Saturday, July 18, 2020

திருக்குறளார் உரை

நண்பர் நாகூர் ரூமி கொடுத்த,  திருக்குறள் முனுசாமி அவர்களின் பேச்சை பத்து வருடங்களுக்கு முன்பு என் வலைப்பக்கத்தில் பகிர்ந்திருந்தேன் - ’கொஞ்சம் சிரியுங்கள் - மதம், இலக்கியம், அரசியல்னு எப்போ பார்த்தாலும் பிறாண்டிக்கிட்டு அலையாமல்!’ என்ற குறிப்புடன். ( சுட்டி : https://abedheen.wordpress.com/2010/08/04/thirukkural-munusami/ ) . அதை சில மாதங்களுக்கு முன்பு கேட்டிருக்கிறார் அன்பர் ஏ. ராதாகிருஷ்ணன். ‘திருக்குறளாரின் பொழிவினைக் கேட்டேன். அவர் பொழிவின் அருமையும், பெருமையும், ஆழமும், மிளிரும் நகைச் சுவையும் உலகறிந்தவை...! அரிய இவ்வுரை போல வேறு தங்களிடம் இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். அதையும் பதிவிட்டால், நாம் பெருங்களிப்படைவோம்; அதே போல், நம் தமிழ் உலகும்...’ என்று கமெண்ட் போட்டிருக்கிறார்.  அவருக்கு கீழ்க்கண்ட சுட்டிகளைக் கொடுத்தேன். களிப்படைவீராக!

Download :

1. https://abedheen.files.wordpress.com/2010/08/thirukkural-munusami-3.mp3

** 2. https://abedheen.files.wordpress.com/2020/05/thirukkural-munusami-from-abedeen-wp-04.mp3

** 3. https://abedheen.files.wordpress.com/2020/05/thirukkural-munusami-from-abedeen-wp-05.mp3


also visit :
இன்பம் கேட்க கேட்க அதிகரிக்கும்!

Thursday, July 9, 2020

குருத்துவாசனை (சிறுகதை) - சு.மு.அகமது

குருத்துவாசனை  - சு.மு.அகமது

ரு கணம் அவள் கூறின வார்த்தைகளின் அர்த்தம் புரியாது திகைத்த நான் அதன் பொருள் விளங்கியதும் திக்கென்ற மனதுடன் பாரமாய் ஏதோ நெஞ்சக்குழியில் இறங்க நாற்காலியில் அமர்ந்து கொண்டேன்.அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.

எனக்கான உறவில் அவளும் எத்தனை ஆழமாய் ஆழ்ந்திருந்தால் அதை எதற்காகவோ துறந்துவிட அனுமதியாது தீர்மானமாய் தீர்க்கமான முடிவெடுத்திருப்பாள்

ஆச்சரியம் ஆச்சரியமாய் பிரவாகமெடுத்தது.

சுரீரென்று முள் தைத்த வலியாய் உள்ளம் கிடந்து தவித்தது.

ஆச்சரியம் ஆதங்கமாக மாறியது.

அவள் மீது கனிவான எனது பார்வையை படரவிட்டேன்.

ஒரு தீர்மானத்துடன் நாற்காலியிலிருந்து எழுந்து அறையை விட்டு வெளியே வந்தேன்.வாசற்கதவை திறந்து கொட்டும் மழையில் நனைந்தபடியே ஏதும் பிரக்ஞையற்றவளாய் அடுத்த தெருவிலிருந்த மருந்தகத்தை (மெடிக்கல் ஷாப்) நோக்கி நடையை கட்டினேன்.

அருவியின் சாரலாய்  சுகம் தர வேண்டிய மழைத்துளிகள் ஏனோ முள்ளாய் மாறினது போல் உடலெங்கும் குத்த துவங்குகிறது.

 

சேலைதலைப்பை எடுத்து தலை மீது போர்த்திக்கொண்டே திரும்பி வீட்டை பார்க்கிறேன்.பாதி திறந்த வாசற்கதவின் அருகே சாய்த்து வைத்திருந்த குடை சரிந்து கீழே வீழ்ந்து மழையில் நனைந்து கொண்டிருந்தது.

மழை இன்னும் பெய்தபடியே இருக்கிறது.

ற்று நேரத்துக்கு முன்பு….

