Saturday, January 24, 2015

குகைச் சித்திரங்கள் - தாஜ் கவிதை


குகைச் சித்திரங்களைக் காண
காலங்களில் நின்று கொண்டிருக்கும்
பாறை அடுக்கில் இறங்கி
மெல்லிய ஒளிக்கீற்றில் புலப்படும்
ஆதி ஸ்தலம் எட்ட
தடையில்லா தெளிவு வேண்டும்

மனப் போக்கில் ஆங்காங்கே
என்றைக்கோ கீறப்பட்ட கோடுகளின்
மங்கலான சித்திரங்களை
துடைத்து தடவி மழுங்கலைப் பார்க்கவும்
இருண்ட கால கேளிக்கைகளின்
மூர்க்கத்தை உணர முடியும்

வண்ணப்பூக்கள் சிந்தை மயக்கும்
நந்தவனத்தில் மகரந்தம் தேடி
வட்டமிடும் பூச்சி தொடங்கி
சிறகு முளைக்க உயரப் பறக்கும் பட்சி
அலைமோதும் மோப்ப நாயின் அலைச்சல்
வேட்டை மிருகத்தின் பாய்ச்சல்
துள்ளியோடும் புள்ளிமானின் வேகம்
அந்தரத்தில் வட்டமிடும் கழுகு
மலர்கள் சூடிய விழிகளது கிறக்கம்
காலடியில் கிடக்கும் விவேகமென
ஆங்காங்கே திட்டு திட்டாகக் காணும்
கோடுகளின் நிழலான நிகழ்வுகள்
மனதை பேதலிக்க வைக்கின்றன
கருத்த நாகரீகத்தின் நேற்றைய காட்சிகளாக!

**
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/Lascaux
நன்றி : தாஜ்

No comments:

Post a Comment