Showing posts with label சென்ஷி. Show all posts
Showing posts with label சென்ஷி. Show all posts

Thursday, May 13, 2021

அம்மா விட்டுச்சென்ற திசை - சென்ஷி சிறுகதை

அம்மா விட்டுச்சென்ற திசை
- சென்ஷி

ஆம் ! சிறுவயதிலிருந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற முதலிரண்டு அச்சங்களைப் போலன்றி மூன்றாம் அச்சம் பற்றிய துக்கம் என்னுள் எழவில்லை. 
 
என் ஒவ்வொரு அச்சங்களும் என் உடலின் பாகத்தில் ஒவ்வொரு அறையாகத் திறந்திருக்குமென நம்பினேன். அவ்வப்போதைய நிகழ் சூழலுக்கேற்ப அது தன்னுடைய வாசலை சிறிதாகவோ பெரிதாகவோ ஆக்கிக்கொள்கின்றன. அதில் என்னை முழுமையாக மூழ்கடித்தும் விடுகின்றன. குறிப்பாக தெரிந்தவர்களிடம், அக்கம்பக்கத்தினரிடம், நண்பர்களிடம் கடன் கேட்டு கிடைக்காத துயர், செலவைப் பற்றி எண்ணும் போது கிடைக்கின்ற அச்சத்தில் மூழ்கிவிட்டபின், அச்சம் என் இடது கை சுண்டுவிரலில் ஆரம்பிக்கிறது. எதிர்பார்த்த பணம் கிடைக்காத எல்லா நிமிடங்களிலும் சுண்டுவிரலில் யாரோ தன்னுடைய விரலைக் கோர்த்துப்பிடித்துக்கொண்டு பதற்றத்துடன் என்னுடன் அலைவது போலிருக்கும். அதிக வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையில் பத்திரமாய் சாலை கடத்தலைப் போன்ற - பதைபதைப்பு என்னுடன் ஓடிவரும். நேரமாக ஆக சுண்டுவிரல் பாரம் தாங்காது நோக ஆரம்பிக்கும். தனியே ஒடிந்து விழாவிட்டால் நானே அறுத்து எறிந்துவிடலாமா என்ற யோசனை வருமளவு என்னை அது பலமாய் ஆக்கிரமித்திருக்கும். யாரேனும் ஆதுரமாய் என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களா என்று ஏங்குமளவுக்கு அழுகை வரும். எத்தனை வயதானால் என்ன! எனக்கென்று ஒரு தோள் கிடைத்துவிட்டால் அழுதுதீர்த்துவிட மாட்டேனா நான். 
 
ஆம் ! எனக்கான தோளை நான் இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். சுமை இடமாற்றத்திற்காக அல்ல. என்னுடைய துயரங்களை நிச்சயம் அத்தோளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டேன். என்னுடைய கைகளை அந்த தோளில் மேல் இறுக்கப்பிடித்துக் கொள்ள வேண்டும். அதனுடைய அசட்டு சந்தோசங்களை நிச்சயம் என்னுடையதாக ஆக்கிக்கொள்வேன். சப்தமாக சிரித்து வைப்பேன். தொலைதூரத்தில் கண் பார்வைக்கு சிறிதாய் தெரிகின்ற முழுமையாய் அகப்பட்டுக்கொள்கின்ற அந்த மலையின் அளவு பாசம் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் ஓடுகிறது. 
 
தோளின் மீதமறும் அச்சம் பற்றி உனக்குத் தெரியுமா ? 
 
அது நம்மை பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். இரண்டு தோள்களிலும் தன்னிரு கால்களை போட்டுக்கொண்டு தலைபிடித்து அமரும் குழந்தை போல பொறுப்புகளை சுமந்து செல்லும் அச்சம். கண்ணுக்கு தெரியாத விரிசல் கொண்ட தண்ணீர்ப்பானையைச் சுற்றி ஈரம் விரவுதல் போல உங்களைச் சுற்றி நசநசப்பாக்கும். இது என்னுடைய வேலையே இல்லை என்று உங்களை அலறல் கொள்ள வைக்கும். முதுகை வேகமாக சுவரில் மோதிக்கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ள தோன்றும். வெளிச்சத்திலிருந்து நகர்ந்து இருட்டிற்கு ஓடிப்போவது மாத்திரமே தற்காலிக தப்பித்தலை தரும். உங்கள் முதுகின் மேலூறும் கண்கள் இருட்டை ஊடுருவக்கூடாதென்பது முக்கியம். ஆனால் எப்பொழுதும் பொறுப்பின் மீதான அச்சமே நம்மை இயக்குகிறது. வெறுமனே இயக்குதல் மாத்திரம் அல்ல சமயங்கள் வேட்டைநாயின் துரத்தலைப் போல துரத்தியடிக்கும். பரபரப்பு. வேகம். ஓட்டம். நின்று நிதானித்து பொறுப்பை எண்ணிக்கொள்ள முடியாது. அது நம் வேலையாக இருக்கலாம் குடும்பமாக இருக்கலாம் அல்லது வெளியே சொல்லத் தயங்கும் உங்களது பரிபூர்ண காதலாக இருக்கலாம். காதலைக்கூட நாமே வெளியேற்றி சொல்லக்கூடிய அளவிலாய் அமைவது அல்லது பொறுப்பைக் குறித்து யோசிக்கும்போது! 
 