புருவத்தின் மீது விழுந்து மெதுவாக கன்னத்தின் மேடான பகுதிக்கு குதித்து வழிந்து மெல்லிய ரோம வரிகளைக் கடந்து மேலுதட்டின் மேற்பரப்பில் வந்து நின்று நழுவ பார்த்ததை நாக்கை சுழற்றி லாவகமாக நுனி நாக்கில் ஏற்றி உள்ளுக்குள் இழுத்தபோது சில்லிட்டது உடம்பு.

கனமான துளியாக இருந்திருக்க வேண்டும்.அதனால் தான் உடற்சூட்டில் ஆவியாகாது உதடு வரை பயணித்திருக்கிறது.

’பொட்’டென்று தலை மீது விழுந்ததையும் உதடு வரை வரவழைக்க கீழே குனிந்தபோது தான் தரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பட்டுத்தெறித்து படர்ந்தவைகளை கண்டேன்.ஆவல் மிகுதியால் அண்ணாந்து பார்த்த என் பார்வையில் பட்டன மேற்கிலே கருகருவென மேலெழுந்து வேகமாக பாய்ந்து வந்து கொண்டிருந்த கருமேகங்கள்.

உடம்பினுள் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

எத்தனை காலமாகிவிட்டது. கொட்டும் மழையும் அதில் குதித்தாடும் பொழுதுகளும். இவை எல்லாம் மறந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிற தருணத்தில் புதிய நம்பிக்கையாய் இந்த மேகங்கள் வந்து இங்கு கொட்டட்டும்.

நம்பிக்கை வீண் போகவில்லை.தவணை முறையில்  மேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் அணிவகுத்து தங்களுக்கானதை தாரை வார்க்கத்துவங்கின. 

திடீரென்று வேகங்கூட்டியது கொட்டும் கனமழை.

இப்பொழுது தான் தலை மீதிருந்து வேகமாக வழிந்து வந்த மழைநீரின் மென்சூட்டை உணர ஆரம்பித்தேன்.உதட்டோரங்களில்  வழிந்த நீரை உதட்டைக்குவித்து உள்ளுக்குள் உறிஞ்சினேன். லேசான உடலின் கரிப்பு உள்ளுக்குள் ஒரு புதிய சுவையை கூட்டியது.

மழை வலுத்தது.

வீட்டிற்குள் நுழைந்து வாசற்படி  அருகிலேயே நின்றுகொண்டு கைகளை கோப்பையாக்கி மழைநீரை சேகரித்து அதை அப்படியே வானத்தை நோக்கி எறிந்தேன்.

தெருவில்  சொட்டச்சொட்ட நனைந்தபடி இன்னும் விளையாடிக்கொண்டிருந்த ஆறாம் வகுப்பில் படிக்கும் என் மகள் நிவேதிதா கண்களில் பட்டாள்.

கைகளிருந்த நீரை உதறிவிட்டு ‘டீய்’..என  குரல் கொடுத்தேன்.

மழை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது.நிலத்தை நோக்கி வேகமாக தனது ஓட்டத்தை கூட்டும் மழைநீருக்கு என்ன அவசரமோ புரியவில்லை.பூமிக்குள் தஞ்சம் புக விரைந்தோடுகிறது.

அறைக்குள் நுழைந்தேன்.திறந்திருந்த தெருவோர சன்னல்  வழியே மழைச்சாரல் அறைக்குள் தெறித்துக்கொண்டிருந்தது. இடது கையால் சன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு வலது கையை கம்பிகளுக்கிடையில் விட்டு சன்னல்  கதவை இழுக்க முயற்சித்தேன்.சன்னலின் கம்பிகள் வலது கன்னக்ககதுப்பில் பதிந்து சில்லிப்பை என்னுள் படர்த்தியது.மழையில் நனைந்த இரும்புக்கம்பிகளின் வாசனையை நுகர்ந்தேன்.எதிர் பக்கத்து சன்னலை மூட வேண்டி  கைகளை மாற்றிக்கொண்டு வேண்டுமென்றே இடது கன்னத்தை கம்பிகளின் மீது ஆழ அழுத்தினேன்.வஞ்சனை கூடாது என்ற எண்ணமெழுச்சி அதிகமிருந்தது அழுத்தலில்.

அப்போது தான் என் கண்களில் மறுபடியும் மழையில் நனைந்தபடி நின்றிருந்த நிவேதிதா பட்டாள்.அவள் கைகளை கோப்பையாக்கி அதில் நிறைந்த மழை நீரை  மறுபடியும் வானத்தை  நோக்கியே தூக்கி எறிந்துவிடுவதும் அண்ணாந்து வானத்தைப்பார்த்து எறிந்த நீர் முகத்திலேயே வந்து வீழ்ந்து தெறிக்குமாறும் முகத்தை அங்குமிங்குமாய் அசக்கிக்கொண்டிருந்தாள்.முகத்தில் வழிந்தோடிய நீரை வலது கை உள்ளங்கையால் அழுத்தி துடைத்துக்கொண்டே ‘ஹோ’வென்று  கூச்சலிட்டு குதித்துக்கொண்டிருந்தாள்.

அவள் அணிந்திருந்த உடை உடலோடு ஒட்டியிருந்தது. வெளித்தெரிந்த உடல்வாகு எனக்குள் ‘பக்’கென்று எதையோ கொளுத்தியது.இன்னும் எத்தனை நாள் இவள் இப்படி சுதந்திரமாய் திரிவாள்.எண்ணும்போதே மனதுள் ஏதோ உருவாகி ஓடியது.

’சே’. எதற்கு இப்போது இந்த நினைப்பு.

வெளியே மழை வலுத்து விட்டிருந்தது.நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனுடன் கொஞ்சியும் குலாவுவதையும் விட்டுவிட்டு எப்போதோ கட்டாயமாக நிகழப்போகும் ஒரு இயற்கை நியதிக்காய் ஏன் கலங்க வேண்டும்.எல்லாம் சகஜமாகிப்போன நிகழ்வு தானே என மனதை தேற்றிக்கொண்டேன்.

தூரத்தில் எங்கோ மின்னல் வெட்டி இடி இடித்தது.பளீச்சென்ற வெளிச்ச வெட்டும் ’டம்டம்’ என்ற இடியோசையும் வீட்டிற்குள் நின்றிருந்த எனக்கே சற்று பயத்தை கொடுத்தது.இடியும் மின்னலும் இல்லாத  மழை பெய்யக்கூடாதா?

"டீய்...உள்ளே போடி.புது மழை.இடி வேற இடிக்குது.உங்க அம்மா பாத்தான்னா முதுகு தோல உறிச்சுடுவா”. பக்கத்து வீட்டு பார்வதியக்காவின் குரல் கேட்டது.

அறைக்குள்ளிருந்து நானும் குரல் கொடுத்தேன்.குரல் கொடுத்த என் திசை நோக்கி திரும்பி பார்த்தவள் சன்னல் கம்பிகளின் பின்னாலிருந்த என் முகம் சரியாக தெரியாததால் மீண்டும் அருவியென கொட்டின மழைநீரை வழித்துவிட்டு கண்களை கசக்கியவாறு பார்த்தாள். அந்த மங்கின வெளிச்சத்தில் நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதன் வெளிப்பாடு அவள் மீண்டும் விளையாட்டில் மூழ்க ஆரம்பித்ததும் உறுதிப்பட்டுப் போனது.

மனசுக்குள் சுர்ரென்று  கோபம் பொத்துக்கொண்டு வந்தது.கழுதை.காட்டுக்கத்தல் கத்தினாலும் கேட்காதது போல குதித்துக்கொண்டிருக்கிறாளே.ஒரு வேளை என்னால் அவள் போல செய்ய முடியாததின் ஆதங்க  வெளிப்பாடோ இந்த வசவுகளின் துவக்கம். இருக்கலாம். ஒருபுறம் ஆதங்கம்.மறுபுறம் புது மழையில் நனைந்து உடம்புக்கு எதாவது ஆகிவிடுமோ அவளுக்கு என்கிற அச்ச உணர்வு. அறையிலிருந்து வெளிவாசலுக்கு வந்து கதவை அண்டி நின்றுகொண்டேன். மீண்டும் குரல் கொடுத்தேன்.

”அம்மா அம்மா...இர்ம்மா வர்றேன்” கூறிவிட்டு மண் தரையில் கருநீராய் ஓடின மழை நீரில் பாதங்கள் ’பச்சக் பச்சக்’ என்று சப்திக்க சலக்சலக்கென்று குதித்துக்கொண்டிருந்தாள்.

மழை  பூமியோடு பிரிந்திருந்து கூடும் நீண்ட நாட்களின் வேட்கையை பூர்த்தி செய்வதாய் படர்ந்து எங்கும் பரவத்துவங்கியது.கூடலின் வாசம் எங்கும் வியாபிக்க துவங்கியிருந்தது. எனக்குள் இருப்பு கொள்ளவியலாத ஒரு அவஸ்தையை உணர்ந்தேன்.

”டீய்..எரும மாடே..” குரல் சற்று கனத்து கடைசியில் கீச்சீடாய் போனது. வித்தியாசப்பட்ட என் குரலொலி கேட்டு திரும்பினவள் கையில் பிரம்பை கண்டதும் அதற்கு மதிப்பு கொடுத்தோ இல்லை என் மீது பரிதாபப்பட்டோ மெதுவாக என்னை நோக்கி வர ஆரம்பித்தாள்.அவள் முகத்தில் ஒரு இளக்காரச் சிரிப்பு தவழ்வது துல்லியமாய் தெரிந்தது. நீ என்ன செய்துவிடப்போகிறாய். மிஞ்சிப்போனால் கழுதை குதிரை என்பதை தவிர்த்து வேறேதும் சொல்லப்போவதில்லை செய்யப்போவதில்லை என்பதாயிருந்தது அது.

பெயருக்கு தான் நான் பிரம்பை கையில் எடுத்தேனே தவிர எனக்கொன்றும் அவளை அடிக்க வேண்டுமென்கிற எண்ணம் கிடையாது. இருந்தாலும் அதட்டாது விட்டால் இவளது ரகளை அதிகமாகிப் போகும்.போதாக்குறைக்கு இவர் மாலையில் வரும் போது அவள் ஜலதோஷம் பீடித்தோ அல்லது வேறு உபத்திரவத்தாலோ அல்லல்பட்டால் அவர் மனது சஞ்சலப்படும்.அந்த நேரத்தில் இவளாவது சும்மா இருப்பாளா.இவளால் அது முடியாது. மழையில் நனைந்தபடியே ஆடியதையெல்லாம் கூறுவாள்.பிறகு கேட்கவா வேண்டும். டஸ் புஸ்ஸென்று முட்டவரும் காளையைப்போன்று அவர் உலவிக்கொண்டிருப்பார். கொஞ்சம் சீண்டினாலும் போதும் அவ்வளவு தான் என் கதி அதோ கதிதான்.

அவள் என்னை நோக்கி வரும் காலடி சப்தம் கேட்டது.பிரம்பை  ஓரமாக வைத்துவிட்டு ஒரு பக்கமாய் கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டேன்.அவள் என்னை பார்த்ததாய் தெரியவில்லை.அவள் பதுங்கி பம்மி அடி மேல் அடி வைத்து பூனையை போல்  கதவருகே வந்து நின்றாள்.சுற்றும் முற்றும் தன் பார்வையை மேயவிட்டாள்.நான் உள்ளே சென்றுவிட்டதாக நினைத்தாளோ இல்லை மழையில் விளையாடியது போதுமென்று நினைத்தபடியோ வாசலை கடக்க தனது வலது காலை எடுத்து வீட்டிற்குள் வைத்தாள்.

“ஹோ..க்” கென்று பெருஞ்சத்தத்துடன் விளையாட்டாய் அவளை பயமுறுத்த நான் குரல் கொடுத்தபடி அவள் முன்பு தொப்பென்று எகிறி குதித்தேன்.ஒரு கணம் ஸ்தம்பித்து போனவளாய் அரண்டு மிரண்டுப்போன பார்வையோடு நின்றிருந்தவளை அணைத்து பிடித்துக் கொண்டேன்.அவளது உடல் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது.இதயத்தின் ‘லப்டப்’ஓசை ‘டுகுடுகு’ வென்று அணைத்துக் கொண்டிருந்த என் கைகளுக்குள் பரவியது.

“ஹூம்..போம்மா...”என்றவாறு என்னை தள்ளிவிட்டவள் பக்கத்து அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

மழை இன்னும் விட்டபாடில்லை.அடக்கி வைத்திருந்ததையெல்லாம் கொட்டியே தீருவேன் என்கிற அதன் ஆக்ரோஷம் ‘ஹோ’வென்று குரல் கொடுத்தபடி இருந்தது.

“டீய் நிவி பாவாடை சட்டையை கழட்டிட்டு மாத்திக்கோ.தலைய தொவட்டிட்டு ஹேர் டிரையரை போட்டுக்கோடி.இல்லைன்னா தலைய வலிக்கப்போது”.குரல் கொடுத்தேன்.

மழைக்கு கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்னவோ முயங்குதலின் உச்சத்தில் ஆணின் ஆக்ரோஷப்புரிதலாய் விளாசியது.எனக்கு இருப்பு கொள்ள முடியவில்லை.வெளியில் ஆள் நடமாட்டமில்லை.தெருவில் இறங்கி மழையில் நனைந்து ஆட மனம் ஆசைப்பட்டது.

சாத்தியப்படுமா?

முடியாதென்று உணர்ந்தபோது மனது ஆதங்கத்துடன் துவள்வதாய்பட்டது.

என்ன செய்ய?

யோசித்தேன்.

“நிவி...என்ன செஞ்சிட்டு இருக்க.டிரஸ்ஸ மாத்தினியா” குரல் கொடுத்துவிட்டு

”நான் போயி கடையிலேர்ந்து முறுக்கும் கலக்கா பர்ப்பியும் வாங்கிக்கினு வர்றேன்” கூறிவிட்டு மூன்று வீடுகளே தள்ளியிருந்த பெட்டிக்கடைக்கு செல்வதற்காய் முன்வாசல் வழியே வெளியே வந்தேன்.

குடை எடுத்துக்கொள்ளவில்லை.மெதுவாக தெருவில் இறங்கினேன்.மழைநீர் சூடாகிப்போயிருந்த உடலை தழுவி வழிந்து தரைக்கு ஓடத்துவங்கியது.காலின் வெள்ளிக் கொலுசு சிணுங்க மெல்ல நடை பயின்றவாறு கடையை நோக்கி நடந்தேன்.நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.ஆஹா என்ன சுகம்.கால்களால் மழை நீரை உதைத்து உதைத்தபடியே நடந்தேன்.தொப்பல்கட்டையாய் கடைக்கு முன்பு நின்றபோது கடைக்கார அக்கா என்னை விநோதமாய் ஏறிட்டு பார்த்தார்.

“ஏம்மா கொட கொண்டாரக்கூடாது.இப்படி தொப்பலா நனஞ்சிட்டியே”

“இல்லக்கா சும்மா பக்கத்துல தானே. அதான் அப்படியே வந்துட்டேன்.நிவி முறுக்கு கேட்டா.ஒரு அஞ்சு ரூபாய்க்கு முறுக்கும் கலக்கா பர்ப்பியும் குடுங்க்கா’’.

இப்போது அக்காவுக்கு பயந்து கடையின் கூரைக்கடியில் பம்மினேன்.பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றிக் கொடுத்ததை வாங்கிக்கொண்டு மீண்டும் மெதுவாக நடையை கட்டினேன்.

எதேச்சையாய் திரும்பி பார்த்தேன்.கடைக்கார அக்கா எட்டிப்பார்ப்பது தெரிந்தது.நடையில் வேகத்தை கூட்டினேன்.வீட்டு வாசலில் வந்து நின்றபோது வாசலே நனைந்து போகுமளவுக்கு உடலிலிருந்து மழைநீர் வடிந்து ஓட ஆரம்பித்திருந்தது.ஒரு சிறு குதி போட்டேன்.சொட்டு சொட்டாய் தண்ணீர் கீழே முத்துமணிகளாய் சிதறியது.

ஒரு பக்கமாய் திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்த என்  கண்களில் பட்டது மாடிப்படியின் இரும்புக்கிரில் பிடியில் தொங்கிக்கொண்டிருந்த குடை.

