Wednesday, November 27, 2019

பாபர் மசூதி தீர்ப்பும் சமூக அரசியலும் - பிலால் அலியார்

'திராவிட வாசிப்பு’ மின்னிதழில் சகோதரர் பிலால் அலியார் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
*


இந்தியா என் தாய் நாடு, இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என பள்ளிக்காலங்களில் தினந்தோறும் உறுதிமொழி எடுத்த நமக்கு, 2019 நவம்பர் மாத ஆரம்பத்தில் வெளியான சமூக வலைதள செய்திகள் அவற்றை பொய்யாக்கின. அரசும், நீதிமன்றமும், ஊடகங்களும் மக்களை பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் என்றும், தொலைதூர பயணங்களை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு பதட்டம் நிறைந்த சூழலை உருவாக்கின.

நவம்பர் 9, 2019, அன்று தான் இந்தியாவின் ஒருமைப்பாடு, சமத்துவம், மத நல்லிணக்கத்தை சிதைத்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்குவதாக அறிவித்தது. இந்திய அரசியலமைப்பின் நேர்மையான, சுதந்திரமான ஜனநாயக அமைப்பான உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் முன்னரே, அது எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அரசியல் புரிதல் கொண்ட அனைவருமே அறிந்து வைத்திருந்தது தான் பாசிச பாஜகவின் வெற்றி.

தீர்ப்பு குறித்து அறியும் முன், பாபர் மசூதி இடிப்பு குறித்த உண்மையான வரலாற்றை நாம் அறிய வேண்டும்.

1992-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் கலவர விதை அதற்கும் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்டது. 1949-ம் வருடம் டிசம்பர் மாதம் 22-ம் தேதி நள்ளிரவில் திருட்டுத்தனமாக பாபர் மசூதியின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து, அதன் வாயில் கதவை உடைத்து குழந்தை ராமன் சிலை நிறுவப்பட்டது. ராமன் சிலையை மசூதிக்குள் கொண்டு ஓடியவர் வைணவ அகோரியான அபிராம் தாஸ்.

பாபர் மசூதி இடிப்பை போன்றே மசூதிக்குள் சிலையை நிறுவியதும் விரிந்த அரசியல் சதித் திட்டத்தின் பகுதியே. அதனை அபிராம் தாஸின் தனிப்பட்ட ஆதாய நோக்கத்தில் விளைந்தது என்று மட்டும் சொல்ல முடியாது. காந்தி கொலையால் முடங்கியிருந்த இந்து மகாசபை – ஆர்.எஸ்.எஸ் தனது எதிர்கால நடவடிக்கைகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை; இல்லையேல் தனிமைப்பட நேரும் என்ற ஆபத்தை உணர்ந்திருந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ்-க்கு சொல்லிக்கொள்ளுமளவு பெரிய செல்வாக்கு கிடையாது.

என்ன செய்தாவது இந்துக்களை திரட்ட வேண்டிய பதட்டத்தில் இருந்தார்கள். தனது சதி நோக்கத்தை மக்களிடம் மறைக்கின்ற அதே நேரத்தில், அந்த சதியையே மாபெரும் பொற்கால மீட்பு நடவடிக்கையாக பேசுவதற்கு அவர்கள் கற்றுக் கொண்டார்கள். இது காந்தி கொலையிலிருந்து கற்றுக்கொண்ட பாடம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். காந்தி கொலை பகலில் செய்யப்பட்டது என்றால் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையை நிறுவும் குற்றச் செயல் இரவிலே நிகழ்த்தப்பட்டது.

இவ்வாறு திட்டமிட்ட சதிசெயலின் பின்னணியில் வைக்கப்பட்ட அந்த சிலையின் பின்னணிதான் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலை வழிநடத்தியது.  வலதுசாரி பார்வை கொண்ட பெரும்பான்மை மதவாத அரசியலும், சிறுபான்மை வெறுப்பு அரசியலும் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்பட்டது வட மாநிலங்கள் முழுவதும். ஆனால் தென்கோடியில் இருந்த தமிழகம் மட்டும் விதிவிலக்காக. அதற்கு காரணம், இங்கிருந்த திராவிட அரசியலும், சமத்துவ சிந்தனையும் தான்.

1949ல் அத்துமீறி இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளத்தில் வைக்கப்பட்ட சிலைகளை வெளியேற்ற, அன்றைய இந்தியப் பிரதமர் நேரு, உ.பி.யின் முதல்வர் கோவிந்த் வல்லப் பந்திற்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் மத்தியில் உள்துறை பொறுப்பை வகித்த வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சிக்கு பலியாகி பாபர் மசூதி முன்பு குவிந்திருந்த மக்களை, படையை அனுப்பி வெளியேற்றி விட்டு சிலையை அகற்றுவதை எதிர்த்தார். இதை பகிரங்கமாக கண்டிக்கவோ, இல்லை நடவடிக்கை எடுக்க முடியாத நேருவோ, உ.பி காங்கிரசுக்குள் மதவாதம் புகுந்து விட்டது என்று வருணித்தார். தன்  கோபத்தை உ.பியின் பிரதமர் கோவிந்த் வல்லப் பந்திற்கு உணர்த்த அவரை சந்திக்க பின்னாட்களில் மறுத்தார் நேரு.  இதைத் தாண்டி இவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவ்வாறு வைக்கப்பட்ட சிலைகள் மூலம் ஆர்எஸ்எஸ், பாஜக, விஸ்வ இந்தி பரிசத், பஜ்ரங்தள் போன்ற பாசிச அமைப்புகளால் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்ற பிரச்சாரம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது, இந்தியாவின் மதநல்லிணக்கத்தை குறித்து கவலைப்படாமல். அதில் தொடர்ச்சியான வெற்றியும் கண்டு, 1992 டிசம்பர் 6, பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டுவதற்கான கரசேவைக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தன இந்துத்துவ அமைப்புகள். இந்தியாவெங்கும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள், கரசேவையை தடுத்து நிறுத்தி கலவர சூழலை கட்டுப்படுத்த அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் கேட்டு கொண்டனர்.

தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த ஜெயலலிதா பகிரங்கமாக கரசேவைக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய இந்துத்துவ சார்பு நிலையை மக்களுக்கு உணர்த்தியது. அதே நேரத்தில் கரசேவை எதிர்ப்பு கண்டன கூட்டங்களை நடத்தியது மட்டும் அல்லாமல், அந்த கூட்டங்களிலும் பேசிய திமுக தலைவர் கலைஞர், சீனப் படையெடுப்புகள் நடந்த போது பிரதமர் நேருவுக்கும், லால்பகதூர் சாஸ்திரிக்கும் திமுக ஆதரவு கொடுத்ததை போல, கரசேவையை தடுக்க மத்திய அரசுக்கு உதவத் தயார் என்று அறிவித்தார்.

ஆனால் பெரும்பான்மைவாத மத அரசியலை மையப்படுத்திய, ஆர்எஸ்எஸ் சிந்தனையை கொண்ட காங்கிரசின் நரசிம்மராவ் அரசும், உ.பி. பாஜகவின் கல்யாண் சிங் அரசும் கரசேவர்கள் என்ற கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தவறியதால், தாங்கள் குறித்த தேதியில், நேரத்தில் பாபர் மசூதியை இடித்தனர். இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பண்பாடு, அனைத்தும் கேள்விக்குறியாகி நாடு முழுவதும் கலவர சூழல் ஏற்பட்டது.