தலையை பற்றிப்பிடிக்கும் அச்சம் - மிகவும் பிடித்தமானது. ஏனெனில் இதை நானே எனக்காக உண்டாக்கிக்கொள்வது. தேவையில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து, தனது கருத்தை பேசுவது போன்றதல்ல அது. சற்று விந்தையானது. உயிர் போய்விடவும் கூடுமென்பதில் உங்களுக்கு விந்தைத்தன்மை கிடைக்குமெனில், நீங்களும் முயற்சிக்கலாம். முழுக்க முழுக்க என்னைத் தண்டித்துக்கொள்வது போன்றது என்று இதனை நேரிட்டு கண்டு திடுக்கிட்ட சிலர் கூறினாலும், இவ்வச்சம் குறித்த விவரணைகளை நீங்கள் அறிய வேண்டும். ஏனெனில் என்னால் இவ்வச்சத்தை எளிதில் கையாளமுடியும். இவ்வச்சத்திலிருந்து தப்பித்துவிட முடியும். 
 
 தளும்ப தளும்ப தண்ணீர் நிரம்பப்பட்ட வாயகன்ற தொட்டியில் தலையை கவிழ்த்து மூச்சு முட்டும்வரை உங்களால் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு தொட்டியின் அடியாழத்தைக் காண இயலுமா. வெளியிலிருந்து தொட்டியின் மீது படர்ந்து உள் நுழையும் வெளிச்சம் சிறிது சிறிதாக குறைந்து இருள் மாத்திரமே உங்கள் கண்களுக்கு தெரியும் வரை காத்திருக்க வேண்டும். மூச்சை இறுக்கப்பிடித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் கால்கள் தரையைத் தொட்டிருந்தாலும், தலையின் மீது அந்த அச்சம் ஏறிக்கொள்ளும். ஆனால் இந்த அனுபவத்தை உயரம் அதிகமான கட்டிடங்களின் விளிம்புகளில் நின்று முயற்சிக்கக்கூடாது. ஏனெனில் ஒருமுறை கழுத்தை பின்னால் மடித்து அன்னாந்து முகம் தூக்கி உச்சியைக் கண்ணால் அளந்தறிய முயலா ஓர் கட்டிடத்தின் உச்சியிலே ஏறி நின்று காற்றின் வேகத்தை அனுசரித்தவாறு விளிம்பில் பத்திரமாக நின்றபடி எட்டிப் பார்த்ததற்கு தற்கொலை முயற்சி என்று கூறி தனிமைச்சிறையில் அடைக்க முயற்சித்தனர். அங்கு வழி தெரியாது கண்ணாடியின் வழி தெரியும் பாதையை முட்டிக் கொத்தும் பறவையாக நானிருப்பதை உணர முடிந்தது. 
 
அசாத்தியமான சுத்தம் குறித்த பயமும் எனக்குண்டு. உடலை எப்படி சுத்தப்படுத்தினாலும் எப்படியேனும் ஒரு கறை கண்ணில் பட்டுவிடுகிறது. வெளியில் இருக்கும் அழுக்கு என்னை துரத்துவது போலவும் அது தன்னை எச்சரிப்பது போலவும் காணுதல் உண்டு. உடல் முழுக்க பாலை மணலை மாத்திரம் சூடிக்கொண்டு அலைதலில் இறையச்சம் விட்டுப்போய்விடுன்பதால் சொர்க்கம் புக வழியில்லாமலிருப்பதால் சொர்க்க நினைவுகளிலிருந்து என்னை துண்டித்துக்கொண்டு வாழ்கிறேன். இதில் கிடைத்த நன்மைகளாவன.. 
 
தொலைந்து போதல் குறித்த அச்சத்திலிருந்து என்னால் எளிதில் விடுபட்டு விட முடிகிறது. ஜனக்கூட்டம் மிகுந்த பொருட்காட்சியில் தொலைந்து போன குழந்தையாய் உருவகித்துக்கொள்ளமுடியும். பிரயாணத்தில் ஏற்படப்போகும் விபத்தில் தனியாய் காயமின்றி தப்பித்து திசை தெரியாது அலைதலை போன்றது அது. நான் வெறும் உடல் மாத்திரமல்ல என்பதை எனக்கு அழுத்தமாய் நிரூபிக்க கிடைத்த ஒரு யாத்திரை தேவைப்படுதலை போன்றது அது. 
 
வேண்டி விரும்பி மணற்சேறுகளிலும், விலங்கினங்களின் கழிவுகள் மீதும், காய்ந்து உதிர்ந்த மரப்பட்டைகளின் மீதும் ஒரு பூச்சியாய் என்னை அலையச் செய்கிறது. 
 
 மனம் பிசைதலைப்பற்றிய அச்சம் 
 
எனக்கு மீண்டும் மீண்டும் இருதய ஒலி பலமாகக் கேட்டுக் கொண்டிருக்கும். மூச்சு விடுவதற்கு இத்தனை சிரமப்படுத்திக்கொள்ளவேண்டுமா என்றும் தோன்றும். பெரும்பாலும் ஆதுரமானதற்கு ஆறுதலுக்கானதற்காகவே இது தேவைப்படும். யாருக்கான பிரார்த்தனைகள் முக்கியமானவை என்ற குழப்பத்தில் ஆழ்த்தும் இந்த பிசைதல். எல்லோருக்கும் நல்லவளாக இருத்தலென்பது கடினமென்பதை பிரார்த்தனையில் தோற்கடிக்கச்செய்யும். எதிரிகளின் குற்றம் குறைகள் நீங்க பிரார்த்தித்து புது மனிதியாய் திரும்புதல் வரம். எல்லா சிரமங்களும் நம் கண்பார்வைக்கு எட்டாத வரை மாத்திரமே. கண்களைப் பொத்திக்கொள்வது போல என்றேனும் இதயத்தை துடிக்காது வைக்க உடலின் உள் நுழையும் ஒரு கரம் இருந்தால் எத்தனை நலம் பயக்குமென யோசிப்பேன். 
 