நீண்ட நாட்களாய் அதுவும் மழைக்கு காத்திருந்தது போன்று ஏங்குவதாய் எனக்கு பட்டது.வலது கையை குடைக்கு முன்பு அதன் மேல் மழைநீர் தெறிக்குமாறு தெளித்தேன்.தெறித்து படர்ந்த நீரை குடை கிரகித்துக் கொண்டது.நீர் பட்ட இடம் மட்டும் அடர்ந்த கருமைக்கு மாறிக்கொண்டிருந்தது. ஒரு புது விதமான பழமை வாசம் வீசத்துவங்கியது.

மெல்ல உள்ளே செல்ல எத்தனித்தேன்.மனதுள் குடைக்கான ஆசை ஆதங்கம் பற்றின கேள்வி எழுந்தது. மெதுவாக திரும்பி குடையை கையிலெடுத்து அதை விரித்து மழையில் நன்றாக நனைய விட்டேன்.விரிந்திருந்த குடையின் பக்கவாட்டு கம்பிகளில் தண்ணீர்க்குச்சிகளாய்  மழைநீர்  நிலத்தை நோக்கி நீண்டு கொண்டிருந்தது.

நிவேதிதாவின் ஞாபகம் வந்தது.பாவம் குழந்தை மழையில் நனைந்துவிட்டு சரியாக தலையை துவட்டினாளோ இல்லையோ?

குடையை மடித்து வாசலிலேயே கதவோரம் குடையின் ஒற்றை முனைக்கம்பியின் மீது லாவகமாக நிற்க வைத்தேன்.ஒரு சேர்ந்த மழைநீர்  அந்த ஒற்றைக்கம்பி வழியே வேகமாக கீழிறங்க துவங்கியது.

உள்ளே சென்றேன். அறையின் ஒரு மூலையில் நிவி சுருண்டுக்கிடந்தாள். மனதுக்குள் பகீரென்றது. அருகே சென்றேன்.

“நிவிம்மா...’’.குரல் கொடுத்தேன்.

அவளை சுற்றி சிறுசிறு நீர்த்தாரைகள் சிமெண்ட் தரையில் படிந்து வழிந்தோடிக்கொண்டிருந்தது. தொப்பலாய் நனைந்து போனவள் உடை கூட மாற்றாமல் அப்படியே கிடக்கிறாள்.

மெதுவாக அவளை தொட்டேன்.கால்களை மடக்கி கைகளின் முழங்கை முட்டிகள் தொடைக்குள் பதியுமாறு இன்னும் சற்று குறுகி சுருண்டு படுத்துக்கொண்டாள். ஒன்றும் புரியவில்லை.

“ஏய்...என்னடியாச்சு.எழுந்திருடி.எழுந்து டிரெஸ்ஸ மாத்திக்க”.எழுப்பினேன்.

இன்னும் சுருள முடியுமா என்று அவள் எத்தனிப்பது போல் பட்டது.அறைக்குள் மங்கலான இருள் கவ்வியிருந்தது.மின் விளக்கின் விசையை அழுத்தி அறைக்கு ஒளியூட்டினேன்.

அவளை நெருங்கி செல்லும் முன்பு என் நாசியில் கவுச்சியின் வாசனை வந்து வீசியது. கழிவுநீர் கால்வாய்களில் பெருகியோடும் மழைநீரின் வேலை சுத்தப்படுத்துதலாய் நிகழும் போது இப்படியான வாசம் வீசும்.இளம் பிராயத்தில் அரசு பொதுமருத்துவமனையை மழைக்காலங்களில் கடக்க நேரிடும் போது இதே போன்ற வாசம் அதிகமாக வீசுவதை உணர்ந்தவளாகையால் மூக்கை ஒரு சுருக்கு சுருக்கி ‘ஹூம்’மென்று காற்றை வெளியே சிந்தினேன்.

”இல்லை”. இந்த கவுச்சி வாசம் அதையும் மீறின எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாய் மிக  அதிகமாய் நாசியை துளைத்தெடுக்க ஒரு வேளை? கலக்கமுற்ற நெஞ்சோடு ஜிவ்வென்று வயிற்றிலிருந்து பிறந்து தொண்டைக்குழிக்குள் வந்து அமர்ந்து கொண்ட பயப்பிரக்ஞையுடன் நிவேதிதாவை பார்த்தேன்.

