Sunday, September 6, 2015

நான் அறியாதவனென்றா நினைக்கிறீர்? - இஸ்லாமிய நீதிக் கதை!

அற்புதமான கதை இது . போர்வை பாயிஸ் ஜிப்ரி எழுதிய 'இஸ்லாமிய நீதிக் கதைகள்' என்ற நூலிலிருந்து பகிர்கிறேன். நம்ம ஊர் ஆலிம்ஷாக்கள் இம்மாதிரி கதைகளைச் சொல்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
*
முதியவருக்கு தாகத்துக்கு நீர் கொடுத்த கதை :

நபி இபுராஹிம் (அலை) அவர்கள் பாலைவனத்தில் தனது கூடாரத்தில் பரிவாரங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். அப்போது கடும் வெய்யிலில் மேனியெல்லாம் புழுதி படிந்த நிலையில் ஒரு வயோதிகர் ஒட்டகத்தில் அமர்ந்தவராக கூடாரத்தை நெருங்கி, குடிப்பதற்கு நீர் கேட்கிறார். நபி இபுறாஹிம் அவர்கள் ஒரு குவளையில் நீர் கொடுக்கிறார்.

நீரைப் பெற்றுக்கொண்ட முதியவர் முதலில் தனது ஒட்டகத்திற்கு நீர் புகட்டிவிட்டு,  சூரியனை வணங்கும் மதத்தவரான அவர் தண்ணீரை கைகளில் ஊற்றி சூரியனுக்கு அபிஷேகம் செய்கிறார். இதனைக் கண்ட நபி இபுறாஹிம் அவர்கள் வயோதிகர் கையிலிருந்த தண்ணீர் குவளையைப் பறித்தெடுக்கிறார். அத்தோடு சூரியனுக்கு அபிஷேகம் பண்ணவா உனக்கு நீர் கொடுத்தேன் என அந்தக் கிழவரையும் கடிந்து கொள்கிறார்.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் வயோதிகர் மனம் வெதும்புகிறார்.

அவ்வேளை அல்லா(ஹ்) வானவர் மீக்காயீல் மூலம் நபி இபுறாஹிமை கடிந்து கொள்கிறான்: 'ஏ! இபுறாஹிமே! உமது செயலை நான் கண்டிக்கிறேன். இத்தனை வருட காலமாக நான் உணவும், நீரும், அந்த மனிதருக்கு கொடுத்து வருகிறேனே, அந்த மனிதர் சூரியனை வணங்குபவர் என்பதை நான் அறியாதவனென்றா நினைக்கிறீர்? 
எனது அருட்கொடைகளிலிருந்து அந்த மனிதருக்கு உம்மால் ஒரு மிடறு தண்ணீர் கொடுக்க முடியவில்லையே. அந்த மனிதரின் தயாள குணத்தைப் பார்த்தீரா? தான் தாகத்துடன் இருந்தும் முதலில் தன் ஒட்டகைக்கல்லவா நீர் புகட்டினார்' என இறைவன் அறிவித்தான். உடன் நபி இபுறாஹிம் அவர்கள் அந்த மனிதரிடம் மன்னிப்புக்கோரி போதிய உணவும், நீரும் கொடுத்து வழியனுப்பிவைத்தார்கள்.

தன்னை வணங்குபவர்களுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாரபட்சம் காட்டாது உணவு வழங்கும் வல்ல இறைவனிடம் நபியவர்கள் மன்னிப்பை வேண்டி நின்றார்கள்.
*
*
நன்றி : போர்வை பாயிஸ் ஜிப்ரி & நூலகம்

1 comment:

  1. இந்த கதையெல்லாம் சொன்னா எல்லாரும் நயமாகிடுவாங்களே? பொழப்புக்கு என்ன பண்றது?!

    ReplyDelete