்கன்னு நெனச்சோம் தம்பி’ என்கிறார். பேராசைதானே இது?! சரி, குழாயடிச் சண்டைகள் போடவேண்டாம். ‘கொட்டாவி விட்ட தெல்லாம் கூறு தமிழ் பாட்டாச்சே முட்டாளே இன்னமுமா பாட்டு’ என்று புதுமைப்பித்தன் கவிதை எழுதினாராமே... (நன்றி : SegaSiva). ஸபீர் எழுதியது என்று இருக்கிறதல்லவா, அது போதுமென்று சந்தோஷப்படுவோம். 

’மனசு’ அடுத்து வரும், இன்ஷா அல்லாஹ். - ஆபிதீன்

***

பொய் முகங்கள்
- ஸபீர் ஹாபிஸ்

ட்ரைவரின் வருகை தாமதமானதால், அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு குளித்து அவசர அவசரமாகத் தயாரானதில் அர்த்தமில்லாது போய்விட்டது சுமதிக்கு. அவளது கொழுத்த உடலில் கோபம் தளதளத்துக் கொண்டிருந்தது. டயறியைத் திறந்து இரவு கண் விழித்து எழுதி வைத்த இன்றைய ஷெட்யூலைப் பார்த்தாள். 6 மணி தொடக்கம் 7.30 வரை நகரின் மூன்று இடங்களில் தனது கம்பனி நிர்மாணித்து வரும் ஐந்தடுக்கு தொடர் மாடி வீட்டுத் திட்டத்தைப் பார்வையிடுதல், 7.30க்கு புதிய கொன்ட்ரக்ட் தொடர்பாக என்ஜினியர் வசந்தனுடன் டிஸ்கஷன், 8 மணிக்கு தொழிலதிபர் ராஜாராமின் புதிய நகைக் கடைத் திறப்பு விழாவில் பங்கேற்பு, 8.30க்கு தனது கம்பனிக்கான ரிவி விளம்பரத் தயாரிப்புக்காக ஸ்டைலிஷ் அட்வெர்டைசிங் கம்பனியுடன் ஒரு எம்ஓயூ கைச்சாத்து, 9 மணிக்கு கம்பனிக்கான கடன் திட்டம் தொடர்பாக கொமர்ஷல் வங்கியுடன் ஓர் உடன்படிக்கை, 9.30 தொடக்கம் 4.00 மணி வரை அரச அலுவலகப் பணிகள், 4.30க்கு முகுந்தனின் பேர்த் டே பார்ட்டி, 5.30 க்கு பியூட்டி பார்லர், 6.00 மணிக்கு எம்.சியில் ஷொப்பிங், 7 மணிக்கு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் அமைச்சர் ஹெட்டிகொடவின் டின்னர் பார்ட்டி... என ஷெட்யூல் நீண்டு சென்றது.

6.30 ஆகியும் பணிக்கு வராதிருக்கும் ட்ரைவரின் அலட்சியம், தனது எல்லாப் பணிகளையும் குழப்பி விடப் போதாக நினைக்கையில் சுமதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன. தாமதத்திற்காக அவன் கூறக்கூடிய எந்தக் காரணத்தையும் ஏற்பதில்லையென அவள் இறுக்கமாகத் தீர்மானித்துக் கொண்டாள். பணியில் அமர்ந்த இந்தப் பத்து மாதங்களில் அவன் ஒரு நாள் கூட லீவு எடுத்ததோ, தாமதித்து வந்ததோ, ஓவர் டைமுக்காக சம்பளம் கேட்டதோ இல்லை என்ற போதிலும், தற்போதைய தனது அவசர நிலையில் அவன் இவ்வாறு தாமதிப்பதை அவளால் பொறுக்கவே முடியவில்லை. ‘ஒரு செல்போன் வாங்கக் கூட வக்கில்லாதவனையெல்லாம் ரைவரா வெச்சது என்ட பிழதான்’ என முணுமுணுத்தாள். பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரை ஒரு முறை பார்த்து விட்டு வராந்தாவில் கிடந்த சோபாவில் உடல் புதைய அமர்ந்த போதுதான் வாயிற் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ரைவர்தான் வந்து கொண்டிருந்தான். அவனது மெலிந்து தளர்ந்த உடலும் நரை எட்டிப் பார்க்கும் தலையும் முகத்தில் பற்றிப் படர்ந்திருக்கும் சாந்தமும் அவன் மேல் மரியாதை கொள்ளத் து}ண்டுபவை.  எனினும் எவ்விதப் பதட்டமுமின்றி மிக இயல்பாக நடந்து வந்து கொண்டிருக்கும் அவனைப் பார்க்கப் பார்க்க சுமதிக்குப் பற்றிக் கொண்டு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு உயரமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவள், “மேடம், சாவி...” என அவன் தன் முன்னால் வந்து நின்றதும், அடக்கி வைத்திருந்தவற்றையெல்லாம் மொத்தமாகக் கொட்டி விடுவது போல், வலது கையை ஓங்கி அவனது கன்னத்தில் பளாரென ஓர் அறை விட்டாள். “ஃபூல், ஏன் இவ்ளோ லேட்?” அவளது கேள்வியில் கோபம் உறுமியது.

ட்ரைவரின் முகத்தில் திடீரெனப் பற்றிய அதிர்ச்சி, அவனது மலர்ந்த முகத்தில் இருண்மையைக் கொட்டிற்று. கன்னத்தைத் தடவிக் கொண்டே, “கரெக்ட் டைம்தானே மேடம்!” என்றான் தயங்கித் தயங்கி. “என்ன...?” என மீண்டும் முறைத்தாள் சுமதி. நெற்றியைச் சுருக்கியவாறு, “ஏழு மணிக்குத்தானே மேடம் வரச் சொன்னீங்க” என்றவன், 6.45ஐக் காட்டிய தனது கைக்கடிகாரத்தை அவள் முன் நீட்டினான்.

சுமதிக்கு அப்போதுதான் சட்டென உறைத்தது. இரவு எட்டரை மணிக்கெல்லாம் ட்ரைவரை அனுப்பி விட்டு, பத்து மணிக்குப் பிறகு சாவகாசமாக இருந்து போட்டதுதான் இன்றைய அவளது ஷெட்யூல். ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தின் படியே ஏழு மணிக்கு அவனை வரச்சொல்லியிருந்தாள். ஸ்டைலிஷ் அட்வெர்டைசிங் கம்பனியுடனான எம்ஓயூவும் கொமர்ஷல் வங்கியுடனான உடன்படிக்கையும் பின்னரே ஷெட்யூலில் இணைத்துக் கொள்ளப்பட்டமையால், புறப்படும் நேரத்தில் திருத்தம் செய்ய வேண்டியதாயிற்று அவளுக்கு. அதனை அவனுக்குத் தெரிவிக்க மறந்து போனாள். இருந்தாலும் அதைத் தன் தவறென அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. “ஒரு செல்போன் வெச்சுக் கொள்ள மாட்டியா?” என எரிச்சல் பட்டுக் கொண்டே கார் சாவியை அவனிடம் து}க்கிப் போட்டாள். கார் வாங்கி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ட்ரைவிங் பழகாதிருக்கும் தன் பிசியான வாழ்க்கையை சலித்துக் கொண்டே பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். கார் புறப்பட்டது. ஏசியின் கதகதப்புடனும் மேற்கத்தேய மெலடியின் வருடலுடனும் ஐந்து நிமிடங்களில் தனது முதலாவது சைட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள் சுமதி.

அப்போதுதான் வந்திருந்த வேலையாட்கள் சிரிப்பும் கதையுமாக உடை மாற்றித் தயாராகிக் கொண்டிருந்தார்கள். தன்னைக் கண்டதும் அவர்களது செயற்பாடுகளில் புதவித வேகமொன்று தொற்றிக் கொண்டதை சுமதி உணர்ந்தாள். ஏற்கனவே அங்கு பிரசன்னமாகியிருந்த என்ஜினியர் வசந்தன் அவளை மரியாதையுடன் வரவேற்றான். கட்டடத்தில் இரண்டு மாடிகள் பூர்த்தியாகியிருந்தன. இன்னும் மூன்று மாதங்களில் முழு வேலையும் பூர்த்தியாகி விடும் என்று அவன் கூறுவதைக் கேட்க சுமதிக்கு சந்தோஷமாக இருந்தது. கொங்க்ரீட் கற்களும் சீமெந்தும் முறுக்குக் கம்பிகளும் மண்குவியல்களும் கட்டுமான உபகரணங்களும் சிதறிக் கிடந்த கட்டடச் சு10ழலை, தன் சாரியை சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டே ஒரு தரம் சுற்றி வந்தாள் சுமதி. தேவையான ஆலோசனைகளையும் திருத்தங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் அவள் சொல்லச் சொல்ல, தலைமைப் பொறுப்பாளர் அவற்றைக் குறித்துக் கொண்டார்.

அதன் பின், வசந்தனை அழைத்துக் கொண்டு ஏனைய இரு சைட்டுகளையும் பார்வையிட்டு, அவனுடனான டிஸ்கஷனையும் முடித்துக் கொண்டு நகைக் கடைத் திறப்பு விழாவுக்கு வந்த போது நேரம் 8.30 ஆகியிருந்தது. திறந்து வைக்கப்பட்டு விட்ட கடை, தகதகவென ஜொலிப்பதை வெளியிலிருந்தே பார்த்தாள். ஓடி வந்து காரின் கதவைத் திறந்து விட்டவாறு, “வெல்கம் மேடம்” என வரவேற்றான் மனேஜர். சுமதி இறங்கவில்லை. தனக்காகக் காத்திராது திறப்பு விழாவை ஆரம்பித்து விட்ட ராஜாராம் மீது அவளுக்குக் கோபம் வந்தது. அடுத்த புரோகிராமுக்குரிய நேரம் ஆகிவிட்டிருந்ததையும் உணர்ந்தாள். கதவைச் சாத்தி விட்டு, “போ” என்றாள் ரைவரிடம். உள்ளேயிருந்து “மேடம்... மேடம்...” எனக் கூவிக் கொண்டு வரும் ராஜாராமை அவள் சற்றும் பொருட்படுத்தவில்லை.