இருக்கக்கூடாது என்று மனது எவ்வளவு தான் ஆசைப்பட்டாலும் நிகழ வேண்டியது நிகழ்ந்து தானே தீரவேண்டும் என்பதாய் அது நிகழ்ந்தேறியிருந்தது. அவளை சுற்றிலும் படர்ந்திருந்த நீர்த்தாரைகளில் பிசுபிசுப்போடு கருஞ்சிவப்பு நிறத்தில் பரவ துவங்கியிருந்த வலியின் வெளிப்பாடு தான் அவளை அப்படி சுருண்டு படுக்க வைத்திருக்கிறது.

அவளை நெருங்கிச்சென்று அருகில் அமர்ந்து கொண்டேன்.செய்வதறியாது சிறிது நேரம் ஸ்தம்பித்து போனவளாய் அமர்ந்திருந்தேன்.அவளது தலையை லேசாக வருடினேன்.என் கண்களில் வலிப்பெருக்கின் உணர்வுகள் கண்ணீராய் வெளிப்பட  துவங்கியது.

ஒரு தீர்மானமாய் எழுந்து நின்று அறைக்கு வெளியே வந்து வெளிக்கதவை தாழிட்டு சாத்தினேன்.பீரோவை திறந்து பழைய துணிகளை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தேன்.மிரட்சியுடன் வெளிறிய முகத்துடன் எழுந்து அமர்ந்து கொண்டிருந்த நிவேதிதாவை பார்க்கிறேன்.

“என்னம்மா  இதெல்லாம்” என்று கேட்பது போன்ற அவளது முகபாவனை என்னுள் கலக்கல் வேலை செய்ய ஆரம்பித்தது.கலக்கத்தை அடக்கியபடி அவளை பார்த்து ஒரு சிறு புன்முறுவல் பூத்தேன். அவளருகில் சென்று அவளது இரு தோள்களையும் கைகளால் பற்றி அவளை எழுப்பி நிற்க  வைத்தேன்.என் இடுப்பை தன் இரு கைகளாலும் சேர்த்து நடு வயிற்றில் முகம் புதைத்து என்னை  இறுக பற்றிக்கொண்டாள்.சில்லென்று முகம் புதைந்ததால் எனது உடல் சிலிர்த்தது.லேசான  அவளது முகக்குலுக்கல்  அழுகிறாள் அவளென்று எனக்கு உணர்த்தியது.

”அடி அசடு..என்னாச்சி.ஒண்ணும் பயப்படற மாதிரி இல்லை.ஒண்ணும் ஆகலை’.

நானும் அவளை இறுக பற்றிக்கொண்டு அவளது தலை முடியுள் விரல் விட்டு கோதினேன்.இடுப்புக்கு கீழே எனது உடையும் ஈரத்தை  பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

சற்று நேரம் கழிந்ததும் அவளை விலக்கி அவளது நனைந்த உடைகளை களைய சொல்லி பழைய துணியால் அவளது உடலையும் வழிந்திருந்த கருங்குருதியையும் துடைத்தெடுத்து அவளுக்கு மாற்றுடை கொடுத்தேன்.

இன்னும் நாணம் வந்து பற்றவில்லை அவளுள்.ஒருவேளை நான் மட்டுமே இருப்பதால் அப்படியோ.புரியவில்லை.கீழே கிடந்த துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்று அங்கு அவற்றை போட்டேன்.

வெளியே மழை பெய்த வண்ணமேயிருந்தது.குளிப்பாட்டுவோமா வேண்டாமா என்று  தீர்மானிக்க முடியாமல் மழை நின்ற பிறகு பார்த்து கொள்ளலாமென்று முடிவு செய்தேன்.பீரோவை திறந்தேன்.கீழறையில் கையை விட்டு துழாவினேன்.கைக்கு நான் தேடியது கிடைக்கவில்லை.

அப்போது தான் ஞாபகம் வந்தது. இன்னும் பதினைந்து நாட்களுக்கு பிறகு தான்  எனக்கு அது தேவைப்படுமென்பதால்  தீர்ந்து போயிருந்த போதிலும் அதை வாங்காது விட்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினேன்.காலையில் கழுவி காயப்போட்டிருந்த அவரது லுங்கி  கண்களில் பட்டது.

