Wednesday, December 16, 2015

'பதேமாரி' (தோணி) விமர்சனம் - போகன் சங்கர்

காட்சிப்பிழை இதழில் நண்பர் போகன் சங்கர் அருமையாக எழுதியிருக்கும் 'பரதேசிகள்' கட்டுரையிலிருந்து எடுத்துப் பகிர்கிறேன். மம்முட்டியின் 'பதேமாரி'யை நானும் பார்த்தேன். குஞ்சுமுஹம்மது இயக்கிய 'கர்ஷோம்' அளவுக்கு ஈர்க்கவில்லை. ஆனால் , அரபுநாட்டில் மனைவி மக்களுக்காக நெடுங்காலம் உழைத்த நாயகன், இனி ஊரோடு இருந்து விடும் திட்டத்தை மனைவியிடம் சொல்லும்போது, 'உங்களால் ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லையென்றாலும் துபாய்க்காரனோட பெண்டாட்டி என்ற சின்ன பெருமையாவது இருந்தது. இப்ப அதுவும் போச்சா?' என்று அவள் சொல்வது (நான் புரிந்துகொண்ட மலையாளத்தில்) அமைதியாக அழ வைத்தது. அப்படியே அஸ்மாவின் குரல்!. - ஆபிதீன்

இனி போகன் சங்கரின் வரிகள்....

அடிப்படையில் ‘குடும்பத்துக்காக ஓடாய்த் தேய்கிற மனிதனை அவன் குடும்பம் மறப்பது அல்லது வஞ்சிப்பது ‘வகைக் கதைதான் எனினும் தேர்ந்த திரைக்கதை மற்றும் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் நடிகரும் இயக்குனரும் வேறு தளப் படமாக இதை ஆக்கிவிடுகின்றனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டிக்கு நிறைவான படம் இது.

படம் ஒரு மரணத்துடன் ஆரம்பிக்கிறது.துபாயில் ஒரு காலை அலாரம் ஒரு மனிதனை எழுப்ப முயன்று தோற்கிறது.பள்ளிக்கல் நாராயணன் என்கிற நாராயணப் பணிக்கர் .துபாய்க்கு கள்ளத் தோணியில் ஏறி வந்த முதல் மலையாளிகளுள் ஒருவர் .செய்தி கேரளத்தில் உள்ள அவரது அப்போதுதான் தூங்கி எழும் வீட்டுக்கு தெரிவிக்கப்படுகிறது .அங்கே கட்டப் பட்டுக்கொண்டிருந்த ஒரு வீட்டின் பணி உடனே நிறுத்தப்படுகிறது.(இவனுங்க சாகிறதுக்கு ஒரு சமயம் பார்க்கிறானுங்க பாரு )நிறைய அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அவரது உடல் நாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.ஆனால் அவரது உடலை புதிய வீட்டில் ‘’வைக்க’’ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறான் அவரது மூத்த மகன்.துபாயில் அவருடன் பணிபுரிந்த பழைய கூட்டுக்காரன் ‘இந்த வீட்டுக்காகத்தான் அவன் அங்கே குருதி சோர உழைத்தான்’என்று கலங்குகிறார்.(இப்போது கேரளத்தில் காலியாகக் கிடக்கும் பனிரெண்டு லட்ச வீடுகளைப் பற்றிய செய்தியின் பின்புலம் தெளிவாகுகிறதுதானே?)
மத்திய கிழக்கு வாழ்க்கையின் துயரங்கள் படத்தில் மிகையில்லாமல் காட்ட பட்டுள்ளன கல்யாணம் ,கருமாதி எல்லாவற்றையும் போனிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய அவர்களது அவல நிலைமை பற்றி..’இம்முறைதான் கடைசி ‘’என்று ஒவ்வொருதடவையும் நாடு திரும்பும்போதும் அவர்கள் நினைத்துக் கொள்வது பற்றி சொந்தங்கள் வலைப்பின்னல் போல உருவாக்கி வைத்திருக்கும் நிர்ப்பந்தங்களால் மீண்டும் மீண்டும் அந்த பாலைவனத்துக்கே திரும்ப நேர்வது பற்றியெல்லாம் நாடகத் தன்மையில்லாமல் காட்டப் பட்டுள்ளன

இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாராயணன் பணிக்கர் கசப்பில்லாத மனிதராகவே வருகிறார்.டிவி பேட்டியில் ‘தான் தோற்காத மனிதன் ‘’என்றே சொல்கிறார்.அவர் எதை இழக்கவில்லை என்பதை கனல் படத்தில் வருகிற பிரதாப் போத்தன் மற்றும் ஷாயாஜி ஷிண்டே பாத்திரங்களோடு பொருத்திப் பார்க்கையில் புரிகிறது.அவர்கள் ஆன்மாவை இழந்து கட்டிடங்களையும் கார்களையும் பெற்றார்கள்.அவற்றையும் கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் பாஸ்டஸ் போல அவர்கள் இழந்தபோது அவர்கள் நிலைமை மிகப் பரிதாபகரமாக இருந்தது.

பதேமாரியின் நாயகன் அதை இழக்கவில்லை.அவன் கடைசிவரை அதற்காகவே உழைத்தாலும் அவன் பணத்துக்கு தனது ஆன்மாவை ரத்தைக் கையெழுத்திட்டுக் கொடுக்க சம்மதிக்கவேயில்லை. அவர் கடைசிவரை தனது நாட்டோடும் மக்களோடும் சிநேகம் உள்ளவராகவே இருந்தார்.அவர்கள் அந்த ஸ்நேகத்தைத் திருப்பி அளிக்காவிட்டாலும் அவர் இழக்காதது என்ன என்பதை படத்தில் வருகிற ஒரு காட்சி உணர்த்துகிறது.மூன்றாவது முறையாக துபாய் போவதற்கு முன்பு மும்பை விடுதியில் அவர் ஒரு சக மலையாளியைப் பார்க்கிறார் .இம்முறையும் அவர் பெற்றது எல்லாவற்றையும் இழந்துவிட்டுதான் திரும்புகிறார் .அந்த மலையாளியை அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக யாரோ ஏமாற்றியிருக்க அவன் மும்பையில் தெருப்பணி செய்து திரிகிறான்.தான் அவ்வாறு திரிவதை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பாமல் நாடகமாடிக் கொண்டிருக்கிறான்.சிறிய சிறிய பரிசுப் பொருட்களை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான்.எல்லாமே மும்பையிலேயே மலிவாகக் கிடைப்பவை.மம்மூட்டி அவனுக்கு தன கையிலிருந்த மிச்ச பணத்தையும் அளிக்கிறார்
நெகிழ்ந்து போன அவன் அவரது பெயர் என்ன என்று கேட்கிறான் .
‘’ஏன்?’’என்று கேட்கிறார் மம்மூட்டி
அவன் ‘’மதறாசாவில இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டுன்னு படிச்சதுண்டு .அதான்’’என்கிறான்
மம்மூட்டி புன்னகையுடன் சொல்கிறார்
‘’நாராயணன்’.என் பெயர் பள்ளிக்கல் நாராயணன் ‘’
*

நன்றி : போகன் சங்கர்

1 comment:

  1. 'பத்தேமாறி' சினிமா - ஒரு பார்வை - கவிஜி
    http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/36358-2018-12-26-04-19-26

    ReplyDelete