Sunday, March 31, 2013

வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்

நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'தீர்க்க வர்ணம்' நூலிலிருந்து ஒரு பத்தியை, நன்றியுடன் மீள்பதிவிடுகிறேன். அவர் குறிப்பிடும் ‘வாப்பா வருவார்’ சிறுகதை யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள். சி. அய்யப்பன் எழுதிய 'பைத்தியம்’ சுட்டியை அளிக்கிறேன்! - ஆபிதீன்

***

வராத வாப்பாவும் வற்றாத நதிகளும்

அஷ்ரஃப் சிஹாப்தீன்

ஓர் இலக்கியக் கலந்துரையாடலின் போது முழுச் சபை யினதும் கவனத்தைக் கவர்ந்து நண்பர் அஸீஸ் நிஸாருத்தீன் ஒரு சிறுகதை குறித்துச் சிலாகித்துப் பேசிய போது எனக்கும் ஆச்சரிய மாகத்தான் இருந்தது. அக்கதை வெளி வந்த காலப் பகுதி, வெளிவந்த பத்திரிகை பற்றி அவருக்குச் சரியான தெளிவு இல்லாதிருந்த போதும் அக்கதை முழுவதையும் சபைக்கு ஒப்புவித்து ஒரு குறுந் திரைப் படத்துக்கு மிகவும் பொருத்தமான கதை என்று சொன்னதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. முதன் முதலில் அக்கதையைப் படித்த போது அது தன்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டது என்றும் இன்றும் அக்கதையைத் தன்னால் மறக்க முடியவில்லையென்றும் கூடச் சொன்னார். அதிர்ஷ்டவசமாக கதையின் தலைப்பும் படைப்பாளியின் பெயரும் அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போன்று அவருக்கு ஞாபக மறதி இல்லை என்பதற்காகவும் சக இலக்கியப் படைப்பாளி யின் திறமையை இருட்டடிப்புக் குணம் இன்றிப் பகிரங்கமாகப் பாராட்டிய அவரது பண்புக்காகவும் அவருக்கு நான் வாழ்த்துக்களைச் சொல்ல வேண்டும். நான் கதையைத் தேடிப் படிக்க வேண்டும் என்று எண்ணினேன்.

 கைக்கெட்டும் தூரத்தில் இருந்த படைப்பாளியுடன் தொடர்பு கொண்டு பிரதியைத் தேடிக் கண்டு பிடித்து எடுப்பதற்குள் மூன்று மாதங்கள் சென்று விட்டன. கதையின் தலைப்பு: ‘வாப்பா வருவார்.’ வெளிவந்த பத்திரிகை ‘பாமிஸ் - மார்ச் 1988’. டெப்ளொயிட் அளவில் வெளிவந்த இந்தப் பத்திரிகை முக்கியமான சில பதிவுகளைச் செய்திருக்கிறது என்பது வரலாறு. இப்பத்திரிகையை இயக்கிவர்களுள் எம்.எம். ஸ_ஹைர், எம்.எச்.எம். ஷம்ஸ், அபுல் கலாம், கலைவாதி கலீல், ரஸீன் மாஸ்டர் ஆகியோர் முக்கியமானவர்கள். கதை பத்திரிகை யின் பத்தாம் பக்கம் முழுமையாகப் பிரசுரமாகியிருந்தது.

 “பொறு.. இண்டைக்கி வாப்பா வரட்டும்... ஒன்ட முதுகுத் தோல உரிச்சிக் காட்டுறன்...” என்ற தாயாரின் எச்சரிக்கையுடன் கதை ஆரம்பமாகிறது. அவ்வீட்டின் வறுமையை மறைமுகமாக எடுத்துச் சொல்லியபடி அடுத்த வசனம் வருகிறது. ‘கிழிந்து போன கொப்பி களை உடைந்து கிடந்த கதிரையில் வீசி விட்டு சட்டையைக் கழட்டும் போது உம்மா சொன்ன வார்த்தைகள் உதுமானின் காதுகளில் விழுந்தன.’ ஆம்! பதினொரு வயதான உதுமான்தான் இக்கதையின் பிரதான பாத்திரம். பாடசாலையில் தன் நண்பனுடன் சண்டையிட்ட மாணவன் ஒருவனுக்கு உதுமான் தலை புடைக்குமளவு எதிர்த்தாக்கு தல் நடத்தி விட்டான். செய்தி வீட்டுக்கு வந்தது. தாயார் அவனை வைதபடியே இருக்கிறாள். வாப்பா வந்தவுடன் சொல்லிக் கொடுத்து அடி வாங்கிக் கொடுப்பதாக வேறு சொல்வதால் அந்தப் பயத்தில் வாப்பாவின் வருகையை பதட்டத்துடன் எதிர்பார்த்திருக்கும் அவனது மனப்போராட்டத்தில் கதை நகர்கிறது. அந்தப் பயத்திலிருந்து தன் எண்ணத்தை மறக்க டயர் உருட்டுவதும் வேறு ஒரு இடத்தில் மாங்காய் பறிக்கப் போவதும் பாடசாலைக்குச் சென்று புறாப் பிடிக்க முயல்வதுமாக நேரத்தைக் கடத்துகிறான் உதுமான். கிழக்கு முஸ்லிம் கிராமச் சூழலில் வாழும் சிறுவன் ஒருவனின் செயற்பாடுகளோடு இணைத்துப் பின்னப்பட்டுள்ளது கதை. ஊர் ஊராக ஐஸ்பழம் விற்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற வாப்பா திரும்பி வரவே இல்லை. அவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டு விட்டார். வாப்பா வந்து விடுவாரோ என்ற உதுமானுடைய பயப் போராட்ட மனது வாப்பா இனி வரவே மாட்டார் என்ற நிலையில் அவர் வர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உருகிக் கண்ணீர் சிந்துகிறது.

 இன்றைய நிலையில் பலநூறு சம்பவங்களோடு இதுவும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் இக்கதை படைக்கப்பட்ட காலப் பகுதியில் படிப்பவர் மனதைக் கரைக்கும் கதையாக இது அமைந்து விட்டிருக்கிறது. அதனால்தான் இருபது வருடங்கள் சென்று விட்ட போதும் நண்பர் நிஸார்தீன் போன்றவர்களின் மனதில் நின்று நிலைத்திருக்கிறது. தவிர, இக்கதையை ஒரு சிறுவனின் பார்வையில் நகர்த்திச் சென்றிருப்பதானது படைப்பாளியின் கூர்ந்த கண்ணோட் டத்தை எடுத்துச் சொல்கிறது. இன்று புதிதாக வாசிப்பவருக்கும் ஒரு மனத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. இனப்பிரச்சினையின் பின்னணி யில் முஸ்லிம் சமூகப் பாதிப்பினை எடுத்துச் சொல்லும் முதலாவது கதையாக இது இருக்கலாம் என்பது எனது கணிப்பு. இத்திகதிக்கு முன்னரான இவ்வாறான இனப் பிரச்சினையை மையப்படுத்திய கதைகளை யாராவது எழுதியிருந்தால் எழுதியவரோ அறிந்த வாசகர்களோ (தயவு செய்து பொய்ப் பெயர்களில் வாசகர் கடிதம் மூலம் தாக்குதல் நடத்த முனையாமல்) எனது கவனத்துக்குத் தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழைச்சேனை அமர்தான் இக்கதையின் ஆசிரியர். இவர், “விடுதலையின் நிகழ்வுகள்” என்றொரு சிறு தொகுதியை 1985ல் வெளியிட்டார். இனமுரண்பாடு எரியத் தொடங்கிய காலகட்டத்தில் அதுபற்றிப் பேசிய கவிதைகள் கொண்ட தனி நபரின் முதல் தொகுப் பாகவும் அநேகமாக இதுவே இருக்கக் கூடும். இவரது “நீ வரும் காலைப் பொழுது” கவிதைத் தொகுதி 2004ல் வெளிவந்தது.

 அமர் எழுதிய கதை ஒன்றுதான்| எழுதப்படாத கதைகள் ஆயிரமாயிரம் உள்ளன. வீட்டிலிருந்து வெளியே சென்று திரும்பாத வாப்பாக்களதும் அப்பாக்களதும் பிள்ளைகளின் கண்ணீர் அன்று முதல் இன்று வரை வற்றாத நதிகளாக ஓடிக் கொண்டேயிருக்கின்றன. இதற்கு அப்பால் தந்தையரின் முகமே அறியாமல் எப்போது வருவார் என்று காத்திருக்கும் பலநூறு பிள்ளைகள்; உள்ளனர் என்பதையும் நீங்கள் அறிவீர்களா?

***
நன்றி : அஷ்ரஃப் சிஹாப்தீன்


No comments:

Post a Comment