Wednesday, July 23, 2025

நண்பர் தாஜ் - அழியா நினைவுகள்...


 

நாகூர்ரூமி, தாஜ், ஜஃபருல்லாவுடன்...(2006). ஃபோட்டோவைப் பார்த்ததுமே, ’ஹை, மூணு புத்திசாலிங்க’ என்றாள் அஸ்மா!

- என்றெழுதி பேஸ்புக்கில் சென்றவாரம் இந்தப் போட்டோவைப் பகிர்ந்திருந்தேன். அப்போது நண்பர்கள் எழுதியதை இங்கே பகிர்கிறேன்.

***

பி.கே. சிவகுமார் :

தாஜ் மரணம் ஓர் எதிர்பாராத, தொடர்ந்து இலக்கிய தளத்தில் ஏதோ ஒருவிதத்தில் எழுதியும் வாசித்தும் இயங்கி வந்த ஒருவரின் அதிர்ச்சிகரமான மரணம். அவருடைய ஒரு கதையை - அதன் நீளம் காரணமாக, அதனால் கதையில் தொய்வு விழுகிறது என நினைத்த காரணத்தால் என்னால் வார்த்தையில் வெளியிட இயலவில்லை. ஆனால் அதையெல்லாம் மீறி எப்போதும் என் மீது வாஞ்சையும் பிரியமும் கொண்டிருந்தார். சுந்தர ராமசாமியுடனான அவர் உரையாடலில் சு.ரா என் எழுத்துகள் குறித்து நான் ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொன்னார் என அவர் தான் திண்ணை இணைய இதழில் பதிவு செய்தார். அவருடன் மின்னஞ்சல், பேஸ்புக் தாண்டி, பெரிய தொடர்பில்லை. ஆனால் நல்ல புரிதல் இருந்தது இருவருக்கும்.

---------------------------------

’பதிவுகள்’ ஆசிரியர் வ.ந. கிரிதரன் :

நண்பர் தாஜ் மறக்க முடியாத ஆளுமை. 

22nd Jan 2019 Facebook

அஞ்சலி: எழுத்தாளர் சீர்காழி தாஜ்  மறைவு! இனிய நண்பரை, உடன் பிறவாச் சகோதரரை இழந்தேன்!

இன்று மாலை முகநூலுக்குள் நுழைந்த என்னை துயரகரமான, அதிர்ச்சியினையூட்டிய செய்தியொன்று எதிர்கொண்டது. எழுத்தாளரும், இனிய நண்பரும், உடன் பிறவாச் சகோதரருமான சீர்காழி தாஜ் அவர்களின் மறைவுச் செய்திதான் அது. எழுத்தாளர் அனார் தனது முகநூற் பதிவில் தாஜ் அவர்களின் மறைவுச்செய்தியினைப் பகிர்ந்துகொண்டிருந்தார். செய்தியினை உள்வாங்குவதற்கே சிறிது கஷ்ட்டமாகவிருந்தது. நேற்றும் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய முகநூற் குழுமத்தில் நான் பதிவிட்டிருந்த முகநூற் பதிவொன்றுக்குத் தன் கருத்துகளை 'அன்பு  கிரி' என்று ஆரம்பித்துப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சீர்காழி தாஜ் அவர்களா மறைந்து விட்டார். அவரது அங்கதம் தவழும் எழுத்து நடைக்கு நான் எப்பொழுதுமே அடிமை.

நண்பர் எழுத்தாளர் தாஜ் அவர்கள் மறைந்த செய்தி ஏற்படுத்திய துயரத்தை  அளவிட வார்த்தைகளேதுமில்லை.

சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது. நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுக்கு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

'பதிவுகள்' இதழில் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் நண்பர் தாஜிம் மறைவுச் செய்தி மிகுந்த அதிர்ச்சியினையே தந்தது. அச்செய்தினைக் கனவில் கூட எதிர்பார்த்திராத நிலையில் அச்செய்தி மிகுந்த அதிர்ச்சியினைத் தந்தது. கூடவே அளவிட முடியாத துயரையும் தந்தது. 

நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியின அண்மையில்தான் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி. 

சீர்காழி தாஜ் கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். http://tamilpukkal.blogspot.ca/

எழுத்தாளர் தாஜ் அவர்களின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் (முகநூல் நண்பர்களுட்பட) அனைவருக்கு எனது மற்றும் பதிவுகளின் ஆழ்ந்த இரங்கல்கள். கூடவே பதிவுகளில் , முகநூலில் வெளியான அவர் பற்றிய குறிப்புகளையும் மீண்டுமொருமுறை பகிர்ந்துகொள்கின்றேன்.


கட்டுரையை முழுமையாக வாசிக்க :

https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56/4918-2019-01-22-06-16-48

---------------------

Aug 2023 - Facebook

சீர்காழி தாஜின்  "தங்ஙள் அமீர்'! 

அமரர் சீர்காழி தாஜ் என்னைப்பொறுத்தவரையில் மறக்க முடியாத ஓர் இலக்கிய ஆளுமை.  அவர் இவ்வளவு விரைவாக எம்மை விட்டுப் போய் விடுவார் என்பதை நான் நினைத்தும் பார்த்ததில்லை. தொடர்ந்தும் எழுத்தில் பல உச்சங்களைத் தொடுவார் என்று நினைத்திருந்த வேளையில் அவர் மறைந்து விட்டார்.  2019இல் அவர் மறைந்த போது அவர் மறைவதற்கு முதல் நாளும் முகநூலில் எழுதிக்கொண்டிருந்தார்.  மறுநாள் அவர் மறைவுச் செய்தியை அறிந்தபோது நம்புவதற்கே முடியாமலிருந்தது. அவரை நான் ஒருபோதும் சந்திக்கவேயில்லை. அது இன்னும் துயரைத்தந்தது. 

மீண்டுமொரு தடவை சிந்தனைக்குருவி தன் சிறகுகளை அடிக்கின்றது.  நண்பர் தாஜை முதன் முதலில் அறிந்த காலகட்டம் நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான எனது 'அமெரிக்கா (தொகுப்பு) மற்றும், மறும் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல்களைத் தமிழக நூல் நிலையக் கிளையொன்றில் கண்டு, வாசித்துவிட்டுத் தன் கருத்துகளை ஆக்கபூர்வமான முறையில் நீண்ட இரு கடிதங்களாக எழுதி அனுப்பியிருந்தார். பின்னர் வைக்கம் முகம்மது பசீரின் 'எங்கள் தாத்தாவுகு ஆனையொன்றிருந்தது' நூலினைக் கனடாவில் வசிக்கும் தனது நண்பர் ஒருவர் மூலம் அனுப்பிருந்தார்.

கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள் (பதிவுகள் உட்பட) , தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனந்த விகடனின் பவளவிழாப்போட்டிகளில் இவரது கவிதைகள் முத்திரைக்கவிதைகளாக வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வந்தார்.

 நண்பர் தாஜின் சிறுகதைகள், குறுநாவல் ஆகியன உள்ளடங்கிய தொகுதியொன்றை  'தங்ஙள் அமீர்' என்னும் பெயரில் அவரது மறைவுக்குப் பின்னர் காலச்சுவடு பதிப்பகத்தினர் வெளியிட்டிருந்தனர். தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் தொகுதிகளிலொன்று அத்தொகுதி. 'தங்ஙள் அமீர்' குறுநாவல் 'பதிவுகள்' இணைய இதழில் (23.04.2014) வெளியான குறுநாவல் என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றேன். அக்குறுநாவல் பதிவுகள் இதழில் வெளியாகியபோது வெளியான எனது அறிமுகக் குறிப்பினையும் இங்கு பதிவு செய்கின்றேன். 