சிக்னலில் கார் நிறுத்தப்பட்ட போது, நடை பாதையில் படுக்கையில் கிடந்த கிழவியின் மீது சுமதியின் பார்வை மொய்த்தது. கிழவியின் கசங்கிக் கிழிந்த ஆடைகள் துர்நாற்றம் வீசக்கூடியவை என்பதைப் பார்வையாலே கண்டுபிடித்து விட முடியும் போலிருந்தன. கலைந்து கிடந்த தலை பற்றியோ, உடல் முழுக்கப் பரவியுள்ள கொப்புளங்களிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் அழுக்குக் கழிவுகள் பற்றியோ, முற்றுகையிடத் துடித்துக் கொண்டிருக்கும் ஈப் பட்டாளங்கள் பற்றியோ அவள் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வாய்க்குள் எதையோ போட்டு மென்று கொண்டிருந்தாள் கிழவி. அவ்வழியில் செல்வோர் அவளது துர்நாற்றத்திற்குப் பயப்படுகிறார்கள் என்பதை, அவர்கள் அவளிலிருந்து நன்கு ஒதுங்கித் தள்ளிச் செல்வதிலிருந்து உணர முடிந்தது.

அரண்மனை போன்ற தனது பெரிய வீட்டில், கணவனைத் துரத்திவிட்டுத் தனியாக வசிக்கும் சுமதி, அலுவலகத்திற்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் ஒவ்வொரு நாளும் இதே இடத்தில் அந்தக் கிழவியைப் பார்க்கிறாள். ஒருபோதும் காரிலிருந்து இறங்கிச் சென்று கிழவிக்கு உதவ வேண்டுமென அவள் நினைத்ததில்லை. ஆனாலும் கிழவியைப் பார்க்குந் தோறும் இனம் புரியாத நன்றிப் பெருக்கொன்று அவளது உடலெங்கும் உஷ்ணமாகப் பரவியோடும். அவள் பார்ப்பதற்கு தன்னைப் போன்ற முகவாக்குடன் இருக்கின்றாள் என்பதா அல்லது அவள் தன்னைப் பெற்றெடுத்த தாய் என்பதா இதற்குக் காரணம் என்பது மட்டும் சுமதிக்குப் புரிவதேயில்லை.

-------------------

காரில் ஏறும் போதுதான் ஃபைலை எடுக்க மறந்தது சலீமுக்கு நினைவு வந்தது. அலுவலக ஃபைல்களை அவன் பெரும்பாலும் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. அது தவறு என்பதற்காக அன்றி, வீட்டில் அடிக்கடி ஏற்படும் மனைவியுடனான சர்ச்சைகளில் அலுவலக ஃபைல்கள் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.

கார்க் கதவைச் சாத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, சோபா மூலைக்குள் ஒடுங்கியமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த மனைவியை மீண்டுமொரு முறை கோபம் முகிழ்க்கப் பார்த்து விட்டு, அறைக்குள் நுழைந்து ஃபைலை எடுத்துக் கொண்டு விறுவிறுவென நடந்து வெளியே வந்தான். காரினுள் ஏறி கதவைச் சாத்தி, ஸ்டார்ட் செய்து அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டான். காரின் வேகத்திற்கேற்ப தொல்லையும் எரிச்சலும் து}ரமாகிக் கொண்டிருப்பதாக உணர்ந்த போது, அமானுஷ்யமான ஆறுதலொன்று அவனை அரவணைத்தது.
வழியில் காத்து நிற்கும் தேவாவின் நினைவுகள் வந்தன. இரண்டு திருமணங்கள் புரிந்து இரண்டையும் உதறித் தள்ளி விட்டு சுதந்திரப் பறவையாகச் சுற்றித் திரியும் அவன் மீது சலீமுக்கு எப்போதுமே உள்@ரப் பொறாமையொன்றுண்டு. அதை அவன் வெளிப்படையாகவே பேசியுமிருக்கிறான்.

பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் பகிடிவதையிலிருந்துதான் அவர்களது நட்பு தொடங்கியது. கலைப்பீடத்தில் இணைந்து கொண்ட மூன்றாம் நாள், பாடங்களை முடித்துக் கொண்டு தரிப்பிடத்தில் பஸ்சுக்காகக் காத்து நின்ற போது சீனியர்களிடம் மாட்டிக் கொண்டான். அவர்கள் நீட்டிய வாழைப்பழத்தில் ஒரு துண்டைக் கடித்து விழுங்கி விட்டு மீதியை பக்கத்திலிருக்கும் மற்றொரு ஜூனியரிடம் கொடுக்க வேண்டும். பழத்தைப் பரிமாற கைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் நிபந்தனை. சலீம் கடித்துக் கொடுத்த மீதிப் பழத்தை தன் உதடுகளால் கவ்விப் பிடித்த போதுதான் தேவாவை முதன்முதலில் அவன் கண்டான். அதன் பிறகு நடந்த பெரும்பாலான எல்லா பகிடிவதைகளையும் அவர்களிருவரும் சேர்ந்து நின்றே அனுபவித்தனர். அடுத்த வருடம் ஜூனியர்களுக்கு அவற்றை சேர்ந்து நின்றே வழங்கினர். நட்பைத் தொடர்வதைச் சாத்தியமாக்குவதாக, அவர்கள் கற்ற பொருளியல் கற்கைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத வகையில் உயர் அலுவலகமொன்றில் அவர்களுக்கு வேலையும் கிடைத்தது.

தேவாவின் இரண்டாவது திருமண வரவேற்பின் போதுதான், அவன் மீது முதன் முறையாக பொறாமை கொண்டான் சலீம். ஷீலா அவ்வளவு அழகாக இருந்தாள். வானிலிருந்து இறங்கி வந்த தேவதைகளின் ராணி என்று, தனது பழைய கவிதையொன்றை அவனது உதடுகள் முணுமுணுத்தன. சிரத்தையெடுத்து ஒப்பனை செய்யப்பட்ட சினிமா நடிகைகள் அவளது கால் து}சுக்கு ஈடாக மாட்டார்கள் என நினைத்தான். தள்ளி நின்று அவளை அள்ளி அள்ளிப் பருகிக் களைத்துப் போனான். தேவாவுடன் காரில் ஏறி புன்னகை வீசி அவள் அவனை விட்டும் பிரிந்து போனாள்.

அன்றிரவு அவனுக்குத் தூக்கம் தவறிற்று. பக்கவாட்டில் திரும்பிப் படுத்திருந்த மனைவியின் முகம் பார்த்துக் காறித் துப்ப வேண்டும் போலிருந்தது. தேவா இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? உள்ளுக்குள் உஷ்ணம் பரவக் குப்புறக் கிடந்து கால்களைப் பரத்திய போது உணர்வுகள் முட்டின. வேறு வழியில்லாமல் கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று அவனுக்கு. ஷீலாவை நினைத்துக் கொண்டே இயங்கி முடித்த போது, அவள் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் காலையில் தேவாவின் வீட்டிலிருந்தான் சலீம். குளித்துத் தலை கட்டி, வெண் நீல நிறத்தில் சல்வார் உடுத்து கால் மேல் கால் போட்டு தன் முன்னால் அமர்ந்திருக்கும் ஷீலாவை அடங்காத உஷ்ணத்துடன் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். சதைப் பிடிப்பான அவளது தொடைகளின் இடையே அவனது பார்வை குத்தி நின்றது. அவளது ஆடம்பரச் சிரிப்பில் மலரும் தெத்துப் பல்லும் கன்னக்குழியும் அவனைச் சுண்டியிழுத்தன. “ரெண்டு பேரும் ஒரே மாதிரித்தான் பேசுவீங்களா?” என்றாள் அவள், அழகாக இருப்பதாக அவன் கூறிய போது. அவளது குரல், அவளது தோற்றத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாதவாறு துருப்பிடித்த இரும்புத் துண்டுகளை உராய்வது போல் அவனது காதுகளை அறைந்தது. அவனது கண்களை அவள் ஆழமாக ஊடுருவினாள். அவளது பார்வையிலும் தன் மீதான ஈர்ப்பொன்று தெரிவதாக அவனது உள்ளுணர்வுகள் அவனை உற்சாகப்படுத்தின.

சலீமுக்கு கன்னிராசி என்றொரு பட்டப் பெயரும் பல்கலைக்கழகத்தில் இருந்தது. ஷீலா விடயத்தில் அது உறுதியாயிற்று. நண்பனுக்குத் துரோகம் செய்வதாக சலீம் ஒரு போதும் எண்ணியதில்லை. தேவாவுடனான நட்பும் ஷீலாவுடனான உறவும் தனித்தனியான இரு வேறு விவகாரங்கள் என அவன் கருதினான். எனினும், தேவாவுக்குத் தெரியாதவாறு ஷீலாவுடனான உறவைப் பேணிக் கொள்வதிலும் அவன் தோல்வியடைந்து விடவில்லை. தன் காரிலேயே இருவரும் அலுவலகத்திற்குச் செல்வதென்ற அவனது திட்டத்தை, அதன் பின்னணி தெரியாமலேயே ஏற்றுக் கொண்டிருந்த தேவாவின் மீது இன்னும் ஆழமான நட்பு கொண்டான்.

