Wednesday, September 14, 2022

மாறுசாதி (சிறுகதை) – திக்குவல்லை கமால்

மல்லிகை’ இதழில், 1972ஆம் ஆண்டு வெளியான சிறுகதை இது. திக்குவல்லை கமால் அவர்களின் ‘விடை பிழைத்த கணக்கு’ தொகுப்பிலும் உண்டு. நன்றியுடன் பகிர்கிறேன். - AB

**


மாறுசாதி – திக்குவல்லை கமால்

முன்வாசலில் எரிந்து கொண்டிருந்த குப்பி லாம்பின் வெளிச்சம் கதவுக்கிடையில் புகுந்து, அடுத்த அறை எதிர்ச் சிவரில் கோடு வரைந்தாற் போல் படிந்திருந்தது, தரையில் ஒரு பக்கமாகப் பதித்திருந்த கண்ணாடிக்குள்ளால் ஓரிரண்டு நட்சந்திரங்களும் மின்னிக்கொண்டிருந்தன.

இவை இரண்டையும் மாறிமாறிப் பார்த்தவண்ணம் பாயில் புரண்டு கொண்டிருந்தாள் ஹிதாயா. 

ஏழெட்டு வருடங்களாக நாளாந்தம் இதே நேரத்தில் விரிந்து பழகிப்போன அவளது கண் இமைகள் இன்றும் விரிந்து கொண்டதில் தவறில்லைதான். -

இந்த ஒரு மாதத்தையும் மாத்திரம் தவிர்த்து, அதற்கு முன்பெல்லாம் அவள் இந்த நேரத்தில் நிச்சயமாகக் குசினிக்குள் குந்தி அடுப்பெரித்துக்கொண்டு அல்லது கோப்பி கலக்கிக் கொண்டுதானிருப்பாள். 

அதிகாலையிலேயே பொட்டணியைச் சுமந்தபடி வெளிக்கிடும் ஜெஸில் நானாவிற்கு, அந்தக் கோப்பிக் கோப்பையில் எத்தனையோ நம்பிக்கைகளும் மன நிறைவுகளும் தான்.

ஆனால் இந்த ஒருமாத காலமாக...எல்லாம் அடிதலை மாறிப்போயிருக்கிறதே.

அவள் இன்னும் கண்களைத் திறந்தபடி புரண்டுகொண்டிருந்தாள். வெளியே காகங்கள் கத்திப் பறக்கத் துவங்கியதைத் தொடர்ந்து, விடிந்துவிடுமுன் தண்ணீர் எடுத்து வரக் கிளம்பும் கன்னியர்களின் கலகலப்பு அவளை ஒன்றும் செய்து விடவில்லை .

மாறாக முன்வாசலிலிருந்தெழும்பும் அந்த நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் ஒலி.......

" கஹ்.....கஹ்...... கஹ்க ஹ்''

தலையைக் கிளப்பி ஓய்ந்து விடுகிறதா என்ற எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள், அங்கே, அது தொடர்க் கதையாக நீண்டுகொண்டிருந்தது.

சடக் கென்றெழுந்து, நிலத்தில் உராய்ந்து இழுபட்டு வரும் பிடவையைக் கூட கவனிக்காமல் முன்வாசலுக்குப் போய் கணவனின் நெஞ்சை மேலிருந்துகீழாக இடைவிடாது தடவியபோதுதான் ஒருவாறு இருமல் ஓய்ந்தது.

அதே கைப்பட மேசையிலிருந்த 'சுடுதண்ணீர்ப் போத்தலிலிருந்து வெந்நீரில் கொஞ்சம் வாத்தெடுத்து நன்றாக பிடித்துகொண்டு தருவதற்கத்தாட்சியாக வெளிச்சம் பலபுறமும் பரவிக் கொண்டிருந்தது.

கதவைத் திறந்றகொண்டு வெளிக்கிட்டவள் பின்பக்கமாகக் கட்டிவைத்திருந்த இரண்டு ஆடுகளையும் அவிழ்ந்து விட்டுக் காலைக் காரியங்களில் ஈடுபடலானாள்.

அதிகாலை வேளையில் பனிக் குளிரில் கணவனை அதுவும் நேயாளியாக இருக்கும் நிலையில் வெளிக்கனுப்ப விரும்பாத அவள், அதற்கேற்ற முன்னேற்பாடுகளைச் செய்து தான் வைத்திருந்தாள். 