எழுத்தாளரின் தாஜ் எழுதிய தங்ஙள் அமீர் குறுநாவல் பற்றி 'பதிவுகள்' இணைய இதழில் நான் எழுதியிருந்த அறிமுகக் குறிப்பு:

"புலம் பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியம் என்றதும் உடனடியாக ஈழத்தமிழர்கள்தாம் நினைவுக்கு வருகின்றார்கள். உண்மையில் தமிழர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களென்றாலும் அவர்கள் புலம் பெயர்ந்த தம் அனுபவங்களை மையமாகக்கொண்டு படைக்கும் இலக்கியம் புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியம்தான். இவ்விதம் புலம் பெயர்தல் சொந்த நாட்டினுள்ளாகவுமிருக்கலாம். அந்நிய மண் நாடியதாகவுமிருக்கலாம். எழுத்தாளர் தாஜின் 'தங்ஙள் அமீர்' இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. இந்தக் குறுநாவல் இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டது. மத்திய கிழக்கு நாடொன்றில் உணவுபொருட்களை இறக்குமதி செய்து மொத்த வியாபாரம் செய்யும் இந்திய இஸ்லாமிய சமூக வர்த்தகர்களின் செயற்பாடுகளை அதன் நெளிவு சுழிவுகளை மற்றும் மந்திர தந்திரங்கள் போன்ற மூட நம்பிக்கைகளின் தொடரும் ஆதிக்கத்தினை விபரிப்பது ஆகியவையே அவை. 'தங்ஙள் அமீர்' என்று குறு நாவலுக்குத் தலைப்பு வைத்திருந்தாலும், வாசித்து முடித்ததும் மனதில் நிற்பவை ரியாத்தில் நடைபெறும் வர்த்தகச் செயற்பாடுகளும், அங்குள்ள வர்த்தகர் இன்னொருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வரும் தன் முதற் காதலியை மீண்டும் மணக்கத் துடிப்பதும், அதற்காக 'தங்ஙள் அமீரை'ப் பாவிப்பதும்தாம்.

இஸ்லாமிய சமுகத்தவர் மத்தியில் நிலவும் தலாக் கூறி விவாகரத்து செய்யும் செயற்பாட்டினை எவ்விதம் ஒருவர் தவறாகப் பாவிக்க முடியும் என்பதையும் அப்துல்லா அல்-ரவ் என்னும் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தும் குறுநாவலிது. உண்மையில் தங்ஙள் அமீர் நல்லதொரு பாத்திரப் படைப்பு. இக்குறுநாவலை இன்னும் விரிவாக்கி, தங்ஙள் அமீர் பாத்திரத்தை இன்னும் உயிரோட்டமுள்ளதாக்கி நல்லதொரு நாவலை இதே பெயரில் படைக்க தாஜுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனைப் பயன்படுத்துவாரானால் தமிழ் இலக்கிய உலகுக்குப் புலம் பெயர்ந்த தமிழ் இலக்கியத்தின் இன்னுமொரு முகத்தினைக் காட்டும் வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் குறுநாவலாக இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடொன்றின் தமிழர் வர்த்தக வாழ்வை, அங்கும் மக்களின் மூட நம்பிக்கைகளை ஆதாரமாகக்கொண்டு தொடரும் பணம் பெருக்கும் வர்த்தகச் செயற்பாடுகளை விபரிக்கும் 'தங்ஙள் அமீர்' வித்தியாசமான , முக்கியமான படைப்பு. நாஞ்சில் நாடனின் 'மிதவை' (உள்ளூர் புலம் பெயர்தலை விபரிக்கும்), காஞ்சனா தாமோதரனின் , ஜெயந்தி சங்கரின் , ப.சிங்காரத்தின் படைப்புகள் வரிசையில் தமிழக எழுத்தாளர் ஒருவரின் புலம் பெயர் அனுபவங்களின் பிரதிபலிப்பு சீர்காழி தாஜின் ''தங்ஙள் அமீர்'. இக்குறுநாவலினைப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள அனுப்பிய எழுத்தாளர் தாஜ் நன்றிக்குரியவர்."


குறுநாவலை வாசிக்க -  https://www.geotamil.com/index.php/2021-02-14-02-59-48/2075-2014-04-23-09-43-08

Wednesday, July 9, 2025

துபாய் முழுக்க ராஜுக்களும் லக்ஷ்மிகளும் - நஸீமா ரஸாக்

’மெட்ராஸ் பேப்பர்’ இதழில் வெளியான சகோதரி நஸீமாவின் இந்தக் கட்டுரையை நன்றியுடன் பகிர்ந்துகொள்கிறேன் - ஆபி
*
துபாய் முழுக்க ராஜுக்களும் லக்ஷ்மிகளும் - நஸீமா ரஸாக்

அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு, வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதம் முழுக்க என்று தேவைக்கு ஏற்றார் போல் அழைத்துக் கொள்ளலாம்.

இந்த நிறுவனங்களில் இந்தியா, நைஜீரியா, நேபாளம், பிலிபைன், பங்களாதேஷ் போன்ற பல நாடுகளிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பலர் வேலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட நிறுவனங்களிலிருந்து வேலைக்கு ஆள் எடுக்கும் போது குறைந்தபட்சம் ஆயிரம் திர்ஹாமாவது (இந்திய மதிப்பில் இருபத்தி இரண்டாயிரம் முதல் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வரை) செலவழிக்க வேண்டி வரும்.

இன்னும் சிலர், கிட்டத்தட்ட பத்தாயிரம் திர்ஹாமை (இரண்டு இலட்சம் ரூபாய்), செலவு செய்து சொந்த நாட்டிலிருந்து பணியாளைக் கொண்டு வருவார்கள். அப்படி வருபவர்கள் இரண்டு வருடங்களாவது அழைத்து வருபவர்களின் வீட்டோடு இருக்க வேண்டும். தெரிந்த ஊர் மக்களை அழைத்து வருவதால் நிம்மதியும் நம்பிக்கையும் இருக்கும். அப்படியும் சிலர் பிடிக்காமல் சென்றுவிடுவதும் உண்டு.

அரேபியர்கள் வீட்டுக் கதை வேறு. வீட்டோடு வேலை செய்ய, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள எப்போதும் இரண்டு மூன்று வேலை ஆள்கள் இருப்பார்கள். இது அவர்களின் வாழ்க்கை முறை. பத்துப் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களைப் பார்த்துக் கொள்ள, சமைக்க என்று தனிப் பணியாள்களுண்டு.

இன்னும் சிலருக்கு ஆயிரம் திர்ஹாம் கொடுத்து நிறுவனங்களிடமிருந்து பணியாளை வைத்துக் கொள்வது செலவை அதிகரிக்கும். ஊரிலிருந்து அழைத்து வருவது எல்லாம் எட்டாக் கனியாக இருக்கும். இருந்தாலும் அவ்வப்போது யாராவது வந்து உதவி செய்தால் தேவலை என்று இருக்குமல்லவா? அவர்களுக்காக ஆபத்பாந்தவனாக வருபவர்களும் உண்டு.
இவர்கள் எல்லா நாட்டிலிருந்தும் வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவிலிருந்து வருபவர்களில் மற்ற மாநிலங்களை விட ஆந்திராவிலிருந்தும் தெலுங்கானாவிலிருந்து வருபவர்கள் அதிகம். அவர்களின் உண்மையான பெயர் எதுவாக இருந்தாலும், ஆண்கள் ராஜு என்ற பெயரை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் லக்ஷ்மியை விடமாட்டார்கள்.

இவர்கள் பணியாள்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் உதவியோடு வருவதில்லை. அல்லது யாரும் இவர்களைப் பணம் கட்டி சொந்தச் செலவில் அழைத்து வருவதில்லை.