தேவா-ஷீலா விவாகரத்திலும் சலீமின் பங்கு முக்கியமானது. ஒரு வருடத்திற்கு மேல் ஒரே பெண்ணில் ஈர்ப்புப் பெற்றிருப்பது இருவருக்கும் சிரமமாக இருந்தது என்பதை விட, அவ்விருவர் மீதும் ஷீலாவுக்கு ஈடுபாடு குறைந்து போனதே உண்மையான காரணம். இப்போது ஷீலாவை விட அழகான பெண்ணை மணக்குமாறு தேவாவை வற்புறுத்தத் தொடங்கியிருந்தான் சலீம்.

காரை நிறுத்திக் கதவைத் திறந்து விட்டதும் வீட்டு கேட்டைப் பூட்டி விட்டு ஏறி அமர்ந்த தேவாவின் முகத்தில் கலவரம் தெரிந்தது. எக்சிலேட்டரை மிதமாக அழுத்திக் கொண்டே அவனை நோட்டமிட்டான் சலீம். “என்னடா மச்சான்?” என்று புருவங்களை நெறித்தான். பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டே மௌனமாக இருந்த தேவா, “எவ்ரிதிங் இஸ் பேட் ஃபோர் மீ” எனக் கவலையுடன் ஆரம்பித்து, வீட்டு வேலைக்கெனப் புதிதாக வந்து சேர்ந்த வறிய இளம் பெண்ணின் மீதான தனது முயற்சியையும், அவளது எதிர்ப்பையும், அயல்வீட்டாரின் ஆரவாரக் கூச்சலையும் அதனால் அடைந்த அவமானத்தையும் விரிவாகக் கூறி முடித்தான். அந்த சம்பவத்தை விட அந்த ஆரவாரத்தில் வீசியெறியப்பட்ட சில வார்த்தைகள்தான் தன்னை கலவரத்திற்குள்ளாக்கியதாகவும் குறிப்பிட்டான். “பொஞ்சாதி செஞ்ச வேலெய அவ போனதுக்குப் பொறவு புருஷன்காரனும் செய்யப் பார்க்கிறான்” என்பதுதான் அந்த வார்த்தைகள் என்றும் ஒளிவு மறைவின்றி சலீமிடம் கூறினான். இடையிடையே தனது அற்ப சபலத்தையெண்ணிக் கைசேதப்படவும் செய்தான்.

சலீம் எதுவும் பேசவில்லை. தேவா, தன்னுடன் எந்த இரகசியமும் பேணாதவன் என்பது சலீமுக்குத் தெரியும். ரேவதியினதும் ஷீலாவினதும் பாலுறுப்புகளின் பண்புகள் பற்றியும் கூட சலீமிடம் அவன் மனந்திறந்திருக்கிறான். ஷீலா தொடர்பான தனது மிகையற்ற வர்ணனைகள்தான் அவள் மீதான சலீமின் இயல்பான ஈர்ப்பை வெறியாக மாற்றின என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத அப்பாவி அவன். ஷீலாவை வசீகரித்த அந்தக் கயவன் பற்றித் தெரிந்து கொள்ளாதிருந்து விட்ட தனது அறியாமை குறித்தே அவன் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதை சலீம் உணர்ந்தான். எக்சிலேட்டரை மேலும் அழுத்திக் கொண்டே சிகரட் ஒன்றையெடுத்துப் பற்ற வைத்து அவன் முன் நீட்டினான். “முதல்ல இத அடி, முடிஞ்சி போன விஷயத்தக் கதெக்கிறத்த விடு. இண்டைக்கி ஹாஃப் டே லீவு போட்டுட்டு எங்காவது போய் என்ஜாய் பண்ணுவம். எவ்வளவு குய்க்கா ஏலுமோ அவ்வளவுக்கு குய்க்கா அழகான குட்டியொண்டப் பாத்து மெரேஜ் பண்ணி வைக்க வேண்டியது என்ட பொறுப்பு, சரியா?” என அவனது கவனத்தை வேறுபக்கம் திருப்பவும் முயன்றான்.

அலுத்துக் கொண்டே சிகரட்டை வாங்கிய தேவா, திடீரெனக் கண்களை அகல விரித்து, “ஓ... பிரேக்கப் போர்ரா சலீம்” எனச் சத்தமிட்டுக் கத்தினான். சலீம் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டன. பழைய சைக்கிளில் வழிய வழிய விறகுக் கட்டைகளைக் கட்டிக் கொண்டு மஞ்சள் கோட்டின் வழியாக வீதியைக் குறுக்கறுத்த தொழிலாளியொருவன், காரின் டயர்களுக்குள் சிக்கி விறகுக் கட்டைகளுடன் நசிபட்டு நடுத்தெருவில் உடல் துடித்துக் கொண்டிருந்தான். பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே அதிர்ச்சியுடன் கண்ணாடிகள் சிதறிப் போயிருந்த காரை நிறுத்த முயன்றான் சலீம். மறுபடியும் தேவா கத்தினான். “சலீம், என்ன செய்றே? இப்ப காரை ஸ்டொப் பண்ணினா அவ்ளோதான். ரோட்ல நிக்கிறவன் அடிச்சி நொறுக்கிப் போட்டுருவான். எடு எடு குய்க்கா காரெ எடு”.

ஜனநடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்த அந்தத் தெருவின் மத்தியில், கசிந்து பரவிய தன் சிவப்பு இரத்தத்தில் தலை வைத்துச் சோர்ந்து, தன்னைத் துவம்சம் செய்து விட்டுச் செல்லும் அந்த ஆடம்பரக் காரை வெறித்துப் பார்த்தவாறே உடல் குளிர்ந்து போய்க் கொண்டிருந்தான் அந்த கறுப்புத் தொழிலாளி.

--------------------

ஜெகனின் முப்பத்தைந்தாவது பிறந்த தின வைபவம் அடக்கமாகவும் எளிமையாகவும் இருப்பதாகப் பலரும் கூறிச் சென்ற போது, அதை பாராட்டா கிண்டலா எனக் கிரகித்துக் கொள்ள முடியாமல் அவன் தடுமாறிப் போனான். வழமைக்கு முரணாக வித்தியாசமாக முயற்சிக்கலாம் என வைபவத்தை தனது வீட்டில் ஒழுங்கு செய்தது தவறான தீர்மானமாகி விட்டதோ என அவனது உள்ளம் தவிக்கத் தொடங்கியிருந்தது. அந்தத் தவிப்பு சற்றைக்கெல்லாம் எரிச்சலாகவும் கோபமாகவும் பரிணாமம் பெற்றுக் கொண்டிருப்பதை தொலைவில் நின்றே மேரி கவனித்து விட்டாள்.

விசாலமான அந்த வீட்டுக்குப் பெயின்ற் பூசுவதற்கும், வைபவச் சோடனைகளுக்கும் மது போத்தல்களுக்குமென மிகப் பெருந்தொகைப் பணத்தை மேரி தனது சேமிப்பிலிருந்து அவனுக்கு வழங்கியிருந்தாள். பிறந்த தின வைபவத்தை வீட்டில் ஒழுங்கு செய்ய ஜெகன் கூறிய போதே, ஹோட்டல்களை விட இரு மடங்கு செலவாகும் என்பதை மேரி கணித்திருந்த போதிலும், அவனுடன் விவாதித்து முரண்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பேசாமலிருந்து விட்டாள். தவிரவும் தனது தீர்மானத்தை பிறரது எத்தகைய ஆலோசனைகளுக்காகவும் ஜெகன் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரிந்ததுதான்.

வேலைக்காரச் சிறுவனுக்கும் சமையல்காரிக்கும் போனஸ், அநாதை இல்லத்திற்கு நன்கொடை, ஏழைக் குடும்பங்களுக்கு பகற்போசனம் போன்ற மேரியின் ஆலோசனைகள் எல்லாவற்றையும் நிராகரித்த அவன், எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி ஐநு}று பேருக்கு டின்னர் எனும் தனது தீர்மானத்தை தனது பிறந்த தின வைபவமாக அறிவித்தான். மேரிக்கு அது பிடிக்கவில்லை என்பதை அவன் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

ஜோன், தனது வயதையும் மீறி எல்லா வேலைகளையும் பம்பரமாகச் சுழன்று செய்து கொண்டிருந்தான். பதினைந்தே வயதான அவன் மீது அவ்வளவு வேலைகளையும் சுமத்துவது மேரியைக் கடுமையாக வதைத்தது. அநாதை, வீட்டு வேலைக்காரன் என்பதற்காக இப்படி வேலை வாங்குவது சரியில்லை என்று மேரி ஆரம்பிக்கும் போதெல்லாம், முரட்டுப் பார்வையொன்றால் அப்பேச்சை நிறுத்தி விட்டுச் சென்று விடுவான் ஜெகன். சம்பளமாக மூன்று வேளைச் சாப்பாடும் சிற்றுண்டியும் பெறும் ஒருவன் சிறுவனாக இருந்தாலும் முழு வேலையையும் செய்துதான் ஆக வேண்டும் என்பது அவனது நியாயம். ஜோன் வீட்டுக்கு வந்த இரண்டே மாதங்களில் ஜெகனின் எரிச்சல்களைக் கொட்டித் தீர்ப்பதற்கான மைதானமாக மாறி விட்டான். அதிகாலையில் ஜோன் பொலிஷ் பண்ணி வைக்கும் அதே ஷ_ மாலையில் அவனது முதுகிலும் முகத்திலும் மிதிப்பது நாளாந்த நடவடிக்கையாக மாறிவிட்டிருந்தது. விபத்தொன்றில் அகாலமாகிப் போன தனது பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகளும், மனைவி என்ற அடையாளமுந்தான் ஜோனின் நிலையிலிருந்து தன்னை வேறுபடுத்தித் தள்ளி வைத்துள்ளது என்பதையும் மேரி நன்கறிவாள்.

