Monday, January 24, 2022

திக் நியத் ஹான்

நண்பர் கார்த்திக் ஃபேஸ்புக்கில் எழுதிய அஞ்சலி...

இன்று காலை (22 Jan 2022) கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே விடிந்தது . விடுமுறை முடிந்தும் முடியாதது போன்ற ஒரு மனநிலை . ஜென் மாஸ்டர் திக் நியத் ஹான் சமாதி அடைந்த செய்தி அறிந்ததும் மனம் முற்றிலும் வேறோரு  உணர்வு நிலைக்கு சென்று விட்டது. இதை வருத்தம் என்று சொல்வதற்கில்லை  மீண்டும் அவரை அணுக்கமாக நினைவுகூறும்   தருணமாகவே இதை உணர்ந்தேன்  

திக் நியத் ஹான் , உலகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஜென் மாஸ்டர் , வியட்நாமில் பிறந்தவர் . இவரை நீங்கள் நேரடியாக கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் இவரின் எளிமையும் தெளிவும்  பொதிந்த வாசகங்களை எங்காவது பார்க்கவோ கேட்கவோ செய்திருக்கலாம் . ஆன்மீக தளத்தில் மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல்  சமூகத்தில் அமைதி போக்கிற்கான தேவையை  முன்வைத்து தொடர்ந்து பேசி வந்தவர்.

1926 ல் பிறந்த திக் நியத் ஹான் , பதினாறு வயதிலேயே பெளத்த மடலாயம் ஒன்றில் சேர்ந்து துறவறம் பெற்றுக்கொள்கிறார் .அவரின் பெயரில் உள்ள  திக் (Thich) என்பது புத்தரின் குலத்தில் வந்தவர் என்பதை சுட்டும் வார்த்தை . 1960 களில்  வியட்நாம்  போர் உச்சத்தில் இருந்த சமயம் இவரின் போருக்கு எதிரான கருத்துக்களினால் வியட்நாம் அரசு இவரை மீண்டும் வியட்நாமுக்குள் நுழைய அனுமதி மறுத்தது ( அப்போது பிரான்சில் இருந்தார் ) . 

அதன் பிறகான தனது பெரும்பாலான நாட்களை அமெரிக்காவிலும் பிரான்சிலும் கழித்தார்  . அமெரிக்க கருப்பின தலைவரான மார்ட்டின் லூதத் கிங் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த எதிர்ப்பின் ஆரம்பப் புள்ளி திக் நியத் ஹான் அவர்களில் இருந்து ஆரம்பித்தது எனலாம் , அதை மார்ட்டின் லூதர் கிங் மேலும் முன்னெடுத்துச் சென்றார். திக் நியத் ஹான் இறுதிவரை தொடர்ந்து எல்லா விதமான போர்களுக்கும் ,  வன்முறைக்கும் எதிராகவே பேசிவந்திருக்கிறார்

திக் நியத்  ஹான் அவர்கள் எனக்கு முதலில் அவரின் புகைப்படத்தின் மூலமே அறிமுகமானார் . சில வருடங்களுக்கு என் மனைவி பணி நிமித்தமாக கலந்துகொண்டிருந்த கான்பிரன்ஸ் ஒன்றில் மனநலம் குறித்த ஒரு விவாத்தத்தில்  'இக்கணத்தில் இருத்தல்' (minufulness ) என்ற அணுகுமுறையை விளக்கும் விதமாக திக் நியத் ஹான் அவர்களின் சிந்தனைகளும் புத்தகங்களும் முன் வைத்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

கருத்தரங்கில் இருந்து  அவர் வாங்கி வந்த  புத்தகத்தில் இருந்த  திக் நியத் ஹான் அவர்களின்  புகைப்படத்தை  பார்த்ததுமே  எனக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உருவாகியது .அவர் முகத்தின் தெரிந்தது ஒரு புன்னகை என்று கூட சொல்லிவிட முடியாது .அதை ஒரு நிறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம், மேலதிகமாக வேறெதுவும் தேவையிருக்காத ஒரு பூரணம். 

அதன் பின் அவரை வாசிக்க ஆரம்பித்த போது அவரின் இருப்புக்கும்  அவர் சொல்வதற்கும் இடையே  வித்தியாசமே இல்லை என்பதை உணர முடிந்தது . பின்னர் அவரின்  உரைகளையும்   கேட்டேன் - அந்த ஒருமை உணர்வு முழுமை அடைந்தது . சில விஷயங்களை அறிதல்களாக  ஆலோசனைகளாக, வழிகாட்டல்களாக ஒருவர் முன்வைப்பது  வேறு ஆனால் அந்த தன்மையில் இருந்து கொண்டே அதை ஒருவர் அதைச் சொல்வது என்பது நம்மை  அந்தரங்கமாகத் தொடுவது. 

