Sunday, February 24, 2013

ரிசானா நஃபீக்

ஹமீது ஜாஃபரின் எண்ணங்கள்...

வறுமையின் கோரப்பிடியிலிருந்து தன் குடும்பத்தை சற்றே தளர்த்திக்கொள்வதற்காக ரசூல்(சல்) அவர்கள் பிறந்த மண்ணிற்குச் சென்ற ரிசானா நஃபீக், வெறும் பதினேழே நாட்களில் தன்னையே அர்பணித்துக்கொண்ட நிகழ்வு உலகமறிந்த உண்மை. அந்த துயர சம்பவத்தின் காற்று இன்னும் வீசிக்கொண்டிருக்கிறது. அந்த காற்றில் மிதந்து வரும் குருதியின் வாடை  மாறாத நிலையில்  சில தினங்களுக்குமுன் ஃபேஸ் புக்கில் வந்த வீடியோ   என் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது. 
 
சில தினங்களுக்கு முந்தைய Gulf News ல் 'Saudi envoy to Sri Lanka recalled' என்று தலைப்பிட்டு வந்த செய்தியைப் படித்தபோது நிகழ்வின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது என்று உணரமுடிகிறது. அப்பெண்ணுக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மையின் பின்னணியைப் பற்றி  ஆராயவோ அல்லது விமர்சிக்கவோ எனக்கு தகுதி கிடையாது. ஆனால் எட்டாண்டுகளுக்குமுன் 25-2-2005 ல் 'திண்ணை' இணையப்  பத்திரிக்கையில் 'தண்டனை'  என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையின் சில பகுதியை இங்கே மீள்பதிவு செய்ய விரும்புகிறேன்.

'எக்காலத்தும் யாராலும் மாற்றமுடியாத இறைச் சட்டத்தைப் பற்றி அறியாமல், இஸ்லாத்தில் கையாளப்படுகின்ற ஷரீஅத் தண்டனைகளை தற்காலத்திலும் கையாள வேண்டுமா ? இது மனிதாபிமானமில்லாதது மட்டுமல்ல மிருகத்தனதாயிற்றே, ஐந்து ரூபாய்க்காக ஒரு திருடனின் கையை துண்டிக்கமுடியுமா ? விபச்சாரத்திற்காக கல்லெறிந்து கொல்ல வேண்டுமா ? என்று கடந்த நூற்றாண்டிலிருந்தே உலகளவில் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது அவசியமா இல்லையா என்று தீர்மானிக்குமுன் அவன் இழைத்த குற்றத்துக்கு அவன் எந்த அளவுக்கு பொறுப்பாளியாகின்றான் என்பதை தீர்மானிப்பதே மிக முக்கியமான பிரச்சினையாகும். இப்பிரச்சினைப் பற்றி அதாவது குற்றமும் தண்டனையும் பற்றிய பிரச்சினையில் இஸ்லாம் முக்கிய கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் தாறுமாறாகத் தண்டனைகளை விதிக்கவுமில்லை, ஈவிரக்கமின்றி அவற்றை நிறைவேற்றவுமில்லை. இத்துறையில் இஸ்லாம் கடைபிடிக்கும் கொள்கையை கூர்ந்து பார்க்கவேண்டும்.

இஸ்லாம் நீதியின் துலாக்கோலைச் சரியாகப்பிடித்துக் குற்றச்செயலுக்கு வழிகோலிய அனைத்து சந்தர்ப்பசூழ்நிலைகளையும் முற்றிலுமாக சீர்தூக்கிப்பார்க்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. ஒரு குற்றச்செயலை ஆராயும்போது அது ஒரே பார்வையில் இரண்டு அம்சங்களை நோக்குகிறது. ஒன்று குற்றவாளியின் நிலை, மற்றொன்று அக்குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அல்லது அந்த சமூகத்தின் நிலை. இவ்விரண்டையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் நியாயமான தண்டனையை விதிக்கிறது. இஸ்லாத்தில் விதிக்கப்படும் தண்டனைகளை மேலெழுந்தவாரியாகவோ போதிய அளவு ஆழமாக ஆராயாமலோ நோக்கினால் அவை பயங்கரமானவையாகவும் கொடூரமானதாகவும் தோற்றமளிக்கக்கூடும். ஆனால் குற்றச்சாட்டு நியாமற்றதாகவோ குற்றவாளி அக்குற்றத்தைப் புரிவதற்கு எவ்வகையிலும் நிர்பந்திக்கப்படவில்லையெனவோ திட்டவட்டமாக முடிவு செய்யப்படாவிட்டால் இஸ்லாம் அத்தண்டனையை நிறைவேற்றுவதில்லை.

