Friday, April 3, 2026

முந்நூறு குழந்தைகள் - சுகுமாரன் கவிதை

 


*
முந்நூறு குழந்தைகள் - சுகுமாரன்

அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
அவர்களுக்கு
முந்நூறு அம்மாக்களும் 
முந்நூறு அப்பாக்களும் இருந்தார்கள்
அதை விட அதிகம்
அண்ணன்மாரும் அக்காள்மாரும்
தம்பிமாரும் தங்கைமாரும் இருந்தார்கள்.
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும் 
முந்நூறு வீடுகள் இருந்தன
அதைவிட அதிகம் 
செல்லப் பிராணிகளும் 
செல்லப் பறவைகளும் 
செல்லத் தாவரங்களும் இருந்தன. 
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும்
முந்நூறு புன்னகைகளும் முந்நூறு அழுகைகளும்
முந்நூறு பசிகளும் முந்நூறு விடாய்களும் இருந்தன
அதை விட அதிகம் 
விளையாட்டுகளும்  பாடல்களும் இருந்தன.
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும்
ஒரே பள்ளிக்கூடமும் ஒரே பாடமும்
ஒரே பள்ளிவாசலும் ஒரே இறைவனும் இருந்தன.
அவர்கள் முந்நூறு பேர் இருந்தார்கள்
முந்நூறு பேருக்கும் 
முந்நூறு வண்ணமுள்ள
ஒரே ஊர் இருந்தது
பிசாசுகள்  தாண்டவமாடிய நாளுக்குப் பின்பு
அவர்கள் முந்நூறு பேருக்கும்
முந்நூறு குழிகளுள்ள  ஒரே இடுகாடு  இருக்கிறது.
*


No comments:

Post a Comment