வைபவ ஏற்பாடுகளில் ஜெகனுக்குத் திருப்தியிருக்கவில்லை. தான் கூறிய எதையும் ஜோன் சரியாகச் செய்யவில்லை என்பது அவனுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்களும் சமூகப் பிரபலங்களும் செல்வந்தர்களும் மட்டும் அழைக்கப்பட்டுள்ள இவ்வைபவத்தை அவர்களெல்லோரும் வியக்கும் வகையில் ஆடம்பரமாகச் செய்து முடித்து விட வேண்டுமே என்ற தனது பதட்டத்தில் சிறுதுளியேனும் ஜோனிடம் இல்லையென்பது அவனுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்திற்று. வீட்டில் வேலைக்கு ஆளிருக்கும் போது வெளியிலிருந்து வேறு வேலைக்காரர்களைக் கொண்டு வருவது அநாவசியமானது என்று அவன் எண்ணினான். மேரியும் போதிய ஒத்துழைப்புத் தராமலிருப்பதற்கு, அவளது நிதி அனுசரணை பற்றிய கர்வமே காரணமாக இருக்கும் என்றும் நினைத்துப் பார்த்தான். சாப்பிட்டிலும் ருசி தெரியவில்லை. எல்லார் மீதுமிருந்த எரிச்சலையும் கோபத்தையும் ஜோன் மீதே கொட்டிக் கொட்டி அவனிடமிருந்து பலாத்காரமாக தனக்குத் திருப்தியான வேலைகளைப் பெற்றதில் நள்ளிரவுக்கு முன்னரே சோர்வுற்று அயர்ந்து தூங்கி விட்டான் ஜெகன்.

காலை பத்து மணிக்குக் கண் விழித்து எழுந்து வந்து பார்த்த போது வைபவ ஹோலில் மது போத்தல்களை வரிசையாக அடுக்கிக் கொண்டிருக்கும் ஜோனைக் கண்டான். எப்படியும் இன்று மாலை ஆறு மணிக்கு விருந்தினர் வரத் தொடங்கு முன்னர் வேலைகளையெல்லாம் ஜோன் முடித்து விடுவான் என்ற எளியதொரு நம்பிக்கை அப்போதுதான் அவனுக்கு ஏற்பட்டது. விலையுயர்ந்த அந்த மது போத்தல்களை உடைத்து விடாது சரியாக அவன் அடுக்கி வைத்து விடுவானா என்ற சிறிய சந்தேகமொன்று ஜெகனின் மூளைக்குள் தட்டுப்பட்ட அடுத்த கணமே ஜோனின் கையிலிருந்த போத்தல்களில் ஒன்று மிக இலாவகமாக அவனது ஏந்திய வலது கைக்கும் வயிற்றுக்கும் இடையே நழுவிக் கீழே விழுந்து களீரென உடைந்து சிதறிற்று. ஜெகனுக்கு கோபம் உச்சிக்கேறியது. இரண்டிரண்டு படிகளாகப் பாய்ந்து கீழிறங்கி ஓடி வந்தவன், தனது முழுப் பலத்தையும் வலது காலுக்குச் செலுத்தி, ஜோனின் நெஞ்சின் மையத்தில் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே உதைத்துத் தள்ளினான். கையிலிருந்த எல்லா போத்தல்களும் கீழே விழுந்து உடைந்து சிதற அவற்றின் மத்தியில் பஞ்சுக் குவியலாய் பரந்து விழுந்தான் ஜோன். தனது முற்றிய கோபத்தை வார்த்தைகளாக்கி வாயிலிருந்து உதிர்த்த ஜெகன், உடைந்த கண்ணாடித் துண்டுகளிலொன்று காலில் தைக்கும் வரை, கண்களால் கெஞ்சிக் கதறிய ஜோனை, கோபம் கொப்பளித்த முகத்துடன் மிதித்துத் துவைத்தான். மேரியினதும் சமையல்காரியினதும் அனுதாபத்தினால் கண்ணாடித் துண்டுகளிலான அச்சிறையிலிருந்து ஜோன் மீள முடிந்தது.

மாலையில் முன்கூட்டியே அலுவலகத்திலிருந்து திரும்பி விட்ட ஜெகனின் பார்வை வைபவ ஹோலைத் துழாவியது. அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு விரைவாகவும் நேர்த்தியாகவும் ஹோலை எப்படி ஏற்பாடு செய்ய முடிந்தது இவனால்? தன்னுடைய தலையீடுதான் தாமதத்திற்குக் காரணமாயிருக்குமோ என்ற மனதின் குறுகுறுப்பை அவன் ஏற்கவில்லை. ஏற்பாடுகள் திருப்தியளிப்பதையும் அவனால் நம்ப முடியவில்லை. இனம் புரியாத ஏதோவொரு புளகாங்கிதம் மனமெங்கும் பரவியிருப்பதை உணர்வது அவனுக்குப் புதியதொரு அனுபவமாகவும் தெரிந்தது.

எனினும், வைபவத்திற்கு வருகை தந்து மது போத்தல்களை வெறுமையாக்கிச் செல்லும் பெரும்பாலான செல்வந்தர்களின் வெளிப்படையான வார்த்தைகளை பாராட்டா, கிண்டலா எனக் கண்டறிய முடியாமல் பரிதவித்த போது திடீரென அடியிலிருந்து பற்றிப் படர்ந்து உச்சிக்கு வந்து தகித்த எரிச்சலும் கோபமும் ஆக்ரோஷத்துடன் ஜோனைத் தேடிக் கொண்டிருந்தன.
வைபவம் முடிந்த சற்றைக்கெல்லாம் வாய் பேசாத ஜோன், அடிக்குரலில் அலறி ஓலமிட்டுக் கதறும் ஒலி, ஜெகனின் பூட்டப்பட்ட அறையுள்ளிருந்து கசிந்து வருவதை, பரிதாபம் தோய்ந்த முகத்துடன் ஹோலில் மேரி கேட்டுக் கொண்டு நின்றாள்.

-------------------

அதிபர் அஸ்ரப், பாடசாலையைப் பொறுப்பெடுத்து பத்து வருடங்களாகின்றன. நகரில் புதிதாக எழுந்த தனியார் பாடசாலைகளுடன் போட்டியிடுவதில் அவர் எவ்வித சிரமத்தையும் எதிர்கொண்டதில்லை. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், சிறந்த முகாமைத்துவமுமே இந்த அரசாங்கப் பாடசாலையின் வெற்றிக்குப் பிரதான காரணம் என,  தான் அதிதியாக அழைக்கப்படுகின்ற எல்லா மேடைகளிலும் அவர் கூறி வந்தார். கல்வி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சில பிள்ளைகள், பாடசாலையின் தரத்தைப் பின்தள்ள முனைந்த போதெல்லாம் அச்சவாலைப் பெரும் சிரமத்துடன் அதிபர் வெற்றி கொண்டிருந்தார். இன்னும் நான்கைந்து மாதங்களில் ஓய்வு பெற இருக்கின்ற நிலையில், தன் முன்னால் அமர்ந்திருக்கின்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அவர் கலவரத்துடன் பார்த்தார். பாடசாலை விடும் நேரம் பார்த்து அவர்கள் வந்திருப்பது அவரைச் சங்கடப்படுத்தியது.

“நேற்று எங்களுக்கு ஒரு கம்ப்ளெய்ன்ட் வந்தது. அதெப் பற்றி இன்குவாரி பண்றத்துக்காக வந்திருக்கிறம்” என்றார் அக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்தவர் போலிருந்த பெண்ணதிகாரி. சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அவரது பார்வையில் மிகுந்த அழுத்தம் தெரிந்தது. அவரது இடதும் வலதுமாக மற்றும் இரண்டு அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அவர்களது முகங்களும் இறுகிக் கிடந்தன.

“போன வீக், ஸ்கூலுக்கு லேட்டா வந்த கிரேட் சிக்ஸ் படிக்கிற ரஹீம் என்கிற மாணவன உங்கட ஸ்கூல் டீச்சர் அடிச்சி பனிஷ் பண்ணியிருக்கிறார். மாணவன்ட அப்பா குடுத்த கம்ப்ளெய்ன்டுதான் இப்போ எங்க கையில இருக்கிறது” என அப்பெண்ணதிகாரி தனது வலது கையிலிருந்த கடித உறையொன்றைக் காண்பித்தார்.

“டீச்சர்ர பேரு முகைதீன்” என வலது பக்கமாக அமர்ந்திருந்த அதிகாரி முதற்தடவையாகப் பேசினார். அவரது குரலின் கரடு முரடு அதிபரை மேலும் பயமுறுத்தியது.

முகைதீன் ஆசிரியர் பாடசாலையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு தலைமை வகிப்பவர். மாணவர்களின் வரவு, ஒழுக்க விடயங்களில் மிகுந்த பொறுப்புடன் செயற்படுபவர். தன்னைவிட, முகைதீன் ஆசிரியருக்குத்தான் மாணவர்கள் அதிகம் கட்டுப்படுவர் என்பது அதிபருக்கும் தெரியும். சிற்று}ழியனைக் கூப்பிட்டு, முகைதீன் ஆசிரியரை “அழைத்து வா” என்று கூறுவதைத் தவிர அவருக்கு வேறெதுவும் பேச நாவெழவில்லை.

