Monday, November 25, 2013

மச்சான் சொன்ன மஞ்சள் கதை - எஸ்.எல்.எம். ஹனிபா

இதே தலைப்பில் வேறெங்கும் இருக்கிறதா என்று இணையத்தை தேடினேன். அதிபயங்கர காமக்கதை ஒன்று வந்தது. சுட்டியெல்லாம் கொடுக்க முடியாது. அதைப் படித்துமுடித்துவிட்டு , மறக்காமல் முகம் சுளித்துவிட்டு , தொந்தரவு செய்யாத மஞ்சள் கதையை மட்டும் இங்கே பகிர்கிறேன். காக்கா வாழ்க. அப்படியே ஹாஜியார்களும்! - ஆபிதீன்
***

 மச்சான் சொன்ன மஞ்சள் கதை
எஸ்.எல்.எம். ஹனீபா

பத்து வருடங்களுக்கு முதல் ஒரு நாள் மச்சான் சொன்ன கதை இது. மச்சான் எனது உறவினர். உமர்லெப்பை சேகு இஸ்மாயில், வயது 78. ஒவ்வொரு நாளும் மச்சான் அரைக்கிலோ கோழித்தீன் வாங்க கடைக்கு வருவார். மச்சான் வசம் பத்துப் பன்னிரண்டு புறாக்கள். அவர் வீட்டிலிருந்து எனது கடை 3 கிலோமீற்றர் தூரம். தனது புராதன காலத்து சைக்கிள் வண்டியில் மிகவும் இலாவகமாக வந்து தீன் வாங்கிப் போவார். "இரண்டு கிலோ வாங்கிப் போங்களேன்" என்று சொன்னால் "வீணாக்கிப் போடுவார்கள்" என்பார். மச்சான் மிகவும் அப்புராணியான மனிதர். அவரைப் போல் மனிதர்களை ஊரில் காண்பது அரிதாகிப் போனது.

நல்ல மழை பொழிந்த ஒரு நாளின் பகற்பொழுதில் பகற் போசனத்துக்காக கடையை மூடி விட்டு வீடு சென்று கொண்டிருந்த போது, எதிரே மச்சான் பென்னம்பெரிய கோணிப்பையை தனது சைக்கிளின் கரியரில் வைத்துக் கட்டியவாறு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

"மச்சான், ஒவ்வொரு நாளும் மூட்ட மூட்டயா காய் கொண்டு போறீங்க. எனக்கும் ஒரு பத்துக் காய் கொண்டு தரலாந்தானே" இவ்வளவுதான் நான் சொன்னது.

என்னுடைய நினைப்பில் கோணிக்குள் இருப்பது மாங்காய் என்று எண்ணிவிட்டேன். கற்பனைக்கு என்ன குறைச்சல். உள்ளே இருந்ததோ வேறு.

மறுநாள் பகற் போசனத்துக்கு வீட்டுக்குச் சென்ற பொழுது, "உங்களுக்கு நபுசு அடங்காது, கண்ட கண்ட பலாயிலயெல்லாம் ஆசதான்".

நான் என்னவோ ஏதோ என்று திகைத்தேன். மீண்டும் மனைவி, "சேகு இஸ்மாயில் காக்கா மஞ்சள் பழம் பத்து தந்திட்டுப் போயிருக்கார். போட்டுக் குத்துங்க".

"பிள்ளெ, நான் மாங்காண்டு நினைச்சித்தான் கேட்டன்"

மறுநாள் மச்சான் கடைக்கு வந்தார். "மச்சான், நான் மாங்காண்டு நினைச்சித்தான் கேட்டன். அது மஞ்சள் பழம்" (இங்கு லாவுலு பழம் என்பார்கள்).

"மெய்தான், ஒவ்வொரு நாளும் மூட மூடயா கட்டிப் போறீங்களே. எங்க கொண்டு போறீங்க?"

"அது மச்சான், நம்மட பசார்ல இருக்கிற ஆஜியார்ர கொச்சிக்காய் மில்லுக்கு (கிரைண்டிங் மில்) கொண்டு போறேன். மூடெக்கு இரு நூறு ரூவா தருவார்" என்றார்.

"இந்தக் காய ஆஜியார் என்ன செய்யிறார்?" நான்.

"நல்லா முத்திய செங்காய நாலா வெட்டி வெய்யில்ல காய வெச்சி, பவுடராக்கி, மஞ்சள் தூளோடு கலந்து யாவாரம் செய்றார்" என்றவர், "இந்த வருஷமும் ஆஜியார், குடும்பத்தோட மக்காவுக்குப் போறார் மச்சான்" என்றார். 
***
நன்றி : ஹாஜி எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள்

3 comments:

  1. ஆஜியார்னாலே அப்டிஇப்டித்தானா? :-)
    (நம்மகிட்டயும் ஒரு கயிற ஆட்ற ஆஜியார் உண்டு)
    கொச்சிக்காய்னா மிளகாய்னு தெரியுது.
    மஞ்சள்பழம்னா, மகிழம்பழமா?

    ReplyDelete
    Replies
    1. ஆட்ற ஆஜியார அனைவருக்கும் காட்டவும்.

      Delete
  2. தோ....
    http://majeedblog.wordpress.com/2011/03/31/ஹாஜியார்-ஜோக்/

    ReplyDelete