மகிழ்ச்சி என்பது எதிலிருந்தோ ,எதன் மூலமாகவோ , எதை அடைந்தோ பெறும் ஒன்றல்ல . மகிழ்ச்சி அல்லது ஆனந்தத்தில்  (joy ) இருந்து தான் அனைத்தும் துவங்குகிறது . Mindfulness practice எனப்படும் 'இக்கணத்தில் இருத்தல்' என்பது எதனோடும் பிணைத்துக்கொள்ளாத , எதையும் நிபந்தனையாக்கிக்கொள்ளாத  "அடிப்படையான  மகிழ்ந்திருக்கும் நிலையை" அடைவதே  என்கிறார் . 

மனதும் உடம்பும் இக்கணத்தில் இங்கு இருக்கும்போது, அதை நாம் கவனிக்கும் போது , நமக்குள் நாம் குவியும் போது, வாழ்வெனும் மலர் இயல்பாகவே நமக்குள் மலர ஆரம்பிக்கிறது . உயிர்த்திருத்தல் என்பதே  ஒரு அற்புதமாகிறது .  மகிழ்ந்திருக்க அல்லது ஆனந்தித்திருக்க தேவையான அத்தனை சாத்தியங்களும் அந்தந்த கணத்திலேயே பொதிந்துள்ளது என்பதை அறியும் தருணமது .

இக்கணம் என்பது நிறையும் போது , நிறைந்து ததும்பும்போது , மனதுக்கு   எங்கோ , எதுவோ என்று பரபரக்கும் தேவை எழுவதில்லை. கடந்த காலம் குறித்த ஏக்கங்களோ, எதிர்காலம் குறித்த  பயங்களோ , நிகழ்காலம் குறித்த போதாமைகளோ நம்முள்  படர்ந்து நம்மை திணற அடிப்பதில்லை  . இப்படி குவிந்த ஒரு  புள்ளியில் உருவாகும் தெளிவு  ஞானத்தின் முதற்படி ஆகிறது .

இந்த தெளிவு உருவாக்கும்  மனவிரிவு கொண்டே நாம் மற்றவர்களையும் புரிந்துகொள்ளவும் அன்பு செய்யவும் முடியும் என்கிறார் . அதிலிருந்தே பிறர் மீதான முற்றான compassion பிறக்கும் என்கிறார் . நம்மை நாம் அன்பு செய்யாமல் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது  .அந்த புள்ளியிலேயே நீ அல்லது நான் என்றும் பிரிவும் மறைய ஆரம்பிக்கிறது.  இந்த இடத்தில்  நான் வள்ளலாரையும் நினைவுறுத்திக்கொண்டேன் .இந்த மனநிலை தான்  'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொல்லும்   இல்லையா ?

திக் நியத் ஹான் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒன்று உண்டு 'Bring your mind home, to your body ' என்று .இதுவே ஆரம்பம் , இதுவே பயிற்சி , இங்கிருந்தே அனைத்தும் ஆரம்பிக்கிறது.

ஞானியர் மரணம் என்றுமே வருத்தம் அளிப்பதல்ல . அவர்களுடனான நம் தொடர்பு என்றைக்குமானது (eternal ). அவர்கள் உணர்த்தும் விஷயமும் என்றைக்குமானவை. மரணம் என்ற சுழற்சியை வெகு இயல்பாக கடந்து செல்லும் வாழ்க்கையை அவர்கள் முன்னரே அமைத்துக்கொண்டு விடுகிறார்கள் .  இந்த தருணம்  நாம்  அவர்களையும் , அவர்கள் அளித்துச்சென்ற ஞானத்தையும் நெருங்கி உணர இன்னுமொரு வாய்ப்பு. 

*


நன்றி : கார்த்திக்

Monday, January 10, 2022

மதுர அனுபவம் - ஆசிப் மீரான்

வலி மிகுந்த வாழ்க்கை யாருக்குத்தான் இல்லை? ஆனாலும் வலிகளை இல்லாமல் ஆகச் செய்யும் ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள்தான் அந்த நம்பிக்கையை உணராமல் தங்களையும் தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள் . ஆனால் எல்லா வலிகளையும் குணப்படுத்தும் அருமருந்தாக அன்பு இருக்கிறது என்று நம்புகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் எத்தனை சோதனைகளைச் சந்திக்கின்ற போதும் அவற்றை நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து போய்விடவே விரும்புகிறார்கள்