அப்போது நேரம் ஏழு மணியைத் தாண்டியிருக்குமென்பதை குர்ஆன் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் மூலம் தெரிந்துகொண்டதும் சீக்கிரம் போய் மருந்துக் குழிகைகளை எடுத்து அவருக்கு விழுங்கச் செய்துவிட்டு முற்றத்தைப் பெருக்கத் துவங்கினாள் .

உடற்கட்டுக் கலைந்து நோயாளியாகக் கிடக்கும் ஜெஸில் நானாவை , ’பொட்டணி ஜெஸில்' என்று சொன்னால்தான் எவருக்கும் ஒரேயடியாகப் புரிந்துகொள்வார்கள்.

வசதியாக வாழும் பலர் அவர்களுக்குச் சொந்தக்காரராக இருந்த போதிலும் அவர்களுக்குப் பல்லைக் காட்டித் தலை சொறியும் பழக்கம், வாழ்க்கை வசதியற்று இப்படி நோயாளியாக அவதிப்படும் நேரத்திலும் கூட அவரிடத்திலில்லை.

அவர் கல்யாணம் செய்துகொண்ட புதிதிலெல்லாம் உதவிக்கு இன்னொருவரையும் இருத்திக்கொண்டு பக்கத்து ஊர்களில் நடக்கும் சந்தைகளுக்குப் போய்ப் பிடவை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். நாட்பட நாட்பட இயற்கையான வாழ்க்கைச் சோதனைகளால் தாழ்த்தப்பட்டு, உள்ளூர்ப் பொட்டணி வியாபாரியாக மாறிவிட்டார்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் பொட்டணியைத் தலையிற் சுமந்து முழக்கோலைக் கையிலெடுத்தாரென்றால் இனி ஐந்தாறு மைல்கள் காற்தோல் தேய ”நடடாராஜா'' தான், பின்பு - மாலையில் விளக்கேற்றும் வேளையில் தான் சாப்பாட்டுச்சாமான்...காய்கறிகள் சகிதம் வீடு வந்து சேருவார்.

வாராவாரம் எப்படியோ கடைகளில் பிடலைத் தினுசுகள் வாங்கிச் சேகரித்துக் கொள்வார். அவளும் அப்பகுதி பெண்களின் ஓய்வு நேரக் கைப்பின்னலான 'ரேந்தை'களை வாங்கியும், சட்டைப் பிடவைகளுக்கு பூவேலைகள் செய்து கொடுத்தும் கணவனுக்கு ஒத்துழைப்பாள். 

''முதலாளி இன்ன வத:''

இக்குரலைக் கேட்டதும் சரிந்து தோளில் விழுந்திருந்த பிடவையை இழுத்துத் தலையிற் போட்டபடி கழுத்தை உயர்த்திப் பார்த்தாள். அங்கே வெற்றிலைக் காவியேறிய பற்களால் சிரித்தபடி ஒரு சிங்களவர் நின்றுகொண்டிருந்தார்.

“ஒவ் எதுவட என்ன” என்றவாறு துடைப்பக் கட்டையை மூலையில் வைத்துவிட்டு, உள்ளே போய் இரண்டாம் அறைக்கதவு இடையால் பார்த்தபோது அவர் உள்ளே வந்தமர்ந்து கணவனிடம் சுகம்விசாரிப்பதை அவதானித்தாள்.

அப்போது அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு வசதியாகப் போய் விட்டது. உடன் தேநீர் தயாரித்தவள் ஒரு கணம் தயங்கிய போது.. வந்திருப்பவருக்கு அதனைக் கொண்டுபோய்க் கொடுக்க வேறு யாரும் இல்லையே என்பதால் அவளாகவே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள்.

“உம்மா, ஆப்பா...உம்மா ஆப்பா'' விழித்தெழுந்து விட்டு மகள் ஓடிவந்து அவளின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சிறுநீர் கழிக்கவோ முகம் கழுவவோ போகாத நிலையில் அடம் பிடித்த போது அவளுக்குப் பலத்த கோபம் வந்து முட்டியது. பாவம்; சிறு பிள்ளைகளுக்கே உரித்தான இயல்புதானே.

