Wednesday, December 4, 2013

அப்பாரோட அங்கராக்கு - ஸ்ரீபதி பத்மனாநாபா

அங்கராக்கு என்றால் கொங்குத் தமிழில் சட்டை என்று அர்த்தமாம். கோவையில் இப்போது எம்சீயேஎம்பீயே படித்துக்கொண்டிக்கும் மகனிடம் கேட்டால் 'சாம்சங் நோட் III' என்கிறான்! விடுங்கள், 1998-ல் சுஜாதா தேர்ந்தெடுத்த ஸ்ரீபதி பத்மனாநாபாவின் கவிதையை பகிர்கிறேன்.   'ஏறக்குறைய உரைநடைக்கு அருகிலேயே கவிதை வந்துவிட்டது. உள்ளடக்கத்துக்கும் அதில் சொல்லப்படும் மனித மன இயக்கங்கள், ஏக்கங்கள், மனிதாபிமான அல்லது துரோகச் செயல்கள், யாத்திரைகள், மரங்கள், பஸ்கள், அன்றாட காட்சிகள் இவைகளை உரைநடை போலவே சொல்கிறார்கள். எனினும் ஏதோ ஒரு தன்மை அதைக் கவிதை என்று அடையாளம் காட்டுகிறது. இந்தியில் 'அகவிதா' என்ற இயக்கம் போல இது என்று சொல்லலாம்.  ஒரு சிறந்த உதாரணமாக இந்தக் கவிதையைப் பாருங்கள். நான் சொல்வது புரியும்' என்று சுஜாதா சொல்லியிருந்தார். பாருங்கள். 'வாப்பாட கம்ஸு சட்ட' என்று மறக்காமல் எழுதுங்கள். - ஆபிதீன்
***

அப்பாரோட அங்கராக்கு - ஸ்ரீபதி பத்மனாநாபா

ம்.. ஆறுமணி ஆயிருச்சா! அதா அவியளக் காணம்
அப்பாரு சாராயக் கடேல குச்சீட்டிருப்பாரு
ஆத்தா கொட்டாயில மொதோ ஆட்டத்துக்கு
நீண்டுட்ருக்கும். (பெரபுமு நதியாளுமு நடிச்ச படமாமா)
இனி அவிய வார வாரெங்கும்
நாந்தேன் டீயாத்தணும்
'டே ராசு.. நீ கல்லால குச்சீக்கோ, நா டீயாத்தறேன்,
எனக்கு டீயாத்தறாதுன்னா எளசு புடிச்சே புடிக்கும்,
கைய நீள நீளமா வீசி ஆத்துன்னா..
யம்மாடி எவ்ளோ நொரெ...
இப்பத்தா புடிக்கிறதேயில்ல...
கைய வீசறப்பல்லாம் முந்தானி வெலகிடுதா,
அவிஞ்ச கண்ணுக எல்லா அங்கியே பாக்கும்,
கருமத்த...!

*
இதாரு புதுசாருக்கு..
பேன்ட்டெல்லாம் போட்டுக்கிட்டு...
டவுனுக்காரராட்டமா?
'ஒரு டீ குடுக்கிறியாம்மா?
நாங் கெளாசக் களுவுனே,
அவுரு என்னயவே பாத்துட்ருந்தாரு..
'உம்பேரென்ன?
அய்யோ..
என்னிக்குமில்லாமெ எனக்கு ஏ இப்புடி வெக்கமா வருது
நாந் தலயக் கவுந்துக்கிட்டே 'மலருங்கொ'
டீய ஆத்தீட்டே ஓரக்கண்ணுல அவரப் பாத்தே..
எம் மூஞ்சியவா பாக்குறாரு..
நா டீய ஆத்தாம கீள வச்சே,
'ஆத்தியே குடும்மா',
நா பின்னாடி திலும்பிப் பாத்தே
செவுத்துல,
அப்பாரோட அங்கராக்கு தொங்கீட்டிருந்துச்சு
போயி தாவணி அதயப் போட்டுக்கிட்டே,
இப்போ மாராப்புந் தெரியாது
மண்ணாங்கட்டீந் தெரியாது
இனி தகிரியமா கைய நீளநீளமா வீதி ஆத்தலாம்
..யம்மாடி
எவ்ளோ நொரெ..!
**
மேலும் சில 'பூஜ்யம்' கவிதைகளை இங்கே பார்க்கலாம். 
நன்றி : ஸ்ரீபதி பத்மனாநாபா, தரு,  விகடன்  (சுஜாதாட்ஸ்)

1 comment:

  1. பொங்கும் நுரைவளம்!

    தேர்ந்தெடுத்த சுஜாதாவும்
    தேர்ந்தெடுத்துத் தந்த ஆசிரியரும்
    பாராட்டுக்குரியவர்கள்..

    ReplyDelete