சப்தம் பற்றிய அச்சம் 
 
 வெளியின் அதிர்வு சப்தம். அச்சுகள் அற்ற சுவடுகள் பதியாத ஓட்டம். குறி வைத்து எய்துவிட்டு, தைத்து வாதை உணர்ந்து பின் திரும்பும் கலை. எப்போதும் என்னைச் சுற்றிலும் சப்தங்கள் புதைவதில்லை. 
 
என் மௌனத்தை கலைக்க அவன் செய்த மாயம் என்ற எண்ணத்தில்தான் இவ்வளவு நேரமும் படுக்கையிலிருந்து நகராமல் இருந்தேன். ஆனால் நேரமாக ஆக சப்தத்தொனி மாறியிருந்தது. அவனிடம் எனக்கு காதலை விட அதிகமாய் பயம் இருந்தது. நேராக எழுந்து அவனருகே சென்றேன். அந்த கண்ணாடியில் எனது உருவம் தவிர்த்து அவன் நின்றிருந்தான். அவனையும் தவிர்த்து ஏதேனும் பிம்பம் கிடைக்குமானால் அது வெளிச்சத்தினுடையதாக இருந்தது. எத்தனை முயன்றும் அவன் மேல் விழுகின்ற வெளிச்சத்தை என்னால் தவிர்க்க இயலவில்லை. மெதுவாய் மிக மெதுவாய் வெயில் அந்த கண்ணாடியில் தன் நாவை சுழற்றி என் பிம்பத்தினை இரையாக்கிக் கொண்டிருந்தது. அதிக வெளிச்சத்தில் நிழல் பிம்பம் தேடுதல் என்றும் சாத்தியமற்றது என்பதை நான் தெரிந்துகொண்டேன். 
 
சவரத்திற்கான அலங்கார முயற்சிகளில் கவனமாக ஈடுபடுதலில் வெளிச்சம் தொந்தரவு செய்யவில்லை போலும். கண்ணாடியிலிருந்து வெயில் மெல்ல தரையில் படிந்து ஈரமாக்கிக்கொண்டிருந்தது. ஆனால் வெயிலின் சத்தமும் சரசரப்பும் என்னை நோக்கியே இருந்தன. 
 
வார்த்தைகள் மீதுள்ள அச்சம் 
 
கோபம் குறைந்த பின்பு அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். எங்கு திரும்பினாலும் என் கண்களுக்கு அவன் தெரிய ஆரம்பித்தான். என் கண்ணில் கிடைக்கும் அச்சங்களை முழுமையாகக் கண்டுணரத் துடிக்கும் ஒரு வேட்டைமிருகத்தின் சுபாவம் அவனிடமிருந்தது. அவனிடம் பேசுவதற்காக மௌனத்தின் துணை கொண்டு வார்த்தைகளை சேர்க்க ஆரம்பித்திருந்தேன். மனங்கொள்ளாத அளவு வார்த்தைகள் சேர்ந்திருந்தது. மனத்தில் நிலைகொள்ளாத வார்த்தைகள் மேலும் மேலும் உடல் முழுவதும் சூழத்தொடங்கின. என்னைச்சுற்றிலும் சொல்லாத வார்த்தைகள் சூழ்ந்து கொண்டன. சாப்பிடும்போது, தும்மும்போது, முகம் கழுவும்போது வார்த்தைகள் நழுவுதல் கண்டு வேதனையுற்று செயல் மறந்திருந்தேன். அதி தீவிர மௌனம் கொண்ட என் அறை முழுவதும் வார்த்தைகள் நிறைந்து விட்டன. மூடப்பட்ட அறைக்கதவை வார்த்தைகள் முட்டி மோதி திறக்க முயற்சித்தன. 
 
சுயம்புகளான வார்த்தைகள் மொத்தமும் ஒன்றையொன்று உடைத்து இறக்கும் தருவாயிலும் என்னால் கண்கலங்கி பார்க்க முடிந்ததேயொழிய சொல்லியிராத எனது வார்த்தைகளை காப்பாற்ற முடியவில்லை. உள்ளடங்கிய பழைய வார்த்தைகள் வெளியேறிய வார்த்தைகளுடன் கொண்ட காதலில் புதிய வார்த்தைகள் பிறந்திருந்தது. எனது ஓசைகள் ஆகாதவரை மௌனத்தை சுற்றி சுழலும் வார்த்தைகள் பிரியத்தின் சொல்மயக்கம் கொள்ளவைக்கக்கூடியவை. 
 
இந்த அச்சங்கள் உடலிலிருந்து உற்பத்தியானவையே. இன்றைய நாளில் அத்தனை அச்சங்களையும் வெளியில் கழற்றிவிட்டு, நாளைய பொழுதைப் பற்றி யோசித்து படுக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டுதான் படுக்கையில் கிடப்பது. ஆனால் விடாப்பிடியாக எப்படியேனும் நாளைய பொழுதின் நினைவு உறக்கத்தை கெடுத்துவிடுகிறது. 
 
தனக்கு விருப்பமான அச்சங்களற்ற கனவைக் காணுதல் என்பது இத்தனை கடினமாய் இருக்குமென்று நான் நம்பவில்லை. அச்சங்கள் அகற்றுதல் எளிதானதா என்ன!? 
 