அன்று ஞாயிற்றுக்கிழமை; நேற்றைய நாளும் எப்படியோ கழிந்து போய்விட்டது. இன்றாவது அவளைக் கட்டிக்கொண்டுபோய் நீராடாவிட்டால் பின்பு பாடசாலை நாட்களில் அதை நினைத்துப் பார்க்கவே இயலாதல்லவா? அதே நேரத்தில் வீட்டில் சேர்ந்திருத்த அழுக்குத் துணிகளும் கூடி அவளை மேலும் உசார் படுத்தியது.

அடுத்த கணம் “ வா மகன் குளிக்கப் போக...' 'சிறுவ னையும் அழைத்தபடி துணிமணிகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தயாரானாள்.

''எனக்கேலும்மா... பௌத்த நோவு''

எங்கிருத்துதான் அவனுக்கிந்த நோய் திடீரென்று வந்ததோ. குளிக்காமலிருக்க அவன் போடும் போலிக் காரணம்தான் அது என்பது அவளுக்குந் தெரியாதா என்ன ?

“குளிக்க வந்தாத்தான் ஆப்ப தார''

இந்த மந்திரத்தை அவள் சந்தர்ப்பம் பார்த்து உச்சரித்ததுதான் தாமதம்; தன்னிச்சையாக அவள் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

"அம்ஜத்து... அம்ஜத்து... வாளியக் கொஞ்சம் எடுக்கவா'' அடுத்த வீட்டை அண்மிக் குரல் கொடுத்தாள் ஹிதாயா.

"ஆ... நானும் குளிக்கப் போகணும். சொணக்காமக் கொணுவாங்கொ'' உள்ளேயிருந்து நிபந்தனையுடன் அனுமதி வந்தது.

இரவல் வாளியையும் சுமந்து கொண்டு நடக்கத் துவங்கினாள். பாவம், ஒரு பொண்ணாக இருந்த போதிலும், அவளுக்குத்தான் எத்தனைப் பொறுப்புகளும் வேலைகளும்.. விடிவுகாண முடியாத சிந்தனைகளும்...

இன்னும் மூன்றே மூன்று நாட்கள் தான் இருக்கின்றன. டாக்டரின் உத்தரவுப்படி ஜெஸில் நானாவை 'வீரலில கயரோக ஆஸ்பத்திரியில் கூட்டிக்கொண்டுபோய் சேர்க்க வேண்டும். குறைந்த கணக்கில் அதற்கு இருபத்தைத்து ரூபாவாவது கையிலிருக்கவேண்டும், 

இந்த ஒரே மாதத்திற்குள் கையில் மடியில் இருந்ததெல்லாம் விற்றுச் சுட்டு முடித்தாகிவிட்டது. யாரியமும் கேட்டுப் பெற்றுப் பழக்கப்படாத அவள் வேறெதுவுமே செய்ய முடியாத நிலையில் கடனுக்காவது கேட்டு வைப்போமென்று தான் நேற்று கண்ணாடி முதலாளியின் பெண்சாதியை நாடினாள்.

''உம்மா பகலக்கி மீன் வாங்கேம் சல்லில்ல'' என்பதுதான் அவனது பதில்.

வெட்கித்து வெட்கித்துக் கேட்டால் நிச்சயம் கிடைக்கு மென்ற நம்பிக்கையில் வாய் திறந்த முதல் முயற்சியே இப்படிப் படுதோல்வியை அரவணைத்தபோது அதற்குப் பிறகு இன்னுமொருவரிடம் போய் வாய் திறக்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை .

''எனக்கேல உ.ம்மா... பெனத்த நோவுது' ' கிணற்ற டியை அடைந்ததும் மீண்டும் சிறுவனின் போலிச்சாட்டு.

நிறைந்திருந்த பெண்களுக்கிடையே அவளும் நுழைந்து அவசர அவசரமாக துணிகளைத் துவைப்பதிலும் குளிப்பதிளும் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள்.

நான்கு புறமும் மதில்கள் எழுப்பிப் பெண்களுக்கென்றே விஷேசமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுதான் அந்தப் பள்ளிக் கிணறு. இடை விடாது பெண்கள் கூடிக்கொண்டிருக்கும் அங்கு , வழமை போல அன்றும் உள்ளூர்ச் சம்பவங்களின் விமர்சனங்கள் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்குக் காது கொடுக்கும் நிலையில் அவளில்லை.

