Saturday, January 12, 2013

அறிஞர் அல்-அஸ்மாய், ஒரு கதையுடன்...

’உங்க அஸ்மா அல்ல, இது அஸ்மாய்!’ என்று என்னைக் கிண்டல் செய்தபடி ஹமீதுஜாஃபர் அனுப்பிய கட்டுரை. (முந்தைய அருட்கொடையாளர்கள் வரிசை (1 to 12) பார்க்க இங்கே சொடுக்கவும்). அஸ்மா(ய்)ன்னாலே ஒரு கதை இருக்குமே.. அதை கடைசியில் சேர்த்திருக்கிறார் நானா.
***

(பாகம் 2. , அருட்கொடையாளர் - 13) 
அல் அஸ்மாய் (கிபி 740-828)
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தொடங்கி உலகில் இயந்திரமயமாக்கலுக்குமுன் மனித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது கால் நடைகள். விவசாயம் முதல் போக்குவரத்து வரை அவற்றின் பங்கு இன்றியமையாததாக இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. இன்றைய நவீன உலகிலும் அவற்றின் பங்கு தொடராமல் இல்லை. இன்று கூட அவற்றின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் முயற்சிகள் இல்லாவிட்டாலும் அரசு சிலபல நல்ல திட்டங்களை உருவாக்கினாலும் அது உரியமக்களிடம் சென்றடைகிறதா என்பது கேள்விக்குறி. என்றாலும் ஒரு மூலையில் ஆய்வுகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதை ஆய்வு செய்து நூல் வெளியிட்டிருக்கிறார் ஒரு அரபு விஞ்ஞானி. வியப்பாக இருக்கிறது இல்லையா? அல் அஸ்மாய்  என்ற பெயருடைய அவர், விஞ்ஞானி மட்டுமல்ல புலவரும் கூட.

அல் அஸ்மாய்

இஸ்லாமிய உலகில் விலங்கியல், தாவரவியல், கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் சிறந்த முதல் விஞ்ஞானியான இவரது முழுப் பெயர் அப்துல் மாலிக் பின் அல் குரைப் அல் அஸ்மாய். கிபி 740ல் புகழ்பெற்ற நகரமான பஸராவில் பிறந்து கிபி 828ல் அங்கேயே மரணமடைந்தார்.

இவரது பின்புலம் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பஸராவில் கல்விக்கூடம் நிறுவியவரான அம்ரு பின் அல் அலாஃ என்பரிடம் கல்வி பயின்ற தலைசிறந்த மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது தெரியவருகிறது.

மாணவப் பருவத்திலேயே இறைவேதத்தையும் நபி போதத்தில் பெரும்பாலனவற்றையும் மனனம் செய்தார். அதல்லாமல் பழம் பெரும் அரபு காப்பியங்களையும் மனனம் செய்திருந்தார். அரபு மொழி இலக்கண இலக்கியங்களில் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் பழமை வாய்ந்த அரபு செய்யூள்களை சேகரித்து வைத்திருந்ததோடு மொழி இயலில் திறனாய்வளாராக இருந்த இவர் தமது காலத்தில் வாழ்ந்தவரும் சக மாணவருமான அபு உபைதா வுக்குப் போட்டியாளராக இருந்தார்.

அபு உபைதாவுடன் போட்டி மனப்பாண்மை கொண்டிருந்ததிற்கு வேறொரு காரணமும் இருந்தது. அக்காலகட்டத்தில் அரபிகளுக்கும் அரபியல்லாதவர் (பாரஸீகர்)களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு நிலவியது. அரபிகளே மற்ற மக்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தவர்களில் ஒருவராக அல் அஸ்மாயி இருந்தார். ஆனால்  அபு உபைதா, அதற்கு மாறான இயக்கமான ஷுஃஊபியா ( الشعوبية‎)வை ஆதரித்தார்.

இளமைக் காலத்தில் வறுமையில் வாடிய இவரின் அறிவாற்றலைக் கேள்வியுற்ற பஸராவின் கவர்னர் கலிஃபா ஹாரூன் ரஷீதிடம் அறிமுகப்படுத்தினார். இவரது அசாத்திய அறிவாற்றலையும் புலமையையும் கண்ணுற்ற கலிஃபா தனது மகன்களுக்கு கல்வி பயில்விக்க ஆசிரியராக நியமித்தார். அதன்பிறகே இவரது வாழ்வு வளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அரபு மக்களிடையே மிகவும் பிரதானப்பட்டவையாக விளங்கியது ஒட்டகமும் குதிரையும். முந்திய காலங்களிலேயே அவற்றின் பராமரிப்புகளையும், வளர்க்கும் முறையையும் அம்மக்கள் அறிந்திருந்தனர். என்றாலும் அஸ்மாய் அவற்றினை விரிவாக ஆய்வு செய்து இனவிருத்தி முறையையும் தெளிவுபடுத்தி விளக்கமாக எழுதியுள்ளார். அதுபோல் தாவரஇயலில் அவற்றை வகைப்படுத்தி தன்மைகளையும் பயிரிடும் முறையையும் விளக்கியுள்ளார்.

மொழி இயலில் வல்லுனராக இருந்தாலும் இயற்கை அறிவியலுக்கும் மிருகவியலுக்கும் முன்னோடியானவர் என்று கருதப்படுகிறது.இவர் எழுதிய 60க்கும் மேற்பட்ட நூற்களில் மிகவும் குறிப்பாக விளங்குவது கித்தாப் அல் ஃகைல்(The Book of Horse), கித்தாப் அல் இபில்(The Book of Camel), கித்தாப் அல் ஃபர்க்(The Book of Rare Animals), கித்தாப் அல் வுஹுஷ்(The Book of Wild Animals), கித்தாப் அல் ஷா(The Book of Sheep). கித்தாப் அல் ஃஹலக்கல் இன்சான்(The Book of Humanity). இதல்லாமல் மனித உடற்கூறு பற்றிய தகவல்களையும் விரிவாக எழுதியுள்ளார்.