இதுவும் உங்களைக் குறித்து எனக்கு அடிக்கடி வரும் கனவுதான் . இருள் சூழ்ந்த இருபுறமும் மரங்கள் அடர்த்தியாய்க்கொண்டிருந்த நீண்ட மண் சாலையில் உங்களுடன் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று என் கையைவிட்டு விட்டு நீங்கள் தொலைந்து போயிருந்தீர்கள் . பரிதவித்துக்கொண்டிருந்தேன். எந்த திசை சென்று மறைந்தீர்கள் என்று அறிய முடியாததொரு நிலை. உங்கள் கண்களில் இட்டிருந்த மையை எடுத்து சூனியத்தில் அப்பிவிட்டது போல அடர்த்தியானதொரு இருட்டில் எங்கு சென்று தேட. நிராகரித்துவிட்டு சென்ற அழுத்தம் இதயத்தை பிசைந்து கொண்டிருந்தது. ஆனால் நீங்கள் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும்போது எந்த திசையை முகம் பார்த்திருந்தது என்று என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. உடைக்கப்பட்ட அறையின் உள் நுழைந்த காற்றிற்கு ஏற்ப நாணலாய் நீங்கள் உங்களை கயிறுக்கு ஒப்புக்கொடுத்து சுற்றிக்கொண்டிருந்தீர்கள். கண்களை மூடியிருந்தீர்கள். அதனால் ஓரமாய் நின்று அழுதுகொண்டிருந்த என்னை நீங்கள் கண்டிருக்க முடியாது. தன் வாழ்வு பற்றிய அச்சத்திடமிருந்து தப்பிக்க நீங்கள் தைரியத்தைக் கைக்கொண்டதன் பலன். 
 
 இறப்பதற்கு முதல் நாள், அம்மா என்னைத் தனியே விட்டுச் சென்ற திசையிலிருந்து ஒரு சொல் கிடைத்திருந்தது. ’காத்திரு’- என்பதாக அது இருந்தது. 
 
உடல்விட்டுப் போன எனது மூன்றாம் அச்சம் தரையிலிருந்து வெறும் இரண்டடி தூரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

*

நன்றி: சென்ஷி 

Thursday, December 26, 2019

ஆண்ட்ராய் குஞ்சப்பன் வெர்சன் 5.25 - சென்ஷி விமர்சனம்

 

வண்ணநிலவனின் கவிதையான ’எதையேனும் சார்ந்திரு’வைப் போன்று பாஸ்கரன் பொதுவல் சார்ந்திருப்பது தன் பிடிவாதத்தின் மேல். நவீன ரக விஞ்ஞான உபயோகங்களின் மேல் ஆர்வங்கொள்ளாதவர். வயதேற ஏற தன்னால் இறுக்கமாகவும், உறுதியாகவும் இருக்க முடியுமென்று நம்புபவர்.
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தும், தந்தையை பார்த்துக்கொள்ள சரியான ஆள் கிடைக்காததால் வீட்டிலேயே சுற்றி வரும் சுப்பிரமணியன் நண்பர்களின் கேலி மற்றும் தூண்டுதலால் ரஷ்யாவிற்கு வேலைக்கு செல்கிறார். வீட்டில் தங்கி பாஸ்கரனைப் பார்த்துக்கொள்ள வரும் செவிலியர்களும், பாஸ்கரனின் செயல்களால் உடன்பட இயலாமையால், தனிமை பாஸ்கரனை தாக்குகிறது. ஆனாலும் அவரது பிடிவாதம் தனிமையைத் தாங்குகிறது.

தனியே சிரமப்படும் தந்தையின் உதவிக்காக தான் பணிபுரியும் நிறுவனத்தில் இருக்கும் அதி நவீன ரோபோ ஒன்றை தந்தையின் துணைக்குத் தருகின்றார் சுப்பிரமணியம். நவீன விஞ்ஞான உலகுடன் ஒத்துவராது சிரமப்படும் பாஸ்கரனுக்கும் ரோபோவிற்கும் இடையே உருவாகும் பிணைப்பும், பிணைப்பு முற்றி அதன் மேல் பாஸ்கரன் பித்துக்கொள்வதும் அதன் முடிவுமாய் நிறைவுகிறது இத்திரைப்படம்.

வயதானவர்கள் பெரும்பாலும் தங்கள் கால்களை வலிக்கு நீவிக்கொண்டு அதனுடன் பேசிக் கொள்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதிக தூரம் நடந்துவிட இயலாத நீளவாக்கில் வெம்பிய பழமாய் சுருக்கங்களைக் கொண்ட தோல்களுடைய கால்கள். வயதானவர்களின் அற்புதமான துணை அவர்களின் கால்கள் அன்றி வேறேது? அதனாலேயே படுக்கையில் வீழ்ந்து கிடத்தலை மறுதலிப்பவர்களாக உள்ளனர். அவர்களின் கோபம் கால்களின் மேல் திரும்புகிறது. பாஸ்கரனும் அப்படியே. தனியே இருப்பதாலேயே எல்லாவற்றையும் தன்னால் செய்துவிட முடியுமென்று நம்புபவராக இருக்கிறார். அந்த நம்பிக்கையே அவரது வாழ்வை நகர்த்தும் காரணியாகவும், மற்றவர்களின் முன் வீண் பிடிவாதக்காரராகவும் முன்நிறுத்துகின்றன.