பாபர் மசூதி இடிப்பை திராவிட, முற்போக்கு இயக்கங்களும், திமுகவும் கடுமையாக கண்டித்து, சிறுபான்மையினர் உரிமைக்கான, பாதுகாப்பிற்கான சூழலை உருவாக்க வேண்டிய அவசியத்தை குறித்து கவலைப்பட்டனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தளமான இடிக்கப்பட்ட பாபர் மசூதியை அரசு காலதாமதமில்லாமல் மறுநிர்மாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார், கலைஞர்.

1999ல் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி என்ற வரலாற்று பிழையை திமுக செய்த போதும், அதில் குறைந்த பட்ச பொது திட்டத்தை உருவாக்கி, ராமர் கோவில் கட்டுவதை எதிர்ப்பது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான பிரிவு 370யை நீக்க கூடாது என்ற பாஜகவின் நீண்டகால திட்டங்களை அரசியல் ரீதியாக முடக்கிப் போட்டார், கலைஞர். இன்றைய மோடியின் ஆட்சியில்  அவற்றின் நிலை அனைவரும் அறிந்ததே?

பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு, அவ்வப்போது பசு பாதுகாப்பு, மதம் என்ற பெயரில் இந்தியாவெங்கும் வன்முறை சூழல்கள் பாஜகவால் உருவாக்கப்பட்டாலும், சிறுபான்மையினருக்கான வாழ்வியல் சூழலை திராவிட சித்தாந்த அரசியலால் சிறப்பாகவே கட்டமைத்து வைத்திருக்கிறது தமிழகம். கோவை கலவரத்திற்கு பிறகான குண்டுவெடிப்பு சம்பவங்கள் இஸ்லாமியர்கள் மீதான பார்வையை மீள்பார்வை செய்ய வைத்ததையும், கவலைக்குரியதாக மாறியதையும் மறுக்க முடியாது. ஆனாலும் சமூக, பொருளாதார, கல்வி தளத்தில். இஸ்லாமியர்களுக்கான உரிமை மறுக்கப்படாததும், சம வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பதும், இஸ்லாமியர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடும் திமுகவின் சமத்துவ, சமூகநீதி பார்வைக்கு சாட்சி.

இத்தனை கால இடைவெளியில், 27 வருடங்களாக நடந்து வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கு அயோத்தி நில வழக்கு என்று பெயர் மாற்றமே நிகழ்ந்து விட்டது, சத்தமில்லாமல், இதுவும் பாசிசத்தின் வெற்றி தான். நவம்பர் 9, 2019, காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்க ஆரம்பித்த ஐந்து நீதிபதிகள், பாபர் மசூதி, இராமர் கோவிலை இடித்து கட்டப்படவில்லை என்ற வரலாற்று உண்மையை அறிவித்து விட்டு,  பாபர் மசூதியை ஒப்படைத்து விட்டு, அந்த இடத்தில் இராமர் கோவிலை கட்ட வேண்டும் என்றும், இடிக்கப்பட இருக்கும் பாபர் மசூதியை வேறொரு இடத்தில் நிர்மாணிக்க ஐந்து ஏக்கர் நிலமும் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பையும் வழங்கினார்கள்.

தீர்ப்பு வெளிவந்த பின்பு தமிழகம் எப்போதும் போல் இயல்பு வாழ்க்கையை நடத்தியது மட்டும் அல்லாமல், தீர்ப்பால் கவலையடைந்திருக்கும் சிறுபான்மையினருக்கு, மாற்று மத சகோதரர்கள் தங்களின் தார்மீக ஆதரவையும் சமூக வலை தளங்களில் வழங்கியதையும் பரவலாக காண முடிந்தது.

இது மசூதியா? கோவிலா? என்ற பிரச்சினையில்லை.....

ஏனைனில் ஒவ்வொரு இறை நம்பிக்கை கொண்ட இஸ்லாமியனுக்கும் மெக்காவில் உள்ள இறையில்லமான காஃபாவை நோக்கி வணங்குவதுதான் முக்கியமே தவிர, அதை எந்தக் கட்டிடத்தில் இருந்து வணங்குவது என்பதை குறித்து கவலையில்லை. ஆனால், இந்தனை ஆண்டு காலம் இந்திய இறையாண்மை மீது சிறுபான்மை சமூகம் வைத்திருக்கும்/வைத்திருந்த நம்பிக்கையை, 1992ல் கடப்பாறைகளை கொண்டு சிதைத்தார்கள், இன்று சட்டத்தை கொண்டு இடித்து தள்ளி இருக்கிறார்கள். இதைப்பற்றி தேர்தல் அரசியலில் இயங்கும் பெரும்பாலான  கட்சிகளின் பிரதிநிதிகள் யாருமே கவலைப்படாத ஒரு நிலையை தான் இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியலும் மையம் கொண்டிருக்கிறது என்பதை  மிகுந்த கவலையுடன் பார்க்க வேண்டும்.

வடமாநிலங்களை மதத்தின் பிண்ணனியில் கபளீகரம் செய்து விட்டு, இன்று தமிழகத்தை அடிமைப்படுத்த சங்கபரிவாரம் முழு வீச்சுடன் செயல்படுகிறது. திராவிட அரசு என்ற பெயரில் பாசிச பாஜகவின் அடிமையாக இருக்கும் தமிழக அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளும், மதவாத, சாதியவாத அமைப்புகளின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் வலிமையும், கலைஞர் காலத்து திராவிட இயக்கத்து இளைஞர்கள் கனவு கண்ட அந்த முற்போக்கான அரசியலும், இன்று திமுகவின் தலைமையில் தமிழக இளைஞர்களின் கையில் இருக்கிறது என்ற நம்பிக்கையும் இருக்கிறது.


*



நன்றி : பிலால் அலியார் & திராவிட வாசிப்பு குழுவினர்

Sunday, November 17, 2019

மனநிலையும் வினைவிளைவும்

மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற நூலில் (மூலம் : பக்தர்களின் பாதை – இமாம் கஸ்ஸாலி) உள்ள ஒரு பகுதியைப் பகிர்கிறேன். வல்ல நாயன் நமக்கு தெளிவைத் தருவானாக, ஆமீன்! - AB

 
மனநிலையும் வினைவிளைவும்

'எங்கு திரும்பினாலும் அங்கு காணப்படுகிற முன்னேற்றங்கள் அத்தனைக்கும் மனிதனின் சலியாத உழைப்பே மூலக் காரணமாக அமைந்திருக்கிறது' என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

நான் கேட்கிறேன் : இரவு பகல் என்று பாராது சலியாமல் உழைக்கிறவர்களில் ஒரு சாரார் வாழ்க்கையில் ஏன் பின்தங்கி நிற்கிறார்கள் என்ற வினா உங்கள் எண்ணத்தில் தோன்ற வில்லையா? முயற்சிக்குப் பின்னால்தான் - உழைப்புக்குப் பின்னால்தான் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பது உண்மை. நீங்கள் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகிறீர்கள். ஆனால் முன்னேற்றத்துக்கு உழைப்பு ஒன்றைத் தவிர்த்து வேறு எந்த காரணமும் கிடையாது என்ற முடிவுக்கு நீங்கள் வந்து நிற்கக் காரணம் என்ன?

பஸ்ராவைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் தம்மீது வீசப்பட்ட வினா ஒன்றுக்கு கொடுத்த விளக்கம் இங்கு நம் சிந்தனைக் குரியது என்று எண்ணுகிறேன்.

"நான் நாற்பது ஆண்டுகளாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இரவு நேரத்தில்கூட நான் பாடுபடுகிறேன். இருந்தும் தொடர்ந்தாற்போல் மூன்று நாட்கள் சாப்பிடும் அளவுகூட என்னிடம் வசதி இல்லை ...?" என்று ஒருவன் கேட்டபோது அந்த அறிஞர் வியப்போடு ஏறிட்டுப் பார்த்தார்.