எல்லோரும் முகைதீன் ஆசிரியருக்காகக் காத்திருந்தனர். இந்தப் பிரச்சினையை முகைதீன் எப்படி சமாளிப்பார், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள், தனக்கும் ஏதாவது கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்றெல்லாம் மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தார் அதிபர்.

“ஸ்டூடன்ஸ அடிக்க வேணாம்டு எவ்ளோ தரம் சொல்றது?” அமைதியாக இருந்த மற்ற அதிகாரி சினத்துடன் அதிபரைக் கடிந்து கொண்டார். “ஹியூமன் ரைட்ஸ கடுமையாப் புறக்கணிக்கிற நிலைமை, ஸ்கூல் டீச்சர்ஸ் மத்தியில இப்போ அதிகரிச்சி வருது...” அவர் தொடர்ந்தும் ஏதோ சொல்லத் தொடங்குமுன் அவரது செல்போன் சத்தமிட்டது. அதிகாரி தனது கையிலிருந்த ஆடம்பரமான செல்போனை எடுத்துக் காதில் பொருத்தினார். “எக்ஸ்கியூஸ் மீ” சொல்லிக் கொண்டு, கதிரையிலிருந்து எழுந்து சற்றுத் தள்ளி நின்று கொண்டு அடக்கமான குரலில் கதைக்கத் தொடங்கினார்.

“என்னடா தேவா?”

“ஸ்கூல் இன்குவாரிக்கு வந்திருக்கேன்”

“கூட, சுமதி மேடமும் ஜெகன் சேரும் இருக்கிறாங்க”

“யெஸ் யெஸ், ஈவ்னிங் போலாம்”

“ஓகே”

அந்த அதிகாரி கதிரையில் வந்து அமரவும் முகைதீன் ஆசிரியர் காரியாலயத்திற்குள் நுழையவும் சரியாக இருந்தது.

***

நன்றி :  ஸபீர் ஹாபிஸ் , அம்ருதா , ஹனீபாக்கா

***

இதையும் படித்து மகிழுங்கள் :
ஸபீரின்  சிறுகதைகள் : ஆற்றங்கரைநன்றி கெடல்

Monday, May 13, 2013

இடலாக்குடி ஹஸனின் சிறுகதை

தம்பி ஸபீர் ஹாபீஸின் புதிய சிறுகதை அம்ருதா இதழில் வந்திருக்கிறது என்று ஹனீபாக்கா சொன்னாரே என்று நேற்று நாகப்பட்டினம் சென்று தேடினால் இம்மாத உயிர் எழுத்துதான் கிடைத்தது (மலர் 6 , இதழ் 11). அதிலிருந்த இடலாக்குடி ஹஸனின் சிறுகதையின் தலைப்பு வெகுவாகக் கவர்ந்தது. 'ஒற்றைகால் காக்கைக்கு ஒரேயொரு கால். அது என்ன?’ என்று உரக்கச் சொன்னேன் ஒருமுறை இன்று. ‘விடுகதையா மச்சான்?’ என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்த என் அஸ்மா , ‘ஊதுபத்தி. சரிதானே?’ என்றாள். என்னைவிட அஸ்மாவுக்கு எழுத்து வருகிறது! - ஆபிதீன்
***
Click Images to enlarge




***
நன்றி : இடலாக்குடி ஹஸன் , உயிர் எழுத்து
***
மேலும்...

இடலாக்குடி ஹஸனின் இன்னொரு சிறுகதை : இரட்டைக் காளை மாட்டுவண்டி

Sunday, May 12, 2013

நான் ஒரு முட்டாள் - நாகூர் ரூமி

'நான் ஏழையல்ல, ஏனெனில், நான் பணக்காரன் அல்ல' என்று எளிமையாக எழுதும் நண்பர். 'எந்த மனதையும் ஆழமாகச் சிந்திக்கச் செய்யும் சில கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள்' என்று நகுலனிடம் பா(ரா)ட்டு வாங்கிய நண்பர். அவருடைய 'நதியில் கால்கள்' நூலிலிருந்து...

***

ஒரு முட்டாளின் கவிதை
நாகூர் ரூமி

தெரிந்து விட்டது எனக்கு
நான் ஒரு முட்டாள் என்று
நீங்கள்?

வாசித்துப் பார்த்தேன்
வாசிக்க வாசிக்க
மண்டை நிறைய
முட்டாள் தனம்

விவாதித்துப் பார்த்தேன்
வென்றதெல்லாம்
முட்டாள்தனம்

எழுதிப் பார்த்தேன்
மை போல் கொட்டியது
முட்டாள்தனம்

செலவு செய்ய வேண்டியிருந்தது
எல்லா வார்த்தைகளையும்
மௌனத்தை வாங்குவதற்கு

எனினும்
மேதையென
போற்றினார்கள்
என்னைவிட முட்டாள்கள்

அட என்ன ஒன்று
என் முட்டாள்தனம்
கொஞ்சம் கவர்ச்சியானது
கொஞ்சம் அழகானது
உங்களதை விட

எனினும்
போரடிக்கிறது
இந்த மேதை வேஷம்
பொறுமையில்லை இனி
முட்டாள்களே கேளுங்கள்
நான் ஒரு முட்டாள்
நீங்கள்?

***

நன்றி : நாகூர் ரூமி
***

அசல் முட்டாளின் கவிதைகள் இங்கே :

Saturday, May 11, 2013

காதலைச் சொல்லும் கவ்வாலி

Love is neither Hindu nor Muslim - 'பர்ஸாத் கி ராத்'-லிருந்து...

***
Thanks to : celeburbia

Friday, May 10, 2013

ஒரிஜினல் ஜாக்கிரதை! - துக்ளக் சத்யா

சே, 'அல்லயன்ஸ்' வெளியீடான 'ஸ்மைல் ப்ளீஸ்' நூலிலிருந்து சத்யாவின் இந்தக் கட்டுரையை சிரித்துக்கொண்டே டைப் செய்துவிட்டு சிறிதுநேரம் இணையத்தை செக் செய்தால் இது அப்புசாமி டாட் காமில் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது! புத்தி. 'சர்வம் காமெடி மயம்' பகுதிகளையும் சாக்கிரதையாக இனி வெளியிட வேண்டும். ஸ்மைல் ப்ளீஸ்...
***


ஒரிஜினல் ஜாக்கிரதை - சத்யா

நான் இயற்கையாகவே சற்று சந்தேகப் பேர்வழி. இந்தப் போலி சாமியார் விவகாரங்களைக் கேள்விப்பட்ட பிறகு, என் சந்தேகப் புத்தி அளவில்லாமல் வளர்ந்து விட்டது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தவன், எல்லாப் புற்றிலும் பாம்புகள் இருப்பது உறுதி என்று நம்ப ஆரம்பித்து விட்டேன்.

அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாமல் நான் குழம்பிய குழப்பம் கொஞ்சநஞ்சமல்ல. உடனடியாக டாக்டரிடம் சொல்லிக் கொள்ளாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த மருத்துவமனை. மனோதத்துவ டாகடர் மாணிக்கவாசகம் என்னை ஏற இறங்கப் பார்த்தார். அவர் பார்வையே ஒரு தினுசாக இருந்தது.

இந்த ஆள் அசல் டாக்டர்தானா? என்ற சந்தேகம் என் மனதில் ஒரு கணம் நிழலாடி மறைந்தது.

"என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு வேலை இல்லையா?"

ஏன் இப்படி எரிந்து விழுகிறார்? பேஷண்டுகளைக் கவனிப்பதைவிட இவருக்கு வேறென்ன வேலை இருக்கமுடியும்? கள்ளக்கடத்தல், கிள்ளக் கடத்தல் செய்கிறாரா?

"வந்து.. டாக்டர் இருக்காரா?"

"ஏன், என்னைப் பார்த்தா டாக்டராத் தெரியலையா?"

"ஸ்டெதாஸ்கோப்பைக் காணோமேன்னு பார்த்தேன்.."

"நான் மனோதத்துவ டாக்டர்யா! உடம்பு வியாதியைத் தீர்க்கிற டாக்டர்தான் ஸ்டெதாஸ்கோப்பு வெச்சிருப்பாரு. சரி.. உங்களுக்கு என்ன பிரச்னை?"

என் வியாதியை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. எப்படி அதை டாக்டரிடம் சொல்லுல்வது? சொல்லுவதா வேண்டாமா?

"இங்கே யாரும் இல்லையே டாக்டர்?"

"என்ன கேள்வி இது? நாம ரெண்டு பேரும் இங்கேதானே இருக்கோம்!"
"நம்மைத் தவிர வேற யாரும் இல்லையே?"

"ஊஹூம். நாம்பளும் வெளியே போயிட்டா இங்கே யாரும் இருக்க மாட்டாங்க."

நான் மடத்தனமாகக் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் மெனக்கெட்டு பதில் சொல்கிறாரே. இவரும் கிறுக்குதானா?

"என்கிட்டே சொல்லலாம்னா சொல்லுங்க.."

டாக்டரின் காதில் கிசுகிசுத்தேன். அவருக்குக் கோபமே வந்து விட்டது.

"என்னதான் ரகசியாம இருந்தாலும் குறைந்த பட்சம் என் காதுலேயாவது விழணும் இல்லையா? இவ்வளவு மெதுவாச் சொன்னா எப்படி?"

"இன்னும் நான் சொல்லவெ ஆரம்பிக்கல டாக்டர். உங்க காதுகிட்டே வாயை வெச்சுக்கிட்டு, சொல்லலாமா வேண்டாமான்னு யோசிட்டிருந்தேன்."

"நாசமாய்ப் போச்சு. கதவைச் சாத்திட்டு வரேன். இப்பவாவது சொல்லுங்க."

