Monday, October 14, 2013

வெற்றி என்பது... - கே. பி. கேசவ மேனனின் 'கடந்த காலம்'

நம்மில் பலரும் பொரித்துத் தின்றுவிட்ட மனச்சாட்சி பற்றி  - ‘மாத்ருபூமி’ நாளிதழை ஸ்தாபித்த மாமனிதர் கே. பி. கேசவ மேனன் சொல்லும் அட்வைஸை பகிர்கிறேன். அதை வாசிப்பதற்கு முன்பு , ரிலாக்ஸூக்கு ஒரு ஜோக், இதுவும் அவருடைய சுயசரிதையில் (‘கழிஞ்ச காலம்’ . தமிழாக்கம் : ராஜம் கிருஷ்ணன்) உள்ளதுதான்.

'பிராக்டிஸ்’ தொடங்கிச் சில நாட்கள் சென்ற பின்னரும் வழக்கு ஏதும் வராமல் சோர்ந்திருந்த ஒரு பாரிஸ்டரின் கதை அது (இந்தக் கதையைச் சொல்வது இன்னொரு பாரிஸ்டர்!). அவர் நாள்தோறும் அலுவலகம் செல்வார். சிறிது நேரம் சென்ற பின்னர், நேரம் தவறாமல் நீதிமன்றத்துக்கும் செல்வார். . எவரேனும் கட்சிக்காரர் வந்தால் உடனே எழுத்தன் (வக்கீல் குமாஸ்தா) நீதிமன்றத்துக்குச் சென்று அவருக்கு அறிவிக்க வேண்டுமென்பது கட்டளை. ஒருநாள் அந்தப் பாரிஸ்டர் நீதிமன்றத்திலிருக்கையில் எழுத்தன் மூச்சுமுட்ட ஓடிவந்து ஒரு கட்சிக்காரன் வந்திருப்பதாக அறிவித்தான். 'அப்படியா? சீக்கிரமாகப் போய் அவனை ஆபீஸில் இருக்கச்சொல்; நான் இதோ வருகிறேன்’ என்றார் பாரிஸ்டர். ’அவன் போய்விடமாட்டான் ஸார், வாசலைப் பூட்டிவிட்டு வந்திருக்கிறேன்; அவன் உள்ளே இருக்கிறான்’ என்று அந்த எழுத்தன் மறுமொழி புகன்றானாம். தன்னுடைய எழுத்தனின் சாமர்த்தியத்தை எண்ணி மகிழ்ந்துகொண்டு வந்த பாரிஸ்டர் அலுவலகக் கதவைத் திறந்து பார்க்கையில், அங்கு யாரையும் காணவில்லை! பின்புறமிருந்து கதவைத் தாழிட எழுத்தன் மறந்து போயிருந்தான்!

அவ்வளவுதான் ஜோக். இனி மனச்சாட்சி (இன்னொரு ஜோக் என்கிறாயா?! - ஹனீபாக்கா) :
...

'என் வாழ்க்கை பாழாகிவிட்டதே! நான் நினைத்தாற்போன்று எதுவும் நடக்கவில்லையே’ என்று புலம்பும் சில நண்பர்களை நான் கண்டிருக்கிறேன். உண்மையில் அவ்வாறெல்லாம் தவிப்பதற்கு ஒரு காரணமும் அவர்களுக்கு இருந்ததில்லை. ‘ஒன்றாகப் படித்து வேலையில் அமர்ந்தோம்- எனினும் என்னால் அவனைப்போல் உயர முடியவில்லை. என்னைவிடத் தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள் நிறையப் பொருள் தேடிப் பிரமுகர்களாகிவிட்டனர். எங்களுக்கு அப்பேறு கிடைக்கவில்லை’ என்று குறைபடுகின்றனர். வாழ்க்கைப் போரில் தோல்வியடைந்துவிட்டோம் என்ற கருத்தே அவர்களுக்குத் தோன்றுகிறது. இது உடைமைகளை ஆதாரங்களாகக் கொண்ட தவறான கருத்துகளினால் விளையும் குறைபாடுதான். பணம், பதவி, புகழ், ஆகியவற்றின் நிலையாமையை நன்கறிந்தவர்கள் அவற்றுக்காக ஏங்குவதில்லை. ...சில உலக நிகழ்ச்சிகளைப்பற்றி ஆராய்வோம்.

எகிப்தில் சர்வாதிகாரம் நடத்திவந்த ஃபரூக் அரசன் ஒருநாள் காலையில் தன் நாடு, பதவி எல்லாம் விலகிச் செல்ல, வேறு நாடுகளில் அலைந்து புகலிடம் தேடவேண்டியிருந்தது. ஃபரூக்கை வெளியேற்றி அதிகாரம் கைக்கொண்ட நஜீப், விரைவிலேயே அதை நாஸருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. பாரசீகப் பிரதம மந்திரியாக இருந்த மொஸாதீக் பின்னாளில் ஒரு கைதியாகவே வாழ்நாளைத் தள்ளினார். ஸ்டாலின் அதிகாரத்துக்கு வந்ததும் ‘ட்ராட்ஸ்கி’யின் பெயரையும் பணிகளையும் நினைவூட்டும் சின்னங்களை அழித்தார். ஸ்டாலின் இறுதியை எய்திய பின்னர், அவருடைய நினைவை அவருக்குப்பின் வந்ததோர் அகற்ற முயன்றனர். டாக்டர் சுகர்ணோவுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைப் பாருங்கள்! அவரை அதிகாரத்திலிருந்து அகற்றினார்கள்,.அந்தப் பெருந்தலைவனை அலங்கரித்த பதவிகள், பொறுப்புகள் எல்லாவற்றையும் உருவிக்கொண்டனர். விதி மனிதர்களை அம்மானை ஆடுவதில் ஒரு தனித்தன்மையைக் கையாண்டாற்போலிருந்தது.

வரலாற்று நிகழ்ச்சிகளையே மாற்றியும் திருப்பியும் அமைத்துவிட முயற்சிகள் நடக்கும் உலகில் பெயரிலும் புகழிலும் ஆசை கொள்வது வீணல்லவா?

இரண்டே இரண்டு விஷயங்களில் மட்டும் அசையாத நம்பிக்கை கொள்ள இயலும். அவை - பிறப்பும் இறப்பும். அவற்றுக்கிடையே நிகழ்வன அனைத்தும் நிச்சயமற்றவை. பணம், பதவி, உடல்நலம், அதிகாரம் எல்லாம் மாறிக்கொண்டிருக்கும். நிலையிலா இவ்வாழ்வில் நமக்கும் ஆறுதலளிக்கக்கூடியது ஒன்றுதான். மனம் கனிந்து பிறருக்கு உதவி செய்வதும், உள்ளார்ந்து அன்பு செலுத்துவதும்தான் செய்யக்கூடியது. சிந்தனையாளரும் அறிவியல் புலவருமான ஆல்பர்ட் ஈன்ஸ்டைன் கூறியதுபோல், வாழ்க்கையின் குறிக்கோள் வெற்றி தேடுவதல்ல; தொண்டாற்றுவதேயாம். கொடுத்ததைக் காட்டிலும் அதிகம் பெறுபவரையே சாதாரணமாக நாம் வெற்றிக்குரியவராகக் கருதுகிறோம். அதற்கு நேர்மாறாக நாம் கொள்ள வேண்டும். இங்கே பெறுவதற்கு மேலாக அங்கே வழங்க வேண்டும். அதுவே வாழ்க்கையின் சரியான வெற்றியாகும்.

எனது நம்பிக்கைகளுக்கேற்ப, என்னால் எப்போதும் செயலாற்ற முடிவதில்லை. சில சமயங்களில் நேர் விரோதமாகவே செயல் புரிய வேண்டி வந்திருக்கிறது. பலவீனங்களை நேருக்குநேர் நின்று எதிர்க்கும் ஆற்றல் இல்லாததாலும், போதிய அளவுக்கு இயல்பாகவே நெஞ்சுரம் இல்லாததாலும்தான் அவ்வாறு நேரிடுகிறது போலும்! வாழ்வின் வெற்றியும் இன்பங்களும் பெரும்பாலும் நம் இயல்பைப் பொறுத்தே அமைகின்றன. நாம் காலத்தைப் பயன்படுத்தும் முறையிலும் பிரச்னைகளைச் சமாளிக்கும் தன்மையிலும் மற்றவருடன் பழகும் விதத்திலும் , வாழ்க்கைப் பொறுப்புகளைப் பற்றிய நம் கருத்துகளிலும் நம்முடையை இயல்பின் சாயை படிகிறது. அதிர்ஷ்டம் நம்மைக் கண் திறந்து பார்த்து அருள் புரிந்தாலும் , செல்வம் தேவைப்பட்டபோது நமக்குக் கிடைத்தாலும் , நம்முடைய நல்லியல்புகளை நாம் உருவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தவில்லையெனில், வேறொன்றும் நம்மை அமைதியான இன்பம் நிறைந்து வாழ்வுக்கான வழியைக் காட்டாது. மாசு மறுவற்ற மனச்சாட்சி கொண்டுதான் எதிரிகளின் அச்சத்தினின்றும் தீயகாலத்தின் துன்பங்களிலிருந்தும் நாம் மீட்சிகாண முடியும்,

**

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி

No comments:

Post a Comment