Sunday, January 17, 2016

'நம் நாயகம்' நூல் வெளியீட்டு விழா

சகோதரி ஜெஸிலா பானு எழுதிய 'நம் நாயகம்' நூலின் வெளியீட்டு விழா வரும் 23ஆம் தேதி சென்னையில் - 'கவிக்கோ' மன்றத்தில் - நடக்கிறது. விழா சிறக்க வாழ்த்துகிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை  குழந்தைகளுக்கு கதை சொல்வது போன்ற நடையில் அருமையாக எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒன்றை இங்கே பகிர்கிறேன் (கூகுள் ப்ளஸ்-ல் ஏற்கனவே இதை வாசித்தவர்கள் மீண்டும் இங்கே வாசித்தால் அவர்களின் மைனஸ் ஒன்று குறையும் என்று உறுதி கூறுகிறேன்!) 

*

எல்லோரும் சமம்
-------------------

ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களோட பயணத்தில் இருந்து திரும்புனாங்க.

எல்லாரும் ஓய்வெடுக்கலாம்னு ஒரு இடத்தில் தங்கினாங்க. எல்லாருக்கும் களைப்பாகவும் பசியாகவும் இருந்துச்சு. ஒரு ஆட்டை அறுத்து எல்லாரும் பசியாறலாம்னு முடிவு செஞ்சாங்க.

ஒரு தோழர் "என்னோட ஆட்டை அறுக்கலாம்னு"னு சொன்னாங்க. இன்னொரு தோழர் "அதனோட தோலை நான் உரிக்கறேன்"ன்னு சொன்னாங்க. மற்றொரு தோழர் "அதை சுவையா நான் சமைச்சு தர்றேன்"னு சொன்னாங்க. இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையைப் பிரிச்சிக்கிட்டாங்க. அப்ப நாயகம் (ஸல்) அவர்கள் "சமைக்கத் தேவையான  விறகை நான் சேகரிச்சிக்கிட்டு வர்றேன்"ன்னு சொன்னாங்க.

உடனே அங்கிருந்த தோழர்கள் எல்லாரும் "யா ரசூலுல்லாஹ்! தயவுசெஞ்சு நீங்க ஓய்வெடுங்க.. உங்களுக்காக இதெல்லாம் நாங்க செய்யுறது எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம்"ன்னு சொன்னாங்க.

அதுக்கு நாயகம் (ஸல்) அவர்கள் "அது உங்க எல்லாருக்குமே சந்தோஷம் தரும்னு எனக்குத் தெரியும். ஆனா.. அல்லாஹ்வுக்கு அது சந்தோஷத்தைத் தராதே.. அவன் கண் பார்வையிலே எல்லாரும் சமம்தானே? நான் 
மட்டும் சும்மா உட்கார்ந்துக்கிட்டு இருக்க, நீங்க எல்லாரும் எனக்குப் பணிவிடை செய்யறதை அல்லாஹ் ஒரு போதும் விரும்ப மாட்டான். என்னைத் தடுக்காதீங்க"ன்னு சொல்லிட்டு விறகு சேகரிக்கப் போயிட்டாங்க.

இதுல இருந்து என்ன தெரியுது? நாயகம் (ஸல்) அவர்கள் சின்ன விசயத்துக்கூட அல்லாஹ்வை அஞ்சி நடந்தது மட்டுமல்லாமல், எந்த விசயத்துலயும் தாம் ஒரு இறைத்தூதர்ங்குறதுக்காக எந்தச் சலுகையையும் பெறாமல், கடைசி வரை தாம் ஒரு எளிமையான இறையடியாராக வாழ்ந்திருக்காங்கன்னு புரியுது.
*

அழைப்பிதழ் :

நன்றி : ஜெஸிலா பானு
http://jazeela.blogspot.ae/

1 comment: