Wednesday, December 25, 2019

என் வழியைச் சொல்கிறேன். - பா. ராகவன்

'இறவான்’ நாவல் எழுதியது பற்றி நண்பர் பா. ராகவன் ஃபேஸ்புக்கில் இன்று எழுதியது :
**
மற்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என் வழியைச் சொல்கிறேன்.

என்னிடம் ஏழெட்டு யோசனைகள் இருந்தன. எல்லாமே நாவலுக்கான யோசனைகள், திட்டங்கள். எங்கும் இனி வேலை பார்க்க வேண்டாம், அரசியல் எழுதி உருப்படாமல் போக வேண்டாம் என்று முடிவு செய்து வீட்டுக்கு வந்து உட்காரும் துணிவை அந்த ஏழெட்டு நாவலுக்கான யோசனைகளே அளித்தன. வருமானத்துக்குத் தொலைக்காட்சி, என் திருப்திக்கு நான் எழுதுவது என்று தெளிவாகப் பிரித்துக்கொண்டு பணி புரிய ஆரம்பித்தேன். விசித்திரம் என்னவெனில் என்னிடம் திட்டமாக இருந்த நாவல்களில் ஒன்றைத் தவிர (யதி) வேறெதையும் நான் இதுவரை எழுதவில்லை. யதிக்கு முந்தைய பூனைக்கதையோ, அதன்பின் ஆரம்பித்து இன்னும் எழுதிக்கொண்டிருக்கும் Fake Idயோ, இப்போது எழுதி முடித்திருக்கும் இறவானோ எப்படி எங்கிருந்து வந்தன என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. திட்டம் போட்டு வைத்ததையெல்லாம் எழுதுவேனா மாட்டேனா என்ற கவலையோ பதற்றமோ இல்லை. திட்டங்கள் கலைந்தும் மாறியும் போனால் வருந்துவதில்லை. இது நாவலா, இலக்கியமா, வெறும் மொக்கையா, யாருக்காக எழுதப்படுகிறது - இம்மாதிரியான சிந்தனைகளைத் தவிர்த்துவிடுகிறேன். எழுதுவதில் எனக்குள்ள ஒரே அக்கறை ஆரம்பித்ததை முடிப்பது மட்டுமே.

 நான் புத்தக விழாக்கள் நடத்துவதில்லை. மதிப்புரைகளுக்குப் பிரதி அனுப்புவதில்லை. இலக்கியக் கூட்டங்களுக்குப் போவதில்லை. என் காலத்தில் எழுதும் பெரும்பாலானவர்களை எனக்குத் தெரியும் என்றாலும் யாருக்கும் நான் நண்பன் இல்லை. என் உலகம் 10X12 சதுர அடிகளுக்குள் முடிந்துவிடக்கூடிய மிகச் சிறிய அறை. இந்த அறையில் நான் என் புத்தகங்களுடனும் மேக்புக் ஏருடனும் வசிக்கிறேன். ஒரு நாளின் எண்பது சதவீத நேரத்தை இங்கேதான் கழிக்கிறேன். படிப்பது அல்லது எழுதுவது. முன்பெல்லாம் படங்கள் பார்ப்பேன். பாட்டுக் கேட்பேன். இப்போது அது இல்லை. ஏசி ஓடும் சத்தம்கூட இடைஞ்சலாக இருக்கிறது. அணைத்துவிட்டு, வியர்வைக் கசகசப்புடன்கூட வேலை செய்கிறேன். தொடர்ந்து அப்படி எழுதிக்கொண்டே இருக்கும்போதுதான் என்னைப் பற்றி எனக்குச் சில நேர்மையான விமரிசனக் கருத்துகள் கிடைக்கின்றன.

இறவான் எழுதிக்கொண்டிருந்த நாள்களில் (தினமும் இரவு 11 மணிக்கு ஆரம்பித்து 2 மணிவரை எழுதுவேன்.) ஒரு வினோதமான அனுபவம் ஏற்பட்டது. இந்நாவலில் கதாநாயகனான இசைக் கலைஞனைத் தவிர மற்ற அத்தனை பேருமே 'மற்றும் பலர்'தான். வருவார்கள், போவார்கள், இருக்க மாட்டார்கள். கதாநாயகன் இருப்பான், இருப்பான், இருந்துகொண்டே இருப்பான். எழுந்து அடுத்த அறைக்குக் கூடப் போகாமல் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல எல்லா பக்கங்களிலும் இருப்பான். ஏனென்றால், அவன் எப்போது எழுந்து போக நினைத்தாலும் ஏதாவது பெரிய பிரச்னை வந்துவிடும்.

ஒரே ஆளைப் பற்றிய கதை. அவனோ எழுந்துகொள்ள எட்டணா கேட்பவன். ஆனாலும் கதை பேய் ஓட்டம் ஓடுகிறதோ என்று எழுதும்போதே எனக்கொரு சந்தேகம் வந்தது. நாவலுக்கான Pace என்று ஒன்று உண்டு. அது அருவமானது. directly proportional to the subject matter. அது சரியாகக் கூடினால்தான் வாசிக்க நன்றாக இருக்கும். இந்நாவலில் அந்த வேகம் சிறிது அதிகரித்திருந்தது போலத் தோன்றியது. மாற்றி எழுத வேண்டுமா என்று நினைத்தபோதே இன்னொன்றும் தோன்றியது. இந்தக் கதைக்கு சம்பவங்கள் வேண்டாத சுமை. வேறு வழியின்றி உள்ளே வரும் சம்பவங்களைக் கதாநாயகன் விரைவில் சோலி முடித்து வெளியே துரத்திவிடுகிறான். எனவே மற்ற கதாபாத்திரங்களைப் போலவே இந்நாவலில் வரும் சம்பவங்களும் 'மற்றும் பலர்' பட்டியலுக்கு உட்பட்டதுதான். எனவே அந்த வேகம் தவிர்க்க முடியாதது.