அவளுக்குத்தான் எத்தனையெத்தனை பிரச்சினைகள் முக்கால் மணி நேரத்துக்குள் துணிகளைத் துவைத்து மகனைக் குளிப்பாட்டி, தானும் குளித்துப் புறப்படத் தயாரானபோதுதான் அந்த வேண்டுகோள்.

“வாளியக் கொஞ்சம் தா-... நான் குளிச்சிட்டு அனுப்பியன்''

எதிரே, காதிலும் கழுத்திலும் தங்க நகைகள் பள பளக்க மார்பு ரவிக்கையைக் கழற்றியபடி நின்று கொண்டி ருந்தாள் கண்ணாடியின் முதலாளியின் மனைவி. 

அவள் சிறிது யோசித்தாள். இரவல் கொடுத்தவள் உடனே கொண்டுவந்து தரும்படி சொல்லியிருக்கிறாளே,

''புரியமில்லாட்டி எடுத்துக்கொணு போடி ஒன்ட அருமச் சாமன''

“இல்ல இது ஏன்டயல்ல; அடுத்தூட்டு வாளி.'' அவள் காரணம் காட்ட முனைந்தாள்.

*போதும் போதும் சாட்டு. நீ இப்ப பெரிய மனிசி தானே, '' அப்பெண் அனாவசியமாக வார்த்தைகளைப் பொழிந்ததை அவளால் பொறுக்க முடியவில்லை.

”நாங்க பெருக்கேயில்ல...சிறுக்கேமில்லே...எப்போதும் ஒரு மாதிரித் தான்''

"வாயப் பொத்து நாணயக்காரி... நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு, மறு சாதிய ஊட்டுள்ளுக்குப் போட்டுக் கொண்டு கூத்தாடியவள்...... ஓண்ட ரசம் பட்டுத்தானே ஒத்தனொத்தனா வாரானியள் ......',

அங்கு கிளர்ந்து வெடித்த சிரிப்பொலி அவளை இன்னும் அதிரச் செய்துவிட்டது. குனிந்தவர்களும், நிமிர்ந்தவர்களும் தண்ணீர் அள்ளுபவர்களும் முதுகு தேய்ப்பவர்களும்...அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரிக்கத் தொடங்கி யதைப் பார்த்ததும், அவர்களெல்லோரும் ''கண்ணாடி முதலாளி' யின் மனைவியின் குரலை ஆமோதிப்பது போலிருந்தது.

அவள் வேறு எதுவும் பேச முடியாதவளாக...பேசியும் பயனில்லையே என்பதால் மகனையும் கையில் பிடித்துக் கொண்டு அமைதியாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

''மாறுசாதி ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு''

இந்தச் சொற்றொடர் மீண்டும் மீண்டும் அவள் செவியில் எதிரொலித்து அவளது உள்ளத்தைத் துகள் துகளாக்கிக் கொண்டிருந்தது.

இருக்கின்ற துயரங்களும் வேதனைகளும் போதாக் குறைக்கு இப்படியும் ஓர் அவமானமா?

இந்த ஏழு வருட காலமாக ஜெஸீல் நாளா அன்றை யன்றைக்குப் பணம்தான் சம்பாதித்து வந்தார் என்றுதான் அவள் நம்பியிருந்தாள் , ஆனால் அவர் பணத்தை மாத்திரமல்ல பல மனித உள்ளங்களைக்கூடச் சம்பாதித்துள்ளார் என்பதை. அவர் நோயாளியாக மாறிய இந்த ஒரே மாதத்துக்குள் அவள் நன்குணர்ந்து கொண்டாள். - ஒவ்வொரு நாளும் அவர் பழகிய பகுதிகளான ஊராமம், ரதம்பல, பிடதெலி முதலிய பகுதிகளிலிருந்து வந்து போய்க்கொண்டிருக்கும் சிங்களச் சகோதர சகோதரிகளே அதற்குச் சான்று.

சொந்தக்காரர்களென்றும் ஊரவர் என்றும் இருப்பவர் களெல்லாம் புறக்கணித்து வைத்திருக்கும் இந்நிலையில், பழக்கப் பிணைப்பால் வந்து போய்க் கொண்டிருப்பவர்களைக் கூட விட்டுவைக்காது கெட்ட கதைகளைத் தொடுக்கும் இவர்களின் விகாரத் தனத்தை யாரிடம் சொல்வது?

