Showing posts with label சத்யா. Show all posts
Showing posts with label சத்யா. Show all posts

Wednesday, November 29, 2017

'இரட்டை இலை' கொண்டாட்டம் - ‘துக்ளக்’ சத்யா

'இரட்டை இலை' கொண்டாட்டம் இப்படியும் நடக்கலாம்  - ‘துக்ளக்’ சத்யா
----------------------------------------------

( இரட்டை இலைச் சின்னமும் கட்சியும் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிக்கே உரியது என்ற தேர்தல் கமிஷன் தீர்ப்பை, அ.தி.மு.க.வினர் அளவாகக் கொண்டாடுவது நல்லது. தலைவர்கள் இப்போது உள்ள மனநிலையில், கொண்டாட்டம் இப்படி முடிந்து விடலாம்.)

எடப்பாடி:
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் முடிஞ்ச பிறகு என்ன செய்யப் போறோம்னு ஒரே கவலையா இருந்தது. இனிமே கவலையில்லை. ஆட்சி முடியற வரைக்கும், இரட்டை இலைச் சின்னம் கிடைச்சதைக் கொண்டாடலாம். அவ்வளவு குட்டிக் கதைகளுக்கு எங்கே போறதுன்னுதான் தெரியலை.

மதுசூதனன்:
இரட்டை இலைச் சின்னம் கிடைச்சதிலே உங்களுக்கு என்ன வெற்றி? சசிகலாவுக்கு எதிரா நான் போட்ட வழக்குலே, எனக்கு ஆதரவா தேர்தல் கமிஷன் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அப்ப நீங்க சசிகலா அணியிலே இருந்தவர்தானே?

ஜெயக்குமார்:
ரெண்டு அணிகளும் இணைஞ்சுட்ட பிறகு, நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசக்கூடாது. எங்க அணியிலே நீங்க இருந்ததாலே உங்களுக்கும் சேர்த்து வெற்றி கிடைச்சிருக்குது. நீங்க நாங்கன்னு பேசறதை நிறுத்திட்டு, ஆர்.கே. நகர்லே உங்க வேட்பாளரை நிறுத்தறதா, எங்க வேட்பாளரை நிறுத்தறதான்னு பேசலாம்.

ஓ.பி.எஸ்:
சண்டை வேண்டாம். இரட்டை இலை மீட்பு வெற்றி விழாவிலே எல்லாரும் கலந்துக்கலாம். அரசாங்க வேலை எதுவாயிருந்தாலும் கவர்னர் பாத்துக்குவாரு. ஏதாவது பிரச்சனை வந்தா பிரதமர் பாத்துக்குவாரு. நாம ஏன் மோதிக்கணும்? மறுபடியும் பிரிஞ்சு, பேச்சு வார்த்தை நடத்தி, துணை முதல்வர் பதவியும் போய் நான் சாதா மந்திரி ஆகணுமா?

மைத்ரேயன்:
அணிகள் இணைஞ்சும் மனங்கள் இணையலை. அந்த இணைப்புக்கும் குழுக்கள் அமைச்சு பேசணும்.

செல்லூர்:
மனங்கள் இணைகிறது எப்படி? ஃபெவிகாலைத் தடவிகிட்டு கட்டிப் பிடிச்சா மனங்கள் ஒட்டிக்குமா? 

எடப்பாடி:
பொறுப்பை என்கிட்டே விட்டுருங்க. நான் படிப்படியா வளர்ந்தவன். சின்னம்மா கொஞ்சம் வளர்த்தாங்க, தினகரனாலே கொஞ்சம் வளர்ந்தேன். கூவத்தூர்லே கொஞ்சம் வளர்ந்தேன். கடைசியா ஓ.பி.எஸ்.ஸாலே கொஞ்சம் வளர்ந்து, மொத்தத்திலே எல்லோரையும் விட அதிகமா வளர்ந்துட்டேன். எனக்குத் தெரியாதா, கட்சியைத் எப்படி வளர்க்கணும்னு?

கே.பி.முனுசாமி:
முதல்வராயிட்டோம்னு ரொம்பத் துள்ளக் கூடாது. 111 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருக்குதுன்னு தேர்தல் கமிஷனே சொல்லிடுச்சு. இதை வெச்சுட்டு ஆட்சியை ஓட்டணும்னா எங்க தயவு இல்லாம முடியாது. நாங்களும் வெளியே போயிட்டா இரட்டை இலை கூட உங்களைக் காப்பாத்தாது.

ஜெயக்குமார்:
என்ன இரட்டை இலையை அவ்வளவு அலட்சியமாப் பேசறீங்க? அம்மாவும் இரட்டை இலையும் பர்கூர்லே தோற்றிருக்கலாம். 1996-லே இரட்டை இலை கேவலமா மண்ணைக் கவ்வியிருக்கலாம். இரட்டை இலை இருந்தும் அப்பப்ப ஆட்சியைப் பறி கொடுத்திருக்கலாம். மற்ற எல்லா சமயங்களிலும் இரட்டை இலைதானே நம்மை ஜெயிக்க வெச்சது?

தங்கமணி:
ஆமா. ஊழல், அராஜகம் ரெண்டும் சேரும்போதுதான் இரட்டை இலைக்கு பின்னடைவு வரும். வெறும் ஊழல் மட்டும் இருந்தா இரட்டை இலை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. நாம தாராளமா சந்தோஷப்படலாம்.

மதுசூதனன்:
நாங்க கஷ்டப்படும் போது உங்களை சந்தோசப்பட விட்டுருவோமா? எங்களை விரோதிச்சுக்கிட்டு நீங்க ஆட்சி நடத்திட முடியுமா?

ராஜேந்திர பாலாஜி:
ஒரு எம்.எல்.ஏ.வும் இல்லேன்னா கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மோடி பார்த்துக்குவார். தினகரன் அப்பீல் பண்ணாலும் பிரச்னை இல்லை. மேலே இருக்கிறவர் பாத்துக்குவார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்லே பா.ஜ.க. நின்னாக் கூட அ.தி.மு.க.வை மோடி ஜெயிக்க வெச்சுடுவாரு. நாம ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை.

மைத்ரேயன்:
மோடியை எனக்கு நல்லாத் தெரியும். பெருந்தன்மை காரணமா பல விஷயங்களை நான் அவர் கிட்டே சொல்லலை. அதுக்காக எப்பவும் பெருந்தன்மையா இருந்துடுவேன்னு நினைக்காதீங்க. பேசினப்படி செட்டில் பண்ணலைன்னா இப்பவே டெல்லிக்குப் போறேன்.

எடப்பாடி:
எனக்கு மட்டும் பிரதமரைத் தெரியாதா? நாளைக்கே, தமிழக திட்டங்களுக்காக பிரமரை சந்திக்கப் போறேன்னு அறிவிச்சுட்டு, இரட்டை இலை கிடைச்சதுக்காக அவருக்கு நன்றி தெரிவிச்சுடறேன். அவர் ஏமாந்த சமயம் பார்த்து கால்லே விழுந்துடறேன்.

ஓ.பி.எஸ்:
நீங்க டெல்லிக்குப் போனா நானும் டெல்லிக்குப் போகணும். நம்முடைய முதல் எதிரி தினகரன்தான். நாம இல்லாத நேரத்திலே, அம்மா சாந்தி அடைய, ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு அவர் தானம் கொடுத்துட்டா என்ன பண்றது?

செல்லூர்:
அவருக்கு முன்னாலே நாம அ.தி.மு.க. வுக்கு ஆர்.கே. நகர்லே திதி கொடுத்துடலாமே.

ஓ.பி.எஸ்:
அபசகுனமாப் பேசாதீங்க.  அ.தி.மு.க.வுக்கு இப்ப திதி கொடுக்கக் கூடாது. அம்மாவுக்குத்தான் கொடுக்கணும்.

ஜெயக்குமார்:
அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. அம்மா நிரந்தர முதல்வரா இருந்தாங்க. எடப்பாடியாலே அவ்வளவு முடியாட்டாலும் நூறு வருஷமாவது அம்மா ஆட்சியை நடத்த முடியும். அதனாலே, பிரச்னை பண்ணாம தி.மு.க.வையும் தினகரனையும் மட்டும் திட்டுங்க. அதான் நம்ம கொள்கை.

கே.பி. முனுசாமி:
அம்மா மரணம் பற்றி விசாரணை நடக்கிறதை மறந்துட்டுப் பேசறீங்க. நாங்க மனசு வச்சா இப்ப கூட அம்மா மரணத்திலே உங்களுக்கெல்லாம் தொடர்பு இருக்குதுன்னு சந்தேகப்பட முடியும்.

சி.வி.சண்முகம்:
அப்ப முதல்வரா இருந்ததே ஓ.பி.எஸ்.தான். அவருக்குதான் எல்லா உண்மைகளும் தெரியும்னு நாங்களும் விசாரணைக் கமிஷன்லே சொல்ல முடியும்.

மதுசூதனன்:
கூவத்தூர்லே என்ன நடந்ததுன்னு வெளியே சொன்னா, உங்க மானம் கப்பலேறிடும். கூவத்தூர் பாக்கியும் செட்டில் ஆகலை. இணைப்பு பாக்கியும் செட்டில் ஆகலை. காலத்துக்கும் மந்திரிகள் கிட்டே பிச்சை எடுக்கணுமா நாங்க? அம்மா மரணம் தொடர்பா ஸி.பி.ஐ. விசாரணை வெச்சீங்களாய்யா?

கே.பி.முனுசாமி:
சசிகலாவையும் நீக்க மாட்டீங்க. எங்க கஷ்டத்தையும் கவனிக்க மாட்டீங்கன்னா என்னய்யா அர்த்தம்?

தம்பிதுரை:
பேசும் போதே ஏன் கையை ஓங்கறீங்க? அ.தி.மு.க.விலே எந்தப் பிளவும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையா இருக்கோம். அதை ஞாபகம் வெச்சுக்குங்க.

கே.பி.முனுசாமி:
ஊழல் ஆட்சி நடக்கிறதுன்னு அண்ணன் ஓ.பி.எஸ். சொன்னதை மறந்துட்டீங்களா? போனாப் போகுதுன்னு 'எடப்பாடி நல்லாட்சி நடத்துகிறார்'ன்னு வாய் கூசாமா அவர் புளுகினதுக்கு நீங்க காட்டற நன்றியா இது?

சி.வி.சண்முகம்:
அம்மா ஆட்சிக்கு எதிரா சட்டசபையிலே வாக்களித்த துரோகிகளை கட்சியிலே சேர்த்துகிட்டது எங்க தப்பு. நீங்க வெளியே போனாக் கூட கவலையில்லை. மோடி இருக்கார். சட்டசபையைக் கூட்டாமலேயே 2021 வரைக்கும் காலம் தள்ளிவிடுவோம். பார்க்கிறீங்களா?

மதுசூதனன்:
நாங்க மறுபடியும் பிரிஞ்சு, ஆர்.கே. நகர்லே தனியா போட்டியிட்டு ஜெயிக்க முடியும். பார்க்கிறீங்களா?

ஜெயகுமார்:
அறிவோட பேசுங்க. எங்க கூட சேர்ந்த பிறகு உங்களுக்கு என்ன மரியாதை இருக்குது? நீங்க எப்படி ஜெயிக்க முடியும்?

மைத்ரேயன்:
ஜெயா டி.வி.யிலே கூப்பிட்டுகிட்டே இருக்காங்க. மனசுலே இருக்கிறதையெல்லாம் பேட்டியிலே சொல்லிட முடியும். மனங்கள் இணையறதுக்கு என்ன செய்யணுமோ அதைச் செய்யற வழியைப் பாருங்க. இல்லேன்னா, இரட்டை இலை வெற்றி விழாவை நாங்க தனியாக் கொண்டாடிக்கிறோம்.

எடப்பாடி:
ஏன் இப்படி கோபப்படறீங்க? அம்மா ஆட்சி தொடர்ந்தா, கோடி கோடியா நன்மை. அந்த வாய்ப்பு இன்னும் மூன்றரை வருஷம்தான் கிடைக்கும். அதுவரைக்கும் ஒற்றுமையா இருக்கக் கூடாதா?

ஓ.பி.எஸ்:
நீங்க இவ்வளவு தூரம் சொல்றதாலே, ஆர்.கே. நகர் தேர்தல் வரைக்கும் நாம இரட்டைக் குழல் துப்பாக்கியா செயல்படலாம். அதுகுள்ளே அதிருப்தியாளர்களுக்கு உரிய மரியாதை செய்யலைன்னா, அம்மா சமாதியிலே தியானம் பண்ணிட்டு, தனித் துப்பாக்கி தூக்க வேண்டியிருக்கும்.

*

நன்றி: சத்யா / துக்ளக் (06.12.2017)
தட்டச்சு செய்த நண்பர் தாஜூக்கும் நன்றி

Sunday, November 3, 2013

நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....! - -'துக்ளக்' சத்யா



Image Courrtesy : outlookindia
***
நிரா ராடியாவும் டெலிஃபோன் பயங்கரங்களும்....!

சத்யா

// நிரா ராடியாவின் டெலிஃபோன் உரையாடல்களில் உள்ள முக்கியமான ஆறு பயங்கர அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டும் என ஸி.பி.ஐ.-க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த ஆறு பயங்கரங்கள் எவை என்று விவரமாக வெளியிடப்படாததால், என்னவோ ஏதோ என்ற கவலையில் ஆழ்ந்தோம். ஆய்வு செய்வதற்கு முன்பாக, அந்த பயங்கரங்கள் குறித்து ஸி.பி.ஐ. நிரா ராடியாவிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தினால் அது இப்படிதான் இருக்குமோ? //

ஸி.பி.ஐ. அதிகாரி :
உங்க டெலிஃபோன் உரையாடல்களிலே இருக்கிற பயங்கரங்களைக் கேட்டு சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி அடைந்திருக்குது. அதைப் பத்தி ஆய்வு செய்யணும்னு உத்தரவு போட்டிருக்குது. மொதல்லே உங்களை விசாரிச்சுட்டா ஆய்வைத் தொடர வசதியா இருக்கும்.

நிரா ராடியா :
என்னுடைய 180 நாள் பேச்சைத்தான் வருமான வரித்துறை பதிவு செஞ்சுது. இதுக்கே இவ்வளவு பயங்கரமான்னு குதிக்கிறவங்க, மொத்த பேச்சையும் கேட்டா என்ன சொல்வாங்களோ? உங்க கிட்டே சொல்றதுக்கு என்ன? சின்ன
பயங்கரமாயிருந்தாதான் நான் டெலிஃபோன்ல பேசுவேன். பெரிய விசயம்னா, நேராத்தான் பேசுவேன். அது எங்க இண்டஸ்ட்ரியல் பாலிஸி.

ஸி.பி.ஐ. :
நல்லவேளை, உங்க டெலிஃபோன் பேச்சை மட்டும்தான் ஆய்வு பண்றோம். 'அரசு உயர் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறதுக்கே பல கோடி செலவாகிவிடுது.'ன்னு உங்க தோழிகிட்டே சொல்லியிருக்கீங்க.......

நிரா :
இதுலே என்ன பயங்கரம் இருக்குது? அவங்க செய்யற வேலைக்கு சம்பளம் கொடுக்க வேண்டியது எங்க கடமை இல்லையா? 'இதுலே சலுகை காட்டுங்க, அதுலே வரியை ரத்து பண்ணுங்க, அந்த வேலையை எங்க நிறுவனத்துக்குக்
கொடுங்க'ன்னு உரிமையா கேக்கிறோம். சொன்னபடி செய்யுறாங்க. அந்த வேலைக்கு சம்பளம் கொடுக்கிறது தப்பா?

ஸி.பி.ஐ. :
அரசு உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் உங்க கிட்டே எப்படி சம்பளம் வாங்கலாம்?

நிரா :
எங்க கிட்டே மட்டுமல்லே, பல தொழிலதிபர்கள் கிட்டேயும் சம்பளம் வாங்கறாங்க. அவங்களை எல்லாம் விசாரிச்சீங்களா? மாட்டிக்கிட்டேன்னு தானே கேள்வி மேலே கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தறீங்க?

ஸி.பி.ஐ. :
சரி, அவுங்க பெயர் பட்டியலைக் கொடுங்க. சுப்ரீம் கோர்ட் ரொம்ப தொந்தரவு பண்ணா, கேஸ் போட உபயோகமா இருக்கும்.

நிரா :
லிஸ்ட் எல்லாம் கொடுக்க முடியாது. பேரை வெளியே சொல்றதில்லைன்னு அக்ரிமெண்ட் போட்டிருக்கோம். இதுவும் ஸ்விஸ் பேங் கறுப்புப் பண ஒப்பந்தம் மாதிரிதான். உயிரே போனாலும் எந்தத் தகவலும் வெளியே வராது. அப்படியொரு தொழில் கூட்டணி தர்மம்.

ஸி.பி.ஐ. :
'சீனாவும் பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதியிலே ஊடுருவ ஆசைப்படுது. அவர்களை இந்தியா தடுக்கக் கூடாது'ன்னு நீங்க ஒரு மத்திய மந்திரி கிட்டே பேசியிருக்கீங்க. அவரும் 'உரிய நடவடிக்கை எடுக்கிறோம்'னு உறுதி
அளிச்சிருக்காரு.

நிரா :
ஆமா, சீனாவிலேயும் பாகிஸ்தானிலேயும் கூட எங்க வியாபாரம் நடக்குது இல்லே? அதுலே லாஸ் வந்தா நீங்கள் ஏத்துப்பீங்களா? இதெல்லாம் பிஸ்னஸ், நீங்க தலையிடாதீங்க. உங்களுக்குத் தெரியாது.

ஸி.பி.ஐ. :
நீங்க சொன்னா மந்திரிகள் எப்படிகேக்கறாங்க?

நிரா :
என்ன கேள்வி கேக்கறீங்க? பிரதமரே கேக்கும்போது மந்திரிகள் கேட்க்க மாட்டாங்களா?

ஸி.பி.ஐ. :
ஆ...! பிரதமரும் கேட்பாரா?

நிரா :
நீங்களும் சுப்ரீம் கோர்ட் மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் ஷாக் ஆகறீங்களே? நான் சொன்னபடி கேக்கலைன்னா, பிரதமர் பத்தி ஒபாமா கிட்டே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன் இல்லே? அந்த பயம் அவருக்கு இருக்காதா?

ஸி.பி.ஐ. :
புரியலை; பிரதமருக்கு நீங்கதான் எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கறீங்களா?

நிரா :
எல்லாத்தையும் சொல்லித் தரமாட்டேன். பிஸினஸ் மட்டும்தான். உதாரணத்துக்கு, எந்தெந்த நிலக்கரிச் சுரங்கங்களை எந்தெந்த நிறுவனத்துக்கு ஒதுக்கணும்னு அவருக்கு என்ன தெரியும், பாவம்? நான்தானே சொல்லணும்! கோடிக் கணக்கிலே பணம்புரள்ற விசயமாச்சே! கொஞ்சம் ஏமாந்தாக் கூட அநியாயத்துக்கு கவர்மெண்டுக்கு லாபமாயிடுமே.

ஸி.பி.ஐ. :
நிலக்கரிச் சுரங்கங்களை விதி முறைப்படிதானே ஒதுக்கணும்?

நிரா :
கண்டிப்பா, நாம யாருக்கு ஒதுக்கீடு பண்றோமோ, அதுக்குத் தகுந்த மாதிரி நிலக்கரித் துறை அதிகாரிகள் விதிமுறைகளைத் திருத்திடுவாங்க.

ஸி.பி.ஐ. :
தீவிரவாதி ஜெயில்லேர்ந்தும், கோர்ட்லேர்ந்தும் தப்பிக்கப் போற விஷயத்தைக் கூட ஒரு ஜர்னலிஸ்ட்கிட்டே பேசியிருக்கீங்க.

நிரா :
இந்திய முஜாஹ்தீன் தீவிரவாதி தப்பிச்சதைப் பத்தி கேக்கறீங்களான்னு புரியலை. பொதுவா தப்பிக்கிற தேதி, டைம் மட்டும்தான் எங்க லெவல்லே முடிவு பண்ணுவோம். மத்த விஷயங்களை நீங்க ஆஃப்கானிஸ்தானுக்கு ஃபோன் பண்ணிதான் கேக்கணும். லைன் போட்டுத் தரட்டுமா

ஸி.பி.ஐ. :
ஐயையோ வேண்டாம்.

நிரா :
ஒரு தடவை என்ன ஆச்சு தெரியுமா? காஷ்மீரைத் தாக்கறதா, கல்கத்தாவைத் தாக்கறதான்னு தீவிரவாதிகளுக்குள்ளே சண்டை. நான்தான் தலையிட்டு, இந்த மாசம் காஷ்மீர், அடுத்த மாசம் கல்கத்தான்னு சமரசம் பண்ணிவெச்சேன். இதுக்காக பிரதமர் கூட எனக்கு தேங்ஸ் சொன்னாரு.

ஸி.பி.ஐ. :
என்னது? பிரதமர் தேங்ஸ் சொன்னாரா?

நிரா :
ஆமா. விஷயம் தெரிஞ்சுட்டு, அதுக்கேத்த மாதிரி பிரதமர் வெளிநாடு போயிட முடியுது இல்லே? அதை விடுங்க. சட்டீஸ்கர்லே கூட கலெக்டரைக் கடத்தறதா, கமிஷனரைக் கடத்தறதான்ற மாதிரி சமயங்களிலே தீவிரவாதிகளுக்கு நான்தான் கன்ஸல்டண்டா இருக்கேன். கோரிக்கை நிறைவேறினதும், அவங்களை விடுவிக்கறதுக்கும் ஏற்பாடு பண்றேன். அதனாலே ரெண்டு பக்கமும் என் பேர்லே மரியாதை உண்டு.

ஸி.பி.ஐ. :
சரி. பயமாயிருக்குது. தீவிரவாத விஷயத்தை விடுங்க. நிர்வாக ரீதியான நல்ல பயங்கரங்களைப் பத்திப் பேசலாம். 'எக்கச்சக்கமா சொத்து சேர்ந்து போச்சு, பணத்தை எப்படிக் காப்பாத்தறதுன்னே புரியலை, சொத்து கணக்கு வேறே கேக்கிறாங்க'ன்னு ஒரு மத்திய மந்திரி ஃபோன்லே அழுது புலம்பியிருக்காரு. நான் எப்படியாவது ஹெல்ப் பண்றேன்னு நீங்க அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கீங்க.

நிரா :
எல்லா மந்திரிகளுக்கும் இந்த மாதிரி பிரச்னை ஏற்படறது சகஜம்தான். வருமான வரிச் சட்டத்திலேர்ந்து அமைச்சர்களுக்கு விலக்கு வழங்கற அவசர சட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு பண்றேன்னு உறுதி அளிச்சேன். சுப்ரீம் கோர்ட் கவனிக்கிறதாலே கொஞ்சம் டிலே ஆகுது. மத்திய அமைச்சர்கள் ரகசியக் கூட்டத்திலேயும் இந்த சப்ஜெக்ட் வருது.

ஸி.பி.ஐ. :
அமைச்சர்கள் கூட்டத்திலே கூட நீங்க கலந்துக்குவீங்களா?

நிரா :
ஊஹும். அங்கே எதைப் பத்தி விவாதிக்கணும்னு அஜெண்டா தயார் பண்ணிக் குடுக்கறதோட என் வேலை முடிஞ்சுடும்.

ஸி.பி.ஐ. :
மந்திரி சபை கூட்ட அஜெண்டாவை நீங்க தயார் பண்றீங்களா?

நிரா :
எல்லா கூட்டத்துக்கும் நான் தயார் பண்ண மாட்டேன். முக்கியமான கூட்டத்துக்கு மட்டும்தான் 'மத்திய அரசு - தொழிலதிபர்கள் ஒப்பந்த’ப்படி அரசு நடக்கலைனா, அதை சரி செய்ய வேண்டியது என் வேலையாச்சே!

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே ஒரு தடவை ஸி.பி.ஐ. அதிகாரிகள் கிட்டே நீங்க கோபமா பேசினது கூட பதிவாயிருக்குது. இதோ... பேச்சைக் கேளுங்க....

நிரா :
ஓ...... இதைச் சொல்றீங்களா? மத்திய அமைச்சர்களும் அவங்களுக்கு வேண்டிய அதிகாரிகளும் வழக்குலே மாட்டும் போது, ஸி.பி.ஐ. சார்பா அவங்க மேலே எஃப்.ஐ.ஆர். போடறது சட்ட அமைச்சரோட வேலை. ஒரு தடவை சட்ட அமைச்சர் வெளிநாடு போயிருந்தப்போ, ஸி.பி.ஐ.யே எஃப்.ஐ.ஆர். போட்டுடுச்சு. அதான் 'சட்ட மந்திரி இல்லைன்னா என்ன? என் கிட்டே கேட்டிருந்தா நானே எஃப்.ஐ.ஆர். போட்டிருப்பேன் இல்லே? உங்களுக்கு என்ன அதிகாரம்?'ன்னு நல்லா கேட்டேன். அதான் இது.

ஸி.பி.ஐ. :
எஃப்.ஐ.ஆர். நீங்க எப்படிப் போடலாம்?

நிரா :
ஏன்? நான் என்ன புதுசாவா எஃப்.ஐ.ஆர். போடுறேன்? நம்ம ஆளுங்க, வழக்குலேர்ந்து நல்லபடியா தப்பிச்சு வர வேண்டாமா? ஏதாவது பிரச்சனை ஏற்பட்டா, எங்க பாஸ் என்னைத்தானே கேப்பார்?

ஸி.பி.ஐ:
கிரிமினல் எம்.பி.க்கள் பிரதமரை கேரோ பண்ண திட்டம் போட்டிருக்கிறதாக நீங்களும் ஒரு பெண் நிருபரும் பேசியிருக்கீங்க....

நிரா :
ஐயோ... அது பயங்கர ஜோக்! சீனியர் கிரிமினல் எம்.பி.க்கள் மேலே பல வழக்குகள் இன்னும் வாபஸ் ஆகாம இருக்குது. அதை எல்லாம் வாபஸ் வாங்க உடனே நடவடிக்கை எடுக்கணும்னு பிரதமரை ஹவுஸ் அரெஸ்ட் செய்ய திட்டம் போட்ட தகவல் எனக்கு கிடைச்சது. பிரதமரை எப்படியாவது காப்பாத்திட்டா, நமக்கு பெரிய அஸைன்மெண்ட் கிடைக்கும்னு எங்க பாஸ் என்கிட்டே சொன்னார். உடனே நான் கிரிமினல் எம்.பி.க்களோட ஃபோன்லே பேசி, வழக்கு சம்பந்தப்பட்ட எல்லா ஃபைல்ஸும் கூடிய சீக்கிரம் காணாமப் போகும்னு உறுதி அளிச்சேன். அப்புறம்தான் பிரச்னை முடிஞ்சது.

ஸி.பி.ஐ. :
ஃபோன்லே நீங்க நல்ல விஷயமே பேசினது இல்லையா?

நிரா :
எப்பவாவது அப்படி பேச்சு வரும். உடனே 'ராங் நம்பர்'னு வெச்சுடுவேன்.

***

நன்றி: துக்ளக் (30.10.2013) , சத்யா, 
தட்டச்சு உதவி : தாஜ்

Friday, May 10, 2013

ஒரிஜினல் ஜாக்கிரதை! - துக்ளக் சத்யா

சே, 'அல்லயன்ஸ்' வெளியீடான 'ஸ்மைல் ப்ளீஸ்' நூலிலிருந்து சத்யாவின் இந்தக் கட்டுரையை சிரித்துக்கொண்டே டைப் செய்துவிட்டு சிறிதுநேரம் இணையத்தை செக் செய்தால் இது அப்புசாமி டாட் காமில் ஏற்கனவே வெளியாகியிருக்கிறது! புத்தி. 'சர்வம் காமெடி மயம்' பகுதிகளையும் சாக்கிரதையாக இனி வெளியிட வேண்டும். ஸ்மைல் ப்ளீஸ்...
***


ஒரிஜினல் ஜாக்கிரதை - சத்யா

நான் இயற்கையாகவே சற்று சந்தேகப் பேர்வழி. இந்தப் போலி சாமியார் விவகாரங்களைக் கேள்விப்பட்ட பிறகு, என் சந்தேகப் புத்தி அளவில்லாமல் வளர்ந்து விட்டது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தவன், எல்லாப் புற்றிலும் பாம்புகள் இருப்பது உறுதி என்று நம்ப ஆரம்பித்து விட்டேன்.

அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாமல் நான் குழம்பிய குழப்பம் கொஞ்சநஞ்சமல்ல. உடனடியாக டாக்டரிடம் சொல்லிக் கொள்ளாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்தது அந்த மருத்துவமனை. மனோதத்துவ டாகடர் மாணிக்கவாசகம் என்னை ஏற இறங்கப் பார்த்தார். அவர் பார்வையே ஒரு தினுசாக இருந்தது.

இந்த ஆள் அசல் டாக்டர்தானா? என்ற சந்தேகம் என் மனதில் ஒரு கணம் நிழலாடி மறைந்தது.

"என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்க. எனக்கு வேலை இல்லையா?"

ஏன் இப்படி எரிந்து விழுகிறார்? பேஷண்டுகளைக் கவனிப்பதைவிட இவருக்கு வேறென்ன வேலை இருக்கமுடியும்? கள்ளக்கடத்தல், கிள்ளக் கடத்தல் செய்கிறாரா?

"வந்து.. டாக்டர் இருக்காரா?"

"ஏன், என்னைப் பார்த்தா டாக்டராத் தெரியலையா?"

"ஸ்டெதாஸ்கோப்பைக் காணோமேன்னு பார்த்தேன்.."

"நான் மனோதத்துவ டாக்டர்யா! உடம்பு வியாதியைத் தீர்க்கிற டாக்டர்தான் ஸ்டெதாஸ்கோப்பு வெச்சிருப்பாரு. சரி.. உங்களுக்கு என்ன பிரச்னை?"

என் வியாதியை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. எப்படி அதை டாக்டரிடம் சொல்லுல்வது? சொல்லுவதா வேண்டாமா?

"இங்கே யாரும் இல்லையே டாக்டர்?"

"என்ன கேள்வி இது? நாம ரெண்டு பேரும் இங்கேதானே இருக்கோம்!"
"நம்மைத் தவிர வேற யாரும் இல்லையே?"

"ஊஹூம். நாம்பளும் வெளியே போயிட்டா இங்கே யாரும் இருக்க மாட்டாங்க."

நான் மடத்தனமாகக் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் மெனக்கெட்டு பதில் சொல்கிறாரே. இவரும் கிறுக்குதானா?

"என்கிட்டே சொல்லலாம்னா சொல்லுங்க.."

டாக்டரின் காதில் கிசுகிசுத்தேன். அவருக்குக் கோபமே வந்து விட்டது.

"என்னதான் ரகசியாம இருந்தாலும் குறைந்த பட்சம் என் காதுலேயாவது விழணும் இல்லையா? இவ்வளவு மெதுவாச் சொன்னா எப்படி?"

"இன்னும் நான் சொல்லவெ ஆரம்பிக்கல டாக்டர். உங்க காதுகிட்டே வாயை வெச்சுக்கிட்டு, சொல்லலாமா வேண்டாமான்னு யோசிட்டிருந்தேன்."

"நாசமாய்ப் போச்சு. கதவைச் சாத்திட்டு வரேன். இப்பவாவது சொல்லுங்க."

ஐயையோ! பட்டப்பகலில் கதவைச் சாத்துகிறாரே விபரீதமான ஆளா இருப்பாரோ?

'சீச்சி.. இருக்காது..'

ஒரு வழியாக டாக்டரிடம் என் வியாதியை விவரித்தவுடன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்.

“இதுக்கா இவ்வளவு அமர்க்களம் பண்ணினீங்க? இந்தச் சந்தேக வியாதி இப்ப நிறையப் பேருக்கு வர ஆரம்பிச்சிருக்கு.”

“நிறையப் பேருக்கு இந்த வியாதி இருக்கா? நம்பவே முடியலையே! வியாதி தீரலைன்னா கூடப் பரவாயில்லை. மத்தவங்களுக்கும் அந்த வியாதி இருக்குங்கறதே பெரிய ஆறுதலாயிருக்கு டாக்டர்!”

“அசல் எது போலி எதுனு தெரியாம குழம்பறீங்க. அதானே? கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தினா சுலபமாக கண்டு பிடிச்சிடலாம்”

திடீரென்று இப்படி ஒரு நிபந்தனையைப் போடுகிறாரே!

“அதைத் தவிர வேறு வழியே இல்லையா டாக்டர்?”

“இப்போ.. சினிமாவிலே நூறு அடி உயரத்திலே இருந்து ஹீரோ குதிக்கிற காட்சியைப் பார்க்கிறீங்க இல்லையா?”

“ஆமா”

“ஆனா உண்மையா ஹீரோ குதிக்கறதில்லே. உண்மையாகக் குதிக்கிறவன் டூப். குதிக்கிற மாதிரி ஆக்ட் பண்றவன்தான் ஹீரோ. அதே தத்துவம்தான் மத்த இடங்களிலேயும்..”

“எப்படி டாக்டர்?”

“புரியும்படி சொல்றேன். பஸ்லே போறீங்க. கண்டக்டர் அசலா போலியான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?”

“தயவு செஞ்சு சொல்லுங்க டாக்டர். காலையிலே கூட எனக்கு அந்தச் சந்தேகம் வந்தது.”

“மிச்ச சில்லறையைக் கொடுக்காதவர்தான் ஒரிஜினல். பாக்கி சில்லறையைத் திருப்பிக் கொடுத்தார்னா எதுக்கு நீங்க உஷாராவே இருங்க.”

“சரி சரி.”

“போகிற இடத்துக்கு குத்து மதிப்பா ரேட் சொன்னா அசல் ஆட்டோ டிரைவர். மீட்டர்படி குடு ஸார்னு கேட்டா ஜாக்கிரதையா இரு க்க. மீட்டருக்கு சூடு வெச்சிருந்தாலும் வெச்சிருப்பாரு.”

“மீட்டருக்கு மேலே பணம் கேட்டா சூடு வெக்கலைன்னு அர்த்தம்.”

“கரெக்ட் புரிஞ்சிக்கிட்டீங்களே.. ரோடு போட்டு ஒரே மாசத்திலே நாசமாப் போச்சுன்னா அவர்தான் ஒரிஜினல் காண்ட்ராக்டர்.  அவர்தான் எல்லோருக்கும் நாணயாம கமிஷன் கொடுத்திருப்பார்.”

“ஓஹோ!”

“கவர்மெண்ட் ஆபீஸ¤க்கு போறீங்க. நீங்க என்ன கேட்டாலும் அலட்சியமாப் பதில் சொல்றாரே அவர்தான் ஒரிஜினல் அரசு ஊழியர். அக்கறையா பொறுப்போட பதில் சொன்னா எச்சரிக்கையா இருங்க.”

“புரியுது டாக்டர்.”

“அவ்வளவு ஏன்? ஊழல் புகாருக்கு ஆளாகிறவர்தான் அசல் மந்திரி. மத்தவங்களையெல்லாம் முதல்வரே நம்ப மாட்டாரு.”

டாக்டர் எனக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருக்கும்போதே கதவை யாரோ தடதடவெனத் தட்டும் சப்தம் கேட்க, “ஐயோ” என்று அலறிக் கொண்டே பின்பக்க வழியாக வெளியே ஓடினார் டாக்டர். திடுக்கிட்டுத் திரும்பினேன். பரபரப்போடு கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.

“எங்கே அவன்? ஓடிட்டானா? என்னைக்கு இருந்தாலும் அவனைப் பிடிக்காம விட மாட்டேன்!” என்று கறுவியபடியே திரும்பிச் சென்று விட்டார்.

இவ்வளவு நேரம் போலி டாக்டரிடமா பேசிக் கொண்டிருதேன்? நான் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டதே. நல்ல காலம், ·பீஸ் கொடுப்பதற்குள் உண்மை தெரிந்து விட்டது.

சிறிது நேரத்தில் மீண்டும் உள்ளே வந்தார் டாக்டர். ‘போலீஸ்’ என்று கத்த நினைத்தபோது தடுத்துக் கூறினார்.

“பயந்துட்டீங்களா? இப்ப வந்துட்டுப் போனானே அவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இல்லை. நம்ம ஏரியா ரவுடி ரத்தினம்தான். போலீஸூக்குப் பயந்து இன்ஸ்பெக்டர் வேஷம் போட்டுக்கிட்டுத் திரியறான்.”

“போலீஸூக்குப் பயந்து இன்ஸ்பெக்டர் வேஷமா?”

“ஆமா இந்த ஏரியாவிலே இருக்கிற எல்லாக் கடைகளுக்கும் வந்து அப்பப்ப பணம் பிடிங்குவான். அவன் தொல்லை தாங்க முடியலை. அதான் வெளியே ஓடிட்டேன்.”

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே சந்தேக வியாதி. இன்ஸ்பெக்டர் வேஷத்தில் ரவுடி வந்தால்...?

சிரிது நேரத்தில் மீண்டும் வெளியே சப்தம். நானும் டாக்டரும் வெளியே பாய்ந்தோம். ஆபத்து என்னவென்று தெரியாவிட்டாலும் ஓடுவதற்கு தயாராகவே இருந்தேன்.

வாசலில் சற்று முன் மிரட்டி விட்டுப்போன போலீஸ் இன்ஸ்பெக்டரை ஒரு ரவுடி கிடுக்கிப்பிடி போட்டு அமுக்கி இருந்தான்.

“ஏண்டா, ரத்தினம், எத்தனை நாள் மாமூல்கூட  கொடுக்காம ஓடியிருக்கே நீ? உன்னைப் பிடிக்கிறதுக்காகத்தான் ஒரிஜினல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நான் ரவுடி வேஷம் போட்டுக்கிட்டேன். மரியாதையா கணக்குப் பாத்து செட்டில் பண்னு!” என்று இழுத்துக்கொண்டு போனான்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.
அசல் என்றும் போலி என்றும் இரண்டு வகை இல்லவே இல்லை. போலிகள் மட்டுமே அசல் என்றும் போலி என்றும் இரு வகையாகப் பிரிந்திருக்கிறார்கள். யார் ஒரிஜினல் யார்.. போலி என்ற குழப்பம் மட்டுமே இப்போது நீடிக்கிறது.

***

நன்றி : சத்யா, அல்லயன்ஸ், அப்புசாமி[டாட்]காம்