ஆண்ட்ராய்ட் ரோபோ பாஸ்கரனின் தனிமைக்கு நல்ல துணையாக இருக்கிறது. பாஸ்கரன் பேசுவதைக் கேட்கிறது. இளமையில் விரும்பிய பெண்ணுடன் ஃபேஸ்புக்கில் நட்பு ஏற்படுத்தி தருகிறது. ரோபோட் தனக்கு விதிக்கப்பட்ட எல்லைகளை மீறாமல் தனக்குரிய அம்சத்துடன் இருக்கிறது. படத்தின் துவக்கத்தில் காட்டப்படும், பாதுகாப்பு என்ற அம்சத்தில் குறிப்பிட்ட செயலி தவறாக உபயோகப்படுத்தப்பட்டு பெரியவரின் உயிருக்கு ஏதும் கேடு விளைவிக்குமோ என்ற அச்சம் அவ்வப்போது எழுந்து அடங்கியது.

இறுதியில் மகனைவிட அதிகமாக நேசிப்பை கைக்கொள்ளும் பாஸ்கரனின் குஞ்சப்பன் என்ற பெயர் கொண்ட ரோபோவின் மீதான பிரியத்தை எதனுடன் வரையறுப்பது. சிறு குழந்தை கை கொண்ட துண்டின் முனையாகவா? மற்றவர்களுடன் பகிர மறுக்கும் பிடித்த பொம்மையாகவா? வயதானால் குழந்தை போலாகிவிடும் மனதென்பதால் ரோபோவுடன் ஊர் நீங்க விரும்புகிறானா? உடைந்த பொம்மைக்காக அழும் குழந்தையாக இருக்கிறதா அந்த அழுகை! தனது விருப்பம் நொறுங்குவதைக் கண்டு மனம் நொறுங்கிய பாஸ்கரனின் அழுகை இத்தனைக் காலம் தான் கொண்டாடிக் கொண்டிருந்த பிடிவாதம்தானோ!
*


நன்றி : சென்ஷி

Sunday, January 17, 2016

கடவுளுடன் விளையாடுதல் - சென்ஷி


என் இருக்கைக்கு எதிரே
கடவுளின் அமர்வு
மிகு சுவாரசிய ஆட்டமெனக்கூறி
காய்களை அடுக்கினேன்
கடவுளின் முணுமுணுத்தல்கள்
செவியிலேறவில்லை

காய் வெட்டுதல் குறி தப்பித்தல்
ரத்தம் சிந்துதல் வெட்டி எரித்தல்
என் ஆட்ட முறைகளை
விதிகளாக்கினேன்.
முணுமுணுத்துக் கொண்டிருந்தார் கடவுள்

அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்
காடு புகுந்து வெற்றிக் களிப்பில்
குடித்துக் குடித்துக்
கூத்தாடிக் கொண்டிருந்தான் சாத்தான்
கடவுளின் முணுமுணுப்பு கேட்டிருக்க வாய்ப்பில்லை

விதிகளை மீறிய ஆட்டமென்று
தெரிந்தபின்பும்
நான் எனது வெற்றிக்காக
கடவுளின் காய்களை வெட்டிக்கொண்டிருந்தேன்
கடவுளின் முணுமுணுத்தல் அடங்கவில்லை

ஏவாளுக்காக ஆதாமுக்காக கோவிலுக்காக
மதத்திற்காக குழந்தைக்காக
இயற்கைக்காக
கடைசியாய்
சாத்தானை எனக்குக் கொடுத்ததற்காக
சுவாரசியமாய் இருந்தது ஆட்டம்

வெட்டுப்பட்ட காய்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
தாம் விளையாடியது கடவுளுக்காகவென்று

என்னுடைய ஆட்டத்தில்
கடவுளைத் தோற்கடித்தப்பின்
வரமோ சாபமோ
முணுமுணுத்தலில் கிடைக்குமென்று
சப்தமாய் சொல்லச் சொன்னேன்

அவரவர் கண்கள்
அவரவர் மனது
என்றுச் சென்றார். 

***
நன்றி : சென்ஷி, யாழினி
குறிப்பு : கடவுளின் புகைப்படத்தை எடுத்தவர் ஷை.., இல்லை, ஆசிப்மீரான்!

Thursday, September 12, 2013

நடுத்தெருவில் சென்ஷி பாடிய பாட்டு!

ஓசி கிட்டார் கிடைச்சா இப்படி ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சுடுறாங்க, குசும்பன் உதவியோடு!

**
'ஷார்ஜா தான்சேன்' சென்ஷிஜீ பாடியது குலாம்அலியின் இந்த பஞ்சாபிப் பாட்டுதான் (song composed by ustad Tasadaq Ali Khan). ஆனால் என்னமோ சத்தம் அன்று வெளிவரவில்லை, அவர் வாயிலிருந்து!

***

சித்தார்த் சொன்னது :

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு 4 வயசு பையன் திருக்குறள் எல்லாம் நல்லா சொல்றான்னு அவன தூர்தர்ஷன்ல (அப்ப பொதிகை இல்ல) பேட்டி எடுத்தாங்க. கேள்வி கேட்டவங்களுக்கு தூர்தர்ஷன் தொகுப்பாளினிகளுக்கான குறைந்தபட்ச வயதான 40ஐ விட அதிகம் இருக்கும். ஆனாலும் குழந்தைய ஒவ்வொரு கேள்வி கேக்கறதுக்கு முன்னாடியும் ஒரு அதீத அடைமொழி போட்டு அழைச்சு தான் கேள்வி கேட்டாங்க. ”குறள் மொழியும் குறளே”, ”இரண்டடி இமயமே”,,, இப்படி....