ஐயையோ! பட்டப்பகலில் கதவைச் சாத்துகிறாரே விபரீதமான ஆளா இருப்பாரோ?

'சீச்சி.. இருக்காது..'

ஒரு வழியாக டாக்டரிடம் என் வியாதியை விவரித்தவுடன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.

“இதுக்கா இவ்வளவு அமர்க்களம் பண்ணினீங்க? இந்தச் சந்தேக வியாதி இப்ப நிறையப் பேருக்கு வர ஆரம்பிச்சிருக்கு.”

“நிறையப் பேருக்கு இந்த வியாதி இருக்கா? நம்பவே முடியலையே! வியாதி தீரலைன்னா கூடப் பரவாயில்லை. மத்தவங்களுக்கும் அந்த வியாதி இருக்குங்கறதே பெரிய ஆறுதலாயிருக்கு டாக்டர்!”

“அசல் எது போலி எதுனு தெரியாம குழம்பறீங்க. அதானே? கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தினா சுலபமாக கண்டு பிடிச்சிடலாம்”

திடீரென்று இப்படி ஒரு நிபந்தனையைப் போடுகிறாரே!

“அதைத் தவிர வேறு வழியே இல்லையா டாக்டர்?”

“இப்போ.. சினிமாவிலே நூறு அடி உயரத்திலே இருந்து ஹீரோ குதிக்கிற காட்சியைப் பார்க்கிறீங்க இல்லையா?”

“ஆமா”

“ஆனா உண்மையா ஹீரோ குதிக்கறதில்லே. உண்மையாகக் குதிக்கிறவன் டூப். குதிக்கிற மாதிரி ஆக்ட் பண்றவன்தான் ஹீரோ. அதே தத்துவம்தான் மத்த இடங்களிலேயும்..”

“எப்படி டாக்டர்?”

“புரியும்படி சொல்றேன். பஸ்லே போறீங்க. கண்டக்டர் அசலா போலியான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?”

“தயவு செஞ்சு சொல்லுங்க டாக்டர். காலையிலே கூட எனக்கு அந்தச் சந்தேகம் வந்தது.”

“மிச்ச சில்லறையைக் கொடுக்காதவர்தான் ஒரிஜினல். பாக்கி சில்லறையைத் திருப்பிக் கொடுத்தார்னா எதுக்கு நீங்க உஷாராவே இருங்க.”

“சரி சரி.”

“போகிற இடத்துக்கு குத்து மதிப்பா ரேட் சொன்னா அசல் ஆட்டோ டிரைவர். மீட்டர்படி குடு ஸார்னு கேட்டா ஜாக்கிரதையா இரு க்க. மீட்டருக்கு சூடு வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாரு.”

“மீட்டருக்கு மேலே பணம் கேட்டா சூடு வெக்கலைன்னு அர்த்தம்.”

“கரெக்ட் புரிஞ்சிக்கிட்டீங்களே.. ரோடு போட்டு ஒரே மாசத்திலே நாசமாப் போச்சுன்னா அவர்தான் ஒரிஜினல் காண்ட்ராக்டர்.  அவர்தான் எல்லோருக்கும் நாணயாம கமிஷன் கொடுத்திருப்பார்.”

“ஓஹோ!”

“கவர்மெண்ட் ஆபீஸ¤க்கு போறீங்க. நீங்க என்ன கேட்டாலும் அலட்சியமாப் பதில் சொல்றாரே அவர்தான் ஒரிஜினல் அரசு ஊழியர். அக்கறையா பொறுப்போட பதில் சொன்னா எச்சரிக்கையா இருங்க.”

“புரியுது டாக்டர்.”

“அவ்வளவு ஏன்? ஊழல் புகாருக்கு ஆளாகிறவர்தான் அசல் மந்திரி. மத்தவங்களையெல்லாம் முதல்வரே நம்ப மாட்டாரு.”

டாக்டர் எனக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருக்கும்போதே கதவை யாரோ தடதடவெனத் தட்டும் சப்தம் கேட்க, “ஐயோ” என்று அலறிக் கொண்டே பின்பக்க வழியாக வெளியே ஓடினார் டாக்டர். திடுக்கிட்டுத் திரும்பினேன். பரபரப்போடு கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.

“எங்கே அவன்? ஓடிட்டானா? என்னைக்கு இருந்தாலும் அவனைப் பிடிக்காம விட மாட்டேன்!” என்று கறுவியபடியே திரும்பிச் சென்று விட்டார்.

இவ்வளவு நேரம் போலி டாக்டரிடமா பேசிக் கொண்டிருதேன்? நான் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டதே. நல்ல காலம், ·பீஸ் கொடுப்பதற்குள் உண்மை தெரிந்து விட்டது.

சிறிது நேரத்தில் மீண்டும் உள்ளே வந்தார் டாக்டர். ‘போலீஸ்’ என்று கத்த நினைத்தபோது தடுத்துக் கூறினார்.

“பயந்துட்டீங்களா? இப்ப வந்துட்டுப் போனானே அவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இல்லை. நம்ம ஏரியா ரவுடி ரத்தினம்தான். போலீஸூக்குப் பயந்து இன்ஸ்பெக்டர் வேஷம் போட்டுக்கிட்டுத் திரியறான்.”

“போலீஸூக்குப் பயந்து இன்ஸ்பெக்டர் வேஷமா?”

“ஆமா இந்த ஏரியாவிலே இருக்கிற எல்லாக் கடைகளுக்கும் வந்து அப்பப்ப பணம் பிடிங்குவான். அவன் தொல்லை தாங்க முடியலை. அதான் வெளியே ஓடிட்டேன்.”

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே சந்தேக வியாதி. இன்ஸ்பெக்டர் வேஷத்தில் ரவுடி வந்தால்...?

சிரிது நேரத்தில் மீண்டும் வெளியே சப்தம். நானும் டாக்டரும் வெளியே பாய்ந்தோம். ஆபத்து என்னவென்று தெரியாவிட்டாலும் ஓடுவதற்கு தயாராகவே இருந்தேன்.

வாசலில் சற்று முன் மிரட்டி விட்டுப்போன போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒரு ரவுடி கிடுக்கிப்பிடி போட்டு அமுக்கி இருந்தான்.

“ஏண்டா, ரத்தினம், எத்தனை நாள் மாமூல்கூட  கொடுக்காம ஓடியிருக்கே நீ? உன்னைப் பிடிக்கிறதுக்காகத்தான் ஒரிஜினல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நான் ரவுடி வேஷம் போட்டுக்கிட்டேன். மரியாதையா கணக்குப் பாத்து செட்டில் பண்னு!” என்று இழுத்துக்கொண்டு போனான்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.
அசல் என்றும் போலி என்றும் இரண்டு வகை இல்லவே இல்லை. போலிகள் மட்டுமே அசல் என்றும் போலி என்றும் இரு வகையாகப் பிரிந்திருக்கிறார்கள். யார் ஒரிஜினல் யார்.. போலி என்ற குழப்பம் மட்டுமே இப்போது நீடிக்கிறது.

***

நன்றி : சத்யா, அல்லயன்ஸ், அப்புசாமி[டாட்]காம்

Thursday, May 9, 2013

குழந்தைகள் - கஹ்லீல் கிப்ரான்

a Chapter from Kahlil Gibran's book ' The Prophet'. அபூர்வ தமிழாக்கம் :அரூப சௌந் ப்ரேமீள் (81-ல் வெளியான படிமம் சிற்றிதழிலிருந்து..)

***

குழந்தைகள் - جبران خليل جبران‎

பின்பு தனது குழந்தையை மார்புடன் அணைத்தபடி நின்றிருந்த ஒரு பெண் "எங்களுக்கு குழந்தைகளைப் பற்றி சொல்லுங்கள்" என்றாள்.

அதற்கு தீர்க்கதரிசி கூறினான் :

உங்கள் குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை,

வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின்
மகனும் மகளுமாக ஜனித்தவை

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள்
எண்ணங்களை அல்ல. ஏனெனில்

சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம்,
உயிருக்கு அல்ல. ஏனெனில்,

உங்கள் கனவில் கூட நீங்கள் அடைய முடியாத எதிர்காலம்தான்
அவர்களது உயிர் உறையும் வீடு.

நீங்கள் அவர்களைப் போல ஆவதற்காக கடின முயற்சி செய்யலாம்.
ஆனால் உங்களைப் போல அவர்களையும் ஆக்கி விடக் கூடாது. ஏனெனில்,

வாழ்வு பின்னடித்துச் செல்வதில்லை. நேற்றைய நாட்களில்
சுணங்குவதுமில்லை.

உயிருள்ள அம்புகளாக உங்களிடமிருந்தே எய்யப்படும்
குழதைகளுக்கு நீங்கள் வில்லுகள்.

வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து , தனது
அம்புகள் அதிவேகத்துடன் தொலைதூரம் செல்லும்படி உங்களைத்
தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆநந்திக்கட்டும்.
ஏனெனில்,

பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற
வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.