மழைக்கு முன்பு கொடிக்கம்பியிலிருந்து காயப்போட்டிருந்த லுங்கியை வேகமாக எடுக்கும் போது ‘டர்’ரென்று கம்பி முனையில் பட்டு கிழிந்துவிட்டிருந்ததும் அதை தைத்து சீர் செய்து மடித்து தையல் மிஷின் மீது வைத்திருந்ததும் நினைவுக்கு எட்டியது. பீரோவில் புது லுங்கி இருந்ததும் ஞாபகத்துக்கு வர பீரோவை திறந்து புது லுங்கியை எடுத்தேன்.ஏற்கனவே தைத்திருந்தது.

மிஷின் மீது வைத்திருந்த லுங்கியை எடுத்துக்கொண்டு அவளிருந்த அறைக்குள் நுழைந்தேன்.வயிற்றை பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.பார்வையை லேசாக திறந்திருந்த சன்னல் வழியே கொட்டும் மழையின் மீது பதித்திருந்தாள்.

”என்னடி அதிகமா வலிக்குதா.இரு வர்றேன்” என்றபடி சமையலறையில் நுழந்து சிறிது  வெந்தயம் கொண்டு வந்து அவள் வாயில் போட்டு தண்ணீரை குடிக்க வைத்தேன்.

’உவேக்’ என்றாள்.

ஆனால் வெளியே துப்பவில்லை.

”சரியா போயிடும்”.கூறிவிட்டு எடுத்து வந்திருந்த லுங்கியை பகுதிபகுதியாய் பிரித்து துண்டுகளாய் கிழித்துக்கொண்டிருந்தேன்.

அவள் என் செய்கையையே வைத்த கண் மாறாது பார்த்துக்கொண்டிருந்தாள். இரு துண்டு லுங்கித்துணியை ஒன்றாக மடித்து கனமான கைக்குட்டை மடிப்பாய் மடித்து ஒரு நீண்ட நாடாச்சீரியாய் கிழித்திருந்ததையும் எடுத்துக்கொண்டு அவளருகே சென்றேன்.அவளுக்கு ஒன்றும் விளங்கியிருக்க வாய்ப்பில்லை மருட்சியுடன் என்னை ஏறிட்டு நோக்கினாள்.

”நிவி...” என்று நான் கூற ஆரம்பித்ததை செய்ய வேண்டியதை செய்து காட்டியதை ஒரு சிறு நடுக்கத்துடன் செவிமடுத்தும் கண்ணுற்றும் கொண்டிருந்தாள்.ஏதோ விளங்கிக் கொண்டதாய் ஒரு புதுவித அனுபவத்தில் பாவுவதற்கு தயாராகும் வீராங்கனையை போல் என் கைகளிலிருந்து  அந்த லுங்கி துண்டங்களை வாங்கிக்கொண்டாள்.

எனக்கே கொஞ்சம் சங்கோஜமாக இருந்ததால் அவள் பக்கம் விடுத்து மறுபுறம் திரும்பி நின்று கொண்டேன்.

விநாடிகள் சில கடந்திருக்கும். என்னை கடந்து ஏதோ ஒன்று பறந்து சென்று கதவருகே சொத்தென்று வீழ்ந்தது.என்னால் மடித்து கொடுக்கப்பட்ட லுங்கித் துண்டங்கள் ஒரு சிறு பந்து முடிச்சாய் கதவருகே கிடந்தது. திரும்பி அவளை பார்த்தேன்.

“ஏண்டி..என்னாச்சு.பயமா இருக்கா.பயப்படாதே” என்று கூறியவாறே அவளருகே சென்றேன்.

”இனிமே மாசத்துக்கு ஒரு முறை இது மாதிரி செய்து தான் தீரனும் கண்ணு”. ஆதுர்யமாக அவளது கன்னங்களை இரு கைகளாலும் தாங்கி செல்லமாய் தலையுச்சியில் முத்தமிட்டேன்.

கண்களின் ஓரங்கள் பனித்தன.அவளது கண்களும் கலங்கியிருந்தன.என்னை ஏறிட்டு நோக்கியவள்,

“அம்மா…அந்த துணியில் அப்பா வாசனை வருது” என்றாள்.

திடீரென்று வெளியே பெரும் இடியோசை கேட்டது. மழை இன்னும் வேகமெடுத்து ஆக்ரோஷமாய் பெய்யத்துவங்கியது.

*

நன்றி :  சு.மு.அகமது | https://www.facebook.com/musthaqsyedahmed/