”உம்மா ...ஆப்ப..... உம்மா ஆப்ப'

வீட்டை அடைவதற்கும் சிறுவன் மீண்டும் கோரிக்கை விடுவதற்கும் சரியாக இருந்தது. 

முதன் முதலில் அவனுக்குக் காலைச் சாப்பாடு ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு , கணவனைப் பார்க்கமுன்னே ஓடிச் சென்றாள் ஹிதாயா.

அப்பொழுது தான் இருமி ஓய்ந்தாரோ என்னவோ? நெஞ்சை தடவியபடி சுருண்டு கொண்டிருந்தான் அவள் கணவன். அவரைக் கண்டதும் கிணற்றடியில் நடைபெற்ற சம்பவம் அவள் நினைவில் கீறல் போட்டது. 

’நசக்கார மனிசனக் கட்டில்ல வெச்சிட்டு... மாறுசாதிய ஊட்டுக்குள்ள போட்டுக்கொண்டு.......' 

ஹிதாயா பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டாள். சடுதியாக அவள் பார்வை கீழ்நோக்கிப் பதிந்தது. தோடம் பழங்கள் கீரைகறிகள் நிறைந்த கூடையொன்று அவள் கண்ணிற் பட்டது. அது காலையில் வந்தவர் கொண்டு வந்ததாகத்தானிருக்க வேண்டும். அவர் மாத்திரமா? ஒவ்வொரு நாளும் வரும் அத்தனை பேரும் இப்படித்தான்.

”ஹிதாயா....... எனத்தியன் பாக்கிய. அது வெள்ளன வந்த மாட்டின் மஹத்தயா கொணுவந்தது. அவரு என்னோட உசிரு மாதிரி. நான் போனா ஒரு மொழம் நேரந்தயாவது எடுக்காம அனுப்பியல்ல. நல்ல வரும்படிக்காரன். நான் வாணாண்டு செல்லச்செல்ல இதேம் தத்திட்டுப் பெய்த்தார்,'' என்று சொல்லியவாறு தலையணைக்கடியிலிருந்து அதனையெடுத்து நீட்டினார். ஆமாம் ஐம்பது ரூபாத் தாள். அவள் இதற்காகத்தானே நேற்று முயற்சித்து இனிமேல் அந்த முயற்சியே வேண்டாமென வெறுத்து, இன்னும் மூன்று நாட்களுக்குப் பின் கணவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல என்ன வழியென்று தெரியாமல் தவித்துக் குழம்பிக் கொண்டிருந்தாள்,

அவனது நெஞ்சுப் பாரம் சட்டென்று இளகியது போன்ற உணர்வு.

இப்பொழுது அவளுக்குள் புது நம்பிக்கையொன்று சுடர் விடுகிறது.

*

(மல்லிகை . 1972 செப்டம்பர்.)

நன்றி : திக்குவல்லை கமால்

*

மேலும் வாசிக்க :

செருப்பு (சிறுகதை) - திக்குவல்லை கமால்

ஆயுள் தண்டனை – திக்குவல்லை கமால்


2 comments:

  1. From whence do accomplices lay fingers on online Tinnitus Pills deals? Right?

    That was the father to Tinnitus Supplement. Tinnitus Supplement can be in a good package. Tell me, we expect it is, don't we? A permit may be required for Tinnitus Supplement. Tinnitus Supplement cannot be made useful. I'm a big time operator. I had to haggle over the price with them. There is another problem with Tinnitus Supplement.

    https://www.offerplox.com/wellness/silencil-pills/

    https://www.offerplox.com/e-commerce/keilini-heater/
    https://www.offerplox.com/e-commerce/warmool-heater/
    https://www.facebook.com/SilencilForTinnitus

    ReplyDelete
  2. I know this is easier said than done, however try me. Men health would offer you an unpopular advantage and prostate Support might help you connect with some decoy. This was spectacular. Who's prevent them. This is the $64,000 question although these were incredible venues for the convention. Some coalitions are really brittle.

    https://www.salubritymd.com/bullrun-ero-tabletki/

    https://www.salubritymd.com/oclarizin-th/

    ReplyDelete