இங்கு விசா விற்க சில நிறுவனங்கள் உண்டு. இது சட்டவிரோதமான செயல். அவர்கள் ஒரு விசாவை இரண்டு இலட்சம் என்று விற்பார்கள். கடன் வாங்கி, அல்லது நிலத்தை விற்று முகவர் மூலம் பணம் கட்டி பல லட்சம் பேர் இங்கு வந்திறங்குகிறார்கள். இதில் வீட்டு வேலைக்கு என்று வருபவர்களும் உண்டு. இவர்கள் பலம், ஏற்கனவே சொந்தக்காரரோ, தெருக்காரரோ இங்கு இருப்பார். வந்திறங்கி விசா அடித்தவுடன், முதல் வேலையாக மிதிவண்டியை வாங்கிக் கொள்வார்கள்.

ஊர்க்காரனோடு அதே அறையில் தங்குவார்கள். ஐந்து பேருக்கே இடம் போதாத அந்த அறையில் அவரையும் சேர்த்துக் குறைந்தது பத்துப் பேர் இருப்பார்கள். ஒன்றாகச் சமைத்து, சுத்தம் செய்து பிழைப்பு நடக்கும்.

ஒரு வீட்டுக்கு வாரத்திற்கு ஐந்து அல்லது ஆறு நாள், ஒன்றரை மணி நேரம் வேலைக்குச் சென்றால் மாதம் ஐந்நூறு திர்ஹாம் கிடைக்கும். அதுவும் இரண்டு அறைகள் கொண்ட வீடு என்றால் இந்தக் கணக்கு. ஒரே ஓர் அறை என்றால் குறையும். மூன்று அறைகள்  என்றால் நூறு திர்ஹாம் அதிகமாகும்.

அதுவே வாரம் மூன்று முறை என்றால் முந்நூற்று ஐம்பது திர்ஹாம். வாரத்திற்கு ஒரு முறை என்றால் நூற்று ஐம்பது கிடைக்கும். அதிக வருடங்கள் இங்கிருந்து வேலை செய்துவிட்டு சொந்தநாட்டுக்கு விடுமுறைக்குச் செல்லும் போதுதான், சில ராஜுக்கள் புதிய ராஜுக்களை வரவழைப்பார்கள். திரும்பி வரும் வரை தான் வேலை செய்யும் வீடுகளில் வேலைக்குச் சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு இது நடக்கும்.

ஆறு மாதத்தில் அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலிருந்து பத்துக் கிலோமீட்டர் வட்டத்திற்குள் எப்படியும் ஐந்து வீடுகளில் வேலை கிடைத்துவிடும். அதாவது மாதம் குறைந்தபட்சம் இரண்டாயிரத்து ஐந்நூறு திர்ஹாம் வருமானம் கிடைத்துவிடும். வாடகை, சாப்பாட்டுச் செலவு, வைஃபை என்று எல்லாம் சென்றாலும் ஆயிரத்து ஐந்நூறு திர்ஹாம் முதல் ஆயிரத்து எழுநூறு திர்ஹாம் கையில் இருக்க வேண்டும். ஊரில் உள்ள குடும்பத்திற்கு இருபத்து ஐந்தாயிரம் ரூபாய் முதல் முப்பதாயிரத்திற்கு மேல் கூட அனுப்பும் வாய்ப்புண்டு.

பெண்கள் அரசுப் பேருந்துகளில் வேலைக்குச் செல்வார்கள். பக்கத்திலிருந்தால் மெட்ரோ. குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, சமைப்பது என்று அதற்காக மட்டும் கூட இவர்கள் செல்வதுண்டு.

ஆண் பணியாள்கள் பேருந்துகளில் செல்வதில்லை. மிதிவண்டியே துணை. உயிரை எடுக்கும் வெயில் என்றாலும், எலும்பை உருக்கம் குளிர் என்றாலும் அவர்களின் அன்றாடம், ஐந்து மணிக்கு ஆரம்பித்துவிடும். இது எல்லாம் அவர்கள் விசா வாங்கின நிறுவனம் சரியாக இருக்கும் பட்சத்தில் நடக்கும். அதாவது வந்து இறங்கி விசா அடித்த பின்னர் இரண்டு வருடங்களுக்கு அவர்கள் தொல்லை இருக்காது. மீண்டும் விசாவை நீட்டிக்கப் பணம் கட்டினால் போதும்.