நம்ம இசைமேதையை இப்படியான அடைமொழிகளுடன் கூடிய கேள்விகள் கேட்பது ஒரு சம்மூவமா நமக்கு பெருமை?  இல்ல... கடம. அதனால கேள்விகள நானே ஆரம்பிக்கறேன்.


1.
நாதமெனும் ஞானவிளக்கே.... இத்தனை வெயிலில் சுடும் தார்ச்சாலையில் அமர்ந்திருப்பதற்கான வேர்க்காரணங்களாக இரண்டினை நான் யூகிக்கிறேன்.

அ. கலைத்துறையின் மற்றோர் சிகரமான சம்மந்தி +குசும்பன் குசும்பு அவர்களின் பால் நீங்கள் கொண்டிருக்கும் மாறா நட்பு
 
ஆ. இத்தனை நட்பை மீறியும் உங்களை இங்கே உட்கார வைத்து தண்டிக்க வேண்டும் என்ற சம்மந்தியின் காழ்ப்பு.

இந்த காழ்ப்பு கலைரீதியான பொறாமையினால் உருவானதா? இதை பற்றிய உங்களது கருத்து என்ன? கூறுவீரா இருவத்த்தியோராம் நூற்றாண்டின் தான்சேனே?

Thursday, March 21, 2013

குரங்குகள் பெண்கள் சென்ஷிகள்

ஆபிதின் அண்ணே,  வெரியர் எல்வின் தொகுத்த ‘உலகம் குழந்தையாக இருந்தபோது' நூலிலுள்ள பிடித்த கதை ஒன்று. செயல்களைக் காணும் சமயம் மனுசத்தனமென்பது எதுவென்பதில் சந்தேகம் வந்தது. ஆனால் ஒரு விசயத்தில் சந்தேகம் இல்லை. அது பெண்களுக்கு குரங்குகளின் மீது இருக்கும் காதல்.. :) . குரங்கின் வரைந்த ஓவியத்தை புத்தகத்தின் 40ம் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். - சென்ஷி
 
- நேற்று வந்த மெயில். குரங்கு கதை என்றாலே ஏன்தான் எனக்கு அனுப்புகிறாரோ என்று முனகிக்கொண்டே அமினா ஜெயல் தீட்டிய ஓவியத்தைப் பார்த்தேன். சரிதான், அச்சாக என்னைப்போலவே இருக்கிறது அந்தக் குரங்கு. கதையைப் படிப்பவர்கள் தங்கள் பின்பக்கத்தை அவசியம் - ஒருமுறையாவது-  பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் - ஆபிதீன்

***



ஆதிக் குரங்குகள்
...

கடபா எனும் இனத்தவர் பழங்காலத்தில் குரங்குகள் பழகிய விதம் பற்றிப் பல கதைகள் கூறுகின்றனர். ஒரு சாயங்காலம், மக்கள் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோது, தலைப்பாகை, சட்டை அணிந்த குரங்கு ஒன்று வந்து அவர்கள் மத்தியிலிருந்த கல் ஒன்றில் அமர்ந்தது. பிடில் வாத்தியம் ஒன்றைக் கையில் கொண்டு, மிகவும் திறமையாக அதை வாசிக்க ஆரம்பித்தது. இசைத்த சங்கீதம் இனிமையாக இருக்கவே, வாசித்தது ஒரு குரங்கு என்பது யாருக்கும் தெரியாமற் போயிற்று. பெண்கள் மனமகிழ்ந்து சங்கீதத்திற்குத் தக்க நடனம் ஆடினர்.

ஒவ்வொரு இரவும் இது நடந்தது. சீக்கிரமே அனைத்துப் பெண்களும் இசைக் குரங்கிடம் மனதைப் பறி கொடுத்தனர். ஒரு பெண் ஒரு மோதிரத்தையும், ஒரு பெண் சுவையான உணவையும், மற்றொரு பெண் அரிசியிலிருந்து தயாரித்த ஒரு வகை பானத்தையும் அன்பளிப்பாக அளித்தனர்.

அங்கிருந்த இளைஞர்களுக்குப் பெண்களின் இந்தப் போக்குப் பிடிக்கவில்லை. இயற்கைதானே! அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். “யாருக்குமே இந்தப் புது இளைஞன் யார் என்றே தெரியவில்லை. எங்கிருந்து வந்தவன் இவன்? யார் இவன்?” ஓர் இரவில் ஒளிந்திருந்து அவன் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தனர். குரங்கில் வால் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டனர். “ஆஹா, இது குரங்குதான்! வாலை கம்பு என்று தவறாக நினைத்து விட்டோம்!” என்று உண்மையைக் கண்டுபிடித்துவிட்ட ஆனந்தத்தில் களித்தனர். அந்த இரவில் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டனர். நடனத்தைத் தொடர்ந்தனர். நடனத்தை முடித்தபின் தம் வீடு திரும்பினர். குரங்கு மரத்திற்குத் திரும்பியது.
 