எத்தனை வலிகள் இருந்தபோதும் அன்பிலும் அது தரும் நம்பிக்கையிலுமே வாழ்க்கையின் மதுரம் இருக்கிறது என்பதுதான் மதுரம் திரைப்படத்தின் ஒற்றை வரிக் கதை
மிகச் சாதாரணமான இந்தக் கதையை தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் மூலமாக அன்றாடம் நாம் சந்திக்கின்ற எளிய மனிதர்களின் சின்னச் சின்ன உணர்வுகளைக் காட்சிப் படுத்துவதன் மூலமாக ஓர் அபாரமான அனுபவத்திற்குத் தயார்படுத்தி இருக்கிறார்கள் இந்தப் படக்குழுவினர்.
மருத்துவமனையில் நோயாளிகளின் துணைக்காக வருகின்றவர்கள் தங்குவதற்காக அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய கூடம் தான் இந்தப்படத்தின் களன்.
இந்தக் கூடத்தில் தங்கியிருப்பவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் அழைத்து வந்த நோயாளிகள் குணம் பெற்று தங்களோடு வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையோடும், "அவர்களுக்குச் சரியாகிவிட வேண்டுமே" என்ற பதைபதைப்போடும் கலவை உணர்ச்சியோடு இருப்பார்கள்.
இருந்தபோதிலும் அந்த உணர்வுகளிலிருந்து வெளியாகி, பிற நோயாளிகளிக்குத் துணையாக வந்து தங்கி இருப்பவர்களோடு தங்களது கதைகளைப் பகிர்ந்து கொண்டும், இணக்கமும் பிணக்கமும் கொண்டும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அடுத்தவருக்கு ஆறுதலாக முனைந்து, அதன்மூலம் நெருக்கமாகி, புதிய நட்புகள் தழைக்கும் காட்சிகளின் வழியாக எல்லா மனிதர்களுக்குள்ளும் இயல்பாக இருக்கும் அன்பை, அடுத்தவர்கள் மீதான கரிசனையை மெல்லிய இழையாய் படம் முழுதும் உலவ விட்டிருக்கிறார்கள்.
உணர்ச்சிகரமாகக் கதை சொல்லும் உத்திதான் என்றாலும் "மெலோ டிராமா" வாக மாற்றி அழுது புரளாமல் இயல்பான சம்பவங்களோடு காட்சிக்குக் காட்சி ஒன்ற வைத்திருக்கிறார்கள்.
கப்பலில் வேலைக்குச் சென்று விட்டு விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் சாபுவுக்கும், சாபுவிற்கு இணக்கமான நண்பரின் பிரியாணி கடைக்கு அப்பளம் விற்பனைக்கு வரும்‌ சித்ராவுக்குமிடை யே உருவாகும் அந்தக் காதல்தான் படத்தின் அடிநாதம்.
பெரிய ஆர்ப்பாட்டங்களில்லாத, சிறிய கடையின் அடுக்களையில், பிரியாணியில் தொடங்கும் பெண்ணுடல் சார்ந்த கவர்ச்சிகளைத் தவிர்த்து காட்சிப்படுத்தப்படும் அந்தக் காதல், சாரல் மழையில் நனைந்தபின் உடல் மெல்ல நடுங்கும்‌ நிலையில் ஆவி பறக்கக்‌ குடிக்கும் சூடான தேநீரின் இதத்தோடு மதுரமாய் இனிக்கிறது. ஜோஜு ஜார்ஜும் ஸ்ருதியும் நல்ல ஜோடியும் கூட.
95லேயே சின்ன வேடத்தில் அறிமுகமாகி, மம்மூக்கா, லாலேட்டன், திலீப் போன்றவர்களுடன் நடி ல்த்திருந் தாலும் கூட ஜோஜுவை என்னளவில் அடையாளப்படுத்திய படம் 1983. 'கிரிக்கெட் கோட்சாக' அந்தப் பாத்திரத்தை அவ்வளவு அழகாகக் கையாண்டிருந்தார். அதன் பின்னர் 'லுக்கா சுப்பி' உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்திரிந்தாலும் 'ஞான் மேரிக்குட்டி' யில் சப்-இன்ஸ்பெக்டராக கலக்கியிருந்தார். 'ஜோஸஃப்' வந்தபோது முழுப்படத்தையும் தோளில் தாங்கும் அளவிற்கு வளர்ந்தபோதிலும் கூட கதாநாயக வேடம் மட்டுமே செய்வேன் என்ற பிடிவாதமேதும் இல்லாமல் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். 'ஜூன்', 'பொரிஞ்ஞு மரியம் ஜோஸ்' படங்களுக்குப் பின் 'ஹலால் லவ் ஸ்டோரி', 'நாயாட்டு', 'மாலிக்' என்று கவனிக்கத்தகுந்த கதாபாத்திரங்களில் மின்னிய பிறகே 'மதுரம்' வாய்த்திருக்கிறது ஜோஜுவுக்கு. தயாரிப்பாளராகவும் களமிறங்கியதோடு முழுப்படத்தையும் மிகையில்லாத ஆற்றொழுக்கான உடல்மொழியோடு தாங்கியிருக்கிறார் ஜோஜு. மனைவியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துப் போகச் சொல்லும் காட்சிகளே போதும் ஜோஜு எத்தனை பண்பட்ட நடிகனென்பதைப் பறைசாற்ற.
குஜராத்திப் பெண் சித்ராவாக ஸ்ருதி ராமச்சந்திரன் கனகச்சிதம். சென்னையைச் சேர்ந்தவராம். மலையாளத்தின் இனி நிறைய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
நாற்பதாண்டு கால மனைவியுடனான காதல் வாழ்க்கையை எப்போதும் சிலாகித்துக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் இந்திரன் வாழ்ந்திருக்கிறார். "உனக்கு வருத்தமாக இல்லாவிட்டால் ஒன்று சொல்லவா?" என்று எல்லாரிடமும் அவர் கேட்கும் அந்த வசனமுமே கூட ஓர் உதாரணம். ஆரம்பத்தில் நகைச்சுவை‌போலத் தோன்றும் இதே வசனத்தை மனைவி குணமாகி வீடு திரும்ப யத்தனிக்கும் வேளையில் ஜோஜு ஜார்ஜிடம் அவர் சொல்லும்போது அந்த வசனத்தின் தொனி வேறாக மாறி நிற்கும்.
படத்தில் சில கதாபாத்திரங்களின் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றனவே தவிர அவர்கள் காட்சியில் வருவதில்லை. என்றாலும் ரவியின் மனைவி சுலேகாவும், தாஜினுடைய தகப்பனாரும், நீது என்ற பெண்ணின் அக்காவும், கெவினுடைய அம்மாவும் நாம் காணாமலேயே நமக்கு அறிமுகமானவர்களாகிவிடுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் இன்னும் ஒரு சுவாரசியம்.
படத்தின் காட்சிச் சட்டங்களை அழகுறப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டாலினிஸ்லாஸ். ஜோஜுவும்‌ ஸ்ருதியும் காதலைப் பகிர்ந்து கொள்ளும்போது பின்னணி மழையில் அந்த அழுக்கான அடுக்களையும் கூட ஒளிப்பதிவின் மிகைவால் மின்னுவதோர் உதாரணம் மட்டும்.
மலையாளப் படங்களுக்கேயுரிய மெதுவான தொடக்கமும், கதாபாத்திரங்களுக்கான அறிமுகமும் இருந்தாலும் சற்றும் சலிப்படைய வைக்காத, மனித உணர்வுகளின் எல்லா அம்சங்களையும் தொட்டுச் செல்கிற அபாரமான திரைக்கதை.
ஆஷிக் அமீர், ஃபாஹிம் ஸஃபர் (தாஜ் என்ற வளைகுடாவாசி கதாபாத்திரத்திலும் இவர்தான் நடித்திருக்கிறார்) இருவருடைய பங்களிப்பில் மிளிர்கிறது.
எந்தப் பூச்சுகளுமின்றி, படம் பார்க்கிறவர்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் முடிவோடு படத்தை இயக்கி, அதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் அஹம்மது கபீர். 'ஜூன்' என்ற முதல் படத்திலேயே நம்பிக்கை விதைத்த இயக்குநர் இவர்.
சொல்ல மறந்து விட்டேனே?! படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மதுரம் கூட்டவே செய்திருக்கின்றன. இசை அமைப்பாளர் ஷிஹாம் அப்துல் வஹாபுக்கு
வாழ்த்துகள்
!
சினிமா 'ஹராம்' என்று இங்கே சிலர் கதறிக் கொண்டிருக்கும் நிலையில் மலையாள சினிமா இளம் இஸ்லாமியர்களின் கலைப் படைப்புகளோடு புதிய பாய்ச்சல் காணத் தொடங்கியிருப்பது மேலும் நம்பிக்கையளிக்கிறது.
மனிதாபிமானமும், அன்பும், நம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையை எதிர்கொள்வதில் எந்த அகச்சிக்கலும் இருக்காதென்பதை விழிகளை நனைத்துச் சொன்னாலும்.....
"மதுரம்" நிச்சயம் இனிப்பான அனுபவம்தான்.

*