 

Wednesday, May 8, 2013

உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ்

Festival sitar in Petersburg 2012 (October 28th) . Ustad Shahid Parvez - sitar Accompaniment on the Tabla by Denis (Russia).
***


***
Thanks to : peaceofsound1

Tuesday, May 7, 2013

ஒற்றுமைக் கனிகள்

தன் வாழ்நாள் முழுதும் மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்ட 'சொல்லரசு' மாமாவை (மர்ஹூம் ஜாஃபர் முஹ்யித்தீன் அவர்கள்) அதிகாலைக் கனவில் கண்டேன். 12-2-2003 அன்று நாகை இஸ்லாமிய கல்விமையம் நடத்திய ஈத்மிலன் பெருநாள் சந்திப்பிற்கான அழைப்பிதழை அவர்கள் கொடுத்ததும் சிறப்பு விருந்தினராக ஜஃபருல்லாநானா கலந்துகொள்கிறாரே.. மதக்கலவரம் வந்துவிடாதா மாமா என்று நான் கேட்டதும் ஞாபகம் வந்தது. சிரித்துக்கொண்டே, சுவாமிஜி ரிஷி ஷைதன்யா அவர்களும் சுவிசேஷ திருச்சபை சபைகுரு ஜெ.ஜெபகுமார் அவர்களும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதால் கண்டிப்பாக கலவரம் வராது என்று உறுதிகூறிய மாமா, 'அன்னைக்கி மட்டும்' என்று அன்று கூறத் தவரவில்லை! - ஆபிதீன்

***
நாம் மதத்தால், மொழியால், இனத்தால் பல்வேறுபட்டவர்களாக இருப்பினும் - நாம் அனைவரும் மனிதர்கள். நமது உடலமைப்பும், தேவைகளும், உணர்வுகளும் ஒரே மாதிரியானவை. நமது மதத்தைப் பழித்தால் நமக்கு வருத்தம் ஏற்படுவது போல அடுத்தவருக்கும் ஏற்படும். எனவே தனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்புவதே நல்லிணக்கத்தின் துவக்கமாகும்.

எல்லா சமயத்தவர்களின் உணர்வுகளையும் மதிக்கக்கற்றுக்கொள்ள வேண்டும். "பிறர் வணங்குகின்ற அல்லாஹ் அல்லாதவற்றை திட்டாதே!" (குர் ஆன் 6:108) என இஸ்லாமும் "எல்லா தர்மங்களையும் சமமாக பாவிக்க வேண்டும்" (சர்வதர்ம சம்பாவ்) என இந்து சமயமும் வலியுறுத்துகின்றன. சமய உணர்வுகளைக் காயப்படுத்துவதன் மூலமே கசப்புணர்வு உருவாகின்றன.

நமது நாடு நீண்ட காலமாக அமைதிமிக்க பன்மை சமூகமாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால் ஆதிக்க சக்திகள் பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சி செய்கின்றன. ஆனால் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் எந்த சக்தியாலும் நம்மை பிரிக்க முடியாது. மனிதநேயமே நம் உள்ளங்களை இணைக்கும் பாலமாகும் மனித் நேயத்தை வளர்க்க எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மனித நேயம் வீட்டிலே விதைப்பட வேண்டும். கல்வி கூடங்களில் நீர் பாய்ச்சப்பட வேண்டும். தலைவர்களும், ஆன்மீகவாதிகளும்,அறிவு ஜீவிகளும் அதற்கு உரமிட வேண்டும். வகுப்புவாதிகளை இனம்கண்டு களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒற்றுமை எனும் கனிகளை உண்டு மகிழலாம். வலிமையான , வளமையான ஒற்றுமையான பாரதத்தை உருவாக்கலாம்.

மதவெறி சாய்ப்போம் ! மனித நேயம் காப்போம்!

(தினகரன் ரம்ஜான் மலர் - 2002 பக்கம் 168லிருந்து)

Saturday, May 4, 2013

அழைக்கின்றார் மிஸ்டர் பீன்...! - தாஜ்


தா.தோ.தி.தோ.மா.கோ.க.:

அழைக்கின்றார் மிஸ்டர் பீன்...

-தாஜ்

நூற்றுக் கணக்கான
அரசியல் கட்சிகளை கண்ட நம் தமிழகம்....
வெகு விரைவில் இன்னொரு
புதிய அரசியல் கட்சியின்
துவக்கத்தையும்
அதன் மாபெரும் வெற்றியினையும்
காணப் போகிறது!

'தா.தோ.தி.தோ.மா.கோ.க.'
இதுவோர்
வித்தியாசமான கட்சி!
இதன் ஆதாரக் கொள்கைகள்
மிகவும் வித்தியாசமானது! சிரிப்பானது!
உங்களை சிரிக்கச் சிரிக்க வைத்து
சிந்திக்கத் தூண்டுவது!

"கட்சியின் பெயரை...
'தா.தோ.தி.தோ.மா.கோ.க.!'
என்றிருக்கின்றீர்களே....
அப்படி என்றால்
என்ன அர்த்தம்?" என்கிறீர்களா..
யாருக்குத் தெரியும்!

தமிழகக் கட்சிகளின்
பெயர்கள் குறித்த
சுலோக எழுத்துக்களை ஒட்டி
சும்மா ஜாலியா ராகவடிவா
தேர்வு செய்யப்பட்ட
சுலோக எழுத்துக்கள்தான் இவை!
நல்லா இருக்குல...!?

கட்சியின் பெயர்தான் என்ன? என்று
மண்டையை உடைத்துக் கொள்பவர்கள்
கொஞ்சம் முயன்று
இந்தச் சுலோக எழுத்துக்களுக்கான
வார்த்தைகளை அர்த்தப்படுத்தி
இஸ்டத்துக்கு
எங்க கட்சியின் பெயரை கண்டெடுங்கள்!
முடியுமானால் அப்படியே
எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.

*
நம் தாய் தமிழகத்தின்
அதி அவசியத் தேவைகளான...

1. காவேரியில் தண்ணீர்

2. மின்சாரம்

3. சுபீட்ச வாழ்வு!           

- இம் மூன்றையும்
தனது திறமையால்
மக்களின் நல் ஆதரவோடு
இனிதே நிறைவேற்றித் தருவதாக
வீர சபதம் பூண்டிருக்கிறார்...
நம் தானைத் தலைவர் மிஸ்டர் பீன்!

காவேரியில் தண்ணீர்:

இறைவனிடமே நேரிடையாக
கோரிக்கையினை வேண்டி பணிந்து வைத்து
அவனது தலையில் உள்ள
ஆகாசக் கங்கையை
வான் வீதியின் வழியே
தங்கு தடையில்லாமல்
கிராஃபிக் உதவியோடு
காவேரிக்கு கொண்டுவந்து
வருடம் பூராவும்
பாசனத்திற்கு வற்றா நீர் வழங்கத்
திட்டமிடப்படிருக்கிறது!

மின்சாரம்:

அதிகம் மின்சாரம் உற்பத்தியாகும்
நாடுகளில் இருந்து
கடல் மார்க்கமாய்
கப்பல் கண்டெய்னர்கள் மூலம்
சக்திவாய்ந்த மின்சாரத்தை
மாதத்திற்கு மூன்று முறை
தமிழகத்திற்கு கொண்டு வரவும்
இறக்குமதி செய்து
தடையற வழங்கவும்
திட்டமிடப்பட்டிருக்கிறது!

தவிர,
நம் நாட்டில் வற்றாது மண்டும்
குப்பைகளில் இருந்தும்,
மனிதக் கழிவுகளில் இருந்தும்
மின்சாரம் தயாரிக்கும் திட்டமும்
பரிசீலிக்கப்பட இருக்கிறது!

சுபீட்ச வாழ்வு!:

மக்கள் சுபீட்சமாக வாழத் தேவைப்படும்
பணம் குறித்த தேவையை
மிக எளிதாக
நிவர்த்திச் செய்ய திட்டமிட்டிருக்கிறார்
மிஸ்டர் பீன்!

தேர்தல் வாக்குறுதியாக
75 ரூபாய் அச்சடிக்கும்
கையடக்கமான மிஷின் ஒன்றை
எல்லா குடும்ப அட்டைத்தாரார்களுக்கும்
தங்குத் தடையின்றி
வழங்கத் திட்டமிடப் பட்டிருக்கிறது.

மத்திய அரசு 75 ரூபாய் அச்சடிக்கும்
மெஷினுக்கு அனுமதி தர மறுக்குமானால்..
40 ரூபாய் அல்லது 30 ரூபாய் அச்சடிக்கும்
சிறிய மிஷின் வேண்டி பெற்றுதரப்படும்!

*

இத்தகைய முன்னுரிமைத் திட்டங்களைத் தாண்டி
இன்னும் பிற தேவையான திட்டங்களையும்
அறிவிக்க இருக்கிறார் மிஸ்டர் பீன்.

1.நம் நாட்டில் லஞ்சம் அங்கீகரிக்கப்படும்.
அரசியல்வாதிகளில், போலீஸ்காரர்கள் தொட்டு
நம் ஜட்ஜ்கள் வரை யாரும் தடையின்றி
லஞ்ஜம் வாங்கலாம்.

2.கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற
அரசே....,
சிறப்பு வெள்ளை பெயிண்ட் ஸ்பிரே ஒன்றை
தயாரித்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.
உங்களது கருப்பு பணத்தை எளிதாக
வெள்ளையாக மாற்றிக் கொள்ள முடியும்!

3.மாணவர்களின் நலன் வேண்டி
ஒண்றாம் வகுப்பில் இருந்து
கல்லூரி உயர் கல்விவரை
தேர்வு என்பதே கிடையாது.

"எங்களுக்கு தேர்வு வேண்டும்" என்று
மாணவர்கள் போராடினால்..,
அது மிகப் பெரிய குற்றமாக கருதப்படும்.

4.கல்லூரிவரைப் படித்த
மாணவர்கள் அனைவருக்கும்
வேலை வழங்கப்படும்.
கௌரவப் பணியாக அது இருக்கும்!
ஊதியமற்று
நாட்டின் நலனுக்காக
பணியாற்றும் சீரிய பணியாக அது இருக்கும்.
ஆண்டுதோறும்
விசேச
பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்!