இவர் செய்த அனேக ஆய்வுகளைப் பற்றி நூல் விற்பனையாளர் இப்னு அல் நதீம் தனது ஃபிஹ்ரிஸ்த்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சுமார்  அரை டஜன் நூல்களே கிடைத்துள்ளன. அவற்றுள் கித்தாப் அல் ஃகைல், கித்தாப் அல் ஷா, கித்தாப் அல் வுஹுஷ் அடங்கும்.


கதை

இவரது புலமையைப் பெருமைப் படுத்தும் வகையில் ஒரு கதை உண்டு. அவர் காலத்தில் ஆட்சிபுரிந்த அரசன் கல்வி ஞானமும் அசாத்திய நினைவாற்றலும் உள்ளவன் இருந்தான். ஆனால் கொடுங்கோலன். தன்னிடம் வரும் புலவர்கள் எந்த பாடல் பாடினாலும் ஒருமுறை கேட்டால் அதை திருப்பி சொல்லக்கூடியவன். அவன் பணியாள் இருமுறை கேட்டால் திருப்பி சொல்லக்கூடியவன். பணிப்பெண் மூன்று முறை கேட்டால் திருப்பி சொல்லக்கூடியவள். எனவே எந்த புலவரும் இது தன்னுடையப் பாடல் என்று சொல்லமுடியவில்லை. இந்நிலையில் அவ்வரசன் ஒரு போட்டி வைத்தான். யார் ஒருவர் புதிதாக பாடல் ஒன்றை இயற்றிக்கொண்டுவந்தால் அவருக்கு அவர் எழுதிய சுவடியின் எடைக்கு எடை தங்கம் பரிசளிப்பதாக அறிவித்தான். பல புலவர்களும் தோற்றுப்போனார்கள்.

இதை கேள்வியுற்ற அல் அஸ்மாயும் ஒரு பாடலை இயற்றி மனனம் செய்து அரசவைக்குச் சென்றார். முன்பின் எங்கும் செல்லாத இவர் அரசவையின் அலங்காரங்களைக் கண்டு பிரமித்தவராக அவற்றை பார்த்துக் கொண்டிருந்தார். அரசவைக் கூடியதும் தான் இயற்றிய பாடலை இராகத்துடன் பாடினார். இது உன் பாடல் அல்ல நான் இயற்றியது, இதோ நானே பாடுகிறேன் என்று அரசன் பாட முற்பட்டான். இடையில் வார்த்தைகள் வரவில்லை. தன் பணியாளைப் பாட உத்திரவிட்டான். பணியாளுக்கும் அதே நிலை, பணிப்பெண்ணிற்கும் அதே நிலை. மூவருமே தடுமாறினர். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட அரசன் நாணி, இது நீர் இயற்றிய கவிதைத்தான் எங்கே அதை எழுதிய காகிதத்தைக் கொண்டுவாரும் அதன் எடைக்கு தங்கம் பரிசளிக்கிறேன் என்றான் மன்னன். அல் அஸ்மாய் பணிவுடன், மன்னா நான் இதை காகிதத்தில் எழுதவில்லை மாறாக எங்கள் ஊர் கல்குவாரியிலுள்ள சலவைக்கல்லில் பொறித்துள்ளேன். தாங்கள் அங்கு வந்தால் காணலாம் என்றார். வேறு வழி இல்லாமல் கல்லின் எடைக்கு மன்னன் பரிசளித்ததாக ஒரு கதை உண்டு.


Sources:

Encyclopaedia Britannica Ultimate Reference Suite

***
 நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

3 comments:

  1. சுருக்கமாகவும்,சுவையாகவும் இருந்தது இந்த கட்டுரை. மனித குல வளர்ச்சிக்கு எல்லா துறையிலும் பங்களித்த இஸ்லாமிய சமுதாயத்தின் இன்றைய தேக்க நிலை எப்போது தொடங்கியது என்பதையும் அதன் மூல காரண்ங்களையும், தீர்வுகளையும் முன் வைக்கும் கட்டுரையையும் தந்தால் நானாவின் அருட்கொடை இன்னும் முழுமை பெறும்.

    ReplyDelete
  2. அருட்கொடையாளர்
    அல் அஸ்மாய் (கிபி 740-828)
    அவர்களின் அன்றைய கீர்த்திகள்
    இன்றைக்கும் போற்றப்படுவது அறிந்து
    வியப்பும் மகிழ்ச்சியும் விளைகிறது.

    மொழி இயலில் வல்லுனராக
    இயற்கை அறிவியல்/
    மிருகவியல்/
    மொழியியல்... யென
    பலவற்றிலும் தலைசிறந்தவர் என்பதிலும்
    அது குறித்து அவர்
    புத்தகங்கள் பல எழுதியுள்ளார்...
    என்பதை அறியவருவதிலும்
    அதுவும்
    சுமார் 1000 வருடங்களுக்கு
    முன்னமே என்பதிலும்
    என் வியப்பும் மகிழ்ச்சியும்
    ஓங்கி நிலைக்கிறது.

    இந்த அருட்கொடையாளரை
    அறிய உதவிய
    நாநாவுக்கு
    நன்றி.
    -தாஜ்

    ReplyDelete
  3. இன்ஷா அல்லாஹ் அதுவும் விரைவில்அல்ல சற்று தாமதமாகவே வரும் என்பதை அமீன் அவர்களுக்கும் அவ்வப்போது ஊக்கமளிக்கும் தாஜ் அவர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete