Saturday, March 21, 2020

காலடி மண் - போகன் சங்கர்



காலடி மண் - போகன் சங்கர்

 இன்று மாலை பால் பண்ணை அருகே பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது பைக் ,ரோட்டிலிருந்த பள்ளத்தில் வீழ்ந்து கீழே விழுந்துவிட்டேன்.பைக் என் மேல் வீழ மிக அருகில் மிக அருகில் ஒரு பேருந்தின் டயர் கிறீச்சிட்டு நின்றதைப் பார்த்தேன்.சிலர் தூக்கிவிட்டார்கள்.சில சிராய்ப்புகள் உண்டு.கையிலும் காலிலும்.ஹெல்மெட் அணிந்ததால் பிழைத்தேன் என்று நினைக்கிறேன். பிறகு வண்டியை மெதுவே ஓட்டிப்போய் கவுரி சங்கரில் டீ குடித்தேன்.இரண்டு நகைச்சுவைப் பதிவுகளை எழுதினேன்.குழந்தைகளுக்கு இரவுணவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்ததும்தான் சற்றே உதறல் ஏற்பட்டது.லேசாக காதில் ஒரு ரீங்காரம் கேட்டதுபோல் தோன்றி குறைந்துவிட்டது.ஒரு கணம் நான் இறக்கப் போகிறேன் என்று தோன்றியது.
இதில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது விபத்தின் சடுதித் தன்மையே.ஒரே ஒரு கணம் நான் ஒரு பேருந்தின் கீழ் கிடந்தேன்.ஒரே ஒரு கணம் முன்பு நான் மரணத்திலிருந்து மீட்கப்பட்டேன்.எனக்கு சமீபத்தில் பார்த்த அய்யப்பனும் கோஷியும் படத்திலிருந்து ஒரு பாடல் நினைவுக்கு வந்தது."அறியா அறியா நேரத்து காலின் கீழ் உருள் பொட்டும்"சட்டென்று நம் காலின் கீழ் மண் சரிந்துவிடும்.அதன்பிறகு எல்லாம் மாறிவிடும்.
How we die புத்தகத்தின் ஆசிரியர் மரண அனுபவங்களையும் மரணத்துக்கு அருகில் சென்று திரும்பியவர்கள் அனுபவங்களை யும் எழுதி இருக்கிறார்.மரணம் மிக அருகில் வந்ததும் பலர் ஒரு வியத்தகு அமைதிக்குப் போய்விடுகிறார்கள் என்கிறார்கள். தெய்வத்தின் அருகாமை என்று ஆன்மீகவாதிகள் சொல்லக்கூடும் இதை.டாக்டர் நியூலாண்ட் இதை மரணத்தின் அருகாமையை உணர்ந்த மூளை எண்டார்பின்களைச் சுரந்து வாழ்வில் கடைசி முறையாக நம்மைக் காப்பாற்ற முயல்கிறது என்கிறார்.
உதாரணமாக அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்.பொருட்காட்சி ஒன்றுக்குத் தன் மகள்களுடன் சென்ற பெண்மணி ராட்டினத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கையில் ஒரு மன நிலை தவறிய மனிதன் அவரது ஒரு.குழந்தையை சராமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவதை எதுவும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய துரதிர்ஷ்டவசத்துக்கு ஆளாகிறாள்.அந்த சம்பவம் பற்றி அவர் பின்னால் விவரித்தபோது "என்னை ஒரே ஒரு கேள்விதான் துன்புறுத்திக் கொண்டிருந்தது."என் மகள் இறக்கும்போது எவ்வளவு வேதனைப் பட்டாள்?ஆனால் நான் பிறகு அதை நன்கு நினைவுபடுத்திப் பார்த்தேன்.ஆரம்ப அதிர்ச்சிக்குப் பிறகு அவன் குத்திக்கொண்டே இருந்தபோதும் என் மகள் முகத்தில் வேதனையின் சுவடே தெரியவில்லை. ஒரு விவரிக்க முடியாத புன்னகை அவள் முகத்தில் படர்ந்தது.அவள் அந்த புன்சிரிப்போடுதான் இறந்துபோனாள்"
விபத்து நடந்து ஒரு அரைமணி நேரம் நான் காரணமே இன்றி புன்னகைத்துக்கொண்டே இருந்தேன்.எனது வழக்கமான பதற்றம் கூட இல்லை என்பதைக் கவனிததேன்.வழியில் பார்த்த ஒரு நண்பர் "சார் இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கீங்க!" என்றார்.
நான் "யெஸ்" என்றேன்.
*

நன்றி : போகன் சங்கர்