எத்தனை எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடிகிறது! நாவலை வாசித்த நானறிந்த ஒரே மற்றும் உருப்படியான விமரிசகர் ஹரன் பிரசன்னா இதைக் குறிப்பிட்டார். 'இவ்வளவு வேகம் இருந்திருக்கக்கூடாது.' நான் என்ன செய்ய? அது தன் லட்சணத்தை அப்படித்தான் அமைத்துக்கொண்டது.

இந்நாவல் எழுதும்போது எனக்குச் சவாலாக இருந்த ஒன்று, ஒரு எக்சண்ட்ரிக் இசைக் கலைஞன் பேசுவது என்னவானாலும் அந்தக் கணத்தில் அவன் மனத்துக்குள் என்னவெல்லாம் நினைப்பான் என்று படிப்பது. மனத்துக்குள் ஓடுவதையும் வாய் திறந்து சொல்வதையும் அடுத்தடுத்துக் காட்சிப் படுத்த நினைத்தேன். சீரியல்களில்தான் எவ்வளவு வசதி! மை.வா. என்று ஒரு குறிப்புப் போட்டு அனுப்பிவிட்டால் போதும். வில்லிகள் மனத்துக்குள் மைக் வைத்துப் பேசி முடித்துவிடுவார்கள். நாவலில் அது எப்படி வரும்?

மாய யதார்த்த எழுத்து முறை இதற்கு உதவவில்லை. மயக்கநிலை எழுத்தாக ஒன்றை முயற்சி செய்து பார்த்தேன். கனவு நிலை அல்ல. அது வண்ணமயமானது. மயக்க நிலை என்பது சரக்கு ஊற்றிக் கொடுத்து உளற வைத்துப் பெறுவது. இந்நாவலின் ஒரு பெரும் பகுதிக்கு இந்த முறை எழுத்து மிகவும் உதவி செய்தது. அந்தப் பகுதிகள் மிகவும் பழுப்பாக இருக்கின்றன என்று பிரசன்னா சொன்னார். அரை நினைவு நிலை சரியாக வந்துவிட்டது என்று தோன்றியது. தெளிவின் பேரெழிலுக்குச் சற்றும் சளைக்காதது மயக்க உளறல்களின் மாயாஜாலம்.

நாம் எல்லோரும் அறிந்த, ஆனால் பெரும்பாலானோர் மறந்துவிட்ட ஒரு சரித்திரத் தருணத்தில் இருந்துதான் இந்நாவலுக்கான கருவைப் பெற்றேன். எழுதத் தொடங்கியபோது என் மனத்தில் என்ன வடிவம் இருந்தது என்பது இப்போது நினைவில்லை. முடித்த பிறகு ஆபிரஹாம் ஹராரி காட்டுவது சந்தேகமின்றி விஸ்வரூப தரிசனம்தான் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு நாவலிலும் முதல் பாகத்தை எழுதிவிட்டு ஆசிரியன் விடைபெற்றுப் போய்விடுகிறான். வாசகர்களே அதன் இரண்டாம் பாகத்தைத் தீர்மானிக்கிறார்கள். ஒரு மாறுதலுக்கு இந்த நாவலில் ஒரு பக்கத்தில் முதல் பாகமும் மீதிப் பக்கங்களில் இரண்டாம் பாகமும் நானே எழுதவேண்டியதாகிவிட்டது. எனவே வாசகர் பங்கென்பது மூன்றாம் பாகம்.

இதனை எழுதிக்கொண்டிருந்த நாள்களில் தினமும் நான் எழுதி முடிக்கும்வரை விழித்திருந்து படித்துப் பார்த்துக் கருத்து சொன்ன நண்பர் சரவண கார்த்திகேயனுக்கு மிக்க நன்றி. 'நாவல் படிக்கும் மூட் இப்போது இல்லை' என்று என்னிடம் சொல்லிவிட்டு ரகசியமாகப் படித்து முடித்துவிட்டு விரிவாகப் பேசிய பிரசன்னாவுக்கு அதைவிட நன்றி. பிரசன்னா என் மனச்சாட்சியைப் போன்றவர். நான் என்றுமே மனச்சாட்சி சொல்வதைக் கேட்பவனல்லன். ஆனாலும் அது சொல்வது எனக்கு முக்கியம். எதை எழுதினாலும் என் மனைவிக்கு முதலில் படிக்கக் கொடுப்பேன். இதையும் அப்படியே செய்தேன். படித்து முடித்ததும் அவர் சொன்னதுதான் அந்தப் பிரசித்தி பெற்ற உத்தரவு: 'ஆபிரஹாம் ஹராரி மாதிரியெல்லாம் உன்னால இருக்க முடியாது. போய் இட்லி அரிசி ஒரு கிலோ வாங்கிட்டு வா.'

இன்று அச்சுக்குப் போவதற்கு முந்தைய வடிவை மீண்டும் ஒருமுறை படித்து மீண்டும் சில திருத்தங்கள் செய்தேன். கணப் பொழுது மிகுந்த திருப்தி ஏற்பட்டது. என்ன நினைத்தேனோ அதைச் செய்துவிட்டேன். என்ன எதிர்பார்த்தேனோ, அது வந்துவிட்டது. எண்ணிப் பார்த்தால், அந்தக் கணப் பொழுது திருப்திக்காகத்தான் இத்தனைப் பாடுகளும்.

 இறவான், ஜனவரி சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகும். சந்திப்போம்.
*
 நன்றி : பா. ராகவன்

No comments:

Post a Comment