இன்னும் சிலர் போலி நிறுவனங்களாலும், முகவர்களாலும் ஏமாற்றப்படுவார்கள். அவர்களுக்கு இருக்க இடமும், உணவும் இல்லாமல் அவதிப்படுவார்கள். ஒன்று சிறைக்குச் செல்லும் நிலை அல்லது தன்னார்வலர்கள் மூலம் நாடு வந்து சேர்வார்கள். அப்படியெல்லாம் நடக்காமல் வீட்டு வேலை கிடைத்து எல்லாம் நல்லபடியாகச் சென்றால், வருபவர்கள் சில மாதத்தில் கடனை அடைத்துவிடுவார்கள். மாமன் மச்சான் என்று மற்ற உறவுக்காரரையும் அழைத்துக் கொள்வார்கள். வரும் சவால்களைப் பங்கிட்டுக் கொண்டு வாழ்வாதாரத்துக்கு வழி தேடும் இவர்களுக்கு அவ்வப்போது எதிர்பாராத சோதனைகளும் வருவதுண்டு.

உதாரணத்திற்கு, சாலையில் எப்போதாவது மிதிவண்டியை ஓட்டும் போது அணிய வேண்டிய ரேடியம் நிறத்தில் இருக்கும் மேற்சட்டை அல்லது தலைக்கவசம் போடவில்லை என்றால், காவல்துறையினரின் வண்டி நிற்கும். ஒன்று அவர்கள் மிதிவண்டியை எடுத்துச் சென்று விடுவார்கள். விதிகளை மதிக்கும் வரை அமீரகம் நிம்மதியைத் தரும். விதிகளை விட்டு அகன்றால் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும். தெம்பும் தைரியமும் இருந்தால், “சார், இனி தலைக்கவசம் இல்லாமல் ஓட்டமாட்டேன், விதிகளை மதிப்பேன்” என்று சொல்லி மிதி வண்டியை மீட்டு வரலாம். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை.

காவலர்கள் சோதனை செய்யும் போது, விசா சரியாக இல்லை அல்லது விசா கொடுத்த நிறுவனம் சரியில்லை என்றால் சிறையில் போட்டு ஊருக்கு அனுப்பிவிடுவார்கள். மீண்டும் அவர்கள் எப்போதும் அமீரகம் வர இயலாது. இது எதுவும் நடக்கவில்லை, மிதி வண்டி மட்டும் போனால் ஒரு பாதகமும் இல்லை. இருநூறு திர்ஹாமுக்கு புது மிதிவண்டியை வாங்கிக் கொள்வார்கள்.

பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும் ராஜுக்களுக்கு பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று ஆசை. அப்படி ஒரு ராஜுவை அண்மையில் சந்திக்க நேர்ந்தது. மகன்கள் இருவரும் பள்ளி படிப்பை முடிக்கும் நிலையில் இருப்பது முன்பே எனக்குத் தெரியும். ஆனால் பத்தாவது படிக்கும் மகன் தன்னிடம் பேசி இரண்டு மாதங்களாகிறது என்று கஷ்டப்பட்டார். காரணம் அவனுக்குச் சீக்கிரம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை. பதினெட்டு வயது நிரம்பாத அவன் வயதைக் கூட்டி ஒரு கடவுச்சீட்டும் எடுத்து அவன் வரப் போகும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். இரு மகன் ராஜுக்களும் வந்த பிறகு பத்து வருடம் உழைத்த அப்பா ராஜுவுக்கு ஓய்வு கிடைக்கும் என்று வீட்டார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் போல ஒவ்வொரு ராஜுவுக்குப் பின்னாலும் சில விதி மீறல்களும் பல தியாகங்களும் நிச்சயமற்ற வாழ்க்கையும் உண்டு. சட்டத்தின் பார்வையில் சிக்காதவரை இவர்களுடைய பிழைப்பு ஓடும். சிக்கிவிட்டால் சின்னாபின்னம்.
*
நஸீமா ரஸாக் | writernaseema@gmail.com
*