மறுநாள் இளைஞர்கள், குரங்கு வழக்கமாக அமரும் கல்லைச் சுற்றிலும் மரத்துண்டுகளை அடுக்கித் தீ வைத்துவிட்டனர். நன்றாகச் சுட்டதும், அந்த இடத்தைச் சுத்தமாக்கித் தீயின் அடிச்சுவடே தெரியாமல் வைத்தனர். வழக்கப்படி, பாட்டும், ஆட்டமும் தொடர்ந்தன. குரங்கும் எந்தவிதச் சந்தேகமும் எழாததால் கீழே வந்து பிடிலுடன் வழக்கமாக அமரும் அதே கல்லில் உட்கார்ந்தது. அந்தக்கல் சூடாக இருக்கவே, குரங்கின் தோல் வெந்து உரிந்தது. இளைஞர்களுக்கு ஒரே சிரிப்பு! பெண்களைக் கேலி செய்தனர். ஒரு குரங்கின் காதலைப் பெறவா பொருட்களை அன்பளிப்பாகப் பெண்கள் அளித்தனர்! நாணமுற்றனர் பெண்கள்! அன்றுமுதல் குரங்கின் வெந்துபோன பகுதி சிவப்பாகவே காட்சியளிக்கிறது.
***


 
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

Tuesday, November 13, 2012

டால்ஸ்டாய் இருக்காரா ? - சென்ஷி


காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ’என் பெயர் சிவப்பு’ நாவலின் [ஓரான் பாமுக்-ன் My Name Is Red (Benim Adım Kırmızı)] மொழிபெயர்ப்பை வாங்கி அனுப்புகிறேன் என்று சொன்ன நண்பர் தாஜ் , பயங்கரமான ஃபேஸ்புக் போராளியாக இப்போது மாறிவிட்டதால் நாமாவது ஷார்ஜா புத்தகக்கண்காட்சிக்கு போகலாம் என்று தோன்றியது. அஸ்மாவுக்கும் உம்மாவுக்கும் மாதச் செலவுக்கு அனுப்பியது போக பாக்கெட்டில் இருந்த 13 திர்ஹத்தின் உறுத்தல் வேறு தாங்க இயலவில்லையே... ஆனால் , அங்கே போனால்.....

கூகிள்+-ல் தம்பி சென்ஷி நேற்று பதிவிட்டதை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அவர் எழுதியிருப்பதில்,  ‘அசல் இலக்கியவாதிகளாக’ என்னையும் மஜீதையும் குறிப்பிட்டதைத் தவிர மற்றதெல்லாம் உண்மை. இனி, சென்ஷியைப் படியுங்கள். - ஆபிதீன்

***


ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சிக்கு போன கதை

சென்ஷி

புத்தகத் திருவிழா வருடா வருடம் ஷார்ஜாவுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் என்னை கொண்டு போகத்தான் ஆளில்லை என்ற குறை போன வருடம் வரை எனக்கு இருந்திருக்கும் போல.  அடுத்த வருடம் இந்த குறையிருந்திடக்கூடாதென அசல்/அமீரக/இலக்கியவாதிகளான ”ஹாரிபிள் ஹஜரத் புகழ்” மஜீத் மற்றும் சாதிக்குடன் எழுத்தாளர் ஆபிதின் அண்ணனும் என்னைக் கூட்டிச் செல்ல வந்திருந்தார்.

காலச்சுவடு பதிப்பகம் இம்முறை ஷார்ஜா புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போடுகிறார்களாமே! உனக்குத் தெரியுமா? என்று அவர் தொலைபேசியில் கேட்டதில் இருந்துதான் இந்த நிகழ்வை ஆரம்பித்திருக்க வேண்டும்.   உங்களின் நல்ல நேரம் இது இரண்டாம் பத்தியாகிவிட்டது.

வருடா வருடம் ஷார்ஜாவில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது என்பதை செய்தித்தாளில் தெரிந்து கொள்கிற அளவு மாத்திரமே இலக்கிய அறிவு கொண்டவனிடம் காலச்சுவடு பதிப்பகத்தினர் இம்முறை ஷார்ஜா புத்தக கண்காட்சியில் கடை விரிக்கிறார்களாமே!? உனக்குத் தெரியுமா என்று கேட்டவரிடம் என்ன பதில் தந்துவிட முடியும்..!  தவிர  நான்கைந்து சிறந்த சிறுகதைகளை தட்டச்சிவிட்ட தைரியத்தில், இணைய இலக்கியவாதியெனும் சித்திரத்தில் பங்கும்/பரிமளித்தும் கொண்டிருக்கும் என்னிடம் புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் புத்தகங்கள் என்றால் முதன்முறையாகவா? வருடா வருடம் தமிழ்ப்பதிப்பகத்தினர் புத்தகங்களை விற்கக் கொண்டுவருகிறார்களா? இம்முறை காலச்சுவடு அடியெடுத்தலில் அடுத்தடுத்து எல்லாப் பதிப்பகங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற தீவிரத்துவமான கேள்விகள் அரித்துக் கொண்டிருந்தாலும் மனதை அமைதியாக்கி, ”வெள்ளிக்கிழமைதானே... ஆமாண்ணே.. ஒண்ணும் வேலை இல்லைண்ணே.. போயிடலாமுண்ணே.. மதியம் சாப்பிட்டப்புறம் கெளம்பிடலாமா.. சரிண்ணே” என்று வியாழன் மதியம் தொலைபேசியில் ஹா.ஹ. புகழ் மஜீத் அண்ணனிடம் சொல்லியாகிவிட்டது.

வெள்ளி...

கிளம்பிய பிறகு சரியாய்ப் பூட்டினோமா என்ற சந்தேகமெழுவதைப் போல, காலச்சுவடு நெசம்மாவே இங்க ஸ்டால் போடுறாங்களா? என்று ஆபிதீன் சந்தேகப் பிரகடணத்தைக் கொண்டு வர, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு உலகந்தெரிந்த உத்தமரான ஆசிப் அண்ணாச்சியிடம் கேட்டால் ஆச்சு என்ற யோசனை பரிசீலனைக்குட்படுத்தப்படாமலேயே மற்ற மூவரும் ஆமோதித்த தருணத்தில் அண்ணாச்சிக்கு தொலைபேசி உறுதி செய்து கொள்ளவியன்ற முயற்சி தோல்வியுற்றது. காரணம் அவருக்கு அதைப் பற்றி யாரும் ஒன்றும் கூறவில்லையாம். அண்ணாச்சிக்கே அழைப்பில்லாத இடத்தில நாம என்ன செய்ய என்று சிகரெட் புகையோடு வெடைத்தவனை காரில் தூக்கிப் போட்டு ஷார்ஜா புத்தகக் கண்காட்சிக்கு சென்றாயிற்று.

சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்பதில் சாண் அளவாவது ஏறிய சந்தோசம் கிடைக்கட்டுமே என்ற மகானின் வாக்குக் கிணங்க காலச்சுவடு இல்லாவிட்டால் ஷார்ஜா கூட்டத்தையாவது கண்டு வரலாமென்று உள்ளே நடைபோட்டோம்.  ஐந்து அரங்குகள். முதல் நான்கில் அரபி புத்தகங்களை மொய்த்தபடி சுமாரான கூட்டமிருக்க, ஐந்தாம் அரங்கான இந்திய வாயிலில் சூப்பர் கூட்டம். முன்னால் இரண்டடி கூட நகர விடாது, முன்னேயுள்ளோர் வழிவிடாது புத்தக அரங்கினை மொய்த்திருந்தனர். அரங்கின் முதல் கடை அமர்சித்ர கதா கதைப்புத்தகங்கள்.. பெரும்பாலும் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலமென்று இருந்த கூட்டத்தில் தஸ்தோவாஸ்கி இருக்காரா? காஃப்கா இருக்காரா என்றெல்லாம் குரல்கள் எழுந்து வந்தது. என் பங்கிற்கு டால்ஸ்டாய் இருக்காரா என்று கேட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன். புத்தகம் வாங்குபவர்களுக்குத்தானெ பதிலின் அவசியம் முக்கியம்.. ஐந்தாம் அரங்கின் மத்தியில் இருந்த கும்பல் இல்லாத நேஷனல் புக் டிரஸ்டின் உள்ளே நுழைய, காண்டெம்ப்ரரி ஆஃப் ஆர்ட் இன் இந்தியா புத்தகத்தை விருப்பமாய் ஆபிதின் அண்ணன் எடுத்து விலை விசாரிக்க, அங்கிருந்த மேற்பார்வையாளர் இவையெல்லாம் விற்பனைக்கில்லை.. பார்வைக்கு மாத்திரமே வைத்துள்ளோம். பார்த்துவிட்டு வைத்துவிடுங்கள் என்று கொஞ்சமும் அனுதாபமின்றி கூறினார். புத்தக விற்பனைக்கான கண்காட்சியில் விற்பனை செய்யப்படாது, புத்தகத்தையே கண்காட்சியாக வைத்திருக்கும் அவர்களின் பாங்கு வியப்பில் திக்குமுக்காட வைத்தது. ஒரு பெரும் நன்றியை உதிர்த்துவிட்டு தென்னிந்திய தேசியக்கடலை நோக்கி நகர்ந்தோம்.

காலச்சுவடு அரங்கு பார்வைக்குக் கிடைக்கவில்லையென்பது ஒரு புறம் இருக்கட்டும். அங்கு காணக் கிடைத்த தமிழ் பொக்கிஷங்கள் அனைத்தும் இரண்டு எழுத்தாளர்களின் எழுத்தாக மாத்திரமே இருந்தது. அதிலும் ஒருவர் ஐந்து புத்தகங்கள் எழுதியவராயும் இன்னொருவரின் ஒரு புத்தகமும் கிடைத்தது. சாவு வீட்டில் சொல்லிட்டுப் போகக்கூடாதென்ற சாங்கியமிருப்பது போல புத்தக கண்காட்சிக்கு வந்து எதையும் வாங்காமல் செல்லக்கூடாதென்ற சாங்கியமும் சேர்ந்து கொண்டது போல. மஜீத், இப்பி ஃபக்கீர் மற்றும் வேர்கள் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டார். வேர்கள் மொழிபெயர்ப்பின் மூலமான ரூட்ஸ் தொலைக்காட்சித் தொடர் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்து ஆபிதின் அண்ணனிடம் சொல்லி வைத்தேன். இன்றுவரை அந்தத் தொடரைப் பார்க்காமல் இருப்பதை மறைத்துவிட்டேன். எங்களின் வருகை நினைவுக்காக எடுக்கப்பட்ட நான்கைந்து புகைப்பட முன்நிற்றலுக்குப் பின் தமிழ் அரங்கை விட்டு நகர்ந்தோம்.

அன்றைய இரவு எட்டு முப்பது மணிக்கு நிகழவிருந்த அருந்ததி ராயின் உரையாடலைக் கேட்கவும் காணவும் அங்கிருந்த நாற்காலிகள் இந்தியப்பெண்களால் கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தன. கூட்டத்தின் பின்னால் நின்று கொண்டே அருந்ததிராயின் உரையாடலைக் கேட்கும் ஆர்வமில்லாததால் புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேறினோம். இரவு உணவிற்காக சென்ற அப்பா ஹோட்டலும், அதன்பின்னான டீக்கடைக்கு முன்னால் நின்று ஆபிதின் அவர்களுடனான உரையாடலும் என்னுடைய அந்த நாளை முழுமையாக்கின.

***

நன்றி : சென்ஷி | E-Mail : me.senshe@gmail.com

தலைப்பு உதவி : ரா.கிரிதரன் 

***