சுருக்கம் கொண்ட முகமும் குழிவிழுந்த கண்களும் காய்ந்துபோன உதடுகளுமாக நின்று கொண்டிருந்தான் அந்த மனிதன்.

“உன் வயது என்ன?"

"ஐம்பதுக்கு மேலாகிவிட்டது. பத்து - பன்னிரண்டு வயதிலேயே நான் உழைக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போது அன்பு காட்டுவதற்கு யாருமே இல்லை."

அறிஞர் கேட்டார் : "ஏறக்குறைய 40 ஆண்டுகள் நீ கேட்ட பிரார்த்தனையை இன்னும் இறைவன் நிறைவேற்றித் தரவில்லை ! அப்படித்தானே?"

அந்த மனிதனுக்குப் புரியவில்லை. “பிரார்த்தனை செய்யவில்லை. எனக்குப் போதிய அளவு மார்க்க ஞானம் கிடையாது. நான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்..."

அறிஞர் மெதுவாகச் சிரித்துக் கொண்டார்.

"நான் சொல்வதைக் கவனித்துக் கேள். நான் சொல்லும் செய்தி உன் வாழ்க்கையில் வரவேற்கத் தகுந்த திருப்பத்தைக் கொடுக்கக் கூடும்” என்று அமைதியோடு ஆரம்பித்த அறிஞர் தொடர்ந்தார்.

உன் நிலையை நினைத்துப் பார்க்கும்போது அடுப்பை எரியவிடாமல் ரொட்டி தயாரிக்க முற்படுகிற மனிதனின் நிலைதான் என் மனத்தில் தோன்றுகிறது. இப்படி நடந்து கொள்ளும் மனிதனை நீ பார்க்க நேரிட்டால் அவன் எடுக்கிற முயற்சியில் ஒரு போதும் பயன் கிடையாது என்று உனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே போன்ற வேறொரு தவற்றைக் காலமெல்லாம் நீ செய்து கொண்டிருக்கிறாய் என்று நான் சொன்னால், என் வார்த்தையில் உனக்கு நம்பிக்கை பிறக்காது. ஏனெனில் மனிதர்களில் பெரும்பாலோருக்குத் தமது குறையை உணர்ந்து கொள்ளும் சக்தி கிடையாது.

உன்னோடு சேர்ந்து வாழ்கிறவர்களைக் கவனித்துப் பார். அவர்களில் சிலர் முயன்று வேலை செய்கிறார்கள்; தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்கிறார்கள். வேறு சிலர் உன்னைப் போலவே தமக்கும் தம் தேவைகளுக்கும் நடுவில் நீண்ட இடைவெளியைப் பார்க்கிறார்கள்.

முயற்சியைப் பொறுத்தவரை - உழைப்பைப் பொறுத்த மட்டில் இந்த இரு சாராரும் ஒரே நிலைமையில்தான் இருக்கிறார்கள். எனினும் விளைவைப் பொறுத்தவரையில் ஒரு சாராருக்கு மறுசாரார் முற்றிலும் வேறுபட்ட நிலைமையில் இருக்கிறார்கள். முதல் சாரார் செல்வத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அதே நேரத்தில் இரண்டாம் சாரார் வறுமையின் பிடியில் அடிமைப்பட்டுக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இந்த வேறுபாடு முயற்சியில் கிடையாது என்று உனக்குத் தெரியும். ஏனெனில் இரு சாராரும் ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார். வெளிச்செயலில் வேறுபாடு இல்லை என்றால் மனச்செயலில்தான் வேறுபாடு இருக்க வேண்டும். இந்த இரு சாராரின் மனநிலையைப் பார்க்கும் சக்தி உனக்கு இருந்தால், வெள்ளைக்கும் கறுப்புக்குமுள்ள வேறுபாடு அவர்களின் மனப் பண்புகளில் இருப்பதைக் காணலாம்.

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தவை" என்று பெருமானார் கூறியிருக்கிறார்கள். 'செயல்கள்' எனும் வார்த்தையில் மனிதனின் முயற்சியும் உழைப்பும் அடங்குகின்றன. எனவே முதல் சாரார் முயற்சியால் முன்னேறுகிறார்கள் என்று சொல்வதைவிட எண்ணத்தினால் உயர்கிறார்கள் என்று கூறுவது மிகப் பொருத்தமானது. உண்மையும் அதுதான்!

வெற்றியடைகிற முதல் சாரார் வலிமை வாய்ந்த எண்ணம் படைத்தவர்கள் - அல்லது பயிற்சியின் மூலம் தம் எண்ணத்தை வலிமைப்படுத்திக் கொண்டவர்கள். தமக்கு இதுதான் தேவை. என்று குழப்பமில்லாமல் தெளிவாகத் தெரிந்து கொண்ட அவர்கள், அதனை இறைவன் நிச்சயமாக நிறைவேற்றிக் கொடுப்பான் என்று உறுதியுடன் நம்புகிறவர்கள் - வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தவக்குல் என்பது ஒரு வகையில் பிரார்த்தனைதான். தமக்குத் தேவைப்பட்ட ஒன்றை அடைவதற்காக அவர்கள் 40 ஆண்டுகள் பிரார்த்தனை செய்ய வேண்டியதில்லை!

உண்மையில், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தேடித் தருவது அவர்களின் முயற்சியா அல்லது அவர்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கிற 'தவக்குல்' என்ற பண்பா என்று நீயே யோசித்துப் பார்த்துக் கொள்.

தோல்வியடைகிற இரண்டாம் சாரார் முதல் சாராருக்கு எல்லா வகையிலும் மாறுபட்டவர்கள். அவர்களைப்பற்றி நான் கூறவேண்டியதில்லை.

உன்னிடமுள்ள குறைகள் அனைத்துக்கும் அவர்கள் உரிமையாளர்கள். ஏனெனில் மனநிலையைப் பொருத்தமட்டில் உனக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. -

பஸ்ராவைச் சேர்ந்த அந்த ஞானியின் விளக்கம் உங்கள் வினாவுக்கு விடை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை.

*
நன்றி : அஃப்சரா பதிப்பகம்

Wednesday, November 13, 2019

நாகூரும் நற்றமிழும் (1 - 9) - அப்துல் கையும்

ஃபேஸ்புக்கில் ஒரு தொடர் எழுதிவருகிறார் ‘நாகூரி’ அப்துல் கையும். நண்பருடைய தீவிர வாசகன் நான். ரசித்துப் படித்து வருகிறேன். இன்னும் 991 பதிவுகள் இருப்பதாகத் தெரிகிறது. இப்போதைக்கு 9 லிங்க் மட்டும். கமெண்ட்களையும் சேர்த்துப் படியுங்கள். அப்போதுதான் ஜெதபு! - AB

Note : See Comments for the Updated  List. Thanks.
*



நாகூரும் நற்றமிழும் பாகம்  1

நாகூரும் நற்றமிழும் பாகம்  2

நாகூரும் நற்றமிழும் பாகம் 3

நாகூரும் நற்றமிழும் பாகம் 4

நாகூரும் நற்றமிழும் பாகம் 5

நாகூரும் நற்றமிழும் பாகம் 6

நாகூரும் நற்றமிழும் பாகம் 7

நாகூரும் நற்றமிழும் பாகம் 8

நாகூரும் நற்றமிழும் பாகம் 9

*

நன்றி : அப்துல் கையும்

Tuesday, November 12, 2019

Tabla for Two

'Aane Se Uske Aaye Bahar' performed by Tabla for Two (Masood Omari and Abigail Adams)
Thanks to :  TablaForTwo & Asana Maricar


Visit : https://www.voanews.com/arts-culture/unusual-partners-make-afghan-music