5.அரசின் எல்லா பொறுப்பான
உயர் அந்தஸ்து பணிகள் அத்தனையிலும்
நவீன ரோபோக்கள் அமர்த்தப்படும்.
ரோபோக்களுக்கு லஞ்சம் தர விரும்புகிறவர்கள்
அரசு கருவூலத்தில் பணத்தை செலுத்தி
ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

6.மிஸ்டர் பீன்...
விவசாயிகளின் நலன் கருதி
அவர்களுக்காக நவீன திட்டமென்றை
நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
அதன் படிக்கு
மந்திரத்தால்
மூன்றே நாட்களில் தானிய உற்பத்தியை
உருவாக்கி பலன் கண்டுவிட முடியும்!
இதன்படிக்கு
வருடத்திற்கு சுமார் 50 தில் இருந்து 60 முறை
விவசாயம் செய்ய முடியும்!
மலையாள மாந்திரீகர்களிடம்
தேர்வு ரகசியமான முறையில் நடக்கிறது.

*
இத்தகைய முக்கியப் பிரச்சனைகளுக்கான
தீர்வு மட்டுமல்லாது...
கொதிக்கும் பிரச்சனைகளான...

1.தமிழீழப் பிரச்சனைக்கும்

2.கூடங்குள அணுஉலைப் பிரச்சனைகளுக்கும்

நிரந்தரத் தீர்வு காணப்படும்.

தமிழீழம்:

பசிபிக் மஹா சமுத்திரத்தில் காணும்
ஏதேனும் ஓர் பெரிய தீவை
விலைக்கு வாங்கி
அதனை தமிழீழமாக அங்கீரிக்கப்படும்.
அங்கே, சம்பந்தப்பட்ட தமிழீழ மக்கள்
ஆட்சி புரிய வழிவகையும் காணப்படும்!
ஐக்கிய நாட்டு மக்கள் நல்வாழ்வு அமைப்போடு
இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

கூடங்குளம்:

இந்துமஹா சமுத்தில்,
சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில்
காணும்
ஏதேனும் பாறை போன்ற ஓர் தீவில்
கூடங்குள அணுவுலை நகர்த்திப் போய்
நிலைநிறுத்தப்படும்!

கடலில் அதனை நகர்த்திக் கொண்டுப் போக..
அங்கே நிலை நிறுத்த தேவைப்படும்
தக்க உபகரணங்களை
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும்!.

இப்படி இன்னும்
பலநூறு திட்டங்கள்
தலைவர் மிஸ்டர் பீன்...
திட்டமிட்டிருக்கிறார்.
அறிவிப்பு விரைவில் வெளிவரக் கூடும்.

இந்தப் புதியக் கட்சி ஜெயிக்குமா?
என்கிற கவலையே மக்களுக்கு வேண்டாம்.
தமிழத்தில் இன்றைக்குப் பெயர் போட்டிருக்கும்
கட்சிகளின் A to Z நடவடிக்கைகளை
மக்கள் கண்டு சலித்து போய் இருப்பதால்
இப் புதியக் கட்சியை
நம் மக்கள் இருகரம் நீட்டி வரவேற்பார்கள்..
என்பது 100 சதம் நிச்சயம்.

இந்த இயக்கத்தில்
சேர விரும்புகின்றவர்கள்
www.mrbeen.com - ல்
அப்ளிகேஷனை நகலெடுத்து
கட்சித் தலைமைக்கு அனுப்பி வையுங்கள்.
கட்சித் தலைமையின் முகவரி அறிவிக்கப்படும்.

வெற்றி நமதே
வாழ்க தலைவர் மிஸ்டர் பீன்.

***

நன்றி : கவிஞர் கவுண்டமணி

Friday, May 3, 2013

'உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது' - ஆத்மாநாம்

காலச்சுவடு வெளியீடான 'ஆத்மாநாம் படைப்புகள்' புத்தகத்திலிருந்து...

பதிப்பாசிரியர் பிரம்மராஜனின் குறிப்பு :  * இந்தச் சுய அறிமுகக் கட்டுரையை ஆத்மாநாம் தனது 25வது வயதில் எழுதியிருக்கிறார். அமைப்பியல் கவனப்படுத்திய Reader Reception Theoryயை அன்றே (1976) முன்னோக்கி இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. 1981ஆம் ஆண்டு திரு யேசுராஜா, திரு சுந்தர ராமசாமி இவர்களுடனான சந்திப்பில் Crea-Aவில் இதே விஷயத்தை உறுதிபடுத்திப் பேசியதாக என்னிடம் பேசியிருக்கிறார். அதாவது கவிதை எழுதப்பட்ட பின்பு கவிஞனுக்கே புரியாமல்கூடப் போகலாம். ஆனால் கூர்ந்து வாசிக்கும் ஒரு வாசகன் கவிதையை அணுகிவிட முடியும்.

***

ஆத்மாநாமைப் பற்றியும்  கவிதையைப் பற்றியும் ஆத்மாநாம் ஐ

சமீபகாலமாகக் கவிதை எழுதிவரும் 25 வயது இளைஞர். தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் உலகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி, தனிமனிதனின் அவலங்கள் , வாழ்க்கை மதிப்பீடுகள் பற்றிக் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தும் முயற்சியில் சுதந்திரம் முதலியன தற்காலக் கவிதைக்குக் கிடைத்துள்ள ஒரு முக்கியமான வசதி. இதன் மூலம் விரிவான ஆன்மீக, தத்துவ, அரசியல், சமூக ஆராய்ச்சிகளுக்கான வழிகள் பல உண்டு. இலக்கண அறிவு இல்லாதவர் தற்காலப் பேச்சு வழக்கே கவிதை வெளியீட்டிற்கு ஏற்றதாகக் கருதுபவர். இதன் எளிமை கவிதையைச் சமகாலத்தினர் எல்லோரும் புரிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது. பேச்சு வழக்கு பிற்கால மொழியிலாளருக்கு உதவி செய்யும். கலாச்சார மதிப்பீட்டிற்கும் உரிய பார்வைக்கும் சொற்செட்டுக்கும் மேற்பட்ட ஒன்றுதான் கவிதை. மக்களிடமிருந்து வரும் கவிதை மீண்டும் மக்களிடம் செல்லும்போது ஒவ்வொரு கவிஞனுக்கும் உள்ள ஒரு 'தொனி'யுடன் செல்கிறது. அது எவ்வளவு தூரம் ஆழமானதாகவும் வலுவுள்ளதாகவும் இருக்கிறதோ அவ்வளவு தூரம் அது மக்களைத் தாக்கும். பிரசுர சாதனங்களும் சமூகத்தில் உள்ள பொருளாதார வேறுபாடுகளும்தான் கவிதை சிலரிடையே மட்டும் புழங்குவதற்கு காரணமாயிருக்கின்றன. கொள்கைகளைப் பற்றிய அதிகப்படிப்பு இவருக்கு இல்லாததால் வாழ்வில் சொந்த அனுபவங்களிலிருந்து மட்டுமே கவிதை எழுதுகிறார். ஒவ்வொரு கவிதையும் புதிதாகப் பிறக்கும் பச்சைக் குழந்தையைப் போல. அதனால் கவிதைகளைக் குத்திக் கிளறிப் பார்க்காமல் ஆர்வத்தோடு நாசூக்காக ஏன் எப்படி எவ்வாறு என்று கேள்விகளுடன் அணுகி வந்தால் அதன் முழு வர்ணங்களும் தெரிய வரும். படிப்பவனின் அறிவுநிலைக்கேற்ப கவிஞனுக்கே தெரியாத சில அர்த்தங்கள் பிடிபடும்*. கவிதையில் உள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று. இலக்கிய தொடர்பின் காரணமாகவே வாழ்க்கை வாழத்தகுதியுள்ளதாக நினைக்கும் இவர் இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ என்றும் அஞ்சுகிறார்.

ஆச்சரியம் நிறைந்த குழந்தையின் பார்வை வாயிலாகத் தெரியும் மனநிலை தொடர்ந்து இருக்க விருப்பபடுகிறார். ஒரு கணத்தில் உலகம் முழுவதும் வியாபித்துள்ள வெவ்வேறு மனிதர்களின் செயல்களை நினைக்கும்போது உண்டாகும் பிரமிப்பு, கரையில் நின்றபடி நீலக்கடலை வானம் தொடும் இடம்வரை பார்ப்பதில் உள்ள இன்பம் தன்னைமறக்கச் செய்யும். ஒவ்வொரு மலையையும் அதன் உச்சியை அடைய நினைக்கும் மனம் ஆகியவற்றில் மனம் இழக்கிறார். உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர். கோவிலுக்கு அதிகம் வழிபடப் போகாதவர். மனித சக்திக்கு மீறிய ஒன்று மனிதனிடம்தான் உள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். கவிதைகளின் வெற்றி தோல்வி பற்றிய விவாதம் அபத்தம் என்று நினைக்கிறார். தன்னிலிருந்து தானே விடுபடும்போது ஒருவன் மனிதனுக்கு ஒருபடி மேலே செல்கிறான். இவை கவிதைகள் என்றால் கவிதைகள்தான். கவிதைகள் இல்லை என்றால் என்ன செய்வது? ஆத்மாநாமைப் பொறுத்தவரை இந்த வரையறையில்தான் ஆத்மாநாமுக்கும் உலகத்திற்கும் உள்ள தொடர்பு தெரிகிறது. இருவருக்கு இடையே உள்ள மெல்லிய கண்ணாடித் திரையை உடைக்கப் பார்க்கும்போது அவை தடித்த இரும்புச் சுவர்களாகி விடுகின்றன. இது அறிவு என்றால் இது கவிதை.

***
நன்றி : பிரம்மராஜன் , காலச்சுவடு பதிப்பகம்