திருடனின் கையை துண்டிக்கவேண்டுமென்பது இஸ்லாத்தின் தண்டனையாகும். ஆனால் திருடனுக்குத் திருட்டைச் செய்யத்தூண்டியது அவனுடைய பசி, வேறு வழியில்லை என்ற காரணம் சிறிய அளவில் உண்டானால்கூட அவனுக்குத் தண்டனை அளிக்கப்படக்கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.

இஸ்லாத்தின் தலை சிறந்த ஆட்சியாளரும் ஷரீஅத் சட்டங்களை நிறைவேற்றுவதில் மிகக்கண்டிப்பானவர் என்று பெயர் பெற்றவருமான இரண்டாம் கலீஃபா ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின்போது ஹாதிப் இப்னு அலீ பால்த்ஆவிடம் பணிபுரிந்த சில சிறுவர்கள் வேறொருவரின் பெண் ஒட்டகையைத் திருடி புசித்துவிட்டார்கள். இது ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்களின் நீதிமன்றத்திற்கு வந்தது. அவர்கள் அச்சிறுவர்களை அழைத்து விசாரித்தபோது, தாங்கள் திருடியதை சிறுவர்கள் ஒப்புக்கொண்டனர். கைகளை துண்டிக்குமாறு தீர்ப்பளிக்குமுன் காரணத்தை அராய்ந்து, 'இறைவன் மீது ஆணையாக, இப்பையன்களை வேலைக்கமர்த்தி அவர்களைப் பட்டினிப்போட்டதன் காரணமாக அவர்கள் ஒட்டகையைத் திருடிப்புசிக்க நீர் காரணமாயிருந்ததை நான் அறிந்திருக்காவிட்டால் நிச்சயமாக அவர்களின் கைகளைத் துண்டிக்குமாறு தீர்ப்பளித்திருப்பேன் ' எனக்கூறி திருடப்பட்ட ஒட்டகையின் விலையைப் போல் இருமடங்கு விலையை ஒட்டக உரிமையாளருக்குக் கொடுக்குமாறு அச்சிறுவர்களின் எஜமானருக்கு தீர்ப்பளித்துவிட்டு சிறுவர்களை விடுதலை செய்தார்கள். மேலும் அவர்கள் ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது பசியின் காரணமாக மக்கள் திருடக்கூடும் என்ற நிலை ஏற்பட்டிருந்ததால் அப்போது திருட்டுக்குரிய தண்டனையை நிறைவேற்றாது விட்டுவிட்டார்கள்.'

இது, தண்டனை வழங்கப்படுவதற்குமுன் காரண காரியத்தை இஸ்லாம் எப்படி ஆராய்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இத்தகைய காரண காரியங்கள் அங்கு ஆராயப்பட்டனவா ? அல்லாஹ் அஃலம்.

அப்பெண்ணிற்காக இலங்கை அரசு எடுத்துக்கொண்ட முயற்சி அனைத்தும் தோல்வி அடைந்து தண்டனை நிறைவேற்றிய பிறகு தனது தூதரை திரும்பப் பெற்றுக்கொண்டது . இது ஒருபக்கம் என்றால் உலக அளவில் கண்டனம் பதிவு செய்யப்பட்டது இன்னொரு பக்கம்.

' Human Rights Watch said Nafeek had retracted “a confession” that she said was made under duress. She said the baby accidentally choked to death while drinking from a bottle.'

'Saudi Arabia, a US ally, is an absolute monarchy that follows the strict Wahhabi school of Islam. Judges base decisions on their own interpretation of sharia, or Islamic law, rather than on a written legal code or on precedent.'   என்று கல்ஃப் நியூஸில் வந்த இந்த இரு செய்திகளும் மேலும் மன இறுக்கத்தையே தருகிறது.

***

நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

No comments:

Post a Comment